சொப்பன வாழ்வில் - நாடக விமர்சனம்

24-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவை வெறும் காமெடி நடிகராகவே பாவித்துவிட்டது தமிழ்ச் சினிமாவுலகம். அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதையறிந்தும் சினிமாவுலகம் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றாலும், அவருடைய மேடை நாடகங்கள்தான் அவருடைய நடிப்புக்கு அடையாளம் காட்டுகின்றன..!
முழுக்க முழுக்க கமர்ஷியலாக இல்லாமல் நகைச்சுவை தோரணங்களுடன் ஒரு நல்ல மெஸேஜை சொல்வதுதான் ஒய்.ஜி.மகேந்திராவின் அனைத்து நாடகங்களும் சொல்லும் கதை. இதிலும் அப்படியே..!பல திரைப்படங்களில் கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதியிருக்கும், மேடை நாடக கதாசிரியர் கோபுபாபுவின் கதை, திரைக்கதை, வசனத்திற்கு உயிர் கொடுத்து கணேசன் என்கிற அப்பாவி கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா.

கணேசன். நிறைய அப்பாவி. மூளை வளர்ச்சி குறைவா என்பதால் ஒரு மாதிரியாக பேக்கு போன்று பேசுவார். மீனா என்கிற மனைவி வந்த பிறகும் தன் நிலையை அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில், வீட்டில், வெளியில் பல இடங்களிலும் தன்னுடைய அரைவேக்காடு புத்தியினால் பல கேலிகள், கிண்டல்களை தாங்கிக் கொண்டு அதெல்லாம் அவமானம் என்றுகூட புரியாமல் சிரித்தபடியே ஏற்றுக் கொள்பவர்.
பக்கத்து வீட்டுக்கு உதவுகிறேன் என்று சொல்லி தன்னை வருத்திக் கொள்கிறார். தெருவில் கன்னுக்குட்டி கஷ்டப்படுகிறதே என்று தன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். ஆபீஸில் பலருடைய வேலைகளையும் இளிச்சவாயத்தனமாக செய்து கேணயனாக இருக்கிறார். அவருடைய மிக நெருங்கிய நண்பனே ஷூரிட்டி கையெழுத்து வாங்கி ஒரு கடன் வழக்கில் சிக்க வைத்து போலீஸில் அடி உதை படுகிறார். உச்சக்கட்டமாக அவருடைய மனைவியை பற்றியே பலரும் தவறாகப் பேசுவதைக்கூட தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு..
மனைவியின் அன்பான, அனுசரணையான பேச்சாலும், கவனிப்பாலும் தனக்காக ஒரு ஜீவன் இருக்கிறதே என்கிற நினைப்பில் வாழ வேண்டும் என்ற நினைப்பில் இருப்பவருக்கு திடீரென்று தலையில் அடிபடுகிறது. இதன் பின்னர்தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றம்.
சூப்பர் பவர் கிடைக்கிறது. இதனை வைத்து தன் வாழ்க்கையை தானே திருத்திக் கொள்ளப் பார்க்கிறார். அந்த அறிவு அவருக்கு வந்தவுடன் தன்னை ஏளனம் செய்தவர்கள்.. பாதகம் செய்தவர்களையும் அவர் அதே பாணியில் சமாளிக்க நினைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘சொப்பன வாழ்வில்’ நாடகத்தின் கதை.
‘படிக்காத மேதை’ சிவாஜி போன்று வலது கையை பாதியோடு மடக்கிக் கொண்டு கை முஷ்டியை ஆட்டிக் கொண்டும், அப்பாவி, பேக்குத்தன்மையா முகத்தில் காட்டியபடியே கணேசன் பேசுகின்ற அத்தனையும் அடேங்கப்பா சிரிப்பு ரகம்.
நண்பனை முழுமையாக நம்பி அவனால் போலீஸில் அடிபட்ட நிலையில் அதே நண்பனின் பரிகாசத்தை கேட்டு பதறுவதும்.. தன் மனைவியின் கேரக்டரை சிதைத்து பேசுவதை கேட்டு அதிர்ச்சியாகி தன்னால் மறுதலித்து பேச முடியாத நிலைமையில் ஒய்.ஜி.மகேந்திராவின நடிப்பெல்லாம் ஏ கிளாஸ்.. அப்படியே சட்டென்று கண்களை குளமாக்கியது.
சூப்பர் பவருக்கு பின்பு அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும், தைரியமான பேச்சும் ‘தவறில்லையே.. பலே கணேசா’ என்று ஆடியன்ஸ் கை தட்டி பாராட்டும் அளவுக்கு கொண்டு செல்கிறது மகேந்திராவின் நடிப்பு.
கிளைமாக்ஸில் அந்த கடைசி 10 நிமிடங்கள் கலக்கிவிட்டார். தான் மட்டுமே தனித்து நிற்க ஆடியன்ஸை பார்த்து புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டு அலட்சியமாக பார்க்கும் பார்வையில், சினிமா ஹீரோக்களையெல்லாம் மறக்கடித்துவிட்டார்.
“எனக்காகவே.. என்ன நம்பி.. இந்த அப்பாவி கணேசன்தான் வேண்டும் என்கிற என் மீனாவுக்காகவே நான் திரும்பி இப்படியே இருக்கப் போறேன்..” என்கிற வசனந்தான் நாடகத்தின் உயிரான வசனம்.
கோபுபாபுவின் வசனங்கள் பலவும் நாடகத்திற்கு மிகப் பெரிய பலம். துணுக்குத் தோரணங்களைக் கட்டித் தொங்கவிட்டாலும் அத்தனையிலும் ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. திராவிடர் கழகத்தின் தாலி கழட்டும் வைபவம், சுப்ரமணியசாமியின் அரசியல், டிராபிக் ராமசாமியின் வழக்கு போராட்டம்.. என்று இன்றைக்கு தினசரிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் அத்தனை செய்திகளையும் தொகுத்து ஒரு கோனார் நோட்ஸ் உரையை வழங்கியிருக்கிறார் கோபுபாபு. அவருக்கும் எமது பாராட்டுக்கள். 
‘மீரா என் மாமியா மப்புல இருக்காளா?’ என்கிற ஒய்.ஜி.மகேந்திராவின் அப்பாவித்தனமான கேள்விக்கு அரங்கமே அதிர்ந்தது..“நான் போயிட்டா உங்களை யாருண்ணா பாத்துப்பா…?” என்கிற மனைவி மீராவின் வசனத்துக்கு மட்டுமல்ல.. யுவஸ்ரீயின் நடிப்புக்கும் சேர்த்தே கைதட்டல்கள் கிடைக்கின்றன. மிக நீண்ட நடிப்பு அனுபவம் கொண்டவர். சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலேயே அதிகம் நடித்தவர். அபாரமான மனன சக்தி, ஞாபக ஆற்றல், நடிப்பாற்றலில் மேடை நாடகத்திலும் ஜொலிக்கிறார்.
ஒரு காட்சியே வந்தாலும் சுப்புணி அரங்கத்தை அதிர வைக்கிறார். ‘சரியா போச்சு’ என்று திடீரென்று அவர் குதிக்கின்ற குதியில் தெரிகிறது மகேந்திராவின் சிறப்பான இயக்கம். எத்தனையோ நாடங்களை தொடர்ந்து இயக்கி வந்தாலும், ஒவ்வொரு நாடகத்திலும் ஏதாவது ஒரு சிறப்பான வித்தியாசமான இயக்கத்தை செய்துவிடுவது ஒய்.ஜி.மகேந்திராவின் வழக்கம். இதில் சுப்புணியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், அந்த ‘சரியா போச்சு’ வசனமும் நச்.
மேலும் மாமியாராக நடித்திருக்கும் பிருந்தா, அப்பாவாக நடித்து ‘அன்னைக்கு நீ ஒரு கேள்வி கேட்டியே’ன்னு சொல்லியே சிரிக்க வைத்தவர்.. மற்றும் நண்பராக நடித்தவர்களெல்லாம் பாத்திரம் அறிந்து ஒரு குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.ஹாஸ்யம் இருக்கும் காட்சியில் அதற்கேற்ற இசை.. சோகம் இருக்கும் காட்சியில் அதற்கேற்றது.. இப்படி பலவற்றுக்கும் பலவித இசைகளை கோர்த்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம். பாராட்டுக்கள்.
மூளை வளர்ச்சி குன்றியவர்களை எங்கயாவது, எப்போதாவது பார்த்தாலும் அவர்களை கிண்டல் செய்துவிடாதீர்கள். அவர்களை மனதளவில் துன்புறுத்திவிடாதீர்கள் என்பதுதான் இந்த நாடகம் சொல்லும் மெஸேஜ்.
2 மணி நேரம்தான். கிட்டத்தட்ட ஒரு சினிமா பார்ப்பது போல.. ஆனால் சினிமா தியேட்டரில் கிடைக்க வாய்ப்பே இல்லாத கைதட்டல்களை அனாயசமாக வாங்கிச் செல்கிறார்கள் இந்த நாடகக் கலைஞர்கள்.  ஒட்டு மொத்த டீமுக்கும் நமது பாராட்டுக்கள்.
இந்த ‘சொப்பன வாழ்வில்’ நாடகம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27-ம் தேதியன்று தி.நகர் சர் பிட்டி தியாகராயர் ஹாலில் மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இரண்டு காட்சிகள் நடக்கவிருக்கிறது.
ஒரு தரமான நாடகப் படைப்பை பார்க்க விரும்புவர்கள், அவசியம் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும்.

2 comments:

vijay said...

படிக்காத மேதை படம் அல்ல, பாகப்பிரிவினை படம் தான் சரி .

vijay said...

படிக்காத மேதை படம் அல்ல, பாகப்பிரிவினை படம் தான் சரி .