ஈழத்துச் செய்திகள் : 01-11-2010

02-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

டென்மார்க்கில் வசித்து வரும் மூன்று புலி ஆதரவாளர்கள் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய மனோகரன், பொன்னம்பலம், தம்பையா ஆகியோரே இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.  இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டென்மார்க் சட்டத்தரணி ஜோன் எல்ம்க்யூட்ஸ் என்பரிவினால் புலி ஆதரவாளர்களின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
வழக்கு விசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் 111 நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், அனைத்துலக நீதிமன்ற பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  வழக்குத் தொடர்ந்த குறித்த புலி ஆதரவாளர்கள் மாதாந்தம் ஒரு லட்சம் யூரோக்களை புலிகளுக்காக திரட்டியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாண நூலக அத்துமீறிய செயலுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு தொடர்பில்லை : அரச ஊடகங்கள் பரப்புரை..!

யாழ்ப்பாண பொது நூலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுக்கு தொடர்பில்லை என அரசாங்க பத்திரிகைகளான தினகரன் மற்றும் சண்டே ஒப்சேவர் ஆகியவற்றில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் நுழைந்த ஜனாதிபதி செயலத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர், அங்கு முறைகேடாக செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.  எனினும் இது தொடர்பில் காவற்துறையினர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வாறான சம்பவம் ஒன்று அங்கு நடைபெறவில்லை என தெரிவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் திட்டமிட்ட குற்றச்சாட்டு எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை பொது நூலகம் மீதான வன்முறையை பிரயோகிக்க அரசாங்கம் துணை போகாது எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இந்த அறிக்கை உள்நாட்டின் வேறு எந்த பத்திரிகையிலும் வரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு

பல்கலைக்கழக மாணவர் பிரச்சினை தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் நடவடிக்கைகளுக்கு ஆளும் கூட்டணி அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் செயற்படும்விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சருக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவர் போராட்டங்களில் ஈடுபட்ட பல மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிப்பதன் மூலமோ சிறையில் அடைப்பதன் மூலமோ எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களை அரசியலிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுவதனை ஏற்றுக் கொள்ள முடியாதென கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

திருகோணமலையில் முஸ்லிம் குடியிருப்புகள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தீ வைப்பு

திருகோணமலையின் கிண்ணியா பிரதேசத்தில் ஏழை மக்கள் குடியிருந்த சுமார் 50 குடிசைகளை இன்று காலை பாதுகாப்புத் தரப்பினர் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிகிறது.

குறித்த காணிகளில் குடியிருந்தவர்களுக்கு அவற்றின் அனுமதிப் பத்திரம் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், அதன் காரணமாகவே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த காணிகளில் ஏழை முஸ்லிம்கள் சிலர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுடன், அப்பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டிருந்ததை ஆவணங்கள் மூலமாக உறுதிப்படுத்தவும் முடியுமென்று தெரிவிக்கும் கிண்ணியா பிரதேச செயலக அதிகாரியொருவர், திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் குடியிருப்புகளைச் சுற்றிலும் சிங்களக் கிராமங்களை உருவாக்கும் அரசின் இரகசிய செயற்திட்டத்துக்கு அமைவாகவே பிரஸ்தாப தீ வைப்புச் சம்பவம் இடம்  பெற்றுள்ளதாக கூறுகின்றார்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களின் காணிகளைப் பறித்தெடுக்கும் சதித்திட்டங்களின் ஓரு அங்கமாகவே பிரஸ்தாப தீ வைப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டும் சமூக சேவையாளர் ஒருவர், தீ வைக்கப்பட்ட குடியிருப்புக்கள் சட்ட விரோத காணிகளில் அமைக்கப்பட்டிருந்தால்கூட அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

அதற்குப் பதிலாக அப்பாவி ஏழை மக்களின் உடைமைகளையும் சேர்த்து குடிசைகளுக்குத் தீ வைத்திருப்பதன் பின்னணியில் பலமான சதித்திட்டம் ஒன்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அவர், பெரும்பாலும் அந்த இடங்களில் விமானப் படையினருக்கான வீடமைப்புத் திட்டமொன்று மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

ஏனெனில் இன்றைய தீ வைப்புச் சம்பவத்தின் போது வழக்கத்துக்கு மாறாக பொலிசாருடன் விமானப் படையினரும் இணைந்து தீ வைப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றதாகவும் குறித்த சமூக சேவையாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், இன்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இன்று காலை நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்த மக்கள் வெளியேறிய பின், சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்க அதிபரின் அனுமதியுடன் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களே இவ்வாறு பொலிஸாரால் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மீளக்குடியேறிய மக்களின் 20-ற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் முற்றுமுழுதாக நாசமாக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வளாகத்தில் நட்சத்திர விடுதி கட்டக்கூடாது - பேராசிரியர் சிற்றம்பலம் கோரிக்கை..!

“தமிழர்களின் இனத்துவ அடையாளங்களைப் பறிக்கும் ஈனச் செயலிற்கு தமிழினத்தைச் சேர்ந்த சில புல்லுருவிகளும் பண முதலைகளும் துணை போகின்றார்கள். இவர்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை” என பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் சுட்டிக் காட்டியுள்ளார். நல்லூர் ஆலயச் சுற்றாடலில் நட்சத்திர விடுதி அமைப்பது தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “யாழ் மாவட்டத்தில் நட்சத்திர விடுதியொன்றை அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் அது நல்லூர் ஆலயச் சுற்றாடலில் அமையக்கூடாது. போர்துக்கீசர் இலங்கைக்கு வந்த காலப் பகுதியில் இலங்கையில் இருந்த மூன்று அரசுகளில் யாழ்ப்பாண அரசும் ஒன்று. இதன் ராசதானி நல்லூரிலேயே அமைந்திருந்தது.

தற்போது விடுதி அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் யாழ்ப்பாண அரசின் அரச காரியங்கள் பலவும் நடைபெற்ற ஓரு பகுதி. எனவே இந்த இடம் தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு இடமாகும். இதனாலேயே இந்த இடத்தில் அமைக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

உன்மையில் அரசாங்கம் சிங்கள மன்னர்களினதும் பாரம்பரியங்களினதும் தொல்பொருட்களை எப்படிப் பாதுகாக்கின்றதோ அப்படி எமது சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும்.  ஆனால் மாறாக எங்கள் அடையாளங்களை சிதைக்கின்ற செயற்பாடுகளையே செய்கின்றனர். அதற்கு இங்குள்ள சில புல்லுருவிகளும் துணை போகின்றார்கள். இது வேதனைக்குரியது” என்றார்.

போர் முடிவுற்றாலும் அரசாங்கம் கடன் பெறுவதனை நிறுத்தவில்லை : ஐ.தே.க  குற்றச்சாட்டு!

போர் நிறைவடைந்துள்ளபோதிலும் அரசாங்கம் கடன் பெறுவதனை நிறுத்தவில்லை எனவும், அதிகளவான வட்டிக்கு அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற்றுக் கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

கடன் மீளச் செலுத்தப்படும்போது அதிகளவான சுமையை மக்கள் சுமக்க நேரிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதனை விடவும், அவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் மன்னிப்பு கோர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்ற அமைச்சர்கள், கிழக்கில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) மன்னிப்பு கோர வேண்டுமென பிள்ளையான் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் மௌனம் காத்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரை நகர் கடற்கரைக்கான புதிய வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது

கசூரினா கடற்கரை என்றழைக்கப்படும் காரை நகர் கடற்கரைக்கான புதிய வீதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரால் குறித்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முற்று முழுதாக கொங்கிறீட்டினாலான பிரஸ்தாப புதிய வீதி அரைக் கிலோ மீற்றரை அண்மித்த தூரமும், சுமார் 30 அடிகள் அகலமும் கொண்டது என்று தெரிய வருகின்றது.

வீதி நிர்மாண வேலைகளுக்கென 20 மில்லியன் செலவிடப்பட்டிருந்ததுடன், நிர்மாணப் பணிகளின்போது பொதுமக்களின் பங்களிப்பும் பெறப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீதியின் நிர்மாணம் தொடர்பான சிந்தனையை முதலில் முன் வைத்தவர் காரை நகர் பிரதேச சபையின் செயலாளராகவிருந்து காலம் சென்ற சிவஞானம் என்பவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா - இந்தோனேசியா பேச்சு

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிள்ளார்ட்கும், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோ ஆகியோர் இன்று காலை பேச்சு நடத்தியுள்ளனர்.

ஆசிய பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜுலியா கிள்ளர்ட், இன்று இந்தோனேசிய சென்று அவரை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு பிராந்திய ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்து பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு திமோரில் அகதிகளை பராமரிக்கும் மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் பேசப்பட்டதாக ஏ.பி.சி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே அவுஸ்திரேலியா பிராந்திய ஒத்துழைப்பு குறித்த பிரேரனை ஒன்றை முன்வைத்துள்ளது.

எனினும் இதற்கு கிழக்கு திமோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இதற்கு இந்தோனேசியாவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை இந்தோனேசியாவிலேயே தடுத்து நிறுத்தும் வகையிலான முயற்சிகள் இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பிலான உள்ளடக்கங்களை முழுமையாக அறியாதவரையில் அவுஸ்திரேலியாவின் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மலேசியா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு விளக்க மறியற் சாலையில் தமிழ் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

கொழும்பு விளக்க மறியற் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார்.

விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த 42 வயதுடைய குணரெட்ணம் மனோகரன் என்பவரே தன்னை விடுதலை செய்யக் கோரி இன்று காலை 7 மணி தொடக்கம் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள கைதியின் கோரிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கடந்த 26.10.2008-ம் திகதி அன்று விசுவமடு முல்லைத்தீவில் வைத்து பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்க மறியற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தான் பல தடவைகள் தனது விடுதலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்தும் ஆனால் இதுவரை தனது விடுதலை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து விளக்க மறியற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்,

அதே நேரம் தனது மூன்று குழந்தைகளும் மனைவியும் விசுவமடு 12-ம் கட்டை புணர்வாழ்வு முகாமில் உள்ளதாகவும் இவர்களைப் பராமரிப்பதற்கும் பிள்ளைகளைப் படிப்பிற்பதற்கும் தனது மனைவியால் முடியாமல் இருப்பதாகவும் இதனால் தன்னை விடுதலை செய்து தனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைவதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.  தனது இந்த கோரிக்கை நிறைவேறும்வரை தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடரப் போவதாகவும் அந்த கோரிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவரின் மனைவி மேரி லூசியா வயது 37, குழந்தைகள் மெரிசலா(பெண்) வயது-10, திரிசலா(பெண்) வயது-8, நிர்மலன்(ஆண்) வயது-2 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலையில்லாப் பட்டதாரிகள், வெய்ட்டர் பணிகளை செய்தாலும் தவறில்லை : அமைச்சர் திஸ்ஸாநாயக்கா பேச்சு.. 

“வேலையில்லாப் பட்டதாரிகள் வெய்ட்டர் பணிகளை செய்தாலும் தவறில்லை. நாட்டுக்கும் வீட்டுக்கும் சுமையாக இருப்பதனை விடவும் ஹோட்டல் ஒன்றில் வெய்ட்டராக கடமையாற்றுவது எவ்வளவோ மேல்..” என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் வேலையில்லாப் பட்டதாரிகள் தொழில் கிடைக்கும்வரையில் ஏதாவது ஓர் தொழிலில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில வேளைகளில் ஹோட்டல்களில் வெய்ட்டர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் வெளிநாடுகளில் பட்டதாரிகள் பணியாற்றுவதாகவும் அதனை அவர்கள் இழிவாக கருதவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தராதரம் பாராது தமக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பட்டதாரிகள் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடு சென்று கூலி வேலைகள், பத்திரிகை விநியோகம் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலைவாசி உயர்வை எதிர்த்து ஜே.வி.பி. நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்  நடத்தியது.

விலைவாசி உயர்வு, அரசின் அதிகூடிய வரி விதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக ஜே.வி.பி. நேற்று கொழும்பு மெனிங் மார்க்கட் பகுதியில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.

நாடு தழுவிய ரீதியில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளன என ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  கொழும்பு மெனிங் மார்க்கட்டில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆட்சியின் கீழ் நாட்டில் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதோடு, வரி விதிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2005-ம் ஆண்டில் நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அரசு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியது.
அதாவது, தற்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது. பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக எதுவும் செய்ய முடியாது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் விலை குறைக்கப்பட்டு, மக்களின் வாழ்க்கைச் செலவு, வரி விதிப்புகள் ஆகியவை குறைக்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.  ஆனால், ஜனாதிபதி மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

யுத்தம் நடைபெற்றதால் அனைத்துச் சுமைகளையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். தற்போது பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட முடியாது என அன்று அரசு வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் ஏற்றனர்.  ஆனால், யுத்தம் நிறைவடைந்து 17 மாதங்கள் கழிந்தும் மக்களின் வாழ்க்கைச் செலவு இதுவரை குறைவடையவில்லை.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 46.6 வீதமானோரின் நாளாந்த வருமானம் இரண்டு அமெரிக்க டொலர்களுக்கும் குறைவு. அது மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகளில் 29.4 சதவீதமானவர்கள் நிறை குறைந்தவர்கள்.

குறைந்த வருமானம் பெறுபவர்களில் 20 சதவீதமானவர்களுள் தேசிய வருமானத்தில் 4.6 சதவீதம் வருமானத்தையே பெறுகின்றனர். இதனால் மூன்று நேர உணவு உண்ண வேண்டியவர்கள் உணவு வேளையை இரண்டு நேரமாகக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, நாட்டில் தற்போது காணப்படும் பொருட்களின் விலை உயர்வு, வரி விதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.

இப்படி அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் குழுவை புறக்கணிக்கும் போராட்டம்

எதிர்வரும் நவம்பர் 03-ம் திகதி முதல் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான நடைபெறும் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் பங்கெடுக்குமாறு ”தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள்”  எனும் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு அனைவரும் சமூகம் கொடுக்குமாறு தமிழர் உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் சார்பில் சூ பொல்ட்டன் அவர்கள் ஊடக அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.  இப்போராட்டத்திற்கு பல இடதுசாரி அமைப்புக்களும், தமிழ் அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

இம்மின்னஞ்சல் ஊடாக தாங்களும் உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.  இந்நிகழ்வு சம்பநதமான விளம்பரமும், ஊடக அறிக்கையும் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஓர் பகிஷ்கரிப்பு போராட்டம் சிட்னியிலும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி "Voice of Tamils" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு போராட்ட நிகழ்வுகளிற்கும் மெல்பேர்ன், சிட்னி வாழ் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு ஏற்பாட்டாளர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

8 comments:

PARAYAN said...

Eezham news Again!
Excellent!

உண்மைத்தமிழன் said...

[[[PARAYAN said...
Eezham news Again!
Excellent!]]]

நன்றிகள் ஸார்..!

RAZIN ABDUL RAHMAN said...

சகோ
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்

pichaikaaran said...

ஈழம் செய்திகளை தந்ததற்கு நன்றி..
பொதுவான விஷயங்களை பின்னூட்டம் இட்டு, செய்தி பற்றிய விவாதத்தின் ஆழத்தை குறைக்க விரும்பவில்லை என்பதால், சுருக்கமாக முடித்து கொள்கிறேன்

Unknown said...

அனைத்துலக் நீதிமன்றம் போனால் என்ன.. அனைத்துலகமும் ராஜபக்சே கோவணத்துக்குள் இருக்கும்போது நியாயமான வழிகளில் நீதியைப்பெற முடியாது..

உண்மைத்தமிழன் said...

[[[RAZIN ABDUL RAHMAN said...

சகோ
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும், சுற்றுச் சூழலுக்கும், பாதுகாப்பான தீப ஒளித் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்]]]

தங்களுடைய பெருந்தன்மையான வாழ்த்துக்களுக்கு எனது மற்றும் எனது குடும்பத்தாரின் மனமார்ந்த நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
ஈழம் செய்திகளை தந்ததற்கு நன்றி..
பொதுவான விஷயங்களை பின்னூட்டம் இட்டு, செய்தி பற்றிய விவாதத்தின் ஆழத்தை குறைக்க விரும்பவில்லை என்பதால், சுருக்கமாக முடித்து கொள்கிறேன்.]]]

ரொம்ப ரொம்ப நன்றிங்கோ ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
அனைத்துலக் நீதிமன்றம் போனால் என்ன? அனைத்துலகமும் ராஜபக்சே கோவணத்துக்குள் இருக்கும்போது நியாயமான வழிகளில் நீதியைப் பெற முடியாது.]]]

ஆனாலும் அதற்காக முயற்சிகளைக் கைவிடக் கூடாது செந்தில்.. ஏதேனும் ஒரு வழி நமக்குக் கிட்டிவிடாத என்கிற ஆர்வத்திலும், ஆதங்கத்திலும்தான் ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..!