என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
|
Tweet |
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
8
comments
Labels: எஸ்.ஏ.சி., சட்டம் ஒரு இருட்டறை, சினிமா, சினிமா விமர்சனம், விஜயகாந்த்
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
19
comments
Labels: அரசியல், குஷ்பூ, செந்தில், தேர்தல்-2011, வடிவேலு, விஜயகாந்த், ஜெயலலிதா
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
92
comments
Labels: அரசியல், அனுபவம், சினிமா, நாட்டு நடப்பு, பத்திரிகைகள், விஜயகாந்த்
18-05-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே.!
தமிழகத்தை மொட்டையடித்து தங்களது குடும்பத்தின் மொத்த சொத்துக்களை அதிகரிப்பதில் போட்டோ போட்டியில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட அரசியல் கட்சிகளுமே ஒரு விஷயத்தில் மட்டுமே உறுதியுடன் உள்ளன. அது தங்களைத் தவிர வேறு யாரையும் இப்போதைக்கு மட்டுமல்ல.. எப்போதுமே வளர விடக்கூடாது என்பதில்தான்.
அடிக்கின்ற கொள்ளையைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வது. முடிந்தால் தங்களுக்குள் மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டுப் போவது.. மற்றபடி வேறு எவனாவது நானும் திராவிடன் என்று சொல்லி வந்தால் அவனை வெட்டிவிடுவது என்பதை இந்தத் தேர்தல் வரையிலும் பின்பற்றி வருகின்றன திமுகவும், அதிமுகவும்.
இரண்டு கழகங்களும் வைகோவுக்கு தேர்தல் நேரத்தில் கழுத்தில் கத்தி வைப்பதுபோல் நெருக்கடி கொடுத்தது இதனால்தான். தங்களுக்கு அடங்கியிருக்கும் கட்சி என்பதோடு, நாய்க்கு போடும் பிஸ்கட்டைப் போல் 1, 2-ஐ வாங்கிக் கொண்டு வாங்கியதற்கு நன்றியாக கேட்கும்போதெல்லாம் வாலாட்டும் கட்சிகள்தான் அவர்களுக்குத் தேவை..
இன்றுவரையிலும் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் இரு கட்சியினருமே தாக்குதலைக் கொடுக்காமல் வருவதற்குக் காரணமே நாம் ஏன் வளர்த்து விட வேண்டும் என்று இந்த சிவனும், ஆண்டாளும் (அப்படி என்று நினைப்பு ரெண்டு பேருக்கும்..!) நினைப்பதுதான்..
இவர்களுடைய புறக்கணிப்பில் இன்னொரு லாபமும் உண்டு. அது விஜயகாந்தால் பிரியப் போகும் பொதுவானவர்களின் ஓட்டு. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தமிழ்நாட்டில் நிரந்தரமான ஓட்டு வங்கி ஒன்று உண்டு. அந்த இரு கட்சியின் ரசிகர்களைத் தவிர பொதுவாக இருப்பவர்களில் அதிகம்பேர் எந்தப் பக்கம் வாக்களிக்கிறார்களோ, அவர்களே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜெயித்து வருகிறார்கள்.
அப்படி பொதுவாக இருப்பவர்களில் லட்சணக்கணக்கானோர் இந்த இரண்டு திருடர்களைத் தவிர வேறு யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் விஜயகாந்துக்கு கடந்த தேர்தலிலும், இந்தத் தேர்தலில் தங்களது வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
இதன் பயனாக சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றிருந்த தே.மு.தி.க., இந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் 10.1 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று தனது ஓட்டு வங்கியை உயர்த்தியிருக்கிறது.
இந்த தேர்தலில் திமுக 22 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இக்கட்சி பெற்றிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 76 லட்சத்து 25 ஆயிரத்து 421. இது 25.10 சதவிகிதம்.
அதிமுக 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை வென்றிருக்கிறது. இக்கட்சி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 69 லட்சத்து 63 ஆயிரத்து 510. இக்கட்சியின் ஓட்டு சதவிகிதம் 22.91.
இந்த மக்களவைத் தொகுதியில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் பதிவான ஓட்டுக்கள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது தே.மு.தி.க.
35 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியுள்ளது தேமுதிக.
25 தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தைவிட தேமுதிக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்கள் அதிகம்.
தேமுதிக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுக்களைப் பிரித்ததினால் அதிகப்பட்சமாக அதிமுக 8 தொகுதிகள், காங்கிரஸ் 7 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதி, மதிமுக 1 தொகுதி, விடுதலைச்சிறுத்தைகள் 1 தொகுதி, மற்றும் பாரதீய ஜனதா 1 தொகுதி என்று பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள்.
ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெற உதவியிருக்கிறது தேமுதிக.
வடசென்னை, திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி வித்தியாசத்தைவிடவும், தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகம்.
அதே போல் திருவள்ளூர், தென்சென்னை, சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கும் தேமுதிக வேட்பாளர்கள் பிரித்தெடுத்த வாக்குகளே காரணம்.
ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்று மதிமுக ஈரோட்டில் வென்ற கதையிலும் தேமுதிகவின் வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 7 தொகுதிகளில் அக்கட்சி பெற்ற வெற்றிக்கும் காரணம் தேமுதிகதான்.
நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில். ஆனால் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 229. நடிகர் கார்த்திக் வாங்கியிருந்த ஓட்டுக்களும் பத்தாயிரத்துக்கும் மேல்..
இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..
கடைசி நிமிடத்தில் புதுமனைபுகுவிழா வீட்டில் நடந்த பேரம் நல்லபடியாக நடந்து முடிந்து காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால், தேமுதிக மூலம் திமுக கூட்டணிக்கு 12 இடங்களாவது கூடுதலாக கிடைத்திருக்கும்.
அல்லது கொட்டிவாக்கம் பங்களாவில் நடத்திய பேச்சுவார்த்தை ஜெயித்து பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் ‘அம்மா'வுடன் இணைந்திருந்தால், அந்தக் கூட்டணிக்கும் 12 இடங்களாவது கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.
கூடவே விஜயகாந்திற்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இருவருமே கொடுக்க முன் வந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாத்திரை கொடுக்காமலேயே மருத்துவர் ராமதாஸுக்கு பேதியை வரவழைத்திருக்கலாம்.
இப்படி ஜெயிக்க முடிந்த விஷயங்களையெல்லாம் கைவிட்டுவிட்டு, தங்களது கட்சிக்காரர்களை அல்லல்பட வைத்தாலும் தைரியமாக தனித்து நின்று வீரம் காட்டிய அண்ணன் விஜயகாந்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன்..
அதோடு காங்கிரஸுடனான தேமுதிகவின் கூட்டணியை முறியடித்த பெருமையும் கலைஞரையே சேரும். திமுகவின் தொகுதிப் பட்டியலில் ஒதுக்க முடியாது. வேண்டுமானால் உங்களது பட்டியலிலேயே 5 தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.
முடிந்தவரை கேட்டுப் பார்த்தும், போராடிப் பார்த்தும் 8 தொகுதிகளுக்குக் குறையாமல் விஜயகாந்த் கேட்க.. இழுபறி நிலைமை இருக்கும்போதே விஜயகாந்துக்கே 5 போய்விடும் என்றால் உங்களது மற்றத் தலைவர்களுக்கும், அவர்களுடைய அடிப்பொடிகளுக்கும் சீட்டு எப்படி கிடைக்கும் என்று டெல்லிக்கு காவடி எடுக்க வைத்து அந்தத் திட்டத்தையே முறியடித்தது திமுக.
இந்தப் பக்கம் வழக்கம்போல அம்மா.. சும்மா பேச்சுக்கு ஒரு பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு 4 தர்றோம்.. இஷ்டம்னா வாங்க.. இல்லாட்டி மரியாதை படத்துக்கு டப்பிங் இருக்காம்ல.. போய்ச் செய்யுங்க என்று சொல்லி கவுரவமாக அனுப்பி வைத்தார் அம்மா..
வேறு வழியில்லாமல் தனித்தே நின்று ஓட்டு வங்கியை உயர்த்திக் கொண்ட பெருமையை மட்டுமே இத்தேர்தல் விஜயகாந்திற்குக் கொடுத்துள்ளது.
அடுத்தத் தேர்தலில் கேப்டன் திராவிட பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் அவருக்கு தற்போது இருக்கும் பத்து சதவிகித வாக்குகள் அப்படியே இனிமேல் கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. “இரண்டு திருட்டுக் கட்சிகளுமே வேண்டாம் என்றுதான் உன்னை கூப்பிடுறோம்.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கிட்டு வோட்டு கேட்டு வந்தா என்ன அர்த்தம்..?” என்று மக்கள் திருப்பி பொடனியில் அடித்துக் கேட்பார்கள்.
ஆக புரட்சிக் கலைஞர் அடுத்தத் தேர்தலிலும் தனித்து நின்று ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெறலாம்.
அல்லது இந்த இரண்டு பெரிய திருட்டுக் கட்சிகளைத் தவிர மற்ற சில சில்லரை உதிரி பாகங்களைக் கொண்ட கட்சிகளை வைத்து மூன்றாவது அணி அமைத்தால் ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளாவது அண்ணனுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். விஜயகாந்திற்கு இன்னும் வயது இருக்கிறது.. ஒரு வேளை அடுத்தடுத்தத் தேர்தல்களின்போது அவருக்கான வாய்ப்பு இருக்குமானால் அதனை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..
பார்ப்போம்..!
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
38
comments
Labels: அரசியல், அனுபவம், பாராளுமன்றத் தேர்தல் 2009, விஜயகாந்த்
17.04.2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஆட்டோ டிரைவர்களின் புதுவித விளையாட்டு
உலகம் முழுவதும் மாறி வரும் பொருளாதாரச் சூழலில் எங்கே காத்தாடுகிறதோ இல்லையோ ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆட்டோக்களின் வரிசை நீண்டு கொண்டே செல்வதைப் பார்க்க முடிகிறது.
மக்கள் காசை இறுக்கிப் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்க சும்மா உட்கார்ந்திருந்த டிரைவர்களுக்குள் தற்போது ஒரு புதுவித விளையாட்டு மோகம் பிடித்திருக்கிறது.
இரண்டு நாலணா நாணயங்கள்தான் விளையாட்டு உபகரணம். நான்கு பேர் செட் சேர்கிறார்கள். அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் நாணயங்களைச் சுண்டுவது அடுத்தவருக்குப் போகும். தலை விழுந்தால் அப்படியே தொடர்ந்து அவரை நாணயங்களைச் சுண்டலாம். பூ விழுகின்றவரையிலும் அந்த ஒருவருக்கே சுண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இப்படியே மாறி, மாறிப் போகிறது விளையாட்டு.
யார் ஆரம்பித்து வைத்தது..? எங்கேயிருந்து துவங்கியது என்று தெரியவில்லை.. அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே நம்பி ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது..
எப்படின்னாலும் விட மாட்டோம்ல..!
சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ள வரும் இப்போதைய நடிகைகள் எப்படியாவது குறைந்தபட்ச ஆடை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்து, புகைப்படங்களில் சிக்கி மேலும் பரபரப்படைந்து வாய்ப்பு தேடுவது ஒரு பேஷனாகிவிட்டது.
இது போன்ற சமயங்களில் புகைப்படம் எடுக்கும் நிபுணர்களுக்கு மிகவும் கொண்டாட்டம்தான். புகைப்படங்களில் அப்படி, இப்படி என்று நடிகைகள் சிக்கிவிட்டால் அது நடிகைகளின் தவறாகத்தான் தோன்றுமே தவிர, புகைப்படம் எடுத்தவர்கள் மீது குற்றமாகாது என்பதால்தான் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள்.
வட இந்தியாவிலிருந்து கலைச்சேவை செய்ய வந்த நடிகைகள்தான் முதலில் இந்த ஆடைக் குறைப்பு அலங்கோலத்தை ஆரம்பித்துவைக்க இப்போது அதனையே அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.
குறைந்த ஆடையுடன் பாதுகாப்பாக இப்படி போஸ் கொடுத்தாலும்..
காத்திருந்து சமயம் பார்த்து இப்படி புகைப்படம் எடுப்பதில் கில்லாடிகள் சினிமாவின் புகைப்பட நிபுணர்கள்.
இது போனஸுக்கு..
உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை
சமீபத்தில் தமிழக அரசு ஒரு மிகப் பெரும் உதவியை உடல் ஊனமுற்றோருக்கு செய்திருக்கிறது.
உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளைத் தவிர மற்ற விரைவுப் பேருந்துகள், சாதாரணப் பேருந்துகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது.
தேசிய உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் சமூக நலத் துறையின் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் அதற்கான சலுகை உத்தரவு உடனேயே கிடைக்கிறது.
ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொள்ளுவோம் என்று நினைத்து பல வருடங்கள் கழித்து அந்த அலுவலகத்தில் கால் வைத்த எனக்கு இதைப் பார்த்து ஒரு திடீர் அதிர்ச்சி. நான் இனிமேல்தான் அடையாள அட்டையே பெற வேண்டும். அடையாள அட்டை கிடைத்துவிட்டால் பஸ் பாஸ். கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு இன்னொரு பதிவு.
'எங்கள் ஆசான்' திரைப்படத்தின் தாமதம் ஏன்..?
திரையுலகின் கதாநாயகர்கள் அனைவருக்கும் அவரவர் திரைப்படங்கள் வெளியாவதில் இருக்கின்ற சந்தோஷம் வேறு எதற்கும் இருக்காது. அவர்களுடைய லைப் கிராப்பில் அது ஏற்றிவிடுமா அல்லது இறக்கிவிடுமா என்பது தெரியாமல் அனைவரும் பதட்டத்துடன் இருப்பார்கள்.
நம்ம கேப்டன் மட்டும்தான் எந்தக் கவலையும் இல்லாமல் ஹாயாக கூலிங்கிளாஸுடன் வேர்க்க, வியர்க்க பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடைய நடிப்பில் 'இன்னொரு வானத்தைப் போல' என்ற பிரச்சாரத்துடன் 'மரியாதை' திரைப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதற்கு முன்பு சென்ற மாதமே வந்திருக்க வேண்டிய எங்கள் ஆசான் என்னும் படம் திரையிட வேண்டிய நாளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் வெளிவராமல் போனது. காரணத்தைத் துழாவினால் கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்கிறது.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் என்பவர் கேப்டனின் ஆரம்ப கால நண்பர். திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தபோதே தங்கராஜை கேப்டனுக்கு நன்கு பழக்கமாம். இந்த தங்கராஜ் இதற்கு முன்பு 'மீசை மாதவன்', 'சுந்தரா டிராவல்ஸ்' என்று இரண்டு திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். 'சுந்தரா டிராவல்ஸ்' தயாரித்ததில் உடலெங்கும் பலத்த அடியாம். நடக்க முடியாமல் கிடப்பதை அறிந்த கேப்டன், பெரிய மனதுடன் அவரே முன் வந்து இவரைத் தயாரிப்பாளராக்கி 'எங்கள் ஆசானை' உருவாக்கித் தந்தார்.
படம் முடிந்து வெளியாகும்வரையிலும் கேப்டன் தன் சம்பளம் பற்றி எதையும் பேசவில்லையாம். கடைசியில் நண்பர் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். தயாரிப்பாளரோ தே.மு.தி.க. தொண்டர்களின் ஆவலையே முதலீடாக்கி விநியோகஸ்தர்களிடம் கூடுமானவரையில் சேதாரமாகாதவகையில் விற்றிருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கு முதல் நாள்வரையிலும் நடிப்புக்கான கூலி கைக்கு வந்து சேராத கேப்டன் பின்பு பணம் கேட்க தயாரிப்பாளர் தரப்பில் "படம் விற்கவில்லை.. போனியாகவில்லை" என்றெல்லாம் 'காந்தி கணக்கு' காட்டியிருக்கிறார்.
கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டனின் 'கிச்சன் காபினெட்' அவசரமாகக் கூடி முதல் நாள் நள்ளிரவில் ஒரு முடிவெடுத்தது. அந்த முடிவின்படி, கேப்டனுக்குரிய சம்பளப் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடக்கூடாது என்று லேபில் கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் தரப்பு அதிர்ந்துபோய் அதற்கு பிறகு சம்பளம் பற்றிப் பேசப் போயிருக்கிறது.அதற்குள் தேர்தல், வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம் என்று வந்துவிட கூடவே இன்னொரு விஷயமும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பித் தவறி 'எங்கள் ஆசானை' முன்கூட்டியே வெளியிட்டு படம் படுத்துவிட்டால் பின்பு வரும் 'மரியாதை'க்கு மரியாதை இருக்காது. அதனால் 'மரியாதை' முதலில் ரிலீஸாகட்டும். பின்பு எங்கள் ஆசானின் தலையெழுத்தை பார்ப்போம் என்று ரகசிய ஆலோசனை கூறப்பட்டதால் 'எங்கள் ஆசானை பின்பு பார்ப்போம். அப்படியே நிறுத்தி வையுங்கள்' என்று சொல்லிவிட்டாராம் கேப்டன்.
ஷெரில் பெர்ணான்டோவை பார்க்கலாம் என்று தவிப்புடன் இருந்த என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். மீனாவையும், ஜாஸ்மினையும் பார்த்து என்ன செய்ய..?
பல நேரங்களில் பல மனிதர்கள்
எழுத்தாளர் பாரதிமணி ஐயா உயிர்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது புத்தகமாக வெளிவந்துவிட்டது. 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தலைப்பில் 110 ரூபாய் விலையில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகத்தில் எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போலவே பாரதி ஐயாவை பற்றி உருகி, உருகி எழுதியிருக்கிறார்கள். படிக்கத் தவறாதீர்கள்.. நேரம் வீணாகாது என்பதற்கு நான் கியாரண்டி.
எது உண்மை..? எது பொய்..?
ராகுல்காந்தி தனது வேட்புமனுவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பாடத்தில் தான் தேர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.
ஆனால் உண்மையில் அவர் எம்.பில். படிப்புக்கான இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் 58 சதவிகிதம் மட்டுமே எடுத்திருக்கிறாராம். (60 எடுத்தால்தான் பாஸாம்) பத்திரிகை செய்திகளில் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சர்டிபிகேட்டில் பெயர்கூட ராகுல்வின்சி என்றுதான் இருக்கிறது . அப்புறம் எதுக்கு காந்தி..? சரி விடுங்க..
ஆனால் அவர் தோல்வியடைந்த பாடத்தின் பெயரைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பு வந்தது. National Economic Planning & Policy-யாம். ஆரம்பமே சரியில்லையே. மனு பரிசீலனையின்போது எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்..
16 வயதினிலேயின் பெண்ணாம்..
அடுத்த மயிலு..???????
மருத்துவமனையில் மணிரத்னம்
வேலை என்று வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கக் கூடியவர் இயக்குநர் மணிரத்னம். 'தளபதி' ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலர் மரணமடைந்தபோதும், ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு செய்தவர். உழைப்பின் மீது அவ்வளவு வெறி..
'குரு' படத்தின்போதுதான் இப்படிப்பட்ட அதீத உழைப்பின் காரணமாக முதல் முறையாக நெஞ்சு வலி அவரைத் தாக்கியது.. மருத்துவமனையில் வாசம் செய்துவிட்டு மீண்டும் தனது பணியினைத் தொடர்ந்தார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி வர.. மருத்துவமனைக்கு சென்று மீண்டு வந்தார்.
இப்போது 'ராவணன்' திரைப்படத்திற்கும் பேயாய் உழைத்திருக்கிறார் இயக்குநர். அதன் விளைவாக இப்போதும் மீண்டும் மருத்துவமனையில்.
உழைப்பு அவசியம்தான்.. தேவைதான். அதே சமயம் அதற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். மணி போன்ற இந்தியாவின் இயக்குநர்கள் இன்னும் படைக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக உழைக்கலாமே.. ஏன் இவ்வளவு அவசரம்..? அவர் நல்ல உடல் நலம் பெற்று திரும்ப என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.
|
Tweet |
Posted by
உண்மைத்தமிழன்
at
64
comments
Labels: இட்லி-வடை, சினிமா, பதிவர் சதுரம், பதிவர் வட்டம், மணிரத்னம், விஜயகாந்த்