பிருந்தாவனம் - சினிமா விமர்சனம்

28-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘சேதுபதி’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’  போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், தனது வான்சன் மூவிஸ் சார்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் அருள்நிதி தமிழரசு ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடித்துள்ளார். ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் விவேக்,  நடிகர் விவேக்காகவே  நடித்துள்ளார். 
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரான விவேக் ஒளிப்பதிவாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ளார். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார். பொன்.பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.  நிர்வாக தயாரிப்பு – கே.பி.பஷிர் அஹமது, மக்கள் தொடர்பு – நிகில்,  ‘அபியும் நானும்’,  ‘மொழி’,  ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன்,  கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். 
ராதாமோகனின் படங்கள் எப்படியிருக்குமென்று கற்பனை செய்திருக்கிறீர்களோ அப்படியே.. தப்பாமல் வந்திருக்கிறது இந்தப் படம்..!

கதைக் களம் இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி. அங்கே சிகை திருத்தும் நிலையத்தில் சிகை திருத்துநராக பணியாற்றி வருகிறார் ஹீரோ அருள்நிதி. காது கேளாத, வாய் பேச முடியாதவர்.
சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்து உண்டு வாழ்ந்தவர். ஒரு நாள் எம்.எஸ்.பாஸ்கருக்கு உதவி செய்யப் போய் அவர் கண்ணில் பட்டவர். அப்படியே எம்.எஸ்.பாஸ்கர் அவரை ஒரு அனாதை இல்லத்தில் சேர்ப்பித்துவிடுகிறார்.
அங்கேயே படித்து வளர்ந்து பெரியவனாகி, அதே ஊட்டியில், அதே பகுதியில், தொடர்ந்து 20 வருடங்களாக வசித்து வருகிறார். அதே ஊட்டியில் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் நடத்தி வரும் தலைவாசல் விஜய்யின் ஒரே செல்ல மகள் ஹீரோயின் தான்யா.
சின்ன வயதில் இருந்தே அருள்நிதியுடன் பழகி வந்த்தால் பெரியவளானதும் ஒரு இனம் புரியாத காதலுடன் இருக்கிறார் தான்யா. ஆனால் அருள்நிதிக்குத்தான் இது புரியவே இல்லை. அருள்நிதி அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்த காலத்தில் இருந்தே நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர். முடி திருத்தும் கடையில்கூட அவர் இருக்கும்போதெல்லாம் விவேக்கின் காமெடி மட்டுமே டிவியில் ஓடிக் கொண்டிருக்கும். அப்படியொரு விவேக் வெறியர்.
இந்த நேரத்தில் விவேக்கே ஊட்டியில் அருள்நிதியிடம் சிக்குகிறார். விவேக் ஓட்டி வந்த கார் சகதியில் சிக்கிவிட அந்த வழியாக வந்த அருள்நிதி காரை தள்ளிவிட்டு விவேக்கிற்கு உதவுகிறார். ஆனால் வந்தவர் விவேக் என்பதால் அருள்நிதி பெரும் மகிழ்ச்சியாகிறார்.
விவேக்கின் நெருங்கிய நண்பனான பஞ்சு சுப்பு உடல் நலமில்லாமல் இருப்பதால் அவரை பாதுகாப்பதற்காகவே ஊட்டிக்கு அவரை அழைத்து வந்திருப்பதாகச் சொல்கிறார் விவேக். இப்போது விவேக்கும், அருள்நிதியும் அவ்வப்போது சந்தித்து கொள்கிறார்கள்.
இது ஒரு கட்டத்தில் அருள்நிதி மூலமாக ஹீரோயின் தான்யா, அருள்நிதியின் நண்பன் என்று சிலருக்கும் தெரிய வருகிறது. இந்த நேரத்தில் தான்யா தான் அருள்நிதியை காதலிப்பதாகச் சொல்ல அருள்நிதி இதனை ஏற்க மறுக்கிறார். காரணம் கேட்க அதைச் சொல்லவும் மறுக்கிறார்.
விவேக்கும், நண்பனும் அருள்நிதியை இந்த விஷயத்தில் டார்ச்சர் செய்ய அப்போதுதான் அருள்நிதி தனக்கு பேச்சு வரும் என்று பேசிக் காட்டுகிறார். இதுவும் அவர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஆனாலும் தான்யாவை மணப்பதற்கு முடியாது என்கிறார் அருள்நிதி.
அருள்நிதிக்கு பேச்சு வரும் என்பதும், இத்தனை நாட்கள் ஊமை என்று சொல்லி தன்னை ஏமாற்றியது தெரிந்து தான்யாவும் அருள்நிதியை வெறுக்கத் துவங்குகிறார். விவேக்கும் சென்னைக்கு கிளம்பலாம் என்று வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்து தடைக்கல்லாகிறது..!
இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘பிருந்தாவனம்’ படத்தின் கதை.!
‘மொழி’ படத்தின் வெற்றிக்கு முக்கால்வாசி காரணமே ஜோதிகாவின் கேரக்டர் ஸ்கெட்ச். அந்த வாய் பேச முடியாத, காது கேளாத நிலையில் தான் பேசும் வசனங்கள் அனைத்தையும் சைகையிலேயே அதாவது நடிப்பிலேயே காட்ட வேண்டிய சூழல் ஜோ-வுக்கு. அசத்தியிருந்தார் ஜோதிகா.  இங்கே அதே நிலைமைதான் அருள்நிதிக்கு..!
முதலில் கொஞ்ச நேரம் அந்த சைகை பாஷை நமக்கு புரிபட லேட்டானாலும் தேவைப்படும் நேரத்தில் மிகவும் ஆழமாக நம் மனதில் பதிந்திருப்பதால், அருள்நிதியின் ஆவேச நடிப்பை உணர முடிகிறது. தான்யாவை மறுப்பதற்கான காரணத்தை சைகையிலும், பேச்சிலும் அவர் வெளிப்படுத்தும்விதம் கல்லான மனதையும் கரையும்வைக்கும் விதமாய் இருக்கிறது.
இந்தப் படத்தில் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையையும் இழைந்து கொடுத்திருக்கிறார் அருள்நிதி.  விவேக்கை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி காட்டும் மகிழ்ச்சியும், அவருக்கு மனமுவந்து செய்யும் உதவிகளும் ஒரு தீவிர ரசிகனை காட்டுகிறது..!
தான்யாவை முதலில் புறக்கணித்து பின்பு காதல் இருந்தும் அதை வெளிக்காட்டாமல் தவிப்பதும்.. இறுதியில் தன் நிலை உணர்ந்து தனக்குப் பொருத்தமில்லாதவள் என்று உதறித் தள்ளும் பக்குவமான பேச்சுமாக அருள்நிதி தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் சோடை போகவில்லை. இவரது நடிப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டது இந்தப் படம்.
இவருக்கு சளைக்காமல் போட்டி போட்டு நடித்திருக்கிறார் தான்யா ரவிச்சந்திரன். அட்டகாஷ் நடிப்பு எனலாம். சினிமாட்டிக் முகம் என்பதால் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அழகு சொட்டுகிறது. வசன உச்சரிப்பும், முக பாவனைகளும், நடிப்பும்கூட இவரை அனைத்துக் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறது. சுப்புவின் மகளை கடத்தும் காட்சியில் ஹீரோவுக்கு இணையாக கைதட்டலை பெற்றிருக்கிறார் தான்யா.. வெல்டன்ம்மா.. சீக்கிரமா இவரை புக் பண்ணுங்க இயக்குநர்களே..!
நடிகர் விவேக் நடிகராகவே நடித்திருக்கிறார். வழக்கமான தனது நக்கல் காமெடி டயலாக்குகளையும் இடையிடையே வைப்பதுபோல திரைக்கதை அமைத்து படம் சுவை குன்றாமல் செல்ல வழி வகுத்திருக்கிறார். இவரும் செல் முருகனும் அமைத்திருக்கும் காமெடிக் களன் இன்னொரு பக்கம் பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் ரகம்..!
தனது நண்பன் சுப்பு பஞ்சுவுக்காக தான் ஊட்டி வந்திருக்கும் கதையை சோகமாகச் சொல்லி மனதில் ஒரு டெம்போவை ஏற்றிவிடுகிறார். ஒவ்வொரு முறையும் சென்னைக்குக் கிளம்பும் திட்டம் பணாலாக… இதன் பின்பு மனைவிக்கு போன் செய்து சமாதானம் செய்து, அங்கிருந்து வரும் திட்டுக்களை அப்படியே வாங்கி முழுங்கிவிட்டு அல்லல்படும் விவேக்கின் அந்த ஒன் மேன் ஷோ தியேட்டரை கதி கலங்க வைக்கிறது..!
ராதா மோகனின் செட் பிராப்பர்ட்டிகளில் ஒன்றாகவே எப்போதும் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் இதிலும் ஒரு அழுத்தமான கேரக்டரை செய்திருக்கிறார். மனதை நெகிழ வைக்கிறார். காது கேளாத பெண்மணி, கிருஷ்ணமூர்த்தி, சிகை திருத்தக கடையின் உரிமையாளர்.. ஹீரோயினின் அப்பாவான ‘தலைவாசல்’ விஜய் என்று பலரும் நடிப்பில் சோடை போகவில்லை.
எந்தக் காட்சியையும் போரடிக்கவிடாத அளவுக்கு திரைக்கதை அமைத்து இதற்கேற்றாற்போல் வசனத்தை எழுதி மகிழவும், கைதட்டவும் வைத்திருக்கிறார் வசனகர்த்தாவான பொன்.பார்த்திபன். அவருக்கும் நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..! அதிலும் அந்த அவதார் காமெடி வசனம் சூப்பர்ப்..!
மலைகளின் அரசியான ஊட்டி ஏற்கெனவே இயற்கை எழில் வாய்ந்திருப்பதால் கேமிராமேனுக்கு அதிகம் வேலை வைக்காமல் அனைத்து காட்சிகளையும் ரம்மியமாக படம் பிடித்திருக்கிறார். அதிகம் கேமிரா டிரிக்குகளுக்கு வேலை கொடுக்காமல் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.விவேகானந்தன்.
விஷால் சந்திரசேகரின் இசையில் இரண்டு பாடல்களும் ஓகே ரகம். அவ்வப்போது சூழலுக்கேற்ற பின்னணி இசையை மட்டும் மிகச் சரியாக கொட்டி வைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
பாவப்பட்ட ஜீவன்களின் கதையை படமாக்கினால் அதற்கு மேல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வேறு எதுவும் தேவையில்லை என்பதால் ராதா மோகனின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச் ஓகேதான். படத்தில் எந்தவித நெருடலான காட்சிகளும் இல்லை. அழுத்துப் போன திரைக்கதையும் இல்லை. இரட்டை அர்த்த வசனங்களும் இல்லை.. ஆபாச குத்துப் பாடல்களும் இல்லை.. ஒட்டு மொத்தமாய் திரும்பவும் ஒரு ராதாமோகனின் படமாய் ஜொலிக்கிறது இந்த ‘பிருந்தாவனம்’ திரைப்படம்.
அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘பிருந்தாவனம்’. மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

1 comments:

Unknown said...

Cinema vimarsanam nu sollitu yen sir full story pottu kaandaaggukkreenga? Athukku thaan unga review page pakkamey evanum vara matengraan.

Dont tell the full story in name of film review.

If you dont knw how to do a film review, then read the basics of film review.