இணையத்தளம் - சினிமா விமர்சனம்

21-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனுக்கிரஹா ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் உமா சங்கர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், சுகன்யா, ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ், கெளசிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஏ.கார்த்திக் ராஜா, இசை – அரோல் கரோலி, படத் தொகுப்பு – ரிஜீஷ், கலை – ஜி.சி.ஆனந்தன், பாடல்கள், வசனம் – மரபின் மைந்தன் முத்தையா, நடனம் – பிரபு சீனிவாஸ், சண்டை பயிற்சி – மாபியா சசி, ஸ்டில்ஸ் – ஜி.வெங்கட்ராம், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – உமா சங்கர், இயக்கம் – சங்கர், சுரேஷ்.

இணையம் என்னும் புதிய விஞ்ஞான வளர்ச்சி கைக்கு எட்டியவுடன் உலகம் முழுவதிலுமே அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைத்து வகையான தொழில்களும் இணையத்தின் உதவியில்லாமல் நடத்தவே முடியாது என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த இணையத்தின் இன்னொரு பக்கமும் உலக மக்களை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நல்லதில் கெட்டதும் இருக்கும் என்பார்களே.. அது போலத்தான்.. இதே இணையத்தின் துணை கொண்டு அனைத்துவித கெட்ட செயல்களையும் இன்னொரு பக்கம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்படி நடத்தும் ஒரு செயலை சைபர் கிரைம் போலீஸார் எப்படி தேடி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
ஸ்வேதா மேன்ன் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஈரோடு மகேஷ் இதே பிரிவில் டெக்னிக்கல் ஆபீஸர். ஸ்வேதா மேன்னின் கணவர் பைலட்டாக இருந்து ஒரு விமான விபத்தில் இறந்து போய்விட்டார். இவருக்கு சிறிய வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
சின்னச் சின்ன சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடித்து வரும் வேளையில் இதுவரையிலும் நினைத்தே பார்க்காத ஒரு சம்பவம் நடந்தேறுகிறது.
ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் டெல்லி கணேஷ் படுத்த படுக்கையில் இருப்பது காட்டப்படுகிறது. அவருக்கு மெதுவாக கொல்லும் மருந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கொஞ்சம், கொஞ்சமாக சாகப் போகிறார் என்றும், இந்த இணையத்தளத்தை தொடர்ந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக அவருக்கு அளிக்கப்படும் மருந்தின் அளவும் கூடும் என்றும் அந்த இணையத்தளத்தில் அறிவிப்பு வெளியாகிறது.
பைத்தியக்காரத்தனமான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானோர் அந்த இணையத்தளத்தை பார்வையிடத் துவங்குகிறார்கள். போலீஸ் விசாரிக்கத் துவங்குகிறது. ஆனாலும் ஒரு சிறிய துப்புக்கூட கிடைக்காமல் போக.. டெல்லி கணேஷ் அத்தனை ஆயிரம் பேரின் கண்களுக்கு முன்பாகவே மரித்துப் போகிறார்.
இதனால் அதிருப்தியடையும் போலீஸ் கமிஷனர் ஒய்.ஜி.மகேந்திரன், சைபர் கிரைம் போலீஸாரை கண்டிக்கிறார். இதனால் அஸிஸ்டெண்ட் கமிஷனரான கணேஷ் வெங்கட்ராமனை இந்த கேஸுக்காக சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமிக்கிறார்கள்.
அவரும் சார்ஜ் எடுத்து விசாரிக்கத் துவங்கும்போது அடுத்தக் கொலையாக ஒரு பத்திரிகையாளர் மாட்டுகிறார். அவரை ஐஸ் கட்டியின் மீது நிற்க வைத்து கழுத்தில் கயிற்றை மாட்டி தூக்குத் தண்டனை பெறுபவரை போல காட்டுகிறார்கள்.
இப்போதும் அந்த இணையத்தளத்தின் முகவரியையும், அது செயல்படும் இடத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள் சைபர் கிரைம் போலீஸார். இவர்கள் மும்முரமாக செயல்பட்டும் அந்த பத்திரிகையாளரை காப்பாற்ற முடியாமல் போகிறது.
இதற்கு பலிகடாவாக ஈரோடு மகேஷை சஸ்பெண்ட் செய்கிறார்கள். இதனால் வேதனைப்படும் ஈரோடு மகேஷ் தானே தன்னந்தனியே இந்த வழக்கு பற்றி விசாரிக்கிறார். இவருடைய விசாரணையில் அந்த நகரில் இருக்கும் ஒரு பெரிய மாலில்தான் இந்த இணையத்தளம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
இது பற்றி கணேஷுக்கு தகவல் கொடுத்து அவர் வந்து தீவிர சோதனை செய்தும் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மூன்றாவது பலியாடாக ஈரோடு மகேஷும் அந்த இணையத்தளத்தில் சிக்கிக் கொள்கிறார். இப்போது அவர் ஒரு பெரிய தண்ணீர் தொட்டிக்குள் நிற்க வைக்கப்பட்டிருக்க.. பார்வையாளர்களின் எண்ணிக்கை கூட கூட அந்த்த் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும் என்று அறிவிக்கிறார்கள்.
ஈரோடு மகேஷை காப்பாற்றத் துடிக்கிறது சைபர் கிரைம் போலீஸ். காப்பாற்றினார்களா இல்லையா என்பதுதான் மீதமுள்ள திரைக்கதை.
மலையாள பேரழகி ஸ்வேதா மேனனை வீணடித்திருக்கிறார்கள். ஈரோடு மகேஷ் அவ்வப்போது காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். அவ்வளவுதான். கணேஷ் வெங்கட்ராமுக்கு இந்தப் படத்தின் படமாக்கலின்போது படத்தின் கதி நன்கு தெரிந்திருக்க வேண்டும். தன்னால் இயன்றதை செய்திருக்கிறார். இவர்களைக் குற்றம் சொல்லி புண்ணியமில்லை. இயக்கம் சரியாக இருந்தால் இவர்கள் ஏன் இப்படி இருந்திருக்கிறார்கள்..?
ஒரு குறிப்பிடத்தக்க டிவிஸ்ட்டாக சுகன்யா வந்தவுடன் படத்தில் ஒரு ஈர்ப்பு வருகிறது என்பது மட்டும் உண்மை.  ஆனால் அதை அவர் வெளிப்படுத்தும்விதம் இயக்கத்தில் சொதப்பலாகிவிட்டதால் ரசிக்கவே முடியவில்லை. ஆனால் சுகன்யாவை மட்டும் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். நன்றி..!
அரோல் கரோலியின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் பாடல் காட்சிகளை பார்த்தால்..? ம்ஹூம்.. வேண்டாம். விட்டுவிடுவோம்.. ஒளிப்பதிவு அவ்வப்போது ஆஃப் ஆகி வரும் டியூப்லைட்டை போலவே இருக்கிறது.
முதல் காட்சியிலேயே இந்தப் படத்தின் தரம் தெரிந்துவிட்டது. சாதாரண கமர்ஷியல் படம் அளவுக்கு எதிர்பார்க்கவில்லையென்றாலும், அதில் ஒரு சதவிகிதமாகவது இருக்க வேண்டாமா என்ன..?
சொதப்பலான இயக்கம்.. அரதப் பழசான திரைக்கதை.. அடிக்கடி லைட்டிங்கில் சொதப்பியிருக்கும் கேமிரா.. சின்னப் பிள்ளைகள் விளையாடும்விதமான சண்டை காட்சிகள்.. சம்பந்தமேயில்லாத வசனங்கள்.. தப்பான காட்சி கோணங்கள் என்று எந்தவிதத்திலும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு படத்தினை படமாக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.
இவர்களேதான் தயாரிப்பாளர்கள். எத்தனையோ நல்ல இயக்குநர்கள் வாய்ப்பில்லாமல் காத்திருக்கிறார்களே.. அவர்களிடத்தில் இதனை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கலாமே..? இப்படி இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருந்து கொண்டு எந்த தைரியத்தில் படத்தை இயக்க முன் வந்தார்கள் என்று தெரியவில்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் 8 போலீஸாரோடு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அருகில் வந்து நின்று, “இப்போ நாம ஸ்பாட்டுக்கு வந்துட்டோம்…” என்று டயலாக் பேசுகிறார் அஸிஸ்டெண்ட் கமிஷனர் கணேஷ் வெங்கட்ராம். சாதாரண போஜ்பூரி சினிமாலகூட இப்படியொரு டயலாக்கை வைக்க மாட்டார்கள்..!? அத்தனை கேவலமாய் இருக்கிறது இயக்கம்..!
மேற்கொண்டு படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு விஷயமும் இல்லை, என்பதால் படம் பற்றி எதையும் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறோம்..!

0 comments: