காஷ்மோரா - சினிமா விமர்சனம்

30-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வருடம் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம்தான் முதல்முறையாக இறந்து போன ஆவிகளுக்கு உதவி செய்து அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி மேலுலகத்திற்கு அனுப்பி வைக்கும் கதை, திரைக்கதையுடன் வெளிவந்தது. அதன் பின்பு இன்னும் இரண்டு படங்களில் இதே போன்ற கதையம்சத்துடன் படங்கள் திரைக்கு வந்தன. இப்போது இந்தப் படம்.

பேயை ஓட்டுகிறேன்.. செய்வினை வைக்கிறேன். செய்வினையை தீர்த்து வைக்கிறேன்.. பில்லி, சூனியத்தை அகற்றுகிறேன் என்று இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைத்து கோல்மால் செய்து பணத்தை அள்ளுகிறது விவேக் அவரது அம்மா, அவரது மகள்,  மற்றும் அவரது மகனான காஷ்மோராவை உள்ளடக்கிய ஒரு பிராடு பேமிலி கும்பல். தொலைக்காட்சிகளில்கூட பில்லி சூனியம், ஆவியுலகம் பற்றியெல்லாம் லெக்சர் அடிக்க, பட்டிதொட்டியெங்கும் பரவி பெயரெடுக்கிறார் காஷ்மோரா.
இந்த நேரத்தில் உள்துறை அமைச்சரான சரத் லோகிதஸ்வாவின் மீதிருக்கும் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டி காஷ்மோராவை அணுகுகிறார்கள் அடிப்பொடிகள். பெரிய இடம் என்பதால் சிக்கலான ஸ்கெட்ச்சை போட்டு, சரத்தை மடக்கி அவரது அன்புக்கு பாத்திரமாகிறார் காஷ்மோரா.
அதே நேரம் ஆவிகளை ஓட்டுவதாகச் சொல்பவர்கள் அனைவருமே போலிகள்.. திருடர்கள்.. பணம் பறிக்கும் கும்பல்கள் என்று நினைக்கும் ஸ்ரீதிவ்யா இதைப் பற்றி ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டி காஷ்மோராவிடம் அஸிஸ்டெண்ட்டாக சேர நினைக்கிறார். தன்னுடைய ஆராய்ச்சி பட்டப் படிப்புக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்வதாகச் சொல்லி விவேக்கிற்கு தட்சணை கொடுத்து சேர்கிறார்.
இந்த நேரம் சரத் லோகிதஸ்வா தன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வரப் போவதாகத் தகவல் தெரிந்தவுடன் தன்னிடமிருந்த 500 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை காஷ்மோராவின் ஆசிரமத்தில் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்கிறார்.
ஆனால் இத்தனை பெரிய தொகையைப் பார்த்தவுடன் சபலப்படும் விவேக் பணத்துடன் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டே ஓடுகிறார். இந்த நேரத்தில் ஆந்திராவில் ஒரு வீட்டில் பேய் இருப்பதாகவும் அதை ஓட்ட வேண்டும் என்றும் சொல்லி ஒரு ஆஃபர் காஷ்மோராவுக்கு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்கிறார் காஷ்மோரா. பின்னாலேயே அவரது குடும்பமும் அந்த வீட்டுக்குள் நுழைகிறது.
ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஒரு அரசரின் சாம்ராஜ்யத்தில் அவரது தளபதியாக இருந்த ராஜ் நாயக்கால் ஏகப்பட்ட குழப்பம். வில்லாதி வீரனாக இருக்கும் ராஜ் நாயக் என்றாவது ஒரு நாள் தனது பதவிக்கு வேட்டு வைப்பான் என்று நினைத்து பயப்படுகிறார் அரசர்.
இந்த நேரத்தில் அரசரின் மகளான இளவரசி ரத்ன மகாதேவியை, பக்கத்து நாட்டு இளவரசன் கவர்ந்து செல்கிறான். இதையறிந்த அரசன் ராஜ் நாயக்குதான் இளவரசியை கவர்ந்து சென்றிருக்கிறான் என்று தவறாக நினைத்து ‘இளவரசியை மீட்டுக் கொண்டு வருபவர்களுக்கு ராஜ்ஜியத்தில் பாதியை கொடுத்து, இளவரசியையும் அவருக்கே திருமணம் செய்து கொடுப்பதாக’வும் சொல்கிறார். ஆனால், ராஜ் நாயக் அந்த இளவரசனை கொலை செய்துவிட்டு இளவரசியை அரண்மனைக்கு திரும்பவும் அழைத்து வருகிறான்.
அரசர் இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்காமல் திகைக்க.. கிடைத்த இடைவெளியில் தற்போதைய ராஜாவையும், அவருடைய மகனான பட்டத்து இளவரசரையும் கொலை செய்துவிட்டு இனிமேல் அந்த நாட்டுக்கு தானே ராஜா என்கிறான். இளவரசி ரத்ன மகாதேவியுடன் திருமணத்திற்கு நாளும் குறிக்கிறான். ஒரே நாளில் தனது தந்தை, சகோதரனை இழந்து தவிக்கும் ரத்ன மகாதேவி, ராஜ் நாயக்கை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறாள்.
தனது கூந்தலில் விஷம் கலந்த மூலிகையை கலந்து அதன் மூலமாக தன்னுடன் ஆடிப் பாடி களிப்படையும் ராஜ் நாயக்கை கொல்கிறாள். இதே சம்பவத்தில் ராஜ் நாயக்கும் இளவரசியையும் கொலை செய்கிறான்.
ராஜ் நாயக்கின் ஆசை அப்போது நிறைவேறாத காரணத்தினால் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் ஆவியாகவே திரிகிறான். ஆத்மா சாந்தியாகி மேலுலகம் சென்றடைய வேண்டுமெனில் ஒரு நிறைந்த பெளர்ணமி நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பலி கொடுக்க வேண்டும். இந்தக் கொலை பலியை பரம்பரையிலேயே ஒரேயொரு வாரிசாக இருக்கும் பெண் ஒருத்திதான் முன்னின்று நடத்த வேண்டும் என்ற விதியிருக்கிறது என்பதை அறிகிறான் ராஜ் நாயக்.
இதற்காக்கத்தான் திட்டமிட்டு காஷ்மோராவும், அவன் குடும்பமும் அந்த அரண்மனையில் மாட்டிக் கொள்ளும்படி நேர்கிறது. கூடவே ஸ்ரீதிவ்யாவும் மாட்டிக் கொள்கிறார். இப்போது ஆவியாக இருக்கும் ராஜ் நாயக் உண்மையைச் சொல்லாமல் தனக்கு உதவி செய்யும்படி காஷ்மோராவிடம் கேட்கிறான்.
உண்மை தெரிந்த காஷ்மோரா அங்கேயிருந்து தப்பிக்க நினைக்கிறான். உள்துறை அமைச்சரோ தன்னுடைய 500 கோடி பணத்தை அவர்களிடமிருந்து மீட்க நினைத்து போராடுகிறார். இறுதியில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இந்த காஷ்மோராவின் கதை.
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதை. ஆனால் மிக நுணுக்கமான தேடல், அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு.. திறமைசாலிகளின் கூட்டணியுடன் வெற்றிப் படமாக்கும் அளவுக்கு கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் கோகுல். ஏற்கெனவே ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்கிற படங்களை இயக்கியிருக்கும் கோகுல், இந்த மூன்றாவது படத்திற்கு முற்றிலும் வேறுவகையான கதைக்கு தாவியிருப்பது ஆச்சரியம்தான்..!
காஷ்மோராவைவிடவும் ராஜ் நாயக் கார்த்திதான் படத்தைத் தாங்கியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் மட்டுமே வந்தாலும் படத்தின் இறுதிவரையிலும் தனது தனித்த நடிப்பால் படத்திற்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார் கார்த்தி.
ராஜ் நாயக்கின் ஆணவச் சிரிப்பு, அகங்காரமான பார்வை.. போரில் தோற்றுப் போன அரசனின் அனைத்து பெண்களையும் அழைத்து வா என்று மோகிக்கும் குறுகுறுப்பு.. நயன்தாராவுடன் கொண்டிருக்கும் மோகத்தை வெளிப்படுத்தும்விதம்.. அப்பாவியாய் ராஜ் நாயக்கிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது என்று பலவித திறமைகளை கிடைத்த இடங்களிலெல்லாம் காட்டியிருக்கிறார் கார்த்தி.
தலை வேறு முண்டம் வேறாக மூன்றாவது வேடமாக ஏற்றிருக்கும் ராஜ் நாயக்கின் பேய் வேடத்தில் சத்தியமாக கார்த்தியை முதலில் அடையாளமே தெரியவில்லை. அந்த அளவுக்கு மேக்கப் கலை விளையாடியிருக்கிறது. அந்தக் கோலத்தில் கார்த்தியின் நடிப்பு அவருடைய நடிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். “இன்னொரு முறை ஓட்டம் எடுத்தால் உன் உயிரும் ஓடிவிடும்..” என்று மிரட்டும்போதும் பயமுறுத்தியிருக்கிறார்.
காஷ்மோரா கேரக்டரில் படு டீஸண்ட்டான கிரிமினலை காட்டியிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பயந்து கொண்டே போய் கடைசியில் அவர்களே ஒரு உதவி கேட்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தெனாவெட்டாக, “பாலும், முட்டையும் வாங்கிட்டு கோவிலுக்கு வாங்க…” என்று சொல்லும் திமிரும்.. சிரித்துப் பேசிய ஆளை மயக்கிவிடும் அந்த இயல்பான நடிப்பும் காஷ்மோராவுக்கு பக்க பலம்.
இதற்கு நேர் மாறாக ராஜ் நாயக் பேயிடம் காஷ்மோரா மாட்டிக் கொண்டு தவிக்கும்போது தனது உண்மை நிலையைச் சொல்லிவிட்டு, “ஒரு ஆட்டக்காரன் இன்னொரு ஆட்டக்காரனை பாராட்டணுமாம். ‘கரகாட்டக்காரன்’லேயே சொல்லியிருக்காங்க. நான் உன்னை பாராட்டிட்டேன்.. கதவைத் தொறந்துவிட்டீங்கன்னா ஓடிருவேன்…” என்று கெஞ்சலாக கேட்குமிடத்தில்தான் தியேட்டரில் அதிக கை தட்டல் கிடைக்கிறது.
ஹீரோவுக்கு இணையாக இன்னொரு ஹீரோவாகவே நடித்திருக்கிறார் நயன்தாரா. எப்போது வருவார்.. எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்புக்கிடையே காட்சிக்கு வரும் நயன்ஸ் தனது அப்பா கொலையுண்ட பின்புதான் தனது அழுத்தமான நடிப்பையே காட்டியிருக்கிறார். அவர் அணிந்திருந்த இரண்டு மூக்குத்திகளுமே அவரது அழகைக் குறைத்திருக்கின்றன என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
விஷம் தலைக்கு ஏறிய நிலையில் நிற்கும் ராஜ் நாயக்கிடம் “என்ன அடி சறுக்குகிறதா ராஜ் நாயக்..?” என்று கேட்டபடி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமரும் அந்த ஒரு காட்சியில், ‘படையப்பா’ நீலாம்பரியை ஞாபகப்படுத்துகிறார் நயன்ஸ்..
“இந்தப் பிறவியல்ல.. இனிமேல் நீ எத்தனை பிறவி எடுத்தாலும் உன் முடிவு என் கையில்தான்…” என்று ஆக்ரோஷமாக பேசும் காட்சியும், அதைத் தொடர்ந்த மரணக் காட்சியும் நயன்ஸின் ரசிகர்களை நிச்சயம் சந்தோஷப்படுத்தும். ஆனாலும் அம்மணியின் முகத்தில் உயர்ந்து கொண்டே போகும் வயதின் அடையாளம் தெரிவதுதான் சங்கடமாக இருக்கிறது.
டூயட்டே இல்லாமல் ஆராய்ச்சிப் படிப்பு மாணவியாக வலம் வந்திருக்கும் ஸ்ரீதிவ்யா கொஞ்ச நேரமானாலும் தனது பாத்திரத்தை நிரம்ப செய்திருக்கிறார். காஷ்மோராவிடம் உதவியாளராக வேலை பார்ப்பது போல் நடித்து ‘ஆவியும் அது சார்ந்த பித்தலாட்ட வணிகமும்’ என்கிற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதும் இரட்டை வேடத்தை இதில் புனைந்திருக்கிறார்.
“எங்க தாத்தா குட்டிச் சாத்தானுக்கு குட்டிக் கதை சொல்லி வீட்டு வாசலிலேயே அதுகளை கட்டிப் போட்டிருக்காது. அதுகதான் இதுக.. ரத்தம்தான் குடிக்குங்க..” என்று வாசலில் கட்டிப் போடப்பட்டிருக்கும் சங்கிலியை மட்டும் காட்டி உண்மையை நம்ப வைக்கும் காஷ்மோராவின் தங்கை மதுமிதாவும், மேஜிக் செட்டப்புகளை செய்து வைக்கும் அவரது பாட்டியும் இன்னொரு பக்கம் கவர்ந்திருக்கிறார்கள்.
தனியொரு மனிதனாக விவேக் படத்தை சில நேரங்களில் தாங்கியிருக்கிறார். என்னிக்கு “கோயிலுக்குள்ள கேமிராவும், எலெக்ட்ரிக் டிரம்மும் வந்துச்சோ அன்னிக்கே சாமிங்கெள்லாம் கோயில்ல இருந்து கிளம்பி வாக்கிங் போயிருச்சுக…” என்று பொருத்தமாக பன்ச் வசனம் பேசி கொஞ்சம், கொஞ்சம் நகைச்சுவையை படம் முழுவதும் தெளித்திருக்கிறார்.
ஓம் பிரகாஷின் அற்புதமான ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். போர்க் களக் காட்சிகளை கிராபிக்ஸில் வடிவமைத்திருந்தாலும் ஒரு சிறிய ஜெர்க்கூட இல்லாமல், அனைத்து பிரம்மாண்டமாத்தையும் பிரேமுக்குள் பதிவாக்கியிருக்கிறார் ஓம் பிரகாஷ். நயன்தாராவின் அழகுக்கும், ராஜ் நாயக்கின் பயமுறுத்தலுக்கும், காஷ்மோராவின் அலட்டல் நடிப்புக்கும் உறுதுணை ஒளிப்பதிவாளர் என்பதில் சந்தேகமேயில்லை.
அன்பறிவ் சகோதரர்களின் சண்டை பயிற்சிக்கும் ஒரு ஷொட்டு.  கலை இயக்குநர் ராஜீவனின் கைவண்ணத்தில் அரண்மனை மற்றும் ராஜ் நாயக் தங்கியிருக்கும் வீட்டின் உட்புற அமைப்பு, வெளிப்புறத் தோற்றமெல்லாம் படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் உடுக்கை ஒலியுடன் முதலில் அறிமுகமாகும் காஷ்மோராவும், பின்பு படத்தின் தீம் மியூஸிக்காக அவ்வப்போது ஒலிக்கும் இசையும் ரம்மியம். ‘திக்கு திக்கு ஸார்..’, ‘ஓயா ஓயா..’ மற்றும் ‘தகிட தகிட’ பாடல்கள் கேட்கும் ரகம். இதில் ‘திக்கு திக்கு ஸாரை’ வேறு ஒரு நல்ல கம்பீரமான குரல் வளம் கொண்ட பாடகரை வைத்து பாட வைத்திருந்தால் அந்தப் பாடல் மட்டுமே சூப்பர் ஹிட்டாகியிருக்கும்.
படத்தின் திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை சேர்த்திருந்தால் ஆங்காங்கே தொங்கலில் நிற்கும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கலாம்..!
சில, பல லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும், படம் காட்டும் பிரம்மாண்டம்.. ராஜ் நாயக்கின் கேரக்டர் ஸ்கெட்ச்.. தலையும், உடலும் தனித்தனியே மிதப்பது.. நயன்தாரா, இளவரசருடன் ராஜ் நாயக் மோதும் பிரமிப்பூட்டும் சண்டை காட்சிகள்.. அதீத ஆர்வத்தைத் தூண்டும் போர்க்களக் காட்சிகள்.. நயன்தாராவின் அழகு.. ராஜ் நாயக்கின் கம்பீரம் என்று பலவும் சேர்ந்து படத்தை பார்த்தே தீர வேண்டிய படம் என்கிற லிஸ்ட்டில் இடம் பிடிக்க வைத்திருக்கிறது.
காஷ்மோரா – சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

0 comments: