எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்

20-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வடசென்னையை மையப்படுத்தி வந்திருக்கும் அடுத்த படம் இது. கேங்ஸ்டர் கதைதான். ஆனால் கொஞ்சம் நகைச்சுவையாக கொடுத்திருக்கிறார்கள்.


ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் அளவுக்கு போபியோ நோய் உள்ளவர் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். இவரது அப்பா, தாத்தா இருவருமே அந்தக் காலத்து ரவுடிகள். ஆனால் இவருக்கு மட்டும் ரவுடியிஸம் செட்டாகவில்லை.
அதே ராயபுரத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தாதா ‘நைனா’ என்னும் சித்தப்பு சரவணன். மீனவர் சங்கத் தலைவர், துறைமுகத்தின் அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ. என்று பலரையும் கைக்குள் வைத்திருக்கும் இந்த நைனாவுக்கு ராயுபரத்திலேயே ஒரு எதிரி உருவாகிறான்.
பெண்களைக் கடத்தி வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைத்தால் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறான். சரவணன் அதைத் தடுத்து “வேற வேலைய பார்” என்று சொல்லியனுப்ப.. கோபத்தில் அவன் தனது ஆட்களை அனுப்பி சரவணனை கொலை செய்ய முயல்கிறான்.
நெஞ்சில் விழுந்த வெட்டுக்குத்துடன் உயிர் தப்பிய சரவணன் இப்போதுதான் தனது வாழ்க்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கிறார். தனக்கிருக்கும் ஒரே மகள், மனைவி, குடும்பத்தினர் தனக்குப் பின்பு என்ன ஆவார்களோ என்று பயப்படுகிறார். தனக்குப் பின்பு இந்த ராயபுரத்திற்கு யார் நைனாவாக அமர்வது என்று யோசிக்கிறார்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வாக தனது மகள் ஆனந்திக்கு எதற்கும் அஞ்சாத ஒரு ரவுடியை கல்யாணம் செய்துவைத்துவிட்டு அவனையே ராயபுரத்திற்கு நைனாவாக்கிவிடலாம் என்று நினைக்கிறார். இதற்காக அந்தப் பகுதி முழுவதிலும் எதற்கும் அஞ்சா சிங்கத்தைத் தேடி நாயாய், பேயாய் அலைகிறார்கள் அடியாட்கள்.
இதற்கு முன்பாகவே ஆனந்தியை பார்த்துவிடும் ஜி.வி.பிரகாஷ் அவர் மீது காதல் கொண்டு அலைகிறார். ஆனந்தி தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்குள் போய் அவளை பார்க்க முயல்கிறார். அதே நேரம் அதே ஹாஸ்டலில் இருக்கும் ஒரு பெண்ணைத் தூக்க கடத்தல்காரர்களும் நுழைகிறார்கள். அதே நேரம் அதே இடத்திற்கு சரவணனை வெட்டியவனும் வர… அவனைத் தூக்க சரவணனும் ஆட்களை அனுப்புகிறார்.
மின் சப்ளையை துண்டித்தவுடன் கிடைத்த கேப்பில் யாரோ சரவணனின் எதிரியை போட்டுத் தள்ள.. இந்தப் படுகொலையை ஜி.வி.பிரகாஷ்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறார்கள் சரவணனின் அடியாட்கள். இதனால் ஜி.வி.பிரகாஷ் மிகப் பெரிய ரவுடி என்று நினைத்து சரவணனிடம் அவரைப் பற்றி மாற்றிச் சொல்ல.. சரவணன் பிரகாஷை வரவழைத்துப் பேசுகிறார்.
தனது காதலியின் அப்பாவே முன் வந்து பேசுகிறார் என்பதால் ஜி.வி.பிரகாஷும் இதற்கு ஒப்புக் கொள்ள.. கல்யாணத்தில் முடிகிறது. இந்த நேரத்தில் ஜி.வி.பிரகாஷின் ரத்த போபியோ ஆனந்திக்கும், சரவணனுக்கும் தெரிய வருகிறது.
சரவணனை மீண்டும் ஒரு முறை கொலை செய்ய முயற்சிகள் நடக்கிறது. ராயபுரத்தில் இருந்தே சரவணனை குடும்பத்துடன் துரத்த அடியாட்கள் கொலை வெறியுடன் அலைய.. இந்தப் பிரச்சினையில் இருந்து ஜி.வி.பிரகாஷும், அவரது குடும்பமும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
கேங்ஸ்டர் கதை என்றாலும் அதற்குண்டான திரைக்கதையில், இடையிடையே நகைச்சுவைத் துணுக்குகளையும் சேர்த்து அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இயக்கத்தில் குறைவில்லை. ஆனாலும் படத்தில் இருக்கும் சில இரட்டை அர்த்த ஆபாச வசனங்களை முற்றிலுமாக நீக்கியிருக்கலாம். கவர்ச்சி ஆடைகளும், ஓவர் கிளாமரும் எனக்கு ஒத்து வராது என்று சொல்லும் ஹீரோயின் ஆனந்தி, ‘த்ரிஷா இல்லனா’ நயன்தாரா படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் இரண்டாவது முறையாக டபுள் மீனிங் டயலாக்கை பேசியிருக்கிறார். அர்த்தம் புரிந்துதான் பேசினாரா என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.
ஜி.வி.பிரகாஷின் உடல்வாகு, அவரது நடிப்புத் திறன் இதற்கேற்றாற்போல் பெரிய மாஸ் ஹீரோவாக அவரை ஆக்காமல் காமெடி ஹீரோவாகவே உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். நல்லவேளை தப்பித்தார் என்றே சொல்ல வேண்டும். ஜி.வி.யெல்லாம் சண்டை போட்டு ஜெயிக்கிறார் என்றால், தியேட்டர் கேண்டீனில் காபி விற்பவன்கூட கை தட்ட மாட்டான்.
‘டார்லிங்’, ‘பென்சில்’ படத்தில் பார்த்த அதே ஜி.வி.யாகத்தான் இதிலும் இருக்கிறார். இதுதான் மிகப் பெரிய குறை. படத்திற்கு படம் எதையாவது புதுமையாக செய்தால் ஒழிய விமர்சனம் எழுதுபவர்களுக்கு ஜி.வி.பிரகாஷை பாராட்ட வார்த்தைகள் கிடைக்க வாய்ப்பேயில்லை. இதில் தனது அம்மாவான நிரோஷாவிடம் பேசும் சில காட்சிகளிலும், ரத்தம் பார்த்து பயந்துபோய் நடுக்கத்துடன் நிற்கும் காட்சிகள்.. மற்றும் சில நகைச்சுவை துணுக்குத் தோரணங்களிலும் இயல்பாக நடித்திருக்கிறார். அவ்வளவுதான்..!
அப்படியென்ன அழகி இவர் என்று கேட்க வைக்கிறார் ஆனந்தி. நடிப்பும் என்னவென்று தெரியவில்லை. கொடுத்த வசனங்களை நச்சென்று சரியாகப் பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.. இதுவே நடிப்பென்றால்.. நாம் வேறொன்றும் சொல்வதற்கில்லை.
உண்மையாகவே நடிப்பென்றால் சரவணனும், யோகி பாபு, கருணாஸ், வில்லனாக நடித்த லாரன்ஸ் ஆகியோர் நடித்தவைதான். உண்மையாகவே இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நகைச்சுவையையும் தாண்டி கேங்ஸ்டர் கதையாகவே படம் சீரியஸாகவே நகர்கிறது. இவர்கள் இல்லாத காட்சிகளில்தான் நகைச்சுவையாகத் தெரிகிறது.
நிரோஷாவையும், சரவணனையும் சம்பந்தப்படுத்திய திரைக்கதையில் டிவிஸ்ட்டாக பிரகாஷின் அப்பாவான விடிவி கணேஷின் வருகையும், அதன் பின்னான காட்சிகளும் அந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இல்லாமல் தொலைவதால் ரசிக்க முடியாமல் போய்விட்டது.
நிரோஷாவை இவ்வளவு சீக்கிரமாக அம்மா கேரக்டரில் பார்க்க நேர்வதை நினைத்தால் காலத்தை பார்த்து திட்ட வேண்டும் போலிருக்கிறது. எப்படியிருந்தவர் இப்படியாகிவிட்டார்..? ஆனாலும் நிறைவான நடிப்பு.
கடைசி கட்டத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், பொன்னம்பலம் என்ற மூவர் கூட்டணியின் அலம்பல்களும், சுவையான திரைக்கதையும் படத்தை நல்லவிதமாக முடிக்க வைத்திருக்கிறது.
சரவணன் வில்லன் மோதல் நடக்கும் நேரத்தில் ஜி.வி.பிரகாஷின் என்ட்ரியும், அதற்கடுத்த படா படா காட்சிகளும், சரவணன் குடும்பத்தினரைத் தேடி வில்லனின் அடியாட்கள் குடியிருப்புகளில் தேடும் காட்சிகளும் செம விறுவிறுப்பு. இப்படி சீரியஸாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தில் திடீர், திடீரென்று நகைச்சுவையை கலந்து நமக்கு பிரேக் போட்டிருக்கிறார் இயக்குநர்.
ஜி.வி.பிரகாஷிடம் இசை சரக்கு தீர்ந்துவிட்டதுபோலும்.. காலத்தால் அழிக்க முடியாத எம்.எஸ்.வி.யின் பாடல்களை ரீமிக்ஸ் என்கிற பெயரில் சிதைத்து வந்த கொடுமை, சில மாதங்களாக நின்றிருந்த்து. ஆனால் இப்போது மீண்டும் இந்தப் படம் மூலமாக துவங்கிவிட்டது.
‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்’ பாடலை இதில் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதேபோல் ‘குங்குமப் பூவே கொஞ்சு புறாவே’ என்கிற சந்திரபாபுவின் பாடலையும் ரீமிக்ஸ் செய்து தனது இசை நேரத்தை ஒப்பேற்றியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவ்ளோ சீக்கிரம் ஜி.வி.பிரகாஷ் ரிட்டையர்டு ஆவார் என்று எதிர்பார்க்கவில்லை. இப்போது தெரிகிறதா யார் இசையமைப்பாளர்கள் என்று..?
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு நன்று. படத்தின் இறுதிவரையிலும் படத்தின் சிச்சுவேஷனுக்கேற்றாற்போன்று கதையின் போக்கு மாறிவிடாமல் ஒளிக் கலவை செய்திருக்கிறார்கள். இதேபோல் எடிட்டர் ஆண்டனி ரூபனின் பங்கும் மிகப் பெரியது. இது போன்ற கலவையான படங்களில் நகைச்சுவையும், சீரியஸும் மிஸ்ஸாகிவிடாமலும், அந்த பீலிங் தொடர்ச்சியாக வரும்படியும் பார்த்துக் கொள்வது மிக சிரமம். இதில் படத் தொகுப்பாளரின் உதவியால் இயக்குநர் இதைச் சாதித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் இது சீரியஸ் படமா..? அல்லது நகைச்சுவை படமா என்கிற குழப்பத்திற்குள் கொண்டு வந்து, படத்தை முடித்திருப்பதால் படத்தின் தன்மையை ஒரு வரியில் சொல்ல முடியவில்லை.
ஆனால் தியேட்டரில் 2 மணி நேர எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு இந்தப் படம் உத்தரவாதம் என்பது மட்டும் உண்மை. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செப்பனிட்டிருந்தால் படம் ஹிட் அடித்திருக்கும் என்பதும் உறுதி.
இயக்குநர் அடுத்தப் படத்தில் இதைவிடவும் ஜெயிக்கட்டும்..!

0 comments: