காதல் அகதீ - சினிமா விமர்சனம்

20-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற முன்னாள் நடனப் பயிற்சியாளர் ஹரிகுமார், முந்தைய படங்களின் கவனிப்பை மனதில் வைத்து ஹீரோவாக நடித்திருக்கும் அடுத்தப் படம்.
சென்ற மாதமே படம் வெளியானது. ஆனால் வந்தது தெரியாமலேயே பெட்டிக்குள் முடங்கிப் போனதால், மீண்டும் மேள, தாள வாத்தியங்களோடு புதிய படம்போல இந்த வாரம் புது ரிலீஸாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக் கொண்டு அந்த மார்க்கெட்டிலும் ஒரு தாதாவாக திகழ்கிறார் ஹரிகுமார். இவர் தாதா என்றால் எதிர்ப்பாளர்கள் என்று ஒரு டீம் இருக்கத்தானே செய்யும். அவர்களுக்கும், இவருக்கும் கடும் சண்டை.
இந்தச் சண்டையை பார்க்கும் ஹீரோயின் ஆயிஷாவுக்கு வழக்கம்போல ஹீரோ மீது காதல். இது ஒரு டூயட் பாட உதவுகிறது. சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையோடு சென்னைக்கு வந்திருக்கும் ஹீரோயினின் மாமா மகனான சுதர்சன், ஹரிகுமாரின் கடையில் வேலைக்கு சேர்கிறான்.
அன்றைய இரவிலேயே ஹரிகுமாரை கொல்ல வந்த கும்பலிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறான் சுதர்சன். இதனால் சுதர்சன் மீது மிகுந்த பாசம் கொண்ட ஹரிகுமார், அவனை தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்கிறார்.
தன் மாமா மகனை பார்க்க வருவதுபோல ஹரியின் வீட்டுக்குள் வரும் ஹீரோயின், ஹீரோ மீதான தனது காதலை வெளிப்படுத்த ஹீரோவும் அதை ஏற்றுக் கொள்ள… அடுத்த டூயட்டும் ரெடி.
ஆனால் இந்தக் காதலை ஹீரோயினின் அப்பா ஏற்க மறுக்கிறார். “ஒரு ரவுடிக்கு என் மகளைத் தர மாட்டேன்…” என்கிறார். ரவுடியிஸத்தை விட்டுவிடுவதாக ஹரிகுமார் வாக்குறுதியளிக்க திருமணம் நடந்தேறுகிறது.
முதல் இரவு அன்றே ஹரியின் வீட்டுக்கு வரும் எதிரிகள் ஹரியின் மாமனாரை கொலை செய்கிறார்கள். ஹரியையும் கடுமையாகத் தாக்கிவிட்டுப் போகிறார்கள். இந்த்த் தாக்குதலில் ஹரியின் தலையில் பலத்த அடிபட்டதால் அவருக்கு சிந்தை கலங்கி குழந்தை போலாகிறார்.
தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வந்து கவனமாகப் பார்த்துக் கொள்கிறார் ஹீரோயின். இந்த இடைவெளியில் ஹீரோயினுக்கு குழந்தை உண்டாகிறது. ஆனால் ஹீரோ திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறி வன்முறையில் இறங்க.. அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அங்கேயிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்படுபவர் வீட்டில் குழந்தை இருப்பதை பார்த்துவிட்டு, இது ஹீரோயினின் கள்ளக் காதலில் பிறந்ததோ என்று சந்தேகப்பட்டு கொலை வெறியாகிறார்.
அப்படியிருந்தும் தன் காதல் கணவனை காப்பாற்றவே நினைக்கிறார் ஹீரோயின். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் படமே.
‘மதுரை சம்பவம்’ ஓடியதற்குக் காரணமே படத்தின் திரைக்கதையும், ஹீரோயின் அனுயாவும்தான். இதையே மனதில் வைத்து ஹீரோத்தன படங்களில் தொடர்ந்து வருகிறார் நடிகர் ஹரிகுமார்.
சிறந்த கதையும், அதைவிட சிறந்த திரைக்கதையும், இது இரண்டையும்விட சிறந்த இயக்கமும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும்.
இதில் கதையென்று ஒரு பெரிய விஷயமே இல்லை. அதைவிட திரைக்கதை படு மோசம். ஹீரோ என்னவாக இருக்கிறார் என்பதையே மருத்துவ மொழிகளில் சொல்வதற்குக்கூட இயக்குநரால் முடியவில்லை. மனநல மருத்துவமனையின் ஆக்டிவிட்டீவ்களில் நம்பகத்தன்மையும் இல்லாமல் எல்லாமே ஏனோ, தானோவென்று படமாக்கியிருக்கிறார்கள்.
ஹரிகுமாருக்கு நினைவுகள் திரும்பிவிட்டதா..? மனைவி, சுதர்சனை அடையாளம் கண்டு கொண்டாரா என்பதே தெரியாமல்.. அவர் சுதர்சனை கொலை செய்யப் போகிறார் என்று முன்கூட்டியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது எதற்கு என்பதை விலாவாரியாக வசனத்தில் சொல்லியிருக்க வேண்டாமா..? நாமாக ஊகித்துக் கொள்ள வேண்டியிருக்கு..
ஹரிகுமார் சுமாராக நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளே ஹீரோவுக்கு போதும் என்று நினைத்துவிட்டார் போலும்.. இயக்கமே இல்லை என்னும்போது இவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்..?
ஆயிஷா என்னும் ஹீரோயின் முகத் தோற்றமே பரவாயில்லை ரகம். நடிப்பு இன்னும் பரவாயில்லை என்றுதான் சொல்ல முடியும். நடிப்புக்கேற்ற காட்சிகள் இருந்தும் இயக்குதல் இல்லாமல் இவரும் சொதப்பியிருக்கிறார்.
ஆயிஷாவின் மாமா மகனாக நடித்திருக்கும் சுதர்சன்.. புதுமுகம் என்பது இவரது நடிப்பிலேயே தெரிகிறது. அடுத்த முறை வேறொரு இயக்குநர் கைபட்டு நன்றாக வரட்டும்.
பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மனோகர் என்று ஒரு கோஷ்டியே படத்திற்கு பெரிதும் முட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களும் இல்லையெனில் நமக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கும்.
பர்கான் ரோஷனின் இசையில் பாடல்கள் ரொம்பவே சுமார் ரகம். ஷ்யாம்ராஜ் ஒளிப்பதிவில் அவ்வப்போது வெளிச்சம் போய், போய் வருவதையெல்லாம் எப்படி விட்டார்கள் என்று தெரியவில்லை.
சொதப்பலான திரைக்கதை, அப்பட்டமான லாஜிக் மீறல்கள், சிறப்பில்லாத இயக்கம் என்று பலவும் இந்தப் படத்திற்குக் கேடுதான் விளைவித்திருக்கின்றன.  
காதல் அகதீ நம்மை அகதியாக்கிவிட்டது..!

0 comments: