ராஜா மந்திரி - சினிமா விமர்சனம்

24-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘இறுதிச் சுற்று’ படத்திற்குப் பிறகு திறமையான மற்றுமொரு பெண் இயக்குநர், தமிழ்த் திரையுலகில் கில்லியாக அடித்திருக்கும் படம் இது.
‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராய் பணியாற்றிய உஷா கிருஷ்ணன் இயக்கியிருக்கும் முதல் படம்.
தனது முதல் படத்தையே வெற்றிப் படமாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் உஷா கிருஷ்ணன். வாழ்த்துகள். இந்தக் கதையை கையில் வைத்துக் கொண்டு இரண்டு வருடங்களாக பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடத்தில் சொல்லியும் அவர்கள் படமாக்க முன் வரவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார் உஷா கிருஷ்ணன்.
இந்தக் கதையை நிராகரித்த அவர்களெல்லாம் இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நிச்சயமாக மனதுக்குள் வருத்தப்படுவார்கள்.. ஒரு நல்ல படத்தை விட்டுவிட்டோமே என்று..! அந்த அளவுக்கு பெருமைப்படும்படியாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

அண்ணன், தம்பி பாசம்தான் படத்தின் கதைக் கரு. கிராமத்தில் வசிக்கும் ‘நாடோடிகள்’ கோபால், ஜெயந்தி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் காளி வெங்கட், இளையவர் கலையரசன். காளி வெங்கட் சோடா வியாபாரம் செய்து வருகிறார். கலையரசன் கல்லூரிக்கு செல்லும் வயதில் இருக்கிறார்.
காளி வெங்கட்டிற்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் வரன் அமையவில்லை. வரன் அமையாத வருத்தத்திலும் கன்னி கழியாத இளைஞனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று தனது பக்கத்து வீட்டிற்கு குடி வந்திருக்கும் வைசாலியை பார்த்தவுடன் அவரை காதலிக்கத் துவங்குகிறார் காளி வெங்கட்.
கலையரசனும் கல்லூரியில் படிக்க டவுனுக்குச் செல்கிறார். அங்கே கல்லூரியில் நுழைந்த தினத்தன்றே பேருந்தில் அறிமுகமாகும் ஷாலினுடன் மோதல் ஏற்பட்டு பின்பு அதுவே காதலாக மாறியிருக்கிறது.
தேர்வு விடுமுறையில் ஊருக்கு வருகிறார் கலையரசன். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டிற்கு வேலி தாண்டிக் குதித்து தனது காதலியைப் பார்க்க சென்ற காளியைப் பார்த்துவிடும் காளியின் அப்பா அந்த அர்த்த ராத்திரியில் தாம்.. தூமென்று குதிக்க.. இந்தக் களேபரத்தில் காளியை காதலியின் அப்பா அடிக்க.. தனது அண்ணனை அடித்துவிட்டாரென்ற கோபத்தில்… அவரை கலையரசன் அடித்துவிட.. பெரும் சண்டையாகிறது.
அடுத்த நாளே வைசாலியின் குடும்பத்தினர் ஊரையே காலியை செய்துவிட்டுப் போகிறார்கள். மறுபடியும் சோகமாகிறார் காளி வெங்கட். எப்படியும் மகனுக்கு கல்யாணம் செய்துவைத்துவிட துடிக்கும் பெற்றோர்கள் அரும்பாடுபட்டு ஒரு பெண்ணை பார்க்கிறார்கள்.
பெண் பார்க்க வர மறுக்கும் காளி வெங்கட்டை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார் கலையரசன். அங்கே பெண்ணாக காபி கொண்டு வருபவர் ஷாலி. மாப்பிள்ளை கலையரசன்தான் என்று நினைத்து ஷாலி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க.. பொண்ணே ஒத்துக்குச்சே என்றெண்ணி காளியும் ஆச்சரியத்தோடு, கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள.. குழப்பம் உண்டாகிறது..
உண்மை தெரிந்து ஷாலி கலையரசனிடம் கோபப்பட.. அவரை சமாதானப்படுத்த தனது நண்பன் பால சரவணனுடன் இணைந்து பல டிராமாக்கள் போடுகிறார். இருந்தும் பலனில்லாமல் போகிறது. அண்ணனின் சந்தோஷமும் கெடக் கூடாது. இந்தக் கல்யாணமும் நடக்கக் கூடாது என்று தம்பி கலையரசன் போராடுகிறார். அவருடைய காதல் போராட்டம் ஜெயித்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் நகைச்சுவை கலந்த சுவாரசியமான திரைக்கதை.
யார் சொன்னது பெண் இயக்குநர்களால் நகைச்சுவையை கொண்டு வர முடியாது என்று..? அந்தக் கூற்றை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் உஷா கிருஷ்ணன். பல காட்சிகளில் தியேட்டரே அதிரும்வகையில் இருக்கிறது அவரது அழகான இயக்கம்.  
குறிப்பாக இரண்டு சகோதரர்களின் தகப்பனாரான ‘நாடோடிகள்’ கோபால் தன் பிள்ளைகளின் ஒற்றுமையைக் கண்டு அடிக்கடி கண் கலங்கும் காட்சியில் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. காதல் காட்சிகளில் ஒரு கண்ணியம்.. பாடல் காட்சிகளில் ஒரு அழகுணர்ச்சி.. வசனங்களில் ஒரு எல்லைக்கோடு.. இயக்குதலில் ஒரு சிறப்புத் தன்மை என்று தன்னை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் உஷா கிருஷ்ணன்.
காளி வெங்கட்டிற்கும், கலையரசனுக்கும் நிச்சயம் இது புகழ் சேர்க்கும் படம்தான். கலையைவிடவும், காளி வெங்கட்டுதான் அசத்தியிருக்கிறார். தன்னையும் ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாளே என்றெண்ணி அந்த எண்ண மகிழ்ச்சியில் டூவிலரில் செல்லும்போது தம்பியிடம் விட்டுவிட்டு வசனம் பேசிக் கொண்டே வரும் காட்சியில்  மனதைத் தொட்டுவிட்டார் காளி.  
இறுதியில் காளி, தன் காதலியைச் சந்திக்கும் காட்சியும் கிளைமாக்ஸ் பரபரப்பில் ‘பாவம்பா.. சேர்த்துதான் வைங்களேன்’ என்று நம்மையும் சேர்த்தே பதற வைத்திருக்கிறது அவருடைய நடிப்பு. அண்ணனுக்கு ஒரு விருது பார்சல்..!
கலையரசன் அந்த வயதுக்கே உரிய துள்ளலுடன் நடித்திருக்கிறார். அண்ணனுடன் வம்புக்கு போய்க் கொண்டேயிருப்பதும்.. பின்பு அதே அண்ணனின் வாழ்க்கைக்காக அவருடன் இணைந்து போராடி.. தனது வாழ்க்கையைக்கூட தியாகம் செய்யும் அளவுக்குப் போகும் நடிப்பையும் காட்டியிருக்கிறார். கலையரசனை நிசமாகவே அதிகமாக நடிக்க வைத்திருப்பது இந்தப் படத்தில்தான்..! கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
ஹீரோயின்களில் ஷாலினைவிடவும் ஒரு படி மேலே போய் ஸ்கோர் செய்திருக்கிறார் மகாலட்சுமியாக நடித்திருக்கும் வைசாலி. சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள்.. ‘காலிபிளவர்’ பாடல் காட்சியில் இவருடைய ஆக்சன்கள்.. ரசனையானவை. காதலிக்கக் காத்திருப்பவர்களையும் நிச்சயம் காதலிக்க வைத்துவிடும் அளவுக்கு இருக்கிறது இவருடைய நடிப்பு.
காதலிக்கிறாரா இல்லையா என்பதையே சொல்லாமல் வீட்டையும் மாற்றிக் கொண்டு சென்ற பிறகு.. கடைசியாக கோவிலுக்கு வந்து சேலையை ஒப்படைத்துவிட்டுப் பேசும் காட்சியின்போது மனதைத் தொடுகிறார் வைசாலி. அடுத்த நொடி மனம் மாறும் காளியின் செயலும், அடுத்தடுத்த காட்சிகளும் சிறப்பான இயக்கத்தினாலேயே  வேகமெடுக்கிறது.
இதேபோல் மலையாள புது வரவான ஷாலினும் பிரமாதமாக நடித்திருக்கிறார். முற்பாதியில் கலையுடன் சண்டையிட்டு பல்பு வாங்கி.. பின்பு நட்பாகி.. அது காதலாகும்போது மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார். பிற்பாதியில் கோபத்தில் இவர் ‘டா’ போட்டு பேசும் காட்சிகளிலெல்லாம் நமக்கும் கோபம் கொப்பளிக்கிறது.
இவர்களைவிட்டுவிட்டுப் பார்த்தால் ஸ்கோர் செய்திருப்பது பால சரவணன்தான். மிக யதார்த்தமாக எந்தவகையான ஸ்லாங்காக இருந்தாலும் ‘அசால்ட்டு சேது’வாக நடிக்கிறார் பால சரவணன். இதில் நிச்சயத்தார்த்தத்தை நிறுத்த இவர் போடும் திட்டம் பணாலாகும் காட்சி வயிற்றைப் பதம் பார்க்கிறது.  கலை மற்றும் காளியின் அம்மாவாக நடித்திருக்கும் ஜெயந்தியின் நடிப்பு அருமை. குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இடையிடையே காமெடி செய்திருக்கும் கல்யாண புரோக்கர் சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் சித்தப்பா சரவண சக்தியின் டாஸ்மாக் காமெடியெல்லாம் ஏ ஒன்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘காலிபிளவர்’ பாடல் இப்போதே எஃப்.எம்.களிலும், டிவிக்களிலும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவுக்கும் ஒரு சபாஷ். ஒளிப்பதிவுக்காக நிரம்ப மெனக்கெடாமல் இயல்பாக எது இருக்குமோ அதையே வழங்கியிருக்கிறார்.
படத்தை கடைசிவரையிலும் ரசிக்க வைத்திருப்பதே இடையிடையே தியேட்டரில் எழும் கைதட்டல்கள்தான். நடிகர்களின் யதார்த்த நடிப்பிலேயே நகைச்சுவையை வெளிக்கொணர வைத்திருக்கிறார் இயக்குநர் உஷா கிருஷ்ணன். அதுவும் அந்தப் பகுதி மக்களின் எளிய வசனங்கள்.. ஆண்கள் அதிகம் பேசும் வசனங்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் அலசி, ஆராய்ந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறார். மிகக் கடுமையான உழைப்பாக இருக்கிறது. அவருடைய உழைப்புக்கும், திறமைக்கும் நமது சல்யூட்.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்குப் பிறகு குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய அளவுக்கு வந்திருக்கும் திரைப்படம் இது. மிஸ் பண்ணிராதீங்க..!

0 comments: