தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

25-08-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மூணு தலைமுறை தாண்டிய பரம்பரை பகையை முடிவுக்குக் கொண்டு வர எதிரி வீட்டுப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறாரு ஹீரோ. கல்யாணத்தப்போ நடக்குற கசமுசால பொண்ணோட அப்பன் கொல்லப்பட.. ஹீரோயின், ஹீரோவை தந்திரமா கொல்லப் பார்க்குறா.. பொண்டாட்டி மனசை மாத்தி புருஷனான ஹீரோ உயிரோட இருக்கானா இல்லையான்றதை நீங்க தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்குங்க..!


ஹீரோ இதயக்கனியாக விமல்.. மற்ற படங்களைவிடவும் இதில் ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். காரணம் இயக்குநராகவும் இருக்கலாம்..! காமெடி படங்களிலேயே நடித்து வருவதால் இதற்கு மேம்பட்ட நடிப்பைக் காட்ட இவருக்கு வாய்ப்புகள் இல்லை என்பதாலும் மனிதர் தப்பித்தே வருகிறார்.. ஆனால் இந்தப் படத்தில் நடனத்திலும் கொஞ்சம் அசத்தியிருக்கிறார்.. ஒரு பாடலின்போது கட்டைகளுக்கு நடுவில் தாளம் தப்பாமல் தொடர்ச்சியாக ஆடியிருப்பதை பார்த்தவுடன் விமல் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடியிருக்கிறது..! இதையே மெயின்டெயின் செய்வார் என்றே எதிர்பார்க்கிறேன்..!

ஹீரோயின் தாமரையாக பிந்துமாதவி. பொண்ணுக்கு கண்ணுதான் பெரிசு.. எப்பவும் முதுகுப் புறத்தை ஓப்பன் பேஜாக வைத்த ஜாக்கெட்டையே அணிந்திருக்கும் பிந்துவுக்கு காமெடிதான் வரலை. ஆனா நடிப்பு வருது. பெரிய அளவுக்கு நடிப்பைக் கொட்டிக் காட்ட  இதில் திரைக்கதை இல்லாததாலும், எப்பவும் முதுகை காட்டிக்கிட்டே இருப்பதாலும் நடிப்பை எதிர்பார்க்கும் அளவுக்கு தமிழகத்து ரசிகர்கள் முட்டாள்களில்லை.. நானும்தான்..!

இவர்கள் இருவரின்  நடிப்புப் பற்றாக்குறையை போக்கியிருக்கிறார்கள் சூரியும், சிங்கம்புலியும்.. சாம்ஸும்.. ரவி மரியாவும்..!  முறைப் பொண்ணு தாமரை தனக்குத்தான்னு தெனாவெட்டா பேசி அது புஸ்ஸாகிப் போன பின்பும் அந்த வீட்டுக்குப் பந்தோபஸ்துக்கு போறேன்னு சொல்லிட்டு வரும் சூரி அண்ட் கோ செய்யும் கலாட்டாவும்.. விமலை தீர்த்துக் கட்ட செய்யும் திட்டம் பணாலாகும் காட்சிகளும் வயிற்றை பதம் பார்க்கின்றன..!

அவ்வப்போது ரவி மரியாவிடம் திட்டங்களைத் தீட்டி கதை சொல்லிவிட்டு பின்பு அது பொசுக்கென்று போன பின்பு ரவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு பரிதாபமாக நிற்கும் அந்த சில காட்சிகளில் சூரி நம்மிடம் நெருங்கி வருகிறார்.. ஈகோ பார்க்காமல் இது போன்று தொடர்ந்தால் நமக்கும் நல்லதுதான்..!

ரொம்ப நாள் கழித்து வினுசக்கரவர்த்தியை திரையில் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.. உடல் நலக் குறைவையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் எழிலுக்கு எனது பாராட்டுக்கள்..!

ரவி மரியாவின் நடிப்பு கேரியரில் மிக முக்கியமான படமாக இது மாறிவிட்டது. நிச்சயம் அவரால் மறக்க முடியாது.. அந்த காமெடி கிளைமாக்ஸ் அசத்தல்.. மருதமலை மாமணியே என்று ஆரம்பிக்கும் படம் சியர்ஸ் கேர்ள் ஆட்டத்தோடு முடிவடைகிறது..! ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் அயிட்டம் கேர்ள்ஸ்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் உத்தியை ரொம்பவே பாராட்ட வேண்டும்..!

படம் முழுவதுமே ஆங்காங்கே தெளித்துவிடப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்தான் படத்தை காப்பாற்றி இறுதிவரையிலும் பார்க்க வைக்கின்றன..! முதல் டிவிஸ்ட் முதல் ரீலிலேயே ஆரம்பிக்கிறது..! அடுத்த ரீலில் இன்னொரு டிவிஸ்ட்.. எதிரியின் மகள்தான் தாமரை என்பது தெரியாமலேயே காதலிக்கத் துவங்குகிறார்.. இப்படி அடுத்தடுத்த ரீல்களிலேயே டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக நகைச்சுவையுடன் கொண்டு போய் இடைவேளையில் மாமனாரை கொன்றுவிட்டு நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர்..!

இடைவேளைக்கு பின்பு.. பழி வாங்கும் போக்கு.. முதல் இரவு நடக்காமல் போவது.. அதையொட்டிய நகைச்சுவைகள்.. சூரி அண்ட் கோவின் தாக்குதலுக்கு பதிலடி சிங்கமுத்து தரும் கவுண்ட்டர்.. என்று பெரிதாக லாஜிக்கை  யோசிக்கவேவிடாத அளவுக்கு திரைக்கதையை காமெடியாக்கி கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், நண்பர் கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங்கும் கச்சிதம்.. ஆனாலும் ஒரேயொரு காட்சியில் இணை இயக்குநர்களின் அலட்சியம் தெரிந்தது.. ஒரு  காட்சியில் விமலின் சட்டையில் மாட்டியிருந்த கூலிங்கிளாஸின் ஒரு லென்ஸ் மட்டும் தவறி கீழே விழுவது அப்பட்டமாகத் தெரிகிறது.. மீண்டும் அடுத்த ஷாட்டில் அந்த லென்ஸை எடுத்து சரியாக மாட்டியிருக்கிறார்கள். அப்போ முன்னாடி எடுத்த ஷாட்டில் தவறு இருக்குன்னு தெரிஞ்சு மறுபடியும் அதை ரீஷூட் செஞ்சிருக்க வேண்டாமா..? என்ன புள்ளைகப்பா இவுங்க..? அந்தக் காட்சியின் வேற ஷாட்டுகள் எடுக்காததால் எடிட்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல் போயிருக்கிறது..! 

இமானின் இசையில் அம்மாடி அம்மாடி பாடலும் நெலாவட்டம் நெத்தியிலே பாடலும் ஓகேதான்.. அந்த போம் போம் போம் பாடலை நடுவில் இடம் பெற்றிருக்க வேண்டியது.. திரைக்கதையின் வேகத்தைக் குறைப்பதாக படம் பார்த்த பல இயக்குநர்களும் சொன்னதால் அதனை புரோமா ஸாங்காக மாற்றிவிட்டதாகக் கூறினார் இயக்குநர் எழில். ஆனாலும் அதுவும் ரசனையாகத்தான் இருக்கிறது..! 

மனம் கொத்திப் பறவையில் என்ன பாடம் கற்றுக் கொண்டாரோ அதையே இதிலும் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் எழில். நிச்சயம் படம் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் தோல்வியைத் தராது என்றே நம்புகிறேன்..!

ஒரு முறை நிச்சயமாக பார்க்கலாம்..!

டிஸ்கி : 

ரொம்ப வருஷத்துக்கப்புறம் மரத்தடி பஞ்சாயத்து இதுலதான் வருது. விமல், தாமரையை தன்னோட சேர்த்து வைக்கச் சொல்லி பிராது கொடுக்குறாரு. அதை விசாரிச்சு பொண்டாட்டியோ வார்த்தைதான் முக்கியம்ன்னு சொல்லி பிந்துவோட விருப்பப்படியே விமலோட அனுப்பி வைக்குறாங்க பஞ்சாயத்துக்காரங்க. அதுல பஞ்சாயத்து பண்ற ரெண்டு நாட்டாமைகளும் நல்லாவே தீர்ப்பு சொல்லி நடிச்சிருக்காங்கப்பா.. எனக்கு இருக்குற ஒரு டவுட்டு.. இவுங்க ஏன் விஜய்க்கும், ஆத்தாவுக்கும் நடுவுல போயி பஞ்சாயத்து பண்ணி வைச்சிருக்கக் கூடாது..? இனிமே வர்ற எல்லா சினிமா பஞ்சாயத்துக்கும் இதே பாணில இவுகளையே உக்கார வைச்சு பஞ்சாயத்து நடத்தினா என்ன..? யோசிங்கப்பா.. யோசிங்க..!

17 comments:

Anonymous said...

'உண்மை'த்தமிழன் வாழ்க!!

கோவை நேரம் said...

இதுக்கு முன்னாடி வந்த படம் 555 க்கு விமர்சனம் எழுதலையே தலைவா...ம்ம் மறந்துட்டேன்...தலைவாவுக்கும் எழுதிட்டீங்களே...

Nondavan said...

அண்ணாச்சி, உங்க விமர்சனத்திற்கு தான் வைட்டிங்... என்ன ஒரு படம் வந்தாலும், உங்க ப்ளாக் தான் முதலில் பார்ப்பது...

எப்பவும் போல இதுவும் அருமை. உங்க எழுடம் ஸ்டைலில் ஏதோ மாற்றம் தோணுது, என்னன்னு கரெக்டா சொல்ல தெர்ல.. :)

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

'உண்மை'த்தமிழன் வாழ்க!!]]]

என் மனசுக்குப் பட்டதை எழுதியிருக்கேன் ராசா..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

இதுக்கு முன்னாடி வந்த படம் 555 க்கு விமர்சனம் எழுதலையே தலைவா... ம்ம் மறந்துட்டேன்... தலைவாவுக்கும் எழுதிட்டீங்களே...]]]

ரொம்ப லேட்டாயிருச்சு. இனிமே எழுதி என்ன பயன்..? அதான் விட்டுட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, உங்க விமர்சனத்திற்கு தான் வைட்டிங்... என்ன ஒரு படம் வந்தாலும், உங்க ப்ளாக்தான் முதலில் பார்ப்பது...]]]

உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் நண்பரே..!

[[[எப்பவும் போல இதுவும் அருமை. உங்க எழுடம் ஸ்டைலில் ஏதோ மாற்றம் தோணுது, என்னன்னு கரெக்டா சொல்ல தெர்ல.. :)]]]

அளவைக் குறைத்திருக்கிறேன். அவ்ளோதான்..!

Nondavan said...

ஓஹோ..!! இப்பதான் புரியுது... அது என்ன மாற்றம் என்று..!!!

உங்க மனமார்ந்த நன்றிக்கு நன்றி அண்ணாச்சி...

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

ஓஹோ..!! இப்பதான் புரியுது... அது என்ன மாற்றம் என்று..!!!

உங்க மனமார்ந்த நன்றிக்கு நன்றி அண்ணாச்சி...]]]

போதும்.. அதான் நிறைய பேர் விமர்சனம் எழுதுறாங்க.. நம்மளை படிச்சுத்தான் தியேட்டருக்கு யாரும் போகப் போறதில்லை. அதுனால பொங்குறதை கொஞ்சம் குறைச்சிருக்கேன்..!

Nondavan said...

அண்ணாச்சி, ஏதோ மன வருத்ததில் பேசுவது போல இருக்கே... !! உங்க எழுத்தை படிக்க நிறைய பேர் இருக்கோம் அண்ணே...

AAR said...

இதே பாணில இவுகளையே உக்கார வைச்சு பஞ்சாயத்து நடத்தினா என்ன..?
--
Not just you, entire Tamilnadu people have lost faith in our corrupt police and judiciary. Everyone now desire for the good old panchayat system of our village for dispute resolution.
After independence, the British system of Justice benefits only the rich and powerful.

SANKAR said...

VERY POSITIVE ANALYSIS - SANAKR.M TIRUNELVELI

உண்மைத்தமிழன் said...

[[[Lisa TCA said...

Interesting Post!

Check out my latest Blogspost: The sexiest Car on earth]]]

வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, ஏதோ மன வருத்ததில் பேசுவது போல இருக்கே... !! உங்க எழுத்தை படிக்க நிறைய பேர் இருக்கோம் அண்ணே...]]]

இது அப்பப்போ வரும்.. போகும்..! விடுங்க.. வந்து விசாரிக்கிறீங்க பாருங்க.. இது போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

இதே பாணில இவுகளையே உக்கார வைச்சு பஞ்சாயத்து நடத்தினா என்ன..?

--

Not just you, entire Tamilnadu people have lost faith in our corrupt police and judiciary. Everyone now desire for the good old panchayat system of our village for dispute resolution.
After independence, the British system of Justice benefits only the rich and powerful.]]]

நண்பரே..

அந்த மரத்தடி பஞ்சாயத்தில் பேசும் ரெண்டு பேரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். அதனால்தான் கொஞ்சம் உரிமையுடன் கிண்டலடி்ததேன். வேறொன்றுமில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[SANKAR said...

VERY POSITIVE ANALYSIS - SANAKR.M TIRUNELVELI.]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

ரொம்ப நாளா சத்தமே காணோமேனு எட்டிப்பார்க்க வந்தால், புது வீடு கட்டி சத்தம் போடாம குடும்பம் நடத்திட்டி இருக்கீர் ,நடத்துங்க ,நடத்துங்க!

பழையப்பதிவெல்லாம் ஒருக்கா மேய்ஞ்ச்சாச்சு, இன்னுமா தமிழ்மணத்தில சேரலை?

உங்க விமசர்சனம் படிச்சா முழுக்கதையும் சொல்லுவீங்கனு நம்பிக்கையா வரவங்களை ஏமாத்துவது போல இந்த விமர்சனத்தில கதைய முழுசா சொல்லலையே அவ்வ்!

ஆனாலும் தேசிங்குராஜா கதை, அழகம்பெருமாள் இயக்கி,மாதவன்,ஜோதிகா நடிச்ச "டும் டும் டும்' படத்தின் இன்னொரு வெர்ஷன் போல இருக்கே, எழில் இயக்கும் படமெல்லாம் ஏற்கனவே வந்த படங்களின் புதிய வெர்ஷனாவே இருப்பதன் "தொழில்ரகசியம்" என்ன?

------------

ஆதலினால் காதல் செய்வீருக்கு பின்னூட்டம் போட்டேன் , என்னமோ தெரியலை பப்ளிஷ் ஆகலைபொரு வேளை ஸ்பாம்ல இருக்கலாம்.

சொல்ல வந்தது இதான், பின்னூட்டத்தில் ஒருத்தர் பழைய தெலுங்கு படத்தின் கதைனு சொல்லி இருந்தார்ல, அந்த தெலுகு படம் ரீமா சென், உதய் கிரண் நடிச்ச சித்ரம் , படிக்கும் போதே காதல்,கர்ப்பம், கருக்கலைக்க முயற்சி,பலிக்காமல் கல்யாணம் ,அப்புறம் பிரிவு ,ஆனால் கிளைமேக்சில ஒன்னா குழந்தையோட படிக்க போவாங்கோ :-))

இப்போலாம் ஹிட்டான படத்தை பட்டி ட்ங்கரிங் பார்த்து புதுக்கதைனே சொல்லிடுறாங்க போல இருக்கு :-)0

சுஜாதா,மைக் மோகன், பூர்ணிமா எல்லாம் நடிச்ச விதி படம் ,ஆதலினால் விட நல்லப்படம் எனலாம், ஹி...ஹி அதுல கூட மகாபலிபுரத்துல ரூம் போடுவாங்கோ :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, ரொம்ப நாளா சத்தமே காணோமேனு எட்டிப் பார்க்க வந்தால், புது வீடு கட்டி சத்தம் போடாம குடும்பம் நடத்திட்டி இருக்கீர், நடத்துங்க, நடத்துங்க!]]]

எல்லாம் உம்ம ஆசீர்வாதம் ஓய்..!

[[[பழைய பதிவெல்லாம் ஒருக்கா மேய்ஞ்ச்சாச்சு, இன்னுமா தமிழ்மணத்தில சேரலை?]]]

சேர்க்க முடியலை வோய்..!

[[[உங்க விமசர்சனம் படிச்சா முழுக் கதையும் சொல்லுவீங்கனு நம்பிக்கையா வரவங்களை ஏமாத்துவது போல இந்த விமர்சனத்தில கதைய முழுசா சொல்லலையே அவ்வ்! ஆனாலும் தேசிங்குராஜா கதை, அழகம்பெருமாள் இயக்கி,மாதவன்,ஜோதிகா நடிச்ச "டும் டும் டும்' படத்தின் இன்னொரு வெர்ஷன் போல இருக்கே, எழில் இயக்கும் படமெல்லாம் ஏற்கனவே வந்த படங்களின் புதிய வெர்ஷனாவே இருப்பதன் "தொழில் ரகசியம்" என்ன?]]]

எல்லார் மாதிரியும் அவரும் சிந்திக்கிறார்.. இதுதான் ரகசியம்..!

------------