கிருஷ்ணா டாவின்சி - நினைவலைகள்..!

17-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மறைந்த அண்ணன் கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது..! நண்பர்கள், தோழர்கள், குடும்பத்தினர் என்று கிருஷ்ணாவுடன் இணைந்திருந்தவர்களின் பலரது நெகிழ்ச்சியான பேச்சுக்களைவிட கிருஷ்ணாவின் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தும்விதமாய் காட்டப்பட்ட அந்த வீடியோ காட்சிகள்தான் பரவசமூட்டின..! ஒவ்வொரு வீடியோ பதிவின்போதும் அந்த இருட்டுச் சூழலிலும் தோழி ஜெயராணி தன் உடல் குலுங்கி மெலிதாக அழுதபோதுதான் அதுவொரு துக்கச் சூழல் என்பதே புரிந்தது..! 


அண்ணனுக்கு வயது 46-தான். ஆனாலும் அதற்குள்ளாக காலன் அவரை அழைத்துவிட்டான்..! அவருடைய இசை ஆர்வம், படிப்பு ஆர்வம்.. எழுத்தாற்றல் எல்லாவற்றையும்விட சக தோழர்களிடம் நண்பனாக அவர் நடந்து கொண்டவிதம்தான் இத்தனை கூட்டத்தையும் திரட்டியிருந்ததாக எனக்குத் தோன்றுகிறது..!

அண்ணன் கிருஷ்ணா டாவின்சியை நான் முதன்முதலில் சந்தித்தது தி.நகரில் இருந்த மின் பிம்பங்கள் ஸ்டூடியோவில்தான். அந்தச் சமயத்தில் அங்கு அவர் அவ்வப்போது வந்து செல்லும் சூழல் இருந்தது.. அவர் அப்போது குமுதத்தில் பணியாற்றி வந்தாலும், அரசு பதில்களில் அண்ணனின் கைவண்ணமும் இருக்கிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. 

ஒரு நாள் மாலைப் பொழுதில் அண்ணன் அங்கே வரும்போது கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. கிடைத்த நேரத்தில் “வாங்க.. ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்..” என்று சொல்லி என் தோளில் கை வைத்து அழைத்துச் சென்றார். 

பேச்சுவாக்கில் “நீங்க எத்தனை வருஷமா இந்த ஆபீஸ்ல இருக்கீங்க..?” என்றார். “4 வருஷமா..” என்றேன். “கதை ஏதாவது எழுதுறீங்களா..?” என்றார். “இல்ல ஸார்.. ஆனால் திருத்தம் மட்டும் பண்ணுவேன்..” என்றேன். புருவத்தை உயர்த்தி கிண்டலான பார்வையுடன், “அதென்ன திருத்தம் மட்டும்..?” என்றார். “இல்ல.. இங்க வர்ற கதைகளைப் படிச்சுட்டு அதுல சீரியலுக்கு ஏத்த மாதிரி ஸ்கோப் என்ன இருக்குன்னு பார்த்துட்டு கிளைக் கதையா டைப் பண்ணித் தருவேன்..” என்றேன். “அப்போ உங்களால சீரியலுக்கு கதை எழுத முடியுமே..? ஏன் அதைச் செய்யாம டைப் அடிச்சிட்டிருக்கீங்க..?” என்றார். எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதுவரையிலும் நான் அப்போது அது பற்றி யோசிக்கவே இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது..! சமாளிப்பாக, “இல்லண்ணே.. எழுத வாய்ப்பு வரலை..” என்றேன்.. “வாய்ப்பெல்லாம் வராது.. நாமதான் உருவாக்கிக்கணும். இத்தனை சீரியல் பண்ற கம்பெனில உக்காந்துக்கிட்டு, எழுதத் தெரிஞ்சும் ஒண்ணும் செய்யாம இருக்கீங்களே பிரதர்..?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார். 

“ஏதாவது கதை வைச்சிருக்கீங்களா?” என்றார். “ஐடியாஸ் மட்டும் இருக்குண்ணே.. இன்னும் எழுதலை..” என்றேன். “சீக்கிரமா எழுதுங்க.. எழுதி கைலாசம் ஸார்கிட்ட காட்டுங்க.. ஒருவேளை அவருக்குப் பிடிச்சிருந்து உங்களை எழுதச் சொல்லலாம்ல. ஏன் டயத்தை வேஸ்ட் பண்றீங்க.?” என்றார். “இல்லண்ணே.. ஆபீஸ் வேலையே ரொம்ப டைட்டாத்தான் இருக்கு.. நாம கதை எழுதணும்னா கொஞ்சம் டைம் வேணும். இடம் வேணும்.. இங்க உக்காந்து எழுத முடியாது..” என்றேன் தன்மையாக..! 

அதற்குள் கடையின் அருகே வந்துவிட்டோம்.  “அப்போ வீட்ல காலைல சீக்கிரமா எந்திரிச்சு எழுதுங்க...” என்றார்.. ”காலைல சீக்கிரமா எழுந்திருச்சு.. நானு.. முடியாதுண்ணே..” என்றேன் கொஞ்சம் அலட்சியமாக..  “நீங்க வேண்ணா ஒரு நாளைக்கு டிரை பண்ணிப் பாருங்க..” என்றார் விடாப்பிடியாக. “இந்த ஜென்மத்துல நடக்காது..” என்றேன்.. “வொய் பிரதர்..”(தனது பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டுக் கொண்டு, எனது முகத்திற்கு அருகே தனது முகத்தை வைத்துக் இப்படி கேட்ட அந்த  ஸ்டைல் இருக்கே..! கிருஷ்ணாண்ணா..!) என்றார்.. “நான் காலைல எழுந்திருக்கிறதே 8 மணிக்குத்தாண்ணே..” என்றேன். 

டீ கைக்கு வர.. அதை வாங்கிக் கொண்டு “ஏதோ கல்யாணமானவன் மாதிரி பேசுறீங்களே சரவணன்.. உங்களுக்கென்ன வேலை, ராத்திரில..?” என்றார் கிண்டலாக.. “இல்லண்ணே.. காலைல 5 மணி, 6 மணிக்கெல்லாம் என்னால எழுந்திருக்கவே முடியாது.. நான் எப்பவும் கொஞ்சம் லேட்டா தூங்குவேன்.. அதுனாலதான்..” என்றேன்.. “அப்போ அலாரம் வைச்சுக்குங்க..” என்றார்.  “அது வைச்சாலும் நம்ம காதுக்குக் கேக்காதுண்ணே.. ராத்திரில மெஷினை கழட்டிருவேன்ல.. அதான்..” என்றேன். “செல்போன்ல அலாரம் வைச்சு காதுக்குப் பக்கத்துல வைச்சுக்குங்க..” என்றார்.. “அப்படி வைச்சாலும், பெட்ஷீட்டை போர்த்திக்கிட்டு படுக்கறதால அதுவும் கேக்காதுண்ணே..” என்றேன்.. விடாப்பிடியாக நான் தொடர்ந்து சொன்ன எதிர்பதில்கள் அவருக்குள் ஏதோ சலிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெறுப்பாகிப் போன முக பாவனையை கொஞ்சம் காட்டிவிட்டு, சட்டென்று இயல்புக்கு திரும்பினார்.

“நான் ஒரு ஐடியா சொல்றேன்.. செய்றீங்களா?” என்றார் கண்களில் குறும்பு மின்ன.. “சொல்லுங்க..” என்றேன் எதிர்வரும் அணுகுண்டை உணராமல்..! “செல்போனை, வைப்ரேட்டர் மோடுக்கு மாத்திருங்க..” என்றார். “மாத்திட்டு..” என்று நான் கேட்டு பதிலுக்குக் காத்திருக்க, ஒரு வாய் டீயை அருந்திவிட்டு, “ஜட்டிக்குள்ள போட்டுக்குங்க.. காலைல தானா முழிப்பு வரும்..” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு டீ கிளாஸை வைக்க நகர்ந்தார்..

நான் குடித்த டீ, என் மூக்கு வழியாக வெளியே வரும் அளவுக்கு புரையேறி சிரித்துத் தொலைத்தேன்.. கடையே என்னை வேடிக்கை பார்க்க.. இதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் டீக்கு காசு கொடுத்துவிட்டு “வாங்க போகலாம்..” என்றார்.. “எப்படிண்ணே..?” என்றேன், சிரிப்பை அடக்க முடியாமல்.. “இதெல்லாம் நமக்குத் தானா தோன்றதுதான்..” என்றார்..

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அண்ணனை எப்போது சந்தித்தாலும், அவருடைய கண்களில், இது பற்றிய ஒரு குறும்புப் பார்வையை என்னை நோக்கி வீசுவார்..! அதற்குப் பிறகு அவர் அங்கே வருகை தந்த நாட்களில் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசும்போது பெரும்பாலும், இசையைப் பற்றிப் பேசுவார். அல்லது சினிமாவைப் பற்றிப் பேசுவார். 


நான் மின்பிம்பங்களில் இருந்து விலகியிருந்த நேரத்தில் ஒரு நாள் மாலை அவருடைய எழும்பூர் இல்லத்தில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். வீடு அப்போதுதான் துடைத்து மெழுகப்பட்டது போன்று பளிச்சென்று இருந்தது. சுற்றிலும் புத்தகங்களுக்கு மத்தியில் எழுதிக் கொண்டிருந்தார். மெல்லிய இசை ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. வெறும் இசை மட்டும்தான். ஒரு ஆங்கிலப் புத்தகத்தை பார்த்து அதனை தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார். 

வெளிநாட்டு இசைக் கலைஞர் ஒருவரைப் பற்றி கட்டுரை எழுதுவதாகச் சொன்னார்.(பெயர் மறந்துவிட்டது) அந்த இசையமைப்பாளருக்கு காது கேட்காத சூழல் இருந்தபோதிலும், அவரால் இசை அமைக்க முடிந்தது என்கிற தகவலைச் சொன்னார்.. அது எப்படி என்று நான் ஆச்சரியப்பட்டு கேட்க, அந்தப் புத்தகத்தில் இருந்து சில வரிகளைப் படித்துக் காட்டி மொழி பெயர்த்து சொன்னார்..!

“இசை அறிவு அவருக்குள்ள நிறைய இருக்கு. அதைக் கேக்கணும்னு அவருக்கு அவசியம் இல்லை. இசைக் கோர்வைகளை நோட்ஸ்களாக குறித்துக் கொடுத்தாலே போதும். அதைத்தான் அவர் செஞ்சிருக்காரு..” என்று சொல்லி வரிசையாக பல வெளிநாட்டு இசைக் கலைஞர்களின் பெயர்களைச் சொல்லி “அந்த இசையையெல்லாம் நீங்க கேட்டீங்கன்னா அசந்திருவீங்க..” என்றார். அப்போது ஒலித்துக் கொண்டிருந்த வெறும் இசையைக் குறிப்பிட்டுக் கேட்டேன்.. “எல்லாரும் பாட்டோடதான் கேக்கணும்னு விருப்பப்படுவாங்க.. நீங்க ஏன் இப்படி..?” என்றேன்.. “இது என் விருப்பம். இசை மெட்டு நல்லா இருக்குல்ல.. அதுக்காகத்தான்..” என்றார். “எப்படிண்ணே.. இவ்வளவையும் படிச்சு, மனப்பாடமா வைச்சுக்குறீங்க. நான் ஸ்கூல்லகூட இங்கிலீஷ் புத்தகத்தை புரட்டினதில்லை..” என்றேன்.. 

“படிக்கணுமன்ற ஆர்வம் இருந்தால்போதும்.. வெறும் சினிமா மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா நாம அதுல ஒரு டெக்னீஷியனா மட்டும்தான் ஆவோம். கிரியேட்டரா மாற முடியாது. கிரியேட்டரா மாறணும்னு நிறைய கதைகள் படிக்கணும். புத்தகம் வாசிக்கணும்..” என்றார். “நானும் நிறைய படிப்பேண்ணே. புத்தக வெறியன் மாதிரிதான்.. ஆனா தமிழ்ல மட்டும்தான்..” என்றேன். “நான் நம்ப மாட்டேன்..” என்றார். “நான் எப்படிச் சொன்னா நம்புவீங்க..?” என்றேன்.. டக்கென்று எதிரில் இருந்த ஒரு ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொடுத்து “நேரா மொட்டை மாடிக்கு போங்க.. மேல் சுவர்ல ஏறுங்க.. இதைக் கைல வைச்சு படிச்சிக்கிட்டு நடந்துக்கிட்டே வாங்க.. அப்பத்தான் நீங்க ஒரு புத்தக வெறியன்னு நம்புவேன்..” என்றார். “ஏண்ணே.. இது உங்களுக்கே ஓவரா இல்லை. அப்படியே கீழ விழுந்தா என்னாகும்..?” என்றேன். “புத்தகம் வாசிப்பு சுவாரஸ்யத்தில் உயிரைவிட்ட ஒரு வாசகன்னு அடுத்த வார குமுதத்துல உங்க போட்டோவ போட்டு ஒரு கட்டுரை எழுதிருவேன்.. எனக்கும் காசு வரும்.. என்ன செய்றீங்களா..?” என்றார் குறும்பாக..!

பார்த்தவுடன் எனெர்ஜியை தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது கிருஷ்ணாவின் முகம். அவ்வளவு வசீகரமானது.. அவருடைய முகத்தில் எப்போதும் இருக்கும் புன்முறுவலும், உற்சாகமும் அடுத்தவரை வசியப்படுத்தக் கூடியது..! குமுதத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனைவருமே இப்போதும் இதைத்தான் சொல்கிறார்கள். அவருடைய உற்சாகப்படுத்தலில்தான் தாங்கள் மேலும் முன்னேறினோம் என்று..!

இதற்கெல்லாம் பின்பு ஒரு முறை குமுதம் பத்திரிகையில் நடந்த வாசகர்கள் சந்திப்பில் என்னை முன் வரிசையில் பார்த்தவுடன் அதே குறும்புடன் கண்ணடித்தார் கிருஷ்ணா. “அரசு பதில்களில் பழைய குறும்புத்தனம் இல்லை..” என்ற எனது புகாரைக் கேட்டவுடன் ஜவஹர் சாருடன் இணைந்து கிருஷ்ணாவும் சிரித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தவுடன் மிக வேகமாக என்னருகில் வந்த கிருஷ்ணா, என் தோளில் கை போட்டு “ரொம்ப தேங்க்ஸ் சரவணன்..” என்றார்..! அதற்கடுத்த வாரங்களில் இருந்து அரசு பதில்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பியதையும் சொல்லத்தான் வேண்டும்..!

அரசு பதில்களில் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பின்பு அதிக காலம் ஆதிக்கம் செலுத்தியவர் கிருஷ்ணா அண்ணன்தான் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் கிருஷ்ணாவிடம் இது பற்றி ஒரு முறைகேட்டபோது நேரிடையாக பதில் சொல்லவில்லை.. மென்மையாகச் சிரித்தார். அவ்வளவுதான்..! அத்தோடு குமுதம் அலுவலகத்தில் நடக்கும், நடந்த சில சம்பவங்கள் பற்றி நான் ஆர்வத்தோடு கேட்டபோதெல்லாம் மனிதர் அசைந்து கொடுக்கவில்லை. “எல்லா ஆபீஸ்லேயும் இது மாதிரியிருக்கும். நீங்க எங்க போனாலும் இதை பேஸ் பண்ணித்தான் ஆகணும்..” என்று பொத்தாம்பொதுவாகச் சொல்வாரே ஒழிய மேட்டரை ரிலீஸ் செய்யவே மாட்டார்..!

அவ்வப்போது தொலைபேசியில் பேசியபோதெல்லாம் “அடுத்த வருஷம் படம் பண்ணிருவேன்.. கதையெல்லாம் ரெடி.. சீக்கிரமே..” என்றுதான் உற்சாகமாகப் பேசுவார். ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி குமுதத்தில் அவர் எழுதிய தொடர் மிக அழகானது.. அதற்காக பல கடின உழைப்புகளை அவர் செய்திருக்கிறார். ரஹ்மான் தொடருக்காக அவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியபோது அதற்காக அவர் சந்தித்த நபர்கள், போன இடங்கள்.. படித்த புத்தகங்கள் என்று பெரும் பட்டியலையே சொன்னார். மலைப்பாக இருந்தது எனக்கு..! இந்தக் கடின உழைப்புக்கு நியாயமான பெயரை அத்தொடர் அவருக்கு பெற்றுக் கொடுத்தது என்று நம்புகிறேன்..!

கடைசியாக வர்ணம் திரைப்படத்தின் வலைப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சியில்தான் அவரைச் சந்தித்தேன்.. அப்போதும் அதே உற்சாகம்.. அதே சிரிப்பு.. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, உரையாடலில் அண்ணனின் தலைமையில் ஒரு டீம் செயல்பட்டதாக அறிந்தபோது மிகப் பெரிய சந்தோஷம். படமும் சிறப்பாகத்தான் இருந்தது..! பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு பரிசுகளை வென்றது.. தமிழில்தான் சரியான விளம்பரம் மற்றும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் சினிமா ஜாதகத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாததால் தமிழகத்து மக்களின் பார்வைக்கு அதிகம் போகவில்லை என்பது வருத்தமே..

இப்போது மறுபடியும் அதே நிறுவனத்திற்காக அடுத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். இடையில் பல சினிமா நிறுவனங்களின் கதை இலாகாவில் பணியாற்றி அதனை இதுவரையில் வெளியில் சொல்லாமலும் இருந்திருக்கிறார் என்பதே அவர் மீதான மரியாதையை பெருமளவில் கூட்டியிருக்கிறது..!

நான் தற்போது பணியாற்றும் டிவி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்பட இருக்கும் சினிமா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு  முன்பாக அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்..! “இப்போ வேணாம் சரவணன்.. கைல நாலைஞ்சு பிராஜெக்ட் இருக்கு.. முடிச்சிட்டு சொல்றேன்..” என்றார். “நேர்ல வந்து விளக்கமா சொல்றேண்ணே. வரட்டுமா..?” என்றேன்.. “இல்ல சரவணன்.. இப்ப வேண்டாம்.. நாம அப்புறமா சந்திக்கலாம்..” என்று அவசரமாகச் சொன்னார். அவருடனான கடைசி பேச்சு அரைகுறையாக முடிந்துவிட்டதே என்பதை இப்போதைக்கு நினைத்தாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது..! 

தனது நோயுடன் போராடிய அனுபவங்களை வைத்து அவர் எழுதியிருக்கும் “காலா அருகே வாடா..” என்ற சிறுகதை, அச்சுக்குப் போவதற்கு முன்னாலேயே அவர் விண்ணுலகம் சென்றுவிட்டது மகா கொடுமை..! தனது சாவிலும் அதற்கொரு பொருத்தமான எழுத்தை பதிவு செய்ததுதான் அண்ணனுக்கு கிடைத்திருக்கும் பெருமை..!

தனது எழுத்துப் பணி, சினிமா பணிகள், இசை ஆர்வம், குடும்பம் என்று அனைத்திலும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், இந்த விரைவான அவரது விடைபெறல் அதிர்ச்சியானதுதான்..! அவர் இன்னும் சாதித்திருக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும் நிறையவே காத்திருக்கின்றன.. அவருடைய மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் அதனைப் படித்த முகப்புத்தகத்தில் “சாவே உனக்கு சாவு வராதா..?” என்று கோபத்துடன் எழுதினேன்.. அதையே இப்போதும் எழுதுகிறேன்..! சொல்கிறேன்..!

நினைவேந்தல் நிகழ்ச்சியில் காட்டப்பட்ட வீடியோக்களில் அண்ணன் கிடார் இசையமைப்பில் உற்சாகத்துடன், படத்தில் தென்பட்ட அதே உணர்ச்சியுடன் பாடிய அந்தப் பாடல்கள் அவருடைய குடும்பத்தினருக்கு அவர், அவர்களுடனேயே இருப்பதை என்றென்றும் நினைவூட்டும்..! இந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும்தான் அவர் தம் குடும்பத்தினருக்கு அதிகமாக அளித்துள்ளார். கிருஷ்ணா அண்ணனின் தந்தையார் தாங்க முடியாத சோகத்தில் பாதி அழுகையுடனும் பேசி முடித்த அந்த ஒரு கணம், எந்தவொரு தகப்பனுக்கும் இந்த கொடுமை இனிமேலும் நிகழ்ந்துவிடக் கூடாதே என்றுதான் மனம் சொன்னது..!

இது போன்ற அநியாய துக்க நிகழ்வுகளுக்குச் செல்வது, இதுவே கடைசியாக இருந்து தொலையட்டும்..!

20 comments:

கோவி.கண்ணன் said...

//வெளிநாட்டு இசைக் கலைஞர் ஒருவரைப் பற்றி கட்டுரை எழுதுவதாகச் சொன்னார்.(பெயர் மறந்துவிட்டது) அந்த இசையமைப்பாளருக்கு காது கேட்காத சூழல் இருந்தபோதிலும், அவரால் இசை அமைக்க முடிந்தது என்கிற தகவலைச் சொன்னார்.. அது எப்படி என்று நான் ஆச்சரியப்பட்டு கேட்க, அந்தப் புத்தகத்தில் இருந்து சில வரிகளைப் படித்துக் காட்டி மொழி பெயர்த்து சொன்னார்..!

//

அந்த இசை மேதையின் பெயர் பீத்தோவன்

கே.ஜே.அசோக்குமார் said...

அவருக்கு என்ன மாதிரியான வியாதி என்பதை எழுதவில்லை என்றாலும், இந்த துக்கம் சம்பந்தபட்ட அனைவருக்கும் அதிகம் தான். 46 வயதில் இறப்பது அதுவும் பண்பான ஒரு அறிவாளியை இழப்பதென்பது எல்லாவகையிலும் கொடுமை.

pudugaithendral said...

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்

ராஜ நடராஜன் said...

கிருஷ்ணா டாவின்சி பெயர் தெரிந்து இருந்தபோதும் வசீகரப்புன்னகை முதல் அறிமுகமே.

எனது அனுதாபங்கள்.

சிவானந்தம் said...

கிருஷ்ணா டாவின்சி என்ற பெயர் மட்டும்தான் பலருக்கு தெரியும். ஆனால் அந்த மனிதருக்கு உண்டான முழுமையான உருவத்தை இந்த பதிவில் காட்டி இருக்கிறீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[கோவி.கண்ணன் said...
/வெளிநாட்டு இசைக் கலைஞர் ஒருவரைப் பற்றி கட்டுரை எழுதுவதாகச் சொன்னார்.(பெயர் மறந்துவிட்டது) அந்த இசையமைப்பாளருக்கு காது கேட்காத சூழல் இருந்தபோதிலும், அவரால் இசை அமைக்க முடிந்தது என்கிற தகவலைச் சொன்னார்.. அது எப்படி என்று நான் ஆச்சரியப்பட்டு கேட்க, அந்தப் புத்தகத்தில் இருந்து சில வரிகளைப் படித்துக் காட்டி மொழி பெயர்த்து சொன்னார்..!/

அந்த இசை மேதையின் பெயர் பீத்தோவன்]]]

மிக்க நன்றி கோவியாரே..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஜே.அசோக்குமார் said...
அவருக்கு என்ன மாதிரியான வியாதி என்பதை எழுதவில்லை என்றாலும், இந்த துக்கம் சம்பந்தபட்ட அனைவருக்கும் அதிகம்தான். 46 வயதில் இறப்பது அதுவும் பண்பான ஒரு அறிவாளியை இழப்பதென்பது எல்லாவகையிலும் கொடுமை.]]]

எலிகாய்ச்சல்தான்.. உயிரைக் குடிக்கும் அளவுக்கு போய்விட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[புதுகைத் தென்றல் said...

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.]]]

வருகைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
கிருஷ்ணா டாவின்சி பெயர் தெரிந்து இருந்தபோதும் வசீகரப் புன்னகை முதல் அறிமுகமே. எனது அனுதாபங்கள்.]]]

அவருடைய நிஜப் பெயரைக்கூட அவர் இறந்த பின்புதான் தெரிந்து கொண்டேன்..! அது இத்தனை ஆண்டுகளாகத் தேவையில்லாமல் இருந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவானந்தம் said...

கிருஷ்ணா டாவின்சி என்ற பெயர் மட்டும்தான் பலருக்கு தெரியும். ஆனால் அந்த மனிதருக்கு உண்டான முழுமையான உருவத்தை இந்த பதிவில் காட்டி இருக்கிறீர்கள்.]]]

இன்னும் நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள் சிவானந்தம் ஸார்.. இணையத்தில் தேடிப் பாருங்கள்..!

Kalee J said...

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்....

ஸ்ரீராம். said...

விகடனில் அந்தக் கதை படித்து கலங்கிப் போனேன். (கதைக்கு அருகில் விகடன் சேர்த்திருந்த குறிப்பு கலங்கச் செய்தது) அதில் இருந்த பாசிட்டிவ் முடிவு அவருக்கு நேராதது துரதிருஷ்டமே.

உ . சரவணன் said...

இப்படி ஒரு மனிதரைப் பற்றி இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்ததை எண்ணி மிகவும் வருந்துகிறேன் . “காலா அருகே வாடா “ கதையினால் தான் அவரை அறிந்து கொண்டேன் . ” கடவுள் இல்லை “ என நான் நம்புவது மீண்டும் ஒருமுறை உறுதியாயிருக்கிறது . அந்த கதையை படித்த பின் கண்ணீர் வராத கண்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை .அவரைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள உங்கள் பதிவு உதவியது . அவர் இறக்கும் வரை அவர் யாரென்று தெரியாத என் சோகத்தை விட அவரோடு பழகிய உங்கள் சோகம் ஆற்ற முடியாதது தோழரே .

Anonymous said...

சட்டென்று தொத்திக்கொள்ளும் அந்த உற்சாகமும் சிரிப்பும் இவ்வளவு விரைவில் விட்டுப்போனது வேதனைதான் நண்பரே..

Unknown said...

my deepest sympathy for his family.

உண்மைத்தமிழன் said...

[[[Kalee J said...

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்....]]]

நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

விகடனில் அந்தக் கதை படித்து கலங்கிப் போனேன். (கதைக்கு அருகில் விகடன் சேர்த்திருந்த குறிப்பு கலங்கச் செய்தது) அதில் இருந்த பாசிட்டிவ் முடிவு அவருக்கு நேராதது துரதிருஷ்டமே.]]]

கிடைத்த தற்காலிக நிம்மதியை அவர் நிரந்தரமாக நினைத்திருந்தார். ஆனால் அது அவரது கடைசி படைப்புக்காக இறைவன் கொடுத்த காலக்கெடு என்பது இப்போதுதான் புரிகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[உ . சரவணன் said...

இப்படி ஒரு மனிதரைப் பற்றி இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்ததை எண்ணி மிகவும் வருந்துகிறேன். “காலா அருகே வாடா“ கதையினால்தான் அவரை அறிந்து கொண்டேன். ”கடவுள் இல்லை“ என நான் நம்புவது மீண்டும் ஒரு முறை உறுதியாயிருக்கிறது. அந்த கதையை படித்த பின் கண்ணீர் வராத கண்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவியது. அவர் இறக்கும்வரை அவர் யாரென்று தெரியாத என் சோகத்தைவிட அவரோடு பழகிய உங்கள் சோகம் ஆற்ற முடியாதது தோழரே.]]]

உடன் பிறந்த அண்ணனை இழந்துவிட்டது போன்றே உணர்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரெவெரி said...

சட்டென்று தொத்திக் கொள்ளும் அந்த உற்சாகமும் சிரிப்பும் இவ்வளவு விரைவில் விட்டுப் போனது வேதனைதான் நண்பரே..]]]

அவருடன் பேசும்போது அந்த உற்சாகமும், புன்சிரிப்பும், எனர்ஜியும் நம்மையும் தொற்றிக் கொள்ளுமே.. அதுதான் இப்போது நம்மையெல்லாம் கலங்கடிக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[somasundaram movithan said...

my deepest sympathy for his family.]]]

நன்றிகள் நண்பரே..!