3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம்..!

 04-04-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துயரமும் கலந்துதான் இருக்கும். மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கும் தருணங்களே, நமக்கு சோகத்தைத்தான் தரும். சோகத்தை அதே கணத்தில் திரும்பிப் பார்த்தால் சொல்ல முடியாத துயரத்தைத்தான் தரும்..! வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு உணர்த்தத்தான் கஷ்டமான சூழல் ஏற்படுகிறது என்பார்கள்..! சிலர் இதனை உணர்ந்து தப்பிக்கிறார்கள்.. பலர் உணராமலேயே தாண்டிச் செல்கிறார்கள்..!

3 படத்தை பார்த்தபோது எனக்குள் எழுந்த ஒரு நெருங்கிய உணர்வைப் புறக்கணிக்க முடியாமல் 3 நாட்களாக கஷ்டப்பட்டுவிட்டேன். என்ன செய்தும் அதனை மறக்க முடியவில்லை..!


1 அண்ணன், 2 அக்காள்கள் மத்தியில் வாழ்ந்தவன் நான். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த ஆசான்கள் மூவர். முதல் நபர் எனது தந்தை திரு.சவடமுத்து. இரண்டாமவர் திருமதி திருமலையம்மாள் சவடமுத்து, எனது தாய். மூன்றாமவர் எனது இரண்டாவது சகோதரி செல்வமணி.

எனது அண்ணனுக்கும் எனக்குமான வயது இடைவெளி 15 என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.. எனது மூத்த அக்கா ஈஸ்வரிதான் எனது வீட்டையே தாங்கிப் பிடித்தவர். நான் பிறந்தவுடனேயே எனது அம்மாவின உடம்பு வீக்காகி நோயாளியாகிவிட.. அப்போதுதான் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மூத்த அக்காள் எங்களது நலனுக்காக தனது பள்ளிப் படிப்பை தியாகம் செய்துவிட்டு கரண்டியையும், வீட்டுப் பொறுப்பையும் கையில் எடுத்தார்.. இப்போதுவரையிலும் அடுத்தவருக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன் எனது பெரியக்கா.. என்னளவில் எனது இன்னொரு தாய் இவர்தான்..!

எனது இரண்டாவது அக்கா செல்வமணி மிகவும் தைரியமானவர். பட்பட்டென்று பேசும் குணமுடையவர்..! எனக்கும் இந்த அக்காவுக்கு சின்ன வயதில் இருந்தே ஆகாது..! எப்போதும் அடிதடியாகவே இருப்போம்..! இப்போதும் ஒரு விஷயம் நியாபகத்திற்கு வருகிறது..! சின்ன வயதில் 2 அல்லது 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் தண்ணீர் தாகமெடுத்தால், பாயில் இருந்து எழுந்து உட்கார்ந்து கண்ணை திறக்காமலேயே “ஆயா.. ஆயா.. தண்ணி..” என்று குரல் கொடுப்பேன். எனது மூத்த அக்காளை எனது குடும்பமே “ஆயா..” என்றுதான் அழைக்கும்..! எனது அம்மா படுத்தபடியே பெரிய அக்காவை எழுப்பிவிடும்.. “ஈஸா.. தம்பி கூப்பிடுறான் பாரு.. தண்ணி கொடு..” என்று சொல்லும்.. தண்ணீர் சொம்பு சின்னக்காவின் பக்கத்தில் இருக்கும். பெரியக்கா சின்னக்காவிடம் “தண்ணியை எடுத்துக் குடுடி..” என்று சொல்லும்.. சின்னக்கா சொம்பை எடுத்து என் வாயருகே நீட்டும்.

சொம்பைப் பிடித்திருக்கும் அந்தக் கைகளை பிடித்துப் பார்ப்பேன். என் பெரியக்கா எப்பவும் கண்ணாடி வளையல்தான் அணிந்திருக்கும். சின்னக்கா ரப்பர் வளையல்தான் அணிந்திருக்கும்.. நான் பிடித்த கையில் கண்ணாடி வளையலாக இல்லாவிட்டால் “போ.. இது பிசாசு.. எனக்கு வேணாம்.. எனக்கு ஆயாதான் வேணும்..” என்று அந்த நேரத்திலும் செல்லம் கொஞ்சுவேன்.. சின்னக்கா தலையில் கொட்டும். “இந்த நேரத்துலேயும் கோபத்தை பாரு..” என்று சொல்லிவிட்டு, “இந்தா.. நீயே உன் தம்பிக்கு கொடு.. பிசாசு பய..” என்று சொல்லி பெரியக்காவை எழுப்பிவிடும். பெரியக்கா எழுந்து “ஏண்டா படுத்துற இப்படி..?” என்று தலையைச் சொரிந்து கொண்டே ஒரு கையால் சொம்பை எடுத்து என் வாயில் வைக்க.. அதன் இரண்டு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு தண்ணீரைக் குடித்துவிட்டு அப்படியே கண்ணைத் திறக்காமலேயே திரும்பவும் படுத்துக் கொள்வேன்..! திரும்பவும் பெரியக்கா என்னை எழுப்பி சேலை முந்தானையால் வாயைத் துடைத்துவிடும். இதுவரையிலும் கண்ணைத் தொறக்காமலேயே அந்த சுக அனுபவத்தை அனுபவிப்பேன்..! இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் முட்டுகிறது..! எத்தனை, எத்தனை அன்பு நிறைந்த நாட்கள் அவை..? எத்தனை பாசத்தை என் அக்காக்கள் என் மீது காட்டியிருக்கிறார்கள்..? 

காலம் விரைந்து செல்ல.. தொண்டை புற்று நோயினால் என் அப்பாவை இழந்த நிலையில், என் இரண்டாவது அக்கா செல்வமணிக்கு மதுரையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கிளார்க்காக போஸ்ட்டிங் கிடைத்தது..! சந்தோஷப்பட்டது குடும்பம்.. இப்போது அண்ணனின் ஒரு சம்பாத்தியத்தோடு கூட ஒன்று கிடைத்ததே என்றுதான்.. எனது பெரியக்காவுக்கு அப்போது திருமணமாகிவிட்டது..!

நாங்கள் அம்மாவுடன் மதுரை தபால் தந்தி நகருக்கு குடிவந்தோம்.. அங்கே திடீரென்று அம்மாவுக்கு கேன்சர் வந்துவிட.. அம்மாவை பரமாரிக்க வேண்டி ஒன்றரை வருட காலம் எங்கேயும் வேலைக்கே போக முடியாமல் தவித்துப் போய், அந்த எண்ணமே இல்லாத அளவுக்கு வீட்டுக்காக வாழ்க்கைப்பட்டேன். அது பெரிய சோகக் கதை.. பின்னாளில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்..!

அம்மாவும் மறைந்த பின்பு, நான், சின்னக்கா, அண்ணன் மூன்றே பேர்தான் வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியிருந்தோம். இப்போது அண்ணனுக்கு திருமணமானது.. அடுத்து ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் சின்னக்காவுக்கு கல்யாணமானது. இவரது கல்யாண வாழ்கையில் கிடைத்த மாமாவின் மூலம்தான் எனக்கு கணினியின் அறிமுகமே கிடைத்தது..!

அம்மா இருந்தவரையிலும் அம்மாவை பகல் வேளைகளில் நான்தான் பரமாரிப்பேன்.. இதற்காக செல்வா அக்காவும், அண்ணனும் நான் கேட்கும்போதெல்லாம் பணத்தைக் கொடுப்பார்கள். அப்புறமும் வீட்டுச் செலவுக்காக கொடுக்கும் பணத்திலும் மிச்சப் பணம் நம்ம பாக்கெட்டுக்குத்தான்..!

இப்போது சின்ன அக்காவுடன் நட்பு இறுகியது. சின்ன வயதில் இருந்த காரணமே இல்லாத குரோதமும், பகையும் போய், நட்பும், அன்பும், பாசமும் எங்கள் இருவருக்குமிடையிலேயே அதிகமானது இந்தக் காலக்கட்டத்தில்தான். என்னுடைய 2-வது மாமாவின் மூலமாக கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி பற்றி கேள்விப்பட்டு அவருடைய உறவுக்காரரின் கம்ப்யூட்டர் சென்டரில் டேட்டா என்ட்ரி கற்றுக் கொண்டேன். அங்கிருந்துதான் எனக்கு கணினி அறிவு அறிமுகம். அத்தோடு அப்போதைய கணினி உலகின் அடிப்படை படிப்புகளான பேஸ்கல் மற்றும் டிபேஸ்,  பாக்ஸ்புரோ வரையிலும் அங்கேதான் கற்றுக் கொண்டேன். இதற்கான செலவு முழுவதையும் செல்வாக்காதான் கொடுத்தது..

அண்ணனும் அதே பி.எஃப். அலுவலகத்தில்தான் பணியாற்றி வந்ததினால் சொக்கிகுளத்தில் இருக்கும் ஆபீஸ் குவார்ட்டர்ஸில் இருவரும் அருகருகேதான் குடியிருந்தார்கள். நான் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து தினமும் இரண்டு பேர் கொடுக்கும் டிப்ஸில் பொழப்பை ஓட்டிக் கொண்டிருந்தேன். சினிமா மீதான ஆர்வம் அதிகமாகி பின்பு வெறியாகி கணினியை சற்று ஓரம் கட்டிவிட்டு முழு நேரமும் சினிமா பைத்தியமான பின்பு, மெட்ராஸ் சலோ என்று ஒரே நாளில் முடிவெடுத்து கிளம்பி வந்தேன்..!

இந்த நேரத்தில் எனது 2-வது மாமாவைப் பற்றியும் சொல்ல வேண்டும். தங்கமான மனிதர்.. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர்.. டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்..! அதன் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்..! நான் சென்னை வந்து முதல் 2 வருடங்கள் நான் படித்த அதே கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து பின்பு தமிழன் எக்ஸ்பிரஸில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் அந்த முதல் சம்பவம் நடந்தது..!

சின்னக்காவுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தது. என்ன விஷயம் என்று விசாரித்தபோது புதுமையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். “ஒரு வேலையும் செய்றதில்லை. போட்டது போட்டபடி அப்படியே இருக்கு.. வெறிச்சு பார்த்தபடியே உக்காந்திருக்கு. புள்ளை அழுகுது.. அதை கூட பார்க்க மாட்டேங்குது..” என்று எதை, எதையோ வீட்டினர் சொன்னார்கள்.

நான் மதுரை வந்து சின்னக்காவை பார்த்தபோது ஒரு சின்ன மாற்றம் தெரிந்தது.. எப்போதும் “வாடா எருமை..” என்றழைக்கும் பாசமும்,  உற்சாகம் குன்றிப் போய் “வாடா..” என்ற ஒற்றை வரியோடு நிறுத்திக் கொண்டது.. அதேபோல் வீட்டு வேலைகளை செய்வதிலும், பிள்ளையை கவனிப்பதிலும் சுணக்கம் தெரிந்தது.. மாமாவும் இதைச் சொல்லி வருத்தப்பட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் பேசிப் பார்த்தபோது தனக்கு ஒன்றுமேயில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியது அக்கா..!

ஒரு மாதம் கழித்து உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கம்பம் சென்றபோது சின்னக்காவின் மாமனார் வீட்டிற்குச் சென்றேன். அப்போது லீவுக்காக சின்னக்காவும் அங்கே வரப் போவது தெரிந்துதான் சென்றேன். அங்கே அக்காவைப் பார்த்தபோது அதிர்ச்சி.. கழுத்தில் பாதி அறுபட்ட நிலையில் காயம் இருந்த்து. “என்னக்கா..?” என்று விசாரித்தபோது ஒரு மதிய வேளையில் தூக்கில் தொங்கி சாக முயற்சித்ததாக மாமாவும், அவரது வீட்டாரும் சொன்னார்கள். எனது அண்ணனும், அண்ணியும் “என்ன பிரச்சினைன்னு உங்கக்கா சொல்ல மாட்டேங்குது..” என்றார்கள்.. கல்யாணத்திற்கு வந்த உற்சாகம் குன்றிப் போய் அக்காவை பக்கத்தில் உட்கார வைத்து “என்னக்கா பிரச்சினை..?” என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். ஒரு வரியில் சொன்னது.. “தூக்குல தொங்குணேண்டா.. எல்லாரும் சேர்ந்து காப்பாத்திட்டாங்கடா..” என்றது.. புரியவே இல்லை..!

எனது மாமா அக்காவை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார். இங்கே கீழ்ப்பாக்கத்தில் ஒரு லேடி டாக்டரிடம் காட்டி சிகிச்சை பெற்றார். இங்கே வந்தபோதும் ஒருவித அலட்சியப் போக்கும், கிறுக்குத்தனமான பார்வையும் அக்காவிடம் தென்பட்டது.. சென்னை வந்து சென்ற ஒரு மாதத்திலேயே இரவு நேரத்தில் தூங்குவதற்காக கொடுத்த மாத்திரைகளை மொத்தமாக முழுங்கி உயிருக்குப் போராட்டமாக மீண்டும் ஒரு முறை மருத்துவனையில் சேர்க்கப்பட்டார் அக்கா. இந்த முறையும் நான் ஓடோடிச் சென்று பார்த்தபோது, அதே சிரிப்போடு “மொத்தத்தையும் முழுங்கிட்டேண்டா.. இப்பவும் காப்பாத்திட்டாங்க..” என்றது..!

மருத்துவர்களோ “அக்காவின் மூளையில் அதிர்ச்சியால் ஏதோ லேசான படலம் தோன்றியிருக்கிறது. அதனால்தான் சிறு மாறுதல்.. இது கொஞ்சம், கொஞ்சமாத்தான் மாறும்.. கவனிப்புலேயே வைச்சிருங்க.. இல்லைன்னா உங்களுக்காத்தான் ஆபத்து..” என்று எச்சரித்தார்கள். இதன் பின்பு அக்காவை ஷிப்ட் டைம் போட்டு யாராவது ஒருத்தர் பாதுகாக்க வேண்டியிருந்தது.. இதில் ஸ்கூலுக்கு போகும் பெண் குழந்தையும் இருந்தது.. மாமா வீட்டினர் அக்காவையும், குழந்தையையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். இடையில் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் சென்று பார்த்தனர்.. எங்கெங்கு இதற்கெல்லாம் ஆன்மிக மருத்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் பயணப்பட்டார் அக்கா. வீட்டைக்கூட மாற்றிப் பார்த்துவிட்டார்கள். அலுவலகத்தில் இதற்காகவே பேசி, அதே குவார்ட்டர்ஸில் வேறு பிளாக்கிற்கு குடியேறினார் அக்கா..!

இதற்கிடையில் வேலைக்கும் சென்று வந்து கொண்டிருந்தார் அக்கா. அலுவலகத்தில் அவர் மீது எந்தக் குற்றமும் யாரும் சொல்லவில்லை. எப்போதும் போலவேதான் இருந்தார். இடையில் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் திருச்செந்தூரில் இருக்கும் எங்களது குடும்ப நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மாமா பதறியடித்துபோய் அவரை அழைத்து வந்தார். “ஏன் போனார்..? எதற்கு போனார்..?” என்ற கேள்விக்கெல்லாம் விடையே கிடைக்கவில்லை. கேட்டு கேட்டு எங்களது வாய் வலித்ததுதான் மிச்சம்..!

அடுத்து மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட மாமா வீட்டினர் வெறுப்பாகிப் போய்விட்டார்கள். நானும் அருகில் அமர்ந்து எப்படியெல்லாமோ அன்பாகப் பேசியும், பணிவாக நடந்தும் என்ன காரணம் என்பதைச் சொல்லவே இல்லை.. அல்லது சொல்லத் தெரியவில்லையோ எனக்குத் தெரியாது..! 

இப்போது நான் விருப்பப்பட்டு சென்னையில் “டாக்டர் ருத்ரனிடம் அழைத்துச் செல்லலாம்..” என்று சொன்னேன். மாமா மிகவும் சந்தோஷமாக அக்காவை அழைத்துக் கொண்டு வந்தார். கோடம்பாக்கத்தில் அப்போது இருந்த பழைய கிளினிக்கில் ருத்ரன் ஸாரிடம் காண்பித்தோம். சோதனை முடிந்தபோது செல்வாக்கா அழுது கொண்டேதான் வெளியே வந்தது.. அதன் பின்பு எங்களுடன் பேசிய ருத்ரன் ஸார், “நிறைய பேருக்கு இருக்கிறதுதான்..! எப்படி வரும்னு சொல்ல முடியாது..! மனநிலை தடுமாற்றம்.. இவங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனியா இருக்க விடாதீங்க.. எப்போதும் சந்தோஷமான மனநிலைல வைச்சுக்குங்க.. கொஞ்சம், கொஞ்சமாத்தான் சரியாகும்..” என்று சொல்லி கை நிறைய மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். பாண்டி பஜாரில் அக்காவுக்கும், பிள்ளைக்கும் டிரெஸ் எடுத்துக் கொடுத்து சந்தோஷமாக அவர்களை மதுரைக்கு வழியனுப்பி வைத்தேன்.

அந்த நேரத்தில் ஒரு புதிய திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.. காமெடி சப்ஜெக்ட்.. என்ன ஆனாலும் சரி.. திரையுலகில் இதன் மூலம் கால் பதித்தால் போதும் என்று நினைத்து, 2003-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நான் மின் பிம்பங்கள் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தேன். அதற்கு மறுநாள் ஆந்திரா, நெல்லூரில் அப்போது குடியிருந்த எனது உயிர் நண்பன் குமரேஷ்பாபுவின் வீட்டிற்கு சென்றேன். அங்கே உட்கார்ந்து கதை எழுதலாம் என்று நினைத்தேன்.  

ஜனவரி 10-ம் தேதி இரவில் எனது அக்காவுடன் தொலைபேசியில் பேசினேன்.. “நல்லா இருக்கேன். பாப்பா நல்லாயிருக்கா.. மாமா வேலைக்கு போயிட்டார். நான் மாத்திரையெல்லாம் கரெக்ட்டா சாப்பிடுறேன்.. தேனில உனக்கு ஒரு பொண்ணு சொல்லியிருக்காங்க.. நான் இந்த வாரம் ஊருக்கு போனா அது விஷயமா மாமா, அத்தைகிட்ட பேசிட்டு வரேன்.. நீயென்ன திடீர்ன்னு ரிஸைன் பண்ணிட்டேன்னு சொல்லுற.. பொண்ணு வீட்டுக்காரங்க கேட்டா நான் என்ன்ன்னு பதில் சொல்றது..?” என்றெல்லாம் தெளிவாக விளக்கமாகப் பேசியது அக்கா..!  

“நான் நெல்லூர்ல கதை எழுதி முடிச்சிட்டு, நேரா மதுரைதான் வர்றேன்.. அப்போ அது பத்தி பேசிக்கலாம்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். மறுநாள் மதியம் 1.30 மணியிருக்கும். திண்டுக்கல்லில் இருக்கும் எனது மாமா ஒருவர், எனக்கு போன் செய்து அந்தத் துயரச் செய்தியை சொன்னார்.. “செல்வா சூஸைட் பண்ணிருச்சுப்பா.. உடனே கிளம்பி வா..” என்றார்.. 

எனது ஆதர்ச கனவான சினிமாவுக்கு கதை எழுதுறோம் என்ற உச்சத்தில் இருந்த சந்தோஷம், அந்த ஒரே நொடியில் தரைமட்டமானது..! கிட்டத்தட்ட 18 மணி நேரங்கள் பயணித்து மறுநாள் மதியம் 1 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரியில் கருகிப் போன நிலையில் எனது செல்வாக்காவை பார்த்தபோது நேர்ந்த துயரம், இப்போதும் நான் திரும்பிப் பார்க்க நினைக்காத ஒன்று..! ஆனால் இந்தத் துயரத்தைத்தான் மீண்டும் நினைக்க வைத்துவிட்டது கடந்த வெள்ளியன்று இரவு சத்யம் தியேட்டரில் நான் பார்த்த 3 திரைப்படம்..!  

என்ன காரணம் என்று இன்றுவரையிலும் தெரியவில்லை. அக்கா ஆசைப்பட்டது போன்ற கணவர்.. அழகான குழந்தை.. கை நிறைய சம்பளம்.. சொந்த வீடு வாங்கியாச்சு.. வேறென்ன வேண்டும்..? எப்படி அந்த நோய் அவரைத் தாக்கியது.. அவரது 30 வயது வரையிலும், எங்களுடன் இருந்தவரையிலும் நாங்க பார்த்திருக்காத புதிய தோற்றத்தை சின்னக்காவிற்குள் தோற்றுவித்தது எப்படி..? ஒன்றுமே புரியவில்லை..!

பி.எஃப். அலுவலகத்தில் அப்போது லஞ்ச, லாவண்யம் தலைவிரித்தாடிய தருணம். லஞ்சம் வாங்குபவர்களை “உஜாலா கோஷ்டி” என்பார்கள். எங்களது குடும்ப நண்பர்களான அலுவலர்கள் பலர் இந்த லஞ்ச வழக்கில் சிக்கி சஸ்பெண்ட்டானார்கள். அதில் ஒரு விஷயத்தை மிக அருகில் இருந்து பார்த்தாராம் செல்வா அக்கா. சஸ்பெண்ட்டானவர், சஸ்பெண்ட் லெட்டரை வாங்கியவுடனேயே கமிஷனர் அறையில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவரை தூக்கி வந்து மயக்கம் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது செல்வா அக்காதானாம்.. இந்த ஒரு சம்பவத்தை மட்டுமே துவக்க நிலையாக திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் அலுவலகத்தினர். வேறேதுவும் தெரியவில்லை..

சிந்தனை.. சிந்தனை.. சிந்தனை.. எப்போதும் தலையில் கை விரல்களால் வருடியபடியே அமைதியாக உட்கார்ந்திருக்கும். “என்னக்கா..?” என்று கேட்டால் “ஒண்ணுமில்ல..!” என்று சொல்லிவிட்டு படுக்கப் போய்விடும். ஆனால் தூங்காது.. கொட்ட, கொட்ட முழிச்சிருக்கும். கண்களை மூடினாலும் இமைகள் உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கும். மாத்திரைகள் சாப்பிட்டதால் தொடர்ந்து உடல் குண்டாகி முகமும் உப்பிப் போய்விட்டது. அது தொடர்பான பிரச்சினைகளும் வேறுவிதமாக வர.. பாவம் என்னுடைய மாமாதான் தவியாய் தவித்துப் போனார். அவரும் எவ்வளவுதான் பார்ப்பார்..?

2003 ஜனவரி 13-ம் தேதியன்று காலையில் மாமா வேலைக்குப் புறப்பட்டு போகும்வரையிலும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது அக்கா. “கேஸ் தீர்ந்து போச்சு.. மண்ணெண்ணைய் வாங்கிட்டு வாங்க..” என்று சொல்ல.. மாமாவும் எந்த சந்தேகமும் இல்லாமல் 10 லிட்டர் மண்ணெண்ணையை வாங்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு.. மதியம் துணியெல்லாம் துவைத்திருக்கிறார் அக்கா. எதிர் வீட்டினர் இதுவரையிலும் “உங்கக்கா நல்லாத்தான் இருந்துச்சு..” என்கிறார்கள். 

மதியம் 1 மணிவாக்கில்தான் திடீரென்று மண்ணெண்ணெய் கேனைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று மொத்தத்தையும் தலையில் கொட்டி தீக்குச்சியால் பற்ற வைத்துக் கொண்டு அப்படியே குப்புறப் படுத்திருக்கிறார் அக்கா..! ஒரு சின்ன அலறல் இல்லை.. ஓட்டம் இல்லை..! வெறும் புகை மட்டுமே அந்த மாடியில் இருந்து எழும்பியதாலும், அந்த மொட்டை வெயிலில் யாரும் வெளியில் வராததாலும் கவனிக்க ஆளே இல்லை.. 2 மணிவாக்கில் கீழ்வீட்டுக்காரர்கள் துணி காயப் போட மொட்டை மாடிக்கு வந்தபோதுதான் கருகிப் போன அக்காவை கண்டிருக்கிறார்கள்..!

தற்கொலை என்பதெல்லாம் அதீதமான உணர்ச்சியின் தூண்டுதல்... அந்த நிமிடத்திய முடிவு என்பதெல்லாம் போய்.. போயே தீர வேண்டும் என்று நினைப்பதெல்லாம் மன நோய்தான். ஆனால் இது எப்படி வருகிறது..? ஏன் வருகிறது..? என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை. பணக்காரர், ஏழை என்றால்லாம் பாகுபாடு பார்க்காமல் இந்த நோயினால் அழிந்தவர்கள் ஏராளம்..! இது போன்ற பாதிக்கப்பட்ட மனநிலை உடையவர்களை 24 மணி நேரமும் கண் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அது கடைசியில் தற்கொலையில்தான் முடியும்..!

நடிகை ராதிகாவின் முன்னாள் ஹேர் டிரெஸ்ஸர்கூட இந்த மாதிரியான மன நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லியிருக்கிறார்..! ஐஸ்வர்யாவுக்கு நன்கு தெரிந்த யாராவது ஒருவர் இப்படி தனது வாழ்க்கையைத் தொலைத்திருப்பாரோ என்னவோ..? மிகத் தத்ரூபமாக ஒரு மன நோயாளியின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டியிருக்கிறார்..! 

ஒரு திரைப்படம் நாம் பார்த்த, சந்தித்த விஷயங்களை கிளறிவிட்டாலே அது நிச்சயம் குறிப்பிடத்தகுந்த படம்தான்.. அந்த வரிசையில் இந்தப் படம் என் வாழ்க்கையிலும் நான் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துவிட்டது..! 

52 comments:

Anonymous said...

ஒரு கேள்வி.உங்கள் அக்காவிற்கு கடவுள் பக்தி உண்டா? நான் பொதுவாக கேட்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

ஒரு கேள்வி. உங்கள் அக்காவிற்கு கடவுள் பக்தி உண்டா? நான் பொதுவாக கேட்கிறேன்.]]]

உண்டு.. நிறையவே..!

muthukumaran said...

சாரி அண்ணா :-((((

Anonymous said...

இந்த மாதிரியான மனநிலை கொண்டவர்களுக்கு (இது நிச்சயம் சிறுவயதிலிருந்தே வருவதுதான்.திடீரென்று எல்லாம் வராது) சடாரென்று பற்றுகளிலிருந்து ஒரு அறுபடல் நிகழ்ந்து விடும். அதற்கு அந்த சொந்தக்காரர்கள்,உடன் பிறந்தவர்கள் எப்போதாவது திட்டியிருந்தால் அந்த மனப்பதிவுகளை அவர்களது ஆழ்மனம் உபயோகப்படுத்திக் கொண்டு அந்த பந்தங்களை அறுத்துவிடும். ஒன்றுமேயில்லாமல் மனிதன் அந்தரத்தில் நடக்கமுடியாது. அதற்காக இவர்களை சிறுவயதிலேயே அடையாளம் கண்டுகொண்டு பக்தியை ஏதாவது அவர்களுக்குப் பிடித்த கடவுள் பக்தியை வளர்த்துவிடுவது பலனளிக்கும். சுஜாதா எழுதியிருப்பார் ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வை என்று. சரி ஏதாவதுதானே அது ஏன் கடவுள் என்றால் திருமணம் முடிந்தவுடன் தம்பியை பிரியவேணடும். அம்மாவை பிரியவேணடும். அங்கே கணவனிடம் ஒட்டவேண்டும். அதாவது ஒரு கட்டிடத்தில் இருந்து தாவி அடுத்த கட்டிடத்திற்கு போவது போல. இடையில் விழுந்துவிடக் கூடாது. ஆனால் உறவுகள் அப்படியில்லை. எல்லா உறவுகளும் சில சமயங்களில் முறைத்துக் கொள்ளும். அதை இந்த மென்மையான மனசு உள்ளவர்களால் தாங்கிக் கொள்ளவே இயலாது(மென்மை என்றால் அவ்வளவு மென்மை…விவரிக்கவே இயலாது) உங்கள் அக்கா வெடுக் வெடுக் என்று பேசும் என்கிறீர்கள் அது உண்மையான கேரக்டராக இருக்காது ஆழ்மனதில். அவர் ஒரு பூவைப் போல இருந்திருப்பார்.
இவர்களின் வாழ்வில் திடீரென்று ஏதாவது நிகழ்வுகள் (அது என்ன என்று அவர்கள் தான சொல்லவேண்டும். ஆனால் அவர்களுக்கே தெரியாது) பாதித்து, மனதின் ஆழ்மனதிற்குள் விழுந்துவிடுவார்கள். பிறகு சுற்றுப்புறம் 100% கட்டுப்பாடு எடுத்துக் கொள்ளும். அன்பாய் இருந்தால் அந்த கணத்திற்கு அன்பாய் இருப்பார்கள். பிறகு ஆழ்மனம் தனக்குள் வைத்திருக்கிற எல்லா கசடுகளையும் குப்பைகளையும் கிளறி மேலெழும்பி வரும். அவைகள் தாங்க முடியாத வேதனை தரும்.
இந்த தருணத்திற்காகத்தான் பக்தி தேவைப்படுகிறது. அதிலும் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் இதில். நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிகம் நாத்திகம் பேசப்படுகிறது. ஆனால் பெண்கள் இதில் ஈடுபாடு காட்டுகிறார்களா? எத்தனை சதவிகிதம். ஏனென்றால் அவர்களுக்கு பக்தி தேவைப்படுகிறது. அத்தியாவசியம். நீங்கள் விவாதிக்கலாம் நாத்திகம் பேசுகிற பெண்களே இல்லையா என்று . நான் சொலவது இந்த மாதிரி பெண்களை. ஆண்களை.
சின்ன வயதிலேயே அவர்களுக்கு பெர்சனாலிடி உருவாகும் போதே பக்தி கண்டிப்பாய் தேவைப்படுகிறது. இதை நான் நேரில் பார்த்த நபர்களிடமிருந்தே எழுதுகிறேன்.
உங்கள் அக்கா தற்கொலைக்கு முயன்ற அந்த கணம் ஆழ்மனதில் ஊன்றியிருந்த பக்தி இருந்திருக்குமானால் ஒரு பலம் கிடைத்திருக்கும். தற்கொலை அந்த கணத்தில் முடிவெடுப்பதில்லை. அவர் உங்களிடம் போனில் பேசும்போது அவருக்கே தெரிந்திருக்காது அந்த எண்ணம் வரும் என்று. ஆழ்மனம் ஒரு எரிமலை மாதிரி. எப்போது வெடித்து கொந்தளிக்கும் என்றே தெரியாது.
இன்னும் நூறு பெரியார் வந்தாலும் மேல்மருவத்தூருக்கு செவ்வாடை கட்டிக் கொண்டு வருகிற பெண்கள் கூட்டம் குறையாது .அவ்வளவு மன அழுத்தம் அவர்களுக்கு. இதை மன அழுத்தம் உள்ள ஆண்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சிறு தாந்த்ரீக முயற்சிகள் இதற்கு பலன் அளிக்கிறது. ஆனால் சிறு வயதில் இருந்தே அவை செய்யப்படவேண்டும்.
சில பேர் மனஅழுத்தம் வந்தால் பீர் அடிக்கிறார்கள்(கூடுதலாக உடல் கெடும்). சில பேர் தினமும் யோகா செய்து அழுத்தத்தை போக்குகிறார்கள். சில பேர் பூஜை செய்வார்கள். சில பேர் பேசியே அழுத்தம் போக்குவார்கள். சில பேர் அடுத்தவர் மீது கோபம் கொண்டு போக்குவார்கள். சில பேருக்கு விளையாட்டு. வாக்கிங். இப்படி ஏதாவது ஒரு வடிகால் குழந்தையாக இருக்கும் போதே பழக்கி விட்டால், பழகிவிட்டால் அந்த எண்ணங்களை இந்த வடிகால்கள் வெளியேற்றிவிடும். இது எனக்கும்தான் உங்களுக்கும்தான். வெளியேற்றப்பட்ட காலியான மனது ‘நிம்மதியான மனது’. தியானம் என்பதே வெளியேற்றும் முயற்சிதான்.
நான் நாத்திகத்தை 20 வருஷமாக விடாப்பிடியாக முரட்டுப்பிடியாக வாதிட்டு, தோற்றவன். பெண்களின் மனம் புரிந்தால் அதை ஒரு முரட்டுத்தனமாக இல்லாமல் அணுகமுடியும் என்று என் வாழ்வு நிரூபிக்கிறது. எனக்கும் மன அழுத்தம் வரும். நான் தினம் நடப்பதின் மூலம் அதை வெளியேற்றுவதாக பழக்கியிருக்கிறேன். பழக்கம்தான் எதுவும்.
ஆனால் முற்றிய பிறகு யோகா என்று போவது பலன் அளிக்காது. ஆனால் வாக்கிங் பலன் அளிக்கும். ஆனால் அவர்களை கன்வின்ஸ் செய்யவே முடியாது. தற்கொலைக்கு மாரியம்மன் கோவிலில் வேப்பிலை பிடித்துக் கொண்டு ஆடுகிறது எவ்வளவோ மேல். அந்த மாதிரியான வடிகால்கள் குறையவே கூடாது. தினம் வேளியேற்றப்படவேணடியது மன கசடுகள்.

Anonymous said...

Do not know what to say! May god be with you and your family. Someone I knew committed suicide while she was heavily pregnant. This still haunts me as to why people come to such decisions.

Anonymous said...

உங்கள் குடும்ப சூழ்நிலை புரிகிறது.

சில குழந்தைகள் அதீதமாக பாசத்திற்கு ஏங்கி பிறகு குழந்தையாக இருக்கும்போதே அதை எதிர்கொள்ள 'தடாலடியாக' பேசுகிற, பாணியை பெர்சனாலிடியாக உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் அது உண்மையான கேரக்டர் அல்ல. உண்மை ஆழத்தில் நீரோட்டமாக இருக்கும்.அவர்களுக்கு எப்போதும் 24 மணிநேரமும் அன்பாக யாராவது நடத்திக் கொண்டே இருக்கவேண்டும்.அவர்களை விட்டு நகர்ந்தால் அதுவரை பேசியது எல்லாம் மறந்து துக்கத்துள் விழுந்துவிடுவார்கள்.

கிட்டத்தட்ட காட்டாற்றில் விழுந்த மனிதன் மாதிரி. அவனுக்கு அப்போது ஒரு கட்டை கிடைத்தால் நீந்திக் கொண்டே போகலாம். அந்த கட்டைதான் 'தீவிர அதி தீவிர பக்தி'. ஆடட்டும் அம்மன் கோவிலில். தப்பே இல்லை. அப்படி ஆடுபவர்கள் எல்லாம் பக்தியில் ஆடுபவர்கள் அல்ல.தாங்க முடியாத மன அழுத்தத்தில் ஆடுபவர்கள். அதற்கு ஒரு சமூக அங்கீகாரம் தான் பக்தி வந்து ஆடுகிறார்கள் என்று. ஆனால் சிறு வயதிலிருந்தே ஆடக்கூடாது என்று சமூகக் கட்டுப்பாடுகளால் உருவாக பெர்சனாலிடி ஆனதால் தீடீரென்று மனஅழுத்தத்தை வெளிப்படுத்த தெரியாமல், வடிகால் இல்லாமல் (நிறைய பேருக்கு வலிப்பு வந்து விடும்இதன் காரணமாக) இது நடக்கிறது.

நான் இந்த விஷயத்தை ஆராயத்தொடங்கியதும் கவனித்தது நம் வீட்டுப் பெண்கள் கும்பிடும் அம்மன்கள் எப்படி இருக்கிறது என்றால் நாக்கைத் துருத்திக் கொண்டு ,அசுரனை தலையை வீழ்த்தி ரத்தம் சொட்ட கையில் பிடித்துக் கொண்டு, கண்ணை உருட்டிக் கொண்டே பெரும்பாலான அம்மன்கள் இருக்கிறது. அவைகளையே இவர்கள் விரும்பி வணங்குகிறார்கள். அவைகள் சுட்டிக் காட்டுவது இவர்கள் மனதையே!

நம் வீட்டுப் பெண்கள் தினம் என்ன நடந்தது என்று பேச விரும்புவார்கள். அது வடிகால். அன்று நடந்தது அன்றே வெளியேறிவிடவேண்டும். அவர்கள் எழுத ஊக்குவிக்கப்படவேண்டும். மனதில் வருகிற எல்லாம் எழுதணும்.பிறகு அதை எரித்துவிடவேண்டும். இதெல்லாம் வடிகால்கள். இது ஒருவகையான சடங்கு கூட.

இது ஒரு ஆணுக்கும் நிகழலாம். அப்போது அவன் கொலைகாரனாக மாறலாம். தற்கொலை-கொலை இரண்டும் ஒரே புள்ளியில்தான் ஆரம்பிக்கிறது.

Romeoboy said...
This comment has been removed by the author.
Romeoboy said...

மனதை ரொம்பவே கனக்க வச்சிடுச்சு.. பச் சாரி அண்ணா ..

Anonymous said...

ஒரே சிந்தனைதான் என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் உண்மை என்னவெனில் 'she was thinking...but thoughts were just coming out". இதுதான இவர்களுக்கு நடக்கிறது. வெள்ளம் மாதிரி எண்ணங்கள் காட்டாறு வேகத்தில் வரும்.என்ன செய்வது என்றே தெரியாது அவர்களுக்கு.

Anonymous said...

'she was not thinking...but thoughts were just coming out" என்று இருக்கவேண்டும். நிறைய தடதடவென்று எழுதிவிட்டேன். மனம் பரிதவிக்கிறது. உண்மை என்னவெனில் மேலைநாட்டு உளவியல் இதற்கு தீர்வு என்று எதையும் சொல்லவில்லை. நம்நாட்டு சடங்குகள் பிரச்னை முற்றும் முன்னே இதைக் குறைத்து சரி செய்ய வழிகள் சொல்கிறது. முன்னேற்றம் என்ற பேரில் அவைகளை இழந்துவிட்டோம். நான் நிறையப் பேரை இப்படிக் காண்கிறேன். சிறு குழந்தைகளுக்கு இப்படி வரும் தெரியுமா? என்ன செய்வோம் எனில் கோவிலுக்கு கூட்டிப் போய் அங்கே 'பளீரென்று ' முகத்தில் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் அறைந்ததும் ஆழ்மனதில் இருந்து விடுபடுவார்கள்.

மசூதிகளில் இதற்கான சடங்குகள் உண்டு.அவர்கள் மிக அதிகமாக முற்றிப் போவதற்குள் நிச்சயம் சரி செய்கிறார்கள். ஆழ்மனம் பகுத்தறிவு தொட முடியாதது. இதை விவாதிக்கவே முடியாது. பிறந்த குழந்தைகளுக்கு சூடம் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றுவதெல்லாம் இது தொடர்பான சடங்குகளே! விளையாட்டில்லை. இவைகளை நாம் பகுத்தறிவு கொண்டு ஒதுக்கிவிடுவோமானால் சீரழிவுதான். மனம் திடீரென்றுதான் வேலையைக் காட்டும் .ஆனால் பல வருடம்,மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்கும்.

ஒன்றுமில்லை டைரக்டர் சங்கர் தன் மகனுக்கு எலும்புகள்,தாடை,விரல்கள் உடைந்து விழுவதாகவும் வருடக்கணக்காக வைத்தியம் பார்த்ததாகவும் ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தர்காவுக்கு கூட்டிப் போய் ஒரு தாயத்து (மாதிரி) கட்டியதும் குணமானதான படித்திருப்பீர்கள். அதுவும் தாந்த்ரீகம் சேர்ந்ததுதான். தர்காவில் க்யூ இதற்காகத்தான் நிற்கிறது.

இந்தமாதிரியான சடங்குகள் ஆழ்மனதை தொடவல்லது. ஆனால் அது உங்கள் 'தர்க்கபுத்தியை' சமாதானப்படுத்தமுடியாது. அதனால் நிராகரிப்பீர்கள். இதுதான் நடக்கிறது.

ஒரு விஷயம் சொல்கிறேன். சரிபார்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் அதிகம் தற்கொலைகள் நடக்கிறது. அதில் எந்த துறையில் உள்ளவர்கள் தற்கொலை செய்கிறார்கள் தெரியுமா? பதிலை அடுத்த கமென்ட்டில் சொல்கிறேன்.

Anonymous said...

அமெரிக்காவில் மற்ற துறைகளைவிட மனநல மருத்துவர்கள் அதிகம் பேர் தற்கொலை செய்கிறார்கள். கவனிக்க மருத்துவர்கள். ஒரு நாளில் நாளு கேஸ் என்றாலும் வருடத்தில் ஆயிரம் பேர் வந்து துக்கத்தை கொட்டிவிட்டுப் போவார்கள். அது அவர்களின் ஆழ்மனதில் படிந்து அவர்களின் சொந்த துக்கமாகவே மாறி தற்கொலைக்கு தூண்டிவிடும்.

ஆக நாம் யாரிடமாவது சொன்னால் நம் பாரம் குறையும் ஆனால் அவர்கள் மென்மையானவர்களாக இருந்தால் பாதிப்படைவார்கள். இதைத் தீர்க்க ஒரே வழி எழுதுவது.எழுதி முடித்ததும் எரித்து விடுவது.நான் என் வாழ்வில் நூற்றில் ஒரு பெண்ணைக் கூட நாத்திகனாக காணவில்லை.நான் பெரியாரின் கருத்துகளையே அதிகம் படித்து நாத்திகனாக இருந்தவன்.

ஆனால் பெண்களின் இந்த மனநிலை புதிராக இருந்தது. அவர்களுக்கு விநாடிக்கு விநாடி ஏதாவதை பற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு உறவுகள் சில நேரம் ஒத்துவரவில்லையெனில் (சிலநேரமதான்) உடனே ஆழ்மனதிற்குள் விழுந்துவிடுவார்கள்.

ammuthalib said...

// நான் பேசிப் பார்த்தபோது தனக்கு ஒன்றுமேயில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியது அக்கா
நான் சொல்லி உங்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை தான் இப்படி சொல்லி இருக்கிறார்.

சுஜாதா சார் சொன்னது போல எதன் மீதாவது நம்பிக்கை அவசியம். ஆனால் அது chilled beers சொன்னது போல சிறு வயதில் இருந்தே அழுத்தமாக பதிய வேண்டும்.

உங்கள் அக்காவிற்கு வந்திருந்த மனோ நிலை சற்று "உணர்ந்து கொள்ள" கடினமானது. எல்லா வற்றின் மீதும் நம்பிக்கை போய்விடும். அதையும் மீறி எல்லா வற்றின் மீதும் ஏளனம் வரும்.

ஒரே நேரத்தில் கோபமும், ஆற்றாமையும், சோகமும் குவிந்து கொல்லும்.

ignorance may be a bliss . but being ignored is a curse .

நீங்களோ நானோ எவ்ளோ பேசினாலும் இந்த பிரச்சனை தீராது. இந்த தற்கொலைகள் is a way of shouting at the world as "you cannot fire me . I Quit"

CS. Mohan Kumar said...

மிக வருத்தமாக உணர்கிறேன் :(((

Anonymous said...

//நான் பேசிப் பார்த்தபோது தனக்கு ஒன்றுமேயில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியது அக்கா//

இந்த மாதிரியானவர்கள் பேச்சில் இரண்டு அர்த்தம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அர்த்தம் இருக்கும். 'ஒன்றுமேயில்லை' என்றால் மனதில் எதுவுமே ஒட்டவில்லை.மனதில் ஒன்றுமேயில்லை என்று அர்த்தம்.

வேறு சில பேருக்கு ஏதாவது குற்றவுணர்ச்சி ஒன்று சதாசர்வகாலமும் சுழன்றடித்துக் கொண்டிருக்கும்.அப்போது என்ன செய்வார்கள் எனில் கைகழுவுவார்கள்.(அதாவது குற்றவுணர்ச்சியை கைகழுவுகிறேன் பார் என்று காண்பிக்க)வீட்டை துடைப்பார்கள்.ஒரு தூசி இருந்தால் பதைத்துப் போவார்கள்.இதை ஒரு நாளைக்கு பத்து இருபது தடவை செய்வார்கள்.அவர்கள் செய்கை அர்த்தம் பொதிந்தது.பேச்சு அர்த்தம் பொதிந்தது. 'மனதில் எதுவுமே ஒட்டவில்லை. வெறுமைதான் வாழ்வில் என்பது விபத்தாகக் கூட நடக்கும்'

அடுத்து சொல்லப் போவதை நம்பவே மாட்டீர்கள்.இந்த நிலைக்கு வருவதற்காகத்தான் இந்த சாமியார்கள் எல்லாம் துறவறம் பூண்டு வருகிறார்கள் காலம் காலமாக. ஆனால் இப்படி ஒரு பள்ளத்தில்(தற்கொலைப்பள்ளம்) மாட்டிக் கொள்ள வாய்ப்பிருப்பதால் எல்லா மதங்களுமே, (புத்தமதம் உட்பட) அதற்கான சிறு சடங்குகளை வைத்திருக்கும்.அது தற்கொலை எண்ணத்தில் இருந்து அவர்களை காப்பாற்றிவிடும்.

ஆம்! ஒரு துறவி திடீரென்று பற்றுகளை அற்றுவிட்ட நிலை வந்தால் தற்கொலை எண்ணம் வரலாம் .ஆனால் அது 'விருப்பப்பட்ட' நீண்ட கால முயற்சிமூலம் வந்த வெறுமை ஆதலால் தற்கொலை எண்ணம் வராமல் காக்கப் படுகிறது.

அதனால்தான் ஒன்றில் அழுத்தமான பிடிப்பு...அது நாத்திகமாகவும் இருக்கலாம். பெரியாரை 85 வயதில் நாத்திகம் பேசக் கூடாது என்று அறையில் அடைத்து வைத்தீர்களானால் என்ன நடககும் .அவர் நிற்கிற காலடிநிலமே அதுதான். அதை காலடியிலிருந்து உருவிவிட்டால்...?

காலடி நிலம் என்ன என்பதில் குழந்தையாக இருக்கும் போதே அழுத்தமாக பதிவு செய்யப்படவேண்டும்.மற்ற ஆசைகள் பொறுப்புகள் எல்லாம் additional தான்.

சச்சின் ரிடையர்டு பற்றிப் பேசுகிறோம். நிசசயம் ரிடையர்டு ஆனதும் சைக்கிரியாட்ரிஸ்டைப் போய் பார்ப்பார். அந்த ரிடையர்டு எண்ணம் வந்ததுமே அவர் எப்போதோ புட்டபர்த்தி சாய்பாபா பக்தராகிவிட்டார்.

அவர் காலடி நிலம் கிரிக்கெட். அது நழுவிப் போய்விடும் என்ற எண்ணமே ஆட்டம் காண வைத்துவிட்டது.

அதற்குப்பதிலான இன்னொரு காலடி நிலம்தான் புட்டபர்த்தி சாய்பாபாவிடம் பக்தி.

Unknown said...

பதிவை பாதியால் படித்துக் கொண்டிருக்கும் போதே,இது ஏதோ வலியோடு முடியப்போகிறது என்று மனம் உணர்ந்துவிட்டது.ஆனாலும் அப்படி ஏதும் நிகழக்கூடாது என நினைத்துக்கொண்டே தொடர்ந்தேன்.முடிவில் மனத்தைக் கசக்கி விட்டீர்கள்.

இதை ஒத்த வேதனையை வேறொரு மார்க்கத்தில் அனுபவித்தவன் நான்.உங்கள் பதிவு என் வேதனையை நிழலாட வைத்துவிட்டது.
அண்ணா,நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லையா?உங்கள் எழுத்தில் தனிமை உணர்வு தெரிவதால் கேட்டேன்.

Anonymous said...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...சுமை குறையட்டும்...

Kannan said...

சில்ல்டு பீருக்கு நன்றி. மிக அருமையாக பின்னூட்டம் இட்டுள்ளார். மிக ஆழமான சிந்தனையுடன் கூடிய பின்னூட்டம். அதில் ஒரு அக்கறை உள்ளது. நன்றி.

சூனிய விகடன் said...

மனது என்பது அங்காடித்தெரு நாய் போலே என்று சொல்வார்கள்...அந்த நாயை நாம் இறுதி வரை அங்கும் இங்கும் அலைந்து திரிய வைக்க வேண்டும்...எச்சில் ஒழுக...நெஞ்சுக் கூடு நொருங்குமளவு மூச்சிரைக்க வேண்டும்...." நாய்க்கு வேலையில்ல ...நிக்குறதுக்கு நேரமில்ல " என்று கிராமப்புறத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள்... அதுமாதிரி அது தன் தேடலிலேயே இருக்க வைக்க வேண்டும்....அந்த நாயை ஒரு இடத்தில் படுக்க விடக்கூடாது...நாய் படுத்ததோ நாம் தொலைந்தோம்.....

Chilled Beers சொன்ன மாதிரி அந்த நாயை ஓரிடத்தில் படுக்க வைக்கத்தான் ஞானிகள் கஷ்டப்பட்டு வெற்றியடைகிறார்கள்.....நாய் படுப்பதை அவர்களால் தாங்கி ...அந்த நிலையை அனுபவிக்க முடிகிறது....நாமெல்லாம் சாதரணமானவர்கள் ....சூனிய நிலைக்கு பழக்கப்படாதவர்கள்.....நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.....

உங்கள் அக்காவைப் பொறுத்தவரை கஷ்டப்ப்படும்போதேல்லாம் வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருப்பது போல் உணர்ந்திருந்ததால் அந்த வாழ்க்கையை அவரால் ரசிக்க முடிந்திருக்கிறது ....அந்தப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மனது ஒரு பக்குவ நிலைக்கு வராமல் வெறுமைக்கு போயிருக்கிறது......அவரது உடலில் நடந்த சில ரசாயன உற்பத்தி ஏற்றத்தாழ்வுகளும் இந்த நிலையை உக்கிரமாக்கியிருக்கலாம்..

இந்தப்பதிவு இன்னும் பல படிகள் உங்களை என்னருகே கொண்டு வந்திருக்கிறது....நன்றி.

மற்றபடி....3 படத்தைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களைப் பற்றி எனக்கு கடுமையான எதிர்விமரிசனம் உண்டு...என்ன .....நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையையும் படத்தையும் லிங்க் செய்யும் போது நான் அவைகளைப் பேச விரும்பவில்லை...

சத்ய நாராயணன் said...

நமக்கு பிடித்த ஒருவரை நாம் இழந்து தவிக்கும் தவிப்பு எனக்கும் தெரியும்.... இதை படித்ததும் மனம் கனக்கிறது....

ராஜரத்தினம் said...

என் நண்பனின் தாய்க்கு கூட இதே மாதிரி பிரச்னை வந்தது! சன் டீவியின் மகிமையினால்! கும்பகோண தீ விபத்தை தொடர்ந்து காட்டியதின் விளைவாக அதை பார்த்த அதிர்ச்சியீல் இன்றுவரை அவர் பூரண குணமாகவில்லை!

Anonymous said...

நெடுநாள் என் மனதில் தோன்றிய கருத்து ஒன்றை இன்று எதேச்சையாக ட்விட்டரில் வந்த கமலஹாசனின் பேட்டி லிங்க் ஒனறில் காணநேர்ந்தது.என் கருத்து இதுதான். மேற்கத்திய உளவியல் Sigmund Freud,Yung போன்றவரிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது.இது ஒரு 200 வருடம் இருக்கும்.அவர் நூல்கள் எழுதியிருக்கிறார்.அவை ஆங்கிலத்தில் இப்போது இருக்கிறது.

கிழக்கத்திய நாடுகள் அதற்குமுன்பு எப்படி இந்த பிரச்னையை சமாளித்தன.இந்த பூமிப்பந்தில் கிழக்கில்தான் அத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. தீர்வுகளை அவை மதங்களிலேயே ஒளித்து வைத்திருக்கின்றன.அவை சடங்குகளாகவே இருக்கும்.எனக்கு சடங்கு பிடிக்காது என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அது தேவைப்படாது என்று அர்த்தம் அல்ல.இதுதான் என் அபிப்ராயம்.

கமலஹாசனின் வரிகள் இதோ!

'இன்று வேண்டுமானால் ப்ராய்டு,யங் போன்றோர் வந்திருக்கலாம்.அவர்களின் போதனையினால் மனோதத்துவ நிபுணர்கள் எல்லாம் உருவாகியிருக்கிறார்கள்.ஆனால் முன்பெல்லாம் மனோவியாதிக்காரர்களுக்கு மதம்,கோயில் ஆகியவைதான் சரணாலயங்களாக இருந்திருக்கின்றன'

scenecreator said...

படம் செம மொக்கை.
என்னுடைய வலையில் 3 பட விமர்சனம்
மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்)
http://scenecreator.blogspot.in/2012/04/3.html

உண்மைத்தமிழன் said...

சில்லுடு பீரண்ணா..

உங்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை..!

மன நோயை பற்றியெல்லாம் துளியும் அறிந்திருக்க முடியாத நேரத்தில், சூழலில்.. நீங்கள் சொல்லியிருப்பது போதெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதெல்லாம் எம்மைப் போன்ற சாமான்யர்களால் முடியாதது..!

அக்காவுக்கு குறையொன்றுமில்லை..! அது கேட்டதெல்லாம் கிடைத்துதான் இருந்தது.. ஆனால் அது மூளையைப் பாதித்த அந்த விஷயம்தான் என்ன என்று எங்களால் அறிய முடியவில்லை..!

பச்.. முடிந்தது முடிந்ததுதான்..! இனி பேசிப் பயனில்லை. ஆனாலும் காரணமேயில்லாமல் இறந்துவிட்டாரே என்பதுதான் எங்களது பெரும் வருத்தம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Muthukumaran Devadass...

சத்யாவின் சில வரிகள்...

ரெவெரி...

மோகன்குமார்...

அருண்மொழித்தேவன்...]]]

உறவுகளைப் போல் என் பாரத்தைச் சுமக்க வந்த உமக்கு எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ammuthalib said...

// நான் பேசிப் பார்த்தபோது தனக்கு ஒன்றுமேயில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லியது அக்கா.//

நான் சொல்லி உங்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதைதான் இப்படி சொல்லி இருக்கிறார். சுஜாதா சார் சொன்னது போல எதன் மீதாவது நம்பிக்கை அவசியம். ஆனால் அது chilled beers சொன்னது போல சிறு வயதில் இருந்தே அழுத்தமாக பதிய வேண்டும். உங்கள் அக்காவிற்கு வந்திருந்த மனோநிலை சற்று "உணர்ந்து கொள்ள" கடினமானது. எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை போய்விடும். அதையும் மீறி எல்லாவற்றின் மீதும் ஏளனம் வரும்.
ஒரே நேரத்தில் கோபமும், ஆற்றாமையும், சோகமும் குவிந்து கொல்லும். ignorance may be a bliss. but being ignored is a curse. நீங்களோ நானோ எவ்ளோ பேசினாலும் இந்த பிரச்சனை தீராது. இந்த தற்கொலைகள் is a way of shouting at the world as "you cannot fire me. I Quit"]]]

இதற்குத் தற்கொலைதான் தீர்வா..? எத்னால் மனம் பிறழ்ந்தது என்பதையாவது தெரிந்து கொள்ளலாம் என்றால் அதுவும் முடியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[somasundaram movithan said...

பதிவை பாதியால் படித்துக் கொண்டிருக்கும் போதே, இது ஏதோ வலியோடு முடியப் போகிறது என்று மனம் உணர்ந்துவிட்டது. ஆனாலும் அப்படி ஏதும் நிகழக் கூடாது என நினைத்துக் கொண்டே தொடர்ந்தேன். முடிவில் மனத்தைக் கசக்கி விட்டீர்கள். இதை ஒத்த வேதனையை வேறொரு மார்க்கத்தில் அனுபவித்தவன் நான். உங்கள் பதிவு என் வேதனையை நிழலாட வைத்துவிட்டது.]]]

நான் மட்டுமல்ல.. உலகத்தில் பலரும் இதன் கொடுமையை அனுபவத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் இருக்கிறேன்..! பாரத்தையும், பாவத்தையும் நாமே சுமக்க வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

இந்தப் பதிவு இன்னும் பல படிகள் உங்களை என்னருகே கொண்டு வந்திருக்கிறது. நன்றி]]]

நன்றிகள் அண்ணா..!

[[[மற்றபடி 3 படத்தைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களைப் பற்றி எனக்கு கடுமையான எதிர் விமரிசனம் உண்டு. என்ன நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையையும் படத்தையும் லிங்க் செய்யும்போது நான் அவைகளைப் பேச விரும்பவில்லை.]]]

பரவாயில்லை.. அதையும் முன் வைத்திருக்கலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

என் நண்பனின் தாய்க்கு கூட இதே மாதிரி பிரச்னை வந்தது! சன் டீவியின் மகிமையினால்! கும்பகோண தீ விபத்தை தொடர்ந்து காட்டியதின் விளைவாக அதை பார்த்த அதிர்ச்சியீல் இன்றுவரை அவர் பூரண குணமாகவில்லை!]]]

அடக் கடவுளே..! என்ன கொடுமை இது..? இப்படி கூடவா நடக்கும்..? நாளை நடப்பதை யார் அறிவார்..? ஒண்ணும் புரியலண்ணே..! வாழ்க்கைல எதுவும் நிஜமில்லை.. எதுவும் உறுதியில்லைங்கறது மட்டும்தான் உறுதி..!

உண்மைத்தமிழன் said...

[[[scenecreator said...

படம் செம மொக்கை. என்னுடைய வலையில் 3 பட விமர்சனம்
மொக்கை + ரம்பம்+ பிளேடு = 3 பட விமர்சனம்)]]]

நன்றி.. அவரவர்க்கு ஒரு மனம்.. ஒரு ரசனை..!

Anonymous said...

//அக்காவுக்கு குறையொன்றுமில்லை..! அது கேட்டதெல்லாம் கிடைத்துதான் இருந்தது.. ஆனால் அது மூளையைப் பாதித்த அந்த விஷயம்தான் என்ன என்று எங்களால் அறிய முடியவில்லை..!//

You are right. இந்த பிரச்னை வருபவர்கள் எல்லாரும் துன்பப்பட்டவர்கள் கிடையாது. இந்தப்படத்தில் தனுஷ் பணக்காரர். எல்லாம் கிடைத்தவர். ஆனாலும் இது நடந்தது.எல்லா கேஸ்களிலும் உடன்பிறந்தவர்கள்,பெற்றோர்கள்,உறவினர்கள் சொல்வது இதே டயலாக்தான் 'நல்லாத்தானே இருந்தாரு' என்பதே. மனநல மருத்துவர்கள் அதனால்தான் சொல்வது 'இது வருவதுதான்' என்று. ஆனால் பிரச்னை ஆசை இல்லாமல் போனது.அவர்களுக்கு கிடைத்தது பிரச்னை அல்ல. ஆசையே இல்லாமல் வெறுமை ஆனதுதான்.இது சம்பந்தமான நிறையபேரை பார்த்துவிட்டதால் இவ்வளவு எழுதிவிட்டேன். நான் இந்த மாதிரியான குழந்தைகளை நிறைய கண்டுபிடித்து பெற்றோர்களுக்கு உதவியுள்ளேன்.

ஸ்ரீகாந்த் said...

அன்புள்ள உண்மைதமிழா
உங்கள் பதிவு 3 படம் ஏற்படுத்திய பாதிப்பைவிட மிகவும் அதிகமாகவே பாதித்து விட்டது .....
என் இன்றைய தூக்கம் தொலைந்து போய் விட்டது.
உங்கள் சகோதரியின் மனநிலை மாறியது உண்மையில் சிறு வயது நிகழ்வின் தாக்கமாகவே இருக்க வேண்டும்......
.ஆழ்மனதின் சக்தியை உங்கள் சகோதரியின் முடிவு நமக்கு உணர்த்துகிறது .....
நமது கூட்டுகுடும்ப கலாசாரம் ....கடவுளிடம் இருந்த பக்தி......நெறிமுறையான வாழ்க்கைமுறை ....இன்னும் எத்தனையோ விஷயங்களை நம்மிடமிருந்து பிரித்த ஆங்கிலேயர்களின் சுயநலம் தான் இதெற்கெல்லாம் ஆணிவேராக இருக்கிறது.....இதை சரி செய்யவில்லை என்றல் இதை போல் இன்னும் எத்தனையோ புதிது புதிதான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்

ஸ்ரீகாந்த் said...

May Her Soul Rest in Peace

NAGARAJAN said...

உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்று தெரியவில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

//அக்காவுக்கு குறையொன்றுமில்லை..! அது கேட்டதெல்லாம் கிடைத்துதான் இருந்தது.. ஆனால் அது மூளையைப் பாதித்த அந்த விஷயம்தான் என்ன என்று எங்களால் அறிய முடியவில்லை..!//

You are right. இந்த பிரச்னை வருபவர்கள் எல்லாரும் துன்பப்பட்டவர்கள் கிடையாது. இந்தப் படத்தில் தனுஷ் பணக்காரர். எல்லாம் கிடைத்தவர். ஆனாலும் இது நடந்தது. எல்லா கேஸ்களிலும் உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் சொல்வது இதே டயலாக்தான் 'நல்லாத்தானே இருந்தாரு' என்பதே. மனநல மருத்துவர்கள் அதனால்தான் சொல்வது 'இது வருவதுதான்' என்று. ஆனால் பிரச்னை ஆசை இல்லாமல் போனது. அவர்களுக்கு கிடைத்தது பிரச்னை அல்ல. ஆசையே இல்லாமல் வெறுமை ஆனதுதான். இது சம்பந்தமான நிறைய பேரை பார்த்துவிட்டதால் இவ்வளவு எழுதிவிட்டேன். நான் இந்த மாதிரியான குழந்தைகளை நிறைய கண்டு பிடித்து பெற்றோர்களுக்கு உதவியுள்ளேன்.]]]

தங்களுடைய பின்னூட்டங்களும், பொறுமையான விளக்கங்களும் இந்தப் பதிவை வேறு கோணத்தில் பார்க்க வைத்துள்ளது. அதற்காக எனது நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...
அன்புள்ள உண்மைதமிழா
உங்கள் பதிவு 3 படம் ஏற்படுத்திய பாதிப்பைவிட மிகவும் அதிகமாகவே பாதித்து விட்டது. என் இன்றைய தூக்கம் தொலைந்து போய் விட்டது.
உங்கள் சகோதரியின் மனநிலை மாறியது உண்மையில் சிறு வயது நிகழ்வின் தாக்கமாகவே இருக்க வேண்டும். ஆழ்மனதின் சக்தியை உங்கள் சகோதரியின் முடிவு நமக்கு உணர்த்துகிறது. நமது கூட்டு குடும்ப கலாசாரம், கடவுளிடம் இருந்த பக்தி, நெறிமுறையான வாழ்க்கை முறை.. இன்னும் எத்தனையோ விஷயங்களை நம்மிடமிருந்து பிரித்த ஆங்கிலேயர்களின் சுயநலம்தான் இதெற்கெல்லாம் ஆணிவேராக இருக்கிறது. இதை சரி செய்யவில்லை என்றல் இதை போல் இன்னும் எத்தனையோ புதிது புதிதான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.]]]

இதில் ஆங்கிலேயர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை..! அவர்களின் வருகை இந்தியர்களுக்கு ஒருவகையில் நல்லதுதானே.. அவர்களும் வந்திருக்காவிட்டால் ஆப்பிரிக்க கண்டத்தைவிட மோசமாக இருந்திருக்கும் இந்தியா..! இது எனது தனிப்பட்ட கருத்து..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

May Her Soul Rest in Peace.]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[NAGARAJAN said...

உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்று தெரியவில்லை.]]]

இந்த நினைப்பே எனக்கு போதும்.. விட்டுவிடுங்கள்..!

திருவாரூர் சரவணா said...

பிரகாஷ்ராஜ் விகடனில் சொல்லாததும் உண்மை என்ற தொடரில், தன் மீது நம்பிக்கை இருப்பவனுக்கு தன்னம்பிக்கை. தன்னைத் தாண்டிய ஒரு பற்றுதல் இருந்தால் பயம் இல்லாமல் இருக்கும் என்று நினைப்பவனுக்கு இறை நம்பிக்கை. அதாவது கடவுளின் சக்தி தன்னுடன் இருக்கிறது என்று நம்பிக்கையுடன் வாழ்கிறான் என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே. அவன் மனதில் இருந்து அந்த கடவுள் நம்பிக்கையை எடுத்து விட்டு அதற்கு ஈடான வேறு எதாவது நம்பிக்கையுடன் அவனை வாழ வைக்க முடியுமா? இதில் உனக்கென்ன கஷ்டம் என்ற பொருளில் சில வரிகள் எழுதியிருப்பார். நிச்சயம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வடிகால் தேவைப்படும். உங்கள் சகோதரிக்கு அந்த வடிகால் எது என்று புரியாமல் இருந்த வெறுமைதான் அவர் இழப்புக்கு காரணமாகி இருக்கிறது. பெரிய பிரச்சனைகளை விட என்ன பிரச்சனை என்றே தெரியாத சூழ் நிலை மிகவும் வேதனையானது.

Anonymous said...

கடைசியாக இரு பின்னூட்டம். இனி உங்கள் அக்கா விஷயத்தில் உதவாது என்றாலும் படிப்பவர்களுக்கு இது உதவும் என்பதால். இந்த மாதிரியான குழந்தைகள் நம்மைச் சுற்றிலும் 'உதவிக்காக' மறைமுகமாக கையேந்திக் கொண்டு இருக்கிறாரகள் என்பதால்.

ஏதோ 'ஒன்று' என்பதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவேண்டும் எனில் அந்த ஏதோ ஒன்றை 'தினமும்' பயிற்சி செய்யவேண்டும்.அப்போதுதான் அது பலமாகும்.அது கலையாக இருக்கலாம்.ஒரு சிறந்த கலைஞன் பைத்தியக்காரனாகவே இருக்கிறான்.வேண்டுமானால் கலைஞர்கள் பட்டியல் எடுத்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.அந்த கலைதான் அவனுக்கு வடிகால்.குப்பைகளை,ஆழ்மன எண்ணங்களை கலையாகவே அவன் வெளியேற்றி நிம்மதி கொள்கிறான்.அதை ரசிக்கிற ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.அவனைப் பொறுத்தவரை குப்பை வெளியேறிவிட்டது என்ற நிம்மதிதான்.அந்த வடிகாலும் போதவில்லை என்றதும் பைத்தியக்கார நடவடிக்கைகளில் இறங்குகிறான்.

சிறுவயதில் இருந்தே ஏதாவது ஒரு கலையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது நல்லது.எந்த பொருளாதார சூழலில் இருந்தாலும் ஏதாவது பாடல்,ஆடல்,இசையிலேயே எத்தனை வாத்தியக்கருவிகள்...ஒரு புல்லாங்குழல் இருபது ரூபாய்க்குகூட கிடைக்கிறது.ஏதாவது கருவியை அறிமுகப்படுத்தினால் இந்தக் குழந்தை அதை கெட்டியாகப்பிடித்துக் கொண்டால் அதுவே வடிகாலாகிவிடும்.

அடிப்படைவிதி; எதை திருப்பி திருப்பி செய்கிறோமோ அதுவே வடிகால்.

Anonymous said...

மேலே சொன்ன உதாரணத்தில் நிச்சயம் சொல்வேன்.டைரக்டர் சங்கரின் குழந்தை இந்த டைப்தான்.அதற்கு சரியான கலையின் அறிமுகம் கிடைக்குமானால் மிகச்சிறந்த கலைஞனாக வாய்ப்பு நிறைய உண்டு.இல்லை பணம் அவரது கவனத்தை திசைதிருப்புமானால் மனச்சிதறல் அடைய வாய்ப்பும் நிறையவே உண்டு

இந்தக் குழந்தைகள் கலைமனம் படைத்தவர்கள்.ஏ.ஆர.ரகுமான் முஸ்லிமாக மாறியதற்கு காரணம் இந்து மதத்தில் இருந்த மாந்த்ரீகம்.அது அவரது குடும்பத்தை பாதித்தது. மாந்த்ரீகம் பகுத்தறிவை ஒதுக்கிவிட்டு ஆழ்மனதை தொடவல்ல சடங்குகள் கொண்டது.ஆனால் அதை நல்லவிதமாகவும் பயன்படுத்தலாம்.கெட்டவிதமாகவும் பயன்படுத்தலாம்.

ஏ.ஆர்.ரகுமானிடம் அப்படி கெட்டவிதமாக பயன்படுத்தப்பட்டதால் மனம் கலங்கி விடை தெரியாமல் இஸ்லாமிற்கு மாறினார்.விஷயம் அதுமட்டும்அல்ல அந்த மாந்த்ரீகம் வேலைசெய்யும் அளவிற்கு அவர் மனம் மெலிதானதாக இருந்தது என்பதே.இந்த மாந்த்ரீகம் மெலிதான மனம் படைத்தவர்களிடமே வேலை செய்கிறது.சுவாரஸ்யமாக மெலிதான மனமே கலைஞனின் மனமும் கூட.

இஸ்லாம் அவருக்கு நல்ல விதமானதாக அவரைப் பாதுகாக்க உதவிசெய்தது.ஏ.ஆர்.ரகுமானும் இந்தமாதிரியான டைப் தான். ஆனால் அவர் ஒரு வடிகால் வைத்திருக்கிறார்.அது இசை. இன்னொன்று என்ன நடந்தாலும் நேரப்படி தொழுகை.

நாளையே அவரது இசை ரசிகர்களால் புறக்கணிக்கப்படலாம் அப்போதும் அவர் வீட்டிலிருந்து பயிற்சி செய்துகொண்டிருப்பார்.அதுவம் போனாலும் தொழுகை இருக்கிறது.சிறந்த வடிகால்.

இசையமைப்பாளனில் நாத்திகனை காண்பது மிக அரிது.பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்துக் கொள்கிற அளவுக்கு உண்டான மனம் அவனுடையது.அதை மட்டுப் படுத்தவே கலை.

ஏன் அப்படி எனில் இசை நம் பகுத்தறிவை 'அமர்த்தி' அதாவது மட்டுப்படுத்தி-பிரித்து ஆராய்கிற புத்தியை ஓரமாக இருக்கச் சொல்லிவிட்டு-ஆழ்மனதை நேரடியாக தொட்டுவிடக் கூடிய சக்தி உண்டு.அதனாலேயே நாம் இசையை ஒரு வடிகாலாக உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.

இது பிறக்கும்போது வருவது என்றதும் அப்போ 'முன்பிறவி' என்பது உண்மையா என்ற விவாதத்துக்கு போய்விடத் தேவையில்லை. அதை விவாதிக்காமலேயே இப்பொது உள்ள பிரச்னையை மட்டும் நாம் நேரடியாக உணரலாம்.ஆனால் பிறக்கும்போதே இப்படி இருக்கிறர்கள்.அது திடீரென்றுதான் வெளியே தெரிகிறது. இதை கண்டுபிடிக்க கஷ்டம் என்பதால் பிறந்த எல்லாக்குழந்தைகளுக்கும் 'காது குத்துகிறோம்',மொட்டை அடிக்கிறோம்,கோயிலில் தண்ணீர் முகத்தில் அறைகிறோம்,கறுப்புக்கயிறு கட்டுகிறோம்,சூடம் கொளுத்துகிறோம்,வர்மம் தட்டுவோம்,பலவிதமான தாந்த்ரீக சடங்குகள் செய்கிறோம்.

நான் என்குழந்தைக்கு செய்யவில்லை.ஒன்றும் ஆகவில்லையே என்று பகுத்தறிவுவாதி வாதிடுவானால் சந்தோஷம்! தேவைப்பட்டிருக்காது.
ஆனால் அது தேவைப்படுகிற குழந்தைகளுக்கு கிடைக்காமல் செய்யக் கூடாதே!

குழந்தைக்கு காய்ச்சல்,அல்லது ஏதோ ஒரு நோய், என்ன வைத்தியம் செய்தும் சரியாக மாட்டேங்குது என்று மேலே சொன்ன சடங்கில் ஏதோ ஒன்று செய்ததும் சரியாகிவிட்டதா?

அடிக்கடி இப்படி வந்து அந்த சடங்கு செய்ததும் சரியாகிறது என்றால் அந்த குழந்தை இந்த டைப்.எந்த மருந்துக்கும் குணமாகாது ஆனால் சிறு சடங்கில் இந்த குழந்தைகளுக்கு குணமாகிவிடும்.ஏனெனில் வியாதியை உருவாக்கினதே அவர்களின் மனம்.அந்த சடங்கில் திருப்திப்பட்டு வியாதி விலகிவிடும்.

கவனியுங்கள் குழந்தைகளை.நிறைய குழந்தைகள் உள்ள குடும்பத்தில் தாயால் 'முழு'கவனம் செலுத்தி இதை கவனிக்க முடியாமல் போகலாம்.அது எதிர்காலத்தில் வேறு ரூபத்தில் வெடிக்கும்.

ஸ்ரீராம். said...

பதிவு மனதில் கனம் தந்தது. chilled beers கமெண்ட்ஸ் நிறைய சிந்திக்க வைத்தது.

உண்மைத்தமிழன் said...

[[[திருவாரூர் சரவணன் said...

பெரிய பிரச்சனைகளை விட என்ன பிரச்சனை என்றே தெரியாத சூழ்நிலை மிகவும் வேதனையானது.]]]

இதைத்தான் அப்போதும், இப்போதும் நான் அனுபவிக்கிறேன்..!

khaleel said...

வருத்தமா இருக்கு சார். இது என்ன schizophrenia வா? பெரூ மூச்சு விடறத தவிர என்ன சொல்றேதேன்னு தெரியல? குழ்ந்தையை யார் பாத்துகரா இப்ப?

khaleel said...

வருத்தமா இருக்கு சார். இது என்ன schizophrenia வா? பெரூ மூச்சு விடறத தவிர என்ன சொல்றேதேன்னு தெரியல? குழ்ந்தையை யார் பாத்துகரா இப்ப?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப வருத்தமா இருக்குண்ணே, இங்கே பதிவில் பகிர்ந்ததன் மூலம் ஓரளவேனும் உங்களுக்கு ஆறுதல் கிடைத்திருக்கும்னு நம்புறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Chilled beers அவர்களின் கருத்துரைகள் ஆழமான கருத்துகள் கொண்டவை. பலருக்கும் பயன்படும்!

நெல்லை கபே said...

chilled beers ன் கருத்துக்களுடன் நிறைய உடன்படவேண்டியதாய் இருக்கிறது.எனக்கும் நெடு நாளாய் தோன்றிய விசயம் இது குழந்தையாயிருக்கும் போதே வருவதுதான் என்பது.ஆனால் தெரியாது.சில சடங்குகள் அப்போதைக்கு அப்போது மனதை சுத்தப்படுத்த உதவுகிறது.ஆனால் பகுத்தறிவுக்கு கண்டிப்பாய் பதில் அளிக்க முடியாது.

ஏன் அது எப்படி வேலை செய்கிறது என்று சொல்லமுடியாது எனில்...குழந்தைகளுக்கு பகுத்தறிவு கிடையாது.அதாவது புத்தி கிடையாது.ஆனால் 'மனம்' உண்டு.நம் ஆழ்மனம் எல்லாவற்றையும் பதிவு செய்கிறது.குழந்தைகளின் மனமும்.அதனால் சில விசயங்களைக் கண்டு அது பயந்து மனம் துவண்டு விடும்.அப்படியே உட்கார்ந்து இருக்கும்.விளையாட போகாது.கூப்பிட்டா வராது.சின்ன விசயத்துக்கு பயந்து அழும்.இது எல்லா குழந்தைகளுக்கும் இல்லை.குழந்தைகள் ஒன்று போலே பிறப்பதில்லை என்பதை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

ஆக பகுத்தறிவு இல்லாத ஆனால் மனப்பதிவுகள் நடந்துகொண்டே இருக்கிறபடியால் சில பதிவுகள் நோயை உருவாக்கிவிடும்.இது உடம்பிலும் தெரியும்.டாக்டர் உடம்பை பார்த்துவிட்டு மருந்து அளிப்பார்.குணமாகும்.ஆனால் மனப்பதிவு மீண்டும் அதை உருவாக்கும்.சில சடங்குகள் இதை துடைத்துப் போடும்.ஆனால் அவை illogical ஆக இருக்கும்.ஆனால் நினைவில் வையுங்கள்.குழந்தையின் மொத்த மனமும் illogical தான்.நான் illogical என்று சொல்வது வளர்ந்த நம் logical மனதைக் கொண்டு ஆராய்ந்து சொல்கிறோம்.

ஒரு குழப்பமான மனிதன் 'சே...அந்த டைம்ல புத்தி வேலை செய்யலை' என்று சொல்வதை கேள்விப்பட்டதில்லையா.ஆக புத்தி வேலை செய்யலை என்றால் வேலை செய்தது எது. மனம்!மனத்துக்கு rules and regulations,logic என்பதெல்லாம் கிடையவே கிடையாது.அது பாட்டுக்கு எந்த திசையிலும் வேலை செய்யும்.

chilled beers சொல்வது எல்லாம் தந்த்ரா சாஸ்திரத்தைப் பற்றி.பத்தாம் நூற்றாண்டில் தாந்த்ரீகர்கள் ஊரைவிட்டே விரட்டப்பட்டார்கள்.கெட்டவிஷயத்துக்கா இவை பயன்படுத்தப்படுவதால்.

ஆனால் பகுத்தறிவு பலமாக உள்ள மனதிடம் இந்த தாந்த்ரீகம் வேலை செய்யாது.ஏதாவது ஒரு விசயத்தில் அதீத பிடிப்பு இருந்தாலும் வேலை செய்யாது.தந்த்ராவுக்கு பகுத்தறிவுக்கு ஏழாம்பொருத்தம்தான். நேர் எதிர்.தந்த்ரா நோயாளிக்கே தெரியாமல் அவர்கள் மனதை ஊடுருவி சரி செய்யவேண்டியதை செய்யக்கூடியது.
கறுப்புக்கயிறு பற்றி சொல்லியிருந்தார்.அடுத்தமுறை இந்த மாதிரியான கறுப்புகயிறை யாராவது கட்டியிருந்தால் கவனியுங்கள்.அந்த கயிறில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.அது என்ன என்று சொல்லமாட்டேன்.நீங்களே கவனியுங்கள்.இந்த மாதிரியான சூட்சுமம்தான் இந்த சடங்குகளில் உள்ளது.அது உங்கள் புத்திக்கு புரிவதைவிட நோயாளியின் மனத்துக்கு டக்கென்னு புரிந்துவிடும்.

இது புரியாததால் நிராகரிக்கமுடியாது. உங்கள் புத்திக்கு புரியலேன்னா மனது ஏற்றுக் கொள்ளாது என்று அர்த்தமா? இந்த கேள்வி நண்பர் ஒருவர் கேட்டது.நியாயம் தானே என்று தோன்றியது.மனம் வேறு புத்தி வேறுதான்.

நெல்லை கபே said...

துடுக்குத்தனமாக பேசிய சகோதரி அன்பாய் பேசினார் என்கிறீர்கள்.யாரும் திடீரென்று மாறக்கூடாது.அம்மா,அப்பா மறைந்தபிறகு ஏற்பட்ட வெற்றிடம் அவரை மாற்றியிருக்கிறது.இது சரிதானே என்று தோணலாம்.ஆனால் இதன்காரணமாகத்தான் என்று அவருக்குத் தெரிந்தால் பிரச்னை இல்லை. மனம் மெதுவாக மாறவேண்டும்.வேகமாக மாறினால் அது இன்னொரு மனமாக மாறி இரண்டுக்கும் சண்டை வந்து விபரீதங்கள் வந்துவிடும்.

ஏன் சுடுகாட்டுக்கு பெண்களை அழைத்து செல்வதில்லை எனில் தன் பிரியத்துக்கு உரியவரை தகனம் செய்வதைப் பார்த்தால் பெண்களை உள்ளே உடைந்து விடுவார்கள். பிறகு சரியாகிவிடும் பெரும்பாலானவர்களுக்கு. ஆனால் இந்தமாதிரியானவர்களுக்கு அது வெளியே தெரியாமல் என்றாவது வெடித்துவிடும்.

சிறுவயதில் படித்த சந்திரமுகியின் கதை தன் கதையாக மாறி அது ஜோதிகாவைப் பிடித்து ஆட்டுவதில்லையா? ஒரு சைக்யாட்ரிஸ்ட்டால் பேசத்தான் முடியும். ஆனால் அவளை உண்மையாக சந்திரமுகியாக நினைத்துக் கொண்டு 'வேட்டையனை கொல்கிற' சடங்கு அந்த குறிப்பிட்ட நினைப்பை அவளிடமிருந்து துடைத்து எறிந்ததும் சரியாகிவிடுகிறது இல்லையா. வெறுமை தாங்காமல் நிகழ்ந்த தற்கொலை.மனம் பற்றிய ஆராய்ச்சி முடிவுக்கு வராது.ஏனெனில் ஆராய்ச்சி செய்பவனும் இதில் பாதிக்கப்படுகிறான்.chilledbeers சைக்யாட்ரிஸ்டுகள் தற்கொலை பற்றி சொன்னது அதேதான்.

நெல்லை கபே said...

ஆழ்மனம் பற்றி மகாபாரதத்தில் வந்த ஒரு சம்பவம் என்னால் மறக்கவே முடியாது.இதெல்லாம் நாத்திகனும் நினைவில் கொள்ளவேண்டியது.ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் பிரச்னை கடவுள் பற்றித்தான்.மனம் பற்றி இல்லை. அது ரெண்டுபேருக்குமே இருக்கிறதே!

போர் முடிந்ததும் பார்த்தால் கவுரவர்கள் எல்லாரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். குருடன் திருதராஷ்டிரன் தன் மகனைக் கொன்றது பீமன் என்ற செய்தியை உடனேயே தெரிந்துகொண்டுவிட்டான்.

திருதராஷ்டிரன் 'நியாயம் தானே ஜெயித்தது.என் மகன் அவர்களுக்கு கொஞ்சம் கூட நிலத்தை கொடுக்கமாட்டேன் என்றுசொல்லிவிட்டான். அதனால்தானே' என்று மனம் தேற்றிக் கொண்டான்.

பிறகு ஒருநாள் பீமன் திருதராஷ்டிரனைப் பார்க்க வந்தான்.தயக்கத்தோடு.சித்தப்பா முறை.பாசக்கார சித்தப்பா.அவரது பிள்ளையை கொன்றுவிட்டவன் பார்க்கவருகிறான்.

அவன் வந்ததை கேட்டதும் திருதராஷ்டிரன் 'மகனே ' என்று அழைத்து வா வந்து கட்டிக் கொள் என்றார்.அது ஒரு சம்பிரதாயம்.
அவர் குரலில் போலித்தனமில்லை.பொய்யில்லை.நிஜமான அன்பு இருந்தது.பீமன் ஆசையாப் போனான்.கூடவே வந்திருந்தது கிருஷ்ணன்.சூத்திரதாரி.

அவன் வந்ததை சொல்லவேயில்லை திருதராஷ்டிரனிடம்.அவன் பீமனிடம்'போகாதே' என்று சைகை காட்டினான். பீமன் சைகையிலேயே ஏன் என்று கேட்க மறுபடியும் போகாதே!

பின்னர் அங்கே இருந்த ஒரு சிலையை காட்டினான்.அது கிட்டத்தட்ட பீமன் மாதிரி இருந்தபடியால் அதை தூக்கிக் கொண்டு போ என்றான்.

பீமனும் அதை அப்படியே செய்தான்.பின்னர் திருதராஷ்டிரன்அருகில் போய் 'சித்தப்பா' என்று சத்தம் மட்டும் போட்டுவிட்டு அந்த சிலையை மட்டும் அவர் அருகில் நகர்த்தினான்.திருதராஷ்டிரன் பீமா என் மகனே என்று கண்ணீரோ சிலையை அணைத்து...மகிழ்ச்சிப் பெருக்கோடு...இங்கேதான் ட்விஸ்ட்.....'அடுத்த விநாடி அவன் முகம் கோரமாக மாறியது.நீதானடா என் மகனை கொன்னது...என்று அசிங்கமாகத் திட்டி அந்த சிலையை முதுகைப் பிளந்து காட்டுத்தனமாய் கத்தி பிறகு அடங்குகிறான்.பீமன் அதிர்ச்சியில் பேயறைந்துபோய்.அவன் மட்டும் போயிருந்தால் நிச்சயம் மரணம்தான்.அவ்வளவு வெறி!

நெல்லை கபே said...

அடுத்த சில கணத்திலேயே ‘அய்யோ பீமா என் மகனே உன்னை கொன்றுவிட்டேனே' என்று நெஞ்சில் அறைந்து அழ ஆரம்பிக்கிறான்.
போரில் துரியோதனன் பீமனால் கொல்லப்பட்டுவிட்டான் என்ற அந்த கணத்தில் (கடந்த காலத்தில்) மனதில் தோன்றிய கொலவெறி எண்ணம் அப்படியேதான் இருந்தது. அது இப்போது தன் வேலையை காட்டிவிட்டது. திருதராஷ்டிரனை குறையே சொல்லமுடியாது இதில்.அவனுக்கே தெரியாது அவனது ஆழ்மனம் பற்றி.

ஒரு சைக்யாட்ரிஸ்ட் இருந்திருந்தால் அவனிடம் பேச முயற்சித்திருப்பார்.ஆனால் பேச்சு உதவாது இந்த மாதிரியானவர்களிடம். மேலைநாட்டு உளவியல் பேச்சை நம்புகிறது.அவர்கள் செய்வது பேசுவது மட்டுமே.கீழை நாட்டு உளவியல் சடங்குகளை நம்புகிறது. ஏன் பேச்சு உதவாது எனில் பேசியதும் அவர்கள் குழப்பமனம் எதிர்க்கருத்துகளை உருவாக்கி அந்த பேச்சு ஆழ்மனதுக்குள் புகமுடியாமல் செய்துவிடும்.

இது நடந்ததுக்குப் பிறகு திருதராஷ்டிரனிடம் கிருஷ்ணன் உண்மையை சொல்லி 'பீமா இன்னும் உயிரோடு இருக்கிறான்' என்று சொல்ல. திருதராஷ்டிரன் மகிழ்ந்து 'மகனே பீமா வா வந்து என்னை கட்டிக் கொள்' என்பான். பீமா இப்போது பயப்படுவான். கிருஷ்ணன் தைரியமா போ என்பான். பீமா போய் தழுவிக்கொள்ள திருதராஷ்டிரன் அழுது கொண்டே தழுவிக்கொள்வான்.

அந்த கொலவெறிஎண்ணம் திருப்தி அடைந்துவிட்டது சிலையை பிளந்த அந்த கணமே. அதற்கு இனி வேலை இல்லை. இது தான் சடங்குகளின் பலம்.அது சடங்கு என்று சொல்வதை விட ‘செயல்’ என்று சொல்லலாம்.

ஆழ்மன எண்ணம் கொலை சம்பந்தமானது மட்டுமல்ல தற்கொலை சம்பந்தமானதும்தான்.சுருக்கமாகச் சொன்னால் அது எல்லாவிதமானதும்.மனம் ஒரு பெரிய பிரும்மாண்டமான குப்பைக் கூடம்.

Prem S said...

இப்படியும் இருக்குமா என்ன 3 படத்தை பார்த்த போது தீடிரென தனுஷுக்கு அந்த நோய் எப்படி என தோன்றியது .ஆழ்ந்த அனுதாபங்கள் அன்பரே

Amudhavan said...

உண்மைத்தமிழன், தங்கள் தாயார் பற்றிய முந்தைய பதிவொன்றைப் படித்து நெகிழ்ந்தேன். தற்போது தங்களின் சகோதரியாரைப் பற்றிய இந்தப் பதிவு மேலும் நெகிழ வைத்தது. அவர்களுக்கு வந்திருந்த பிரச்சினைத் தொடர்பாக சில்ட் பீர்ஸ் நிறைய எழுதியிருந்தார்.ஏகப்பட்ட தகவல்களைச் சேகரித்து அவர் எழுதியிருந்தது ஆச்சரியமாக இருந்தது. இது ஒருபுறமிருக்க இம்மாதிரியான மனப்பிறழ்வு சம்பந்தமான பிரச்சினைகளுக்கெல்லாம் மருந்தும் மாத்திரைகளும் பிரயோசனப்படுவதில்லை. பொதுவாக நோயாளிகளைத் திரும்பத்திரும்ப தூங்கவைப்பதற்கு மட்டுமே ஆங்கில மருந்துகள் உதவுகின்றன. பிற்பாடு நரம்புத்தளர்ச்சியை வேறு கூடுதலாக உருவாக்கிவிடும் வேலையையும் செய்கின்றன.
இம்மாதிரி இடத்தில்தான் ரெய்கி உதவுகிறது. நிறையப் பேருக்கு ரெய்கி பற்றி ஒன்றுமே தெரியாது என்பதனால் தத்துப்பித்தென்று ஏதாவது சொல்லக்கூடும். ஆனால் உலகில் நாம் சரியாகத் தெரிந்துகொள்ளாத பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ரெய்கி மற்றும் பிராணிக் ஆகியவையும் அடக்கம் என்ற அளவில் அதுபற்றிய கவனம் செலுத்த ஆரம்பித்தால் புரிதல் கிடைக்கும்.
இது போன்ற இரண்டு பேருக்கு நான் ரெய்கி சிகிச்சை அளித்ததன்மூலம் சமீபத்தில் முழு அளவில் குணம் கிடைக்கச்செய்திருக்கிறேன்.
தங்கள் சகோதரியாருடையது காலம் கடந்துபோன விஷயம். இதனைப் படிக்கும் மற்றவர்களுக்கு இது உதவலாம் என்பதற்காக இதனை இங்கே பதிவு செய்கிறேன்.