ஸ்பெக்ட்ரம் ஊழல் - மத்திய தணிக்கைத் துறையால் ஊழல் எப்படி கணக்கிடப்பட்டது..?

01-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் வாதாடும் வக்கீல் என்ற பட்டத்தை அகில இந்தியாவில் கபில்சிபலுக்குத் தரலாம்.

ஸ்பெக்ட்ரம் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாகச் செய்யப்படவில்லை என்று நவம்பர் மாதம் 29-ம் தேதி டெல்லியில் பேட்டியளித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் இப்போது அப்படியே அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.


அதுகூட பரவாயில்லை.. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் எடுத்த நிலைப்பது என்று சொல்லலாம். இப்போதோ, மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை மீது வேகமாகப் பாய்ந்திருக்கிறார் என்பதை என்னவென்று சொல்வது?

“2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடக்காததால், 1.76 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய கணக்கு தணிக்கைத் துறை சொல்வது கற்பனையானது. இட்டுக் கட்டிச் சொல்லப்படுவது” என்பது அவரது வாதம். இது கற்பனையான தொகை என்று சொல்வதன் மூலமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கிவிட்டது.

தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் கணக்கீடு :

2008-ல் புதிதாக நுழைந்த நிறுவனங்களுக்கு 122 உரிமம் வழங்கியது மூலமான இழப்பீடு - 1,02,498 கோடி.

சி.டி.எம்.ஏ. ஆபரேட்டர்களுக்கு இரட்டை உரிமம் வழங்கியதில் இழப்பு - 37,154 கோடி.

6.2 மெகா ஹெர்ட்ஸுக்கு ஜி.எஸ்.எம். ஆபரேட்டர்கள் மின் காந்த அலைக்கற்றைகளை ஆக்கிரமித்துக் கொண்டது மூலமான இழப்பு - 36,993 கோடி

ஆக மொத்த இழப்பு - 1,76,645 கோடி.

இந்த நிலையில் இந்தக் கணக்கின் உண்மை குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டும், 2-ஜி பிரச்சினை குறித்துத் தொடர்ந்து அலசி, ஆராய்ந்து கருத்துத் தெரிவிக்கும் எம்.ஆர்.வெங்கடேஷிடம் இது குறித்துக் கேட்டோம்.

“மத்திய அமைச்சர் கபில்சிபலின் வாதம் தவறானது. மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை ஏதோ ஒரு கதையை எழுதவில்லை. அது தனது குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வைக்கிறது. அது ஓர் அரசியல் கட்சியல்ல. அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அரசியமைப்புச் சட்டம் உருவாக்கிய அமைப்பு. எனவே, அவர்கள் எந்த உள்நோக்கமும் இல்லாமல், இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அப்படித்தான் வைக்க முடியும்.

3-ஜி ஒதுக்கீட்டில் அரசுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்குக் கிடைத்த பணம் 10,772 கோடி மட்டுமே. எவ்வளவு வித்தியாசம் பார்த்தீர்களா..? 2-ஜி ஏலம், அகில இந்திய அளவில் முறைப்படி நடந்திருந்தால்.. மத்திய அரசுக்கு என்ன வருமானம் கிடைத்திருக்கும் என்பதுதான் தலைமைக் கணக்கு அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தக் கணக்கீட்டின்படி 1.76 லட்சம் கோடிக்கு மேல் விற்று லாபத்தை அடைந்திருக்க முடியும் என்று அந்த அறிக்கை சொல்கிறது. அதன்படி 2-ஜி ஒதுக்கீட்டில் விதிமுறைகள் சரிவரப் பின்பற்றாததால் அரசுக்குக் குறைந்தபட்சமாக 57,666 கோடி முதல் 1,76,645 கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம்சம்..” என்ற வெங்கடேஷிடம்,

“இந்த வரையறையைத்தான் கபில்சிபல், கருணாநிதி போன்றோர் தவறானது என்கிறார்களே..?” என்றோம்.

“நான்கு விதமான கணக்குகளை அந்தத் துறை போட்டுப் பார்த்தது. முதல் கணக்கீட்டு முறையில் 3-ஜி ஏலம் மூலம் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் 2-ஜிக்கும் ஏலம் நடந்திருந்தால், அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய வருமானத் தொகையை மதிப்பீடு செய்துள்ளார்கள்.
 
உதாரணத்துக்கு ஒரு வீட்டின் மதிப்பைக் கணக்கிடும்போது அதன் பக்கத்து வீடு என்ன விலைக்குப் போயிருக்கிறது என்பதைப் பார்த்து மனையின் அளவு, வீட்டின் அளவு மற்றும் வயது போன்றவற்றின் அடிப்படையில் குத்துமதிப்பாக, அதன் மதிப்பு கணக்கிடப்படும்.

அது போலவே, 3-ஜி போல், 2-ஜிக்கும் ஏலம் நடந்திருந்தால், அரசுக்குக் கூடுதலாக 1,76,645 கோடி வருமானம் கிடைத்திருக்கும் என்பது அதன் கணக்கீடு.

இரண்டாவது கணக்கீடு. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அவசரம், அவசரமாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து முடித்த பிறகு எஸ்டெல் என்ற நிறுவனம், 2007-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியது.

அதில், “அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு தொகை நிர்ணயிக்கிறார்களோ, அதைவிட இந்திய அளவிலான உரிமம் ஒன்றுக்குக் கூடுதலாக 6000 கோடி தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தது..

இதே நிறுவனம், அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி, “இப்போது இந்திய அளவில் ஓர் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான தொகையைவிடை கூடுதலாக 13,752 கோடி தரத் தயார்..” என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் போட்டி நிறுவனங்கள் இதைவிட அதிகமாகக் கொடுத்தால், அதைவிடவும் அதிகத் தொகையைத் தரவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இவர்கள் கேட்டதைப் போல கொடுத்திருந்தால் அரசுக்கு 67,374 கோடி கிடைத்திருக்கும். அந்தத் தொகையும் வருமான இழப்புதானே..?

2-ஜி உரிமம் பெற்றவற்றில் யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்கள் அவற்றின் ஒரு பகுதி பங்குகளை வெளியில் விற்று விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இந்த நிறுவனங்களுக்கு அசையும் சொத்து என்றோ அசையா சொத்து என்றோ எதுவும் கிடையாது. 2-ஜி உரிமம் மட்டும்தான் அவற்றின் சொத்தாக இருந்தன.

யூனிடெக் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதின் விலையின் அடிப்படையில் பார்த்தால், அரசுக்கு வருமான இழப்பு 69,626 கோடி. இது மூன்றாவது முறையிலான இழப்பீட்டுக் கணக்கு.

நான்காவது முறைப்படி ஸ்வான் பங்குகள் விற்பனை செய்யப்பட்ட விலையின் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசுக்கு 57,777 கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ன தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏன் இப்படி பல்வேறு அளவீடுகளை தலைமை தணிக்கை அதிகாரி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால், காலக் கடிகாரத்தை பின்னோக்கிச் செலுத்த முடியாது. அந்த வகையில் 3-ஜி ஏல விலை நிலவரம் மற்றும் எஸ்டெல் நிறுவனத்தின் கூடுதல் தொகை தரும் கோரிக்கை, ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் பங்குகளின் விற்பனை போன்றவற்றை அளவீடாக வைத்து, அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டை தலைமைத் தணிக்கை அதிகாரி மதிப்பீடு செய்திருக்கிறார்.

இதில், ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால்கூட அரசுக்குக் குறைந்தபட்சம் 57,666 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கபில்சிபல் தனது கட்சியைக் காப்பாற்ற இப்போது பேசலாம். அதற்காக உண்மை செத்துவிடாது.” என்றார்.

நன்றி : ஜூனியர் விகடன் - 23-01-2011
 
ஸ்பெக்ட்ரம் 2-ஜி லைசென்ஸ் உரிமங்களைப் பெற்ற கம்பெனிகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள் இது :

1. ஸ்வான் நிறுவனம் :

சாகித் பல்வா குடும்பமும் வினோத் கோயங்கா குடும்பமும் இணைந்து நடத்தும் கம்பெனி. மும்பையில் ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டிப் பறக்கும் பலே கம்பெனி. '

'இந்திய உளவுத் துறை எடுத்து வைத்திருக்கும் சான்றுகளின்படி இதன் முக்கியத் தொடர்பில் தற்போது கராச்சியில் வசிக்கும் - பகீர் மனிதர் ஒருவரும் இருக்கிறார்!'' என்றும் சொல்லப்படுகிறது.

கம்பெனி உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வா உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 937-வது நபராக இருக்கிறார். இவரது இருப்பிடம் மும்பை. இதே கம்பெனியின் இன்னொரு சேர்மனான வினோத் கே.கோயங்கா இருப்பதும் மும்பையில்தான்.

2. சிஸ்டமா ஷியாம் டெலிகாம் நிறுவனம் :

எம்.டி.எஸ். குரூப்புடன் இணைந்த நிறுவனம் இது. டவர் 334, உதயோக்  பவன், குர்ஹான், ஹரியானா மாநிலம் என்ற முகவரியில் திடீரென முளைத்த நிறுவனம் இது. இதன் இயக்குநர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை!

3. லூப் டெலிகாம் நிறுவனம் :

இதன் இந்திய இயக்குநராக சந்தீப் பாசு என்பவரும் பங்குதாரராக அய்லோன் என்பவரும் இருக்கிறார்கள். மும்பை மாகிம் வெஸ்ட் பகுதியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். 2-ஜி விண்ணப்பத்தை உத்யோக் விஹார், குர்ஹான் பகுதியில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இதன் நிஜ உரிமையாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்!

4 .யூனிடெக் நிறுவனம் :

ஒன்பது உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாக இது உள்ளது. ரமேஷ் சந்திரா (சேர்மன்), அஜய்சந்திரா (எம்.டி., எச்.ஆர்.டி), சஞ்சய் சந்திரா (எம்.டி., அட்மின்), சஞ்சய் பகதூர், அனில் ஹரீஸ், ரவீந்தர் சின்கானியா, அம்ப்வானி, மினோத் பாஷி, மகந்தி ஆகிய ஒன்பது பேர்தான் சூத்திரதாரிகள்.

''இந்த நிறுவனத்துக்கு முழுக்க முழுக்க நீரா ராடியா ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இதுதான் மிகப் பெரிய வெளிநாட்டு நிறுவனத்தின் துணைப் பெயரில் உருவானது!'' என்கிறது சி.பி.ஐ.

5. எஸ்.டெல் நிறுவனம் :

'ஸ்டெர்லிங்' சிவசங்கரன் என்றால் முன்பு தமிழகம் நன்கு அறியும். முரசொலி மாறனின் நண்பராக இருந்தவர். மெர்க்கண்டைல் வங்கியை வாங்கிய பிரச்னையில் இவர் செம ஹாட்டாக நியூஸில் அடிபட்டார். இன்றைய 'கலைஞர்' டி.வி-யின் உருவாக்கத்திலும் இவரது பங்கு நிறைய இருந்ததாகச் சொல்வார்கள். நிலம் விவகாரம் ஒன்றில் புகார்கள் கிளம்பி அவர் தவிர மற்ற பல நிர்வாகிகளும் கைதான பழங்கதையும் உண்டு. அந்த சிவசங்கரனின் நிறுவனம்தான் இது

சிவசங்கரன் (சேர்மன்), வி.சீனிவாசன் (சி.இ.ஓ), பி.சுவாமிநாதன் (தலைவர்)... மற்றும் இயக்குநர்களான பீட்டர் கலிபோல்ஸ், எஸ்.சரவணன், எஸ்.நடராஜன், அலி யூசுப், அப்துல் ரஹ்மான் ரஷிம், டாக்டர் காசன் முராத் ஆகியோர் அடங்கிய டீம் இந்த நிறுவனத்தை நடத்துகிறது.

6. ஐடியா செல்லுலார் நிறுவனம் :

இதன் இந்திய உரிமையாளர்களாக 12 பேரின் பெயர்கள் உள்ளன. குமாரமங்கலம் பிர்லா இதன் சேர்மனாக இருக்கிறார். ராகேஷ் ஜெயின், பிஸ்வாஜித் அன்னசுப்பிரமணியம், பிரகாஷ், தர்ஜானி வாகிப், பி.முராரி, ஜான் விட்டலங்க நவரோ, ராஜஸ்ரீ பிர்லா, சூரிபுத்த அன்ஸா, அருண் தியாகராஜன், சஞ்சய் அஹா, பார்கவா (இயக்குநர்கள்) ஆகியோர் பெயர்கள் உள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகர் முகவரியில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றுள்ளனர்.

7. வீடியோகான் நிறுவனம் :

வேணுகோபால் என்.தத் என்பவர் இதன் சேர்மன். பிரதீப் என்.தத், கே.சி.ஸ்ரீவத்சவா, சத்யபால் தல்வார், எஸ்.பத்மநாபன், மேஜர் ஜெனரல் எஸ்.சி.என். ஜட்டார், அருன் எல்.போங்னிவார், ராடி ஷியாம் அகர்வால், குனிலா நார்ஸம், பி.என்.சிங், அஜய் சாப் ஆகியோர் பெயர்கள் இதன் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளன. இதற்கான தலைமை அலுவலகம் டெல்லியில்!

8. ரிலையன்ஸ் டெலிகாம் : 

அனில் அம்பானி - அதிகம் சொல்ல வேண்டியதில்லை!

9. டாடா டெலிகாம் : 

ரத்தன் டாடா - தனியாகச் சொல்ல வேண்டியதில்லை

16 comments:

pichaikaaran said...

இதை எல்லாம் பேசி விட்டு, தேர்தல் அன்று ஓட்டு போடாமல் இருப்பது நம் மக்கள் இயல்பு..

அப்படி இல்லாமல் ஒரு எதிர்ப்பு அலையை உருவாக்க உங்கள் எழுத்து உதவும்...

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓட்டு போடும்போது உங்க பங்கை வாங்கி கொள்ளவும்

கோவை நேரம் said...

வர வர நீங்களும் சவுக்கு மாதிரி ஆயிட்டு வரீங்க ...வாழ்த்துக்கள் .

Unknown said...

இவ்வளவு தெளிவாகச் சொல்லியும் இன்னும் ஊழலே நடக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வது. சொல்கிற எல்லோருக்கும் ஏதாவது ஆதாயம் இருக்கும். ஏமாறுவது எப்போதும் போல் பொது மக்கள் தான்.

ஜோதிஜி said...

நீங்கள் எடுத்துக் கொண்ட தலைப்புக்கு உங்களின் உழைப்புக்கு என் வந்தனம்.

Indian Share Market said...

அண்ணே,சுப்ரீம் கோர்ட்,கபில்சிபீலை எவ்வளவு திட்டினாலும் தாங்குவான் போல ,,,,இவன் ரொம்ப நல்லவன். இவனுக்கு எதுக்கு இந்த மானக்கெட்ட பொழப்பு , இந்தமாதிரி வாழ்வதற்கு இவனெல்லாம் சாகலாம். இவனுங்க எவனுக்கும் வெட்கம் ,மானம் ,சூடு ,சுரணை எதுவும் கிடையாது போல..

செங்கோவி said...

//வர வர நீங்களும் சவுக்கு மாதிரி ஆயிட்டு வரீங்க ...வாழ்த்துகள்//..வழி மொழிகின்றேன்!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
இதை எல்லாம் பேசி விட்டு, தேர்தல் அன்று ஓட்டு போடாமல் இருப்பது நம் மக்கள் இயல்பு. அப்படி இல்லாமல் ஒரு எதிர்ப்பு அலையை உருவாக்க உங்கள் எழுத்து உதவும்.

நன்றி]]]

என் எழுத்து அல்ல. நம் எழுத்து. கூடித் தேர் இழுப்போம் பார்வை.. தயவு செய்து நீங்களும் எழுதுங்கள்..

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓட்டு போடும்போது உங்க பங்கை வாங்கி கொள்ளவும்.]]]

வாங்க மாட்டேன். வாங்காமயே எதிர் ஓட்டுப் போடுவேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...
வர வர நீங்களும் சவுக்கு மாதிரி ஆயிட்டு வரீங்க. வாழ்த்துக்கள் .]]]

அதீதமான பாராட்டு. சவுக்கின் நிழலில்கூட நான் நிற்க முடியாது. அவர் இப்போதும் அரசாளர்களின் துப்பாக்கி முனையில் வாழ்க்கையின் விளிம்பில் நிற்கிறார். முருகன்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும். அவரது தைரியம் நிச்சயம் எனக்கில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[பாஸ்கர் said...
இவ்வளவு தெளிவாகச் சொல்லியும் இன்னும் ஊழலே நடக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வது. சொல்கிற எல்லோருக்கும் ஏதாவது ஆதாயம் இருக்கும். ஏமாறுவது எப்போதும் போல் பொது மக்கள்தான்.]]]

வாங்குற காசுக்கு கூவுறாங்க பாஸ்கர். நாம காசு வாங்கமலேயே நாட்டுக்காக இதைப் பேசுவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[ஜோதிஜி said...
நீங்கள் எடுத்துக் கொண்ட தலைப்புக்கு உங்களின் உழைப்புக்கு என் வந்தனம்.]]]

இதனை இன்னும் அதிகமானோரின் முன்பு கொண்டு செல்வதற்காகத்தான் இங்கே பதிவிடப்பட்டிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
அண்ணே சுப்ரீம் கோர்ட், கபில்சிபீலை எவ்வளவு திட்டினாலும் தாங்குவான் போல, இவன் ரொம்ப நல்லவன். இவனுக்கு எதுக்கு இந்த மானக்கெட்ட பொழப்பு , இந்த மாதிரி வாழ்வதற்கு இவனெல்லாம் சாகலாம். இவனுங்க எவனுக்கும் வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் கிடையாது போல..]]]

ஏன் இப்படி..? அவன் இவன் என்ற ஏக வசனமெல்லாம் இனிமேல் வேண்டாம் நண்பரே..! அவர் என்றே குறிப்பிடுங்கள். வயதுக்கு மரியாதை கொடுக்கலாம் இல்லியா..?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

//வர வர நீங்களும் சவுக்கு மாதிரி ஆயிட்டு வரீங்க ...வாழ்த்துகள்//

வழி மொழிகின்றேன்!]]]

நோ.. நோ.. நோ..!

முத்தரசு said...

49 ஒனு ஒண்ணு இருக்காமே என் அதை மக்களுக்கு விளக்கி பரப்பலாமே? நீங்க என்ன நினைக்கிறிர்கள்?

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி said...
49-ஒனு ஒண்ணு இருக்காமே என் அதை மக்களுக்கு விளக்கி பரப்பலாமே? நீங்க என்ன நினைக்கிறிர்கள்?]]]

அது இப்போ வேலைக்கு ஆவாது..! தோல்விக்கான வித்தியாசத்தைவிட அதிக ஓட்டுக்களை 49-ஓ பெற்றிருந்தால்தான் அரசியல்வியாதிகள் அதனைப் பற்றிச் சிந்திப்பார்கள். இல்லையெனில் ஆளும் கட்சியை எதிர்த்து அடுத்த நிலையில் இருப்பவருக்கு ஓட்டளிப்பதுதான் புத்திசாலித்தனம்..!