கலைஞர் கருணாநிதிக்கு கலை உலகப் படைப்பாளி விருது - பாராட்டு விழா நிகழ்ச்சிகள்..!

13-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தின் மக்கள் பட்டியலில் திரைப்படத்துறையினர் மட்டும் ஒரு விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையான சலுகைகளையும், செல்வாக்கையும், ஆதாயங்களையும் யார் கொடுத்தாலும் சரி.. அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடனமாட தமிழ்த் திரையுலகம் தயங்கியதே இல்லை.

இதோ சமீபத்தில் அப்படித்தான்... தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்திருக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கு 'கலை உலகப் படைப்பாளி' என்னும் விருதை கொடுத்து சந்தோஷப்பட்டிருக்கிறது திரையுலகம்.

ஒருவகையில் கலைஞர் தமிழ்ச் சினிமாவுக்கு செய்திருக்கும் சாதனைகள் குறிப்பிடத்தக்கவைதான். போற்றப்பட வேண்டியவைதான். அந்த வகையில் இந்த விருதுகூட அவருக்குப் பொருத்தமானதுதான்.

இன்றுவரையிலும்கூட விடியற்காலை முதல் நள்ளிரவுவரையிலும் அவர் உழைக்கின்ற உழைப்பு அசாத்தியமானது. ஆனால் அந்த உழைப்பின் பலன் யாருக்குப் போய்ச் சேர்கிறது என்பதில்தான் அனைவருக்குமே பலத்த கருத்து வேறுபாடு.

ஆனாலும் கலைஞர் தமிழ்ச் சினிமாவில் செய்திருக்கும் எழுத்துப் புரட்சியை மறுப்பதற்கில்லை. 1947-ம் ஆண்டு முதன் முதலாக அவர் 'ராஜகுமாரி' என்ற படத்துக்கு கதை-வசனம் எழுதி தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கினார். இப்போது அவர் கதை, வசனம் எழுதி வரும் 'பொன்னர் சங்கர்' அவரது 74-வது கலைப் படைப்பாகும்.

இதை மனதில் கொண்டும், எந்த வகையிலாவது முதல்வரைச் சந்தோஷப்படுத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆவல் கொண்டும், முதல்வருக்கு அவர் மனம் குளிர ஒரு விருதையும் கொடுத்து தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்டது பெப்ஸி அமைப்பு.

ஒரு பக்கம் இலங்கையில் ஈழத்து முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை இழிவாகப் பேசிய இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணனை சென்னையில் இருந்து வெளியேற்றும்படி இயக்குநர் சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இதே வேளையில்தான், கலைஞருக்கு இந்த விருது வழங்கும் விழாவும் நடந்தேறியிருக்கிறது.

பெப்ஸி என்றழைக்கப்படும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அகில இந்தியத் தொழிலாளர்கள் மாநாடு கடந்த 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக கலைஞருக்கு விருது வழங்கும்விழா கடந்த 9-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. பெப்ஸி அமைப்பில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் இந்த விழாவுக்குச் சென்றிருந்தேன்.

இந்த விருது வழங்கும் விழா கொஞ்சம் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது. காரணம் இயக்குநர் இமயம் பாரதிராஜா. சமீப காலமாக ஈழப் பிரச்சினையால் முதல்வரோடு முரண்பட்டு நின்றிருந்த இயக்குநர் இமயம், இந்த விழாவுக்கு வருவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. நிகழ்ச்சி முன்னேற்பாடுகளில் அவருடைய தலை தெரியவில்லை என்றாலும், இயக்குநர் இமயத்தின் தளபதி அண்ணன் ஆர்.கே.செல்வமணி, விடுதலைப்புலிகளின் யூனிபார்மோடு எல்லா இடங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தது உண்மை. இருந்தாலும் நடுநிலைமையாளர்களுக்கு ஒரு நப்பாசை.. பாரதிராஜா போக மாட்டார் என்று...

ஆனால் விழாவின் துவக்கத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வின் ரத்தத்தின் ரத்தங்களான நடிகர்கள் விஜயகுமாரும், முரளியும் கலைஞரின் மருமகன் அமிர்தத்திடம் கொஞ்சிக் குலாவியதைப் பார்த்தபோது, நிச்சயம் பாரதிராஜாவும் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தேன். பொய்க்கவில்லை எனது நம்பிக்கை. மிகச் சரியான நேரத்தில் ஆஜரானார் இயக்குநர் இமயம்.

அவரவர்க்கு கஷ்டங்கள் வரும்போதுதானே அதிகாரத்தில் இருப்பவர்கள் துணை தேவை என்பதை நினைத்துப் பார்ப்பார்கள். அந்தவகையில், இதுநாள் வரையிலும் கலைஞரின் கோபாலபுரத்து வீட்டுப் பக்கம் தலைகாட்டிராத விஜயகுமார், இப்போது பத்திரிகைகளுடனான மோதல் சம்பவத்தில் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க நட்சத்திரக் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் கலைஞரை சந்தித்துவிட்டார்.

நடிகர் முரளியும் சப்தமில்லாமல் அம்மா கட்சியிலிருந்து ஒதுங்கி விலகி விட்டார் என்று சொல்கிறார்கள். இனிமேல் அதிகாரப்பூர்வமாக அம்மா கட்சியில் இருந்து 'கட்டம் கட்டிய' அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்போம். அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்த நடன இயக்குநர் ரகுராம், தற்போது கலைஞரின் பொன்னர் சங்கருக்கே டான்ஸ் மாஸ்டராக வந்துவி்ட்டதால் அவரும் தாவிவிட்டார் என்றே நினைத்துக் கொள்ளலாம். இனி அம்மா கட்சியில் மிஞ்சியிருக்கும் திரை நட்சத்திரங்கள் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனும், இயக்குநர் விசுவும், நடிகை விந்தியாவும்தான் என்று நினைக்கிறேன்..

அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தண்டாரம்பட்டு வேலு, நெப்போலியன், பொன்முடி என்ற கூட்டணி வந்திருந்தாலும் கலைஞரின் குடும்பத்தினர் ஒருவரும் வராததன் மர்மம் என்ன என்றுதான் புரியவில்லை..


இயக்குநர் இமயமும், இயக்குநர் சிகரமும் இரு புறமும் அமர்வதை முதலில் நீங்கள் உறுதி செய்தால்தான் முதல்வர் வருகை உறுதியாகும் என்று அரசுத் தரப்பில் இருந்து முன்கூட்டியே ஒரு செல்லமான எச்சரிக்கை பெப்ஸி நிர்வாகிகளுக்கு வந்ததாக ஒரு கிசுகிசு. ஏனெனில் எதுக்கெடுத்தாலும் விருதா.. என்ற முணுமுணுப்பும், சினிமா விருதுகள் தொடர்பான முணுமுணுப்பும் கலைஞர் காதுவரை எட்டியதால்தான் இந்த கண்டிப்பு என்கிறார்கள் பத்திரிகை நண்பர்கள்.

விழா 4.30 மணிக்குத் துவங்கும் என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும், அப்படி குறித்த நேரத்தில் துவங்கினால் நிகழ்ச்சிக்கு மரியாதை இல்லையே என்பதினால் கொஞ்சம் தாமதமாக 5.15 மணிக்குத் துவங்கியது. கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. அழைப்பிதழ்கள் முதல் நாள்தான் ரெடியானதால் சில சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுக்கு சரிவர கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். கேலரியில் பல இடங்கள் காலியாக இருந்தது..

முதல்வர் வருகிறார் என்பதால் காவல்துறையினர் கெடுபிடியால் புகைப்படக்காரர்களின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. ஒருத்தரைக்கூட ஒழுங்காக படம் பிடிக்க முடியாமல் போய்விட்டதாக கடைசியில் புலம்பிக் கொண்டே சென்றார்கள் புகைப்படக் கலைஞர்கள்.

மேடையின் ஒரு புறம் ஆணி அடித்தல்.. பெயிண்ட் பூசுதல்.. போர்டுகளை அடுக்குதல் என்று வேலைகள் நடந்து கொண்டேயிருக்க, மறுபுறம் மிருதங்க வித்வான் திரு.உமையாள்புரம் சிவராமன் தனது குழுவினருடன் தனது இசைக் கச்சேரியை ஒரு கால்மணி நேரத்திற்கு நடத்திவிட்டு சப்தமில்லாமல் எழுந்து போனார்.

அகில இந்தியாவைச் சேர்ந்த சினிமா விழா என்பதால் ஹிந்தியில் இருந்து மகேஷ்பட், சுபாஷ்கய், நடிகர் ராஜேஷ்கண்ணா, தெலுங்கில் இருந்து டி.இராமாநாயுடு, தாசரி நாராயணராவ், கன்னடத்தில் இருந்து நடிகை ஜெயந்தி, நடிகர் துவாரகீஷ், மலையாள உலகத்தில் இருந்து மெகா ஸ்டார் மம்மூட்டி, இயக்குநர் சிபிமலயில்.. மேலும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், மணிப்பூர் மாநில சினிமாவுலகின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் மகேஷ்பட், ரஜினி, மம்முட்டி, கமல், இளையராஜா, பாரதிராஜா, கே.பாலசந்தர், தாசரிநாராயணராவ், டி.இராமாநாயுடு, ஏவி.எம்.சரவணன், ராஜேஷ்கண்ணா, சுபாஷ்கய், அகில இந்திய பெப்ஸி தலைவர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.


நடிகை ஸ்ரீப்ரியா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மிகச் சரியாக மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே கலையுலகம், இதே நேரு ஸ்டேடியத்தில் இதே கலைஞருக்கு நடத்திய பாராட்டு விழாவின்போது, தனக்கு நேர்ந்த அவமானத்தால் அதன்பின் கலைஞர் சம்பந்தப்பட்ட விழா என்றாலே தலைவைத்துப் படுத்திராத ஸ்ரீப்ரியா, சமீபத்தில் பத்திரிகையாளர்களுடனான மோதலுக்குப் பின் வேறு வழியில்லாமல் கலைஞரின் கட்சிக்குத் திரும்பி வந்துவிட்டார்.

பத்திரிகையாளர்களின் புகார் மனுவில் முதல் பெயராக அவரே உள்ளதால் ஆட்சிக்கு நெருக்கம் காட்ட வேண்டி வந்திருப்பதாக காட்டமான பத்திரிகையாளர்கள் கூட்டம் முனங்கியது..

முதல் நபராக துதியை துவக்கி வைத்தார் இசைஞானி இளையராஜா.


பாடல் ஒன்றை ராகத்துடன் பாடி முடித்து தனது கடனை முடித்துக் கொண்டார். "தானாய் செதுக்கி, தானே கல்லாய், தானே உளியாய், தானே சிற்பமாய் உருவானவர் கலைஞர். நானும், நீயும் அவருக்கு என்ன செய்ய முடியும்..? மேலும் அவரது புகழ் பாடுவோம்" என்று புகழ் பாடினார்.

வரவேற்புரை நிகழ்த்த இப்போதைய 'கலையுலக பூசாரி' இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை அழைத்தார் ஸ்ரீப்ரியா.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்

"பேச்சு, எழுத்து, நிர்வாகம் இப்படி எதுவென்றாலும் அனைத்திலும் கலைஞர் முதல்வர்தான். பள்ளி பருவத்தில் எழுத தொடங்கியவர் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதற்காக எழுதிக்கொண்டு இருக்கிறார். வாழும் வரலாறாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டிற்கும், பாரத தேசத்திற்கும் நீங்கம் வழிக்காட்டியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கம். நான் வாழும் நாளும் சேர்த்து பண்ணன் வாழ்க.." என்றார்.

அடுத்துப் பேசிய பெப்ஸியின் தலைவர் வி.சி.குகநாதன் கலைஞரை 'விருதுக்கு அலைபவர்' என்று சொல்லியும், எழுதியும், கிண்டல் செய்தும் வருகின்றவர்களை ஒரு பிடிபிடித்தார்.

"இந்த விழா எடுப்பதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தேட வேண்டியது இல்லை. கலைஞரை உட்கார வைத்து பார்ப்பதற்கு எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதனாலேயே அவருக்கு நாங்கள் அடிக்கடி விழா எடுக்கிறோம். இதில் என்ன தவறு இருக்க முடியும்..?

விழா எடுக்கும் அளவிற்கு நிறைய சாதனைகளை நீங்கள் நிகழ்த்தி விட்டீர்கள். சாதனைகளுக்கே சாதனையாக நீங்கள் திகழ்ந்து வருகிறீர்கள். ஆனால் இதைக்கூட சிலர் கேலி செய்கிறார்கள். நலிந்த சினிமாவை தலை நிமிரச் செய்தவர் நீங்கள். உங்களுக்கு பட்டம் கொடுப்பது தவறா? அப்படியென்றால் அந்த தவறை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருப்போம்.

பராசக்தி படத்தில் 'நடைபாதைவாசிகள் நாடாள முடியாதா..?' என்று அப்போதே எழுதியவர் கலைஞர். அந்த வார்த்தைகள் இன்றைக்கு உண்மையாகிவிட்டது. ஈழத்து அகதிகளை நினைத்து அவர்களுக்காக கலைஞரிடம் பேசலாமா என்று நினைத்திருந்த நேரத்தில்தான், கலைஞரே 'அகதிகளுக்கு குடியுரிமை தர வேண்டும்' என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துவிட்டார். இப்படிப்பட்ட உண்மையான தலைவருக்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்..

எங்கள் கஷ்டங்களை தெரிந்தவர்கள் நீங்கள். இப்போதுகூட உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். சினிமா தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நீங்கள் இடம் ஒதுக்கி தர வேண்டும். எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது..." என்று எதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்து பேச வருபவர்களை சுருக்கமாகப் பேசி முடித்துக்கொள்ளும்படி ஸ்ரீப்ரியா சொல்ல பெரியவர் திரு.ஏவி.எம். சரவணன் அவர்கள், இதையே சாக்காக வைத்து நான்கே வரிகளில் தனது சிற்றுரையை முடித்துக் கொண்டார்.

கூடவே, "சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக வீடு கட்டும் காலத்தில் இருந்து முடியும்வரையிலும் மாதம் ஒன்றுக்கு ஒன்றே கால் லட்சம் ரூபாய் ஏவி.எம். நிறுவனம் சார்பில் நன்கொடையாக வழங்கப்படும்" என்று திடீர் அறிவிப்பையும் வெளியிட்டார். ஐயாவுக்கு எனது நன்றிகள்..

அடுத்து பேசிய தாசரி நாராயணராவ் தனக்குத் தமிழ் நன்கு தெரியுமென்றாலும் தான் தெலுங்கில்தான் மாடலாடப் போவதாகச் சொல்லி பாதி தெலுங்கு, காலவாசி ஆங்கிலம், கால்வாசி தமிழுமாகச் சேர்ந்து ஒரு காக்டெயில் கலக்கினார்.

இவரும் கடைசியாக 'பெப்ஸி ஊழியர்களுக்கு நிலம் வேண்டும்' என்ற எங்களது சங்க கோரிக்கையை முதல்வரிடம் முன் வைத்துவிட்டுச் சென்றார். இதை மட்டும் தமிழில் சொல்லி பலத்த கை தட்டலை அள்ளிக் கொண்டு சென்றார்.

நடிகர் விக்ரம் :

"தொழிலாளர்கள் இல்லாமல் நான் இல்லை. ஏனெனில் நானும் ஒரு தொழிலாளிதான். நடிகன் என்பதும் தொழிலாளி வர்க்கம்தான்..

எனக்கு தேசிய விருது கிடைத்த போது முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தவர் கலைஞர் ஐயாதான். அவர் போனில் பேசியவுடன் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. தடுமாறிப் போனேன்..

ஐயாவை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் கூர்மையானவை. காலத்திற்கு ஏற்றவாறு அமைந்து இருக்கிறது. தமிழக மக்களுக்காக நீங்கள் நிறைய செய்து இருக்கிறீர்கள். எங்களுக்கும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது..." என்றார்.

நிகழ்ச்சிகள் துவங்கிய பின்புதான் நடிகர் விவேக் அரங்கத்திற்குள் வந்தார். அவரைப் பேச அழைத்தவுடன் செம ரெஸ்பான்ஸ். தான் கையோடு கொண்டு வந்திருந்த பொன்னாடையை கலைஞருக்குப் போர்த்திவிட்டு தனது உரையைத் துவக்கினார்.

அனைவரையும் அரசியல் கட்சி பாணியில் 'அவர்களே' போட்டு அழைத்த விவேக் வழக்கம்போல ரஜினிக்கு மட்டும் நின்று, நிதானித்து பட்டப் பெயர்களைச் சூட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இரண்டு நாட்களாக தனது பெயர் பத்திரிகைகளில் பொரிகடலையாக வறுக்கப்பட்டதால், எடுத்த எடுப்பிலேயே கலைஞரை பத்திரிகைகளுடன் சம்பந்தப்படுத்தி தனது பேச்சைத் துவக்கினார் விவேக்.

"கலைஞர் சிறந்த பத்திரிகையாளர்.. பத்திரிகையாளர் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கலைஞர்தான்.." என்றார். தான் நடிக்க வந்து 22 வருடம் கழித்து இப்போதுதான் முதல் முறையாக அவருடைய வசனத்தில் 'பொன்னர் சங்கரில்' நடித்துக் கொண்டிருப்பதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

அடுத்து ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணாவை பேச அழைத்தார்கள்.

அவருடைய கையில் பொன்னாடையை கொடுத்து கலைஞருக்கு போர்த்தச் சொல்ல.. அந்தப் பொன்னாடையை விரித்து அரங்கத்தில் இருந்த அத்தனை பேருக்கும் அப்படியும், இப்படியுமாக காட்டிவிட்டு முதல்வருக்குப் போர்த்தினார் ராஜேஷ்கண்ணா. என்ன கிண்டல் என்று புரியவில்லை..?

ஆனால் ராஜேஷ்கண்ணா பேச்சில் வெளுத்துக் கட்டிவிட்டதாக பிறகு ரஜினி தன் பேச்சில் தெரிவித்தார்.

ராஜேஷ்கண்ணா 'வணக்கம்' என்பதை மட்டும் தமிழில் ஆரம்பித்து பின்பு முழுக்க, முழுக்க ஹிந்தியில் பொளந்து கட்ட.. பாஷை புரியாமல் கூட்டம் அமைதி காத்தது. ஆனாலும் பின்பு கலைஞரைப் பாராட்டித்தான் பேசுகிறார் என்பது புரிந்து கை தட்டி தீர்த்தது.

ராஜேஷ்கண்ணாவின் ஹிந்தி பேச்சை தாசரி கலைஞரின் பி.ஏ. சண்முகநாதனுக்கு மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ராஜேஷ்கண்ணாவின் முழு பேச்சின் மொழி பெயர்ப்பையும் அன்று இரவே அறிந்து கொண்ட கலைஞர், மறுநாள் ராஜேஷ் கண்ணாவை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டி நன்றி தெரிவித்தாராம்.

அடுத்தது மெகா ஸ்டார் மம்முட்டி :

'நமஸ்கார்' என்று ஆரம்பித்த இவரும் தொடர்ந்து மலையாளத்தில் பொளந்து கட்ட ஏமாற்றமானது கூட்டம். "நான் மலையாள நடிகர் மட்டுமல்ல. தமிழ் நடிகரும்கூட. தமிழ் திரையுலகத்தினர் கொடுத்து வைத்தவர்கள். கலைஞரை பெற்று இருக்கிறார்கள். உங்களுக்கு தமிழ் என்றால் உயிர். தமிழக மக்களுக்கு நீங்கள் என்றால் உயிர்.." என்று அவரும் உடன்பிறப்பாக மாறினார்.

கடைசியில் ஸ்ரீப்ரியாவை கலாக்க வேண்டி, "என்னை சுருக்கமாக பேசச் சொன்னதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.." என்று தமிழில் சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்துப் பேச வந்தார் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு.இராம.நாராயணன் :

"தாயினும் மேலாக என்னை வாழ வைத்து வரும் தங்கத் தலைவரே.. நீங்க நல்லா இருக்கணும்.. நாடு முன்னேற.." என்று எம்ஜிஆரின் பாடலைக் காட்டி வாழ்த்திவிட்டுப் போனார்.

அடுத்தது நடிகர் ராதாரவி :

"கலைஞருக்கு வாழ்த்துச் சொல்லி ரொம்ப நாளாச்சு.. சில சமயம் அடிபட்டாத்தான் தெரியும்.. எனக்கும் அப்படித்தான் தெரிஞ்சுச்சு.. தெளிஞ்சு வந்திருக்கேன்.." என்றார்.

பத்திரிகைகளுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு கமலஹாசனை நேரில் சென்று அழைத்தும், அவர் வராத கோபத்தை இங்கும் லேசுபாசாக குத்திக் காட்டினார் ராதாரவி.

"கலையுலகத்திற்கு ஒன்று என்றால் கலைஞர்தான் முன்னால் ஓடி வருகிறார். அவர் இருக்கிறார் என்பதால்தான் நாங்களும் தைரியமாக இருக்கிறோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட ஒரு கண்டனக் கூட்டம் நடிகர் சங்கத்துல நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு நிறைய கலைஞர்கள் வந்தும், பல கலைஞர்கள் வரவில்லை. என்றாலும் வராதவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. கலைஞர் இருக்கிறார் என்பதால் நான் எதற்கும் கவலைப்படமாட்டேன்.

என்னுடைய அப்பா அவ்ளோ பெரிய வீட்டைக் கட்டி வைச்சிட்டுப் போயிட்டார். அதுல இருக்குற ஒவ்வொரு செங்கல்லும் இங்கே இருக்கிற தொழிலாளர்களின் உழைப்பால் கிடைத்தது. அதனை நானும், என் குடும்பமம் மறக்கவில்லை. மறக்கவும் மாட்டேன். அந்த நன்றிக் கடனைச் செலுத்தத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்.." என்றார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா :

"உலகத் தலைவரே.. தமிழனத்தின் தலைவரே.. பிறப்பால், இனத்தால், மொழியால், உறவால் ஓருடலான அந்த ஈழத்தமிழருக்காக இதுவரையிலும் மவுனம் காத்தேன். கலைஞருக்காக இப்போது மவுனம் கலைக்கிறேன். இதற்கு காரணம் அவர் மீது கொண்ட அன்புதான். இது அவருக்குப் புரியும்.

அவர் உலகின் சிறந்த சாதனையாளர். இலக்கியவாதி.. ஞாபகசக்தியில் அவரை மிஞ்ச ஆள் இல்லை. சிறந்த நிர்வாகி.. சிறந்த முதல்வர்.. எளிமையானவர்.. மனிதர்களை நேசிப்பவர்.. உங்களுடைய உழைப்பின் ரகசியத்தை தமிழகத்து இளைஞர்களிடம் சொல்லுங்கள்..

அவருக்கும் எனக்கும் தந்தை, மகன் உறவு. மகன் மீது அவருக்கு கோபம் இருக்கலாம். அது பற்றி அவரிடம் நான் தனியாக பேசி தீர்த்து கொள்வேன்.

உலகத் தமிழர்கள் நீங்கள் நிறைய செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நானும் நம்புகிறேன். நீர் உள்ள அளவு, நிலம் உள்ள அளவு நீர் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.." என்றார்.

அடுத்து கவிதை பாட வந்தார் கவிஞர் பா.விஜய் :

"கோபாலபுரத்து குடி கொண்ட கண்ணன் கீதை கொடுத்தான்.. என் அண்ணன் வீட்டையே கொடுத்திருக்கிறான்.." என்ற ரீதியில் கவிதை மழை கொட்டியது.. கடைசியில் "கலைஞரே நீர் ஒரு திரீஷா" என்று சொல்லி முடிக்க செம கலகலப்பு.. "இதுவரையில் 2000 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் எந்தவொரு கதாநாயகியையும் நான் இதுபோல் வர்ணித்ததில்லை.." என்று தன்னிலைவிளக்கம் கொடுத்துவிட்டுப் போனார்.

நடிகர் விஜய் :


"தமிழ்நாட்டையும், தமிழையும் நம்முடைய முதல்-அமைச்சர் எவ்வுளவு நேசிக்கிறாரோ அந்த அளவிற்கு சினிமாவையும் நேசிக்கிறார். இங்கு நடக்கும் விழாவில் ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே கலந்து கொண்டு இருக்கிறது. இது போன்ற விழாவை நான் இப்போதுதான் பார்க்கிறேன். இந்த தருணத்தை சந்தோஷமாகவே நான் உணருகிறேன்..." என்று தனது கீச்சுக் குரலில் பேசிவிட்டுப் போனார்.

'உலக நாயகன்' கமலஹாசன் :

"தமிழக முதல்வர் அவர்களே..!

எங்கள் திரையுலகத்திற்கும் முதல்வர் நீங்கள்தான்.. என்னுடைய உலகத்தில், நான் அறிந்த உலகினிலே எனக்கு தெரிந்த முதல் கலைஞன் நீங்கள்தான். இவை மேடை அலங்காரத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல. இது என் வாழ்க்கையின் நிஜம். இங்கே தயாரிப்பாளர் சரவணன் இருக்கிறார். அவர் என்னிடம் 'வசனம் பேச வருமா..?' என்று கேட்ட போது நான் பேசி காண்பித்த வசனம் உங்களுடைய வசனம்தான். அப்போது அது உங்களுடைய வசனம் என்றுகூட தெரியாத வயது எனக்கு. சொல்லி கொடுத்தார்கள். திருப்பிச் சொன்னேன். அதனால் ஒரு பதவி கிடைத்தது எனக்கு..

அதற்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜிகணேசனிடம் அழைத்து சென்று 'இந்தக் குட்டி பையன் கலைஞர் வசனத்தை பேசுகிறான்..' என்றார். உடனே அவர் என்னிடம் 'எவ்வளவு சொல்வாய்..?' என்றார். நான் அவரிடம் 'முழுவதுமாக சொல்கிறேன்' என்றேன். உடனே அவர், 'யப்பா எனக்கே கஷ்டம்ப்பா நீ எப்படி சொல்ல போற..?' என்றார். 'சொல்லிக் காட்டுகிறேன்..' என்றேன். உடனே அவர் 'எங்க சொல்லிக் காட்டு. பார்ப்போம்...' என்றார்.

ஏதோ என்னுடைய மழலை மொழியில் நான் சொன்னபோது என்னை அவர் மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். அவரது மடியில் ஏறி அமர காரணமாக இருந்தது உங்களின் வசனங்கள். பிறகுதான் தெரிந்துகொண்டேன் அவர் அரங்கேறக் காரணமாக இருந்ததே உங்கள் வசனங்கள்தான் என்று.

இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் வந்து இருக்கிறீர்கள். இது எங்களுக்கும் தெரியும். இதை சொல்லி எனக்கு பெருமை தேடிக்கொள்கிறேன். ஒரு நாள் என்னை வீட்டுக்கு அழைக்கிறீர்கள். 'கமல் நீ பத்மஸ்ரீ' என்றீர்கள். 'சரி ஐயா' என்றேன். அதன் பிறகு கொஞ்சநாள் கழித்து எனனை மீண்டும் அழைக்கிறீர்கள். 'நீ கலைஞானி' என்கிறீர்கள். 'சரி ஐயா' என்கிறேன்.

இப்படி படிப்படியாக எனக்கு என் உழைப்புக்கு மார்க் போடும் வாத்தியாராக இருந்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு கட்டத்திலும் என் வாழ்க்கையில் ஒவ்வொரு புகழ் சேரும் போது உங்களிடம் மண்டியிட்டு என் பெருமையைச் சொல்லிப் புளகாங்கிதப்பட்டிருக்கிறேன். நீங்களும் அதற்கு இணையாக ஆனந்தப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மேடையில் சொன்னீர்கள். நான் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் ஆறி இருக்காது என்று. அது ஆறப் போவதில்லை.. அது என் மனதில் என்றும் ஈரமாக இருந்துகொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட உங்களுக்கு பட்டமளிக்கும் விழாவில் நான் என்ன பேசப் போகிறேன்..? எனக்கு பட்டமே நீங்கள்தான். எங்கள் பட்டமே நீங்கள்தான்..

வழக்கமாக இந்த மாதிரி விழாக்களில் உங்களுக்கு உங்களுக்கு பாராட்டுக்களை சொல்லி விட்டு எங்களுக்கு தேவையான குறைகளையும் அல்லது தேவைகளையும் சொல்வோம். அது நிறைவேற்றப்படும். உங்களை 'கோபாலபுரத்து கண்ணன்' என்று இங்கே பேசினார்கள். இப்படி அவலை அள்ளி அள்ளித் தந்து கொண்டிருக்கிறீர்கள். யாருமே தடுக்க ஆளில்லை. ஏனென்றால் முடிவு செய்வது நீங்கள்தான். உங்கள் கஷ்டம்.. நீங்கள் நல்லது செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

இப்போதுகூட சமீபத்தில் எனக்கு ஒரு புதிய பதவி. 'பிக்கி பிரண்ட்ஸ்' என்று. மும்பையில் மட்டுமே நடந்து கொண்டிருந்த ஒரு தொழில் ஆய்வு, நிகழ்வு இங்கும் நடக்க நாங்கள் போராடிப் பெற்று அதற்கு என்னை சேர்மன் என்று நியமித்தார்கள். அந்தப் பட்டத்தையும் உங்களிடம்தான் முதலில் வந்து காட்டினேன். அந்த விழாவுக்கும் நீங்கள் வர வேண்டும் என்று அழைக்க வந்தேன். இங்கு இருக்கும் அரங்கத்தில் பலர் அங்கும் இருப்பார்கள். உங்களைப் பாராட்ட இப்படி பல அரங்குகள் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த அரங்கத்தில் மற்றவர்கள் பாராட்ட, இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருக்கும் அருகதை மட்டுமே எனக்கு இருக்கிறது.." என்றார்.

(அண்ணன் கமலஹாசனின் இந்த ஒப்புதல் பேச்சின் மூலம் பத்மஸ்ரீ விருதுகளெல்லாம் எங்கிருந்து, யாரால், எப்படி, எதற்காக கொடுக்கப்படுறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.)

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் :

"இந்தித் திரைப்பட நடிகர் ராஜேஷ்கண்ணா அவர்களே.. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மேடையில் உங்களை நான் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மும்பையில் நான் உங்களோடு இருன்த காலத்தில் பழகியதையெல்லாம் மறந்துவிடவில்லை. என்னிடம் காட்டிய அன்பையும், பரிவையும் நான் மறந்துவிடவில்லை. நீங்கள் பேசுவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த அளவுக்கு உரை நிகழ்த்துவீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு என் பாராட்டுக்கள். (இதை மட்டும் ராஜேஷ்கண்ணாவுக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் சொன்னார்)

இங்கே எல்லாத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறீர்கள். தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகள் இல்லை. முதலாளிகளுக்கு பலவிதமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தொழிலாளிகளிலே ஒரே விதமானவர்கள்தான் உண்டு. அதுதான் உழைக்கும் வர்க்கம்.

கிடைக்கிற லாபத்தில் 100 சதவீதத்தையும் எடுத்துக்கிற முதலாளி 'கொள்ளைக்கார முதலாளி'. 75 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 25 சதவீதத்தை தொழிலாளிகளுக்கு கொடுக்கிறவன் 'திருட்டு முதலாளி'. 50 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 50 சதவீதத்தை கொடுக்கிறவன் 'வியாபாரி முதலாளி'. 25 சதவீதத்தை எடுத்துக்கிட்டு 75 சதவீதத்தை தொழிலாளிகளுக்கு கொடுக்கிறவன் 'மகா முதலாளி'. 100 சதவீதமும் கொடுக்கிறவன் 'ஆண்டவன்' மட்டும்தான். நீங்க மகா முதலாளியும் ஆக வேண்டாம். கொள்ளைக்கார முதலாளியும் ஆக வேண்டாம். திருட்டு முதலாளியும் ஆக வேண்டாம். 50 சதவீதம் தொழிலாளிகளுக்கு கொடுங்க. நானும் தொழிலாளியாக வந்து முதல்வரிடம் இடம் கேட்கிறேன். (இந்த ஒரு பாரா மட்டும் 'முரசொலி'யில் வெளியான ரஜினியின் பேச்சில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

ஜெயலலிதா ஒருமுறை ஒரு இடத்தை உங்களுக்கு கொடுத்தாங்க. ஆனா நீங்க அதை கைவிட்டுட்டீங்க. அது இப்ப டைமண்ட். இப்போது இடத்தை தள்ளிக்கொடுத்தாகூட அதை நீங்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள். வாங்கிக்குங்க..

இங்க கலைஞருக்கு பாராட்டு விழா. அவருக்கு விருது கொடுத்து இருக்காங்க. அவருக்கு என்ன விருது கொடுத்திருக்காங்க. கலை சேவைக்காக இங்கே எல்லோரும் அவரை பாராட்டியிருக்காங்க.

'மாற்றான் வீட்டு தோட்டத்து மல்லிகை பூவிற்கும் மணம் உண்டு' என்று சொன்ன தலைவர், அந்த தலைவன் போட்ட தோட்டத்துக்கு ஒரு காவலாளியாக இருந்து, வேலியாக இருந்து தோட்டக்காரனா இருந்து எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வலிகள், எத்தனையோ துன்பங்களைத் தாண்டி அந்த தோட்டத்தை நல்ல வனமாக்கி பெரிய பெரிய அரசியல் கட்சிகளே வந்து இந்த தோட்டத்தில் வந்து அமர செய்தவரை நான் எப்படி பாராட்ட? அந்த அண்ணா விட்டுப் போன கழகத்தை எப்படி வளர்த்து இருக்கீங்க..! அதற்கு என்ன மூலதனம்..? என்ன ஆணிவேர்? அது உங்களுடைய எழுத்தில்லையா? உங்களுடைய பேனா இல்லையா..?

இங்கே பேசியவர்கள் எல்லாம் உங்களுடைய 'பராசக்தி பத்தியே பேசுறாங்க... பேசுறாங்க..' என்றால் எதனால்? கம்பரைப் பற்றிபேசும்போது ராமாயணத்தைப் பற்றிதான் சொல்லமுடியும். வள்ளுவரை பத்திபேசும்போது குறளை பற்றிதான் சொல்லமுடியும். கலைஞர்ன்னா 'பராசக்தி' பற்றிதான் பேசுவோம். ஏனென்றால் பராசக்தி படம் இல்லை.. பாடம். சமுதாயத்தில் புரட்சி உண்டாக்கிய படம் 'பராசக்தி'.

மனோகரா திரைப்படம் எடுக்கும்போது கலைஞரே சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தில் மனோகரன் இரும்புச் சங்கிலியை உடைத்து வெளியே அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் அவர்கள் எல்லாம் கலைஞர்களிடம் சொன்னார்களாம். இரும்புச் சங்கிலியை உடைத்துவிட்டு வருவது மனித சக்தியால் முடியாது. கடவுளிடம் பிரார்த்தனை செய்யணும். கடவுளிடம் முறையிடுவது போல ஒரு பாட்டை போட்டு, கடவுள் சக்தியாலே அந்த இரும்புச் சங்கிலியை உடைத்துவருவது போல காட்சியமைக்கலாம் என்று கலைஞரிடம் சொன்னபோது, கலைஞர் சொன்னாராம், "அந்தக் கடவுள் சக்தி என்ன கொடுக்கிறது? அதை நான் எழுத்தில் கொடுக்கிறேன்.." என்றாராம்.

என் எழுத்திலே கொடுக்கிற கடவுள் சக்தியை என் மனோகரா படத்தில் ஒவ்வொரு வசனத்திலும் கொடுக்கிறேன் என அந்தச் சக்தியை கொடுத்தார். அந்த வசனத்தை கண்ணாம்பா பேச கலைஞர் எழுதிய வசன வார்த்தைகள் வந்து விழும்போது அந்த இரும்புச் சங்கிலி தானாக உடைஞ்சுபோச்சு. ஜனங்க அதை பார்த்தாங்க. ஆமாம்.. அந்த சக்தி அந்த இடத்தில் வந்துவிட்டது. அந்த மாதிரி அவர் எழுதுகோலை செங்கோலாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. நீங்கள் ஒரு மிகப் பெரிய சாணக்கியர். உண்மையைத்தான் சொல்கிறேன்.. நான்கூட லேட்டாதான் புரிஞ்சுக்க முடிஞ்சது..

கலைஞர் இப்படி உழைக்கிறார்.. இப்படி உழைக்கிறார் என்று பேசுகிறார்கள். அதிலே பெரிய அர்த்தம் இருக்கிறது. ஒரு தலைவர் பறந்து போனால் தொண்டன் ஓடி வருவான். தலைவர் ஓடி வந்தால் தொண்டன் நடப்பான். தலைவர் நடந்தால் தொண்டன் உட்காருவான். தலைவர் உட்கார்ந்தால் தொண்டன் தூங்கிருவான். தலைவர் தூங்கிவிட்டால், தொண்டன் காணாமல் போய்விடுவான். தொண்டனுக்காக நீங்கள் உழைக்கிறீர்கள். தொண்டனாக ஓடி, ஓடி உழைக்கிறீர்கள். அப்படி ஓடி ஓடி உழைக்கும்போது உங்களுக்கு ஓய்வு வேண்டும். அதுதான் உங்கள் எழுதுகோல். உங்கள் எழுத்து.. அந்த எழுத்துக்காக இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்..."

என்று சொல்லித் தன் உரையை முடித்துக் கொண்டார் ரஜினி.

நிகழ்ச்சிகளின் இடையிடையே...

ஆந்திரா

மேற்குவங்கம்


கர்நாடகா

மும்பை

ஆகிய மாநில சம்மேளன நிர்வாகிக கலைஞருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

தமிழ் சினிமா இயக்குனர்கள் சார்பில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, எஸ்.பி.முத்துராமன், விக்ரமன், தரணி, எழிலன், பார்த்திபன்


நடிகர்கள் சங்கம் சார்பில் ராதாரவி, விஜய், விக்ரம், விஷால், கார்த்திக், சந்திரசேகர், விஜயகுமார்

நடிகைகள் சார்பில் திரிஷா, சுனைனா,

இராம.நாராயணன் தலைமையில் தயாரிப்பாளர்கள்

உட்பட ஏராளமானவர்கள் கலைஞருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

தொடர்ந்து பெப்ஸியின் அகில இந்திய நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து "கலை உலகப் படைப்பாளி" என்று பட்டத்தை 1001-வது பட்டமாக வழங்கினார்கள்.

மாநாட்டு சிறப்பு மலரை சினிமா கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து வெளியிட, அதனை கலைஞர் பெற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்றினார்.

கலைஞர் மு.கருணாநிதி :

"இங்கு தம்பி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசும்போது, 'கடந்த கால ஆட்சியில் வழங்கப்பட்ட நிலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போதாவது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். நான் அந்த நிலத்தை பற்றி எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் எப்போது வரும் என்று என்னால் ஆரூடம் கணிக்க முடியாது.

ஆனால் கடந்த சில நாட்களாக தம்பி குகநாதனும், மற்ற நண்பர்களும் என்னை சந்தித்து, இந்த நிகழ்ச்சிக்கு முன்பே திரைப்பட தொழிலாளர்களுக்கு வாழ வீடு, வசிக்க குடில் தேவை என்பதை வற்புறுத்தி சொல்லியிருக்கின்றார்கள். அது என்னுடைய இதயத்தில் சிறிதளவும் மாறாமல் மறக்க முடியாமல் பதிந்திருக்கிறது. அதை நிறைவேற்றி அவர்களுடைய முகத்தில் எல்லாம் புன்னகையை வரவழைப்பதுதான் என்னுடைய கடமை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இதைப்பற்றி சொல்ல வேண்டுமேயானால், ஆந்திரத்திலே திரைப்படத் தொழிலாளர்களுக்காக சித்திரபுரி என்ற ஒரு பகுதியை 'ஆந்திர பிரதேஷ் சினி ஒர்க்கர்ஸ் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட்' என்ற நிறுவனத்தின் மூலமாக மிக அழகான வீடுகளை கட்டி பலரும் வாழ்வதற்கு ஏற்ப வசதிகள் செய்து ஐதராபாத் மணிகொண்டா என்ற இடத்தில் பிரபாகர் ரெட்டி சித்திரபுரி அமைக்கப்பட்டு அதனுடைய மாடலை சிலர் நேற்று என்னிடத்தில் காட்டினார்கள்.(அந்த மாடலை மேடையில் காட்டினார் கலைஞர்)

இதைப் பார்த்தவுடன் நான் அவர்களிடத்திலே சொன்னது இதைப் போல நம் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டில் கட்டித் தரலாமே என்று சொன்னேன். இதில் எனக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு உதாரணமாகத்தான், சொன்னதோடு நிற்காமல் இதை இங்கே கொண்டு வந்து, குகநாதனிடமும் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் தலைவர்களிடத்திலும், திரைப்படக் கலைஞர்களிடத்திலும் காட்ட வேண்டுமென்பதற்காகவே வீடுகள் அடங்கிய அந்தப் புகைப்பட அட்டையை எடுத்துக்கொண்டு வந்தேன்.

இதை நான் உங்களிடம் இப்போது காட்டியிருக்கிறேன். அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு - சில காலத்திற்குப் பிறகு, இன்னொரு தேர்தல் வருவதற்கு முன்பேயே(கலைஞர் கொஞ்சம் இடைவெளிவிட.. கூட்டம் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்து ஓய்ந்தது) - 'சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்' என்ற அந்த என்னுடைய முழக்கத்தை- மெய்ப்பித்துக் காட்டி - அந்த இல்லங்களின் திறப்பு விழா இன்றைக்கு இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற அத்தனை பேரையும் கொண்டு - இவர்களையெல்லாம் அழைத்து - இதே இடத்தில் நடைபெறும் என்பதையும் - அந்தத் திறப்பு விழாவிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டும் என்பதையும் இப்போதே அழைப்பாக நான் விடுக்க விரும்புகிறேன். வெகு விரைவில் இந்த கட்டிடங்கள் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

'சித்திரபுரி' என்ற பெயருடன் இங்கும் அமையுமா என்று கேட்பீர்களேயானால், 'சித்திரம்' வடமொழி என்பதால், அதற்குப் பதிலாக 'ஓவியம்' போன்றதொரு சொல்லைப் பயன்படுத்தி - ஓவிய உலகமாக அதனை அமைத்து - அதிலே என்னுடைய அருமைத் தொழிலாளர்களை அமரவைத்து அழகு பார்க்கின்ற காலம் விரைவில் வந்தே தீரும் என்பதை நான் தெரிவித்துக்கொம்கிறேன். இதற்கு நீங்கள் எதுவும் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது நன்கொடை வழங்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி கேட்கத் தேவையில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 'மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை' நீங்கள் அறிவீர்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் - ஒரு இன்சூரன்ஸ் திட்டம். இன்சூரன்ஸ் திட்டத்திற்கு 'பிரிமியம்' கட்ட வேண்டும். யார் இன்சூரன்ஸ் செய்துகொள்கிறார்களோ, அவர்கள்தான் அந்த பிரிமியத்தைக் கட்ட வேண்டும்.

இப்படி கட்டினால், அவர்களுக்கு தீராத நோய் அல்லது உயிர் கொல்கின்ற நோய் வரும் போது - அதற்குரிய செலவினை இந்த இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டு - அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பிரிமியத் தொகையை அரசாங்கமே ஏற்றுக் கொண்டு அவர்களை காப்பாற்றுகின்ற திட்டத்திற்குப் பெயர்தான் கலைஞர் காப்பீட்டு திட்டம்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 4000 அல்லது 5000 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளெல்லாம் நடைபெற்று அவர்களெல்லாம் நலமோடு இருக்கிறார்கள் என்ற செய்தியை உங்களுக்கு நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த திட்டம் ஆந்திராவிலே இருப்பதாக இங்கே பேசிய நம்முடைய தாசரி என்னிடத்திலே சொன்னார்கள். அந்த திட்டத்திற்கு பிரிமியம் - ஒவ்வொரு பயனாளியும் கட்ட வேண்டும். ஆனால் இந்த திட்டத்திலே - தமிழகத்திலே அந்த பிரிமியம் தொகையை அரசே கட்டிவிடும் என்று திட்டம் வகுத்து அது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆண்டு ஒன்றுக்கு 572 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் அந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தொழிலாளர்களின் உயிர் காத்தல் மட்டும் போதாது, உயிர் காக்க அவர்களுடைய உடைமைகளையும் காக்க வேண்டும், அவர்களுடைய உடைமைகளைக் காக்க அவர்களுடைய உறையுளும் காக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட உறையும் அமைய நிச்சயமாக என்னுடைய தலைமையிலே உள்ள தி.மு.க. அரசு பாடுபடும் என்ற வாக்குறுதியை இவ்வளவு பேர் மத்தியிலே பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியிலே என்று மாத்திரம் சொல்ல மாட்டேன் - இந்திய மக்கள் மத்தியிலே இன்றைக்கு நான் சொல்லியிருக்கின்றேன்.

நான் கடந்த சில நாட்களாக மதுரையில், கோவையில், திருச்சியில் பேசும்போது - எங்கம் கட்சி இப்போது வளருகின்ற வேகத்தைப் பார்த்தால் விரைவில் இது தேசிய இயக்கமாக மாறும் என்று சொன்னேன். முதன் முதலாக கலையுலகத்திலே நாங்கள் தேசிய இயக்கமாக மாறி இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த விழா இங்கே நடைபெறுவதாக நான் அறிகின்றேன்.

இந்த தேசியத்தில் எவ்வளவு இனிமை இருக்கிறது. இந்த தேசியத்தில் எவ்வளவு கலை உணர்வு இருக்கிறது, நான் ராஜேஷ் கன்னாவின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அவரிடம் ஒரு தனி அபிமானம் உண்டு. இன்றைக்கு அவருடைய பேச்சைக் கேட்கும் போது அவரா, இவர் என்று பாரதிராஜாவைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். காரணம் அந்த அளவிற்கு வயது முதிர்ந்திருந்தாலும், முதுமை அவரைத் தாக்கியிருந்தாலுங்கூட, அந்த குரல் இன்றைக்கும் என்னுடைய நண்பர் சிவாஜியின் குரலாகவே இருப்பதைப் பார்த்தேன்.

அத்தகைய ராஜேஷ்கன்னாக்களை இன்று மலையாளத்திலே பிரபல நட்சத்திரமாக விளங்குகின்ற மம்முட்டியை இங்கே சந்திக்கும் இந்த நேரத்தில் - நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

ரஜினிகாந்தை, கமல்ஹாசனை பற்றியெல்லாம் நான் கூற வேண்டாம். அவர்களைப் பற்றி நான் சொல்வது - என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொள்வதைப்போல! அப்படியென்றால் மற்றவர்களைப் பற்றி நீ வேறுபடுத்தி புகழ்கிறாயா என்று யாரும் எண்ணிக் கொள்ளக் கூடாது. என்ன இருந்தாலும் அவர்கள் என்னுடைய உணர்வோடு-என்னுடைய உறவாக-தமிழகத்திலே-திரையுலகத்திலே-அந்த நட்பின் சின்னங்களாக அவர்கள் விளங்குகின்றார்கள்.

கமல்ஹாசன் ஆனாலும், ரஜினிகாந்த் ஆனாலும் அவர்களெல்லாம் இன்றைக்கும் கலை உலகத்திலே இரு கண்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மற்றவர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக்கூடாது. உடல் என்றால் கண்கள் மாத்திரமல்ல, வேறு பல முக்கிய அவயங்களும் இருக்கின்றன. அந்த அவயங்களை நான் சொன்னதாக நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லோரும் ஒருமித்த கருத்தோடு-அந்த உணர்வோடு இங்கே கூடி இந்த விழாவினை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இங்கே நான் இரண்டு அறிவிப்புகளை செய்ய வேண்டுமென்று வந்தேன்.

முதல் அறிவிப்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், விரைவில் கட்டித் தரப்படும் என்று சொன்னேன். என்ன திடீரென்று சொல்கிறாய் என்று நினைக்கக் கூடாது. காலையிலே நிதித்துறை செயலாளரை அழைத்துப் பேசி பணம் ஒதுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை மறந்துவிடக்கூடாது.

இதற்கான இடத்தை பார்க்க வேண்டியது குகநாதனின் வேலை. திரைப்படத் தொழிலாளர்களின் வேலை. அந்த பணியினை அவர்கள் ஆற்றினால் உடன் இருந்து அதை நிறைவேற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இன்னொன்று-தமிழகத்திலே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்தில் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கம் உருவாக்கப்பட்டு-அந்த வாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் - தமிழ்த் திரையுலக வளர்ச்சியிலும், அதன் வாழ்விலும் பல்வேறு நிலைகளில் தங்களது உழைப்பை நாளும் அளித்திடும் கலை உலகத்தினருக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும், தமிழ் திரை உலகின் சார்பிலும் தம்பி ராதாரவி அளித்த கோரிக்கையினை ஏற்று - இந்த அரசு சின்னத்திரை துறையினருக்கும் சேர்த்து - திரைப்படத் துறையினர் நலவாரியம் ஒன்றை புதிதாக உருவாக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழைத்தீர்கள்; வந்தேன். விருது வழங்கினீர்கள். இந்த விருதினை வழங்கும்போது குகநாதன், 'உனக்கென்ன, விருது ஒரு கேடா..?' என்று யார் யாரோ கேட்டதாக சொன்னார். நான் அப்போதே பாரதிராஜாவிடம் சொன்னேன் - வேண்டாம் என்று..! 'சொன்னவர்களைப் பற்றியெல்லாம் இங்கே சொல்ல வேண்டாமே?' என்றேன். இருந்தாலும் அவர் பேசிவிட்டார்.

நான் எப்போதும் இது போன்ற விமர்சனங்களை பற்றி விமர்சிப்பது எனக்கு வழக்கம் இல்லை. அப்படி விமர்சிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால், பெரியார் படாத பாடா? காமராஜர் படாத பாடா? அண்ணா படாத பாடா? இவர்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, இன்னும் பாக்கியிருக்கின்றது நமக்கு படவேண்டிய பாடுகள் என்று எண்ணிக் கொள்வேனே தவிர, அதற்காக நான் வருத்தப்படமாட்டேன்.

அப்படியே எனக்கு வருத்தம் இருந்தாலும், நீங்கள் தருகின்ற இந்த மகிழ்ச்சி - நீங்கள் வழங்குகின்ற இந்த விருதுகள் எல்லாம் - அந்த வருத்தத்தைப் போக்க வல்லவை. போக்கக்கூடிய மருந்துகள் என்பதை நான் மிக மிக நன்றாக அறிவேன். இந்த மருந்தை எனக்களித்து என்னுடைய பயணத்திலே களைப்பு ஏற்படாமல் என்னை நடக்கச் செய்கின்ற உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை-ஆயிரமாயிரம் நன்றியை உங்கம் காலடியிலே குவித்து விடைபெறுகிறேன்..."

என்று சொல்லித் தனது பேருரையை முடித்துக் கொண்டார்.

கலைஞரின் பேச்சுக்குப் பிறகு கலைஞர்கள் விடைபெற்ற சமயத்தில் பாரதிராஜாவை தனியே பிடித்து உலுக்கியெடுத்துவிட்டார் அண்ணன் கமலஹாசன். தனக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தது ஏன் என்று மேடைக்கு கீழே நின்றவர்களுக்குக் கேட்கின்ற அளவுக்கு சப்தமிட்டு கமல் கேட்க.. கமலை என்னென்னவோ கூல்செய்து பார்த்தும் முடியாமல் கமல் முறைத்தபடியே நிற்க.. அப்படியே கமலை கட்டியணைத்து கன்னத்தில் ஒரு கிஸ் கொடுத்து சமாளித்தார் பாரதிராஜா.

கலைஞரால் ஒன்றரை மணி நேரம்தான் உட்கார முடியும்.. அதற்குள்ளாக விழாவை நடத்தி முடித்துவிடுங்கள் என்று முதல்வரின் மருத்துவர்கள் முதல் நாளே கண்டிப்பான உத்தரவை விழா அமைப்பாளர்களிடம் தெரிவித்திருந்ததால், எப்போதும் விழாவின் துவக்கத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், இந்த விழாவில் தலைகீழாக கடைசியில் நடைபெற்றது.

பேசி முடித்ததும் பெருந்தலைகள் அனைத்தும் சென்றுவிட ரசிகர்கள் கூட்டத்திற்காக மட்டுமே கலைநிகழ்ச்சிகள் நடந்தேறின.

கலை நிகழ்ச்சிகள் அனைத்துமே கலைஞர் டிவியின் Concept என்பதால் அத்தனையும் கலைஞர் புராணங்களை பாடின. இந்தக் கொடுமையால் சீக்கிரத்தில் கூட்டம் கலையத் துவங்க.. கலை நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் பெரிய ஈடுபாடு இல்லாமல் போனதென்னவோ உண்மைதான்..

கலைஞரின் இந்த நிலம் பற்றிய பேச்சால் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பு கூடியிருக்கிறது. நன்றிப் பெருமூச்சுக்களால் கோடம்பாக்கம் மூச்சுத் திணறிப் போயிருக்கிறது.

இந்த இடத்தில் நானும் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்தவன் என்பதால் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. தொழிலாளர்கள் என்பவர்கள் தினம்தோறும் 300 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள்தான் என்பதால், அவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இடம் பார்க்க வேண்டிய வேலை பெப்ஸியின் தலைவர் குகநாதனின் பொறுப்பு என்று முதல்வர் சொல்லிவிட்டதால், பெப்ஸியின் நிர்வாகிகளும், பெப்ஸியில் இணைந்துள்ள சங்கங்களின் நிர்வாகிகளும் இடம் தேடி சென்னை புறநகர்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

நேரு ஸ்டேடியத்தைவிட பத்து மடங்கு பரப்பளவுள்ள இடம் எங்களுக்காக தேவை..

பதிவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அந்த அளவுக்கு பெரிய புறம்போக்கு இடங்கள் இருந்தால் சொல்லுங்கள்.. இடம் தேர்வானால், பதிவர்களையும் 'கொஞ்சூண்டு' கவனிக்க ஏற்பாடு செய்கிறேன்..

நிறைய வேலைகள் இருந்ததால், உடனுக்குடன் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்..

பொறுமையாக கடைசிவரை படித்து முடித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள் காணிக்கையாகட்டும்..!

81 comments:

ரவி said...

மொத்தமாக 30 நிமிசம் ஆச்சு படிக்க. அண்ணே. பத்து இடுகைகளாக பிரித்து போட்டிருக்கலாம்...

டவுசர் பாண்டி... said...

இந்த பதிவை டைப்ப உதவிய அந்த கீ போர்டுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said...

பெப்ஸி சங்கதுல எப்படி சேரநும்னு கொஞ்சம் சொல்லி குடுங்க அண்ணே!! உங்க தயவுல ஒரு வீடு கிடைக்கும்

ராஜ நடராஜன் said...

//இன்றுவரையிலும்கூட விடியற்காலை முதல் நள்ளிரவுவரையிலும் அவர் உழைக்கின்ற உழைப்பு அசாத்தியமானது. ஆனால் அந்த உழைப்பின் பலன் யாருக்குப் போய்ச் சேர்கிறது என்பதில்தான் அனைவருக்குமே பலத்த கருத்து வேறுபாடு.//

இடுகையை முடிச்சிட்டீங்க!இதுக்கும் கீழே கண்ணை துளாவினால் தூக்கம் வரும்.வருகிறேன்:)

ஜோ/Joe said...

அண்ணே! கவரேஜ் -ன்னா இது தாண்ணே!

ராஜ நடராஜன் said...

படிக்கவேயில்லை!அதுக்குள்ளே செந்தழல் ரவி 10 இடுகை சரக்குன்னு சர்டிபிகேட் கொடுத்திட்டாரு.ஒரு நாள் லீவு போட்டுட்டு கடையில உட்கார்ந்திட வேண்டியதுதான்:)

முக்கிய தகவல்:

இரண்டு பின்னூட்டங்களின் மேல் படி சொன்னது கூட்டத்தோட நானும் கோயிந்தா மாதிரி.

இடுகையின்னா இப்படி விலாவாரியா சொல்லத் தெரியனும்.அதனால மக்களின் பல்காட்டலை கண்டுக்காம உங்க ரூட்லயே பயணம் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

பொறுமையா உக்கார்ந்து முழுசா படிச்சுட்டேன் ;)

15 நிமிசத்துல இப்பல்லாம் உங்க பதிவு படிச்சுட முடியுது. (போட்டோவையும் சேர்த்து!)

பகிர்விற்கு நன்றி அண்ணே..!

மங்கை said...

இந்த கேள்விய கேட்டே ஆகனும்..

ஸ்கூல்ல இந்த short answers னு ஒன்னு இருக்கும்...அதுக்கு எப்படி பதில் எழுதுவீங்க...கட்டுரைய எழுத சொல்லி திருத்தின வாத்தியார் என்ன ஆனார்..

இதுக்கு பதில் சொல்லுங்க ஐயா...:))

பாலா said...

மதிப்பிற்குறிய உ.த அவர்களுக்கு,

என்னுடைய அலுவலகத்தில் 25Mbps இணைய இணைப்பு இருந்தும், இந்த பக்கம் லோட் ஆக 10-15 நொடிகள் எடுக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் வீடியோ பார்க்கலை அண்ணாத்த. உங்க பதிவே போதும்.

இன்னும் உங்க 1500 ரூபா கீபோர்ட் வேலை செய்யுதா?

மங்கை said...

First Information Report பாராட்டனும்...அதுக்காக இந்த பின்னூட்டம்...:)).. என்ன இருந்தாலும் நியாயம் னு ஒன்னு இருக்கனுமில்ல

ஜோ/Joe said...

என்னைய்யா பெரிய கலைஞரோட உழைப்பு ..இந்த பதிவு போடுறதுக்கு அண்ணனோட உழைப்பை யோசிச்சு பாருங்க :)

நானெல்லாம் முழுசா படிச்சேன் .உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...
மொத்தமாக 30 நிமிசம் ஆச்சு படிக்க. அண்ணே. பத்து இடுகைகளாக பிரித்து போட்டிருக்கலாம்...]]]

ஐயோ.. பத்தா போட்டா போரடிச்சிரும்பா..!

சென்ஷி 15 நிமிஷம்ன்றான்.. நீ 30 நிமிஷம்ன்றே..

எழுத்துக் கூட்டிப் படிச்சியா ராசா..?-))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[டவுசர் பாண்டி... said...
இந்த பதிவை டைப்ப உதவிய அந்த கீ போர்டுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.]]]

இப்படியெல்லாம் குதர்க்கமாகப் பேசி என்னையும், எனது உயிருக்கு உயிரான கீ போர்டையும் பிரிக்க நினைக்கும் உம்மை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Pinnottam said...
பெப்ஸி சங்கதுல எப்படி சேரநும்னு கொஞ்சம் சொல்லி குடுங்க அண்ணே!! உங்க தயவுல ஒரு வீடு கிடைக்கும்]]]

பெப்ஸில மொத்தம் 24 சங்கம் இருக்குண்ணே.. அதுல எதுல வேண்ணாலும் நீங்க சேரலாம். ஆனா துட்டுதான் இப்ப உசரத்துக்கு போயிருச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//இன்றுவரையிலும்கூட விடியற்காலை முதல் நள்ளிரவுவரையிலும் அவர் உழைக்கின்ற உழைப்பு அசாத்தியமானது. ஆனால் அந்த உழைப்பின் பலன் யாருக்குப் போய்ச் சேர்கிறது என்பதில்தான் அனைவருக்குமே பலத்த கருத்து வேறுபாடு.//

இடுகையை முடிச்சிட்டீங்க! இதுக்கும் கீழே கண்ணை துளாவினால் தூக்கம் வரும். வருகிறேன்:)]]]

அதுக்குள்ள தூக்கமா..? இப்படி இருந்தா நாடு எப்படி ஸார் முன்னேறும்..?

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...

பொறுமையா உக்கார்ந்து முழுசா படிச்சுட்டேன் ;) 15 நிமிசத்துல இப்பல்லாம் உங்க பதிவு படிச்சுட முடியுது. (போட்டோவையும் சேர்த்து!) பகிர்விற்கு நன்றி அண்ணே..!]]]

ஆஹா தம்பீ..

எனக்காக பதினைஞ்சு நிமிஷம் ஒதுக்கிருக்கியே..!

ரொம்ப, ரொம்ப நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...
அண்ணே! கவரேஜ்-ன்னா இதுதாண்ணே!]]]

ஹி.. ஹி.. ஹி.. தேங்க்ஸு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
படிக்கவேயில்லை! அதுக்குள்ளே செந்தழல் ரவி 10 இடுகை சரக்குன்னு சர்டிபிகேட் கொடுத்திட்டாரு. ஒரு நாள் லீவு போட்டுட்டு கடையில உட்கார்ந்திட வேண்டியதுதான்:)]]]

அவர் படிக்கலையா? நீங்க படிக்கலையா?

[[[முக்கிய தகவல்:
இரண்டு பின்னூட்டங்களின் மேல்படி சொன்னது கூட்டத்தோட நானும் கோயிந்தா மாதிரி. இடுகையின்னா இப்படி விலாவாரியா சொல்லத் தெரியனும். அதனால மக்களின் பல் காட்டலை கண்டுக்காம உங்க ரூட்லயே பயணம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.]]]

ஆஹா.. நம்ம லைனுக்கு வந்துட்டீங்களா..?

ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்கோ..!

உண்மைத்தமிழன் said...

[[[மங்கை said...

இந்த கேள்விய கேட்டே ஆகனும்..

ஸ்கூல்ல இந்த short answersனு ஒன்னு இருக்கும். அதுக்கு எப்படி பதில் எழுதுவீங்க. கட்டுரைய எழுத சொல்லி திருத்தின வாத்தியார் என்ன ஆனார்..?]]]

மங்கை அவர்களே..

பள்ளிப் படிப்பின்போது எப்படா எழுதி முடிச்சிட்டு வெளில வரலாம்னுதான் தோணும். அதுனால அங்கேயெல்லாம் சுருக்கம்தான்..

இங்க.. இடம் ப்ரீயா கொடுக்கிறதாலதான் அடிச்சுத் தள்ளுறேன்.. டாட்.காம் மாதிரி அளவு கூறினா பைசா கட்டணும்னு சொன்னாங்கன்னு வைங்க..

எல்லாமே ஒரு பக்க அளவு மேட்டர்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

மதிப்பிற்குறிய உ.த அவர்களுக்கு,

என்னுடைய அலுவலகத்தில் 256 Mbps இணைய இணைப்பு இருந்தும், இந்த பக்கம் லோட் ஆக 10-15 நொடிகள் எடுக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.]]]

மதிப்பிற்குரிய ஹாலிவுட் பாலா அவர்களே..

புகைப்படங்கள் நிறைய இருப்பதால் லோடு ஆக சற்றுத் தாமதமாகும்.. பொறுத்தருள்க..

[[[நான் வீடியோ பார்க்கலை அண்ணாத்த. உங்க பதிவே போதும்.]]]

போதும்.. போதும்.. வர்ற தீபாவளி அன்னிக்கு இது கலைஞர் டிவில ஒளிபரப்பாகும்னு நினைக்கிறேன். வாய்ப்பிருந்தா பாருங்க..

[[[இன்னும் உங்க 1500 ரூபா கீபோர்ட் வேலை செய்யுதா?]]]

என்ன இப்படி கேட்டுட்டீங்க.. என் உடன் பிறவா சகோதரனாச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[மங்கை said...
First Information Report பாராட்டனும். அதுக்காக இந்த பின்னூட்டம்...:)) என்ன இருந்தாலும் நியாயம்னு ஒன்னு இருக்கனுமில்ல]]]

ஆஹா.. என்னே ஒரு பாசம்..

மங்கைஜி.. சல்யூட்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...
என்னைய்யா பெரிய கலைஞரோட உழைப்பு. இந்த பதிவு போடுறதுக்கு அண்ணனோட உழைப்பை யோசிச்சு பாருங்க :) நானெல்லாம் முழுசா படிச்சேன். உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.]]]

உண்மைதான் ஜோ..

காலைல ஆரம்பிச்சது.. சாயந்தரம்தான் முடிஞ்சது.. எவ்ளோ வேலை..?

ம்.. ரொம்ப ரொம்ப நன்னி..!

ஜோதிஜி said...

உண்மை தமிழன் அவர்களே கீழே உள்ள மின்அஞ்சலுக்கு உங்கள் மின் அஞ்சலில் இருந்து ஒரு சோதனை மின் அஞ்சல் அனுப்ப வேண்டுகிறேன்.

தேவியர் இல்லம்
திருப்பூர்
\texlords@gmail.com/

வந்தியத்தேவன் said...

உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முதலாக இந்த நிகழ்வை ஒளிபரப்பும் போது பார்க்க சுவாரசியமாக இருக்காது, ஏனென்றால் உங்கள் பதிவே படம் பார்த்ததுபோல் இருந்தது.

Unknown said...

//பெப்ஸில மொத்தம் 24 சங்கம் இருக்குண்ணே.. அதுல எதுல வேண்ணாலும் நீங்க சேரலாம். ஆனா துட்டுதான் இப்ப உசரத்துக்கு போயிருச்சு..!//

அதுனால என்ன அண்ணே!!! வீடு ப்ரீயா கிடைக்கும் போது கொஞ்சம் காசு குடுத்தா தப்பு இல்ல

ஸ்ரீராம். said...

"இனி அம்மா கட்சியில் மிஞ்சியிருக்கும் திரை நட்சத்திரங்கள் இயக்குநர் விசுவும், நடிகை விந்தியாவும்தான் என்று நினைக்கிறேன்.."

ஏன் S.S. சந்திரன் என்ன ஆனார்?


பெப்சியில் சேர்ந்துதான் வீடு வாங்கணுமா என்ன? "அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம்... ஆனால் நீயோ சங்கப் பதிவு...."என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்...

முரளிகண்ணன் said...

அண்ணா அருமையான கவரேஜ்னா.
பகிர்விற்கு நன்றி.

\\அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம்... ஆனால் நீயோ சங்கப் பதிவு...."என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்..\\

அருமையான ஐடியாவா இருக்கே.

ச.பிரேம்குமார் said...

அண்ணே, எப்படிண்ணே உங்களால இப்படியெல்லாம் எழுத முடியுது? எனக்கெல்லாம் இரண்டு பத்தி எழுதுறதுக்குள்ள கண்ண கட்டுது

//"அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம்... ஆனால் நீயோ சங்கப் பதிவு...."என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்
//

ஸ்ரீராம் சொன்னத நானும் வழிமொழியுறேன். நாமளும் எப்போ தான் செட்டில் ஆகுறது?

உண்மைத்தமிழன் said...

[[[வந்தியத்தேவன் said...
உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முதலாக இந்த நிகழ்வை ஒளிபரப்பும்போது பார்க்க சுவாரசியமாக இருக்காது, ஏனென்றால் உங்கள் பதிவே படம் பார்த்ததுபோல் இருந்தது.]]]

என்ன இருந்தாலும் விஷூவலா பார்க்குற மாதிரி வராது வந்தி..!

அவசியம் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Pinnottam said...

//பெப்ஸில மொத்தம் 24 சங்கம் இருக்குண்ணே.. அதுல எதுல வேண்ணாலும் நீங்க சேரலாம். ஆனா துட்டுதான் இப்ப உசரத்துக்கு போயிருச்சு..!//

அதுனால என்ன அண்ணே!!! வீடு ப்ரீயா கிடைக்கும்போது கொஞ்சம் காசு குடுத்தா தப்பு இல்ல.]]]

வாங்க.. வாங்க.. அப்ப சீக்கிரமா ஏதாவது ஒரு சங்கத்துல சேர்ந்திருங்க..

இருக்குற சங்கத்துலேயே காசு குறைவானது திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்தான்.. வெறும் இருபதாயிரம் ரூபாய்தான் மொய்.. உடனே ஓடிப் போய் கட்டிட்டு மெம்பராயிருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

"இனி அம்மா கட்சியில் மிஞ்சியிருக்கும் திரை நட்சத்திரங்கள் இயக்குநர் விசுவும், நடிகை விந்தியாவும்தான் என்று நினைக்கிறேன்.."]]

ஏன் S.S. சந்திரன் என்ன ஆனார்?]]]

ஸோ ஸாரி.. மறந்து தொலைந்துவிட்டேன்..!

[[[பெப்சியில் சேர்ந்துதான் வீடு வாங்கணுமா என்ன? "அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம். ஆனால் நீயோ சங்கப் பதிவு. என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்...]]]

நல்ல ஐடியாவா இருக்கே.. அப்ப சங்கத்தைத் துவக்கிற வேண்டியதுதான்..

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

அண்ணா அருமையான கவரேஜ்னா.
பகிர்விற்கு நன்றி.

\\அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம்... ஆனால் நீயோ சங்கப் பதிவு...."என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்..\\

அருமையான ஐடியாவா இருக்கே.]]]

வருகைக்கு நன்றி முரளி..!

உண்மைத்தமிழன் said...

[[[ச.பிரேம்குமார் said...

அண்ணே, எப்படிண்ணே உங்களால இப்படியெல்லாம் எழுத முடியுது? எனக்கெல்லாம் இரண்டு பத்தி எழுதுறதுக்குள்ள கண்ண கட்டுது.]]]

நான் தொழில் முறையில் டைப்பிஸ்ட்டு பிரேம்.. அதுனால எனக்கு டைப்பி ரொம்ப, ரொம்ப ஈஸி.. நீங்களும் டைப்பி பண்ணி, பண்ணி பழகிட்டீங்கன்னா தானா வந்திரும்..!

//"அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம். ஆனால் நீயோ சங்கப் பதிவு" என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்//

ஸ்ரீராம் சொன்னத நானும் வழிமொழியுறேன். நாமளும் எப்போதான் செட்டில் ஆகுறது?]]]

-)))))))))))

NO said...

அன்பான நண்பர் திரு உண்மை தமிழன் அவர்களே,

My first comments are - such an amazing comprehension! Really good to read especially your comments inserted in between as சின்ன சின்ன ஊசிகள்!!!

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதை நான் படிக்க வந்தது உங்களை, வேலை வெட்டி இல்லாத நண்பரே, போயும் போயும் ஒரு சினிமா விழாவை பற்றி நாலு பக்கத்துக்கு அரைத்திருக்கிரீர்களே என்று திட்டுவதர்க்காகத்தான்!!!

அனால் நீங்கள் எழுதியிருப்போதோ ஒரு விதமான வஞ்சகபுக்ழ்ச்சி commentary என்பது புரிந்தது! Was really good.

ஒரு analogy ஒன்று சொல்லுகின்றேன்! சீசர்கள் ரோமாபுரியை ஆண்ட காலங்களில், ஆளும் வர்க்கத்தினர் (Ceaser and his senate) மக்களின் குறைகளை தீர்க்க முடியாத தங்களின் கையாலாகதனத்தை ஒரு விடயம் கொண்டு மூடி மறைத்து எல்லாம் நன்றாக உள்ளது போல தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்!

அந்த விடயத்தின் பெயர் - சர்க்கஸ்!!!

இந்த சர்க்கஸ் நாம் இன்று காணும் ஜெமினி சர்க்கஸ் அன்று! மனிதர் மனிதரை கொல்லும் போட்டிகள் , மிருகங்களும் மனிதர்களும் மோதிக்கொள்ளும் இரத்த பலிகள் போன்றவைக்கு சர்க்கஸ் என்றுதான் பெயர்! நீங்கள் Gladitor, Ben-Hur போன்ற படங்களில் இதை பார்த்திருப்பீர்கள்!

The point is, Ceaser and senate used to say, if the people have problems in their life, give them circus! So that the problems are forgotten and let the people dwell in this mindless, idiotic, and moronic entertainment!

தமிழகத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது - இப்பொழுது இல்லை, முப்பது நாப்பது வருடங்களாக!!!!

நன்றி

Anbu said...

நடக்கட்டும்..நடக்கட்டும்...

butterfly Surya said...

சூப்பர் கவரேஜ். கலைஞர் தொலைகாட்சியில் எதையெல்லாம் எடிட் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

கவரேஜ் பதிவுக்கு நீங்கள் என்றும் ஒரு சூப்பர் ஸ்டார்.

தீப்பெட்டி said...

அப்படியே நேர்ல பாத்த மாதிரி இருக்கு பாஸ்..

//பெப்சியில் சேர்ந்துதான் வீடு வாங்கணுமா என்ன? "அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம். ஆனால் நீயோ சங்கப் பதிவு. என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்...//

சீக்கிரம் அந்த ஆளப்பிறந்தவர்ட்ட பேசி சங்கம் ஆரம்பிச்சு கலைஞருக்கு என்ன விருது கொடுக்கலாம்னு முடிவு பண்ணுங்க பாஸ்..

ஷாகுல் said...

லைவ் கவரேஜ் பாத்த மாதிரி இருந்துச்சி

ஆமா இந்த விழாவுக்கு வந்த நயனும் சொம்பும் ராசியாகிவிட்டார்களாமே?

அது பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.

Unknown said...

//பதிவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அந்த அளவுக்கு பெரிய புறம்போக்கு இடங்கள் இருந்தால் சொல்லுங்கள்.. இடம் தேர்வானால், பதிவர்களையும் 'கொஞ்சூண்டு' கவனிக்க ஏற்பாடு செய்கிறேன்//

ஏற்கனவே ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் இருந்ததே. அவர்களுக்கு உண்மையிலேயே வழங்கினால் உங்களுக்கு மிச்சம் ஏதும் இருக்குமா?

உண்மைத்தமிழன் said...

[[[No said...

அன்பான நண்பர் திரு உண்மைதமிழன் அவர்களே,

My first comments are - such an amazing comprehension! Really good to read especially your comments inserted in between as சின்ன சின்ன ஊசிகள்!!!

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதை நான் படிக்க வந்தது உங்களை, வேலை வெட்டி இல்லாத நண்பரே, போயும் போயும் ஒரு சினிமா விழாவை பற்றி நாலு பக்கத்துக்கு அரைத்திருக்கிரீர்களே என்று திட்டுவதர்க்காகத்தான்!!!

அனால் நீங்கள் எழுதியிருப்போதோ ஒரு விதமான வஞ்சகபுக்ழ்ச்சி commentary என்பது புரிந்தது! Was really good.

ஒரு analogy ஒன்று சொல்லுகின்றேன்! சீசர்கள் ரோமாபுரியை ஆண்ட காலங்களில், ஆளும் வர்க்கத்தினர் (Ceaser and his senate) மக்களின் குறைகளை தீர்க்க முடியாத தங்களின் கையாலாகதனத்தை ஒரு விடயம் கொண்டு மூடி மறைத்து எல்லாம் நன்றாக உள்ளது போல தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்!

அந்த விடயத்தின் பெயர் - சர்க்கஸ்!!!

இந்த சர்க்கஸ் நாம் இன்று காணும் ஜெமினி சர்க்கஸ் அன்று! மனிதர் மனிதரை கொல்லும் போட்டிகள் , மிருகங்களும் மனிதர்களும் மோதிக்கொள்ளும் இரத்த பலிகள் போன்றவைக்கு சர்க்கஸ் என்றுதான் பெயர்! நீங்கள் Gladitor, Ben-Hur போன்ற படங்களில் இதை பார்த்திருப்பீர்கள்!

The point is, Ceaser and senate used to say, if the people have problems in their life, give them circus! So that the problems are forgotten and let the people dwell in this mindless, idiotic, and moronic entertainment!

தமிழகத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது - இப்பொழுது இல்லை, முப்பது நாப்பது வருடங்களாக!!!!

நன்றி]]]

உண்மைதான் ஸார்..

அந்த சர்க்கஸை பார்க்கத் தள்ளப்பட்டிருக்கும் அப்பாவி ஜனங்களில் நானும் ஒருவன். எனக்கும் வேறு வழியில்லை. என்னை போலத்தான் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களும்..!

சாமான்யர்களுக்கு நாடாளும் பாக்கியம் கிடைத்தால்தான் நிலைமை மாறும்.. இல்லையேல் வருடாவரும் புதுப்புது சர்க்கஸ்கள் எங்களுக்காக நடந்து கொண்டேயிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anbu said...
நடக்கட்டும்.. நடக்கட்டும்...]]]

இருக்கட்டும்.. இருக்கட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
சூப்பர் கவரேஜ். கலைஞர் தொலைகாட்சியில் எதையெல்லாம் எடிட் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.]]]

கூர்ந்து கவனியுங்கள்.. அந்த திருட்டு முதலாளி மேட்டர் இருக்கிறதா? இல்லையா என்று..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

அப்படியே நேர்ல பாத்த மாதிரி இருக்கு பாஸ்..]]]

நன்றி தீப்பெட்டி ஸார்..!

[[[//பெப்சியில் சேர்ந்துதான் வீடு வாங்கணுமா என்ன? "அனைத்திணைய பதிவர்கள் சங்கம்' ஒன்று தொடங்கி கலைஞரைக் கூப்பிட்டு "நாங்கள்ளாம் பதிவர் சங்கம். ஆனால் நீயோ சங்கப் பதிவு. என்றெல்லாம் பேசி நாமளும் வீடு வாங்க வேண்டியதுதான்...//

சீக்கிரம் அந்த ஆளப்பிறந்தவர்ட்ட பேசி சங்கம் ஆரம்பிச்சு கலைஞருக்கு என்ன விருது கொடுக்கலாம்னு முடிவு பண்ணுங்க பாஸ்..]]]

வலைப்பதிவர் நாயகன் - அப்படீன்னு கொடுக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷாகுல் said...
லைவ் கவரேஜ் பாத்த மாதிரி இருந்துச்சி.]]]

நன்றி ஷாகுல்.

[[[ஆமா இந்த விழாவுக்கு வந்த நயனும் சொம்பும் ராசியாகிவிட்டார்களாமே?
அது பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.]]]

ஸாரி ஷாகுல். அன்றைய நிகழ்ச்சிக்கு நான் போகவில்லை..

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...

//பதிவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அந்த அளவுக்கு பெரிய புறம்போக்கு இடங்கள் இருந்தால் சொல்லுங்கள்.. இடம் தேர்வானால், பதிவர்களையும் 'கொஞ்சூண்டு' கவனிக்க ஏற்பாடு செய்கிறேன்//

ஏற்கனவே ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் இருந்ததே. அவர்களுக்கு உண்மையிலேயே வழங்கினால் உங்களுக்கு மிச்சம் ஏதும் இருக்குமா?]]]

நாங்களும் ஏழைகள்தான் ஆனந்த். ஆனால் விவசாயிகள் அல்ல..!

எப்படி என் சமாளிப்பு..?

Rajagopal.S.M said...

அண்ணே,, ஏன் விழாவுக்கு முன்னாடி சேர் எடுத்து போட்டதையும்,, விழா முடிஞ்ச பிறகு ஹால்ல கிளீன் பண்ணதையும் எழுதலை... உடம்ப கிடம்பு சரியில்லையா???
:-)))))))

Indian said...

//விருது வழங்கும்விழா கடந்த 9-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.//

இந்த அரங்கத்தில் விளையாட்டுப் பயிற்சி எப்போதாவது நடப்பது உண்டா?
வாரம் ஒரு தடவை விழாக்களுக்கு வாடகைக்கு விட்டால், அந்த அரங்கைக் கட்டியதின் நோக்கம் என்னாவது?

சென்னையின் உடனடித் தேவை Staples Center போன்றதொரு பரந்து,விரிந்த கன்வென்ஷன் வளாகம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா , கா ... கா...

உண்மைத்தமிழன் said...

[[[ராஜகோபால் said...
அண்ணே, ஏன் விழாவுக்கு முன்னாடி சேர் எடுத்து போட்டதையும், விழா முடிஞ்ச பிறகு ஹால்ல கிளீன் பண்ணதையும் எழுதலை... உடம்ப கிடம்பு சரியில்லையா???
:-)))))))]]]

ராஜகோபால் உங்க நக்கல் புரியுது..! ஓகே...

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...

//விருது வழங்கும் விழா கடந்த 9-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.//

இந்த அரங்கத்தில் விளையாட்டுப் பயிற்சி எப்போதாவது நடப்பது உண்டா?]]]

இது மாதிரி பங்ஷன் நடக்காதப்போ அது மாதிரி விளையாட்டுப் போட்டிகள் நடப்பதுண்டு..

[[[வாரம் ஒரு தடவை விழாக்களுக்கு வாடகைக்கு விட்டால், அந்த அரங்கைக் கட்டியதின் நோக்கம் என்னாவது?]]]

நீங்க வேற.. ஸ்டேடியம் கட்டினதே கட்டுறதுல மாமூல் வாங்கத்தான். வாங்கிக்கிட்டாங்க.. கட்டியும் கொடுத்துட்டாங்க. அவ்ளோதான் மேட்டர்..

[[[சென்னையின் உடனடித் தேவை Staples Center போன்றதொரு பரந்து, விரிந்த கன்வென்ஷன் வளாகம்.]]]

எது வேண்ணாலும் வரட்டும். அது கவர்ன்மெண்ட் கைல இருந்தா நிச்சயம் உருப்படாது என்பது மட்டும் நிச்சயம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா , கா ... கா...]]]

ஏன் பாதியில முடிச்சிட்டீங்க ஸ்டார்ஜன் ஸார்..!?

வஜ்ரா said...

//
இயக்குநர் இமயமும், இயக்குநர் சிகரமும் இரு புறமும் அமர்வதை முதலில் நீங்கள் உறுதி செய்தால்தான் முதல்வர் வருகை உறுதியாகும் என்று அரசுத் தரப்பில் இருந்து முன்கூட்டியே ஒரு செல்லமான எச்சரிக்கை பெப்ஸி நிர்வாகிகளுக்கு வந்ததாக ஒரு கிசுகிசு.
//

அப்பொழுது தானே இமயத்துக்கும், சிகரத்துக்கு நடுவில் உதய சூரியன் உதிப்பது போல் இருக்கும் ?
கட்சிக் குஞ்சுகளுக்கும் கொஞ்சம் மனது குளிரும்.

என்ன நான் சொல்றது ?

kanagu said...

anne... sema coverage anne..

nigalchiya apdiye konduvandhuteenga... ivlo paaratu vizha nadanthu naan paatahthe illa... aniyaamyaa irukku... :(

மு.சீனிவாசன் said...

ஒரு விழாவை இப்படி அழகா எழுத்திலேயே கவரேஜ் பண்ணினதுக்கு நிச்சயம் உங்கள பாராட்டியெ ஆகணும். எப்படித்தான் இவ்வளவு பெரிய கட்டுரைய டைப்பறீங்கன்னு ஆச்சரியமா இருக்கு.

/ தொழிலாளர்கள் என்பவர்கள் தினம்தோறும் 300 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள்தான் என்பதால், அவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன் /

உங்களுக்கும் அதுல ஒரு வீடு கிடைக்கட்டும் அந்தக் கோவாணாண்டிய வேண்டிக்கிறேன்.


ஆனாலும் இந்த இடத்தில அண்ணணோட நடுநிலைமை கொஞ்சம் நடுங்கிடுச்சோன்னு தோணுது. இந்த 300 ரூவாக்கும் கம்மியா எங்க ஊர்ல நிறைய கூலித்தொழிலாளர்கள் இருக்காங்கண்ணே. களையெடுக்குறது, கரும்பு வெட்டறது, சித்தாள் வேலை, கிணறு வெட்டறது, கல்லுடைக்கிறது இப்படி நிறைய வேலை பண்ணிகிட்டிருக்காங்க. அவங்களுக்கு இந்த அமைப்பு சாரா தொழிலாளர், அதுக்கான நல வாரியம் இப்படி எந்த விவரமும் தெரியாது. நிலைமை இப்படி இருக்கறதுனால, நிறைய சம்பளம் வாங்குற நடிகர்கள் அவங்களோட சார்பா இதுக்கு அரசாங்கத்த விட அதிகமா பொருளாதாரப் பங்களிக்கணும்னு நீங்க சொல்லியிருப்பீங்கண்ணு எதிர்பார்த்தேன். ஏவிம் பண்ணும்போது, நடிகர்கள் பண்றதுல என்ன் தப்பு?

உண்மைத்தமிழன் said...

[[[வஜ்ரா said...

//இயக்குநர் இமயமும், இயக்குநர் சிகரமும் இருபுறமும் அமர்வதை முதலில் நீங்கள் உறுதி செய்தால்தான் முதல்வர் வருகை உறுதியாகும் என்று அரசுத் தரப்பில் இருந்து முன்கூட்டியே ஒரு செல்லமான எச்சரிக்கை பெப்ஸி நிர்வாகிகளுக்கு வந்ததாக ஒரு கிசுகிசு.//

அப்பொழுதுதானே இமயத்துக்கும், சிகரத்துக்கு நடுவில் உதயசூரியன் உதிப்பது போல் இருக்கும்? கட்சிக் குஞ்சுகளுக்கும் கொஞ்சம் மனது குளிரும். என்ன நான் சொல்றது?]]]

கரெக்ட்டுதான் வஜ்ரா..!

இந்த ஒரு பாயிண்ட்டை எடுத்துக் காட்ட ஆள் இல்லையேன்னு நினைச்சேன்.. வந்துட்டீங்க..!

இந்த ராஜதந்திரத்துல அகில இநதியாவுலேயும் நம்ம தாத்தாவை அடிச்சுக்கு ஆள் கிடையாதுங்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
anne... sema coverage anne.. nigalchiya apdiye konduvandhuteenga... ivlo paaratu vizha nadanthu naan paatahthe illa... aniyaamyaa irukku...:(]]]

எது பாராட்டு விழாவா? நான் இவ்ளோ எழுதினதா..?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சீனிவாசன் said...

ஒரு விழாவை இப்படி அழகா எழுத்திலேயே கவரேஜ் பண்ணினதுக்கு நிச்சயம் உங்கள பாராட்டியெ ஆகணும். எப்படித்தான் இவ்வளவு பெரிய கட்டுரைய டைப்பறீங்கன்னு ஆச்சரியமா இருக்கு.]]]

டைப் பண்றதுதான் தொழில்ன்னு வந்துட்டா எல்லாம் பழகிரும் ஸார்..!

[[[/தொழிலாளர்கள் என்பவர்கள் தினம்தோறும் 300 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள்தான் என்பதால், அவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன் /

உங்களுக்கும் அதுல ஒரு வீடு கிடைக்கட்டும் அந்தக் கோவாணாண்டிய வேண்டிக்கிறேன்.
ஆனாலும் இந்த இடத்தில அண்ணணோட நடுநிலைமை கொஞ்சம் நடுங்கிடுச்சோன்னு தோணுது. இந்த 300 ரூவாக்கும் கம்மியா எங்க ஊர்ல நிறைய கூலித்தொழிலாளர்கள் இருக்காங்கண்ணே. களையெடுக்குறது, கரும்பு வெட்டறது, சித்தாள் வேலை, கிணறு வெட்டறது, கல்லுடைக்கிறது இப்படி நிறைய வேலை பண்ணிகிட்டிருக்காங்க. அவங்களுக்கு இந்த அமைப்பு சாரா தொழிலாளர், அதுக்கான நல வாரியம் இப்படி எந்த விவரமும் தெரியாது. நிலைமை இப்படி இருக்கறதுனால, நிறைய சம்பளம் வாங்குற நடிகர்கள் அவங்களோட சார்பா இதுக்கு அரசாங்கத்தவிட அதிகமா பொருளாதாரப் பங்களிக்கணும்னு நீங்க சொல்லியிருப்பீங்கண்ணு எதிர்பார்த்தேன். ஏவிம் பண்ணும்போது, நடிகர்கள் பண்றதுல என்ன் தப்பு?]]]

தப்பே இல்லை..

நீங்க சொல்ற பாயிண்ட் என் மனசுக்குள்ளேயும் இருக்கு.

நீங்கள் குறிப்பிட்ட அந்த அமைப்பு சாரா தொழிலாளர்களைப் போலத்தான் சினிமா தொழிலாளர்களின் இன்றைய நிலைமையும் இருக்கின்றது.

செட் அமைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஐந்து நாட்களில் வேலையை முடித்துவிட்டால் அடுத்த படம் கிடைக்கின்றவரையில் வீட்டில் சும்மா இருக்க வேண்டியதுதான்..

இதேபோலத்தான் மற்ற பிரிவு தொழிலாளர்களும். மாதத்தில் 10 நாட்கள் வேலை இருக்கும். மீதி நாட்கள் தேடுதல் வேட்டைதான். ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 3000 ரூபாய்தான் ஒரு தொழிலாளியின் வருமானமாக இருக்கிறது..

எனவே இவர்களுக்கு உதவுவதில் தவறில்லை என்பது எனது கருத்து.

மற்றபடி நடிகர்களும் ஏவி.எம். போலவே இதில் பங்குகொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. நிச்சயம் பின்னாளில் டொனேஷன் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன்..!

மலரகம்(நாகங்குயில்) said...

அருமையான கவரேஜ
கமல் , பாரதிராஜா பற்றிய செய்தியும் நான் படிக்காத செய்தி நண்பரே.,

உண்மைத்தமிழன் said...

[[[மலரகம்(நாகங்குயில்) said...
அருமையான கவரேஜ. கமல், பாரதிராஜா பற்றிய செய்தியும் நான் படிக்காத செய்தி நண்பரே.]]]

தங்களது முதல் வருகைக்கு நன்றிகள் நண்பரே..!

kanagu said...

/*
எது பாராட்டு விழாவா? நான் இவ்ளோ எழுதினதா..?*/

paarattu vizha than... ungala poi solvena.?? :)

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
/*எது பாராட்டு விழாவா? நான் இவ்ளோ எழுதினதா..?*/

paarattu vizha than... ungala poi solvena.?? :)]]]

அதான பார்த்தேன்..!

இதை எழுதியே எனக்கொரு மனக்குறை இருக்கு..

கடைசியா நடந்த கலை நிகழ்ச்சிகளைப் பத்தி கொஞ்சம் சொல்லாம விட்டுட்டனேன்னு..!

benza said...

அன்பின் உ த, அண்ணே,
உங்களது பதிவின் நீளம் அளவுக்கு மிஞ்சி நீண்டு போனது என்பது பலரது கருத்தானாலும், வாசிக்க வாசிக்க திகட்டாத பதிவு எனத் தேடி வாசிப் போரும் உள்ளனர்.
நீண்ட காலம் இன்னும் நீளமாக எழுத முருகாண்டவன் அருள வேண்டும்.
ஆமா, நோட்ஸ் எடுக்க என்ன டிவைஸ் பாவிக்கிறீங்க ?
எலெக்றோனிக்கா ? அல்லது தங்களது பிறைய்ன் பவறா ?
நான் இவைகளில் உள்ள ஸ்பெஷல் 'ரச்'களை ரசித்தேன்.
நன்றி.

'' ராஜேஷ்கண்ணா 'வணக்கம்' என்பதை மட்டும் தமிழில் ஆரம்பித்து பின்பு முழுக்க, முழுக்க ஹிந்தியில் பொளந்து கட்ட.. பாஷை புரியாமல் கூட்டம் அமைதி காத்தது. ஆனாலும் பின்பு கலைஞரைப் பாராட்டித்தான் பேசுகிறார் என்பது புரிந்து கை தட்டி தீர்த்தது ''

'' (அண்ணன் கமலஹாசனின் இந்த ஒப்புதல் பேச்சின் மூலம் பத்மஸ்ரீ விருதுகளெல்லாம் எங்கிருந்து, யாரால், எப்படி, எதற்காக கொடுக்கப்படுறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.) ''

'' இன்னொரு தேர்தல் வருவதற்கு முன்பேயே(கலைஞர் கொஞ்சம் இடைவெளிவிட.. கூட்டம் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்து ஓய்ந்தது) ''


சென்ஷி சார் கீளே சொன்னதை முழுமையாக ஆமோதிக்கின்றேன்.

'' Blogger சென்ஷி said...
பொறுமையா உக்கார்ந்து முழுசா படிச்சுட்டேன் ;)
15 நிமிசத்துல இப்பல்லாம் உங்க பதிவு படிச்சுட முடியுது. (போட்டோவையும் சேர்த்து!)
பகிர்விற்கு நன்றி அண்ணே..! ''

Jacks said...

நல்ல பதிவு. படிப்பதற்கு ஆர்வமாக எழுதுகிறிர்கள். வாழ்த்துக்கள்.
இதுவரை கலைஞருக்கு கிடைத்த விருது/பட்டம் எல்லாம் சேர்த்து ஒரு புத்தகம் எழுதினால் மீண்டும் ஒரு ராமயனமோ அல்லது மகாபாரதமோ எழுதலாம். குறைந்த பட்சம் நீங்கள் ஒரு 100 பதிவுகள் எழுதலாம். அப்படி எழுதுவோருக்கு தமிழக அரசு பாராட்டு வழங்கினாலும் வழங்கும். பாவம் அவருக்குகே இதனை விருதும் ஞாபகம் இருக்காது. நமது பதிவர் சங்கம் சார்பாக "கணக்கற்ற விருது வங்கியோன்" அப்படின்னு ஒரு பட்டம் குடுத்திடலாம்.

உண்மைத்தமிழன் said...

[[[benza said...

அன்பின் உ த, அண்ணே, உங்களது பதிவின் நீளம் அளவுக்கு மிஞ்சி நீண்டு போனது என்பது பலரது கருத்தானாலும், வாசிக்க வாசிக்க திகட்டாத பதிவு எனத் தேடி வாசிப் போரும் உள்ளனர். நீண்ட காலம் இன்னும் நீளமாக எழுத முருகாண்டவன் அருள வேண்டும்.
ஆமா, நோட்ஸ் எடுக்க என்ன டிவைஸ் பாவிக்கிறீங்க ?
எலெக்றோனிக்கா? அல்லது தங்களது பிறைய்ன் பவறா?
நான் இவைகளில் உள்ள ஸ்பெஷல் 'ரச்'களை ரசித்தேன்.
நன்றி.]]]

நானும் சிலவற்றைக் குறிப்பெடுத்தேன். பலவற்றை பல்வேறு பத்திரிகைகளில் பார்த்து, படித்து தட்டச்சு செய்திருக்கிறேன்.. இவ்வளவையும் மனப்பாடம் செய்து வைக்க முடியுமா என்ன..?

வருகைக்கு நன்றி பென்ஸ் ஸார்..!

அந்த அண்ணே என்பதை தவிர்க்கலாமே.. ஏதோ எனக்கு வயசான மாதிரி பீலிங்காகுது..!

உண்மைத்தமிழன் said...

[[[Jack said...

நல்ல பதிவு. படிப்பதற்கு ஆர்வமாக எழுதுகிறிர்கள். வாழ்த்துக்கள்.
இதுவரை கலைஞருக்கு கிடைத்த விருது / பட்டம் எல்லாம் சேர்த்து ஒரு புத்தகம் எழுதினால் மீண்டும் ஒரு ராமயனமோ அல்லது மகாபாரதமோ எழுதலாம். குறைந்தபட்சம் நீங்கள் ஒரு 100 பதிவுகள் எழுதலாம். அப்படி எழுதுவோருக்கு தமிழக அரசு பாராட்டு வழங்கினாலும் வழங்கும். பாவம் அவருக்குகே இதனை விருதும் ஞாபகம் இருக்காது. நமது பதிவர் சங்கம் சார்பாக "கணக்கற்ற விருது வங்கியோன்" அப்படின்னு ஒரு பட்டம் குடுத்திடலாம்.]]]

கொடுத்திடலாமே..! ஆனா அதுக்கு இது மாதிரி பங்ஷன் வைச்சு திரை நட்சத்திரங்களின் டான்ஸையும் வைக்கச் சொல்வாங்களே..

அதுக்கென்ன பண்றது..?

benza said...

அண்ணே, இப்ப 72 எனக்கு --- 9 வயதில் இருந்து கருணாநிதி யின் அடுக்குமொழி தமிழை வாசிக்கின்றேன்.
மு. வரதராஐன் எனது மனதை பண்படுத்தியவர்.
அண்ணாதுரை, கருணாநிதி உற்சாகம் தந்தனர்.
ஆங்கிலம் அறிவைத் தந்தது.
பகிர விருப்பம்.
அண்ணே, கருணாநிதி 14 வயசினிலேயே ஆசிரியராக எழுதிய சின்னப்பிள்ளை அய்யா அவர்.
அந்தக் கொடை சகலருக்கும் கிடைக்காதையா.
அறிவுக் கடவுள் முருகன் அருள் பெற்ற இன்னொருத்தர் உண்மைத் தமிழன் என நினைக்கின்றேன்.
என் எண்ணம் சரியா அய்யா.

benza said...

'ஏதோ எனக்கு வயசான மாதிரி பீலிங்காகுது..!'

சரி இன்னீலிருந்து அண்ணேங்கிறத விட்டுரேண்ணை.
அதெப்படி --- வயதில மூத்தவனானாலும் அறிவில சின்னவன் தானே உண்மைத் தமிழ் அண்ணா.
உம்ம்ம், என்ன ஓர வஞ்சகம் என் முருகனுக்கு --- உங்களுக்கு தந்த எழுத்து வன்மையை எனக்கு மறுத்தது . . .

உண்மைத்தமிழன் said...

[[[benza said...
அண்ணே, இப்ப 72 எனக்கு --- 9 வயதில் இருந்து கருணாநிதி யின் அடுக்குமொழி தமிழை வாசிக்கின்றேன்.
மு. வரதராஐன் எனது மனதை பண்படுத்தியவர்.
அண்ணாதுரை, கருணாநிதி உற்சாகம் தந்தனர்.
ஆங்கிலம் அறிவைத் தந்தது.
பகிர விருப்பம்.
அண்ணே, கருணாநிதி 14 வயசினிலேயே ஆசிரியராக எழுதிய சின்னப்பிள்ளை அய்யா அவர்.
அந்தக் கொடை சகலருக்கும் கிடைக்காதையா.
அறிவுக் கடவுள் முருகன் அருள் பெற்ற இன்னொருத்தர் உண்மைத் தமிழன் என நினைக்கின்றேன்.
என் எண்ணம் சரியா அய்யா.]]]

ஐயா,

தாங்கள் நினைப்பதைப் போல பெரியவன் அல்ல நான். சாதாரண பிரதியெடுக்கும் ஆள். அவ்வளவுதான்..

உண்மைத்தமிழன் said...

[[[benza said...
'ஏதோ எனக்கு வயசான மாதிரி பீலிங்காகுது..!'

சரி இன்னீலிருந்து அண்ணேங்கிறத விட்டுரேண்ணை.
அதெப்படி --- வயதில மூத்தவனானாலும் அறிவில சின்னவன் தானே உண்மைத்தமிழ் அண்ணா.
உம்ம்ம், என்ன ஓர வஞ்சகம் என் முருகனுக்கு --- உங்களுக்கு தந்த எழுத்து வன்மையை எனக்கு மறுத்தது . . .]]]

ஐயா மிக மிக சிறுவன் நான். என் எழுத்தெல்லாம் ஒரு எழுத்தே அல்ல. வலையுலகைப் புரட்டிப் பாருங்கள்.. தெரியும்.!

benza said...

[[[ ஐயா மிக மிக சிறுவன் நான். என் எழுத்தெல்லாம் ஒரு எழுத்தே அல்ல. வலையுலகைப் புரட்டிப் பாருங்கள்.. தெரியும்.! ]]]

பிறந்த மனிதனில் அறிவும் பண்பும் சேரும் போதே முழுமனிதனாகின்றான்.
பெரியோரின் கூற்று.
எனது எண்ணப்படி, தன்னடக்கம், ஓன்றே மனிதனை முழுமையாக்கின்றது.
துலபமான உதாரணத்திற்கு பொதுவாழ்வில் தன்னடக்கம் கொண்ட அரசியல்வாதி ஓருவரையே நாம் ஓப்பீட்டிற்கென பார்க்கலாம்.
காமராஜர் காலமாகிவிட்டார்.
உதா அரசியலுக்குள் குதித்தால் உண்டு.
உதா = உ த.
உங்கள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் நீங்கள், நாட்டுக்கும் சேர்ப்பது கடமை. நன்றி.

Kumky said...

அன்ணே.,
முழுசா அரை நாள் ஆவுதுண்ணே...
பசங்க சும்மா 15 நிமிஷம், 30 நிமிஷம்னு பீதிய கெளப்புறாங்கண்ணே..நம்பாதீங்க.
பின்னூட்டத்துக்கு ஒரு நாள் ஒதுக்கனும் போல...
நீங்க ஏன் பார்ட் பார்டா பிரிச்சு மேய கூடாது?

உண்மைத்தமிழன் said...

[[[benza said...

[[ஐயா மிக மிக சிறுவன் நான். என் எழுத்தெல்லாம் ஒரு எழுத்தே அல்ல. வலையுலகைப் புரட்டிப் பாருங்கள்.. தெரியும்.!]]

பிறந்த மனிதனில் அறிவும் பண்பும் சேரும் போதே முழு மனிதனாகின்றான். பெரியோரின் கூற்று.

எனது எண்ணப்படி, தன்னடக்கம், ஓன்றே மனிதனை முழுமையாக்கின்றது.
துலபமான உதாரணத்திற்கு பொதுவாழ்வில் தன்னடக்கம் கொண்ட அரசியல்வாதி ஓருவரையே நாம் ஓப்பீட்டிற்கென பார்க்கலாம்.
காமராஜர் காலமாகிவிட்டார்.
உதா அரசியலுக்குள் குதித்தால் உண்டு.
உதா = உ த.
உங்கள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் நீங்கள், நாட்டுக்கும் சேர்ப்பது கடமை. நன்றி.]]]

ஐயா

என்னைப் பற்றிய உங்களது மதிப்பிட்டீற்கு மிக்க நன்றிகள்..! நான் பெரிதும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இதற்கு..!

என்றென்றும் உங்களுடைய ஆசீர்வாதங்களை கோருகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்க்கி said...

அன்ணே., முழுசா அரை நாள் ஆவுதுண்ணே... பசங்க சும்மா 15 நிமிஷம், 30 நிமிஷம்னு பீதிய கெளப்புறாங்கண்ணே..நம்பாதீங்க.
பின்னூட்டத்துக்கு ஒரு நாள் ஒதுக்கனும் போல... நீங்க ஏன் பார்ட் பார்டா பிரிச்சு மேயகூடாது?]]]

கும்க்கி தம்பீ..

நீ ஏன் முதல் ஆளா வந்து படிச்சிரக்கூடாது..?

50 பின்னூட்டம் வந்த பின்னாடி வந்தா படிச்சு முடிக்க லேட்டாகத்தான் செய்யும்..!

benza said...

Please get down to action in Tamil Nadu politics.

ராஜ நடராஜன் said...

இடுகையிட்ட நாளுக்கு எனது மறுபடியும் பின்னோட்டத்திற்கும் உள்ள இடைவெளியான நாட்கள் = படிக்க எடுத்துக் கொண்ட நாட்கள்:)

உண்மைத்தமிழன் said...

[[[benza said...
Please get down to action in TamilNadu politics.]]]

புரியவில்லை ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
இடுகையிட்ட நாளுக்கு எனது மறுபடியும் பின்னோட்டத்திற்கும் உள்ள இடைவெளியான நாட்கள் = படிக்க எடுத்துக் கொண்ட நாட்கள்:)]]]

இதெல்லாம் ரொம்ப ஓவரு..! சொல்லிட்டேன்..!

துளசி கோபால் said...

உம்மை ஜெயிக்கமுடியாது.....!!!!!!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
உம்மை ஜெயிக்கமுடியாது!!!!!!]]]

என்ன ஒரு தன்னடக்கம்..? உங்களைவிடவா பெரிசா எழுதிட்டேன் டீச்சர்..!??

abeer ahmed said...

See who owns freshplayaffiliates.com or any other website:
http://whois.domaintasks.com/freshplayaffiliates.com

abeer ahmed said...

See who owns kuwaitup.com or any other website.