அடுத்த ஜனாதிபதி யார்? கட்சிகள் போடும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!


தமிழக ரசிகர் பெருமக்களுக்கு 'சிவாஜி' பட ரிலீஸில் எவ்வளவு குழப்பமோ அதைவிட அதிகமான குழப்பம் டெல்லி அரசியல்வாதிகளுக்கு.


இந்தியாவின் 12-வது ஜனாதிபதியாக யாரை உட்கார வைப்பது என்று யோசனை செய்து, யோசனை செய்து மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள் அனைத்துக் கட்சியினரும்.


11-வது ஜனாதிபதியாக கொடி கட்டிப் பறந்த திரு.அப்துல்கலாம் அவர்களால்தான், இந்த 12-வது ஜனாதிபதி தேர்வு மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்திருக்கிறது. காரணம் இந்த ஐந்து வருடத்தில் தற்போதைய 'பொம்மலாட்ட' பிரதமரைவிட, கயிற்றைத் தன் கையில் வைத்திருக்கும் 'பொம்மலாட்ட ஆசிரியையை' விடவும் அதிகமாக மக்களிடையே நெருங்கிவிட்டார் தற்போதைய ஜனாதிபதி. இது அரசியல்வாதிகளுக்கு ஆபத்தான விஷயம்தானே..


தங்களைத் தவிர வேறு யாராவது மக்களிடையே பிரபலமானால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? அடுத்த நபரையும் அப்படி ஆளாக கொண்டு வந்து வைத்தால் நமக்குத்தானே சிக்கல் என்று இப்போது அனைவருமே வட்டமேசை மாநாடு போடாத குறையாக தங்களுக்குள் மீட்டிங் பேசி கொண்டிருக்கிறார்கள்.


உலகளவில் மற்ற நாடுகளைப் போல இந்திய ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதையே இப்போதைய ஜனாதிபதியும் குறையாகச் சொல்லி கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.


பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும், மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டுத்தான் இந்தியாவில் மக்களுக்கான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


இந்தியாவில் நடப்பது மக்களாட்சி, ஜனநாயக ஆட்சி முறை என்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் அதிகாரம் மக்களுக்கில்லை. எங்களுக்குத்தான் என்கிறார்கள் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும்.


மற்றத் தேர்தல்களைப் போல இதுவும் ஒற்றை எண்ணிக்கை ஓட்டு அல்ல. ஒவ்வொரு எம்.பி.க்கும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கும் மதிப்பு உண்டு. இந்த மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுமாம்.


தொகுதியின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்குச் சென்று தூங்குவதால் எம்.பி.க்களின் ஓட்டுக்கு மதிப்பு அதிகம். அவரவர் மாநிலத் தலைநகரங்களில் இருக்கும் சட்டமன்றத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தாவி, தாவி அடிப்பதால் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு சற்று குறைவாம்.


தற்போது ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு மாநிலத்தின் அளவுக்கேற்ப 100 முதல் 200 வரை இருக்கும்.


அடிதடி, வெட்டுக்குத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எதற்கும் அஞ்சாத வீராதி வீரர்களை எம்.எல்.ஏ.க்களாக வைத்திருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு 208.


அதே சமயம் என்றைக்காவது ஒரு நாள் முடிந்தால் பஸ் மீது கல்லெறியும் அளவுக்கு வீரத்தைக் காட்டும் தமிழக எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 178.


கையில் வாளுடன் சொர்க்கம் போகக்கூடத் தயார் என்று தெருவில் வந்து போராடும் சிங்கங்களான பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ.க்களின் மதிப்பு 116.


காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ.க்கள் விவரமில்லாதவர்களாகவும், அடிதடியில் அவ்வளவு பக்குவம் இல்லாதவர்களாக இருப்பதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் மதிப்பு 72-தானாம்.


மாநிலங்கள்வாரியாக எம்.எல்.ஏ.க்களின் மானாவாரி ஓட்டு மதிப்பையும் கொஞ்சம் பாருங்கள்..


உத்தரபிரதேசம் 208
தமிழகம் 176
மகாராஷ்டிரா 175
பீகார் 173
கேரளா 152
மேற்கு வங்கம் 151
ஒரிசா 149
ஆந்திரா 148
குஜராத் 147
கர்நாடகா 131
மத்தியபிரதேசம் 131
சட்டீஸ்கர் 129
ராஜஸ்தான் 129
அசோம் 116
பஞ்சாப் 116
அரியானா 112


எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் படித்தவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நாம் நம்பினாலும், இந்த ஜனாதிபதி தேர்தல் ரகசிய ஓட்டெடுப்பு முறையில்தான் நடக்கும்.

'அந்த வேட்பாளர் இன்னும் கல்யாணமாகாதவர், மக்களோட கஷ்டத்தை நல்லாத் தெரிஞ்சவர், அவர்தான் பதவிக்கு வரணும்..' அப்படீன்னு நீங்களா எதையும் நினைச்சுக்கக் கூடாது.. இதெல்லாம் தனி நபர்களின் சர்வாதிகாரம்.. கட்சி யாருக்கு ஓட்டுப் போடச் சொல்லுதோ அவருக்குத்தான் எல்லாரும் ஓட்டுப் போடணும். இதுதான் கட்சிகளின் ஜனநாயகம்.


லோக்சபாவில் இருக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545. ராஜ்யசபாவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 275. இந்த இரு அவை எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,47,000. அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5.48,000. இரண்டையும் சேர்த்தால் ஜனாதிபதி தேர்தலில் விழப் போகும் ஓட்டுக்களின் ஒட்டு மொத்த மதிப்பு 10,95,000.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர் 5,48,000 அளவுக்கு பெரும்பான்மை ஓட்டுக்களைப் பெற வேண்டும். இந்த அளவு ஓட்டை எதிர்பார்த்துத்தான் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.


தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்காக ஐந்து அணிகள் தயாராக கியூவில் நிற்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சமாஜ்வாதி கட்சி உருவாக்கியுள்ள மூன்றாவது அணி(அ.தி.மு.க., தெலுங்கு தேசம் உட்பட) மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இடது சாரி கட்சிகள், உ.பி.யின் புதிய 'புரட்சித்தலைவி' மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய ஐந்து அணிகளே முக்கியமாக கருதப்படுகின்றன.


அனைத்து மாநிலங்களிலும், பாராளுமன்றத்திலும் பாரதீய ஜனதா அணியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 3,47,000 ஓட்டுக்கள் இருக்கின்றன. இவர்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால் கூடுதலாக இன்னும் 2,01,000 ஓட்டுக்கள் தேவைப்படுகின்றன.


முலாயம்சிங்கின் சமாஜ்வாடி தலைமையிலான மூன்றாவது அணியிடம் 1,13,000 ஓட்டுக்கள் உள்ளன. முலாயம்சிங்கோ காங்கிரஸைவிட பாரதீய ஜனதாவைத்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திட்டித் தீர்த்தார். ஆனாலும் அரசியல்வாதிகள் இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள். நாளையே கொஞ்சிக் கொள்வார்கள் என்ற ரீதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முலாயம் கட்சியினர் ஓட்டு போட்டால், இவர்களின் ஓட்டுகளையும் சேர்த்து இக்கூட்டணிக்கு 4,60,000 ஓட்டுக்கள் கிடைக்கும். அப்படியும் 88,000 ஓட்டுக்கள் இன்னமும் தேவை. மீதிக்கு என்ன பண்ணுவாங்க தாமரைக் கட்சிக்காரங்க..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


காங்கிரஸ் பக்கம் பாருங்க.. அவுங்க என்னமோ தெரியலை.. சம்பந்தமே இல்லாம ஐக்கிய முற்போக்கு கூட்டணின்னு பேரு வைச்சிருக்காங்க.. இவர்களிடம் மொத்தமாக 4,24,000 ஓட்டுக்கள் உள்ளனவாம். இவுங்க சொல்ற ஜனாதிபதி ஜெயிக்கணும்னா, இவுங்களுக்கு இன்னமும் 1,24,000 ஓட்டுக்கள் வேணும்.


"ஆதரிப்போம். தட்டிக் கேட்போம், அட்ஜஸ்ட் செய்து கொள்வோம், போர்க்கொடி தூக்குவோம், ஆட்சியைக் கவிழ்க்கவும் தயங்க மாட்டோம்"னு டெய்லி பொழுது விடிஞ்சு பொழுது போனா புலம்புறாங்க பார்த்தீங்களா நம்ம அரிவாள், சுத்தியல் கட்சிக்காரங்க.. அவுங்ககிட்ட 1,11,000 ஓட்டு இருக்குதாம்.


தப்பித் தவறி இவுக மன்மோகன்சிங் மேல பாசம் வைச்சு காங்கிரஸ¤க்கு ஓட்டுப் போட்டா அப்ப கூட்டணியின் பலம் 5,35,000 ஓட்டுகளா மாறிரும். அப்பவும் கூடுதலா இன்னும் 13,000 ஓட்டுகள் வேணும். இவுக என்ன பண்ணுவாங்க..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


இப்போது டெல்லியில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையில் தாங்கள் சொல்கின்ற வேட்பாளர்தான் ஜெயிக்க வேண்டும் என்று உலகத்தின் ஒரேயரு ஜனநாயக கம்யூனிஸ்ட்களான இந்திய இடதுசாரி கட்சிகள் விரும்புகின்றன. தாங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்ற மப்பான மனநிலையில் உள்ளார்கள் தோழர்கள்.


இப்போது இரு தரப்பாரின் பார்வையும் உத்தரப்பிரதேசத்தின் புதிய 'புரட்சித் தலைவி' மாயாவதி மீதும், ஆட்சியைப் பறி கொடுத்த முலாயம்சிங்கின் மீதும் படிந்திருக்கிறது.


மாயாவதி என்ற 'புரட்சித் தலைவி'யிடம் 60,000 ஓட்டுக்கள் உள்ளன. இந்தப் 'புரட்சித் தலைவி', 'இந்தியாவின் புரட்சித் தலைவி'யான அன்னை சோனியாவுக்கு கை கொடுத்தால், பெரும்பான்மையைவிட 48,000 ஓட்டுக்கள் அதிகமாகவே கிடைக்கும்.


அதே நேரத்தில் தன்னை ஒரு காலத்தில் முதுகில் குத்தி, கீழே போட்டு உருட்டி, மிரட்டி, பல வழக்குகளைத் தொடுத்து, இருந்த கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்து தன்னை அலைக்கழிக்க வைத்த பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக மாயாவதி சாய்ந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5,26,000 ஓட்டுக்கள்தான் கிடைக்கும். இப்போதும் அவர்களுக்கு 28,000 ஓட்டு கம்மி.
என்ன செய்வாங்க வாஜ்பாயும், அத்வானியும்..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


இப்பத்தான் இந்த சுயேச்சைகளுக்கு மவுசு கூடுது. சுயேச்சைகளாகவும், எந்த கட்சியிலும் சேராமல் நடுநிலைமைக் கருத்துக்களை பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அள்ளி வீசும், இந்த உண்மைத்தமிழனைப் போன்று இருப்பவர்களின் ஓட்டு மதிப்பு 39,000 உள்ளது.


இவுங்க யாருக்கு ஓட்டுப் போடப் போறாங்கன்னு இவுகளுக்கே இன்னிவரைக்கும் தெரியாது. எந்தக் கட்சி, யார் வேட்பாளர் அப்படீங்கறதுக்காக யாரும் வெயிட் பண்ணலை.. யாரு 'சூட்கேஸை அதிகமாகத் திறப்பாங்க'ன்னு பார்த்துட்டு அப்புறமாத்தான் இவுக அவுகளோட முடிவைச் சொல்வாங்க.. ஸோ.. அதுவரைக்கும் மத்தக் கட்சிக்காரங்க என்ன செய்வாங்க..?

ஜிங்சாங்.. ஜிங்சாங்..


ஆக, காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட்டுகள் இவர்களுடன் சமாஜ்வாதி கட்சியோ, அல்லது பகுஜன் சமாஜ் கட்சி என்று பொருந்தாக் கூட்டணி ஒன்று பொருந்தி வந்தால் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிப்பார்.


காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக கட்சியின் துணைத் தலைவரான அமர்சிங்கை அனுப்பி வைத்தும், சினிமா பாணியில் அந்த வீட்டுக்காரம்மா சோனியாஜி அவரைக் கண்டு கொள்ளாமல் காபிகூட கொடுக்காமல் மூலையில் அமர வைத்து "யார் அவரு? கொல்லைப்புற வாசல் அந்தப் பக்கம் இருக்கு.." என்று சொல்லாமல் சொல்லி வெளியேற்றியதை முலாயமே தன் வாயால் சொன்னதைப் போல் 'சிதையில் படுத்திருக்கும்போது'கூட மறக்க மாட்டார்.



ஆக முலாயம்ஜி, காங்கிரஸ¤க்கு சப்போர்ட் பண்ணுவாரான்றது இந்த இடைப்பட்டக் காலத்தில் மாயாவதி அம்மா அவர் மீது என்ன ஆக்ஷன் எடுக்கப் போறாருன்றதை பொறுத்துத்தான் அமையும்.


மாயாவதி அம்மாவுக்கோ தன் மீது சிபிஐ தொடுத்திருக்கும் வழக்கை சிபிஐ எந்தத் திசையில் கொண்டு போகிறது என்பதைப் பொறுத்துத்தான் காங்கிரஸ¤க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா என்று முடிவு செய்வார். எது எப்படி போனாலும் இந்த ஜனாதிபதி தேர்தலில், அதிக 'அறுவடை' செய்யப் போவது உ.பி.யின் புரட்சித்தலைவிதான். அதில் சந்தேகமில்லை.


இந்தப் பக்கம் பாரதீய ஜனதா, சமாஜ்வாதி, மாயாவதி, சுயேச்சைகள் என்று அனைவரையும் வலைவீசி ஒன்று திரட்டினால்தான் தாமரைக் கட்சி வேட்பாளரால் ஜெயிக்க முடியும்.


தாமரைக்கு சப்போர்ட் செய்தால் உத்தரப்பிரதேசத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்குற ஆதரவையும் இழந்துவிட நேரிடும் என்பது முலாயம்ஜிக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இனிமேல் மாயாவதி தனக்குக் கொடுக்கப் போகும் பேதி மாத்திரைகளுக்கு பி.ஜே.பியிடம் இருந்துதான் குளுகோஸ் மருந்துகளை வாங்க வேண்டியிருப்பதால், முலாயம்ஜி இந்தப் பக்கம் சாய்வதும், சாயாததும் மாயாவதியின் கையில்தான் இருக்கிறது.


மாயாவதிக்கு பி.ஜே.பியின் பக்கம் சாய்வது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஒரு ரூபாவுக்கும் பிரயோசனப்படாத விஷயம். எனவே அதற்கு சான்ஸே இல்லை என்று அடித்துச் சொல்லிவிடலாம். அவருக்கு கில்லி விளையாட ஒரு கிரவுண்ட்டையே காங்கிரஸ் தயாராக வைத்திருக்கும்போது, அவர் எதற்கு பம்பர விளையாட்டிற்கு வட்டம் போட இடம் தேடி அலையணும்?


ஜனாதிபதி வேட்பாளர் யாருன்னு அறிவிக்கிறதுக்கே, இன்னொரு மகாபாரதத்தை அனைத்துக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன.


காங்கிரஸ் கட்சி சார்பா முதல்ல சுஷில்குமார் ஷிண்டே, கரண்சிங் அப்படீன்னு ரவுண்டு கட்டினாங்க.. சுஷில்குமார் 'நாளைக்கேன்னாலும் நான் ரெடி'ன்னு சிரிச்சுக்கிட்டே டிவில சொன்னாரு..


விடுவாங்களா நம்ம அரிவாளு, சுத்தியலுக்காரங்க.. "நீங்க என்ன முடிவெடுக்கிறது? நாங்க சாம்பார் ஊத்தினாத்தான் நீங்க சோத்துல பிசைஞ்சு திங்க முடியும்.. நாங்க ஊத்துறோம் பாரு சூப்பர் சாம்பாரு.."ன்னுட்டு சோம்நாத் சாட்டர்ஜியை இறக்கிட்டாங்க..


ஏதோ அப்துல்கலாமுக்கு தூரத்து சொந்தக்காரர் மாதிரி அப்பப்ப '•பிலிம்' காட்டுறதுனால சோம்நாத் சாட்டர்ஜி மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு இருக்கு. ஐயையோ ஆபத்தாச்சேன்னு 10, ஜன்பத் ரோடு கண்ணைக் கசக்கிக்கிட்டு ஆளைத் தேட ஆரம்பிச்சு.. கடைசியா, "எப்படியும் ஒரு வங்காளிதான உங்களுக்கு வேணும்..? இதோ எங்ககிட்ட இருக்கார் பாருங்க.. ஒரு முகர்ஜி.. பிரணாப்முகர்ஜி.. அவர்தான் எங்க வேட்பாளர்.." அப்படின்னு பேர் சொல்லாம வெளில நியூஸை பரப்பிவிட்டது காங்கிரஸ்..


வுடுவாங்களா அரிவாளுக்காரங்க.. "முகர்ஜி'க்கு 'சாட்டர்ஜி' எந்த வகையிலும் குறையில்லை. வேண்ணா அவரை துணை ஜனாதிபதியாக்கிருங்க.." அப்படீன்னு நூல் விட்டிருக்காங்க.. ஆனா தில்லி 'அம்மாவும்' அம்மாவோட கிச்சன் காபினெட்டும் "இப்போதைக்கு நாமதான் மெஜாரிட்டி.. நம்ம ஆளுதான் ஜனாதிபதியாகணும். வேண்ணா அவுக ஆளை துணை ஜனாதிபதியாக்கிரலாம்.." அப்படின்னூ உப்பமா செஞ்சு வெளில விட்டிருக்காங்க..


இந்தப் பக்கம் பார்த்தா நம்ம தாமரைக் கட்சிக்காரங்க.. இப்போதைய ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான பைரோன்சிங் ஷெகாவத்தே ஜனாதிபதியாகணும். அதுதான் அவருக்கும் மரியாதை. எங்களுக்கும் மரியாதை.. அப்படி.. இப்படின்னு சொல்லிட்டிருக்காக.. யார் இதைக் காதுல வாங்குறா..?


ஷெகாவத் பாவம்.. முன்னாடி ராஜஸ்தான்ல தெருத்தெருவா அலைஞ்சு, திரிஞ்சு பி.ஜே.பி. கட்சியை வளர்த்தவரு.. அங்கனேயே சீப் மினிஸ்டராவும் கொஞ்ச நாளைக்கு இருந்தவரு.. இப்ப வயசாயிருச்சு இல்லையா.. நடக்கவே கஷ்டப்படுறாரு. ஆனா ரெண்டு, மூணு மாசமாவே இந்த சோனியா அம்மா கலந்துக்குற பங்ஷன்னா.. நடக்க முடியலைன்னாலும் யாரையாவது பிடிச்சுக்கிட்டு முன்னால வந்து நின்னுக்குறாரு.. 'பெரிசு எப்படி பிராக்கெட் போடுது பாரு'ன்னு டெல்லில அம்புட்டு பத்திரிகைக்காரனும் நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.


"அவர் வேணாமா? சரி.. ஜனாதிபதியா ஆகுறதுக்கு என்ன தகுதி வேணும்? குச்சி ஊன்றி நடக்கணும்.. இல்லைன்னா ரெண்டு பேர் அல்லக்கைல கை வைச்சு அழைச்சுக்கிட்டு வரணும். அவ்ளோதான.. இதோ எங்ககிட்ட வாங்க.. இந்தியாவின் தலைசிறந்த கவிஞர் இருக்கார். பேரு அடல்பிஹாரி வாஜ்பாய். அவரை தேர்ந்தெடுத்திருவோம்.. பொது வேட்பாளரா சொல்லிருங்க.." அப்படின்னு அத்வானிக்கு வேண்டப்பட்ட தலைவர் ஒருத்தர் சொல்லிப்புட்டாரு.


இதை கவிஞர் வாஜ்பாய் கேட்டுப்புட்டு பதறிப் போய், 'வேணாம்.. இது அத்வானி அடுத்த பிரதமரா வர்றதுக்கான சதி வேலை'ன்றதை வெளில சொல்லாம.. "எனக்கு அந்தப் பதவி மேல ஆசையில்லை.."ன்னு அப்படின்னு இந்த வயசுலேயும் பச்சைப் பொய்யை முனங்கிக்கிட்டே சொல்லிட்டாரு..


இவுக ரெண்டு பேரும், தான் சொல்ற ஜனாதிபதிதான் அவ்ளோ பெரிய மாளிகைல உக்காரணும்னு ஏன் நினைக்கிறாங்க? டெய்லி இவுங்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட போறாரா புது ஜனாதிபதி? இல்ல.. கம்யூனிஸ்டுக மாதிரி வாங்குற சம்பளம் முழுசையும் இவுகளுக்கே நீட்டப் போறாரா? அதெல்லாம் இல்லீங்கோ..


இந்திராகாந்தி பிரதமரா இருந்தப்ப, அவர் ரேஸ்கோர்ஸ் வீட்ல இருந்து கிளம்பிட்டாருன்னா, அப்ப ஜனாதிபதியா இருந்த பக்ருதீன் அலி அகமது தன் வீட்டு வெளிவாசல்ல வந்து காத்துக்கிட்டிருப்பாராம்.. அவர் ஜனாதிபதி. இப்ப..


"எங்களின் நம்பிக்கை நட்சத்திரம், ராக்கெட் விஞ்ஞானி.. அவர்தான் எங்களது மானசீகத் தலைவர்.." அப்படி இப்படின்னு பில்டப் கொடுத்து நம்ம APJ.அப்துல்கலாமை, நெப்போலியன் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாக நம்ம பய புள்ளைக..


ஒரு அளவுக்கு மேல அவரை நெருக்க முடியல எல்லாக் கட்சிக்காரனாலேயும். அதான் அடுத்த தடவ உஷாரா இருந்து, நமக்கு கைச்செலவுக்கு காசு இல்லேன்னா கூட உடனே எடுத்துக் கொடுக்குற மாதிரி ஒரு ஜனாதிபதி ஆளை ரெண்டு கட்சிக்காரவுகளும் தேடுறாங்க. தேடிக்கிட்டே இருக்காக.. கிடைப்பாங்களா?


அதுவரைக்கும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..

42 comments:

RAM said...

நல்லதொரு அரசியல் அலசல் உண்மைத்தமிழன்!

மாசிலா said...

உண்மைத்தமிழன் வரவர உங்க பதிவை படிக்கவே பயமா இருக்குது சார். ஏன்னா, படிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே முடியலைங்க. அதில்லாம, நீளமா எழுதினே போறீங்க. பொறுமையில் படிக்கிறேனுங்க.

ஜிங்சாங், ஜிங்சாங்...

உண்மைத்தமிழன் said...

//ரமா said...
நல்லதொரு அரசியல் அலசல் உண்மைத்தமிழன்!//

பொறுமையாக படித்தமைக்கும், வருகைக்கும் நன்றிகள் ரமா..

உண்மைத்தமிழன் said...

//மாசிலா said...
உண்மைத்தமிழன் வரவர உங்க பதிவை படிக்கவே பயமா இருக்குது சார். ஏன்னா, படிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே முடியலைங்க. அதில்லாம, நீளமா எழுதினே போறீங்க. பொறுமையில் படிக்கிறேனுங்க.
ஜிங்சாங், ஜிங்சாங்...//

வேற வழியில்ல மாசிலா ஸார்.. நான்தான் சொன்னனே.. கீபோர்ட்ல கை வைச்சா நிக்க மாட்டேங்குது. அதோட இந்த மாதிரி அரசியல் கதையையெல்லாம் முழுசா சொல்லணும்.. அரைகுறையாச் சொல்லக்கூடாதுன்றது என்னோட கருத்து. அதான் இப்படி.. போகப் போகப் பழகிரும்.. வேண்ணா பாருங்க.. அதுவரைக்கும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..

மாசிலா said...

என்னது, ஜக்கி சாங்தான் அடுத்த சனாதிபதியா? அப்டீன்னா டைரக்டரு யாரு?

பங்காளி... said...

தென்னிந்தியாவை சேர்ந்தவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பில்லை என்பது மட்டும் திட்டவட்டமாய் தெரிகிறது.

ஒருவேளை சோம்நாத் சட்டர்ஜிக்கு யோகமடித்தால் கலைஞர் துனை ஜனாதிபதிக்கு பேராசிரியரை முன்னிறுத்துவார் என நினைக்கிறேன்.வழிவழியான மரபுப்படி இம்முறை துனை ஜனாதிபதி தென்னிந்தியருக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதை வைத்து சொல்கிறேன்.

தென்றல் said...

/எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் படித்தவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நாம் நம்பினாலும்,..../

அப்படியா? நீங்க எந்த நாட்டைப்பத்தி சொல்றீங்க...?

/ இந்த ஜனாதிபதி தேர்தல் ரகசிய ஓட்டெடுப்பு முறையில்தான் நடக்கும். கட்சியின் பாராளுமன்ற கொறடாவோ, அல்லது சட்டமன்ற கொறடாவோ யாருக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அவருக்குத்தான் நீங்கள் ஓட்டளிக்க வேண்டும். /

ரகசிய ஓட்டெடுப்பு...தான! அப்புறமென்ன.. கொறடாவோவுக்கு தலைஆட்டிடு ஒரு நல்ல ஆளுக்கு ஓட்டு போட வேண்டியதுதான...?


மாசிலா சொன்ன மாதிரி.... 'வரவர உங்க பதிவை படிக்கவே பயமா இருக்குது சார். ஏன்னா, படிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே முடியலைங்க.'

'தொடரும்..' கிறது உங்களுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தையாயென்ன, உண்மைத்தமிழன்!
[முழுப் பதிவையும் படிக்க வைச்சிறீங்க பாருங்க... அதான் உங்களோட சிறப்பு!]

மணிகண்டன் said...

நல்ல அலசல் உண்மைதமிழன். அரசியல்ல நெறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. சீக்கிரமே முழுநேர அரசியல்வாதியாக வாழ்த்துக்கள். நீங்க சொல்லியிருக்கற ஓட்டுமதிப்பு படித்த,நேர்மையான,நாணயமான நம்ம தமிழ்நாட்டு எம்.எல்.ஏங்களுக்கு தெரியுமாங்கறதே சந்தேகம் தான்.

வெட்டிப்பயல் said...

நல்ல அலசல் :-)

இதை சற்றுமுன் போட்டிக்கு அனுப்புங்களேன்

Unknown said...

உண்மைத்தமிழன்,

கலாமை நிறுத்தாமல் இவர்கள் அனைவரும் அவமதிப்பது மிகவும் கண்டிக்க வேண்டிய விசயம். அவர் இதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியாற்ற களத்துக்கே வருவார் என்று நினைக்கையில் வருத்தம் குறைகிறது

Anonymous said...

Kattayam ovvoru "blog" kudimaganum padikka vendiya postunga!

Anbudan,
Anand

Krishna (#24094743) said...

அருமையான அலசல் உண்மைத் தமிழன். கலாம் போன்ற ஒரு மனிதருக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுத்தால் மொத்த இந்தியாவுமே மகிழ்ச்சியுறுமே. அப்படிச் செய்ய நம் இழிபிறவி அரசியல்வியாதிகளுக்கு முதுகெலும்பு ஏது? (எனக்கு அப்சல் கருணை மனுவில் கலாமின் முடிவு என்ன என்பது தெரிந்துகொள்ள ஆசை).
ஆனாலும் அரசியல் சதுரங்கத்தில் எதுவும் நடக்கலாம். இப்போதைக்கு தாங்கள் கூறியது போல எல்லாரும் மண்டை காய்ந்து போய் தான் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் கலாம் அவர்கள் தான். எப்படி சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி எனும் பதவி மீது மதிப்பு ஏற்படுத்தினாரோ, கலாம் அவர்களும் அதே போல் ஜனாதிபதி பதவிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
என் விருப்பம் கலாமே! ஆனால் அந்த உத்தமர் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவேயில்லை. இந்தப் பதவி இல்லாவிடில், தன் மனதிற்கு மிகவும் பிடித்த ஆசிரியத் தொழிலுக்கு போய்விடுவார். நாடு தான் திண்டாடும்.

நந்தா said...

நல்ல விரிவான பதிவு. வழக்கம் போல பெரிசா இருந்தாலும், எப்படியாவது படிக்க வெச்சுடறீங்க.

இவ்ளோவ் டீடெய்லா தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே, அரசியல்ல குதிக்கறதா எதாவது எண்ணமா? சொல்லுங்க அப்போதான ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்.

Anonymous said...

என் பாஸ்வேர்டை யாரோ களவாடி விட்டார்கள்!

வருத்தத்துடன்
போலி உண்மைத்தமிழன்

உண்மைத்தமிழன் said...

//மாசிலா said...
என்னது, ஜக்கி சாங்தான் அடுத்த சனாதிபதியா? அப்டீன்னா டைரக்டரு யாரு?//

வேற யார்? நம்ம இந்தியாவின் புரட்சித் தலைவி சோனியா அம்மையார்தான்..

உண்மைத்தமிழன் said...

//பங்காளி... said...
தென்னிந்தியாவை சேர்ந்தவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பில்லை என்பது மட்டும் திட்டவட்டமாய் தெரிகிறது.

ஒருவேளை சோம்நாத் சட்டர்ஜிக்கு யோகமடித்தால் கலைஞர் துனை ஜனாதிபதிக்கு பேராசிரியரை முன்னிறுத்துவார் என நினைக்கிறேன்.வழிவழியான மரபுப்படி இம்முறை துனை ஜனாதிபதி தென்னிந்தியருக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதை வைத்து சொல்கிறேன்.//

பங்காளி ஸார்.. சோம்நாத் சட்டர்ஜிக்கு யோகமடித்தாலும், பேராசிரியர் டெல்லிக்குப் போக மாட்டார். இங்கேயிருந்து டெல்லிக்கு அவரை அனுப்பினாலே ஸ்டாலினை முன்னுக்கு கொண்டு வர இருந்த ஒரேயொரு தடையும் போய்விட்டது என்று நாம் நினைக்கலாம். ஆனால் பேராசிரியர் இப்போதே அதை விரும்பவில்லை. ஏனெனில் அவருக்கும் குடும்பம் இஇருக்கிறது. பிள்ளை, குட்டிகள், பேரன், பேத்திகள் என்று அது ஒரு கிளை மரமாகவே உள்ளது. அவர்கள் விட மாட்டார்கள். ஏனெனில் அங்கேயும் இருக்கின்றவரைக்கும் அள்ளல்தான்..

தென்னிந்தியருக்கு இம்முறை பூகோளத்தை அடிப்படையாக வைத்துக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முந்தைய கே.ஆர்.நாராயணனும் தென்னிந்தியர்தான்.. அப்துல்கலாமும் தென்னிந்தியர்தான்.. ஆக.. இம்முறை பி.ஜே.பி.யும், மாயாவதியும் இதை அனுமதிக்க மாட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதில் வழிவழியான மரபுப்படி என்று எதுவும் இல்லை. எல்லாமே அரசியல் லாபம் கருதிதான்..

உண்மைத்தமிழன் said...

///தென்றல் said...
/எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் படித்தவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நாம் நம்பினாலும்,..../
அப்படியா? நீங்க எந்த நாட்டைப்பத்தி சொல்றீங்க...?///

இந்திய நாட்டைப் பத்தித்தான் சாமி.. அப்படின்னு ஓட்டுப் போட்டவுகளுக்கெல்லாம் நினைப்பு. அதுனாலதான் சொன்னேன்..

///இந்த ஜனாதிபதி தேர்தல் ரகசிய ஓட்டெடுப்பு முறையில்தான் நடக்கும். கட்சியின் பாராளுமன்ற கொறடாவோ, அல்லது சட்டமன்ற கொறடாவோ யாருக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அவருக்குத்தான் நீங்கள் ஓட்டளிக்க வேண்டும். /
ரகசிய ஓட்டெடுப்பு...தான! அப்புறமென்ன.. கொறடாவோவுக்கு தலைஆட்டிடு ஒரு நல்ல ஆளுக்கு ஓட்டு போட வேண்டியதுதான...?///

ம்.. செய்யலாம்.. அப்படியும் சில முறை நடந்திருக்கு. ஆனால் பொதுவாக கட்சி மேலிடத்தைப் பகைத்துக் கொள்வது நீண்ட நாளைய அரசியல் பாதைக்கு ஆபத்து என்பதை அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் உணர்ந்திருப்பதால் இதைச் செய்ய மாட்டார்கள்.

//மாசிலா சொன்ன மாதிரி.... 'வரவர உங்க பதிவை படிக்கவே பயமா இருக்குது சார். ஏன்னா, படிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே முடியலைங்க.'
'தொடரும்..' கிறது உங்களுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தையாயென்ன, உண்மைத்தமிழன்!
[முழுப் பதிவையும் படிக்க வைச்சிறீங்க பாருங்க... அதான் உங்களோட சிறப்பு!]//

சந்தோஷம் தென்றல் ஸார்.. எப்படின்னாலும் படிக்க வைச்சே தீர்றது அப்படின்னுதான் நானும் கங்கணம் கட்டிக்கிட்டு ஒவ்வொரு பதிவையும் போடுறேன்.. நீங்களும் எப்படியாவது படிச்சிர்றீங்க.. ஓகே.. வாழ்க.. வளர்க..

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
நல்ல அலசல் உண்மைதமிழன். அரசியல்ல நெறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. சீக்கிரமே முழுநேர அரசியல்வாதியாக வாழ்த்துக்கள். நீங்க சொல்லியிருக்கற ஓட்டுமதிப்பு படித்த,நேர்மையான,நாணயமான நம்ம தமிழ்நாட்டு எம்.எல்.ஏங்களுக்கு தெரியுமாங்கறதே சந்தேகம் தான்.//

நன்றி மணிகண்டன் ஸார்.. வாழ்த்துங்க.. நூறு வயசு வாழுங்கன்னு வாழ்த்துங்க.. வேணாம்னு சொல்லலை. ஆனா இது மாதிரில்லாம் முழு நேர அரசியல்வாதியாக வாழ்த்துக்கள்ன்னு சொல்லாதீங்க சாமி.. அது 'முழு நேரத் தொழிலா முகமூடி போடாம கொள்ளையடிங்க'ன்னு சொல்ற மாதிரியிருக்கு..

உண்மைத்தமிழன் said...

//வெட்டிப்பயல் said...
நல்ல அலசல் :-)
இதை சற்றுமுன் போட்டிக்கு அனுப்புங்களேன்//

நன்றி வெட்டிப்பயல் ஸார்..
சற்று முன் போட்டிக்கும் அனுப்பியிருக்கிறேன் தலைவா..

உண்மைத்தமிழன் said...

//செல்வன் said...
உண்மைத்தமிழன்,
கலாமை நிறுத்தாமல் இவர்கள் அனைவரும் அவமதிப்பது மிகவும் கண்டிக்க வேண்டிய விசயம். அவர் இதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியாற்ற களத்துக்கே வருவார் என்று நினைக்கையில் வருத்தம் குறைகிறது//

செல்வன் ஸார்.. கலாமை இவர்களுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணமே பதிவில் நான் சொல்லியிருப்பது போல் அவருடைய மக்கள் செல்வாக்குதான்..
அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்கின்ற ஜனாதிபதிகளைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனாலும் கலாம் அவர்கள் மக்கள் பணியாற்ற வந்தால் அதற்கு அவர்களிடமிருந்து வரக்கூடிய ரியாக்ஷனை இப்போதே நினைத்துப் பார்த்து எனக்கு பகீரென்கிறது.

ஆனால் கலாம் ஸார்.. மறுபடியும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆசிரியப் பணிக்கே செல்லப் போவதாகச் 'பட்சி'யின் செய்திகள் தெரிவிக்கின்றன.

வருகைக்கும், பொறுமையாகப் படித்தமைக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும் செல்வன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Kattayam ovvoru "blog" kudimaganum padikka vendiya postunga!
Anbudan,
Anand//

நன்றி அன்புடன் ஆனந்த்.. தமிழ் டைப் செய்யக் கற்றுக் கொள்ளுங்களேன்.. இன்னும் நிறைய எழுதலாம்..

உண்மைத்தமிழன் said...

//Krishna (#24094743) said...
அருமையான அலசல் உண்மைத் தமிழன். கலாம் போன்ற ஒரு மனிதருக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுத்தால் மொத்த இந்தியாவுமே மகிழ்ச்சியுறுமே. அப்படிச் செய்ய நம் இழிபிறவி அரசியல்வியாதிகளுக்கு முதுகெலும்பு ஏது? (எனக்கு அப்சல் கருணை மனுவில் கலாமின் முடிவு என்ன என்பது தெரிந்துகொள்ள ஆசை).
ஆனாலும் அரசியல் சதுரங்கத்தில் எதுவும் நடக்கலாம். இப்போதைக்கு தாங்கள் கூறியது போல எல்லாரும் மண்டை காய்ந்து போய் தான் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் கலாம் அவர்கள் தான். எப்படி சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி எனும் பதவி மீது மதிப்பு ஏற்படுத்தினாரோ, கலாம் அவர்களும் அதே போல் ஜனாதிபதி பதவிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
என் விருப்பம் கலாமே! ஆனால் அந்த உத்தமர் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவேயில்லை. இந்தப் பதவி இல்லாவிடில், தன் மனதிற்கு மிகவும் பிடித்த ஆசிரியத் தொழிலுக்கு போய்விடுவார். நாடு தான் திண்டாடும்.//

நன்றி கிருஷ்ணா..
நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன். அரசியல்வாதிகளுக்கு கலாம் ஸாரைப் பிடிக்கவில்லை. ஆகவேதான் அவருக்கு இன்னொரு முறை பதவி கொடுக்க மறுக்கிறார்கள். அப்சல் கருணை மனு மீது கலாமும் கண்டிப்பாக எதுவும் செய்ய மாட்டார். ஏனெனில் அவரால் முடிந்தது இதில் ஏதுமில்லை.
கலாம் ஸார்.. நீங்கள் சொன்னது போலவே ஆசிரியர் பணிக்குத்தான் திரும்பி வரப் போகிறார். அதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை..

உண்மைத்தமிழன் said...

//Nandha said...
நல்ல விரிவான பதிவு. வழக்கம் போல பெரிசா இருந்தாலும், எப்படியாவது படிக்க வெச்சுடறீங்க.
இவ்ளோவ் டீடெய்லா தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே, அரசியல்ல குதிக்கறதா எதாவது எண்ணமா? சொல்லுங்க அப்போதான ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்.//

ஏம்ப்பா நந்தா.. இது ஏதோ வாழ்த்துற மாதிரி தெரியலையே.. பின்னாடி மலர் மாலை, மலர் வளையம் வைக்கறதுக்கு ஏற்பாடு பண்ற மாதிரியிருக்கு.. ஐயா சாமி.. என்ன விட்ருங்கய்யா.. உண்மைத்தமிழனுக்கு திருடறது, கொள்ளையடிக்கிறதுல பழக்கமில்ல சாமி.. ஆட்டோதான.. அனுப்புப்பா.. என் உடம்புக்கு ஒரு ஆட்டோவே போதும்.. ரொம்ப அனுப்பி நீயும் செலவு வைச்சுக்காத.. என்ன புர்யுதா? நல்ல புள்ளைப்பா..

Anonymous said...

இப்போதான் படிக்க முடிந்தது, அருமையான அலசல்...கலக்கிட்டீங்க உ.தமிழன்....

அதிலும் உங்க நக்கலான பின்னூட்ட-பதில், (முழு நேரத் தொழிலா முகமூடி போடாம கொள்ளையடிங்க'ன்னு சொல்ற மாதிரியிருக்கு..) ஆகா, சூப்பர்.

ஒரு சின்ன கேள்வி, எந்த முறையில் இந்த ந்ம்பர்கள் (தமிழ்நாட்டுக்கு 176, உ.பி 206 ) நிர்ணையிக்கப்படுகிறது?. வருடங்களில் இது மாறக்கூடிய சாத்தியம் உண்டா? விளக்குவீர்களா?.

Anonymous said...

அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வருவது நல்லது இல்லை.....,அவருக்கு வாத்தியார் வேலை கொடுத்தால் நல்லது,அதைதான் அவர் நன்றாக செய்வார்

ACE !! said...

நல்ல அலசல்.. வாழ்த்துக்கள்.. (பதிவு தான் ரொம்ப பெர்ர்ர்ர்ரீசா இருக்கு :D )

உண்மைத்தமிழன் said...

//சிங்கம்லே ACE !! said...
நல்ல அலசல்.. வாழ்த்துக்கள்.. (பதிவு தான் ரொம்ப பெர்ர்ர்ர்ரீசா இருக்கு :D)//

நன்றி சிங்கம்லே..

பதிவ சின்னதாத்தான் எழுதிருக்கேன். படிக்கிற நீங்கதான் பெரிசு, பெரிசுன்னு கத்திக் குமிக்குறீங்க.. என்னமோ போங்கப்பா.. ஆனாலும் எம்புட்டு எழுதினாலும், என்ன எழுதினாலும் வந்திரணும்.. சொல்லிப்புட்டேன்.. வந்ததுக்கு தேங்க்ஸ் சிங்கம்.. அதென்ன கடைசியா 'லே?'

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வருவது நல்லது இல்லை.....,அவருக்கு வாத்தியார் வேலை கொடுத்தால் நல்லது,அதைதான் அவர் நன்றாக செய்வார்.//

அனானி ஸார்.. எந்த ஊரு? நாடு முழுக்க முக்கால்வாசிப் பேரு அப்துல்கலாமே டெல்லியைவிட்டு போகவிடக்கூடாதுன்னு போராட்டம் நடத்தலாமான்னு பிளான்ல இருக்கான்.. நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றீங்க?

ஆமா அதென்ன அதைத்தான் அவர் நன்றாகச் செய்வார்? இதுவரைக்கும் இருந்தவங்கள்லே எந்த ஜனாதிபதி இவர் மாதிரி, நம்மகிட்ட இறங்கி வந்து பேசுனாரு..? யாருக்காச்சும் அறிவுரை சொல்றதுக்காச்சும் அருகதை இருந்துச்சா.. ஐயா.. விட்ருங்கய்யா அவரை..

Anonymous said...

உண்மை ஜனாதிபதி பத்தி
உண்மைத்தமிழனின்
உண்மையான அலசல்
உண்மையிலே நல்லாருக்குயா

நல்லாயிரு நல்லாயிரு

துளசி கோபால் said...

நல்ல அலசல் பதிவு.

//எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் படித்தவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நாம் நம்பினாலும்,..../

அப்படியா? நீங்க எந்த நாட்டைப்பத்தி சொல்றீங்க?//

அரசியல் வியாதிகள் வர வர இவ்வளவு மோசமா
ஆகறது நல்லதுக்கில்லே(-:

மணியன் said...

நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு இதுபோல ஏலம் போடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒன்று இந்தப் பதவியையே எடுத்துவிடலாம். அல்லது மக்களே நேரடியாக நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கலாம். இதனால் இந்த 'குதிரைபேரங்களாவது' இல்லாமற்போகும்.

Anonymous said...

//மாயாவதி அம்மாவுக்கோ தன் மீது சிபிஐ தொடுத்திருக்கும் வழக்கை சிபிஐ எந்தத் திசையில் கொண்டு போகிறது என்பதைப் பொறுத்துத்தான் காங்கிரஸ¤க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா என்று முடிவு செய்வார். எது எப்படி போனாலும் இந்த ஜனாதிபதி தேர்தலில், அதிக 'அறுவடை' செய்யப் போவது உ.பி.யின் புரட்சித்தலைவிதான். அதில் சந்தேகமில்லை.//

//...மாயாவதிக்கு பி.ஜே.பியின் பக்கம் சாய்வது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஒரு ரூபாவுக்கும் பிரயோசனப்படாத விஷயம். எனவே அதற்கு சான்ஸே இல்லை என்று அடித்துச் சொல்லிவிடலாம். அவருக்கு கில்லி விளையாட ஒரு கிரவுண்ட்டையே காங்கிரஸ் தயாராக வைத்திருக்கும்போது, அவர் எதற்கு பம்பர விளையாட்டிற்கு வட்டம் போட இடம் தேடி அலையணும்?//

உண்மைத்தமிழரே..

நீங்க சொல்லியிருக்கும் இந்த 'உண்மை' நேத்தும், இன்னிக்கும் மாயாவதி டெல்லிய கலக்குறப்பவே தெரிஞ்சு போச்சு.. எப்படிய்யா இப்படி? சூப்பர் பாஸ்ட் போங்க..

உண்மைத்தமிழன் said...

//புனிதன் said...
உண்மை ஜனாதிபதி பத்தி
உண்மைத்தமிழனின்
உண்மையான அலசல்
உண்மையிலே நல்லாருக்குயா
நல்லாயிரு நல்லாயிரு//

புதிய பாணியில்
புதிய எழுத்துக்களில்
புதிய கோணத்தில்
புதிய சிந்தனையில்
புளகாங்கிதப்பட்டு
புகழ் சேர்க்கும்
புனிதன் ஸாருக்கு
புதிய நண்பனான உண்மைத்தமிழன் கோடானு கோடி நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

///துளசி கோபால் said...
நல்ல அலசல் பதிவு.
//எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் படித்தவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் என்று நாம் நம்பினாலும்,..../
அப்படியா? நீங்க எந்த நாட்டைப்பத்தி சொல்றீங்க?//
அரசியல் வியாதிகள் வர வர இவ்வளவு மோசமா ஆகறது நல்லதுக்கில்லே(-:///

ஆஹா மேடம்.. தப்புதான்.. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எழுதிட்டேன்.. நம்மாளுக எப்படிப்பட்டவுகன்னு நமக்குத்தானே தெரியும்..

அப்புறம் இன்னிக்கு நிலவரத்துல மாயாவதியும்-சோனியாவும்-மன்மோகன்சிங்கும் ஒரு கூட்டணிக்கு வந்துட்டாங்க. காங்கிரஸ் காட்டுற ஜனாதிபதி வேட்பாளருக்கு, மாயாவது கட்சி ஆதரவளிக்கும். அதுக்குப் பிரதிபலனா மாயாவதி மேல இருக்குற 100 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு கூடைக்குப் போகப் போகுது..
ஸ்வாகா..
போயிந்தி..
its gone..
அம்புட்டுத்தான் மேடம்..

Anonymous said...

யோவ் நீ ஒரு மட்டமான அரசியல் வாதிங்கிற்து உன் டைட்டிலே சொல்லுதுயா வருஹ..இலைப்பாறுஹ ..கருமம் . ..மாத்தி தொல அத..முடிஞ்சா பேரயும் சேத்து மாத்து

உண்மைத்தமிழன் said...

//மணியன் said...
நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு இதுபோல ஏலம் போடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒன்று இந்தப் பதவியையே எடுத்துவிடலாம். அல்லது மக்களே நேரடியாக நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கலாம். இதனால் இந்த 'குதிரை பேரங்களாவது' இல்லாமற்போகும்.//

நடக்காத விஷயம் மணியன்.. நமது நாடு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை அடிப்படையாகக் கொண்டுது. அமெரிக்க நாடாளுமன்றத்தை அடிப்படையாகக் கொண்டு வந்தால்தான் நீங்கள் சொல்வது போல் நடக்கும். அதுபோல் நடக்க நமது அரசியல்வாதிகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

பிரதமர் ஆட்சி முறைதான் சிறந்தது என்பார்கள். ஏனெனில் அதில்தான் கொள்ளையடிக்கவும், சாகின்றவரையிலும் பதவியில் இருக்க முடியும்..

உண்மைத்தமிழன் said...

//போலி உண்மைத் தமிழன் said...
யோவ் நீ ஒரு மட்டமான அரசியல் வாதிங்கிற்து உன் டைட்டிலே சொல்லுதுயா வருஹ..இலைப்பாறுஹ ..கருமம் . ..மாத்தி தொல அத..முடிஞ்சா பேரயும் சேத்து மாத்து//

ஐயா போலியாரே.. நான் அரசியல்வாதின்னு யாரு சாமி சொன்னது? ஏன் சாமி ஊர்ல, உலகத்துல பாக்குற அல்லாருக்கும் தெரியுது உம்ம கண்ணுக்கு மட்டும் சரியாத் தெரியலைன்னா ஒண்ணு உடனே டாக்டர்கிட்ட ஓடிப் போய் கண்ணைச் செக் பண்ணு.. இல்லேன்னா கம்ப்யூட்டர்ல internet explorer-ஐ யூஸ் பண்ணி ஓப்பன் பண்ணு.. வரும்.. அப்படியும் வரலேன்னா latha font-ஐ install செஞ்சுட்டு அப்புறமா பாரு.. நல்லாத் தெரியும்..
பேரை மாத்துறதா? உண்மைத்தமிழன்.. உண்மைத்தமிழன்தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லேங்குறேன்..

மா சிவகுமார் said...

உண்மைத் தமிழன்

முழுமையான அலசல். முன்பெல்லாம இந்தியா டுடேவில் இது போல எல்லா விபரங்களையும் விளக்கி கட்டுரைகள் போடுவார்கள். இப்போது அது போய் விட்டது. உங்களது கலைக்களஞ்சியக் கட்டுரை போன்ற விபரமான கட்டுரைக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

உண்மைத்தமிழன் said...

//மா சிவகுமார் said...
உண்மைத் தமிழன்
முழுமையான அலசல். முன்பெல்லாம இந்தியா டுடேவில் இது போல எல்லா விபரங்களையும் விளக்கி கட்டுரைகள் போடுவார்கள். இப்போது அது போய் விட்டது. உங்களது கலைக்களஞ்சியக் கட்டுரை போன்ற விபரமான கட்டுரைக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்//

மிக்க நன்றி சிவா ஸார்..

இப்போதும் 'இந்தியா டுடே'வில் கட்டுரைகள் வெளியிடுகிறார்கள். ஆனால் அரசியல் குறைந்துபோய் அவர்களுடைய பத்திரிகை, டிவி விளம்பரத்திற்காக தொழில் வாய்ப்புகள், மற்றும் விளம்பர வருவாய் உள்ளவைகளைப் பற்றித்தான் செய்திகளை வெளியிடுகிறார்கள். கொஞ்சம் தொடர்ந்து வாங்கி உற்றுப் பார்த்துப் படித்தால் புரியும்..

Anonymous said...

யோவ் உண்மைத்தமிழா..

என்னமோ மாயாவதி உன்கிட்ட சொல்லிட்டுத்தான் எல்லாத்தையும் சொல்ற மாதிரி எழுதித் தள்ளிருக்க.. வேண்ணா பாரு.. இந்த விஷயத்துல முலாயமும், மாயாவதியும் திடீர்ன்னு ஒண்ணா சேர்ந்து உன் கழுத்த அறுக்கப் போறாங்க.. ரெடியா இருந்துக்க.. இன்னிக்கிவரைக்கும் ரேஸ்ல முந்தி நிக்குறது சுஷில்குமார் ஷிண்டேதான்.. ஆனா நீ என்ன எழுதியிருக்குற.. நீயே படிச்சுப் பாரு..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சற்றுமுன் 1000 போட்டியில்
வெற்றி பெற்ற
உண்மைத்தமிழன் அவர்களே!
வாழ்த்துக்கள்!

http://satrumun.blogspot.com/2007/08/1000.html

abeer ahmed said...

See who owns webmedbooks.com or any other website:
http://whois.domaintasks.com/webmedbooks.com