யாருக்கும் இங்கே வெட்கமில்லை பாகம்-2

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

'தன் வினைத் தன்னைச் சுடும்' என்கிற சொல்லாடலும், 'வாந்தியும், பேதியும் வந்தவனுக்குத் தெரியும்' என்கிற வழக்கு மொழியும் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, தமிழகத்தின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை தன் 40-வது வயதில் எட்டிப் பிடித்திருப்பவரும், கலைஞருக்கு ஒருவகையில் மட்டுமே பேரனும், மாநில சுயாட்சியைப் பெற்றேத் தீருவேன் என்று முழக்கமிட்ட, கலைஞரின் மனசாட்சியான திரு.முரசொலி மாறனின் மகனுமான 'புகழ்' என்கின்ற, கலாநிதி மாறனுக்கு சாலப் பொருந்தும்.

மூன்று நாட்களுக்கு முன்னால் நான் எழுதிய "யாருக்கும் இங்கே வெட்கமில்லை" என்கிற இடுகையில் இந்தப் பத்தியை எழுதியிருந்தேன்.

//சென்ற முறை தி.மு.க. ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, மதுரை நகரில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஜெகதீசன் என்ற பைனான்ஸியர் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக, அப்போதைய மதுரை மாநகராட்சியின் தி.மு.க. துணை மேயர் திரு.மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, திரு.மிசா பாண்டியனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மதுரையில் தற்போது அரசாட்சி செய்து வரும் தளபதியும், தென்பாண்டி மண்டலத்து பட்டத்து இளவரசருமான திரு.மு.க.அழகிரி, தி.மு.க.விலிருந்து அப்போது நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தின் பின்னணியில், தமிழகத்தின் தற்போதைய முடிசூடா மன்னர் திரு.மு.க.ஸ்டாலின் இருப்பதாக அவர்களுடைய கட்சிக்காரர்களே சொன்னார்கள்.

அவ்வளவுதான்.. "எப்படி எங்கள் 'அஞ்சாநெஞ்சனை' கட்சியை விட்டு நீக்கலாம்?" என்று போர்க்கொடித் தூக்கினார்கள் மதுரையைச் சேர்ந்த உடன்பிறப்புகள். இவர்களுடைய கோரிக்கை ஒரு கட்சி சம்பந்தப்பட்டது. ஆட்சி சம்பந்தப்பட்டதல்ல. அப்படியானால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அப்படியே ஒரு லாரியையோ, பஸ்ஸையோ பிடித்து சென்னைக்கு வந்து 'அறிவால'யத்தை முற்றுகையிட்டுத் தங்களது கோரிக்கையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? பஸ் மறியல்.. தர்ணா.. கடையடைப்பு போராட்டம்..

நான்கு நாட்களாக மதுரையிலிருந்து புறநகர் பஸ்கள் கிளம்ப முடியவில்லை. மதுரையின் பல இடங்களிலும் தொடர்ச்சியான பஸ் மறியல். பயணிகள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்பது அப்போது பயணிகளில் ஒருவனாய் மதுரையில் இருந்த இந்த உண்மைத்தமிழனுக்கும் தெரியும்.

போலீஸ் மறியல் செய்பவர்களைக் கைது செய்யும். உடனே அவர்களை மதுரை எல்லைக்குக் கொண்டு போய், ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிட்டு வருவார்கள். மறுபடியும் அந்தத் தொண்டர்கள் பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மறியலில் உட்கார்ந்திருப்பார்கள். மறுபடியும் போலீஸ் வரும். கைது செய்வதாகச் சொல்லி அனுப்பானடியைத் தாண்டி கொண்டு போய் விட்டுவிட்டு வருவார்கள். இதே கதைதான் நான்கு நாட்களும் நடந்தது.

அதாவது அரசும், ஆளும் கட்சியும், அதன் தலைவர்களும், தொண்டர்களும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினார்கள். ஆனால் இந்த விளையாட்டின் இடையில் மாட்டிக் கொண்டு தவியோ தவி என்று தவித்தவர்கள், என்னைப் போன்ற அப்பாவி பொதுமக்கள்தான். இத்தனை காவல்துறையினர் இருந்தும் என்ன புண்ணியம்? எந்தக் காவல்துறை அதிகாரி அந்த நேரத்தில் பொறுப்பாக பணி செய்தார்? அனைவருமே கண்துடைப்பு வேலையைத்தான் செய்தார்கள்.

'உடன்பிறப்புகள்' என்ற பெயரில் உலா வந்த ரவுடிகள், நான்காவது நாளில் செய்ததுதான் மிகக் கொடுமை. மதுரை கோரிப்பாளையத்தில் மீனாட்சி கல்லூரியின் அருகே வந்து கொண்டிருந்த இரண்டு நகரப் பேருந்துகளை நிறுத்திய தொண்டர்கள் என்ற ரெளடிக் கும்பல், அந்தப் பேருந்துகளிலிருந்த அனைத்துப் பயணிகளையும் இறக்கிவிட்டு ஓட ஓட விரட்டியடித்துவிட்டு, அந்த இரண்டு பஸ்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தியது.

நாசமானது பஸ்கள் மட்டுமா? நல்லதொரு அரசாட்சி என்ற பெயரும், ஜனநாயகம் என்ற வார்த்தையும்தான்..

இரண்டு சகோதரர்களுக்கிடையே நடந்த நீயா? நானா? போட்டியில் மக்களுடைய வரிப்பணத்தில் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய பேருந்துகள் எரிந்து சாம்பலானது..

இதற்கு யார் பொறுப்பு? இந்த 10 லட்சத்தை இப்போது யாரிடமிருந்து வசூல் செய்வது? சரி.. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகளையாவது காவல்துறை என்ன செய்தது? அடையாளத்திற்கு 4, 5 பேரை கைது செய்தது.. ஆனால் வழக்கு விசாரணை இன்னமும் முடியவில்லை. காரணம், வழக்கு கோர்ட்டுக்கே இன்னும் வரவில்லை.

இது ஒருவகையில் ஜனநாயகப் படுகொலைதானே.. இதை ஏன் என்று கேட்கக்கூடாது, மக்கள் தங்களது மனதில் இதைப் பற்றிய அசிங்கத்தையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்றால், இது இந்தக் கேடு கெட்ட, கேவலம் கெட்ட அரசியல்வாதிகளின் சர்வாதிகார உணர்வைத்தானே காட்டுகிறது..//

இதை எழுதி மூன்று நாட்கள்தான் ஆனது.. அதற்குள் இன்னொரு அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் மதுரை உடன்பிறப்புகள். இவர்களை 'உடன்பிறப்புகள்' என்று சொல்வதைவிட 'மு.க.அழகிரி ஏவிவிட்ட ரவுடிகள்' என்றே சொல்லலாம். சன் டிவியே இந்த வார்த்தையை உச்சரித்த பிறகு, உண்மைத்தமிழன் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

"கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது குற்றமா..?" என்று கேட்கிறார் கலாநிதி மாறன்..

"தமிழகம் முழுக்க என்னோடு வந்து பார்க்கச் சொல்லுங்கள் அந்த 'ஜென்மங்களை'.. அப்போதுதான் இந்த அழகிரி யார் என்பது அந்த 'ஜென்மங்களுக்குத்' தெரியும்.." என்று கொதித்துள்ளார் மதுரையின் பட்டத்து இளவரசர் மு.க.அழகிரி.

இருவருக்கும் இடையிலான குடும்பப் பகையில், இப்போது பலிகடாவாக்கப்பட்டுள்ளது மூன்று அப்பாவி குடும்பங்கள்.

மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சக்கரவர்த்தித் திருமகனுக்கு, பல்லக்குத் தூக்கத் தேவைப்படும் ஆறுபேர் அளவுக்குத்தான் செல்வாக்கு உள்ளது என்று எழுதினால், யாருக்குத்தான் கோபம் வராது..? அரசரின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு வீரர்களின் செல்வாக்கைக் காட்ட வேண்டாமா? பொங்கி எழுந்தது வீர மறவர் கூட்டம்.

'தினகரன்' பத்திரிகையை அதன் அலுவலக வாசலிலேயே கொளுத்தி தங்களது விசுவாசத்தைக் காட்டும் உடன்பிறப்புகளுக்கிடையேயான போட்டியில் முதலில் வென்றவர் மதுரை மாநகரத் தாய் திருமதி தேன்மொழி. உடன் அவரது கணவரும் மதுரை மாநகரத்தின் மறைமுகத் தந்தையுமான கோபிநாதனும் உடன் இருக்க.. இவர்கள்தான் இந்தச் சம்பவத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர்.

'மாநகரத் தாயே' கல்லெறியத் துவங்கும்போது 'பிள்ளைகள்' எப்படியிருப்பார்கள்?

பொதுமக்கள் வரியாக அரசுக்குச் செலுத்தியப் பணத்தில் வாங்கப்பட்ட, முற்றிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான பேருந்துகள் நாசமாக்கப்பட்டுள்ளன..

ரவுடிகள் இப்படிப் பட்டப் பகலில் சோடா பாட்டிலைத் தூக்கி வீசுவதை வேடிக்கை பார்த்துள்ளனர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர்.

பெட்ரோல் குண்டுகளை வீசி அலுவலகம் எரியூட்டப்படும் சினிமா வன்முறைக் காட்சிகளை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு, பத்திரமாக முகாமிற்குத் திரும்பியுள்ளது காவல்துறையின் கமாண்டோ படை.

பொறுக்கியெடுத்த கற்கள், கண்ணாடிகளை பதம் பார்க்கும்வரையிலும் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கும் போலீஸார், கடைசியில் ஓரமாகச் சென்று வீசும்படி சைகை காட்டியுள்ளனர்.

இடையிடையே போனில் வரும் அழைப்புகளுக்கு 'சரிங்கண்ணேன்'.. 'சரிங்கண்ணேன்'.. 'இல்லண்ணேன்'.. என்று 'அண்ணனுக்கு' மரியாதை செய்து வன்முறைக் கும்பலுக்கு பக்க பலமாக இருந்துள்ளனர் காவல்துறையின் கருப்பு ஆடுகள்.

எப்படியும் 'தினகரன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்படும் என்பது நன்கு அறிந்திருந்தும் அப்படியரு பத்திரிகை அலுவலகம் மதுரையிலேயே இல்லை என்பதைப் போல் நடந்து கொண்டு தமது விசுவாசத்தை 'மதுரை இளவரசருக்கு'க் காட்டியிருக்கிறார்கள், அரசு சம்பளம் பெறும் காவல்துறையின் உளவுப் பிரிவு உயரதிகாரிகள்.

காவல்துறையினர் ஏதோ காது குத்தும் விழாவிற்கு பிரியாணி சாப்பிட வந்தவர்கள்போல் கையில் கம்பையும் வைத்துக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க.. ரவுடிகள் அச்சகத்தை உண்டு, இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையும் புகைப்படம் எடுக்கிறார்களே என்ற பய உணர்வுகூட இல்லாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால் இது யார் கொடுத்த தைரியம்? எங்கிருந்து வந்தது?

செல்போனில் பேசிக் கொண்டே காரில் வந்திறங்கிய கலெக்டர் பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டேயிருக்கிறார். அடிபட்டவர்கள் மொத்தமாக கதறிய கதறலை முழுமையாக அவர் கேட்டிருப்பாரா என்பது சந்தேகமே...

காவல்துறை உயரதிகாரிகளுடன் மோதுகிறார்கள் பத்திரிகை ஊழியர்கள். "உங்களது காவலர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.." என்று நேருக்கு நேர் குற்றம் சாட்டுகிறார்கள். "அதை அப்புறம் பார்க்கலாம்.. இப்ப நீங்க மறியலை கை விடுங்க.." என்று சின்னப்புள்ளைக்கு மிட்டாய் ஆசை காட்டுவதைப் போல் பேசுகின்றனர் காவல்துறை உயரதிகாரிகள்.

தன்னுடைய ஒரு கண்ணில் ஆபரேஷன் செய்திருந்தாலும், நிலைமையின் தீவிரம் உணர்ந்து ஓடி வருகிறார் மதுரை போலீஸ் கமிஷனர். அவரும் அதைத்தான் சொல்கிறார். "நடவடிக்கை எடுக்கப்படும்.." என்று.. யார் மீது என்பதை கவனமாகச் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அவர் பாவம் என்ன செய்வார்? தமிழகக் காவல்துறையில் இருப்பவர்களிலேயே சிறந்த பக்திமான் இவர்தான்..

மாதம் 5000 ரூபாய் பிச்சைக்கார சம்பளத்தில் கூலியாட்களாக வேலைக்கு வைத்திருந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் இருவரும், மாதம் 2000 ரூபாய் சம்பளத்தை அள்ளித் தந்ததற்காக பெண் வேலையாட்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டுத் தன்னுயிரை நீத்துவிட்ட படிக்காத மேதையான அந்த செக்யூரிட்டி இறந்து விட்டச் செய்தி கிடைத்ததும், விமானத்தில் மதுரைக்கு அவசரமாகப் பயணமாகிறார் இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்.

முதல்வரின் 'பேரன்' வருகிறார் என்றவுடன் முதல்வரின் 'மகனி'டம் செய்தியைச் சொல்லிவிட்டு பேரனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் காத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். பேரன் வந்தவுடன் அவருடன் இணக்கமாகப் பேசி தான் செய்து வைத்திருக்கும் தற்காலிக ஒட்டு வேலைகளைச் சொல்லி அப்போதைக்கு "தேங்க்ஸ் ஸார்.." என்று ஒற்றைவரி வாக்கியத்தை மட்டும் தனக்காக வாங்கிக் கொள்கிறார் கலெக்டர்.

16 நாட்கள் தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி இறந்த உடலைக்கூட "இப்ப நேரமில்ல. சாயங்காலமாயிருச்சு.. டாக்டர் இல்லை.. மயக்க ஊசி டாக்டர் லீவு.. 16 நாள் பொறுத்த.. இன்னொரு நாள் பொறுக்கக்கூடாதா? நாளைக்கு பண்ணிக்கலாம்.. போ.. போ.." என்று 'பொருள்' இல்லாதவர்களிடம் போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் அடித்து விரட்டும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், இந்த வழக்கில் மட்டும் அவசரம் அவசரமாக களத்தில் இறங்கி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்களை அவசர கதியில் போஸ்ட்மார்ட்டம் செய்து, உடனேயே வெளி வாசலுக்கு அவர்களே கொண்டு வந்து வைத்துவிட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே பாதிக்கப்பட்டவர்களிடம் முதல்முறையாக "ஸாரி.." சொல்லிவிட்டுப் போகிறார்கள். இதே போல் வருகின்ற அனைவரிடமும் இதமாகப் பேசினால் நன்றாக இருக்குமே..

அங்கேயே பேட்டியளிக்கிறார் நிறுவனத் தலைவர். குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விட மாட்டேன் என்று சூளுரைக்கிறார்.
இங்கே சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. பாவம் எம்.எல்.ஏ.க்கள்.. எம்.எல்.ஏ. என்பதால் சென்னையில் யாரும் அவர்களுக்கு வீடு கொடுக்கவில்லையாம். சொந்தமாக வீடு இருந்தால் தொகுதி மக்கள் யாராவது சென்னைக்கு வந்தால் அவர்களை சென்னையில் தங்களது வீட்டிலேயே தங்க வைத்து உபச்சாரம் செய்வதற்கு உதவியாக இருக்குமாம்.. இதனால் அரசே வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிக் கொண்டிருந்தார் ஒரு எம்.எல்.ஏ.

இன்னொரு எம்.எல்.ஏ., "எங்களது மண்டையில் இருப்பதாகச் சொல்லப்படும் மூளையைப் பிய்த்துக் கொண்டு XML, JAVA போன்ற Software-களின் துணை கொண்டு மக்களின் குறை தீர்க்க மென்பொருள் தயாரிக்கிறோம். எங்களுக்கு கொடுக்கின்ற சம்பளம் ஒரு Software Company-யில் வாட்ச்மேன் வாங்குற சம்பளம்.. எங்களுக்கு எப்படிப் பத்தும்..? இனிமேல் 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுங்கள்.." என்று உரிமைக்குரல் எழுப்புகிறார்.

முதல்வருக்குத் துண்டுச் சீட்டு வருகிறது. எழுந்து தன் அறைக்குச் சென்று அவருக்குப் பிடித்தமான சேனலைப் போட்டுப் பார்க்கிறார். தான் இன்றைக்கு முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு முழுக் காரணமாகத் திகழும் அந்த டிவியின் அலுவலகம் தாக்கப்படுவதை கண் கொண்டு பார்க்கிறார். அவர் மனம் அழுகிறது. இவர்தான் எழுத்தாளராச்சே.. வயிற்றைத் தவிர மற்றதெல்லாம் அழுகும். உடனே அருகிலிருந்து கைத்தடிகளிடம் "பொன்விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்யுங்கள்.." என்கிறார்.

"ஐயையோ.. அதெப்படிண்ணே.. எல்லாருக்கும் டிக்கெட் போட்டாச்சு.. பிரைம்மினிஸ்டரும், டெல்லி அம்மாவும் வர்றாங்க.. நாங்களும் அவுகளை இப்படி ஏதாவது ஒண்ணு சொல்லி மிரட்டி வரவழைச்சு நேர்ல பார்த்தாத்தான்.. எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு?" என்று கண் கலங்குகிறார்கள். தலைவரும் டிவியைப் பார்த்து அழுகிறார். பார்ப்பவர்களும் அப்போதுதானே அழுவார்கள்.

திரும்பத் திரும்ப வாசிக்கப்படும் "மு.க.அழகிரி ஏவிவிட்ட ரவுடிகள்.." என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அவர் கண்ணில் நீர் கசிகிறது.

"இப்படி நல்ல பெயரை எடுப்பான் என்பதற்காகவா இவனுக்கு நான் மிகவும் நேசித்த பாட்டாளி வீரன் பட்டுக்கோட்டை அழகிரியின் பெயரைச் சூட்டினேன்.. என் இளமைப் பிராயத்தில் நான் 'மைனர்' தோரணையில் இருந்தபோது பிறந்தவனாச்சே. சூடாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், இவ்வளவு சூடாக இருக்கிறானே.." என்று இளகினார் தலைவர்.

இனி தலைவரைச் சம்மதிக்க வைப்பது அவரது தன்மானத்திற்கு இழுக்கு என்பதால் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குச் செய்தி பறக்கிறது. கேன்டீனில் வடை சாப்பிடப் போனத் தலைவர்களும், வீட்டுக்குச் சாப்பிடப் போனவர்களும் அரக்கப் பரக்க ஓடி வருகிறார்கள். அனைவரும் எதிரில் அமர்கிறார்கள். உள்ளே வரும் போதே அவர்களது காதோரம் செய்தி நுழைக்கப்படுகிறது. "எப்படியாவது தலைவரை பொன்விழா நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்ள வையுங்கள்" என்று..

தலைவருக்கோ தர்மசங்கடம்.. தானே அறிவித்ததை தானே எப்படி நீக்குவது? அப்படி நீக்கினால் கூடியிருப்போரில் ஒருவன், நாளை தான் 'போன' பிறகு எங்காவது வெளியில் சொல்லியோ, அல்லது எழுதியோ மானத்தை வாங்கிவிட மாட்டானா என்ற எண்ணம்.(பாம்பின் கால் பாம்பறியுமே?) இது மாதிரி தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எத்தனை வாபஸ்களை அறிவித்திருப்பார்? எத்தனை வாபஸ்களை வாபஸ் வாங்கியிருப்பார்? அவருக்குத் தெரியாதா என்ன?

கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கோ அதைவிடத் தர்மசங்கடம்.. இப்போது நாம் இவரைச் சமாதானப்படுத்தாமல் போய்விட்டால், இவர் பின்னாளில் ஏதாவது கவிதை எழுத நம்மை ஒழித்து விடுவாரே என்று.. ஆகவே ஒவ்வொருவராக நம்ம குடும்பம்தான், நம்ம பிள்ளைகள்தான், எப்படியாச்சும் பின்னாடி சமாதானமாயிருவாங்க.. என்பதைச் சொல்லி "பொன்விழாவை நிறுத்த வேண்டாம்.." என்கிறார்கள். ஒரு அமைச்சரின் அசைவைப் புரிந்து கொண்டு, "காண்ட்ராக்ட்டெல்லாம்கூட விட்டாச்சு.. முக்கால்வாசி வேலை முடிஞ்சிருச்சு. இப்ப போய்.." என்கிறார்கள்.

தலைவர் பதிலேதும் சொல்லாமல் எழுந்து வணக்கம் போட்டவர் "வீட்டுக்குப் போலாம்.." என்கிறார். நேரில் இங்கேயே பதிலைச் சொல்லிவிட்டால் கவுரவம் என்னாகுறது? அதுதான்.. கிளம்புகிறார். வீடு நோக்கிச் செல்லும் கார், பாதி வழியிலேயே கட்சி அலுவலகத்திற்குச் செல்கிறது. சில நிமிட நேரத்தில் ஒரு வழவழ... கொழாகொழா... அறிக்கை, கட்சி அலுவலகத்திலிருந்து பத்திரிகைகளுக்கு பேக்ஸ் மூலம் செல்கிறது. அதிலே பொன்விழாவிற்கு தலைவர் ஒத்துக் கொண்ட செய்தியும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி சேனல் இதுதான் சமயம் என்று ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்திவிட்டு ஸ்பெஷல் நியூஸ் ஒன்றை போட்டு தன் 'பாசத்தை' வெளிக்காட்டிக் கொண்டது.

பாதிக்கப்பட்ட டிவியின் இரவு நேரச் செய்தியிலும் 'மு.க.அழகிரி ஏவி விட்ட ரவுடிகள்' என்றே வர்ணிக்க.. "அப்படி கூப்பிடுறதையாச்சும் நிறுத்தச் சொல்லுங்கய்யா.." என்று வீட்டில் தான் வளர்க்கும் நாயைத் தவிர மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் தலைவர். அவர் கஷ்டம் அவருக்குத்தானே தெரியும். என்ன இருந்தாலும் புள்ளையைப் பெற்றவர் அவராச்சே.. 'முடியாது' என்று இப்போதும் சேனலிலிருந்து பதில் வருகிறது.

ஆனாலும் ஒரு ஜாக்கிரதை உணர்வை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி என்றோ.. அல்லது முதல்வர் திரு.மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி என்றோ டிவிக்காரர்களும் சொல்லவில்லை. இதிலேயும் ஒரு சாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள் போலும்..
இணையதளப் பத்திரிகைள் சில நேர்மையாக நடந்து கொண்டு இந்தச் சம்பவம் பற்றியச் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தினமலர்' எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தன்னுடைய சந்தோஷத்தை வெளியில் மறைத்துக் கொண்டு சாதாரணமாக வெளியிட்டது.

இதே 'தினமலர்' பத்திரிகை பத்தாண்டுகளுக்கு முன்பு மதுரை-பழங்காநத்தத்தில் உள்ள தன் அலுவலகம் இதே மு.க.அழகிரி ஏவி விட்ட ரவுடிகளால் தாக்கப்பட்டபோது எட்டுப் பக்கத்திற்கு புகைப்படங்களைப் போட்டு தன்னுடைய புகைப்படக்காரர்களுக்கு ஒட்டு மொத்தமாக வேலை கொடுத்தது எனது நினைவுக்கு வந்து சென்றது. தனக்கென்று வந்தால் நோய்.. மற்றவர்களுக்கு வந்தால் அது நடிப்பு என்னும் பிறவிகள் லிஸ்ட்டில் பத்திரிகைக்காரர்களும் இருக்கிறார்களே என்று நினைத்தால் வேதனை கூடுகிறது..

இதிலும் அவர்களுக்கு கூடுதலாக ஒரு கோபமாம். 'தினமலர்' குடும்பத்தில் நடக்கும் குடுமிப்பிடிச் சண்டைகளை போன வாரம்தான் தினகரன் வெளிப்படையாகப் போட்டு உடைத்தது.. சும்மா இருப்பார்களா அவர்கள்..
மறுநாள் பேப்பரில் முதல் பக்கத்தில் 'நாய் தொல்லை' என்ற சிலேடையான செய்தியைப் போட்டுவிட்டு, 16-ம் பக்கத்தில் single 1/4 column-த்தில் செய்தியை வெளியிட்டிருக்கிறது. வாழ்க பத்திரிகை தர்மம்..

இவர்கள் இப்படியென்றால் 'தினத்தந்தி'. அவர்கள் எப்போதுமே வருகின்ற ஆட்சியாளர்களுக்கு ஜால்ராதான். காரணம் சிம்பிள். அவர்களது தேவை பணம்தான். வேறு எதுவுமில்லை. எனவே அவர்களும் உட்புறம் சிறிய அளவில் ஒரு செய்தியை வெளியிட்டு தன்னுடைய வயித்தெரிச்சலையும் காட்டிக் கொண்டார்கள்.

சந்தனக்கடத்தல் வீரப்பன் காட்டுக்குள் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு நேற்று குளித்தான்.. எவ்வளவு தூரம் நடந்தான்.. உடும்புக் கறியை எப்படி சுவைத்துச் சாப்பிட்டான் என்பதையெல்லாம் உடனுக்குடன் சுடச்சுடச் செய்தியாகக் கொடுத்த 'நக்கீரன்', மதுரை என்ற ஊர் எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியாது என்பதைப் போல் மறுநாள் தனது பத்திரிகையை கொண்டு வந்திருக்கிறது. இனி அடுத்த இதழில் சால்ஜாப்பு செய்ய இப்போதே தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

மறுநாள் சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அரசுத் தரப்புச் சொல்லியே கொண்டு வந்தார்கள். அப்போதுதானே அரசு தானே முன் வந்து பேசுவதற்கு ஏதுவாக இருக்கும். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார் மன்னர்.
தன்னுடைய குடும்பப் பகைச் சண்டையால் விளைந்த ஒரு கொடுமைக்கு, மக்கள் பணத்தில் இருந்து இப்படிப் பணத்தை அள்ளி வீசுகிறோமோ என்ற வெட்கமெல்லாம் அவருக்கு இல்லை. அது அவரிடம் இருக்கிறதா என்ன?

தாத்தா அறிவித்தவுடன் பேரன் சுதாரித்துக் கொண்டார். இப்போது அவர்தானே களத்தில் முன்னணியில் நிற்பவர். தாத்தாவை முந்த வேண்டாம். "15 லட்சம் நிதியுதவி.." என்று அறிவித்துள்ளார். எரிக்கப்பட்ட ஊழியர்களின் வாகனங்களை தானே வாங்கித் தரப் போவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இனி இவருக்குப் போராடத் துணையாக நிற்கப் போவது இவருடைய ஊழியர்கள் மட்டும்தானே.. அள்ளிக் கொடுப்பதில் தவறில்லை. எவ்வளவு கொடுத்தாலும் அந்தக் குடும்பத்திற்கு ஒரு உயிர் உடன் இருந்தது போலாகுமா?

காலையிலிருந்து மாலை வரை போன் மேல் போன் வந்தால் போலீஸ் என்ன செய்யும்? எந்த செக்ஷனில் வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு அது சட்டம்-ஒழுங்கு டிஜிபிவரைக்கும் சென்று அங்கேயே தொலைபேசியில் தொங்கிக் கொண்டு விட்டது.. கடைசியாக தலைவருக்கு நெருக்கமான அமைச்சரே 'சாதாரணமாகப் போட்டுத் தள்ளுங்கள்' என்று வெறுப்போடு சொன்ன பிறகே, செக்க்ஷன் பிரிவை மையால் நிரப்பியுள்ளது போலீஸ்.

ஆறு பேர் கைது ஓரிடத்தில். வேறொரு இடத்தில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தியவுடன் ஜாமீனில் விடுதலை. வேறென்ன செய்ய முடியும்?
இங்கு அரசாட்சிதானே நடக்கிறது.. மக்களுக்காக, மக்களால் நடத்தப்படுகின்ற ஜனநாயக ஆட்சியா நடக்கிறது.. அரசரும் மனம் நோகக்கூடாது. பட்டத்து இளவரசரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது.. தளபதியின் முகத்திலும் சிரிப்பைக் காண வேண்டும். சிற்றரசர்களையும் குளிர்விக்க வேண்டும். ரதகஜப்படைகள் வேறு என்னதான் செய்வார்கள்?

போலீஸ் கண் முன்பே தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் உலகத் தமிழர்களின் தற்காலிகத் தலைவர்.. அவருக்கும் வேறு வழியில்லை. இந்தத் தள்ளாத வயதிலும் தன்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டேன்கிறார்களே என்று அவ்வப்போது முதுமையின் காரணமாக உளறிவிட்டாலும், பின்பு வீட்டிற்குச் சென்றவுடன் சுதாரித்துக் கொண்டு கேள்வி-பதிலாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி கணக்கைச் சரி செய்து கொள்வார்.

மறுநாள் பாதிக்கப்பட்ட டிவி தன் 'சுருதி'யைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டுள்ளது. அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்? சொத்து கேட்டார்கள். பங்கு பிரித்துக் கொடுத்தாகிவிட்டது. சீரியலுக்கு டைம் கேட்டார்கள் கொடுத்தாகிவிட்டது. இப்போது வந்து தன் மருமகனுக்காக, ஒரு சேனலையே கேட்டால் தர முடியுமா? என்னதான் உடன் தொட்டுப் பிடித்து விளையாடி வளர்ந்தவர்கள் என்றாலும் பக்கத்து வீட்டுக்காரன் கேட்கிறானே என்பதற்காக யாராவது மனைவியைத் தாரை வார்ப்பானா? அவர்களுக்கும் அரசை முழுமையாகக் கை விட முடியாது.. அண்டி நிற்கவும் முடியாது..

சமாதானத்திற்குத் தயார் என்றாலும் ரவுடிகளை ஏவிவிட்ட மெகா ரவுடி மீது நடவடிக்கை எடுத்தால்தான் என்று பேரன் ஒற்றைக் காலில் நிற்கிறார். மகனை 'உள்ளே' தள்ளினால், தான் நிஜமாகவே மனுநீதிச்சோழனாகிவிடுவனே என்று தந்தைக்கு ஒரு ஆற்றாமை..

என்னதான் நடக்கும்?

ஒன்றும் நடக்காது.. சி.பி.ஐ. வரும். சிலரைக் கைது செய்வார்கள். அதில் 'அட்டாக்' பாண்டியன் என்பவர் உறுதி. ஏனெனில் அவர் பெயரில்தான் 'அட்டாக்' என்கிற வன்முறைப் பெயர் ஒட்டியிருக்கிறதே.. கைது செய்வது ஈஸி.
கைது செய்யப்பட இருக்கும் அனைவருமே, "நாங்களாகத்தான் செய்தோம். இதில் யாருக்கும், குறிப்பாக அண்ணனுக்கு சம்பந்தமே இல்லை..." என்று அழகாக டைப் செய்தே வாக்குமூலம் தருவார்கள். கோர்ட்டுக்குப் போகும். அதற்குள் சாட்சிகளைக் கலைக்கும், குலைக்கும் வேலையில் உடன்பிறப்புகள் இறங்குவார்கள்.

"திருமலை நாயக்கர் மஹாலுக்குள்ள உனக்குன்னே குழி தோண்டிருக்கும்ப்பூ.." என்று மிரட்டல் வரும். சாட்சிகள் ஓடி ஓளிவார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கே, இன்னொரு சிபிஐ டீம் வர வேண்டி வரும்..

இதோ அடுத்து தீவுத்திடலுக்குத் தயாராகிவிட்டது பாதிக்கப்பட்ட, அடி வாங்கிய அந்த டிவி. யார், யாருக்கு எந்தெந்த இடம், கேமிரா என்பதெல்லாம் முடிவாகி final situtation chart தயாராக உள்ளது.

'டெல்லி அம்மா' வருகிறார். கூடவே பிரதமர் என்று சொல்லப்படுபவரும் வருகிறார். இருவரும் தங்களுக்குத் தெரிந்த மொழியில் இத்தனை காலம் தங்களுக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி தெரிவிக்கப் போகிறார்கள். அரசர் மனம் மகிழ்வார். சிறிது நேரம் மகனையும், பேரனையும் மறந்திருப்பார். ஆனால் பேசும்போது உணர்ச்சிவசப்படுவார்.
தான் காலத்தின் கட்டாயம் என்று தமிழக மக்கள் உணர வேண்டும் என்பார். முடிந்தால் கண் கலங்கி, அழுதும் சீன் காட்டுவார். பார்தத உடன்பிறப்புகள் "பிள்ளைக அடிச்சிக்கிட்டா இவர் என்னய்யா பண்ணுவார்? இவரை மாதிரி ஒரு அப்பன் எனக்கெல்லாம் கிடைச்சிருந்தா..?" என்று புலம்பிப் புலம்பியே டாஸ்மாக் கடையை நோக்கிப் படையெடுப்பார்கள்.

அதற்கு முன் இன்று உ.பி. சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து ஒரு இராமாயணமோ, மகாபாரதமோ உ.பி.யில் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு நடக்கும். மக்கள் இதில் மூழ்குவார்கள்.

இதன்பின் அடுத்தத் துணை ஜனாதிபதி யார்? ஜனாதிபதி யார்? என்று உலகப் புகழ் பெற்ற ஏ.சி.நெல்சன் என்ற சர்வே நிறுவனம், சன் டிவி என்ற நிறுவனத்தோடு இணைந்து சர்வே செய்யும். தமிழக மக்கள் ஆர்வத்துடன் அதற்கு ஓட்டளிப்பார்கள்.

இடையிடையே நம்முடைய மருத்துவர் ராமதாஸ் "இந்த ஆட்சி மோசம். ஆனால் ஐந்தாண்டு காலம் ஆட்சிக்குத் துணையிருப்போம்.." என்று சொல்லி மக்களை நகைச்சுவைக் கடலில் ஆழ்த்துவார்.

அடுத்த மாதம் 'சிவாஜி' வந்துவிடுவார். அப்புறம் ஷ்ரேயாவுக்கு ஜாக்கெட் தைத்தது எப்படி? சாலமன்பாப்பையா தனக்கு ஜோடியாக நடித்தவரிடம் எப்படியெல்லாம் ஜொல்லு விட்டார்.. 'சிவாஜி' எவ்ளோ வசூல்.. வசூலான தொகையில் எத்தனை பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாவாக வெளிநாடு சென்றார்கள்.. 'சிவாஜி'யால் அரசுக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது? மருத்துவர் ராமதாஸ் 'சிவாஜி' போஸ்டரை பார்க்காமல் இருப்பதற்காக, 'சிவாஜி' போஸ்டர்கள் இல்லாத இடங்கள் வழியாகப் பயணம் செய்த அனுபவத்தை அவர் உடன் சென்ற ஒரு பத்திரிகையாளர் அனுபவமாக எழுதப் போகிறார். இவ்வளவு தகவல்கள் நமக்காகக் காத்திருக்கிறது...

இதற்கிடையில் குடும்ப நிகழ்ச்சியன்றில் 'புகழ்' என்கிற சன் டிவியின் முதலாளி கலாநிதி மாறனும், பிடிக்காதவர்கள் மீது ரவுடிகளை ஏவி விடும் வழக்கமுள்ள மெகா ரவுடி மு.க.அழகிரியும் கை குலுக்கினார்கள் என்று புகைப்படத்துடன் செய்தி ஒன்றும் வலுக்கட்டாயமாக வெளிவந்திருக்கும். அருகில் மகனுக்கு அப்பனும், பேரனுக்குத் தாத்தாவுமான பேரரசர் பெருமிதத்துடன் இருப்பதையும் சேர்த்துப் போட்டிருப்பார்கள்.

தயவு செய்து அந்தத் துர்பாக்கியச் செய்தியை நீங்கள் யாராவது பார்த்தீர்களானால், இப்போது இறந்து போன அப்பாவிகளின் குடும்பத்தாரிடம் மட்டும் அதைக் காட்டிவிடாதீர்கள். பாவம், அவர்கள் வீட்டில் இன்னொரு உயிரும் பொக்கென்று போய்விடும்..

தமிழக அரசியலுக்காகப் பலியான பல அப்பாவிக் குடும்பங்களில் தாங்களும் ஒன்று என்ற தியாக உணர்வோடு அவர்கள் இருக்கின்றவரைக்கும் நிம்மதியாக இருக்கட்டும்..
உண்மைத்தமிழன் வேறென்ன சொல்வது?

ஜெய்ஹிந்த்

12 comments:

துளசி கோபால் said...

நாட்டு நடப்பை அப்படியே கொட்டிட்டீங்க.

படிச்ச( பதிவைப் படிச்ச) எனக்கே அவமானமா இருக்கு(-:

தமிழ்நாட்டின் தலைவிதி........... பாவம் மக்கள்ஸ்.

சென்ஷி said...

:(((

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Anonymous said...

தமிழய்யா , யுனிகோடில் எழுதலாமல்லவா ? எழுத்துக்கள் தமிழ்நாட்டின் தலைவிதி போல தெரிகிறது

Anonymous said...

மிக நீண்ட பதிவானாலும், அருமையான, யதார்த்தமாக நடக்கும், நடக்கப் போகும் செயல்களை சொல்லியிருக்கிறீர்கள்...

என்றுதான் திருந்தப் போகிறார்களோ தமிழக மக்கள்...

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
நாட்டு நடப்பை அப்படியே கொட்டிட்டீங்க.

படிச்ச( பதிவைப் படிச்ச) எனக்கே அவமானமா இருக்கு(-:

தமிழ்நாட்டின் தலைவிதி........... பாவம் மக்கள்ஸ்.//

நாட்டு மக்களுக்குத்தான் அவமானம்.. அவுங்களுக்கு இல்ல மேடம்.. அவுங்க அதையெல்லாம் துறந்து ரொம்ப வருஷமாச்சு..

தங்களது வருகைக்கும், பொறுமையாகப் படித்தமைக்கும் எனது நன்றி துளசி மேடம்..

உண்மைத்தமிழன் said...

//சென்ஷி said...
:(((

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.//

நம்மால் முடிந்த ஒரே விஷயம் இதுபோல் இறைவனிடம் பிரார்த்திக் கொள்வதுதான்..

நன்றி சென்ஷி..

உண்மைத்தமிழன் said...

//கரு.மூர்த்தி said...
தமிழய்யா , யுனிகோடில் எழுதலாமல்லவா ? எழுத்துக்கள் தமிழ்நாட்டின் தலைவிதி போல தெரிகிறது//

கருமூர்த்தி ஐயா,

நான் யுனிகோட் font-ல் convert செய்துதான் பதிவை இடுகிறேன். உங்களுடைய கம்ப்யூட்டர் win-98 என்று நினைக்கிறேன்.

தயவு செய்து net-ல் இருந்து latha font-ஐ download செய்து install செய்யவும். அதன் பின் பாருங்கள் மணிமணியாகத் தெரியும்..

Win-Xp என்றால் ஒரு குறையும் இருக்காது.. நீங்கள் ஒருவர்தான் இது மாதிரி சொல்கிறீர்கள்..

ஆனாலும் தங்களது மேலான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
மிக நீண்ட பதிவானாலும், அருமையான, யதார்த்தமாக நடக்கும், நடக்கப் போகும் செயல்களை சொல்லியிருக்கிறீர்கள்...

என்றுதான் திருந்தப் போகிறார்களோ தமிழக மக்கள்...//

நன்றி அனானி அவர்களே..

தமிழக மக்கள் என்றைக்கு எதையுமே உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவதைக் கைவிட்டு அறிவுப்பூர்வமாக அணுகுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்தக் கேடு கெட்ட அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்கும்.

அதுவரையிலும் இப்படித்தான். வேறு வழியில்லை.. சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

தென்றல் said...

நல்ல அலசல், உண்மைத் தமிழன்!

'கழுகு பார்வை' பதிவு!

/'டெல்லி அம்மா' வருகிறார். கூடவே பிரதமர் என்று சொல்லப்படுபவரும் வருகிறார்./

இது நச்...!

பெரிய கடவுளே.. நாங்கள் என்ன தவறு செய்தோம்..எங்களால் தாங்கக் கூடிய சோதனையை மட்டும் தாருங்கள்... ;(

ம்ம்ம்.. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

உண்மைத்தமிழன் said...

//தென்றல் said...
நல்ல அலசல், உண்மைத் தமிழன்!

'கழுகு பார்வை' பதிவு!

/'டெல்லி அம்மா' வருகிறார். கூடவே பிரதமர் என்று சொல்லப்படுபவரும் வருகிறார்./

இது நச்...!

பெரிய கடவுளே.. நாங்கள் என்ன தவறு செய்தோம்.. எங்களால் தாங்கக் கூடிய சோதனையை மட்டும் தாருங்கள்... ;(//

நன்றி தென்றல்..

இப்போதைய நிலைமையில் நம் போன்ற சாதாரண பகுத்தறிவுவாதிகளால் இப்படி ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வது மட்டும்தான் முடியும். வேறென்ன செய்வது?

Anonymous said...

எல்லாத் தமிழனுக்கும் நல்ல செருப்படி கொடுத்துள்ளீர்கள். ஆனா நமக்கெல்லாம் எங்கே உறைக்க போகுது !!

Anonymous said...

இதுக்கு முன்னாடி எத்தனை தடவை அழகிரி மதுரைல வெறியாட்டம் ஆடியிருக்கார். அப்பல்லாம் இந்த தினகரன் பத்திரிகைக்காரனும், சன் டிவியும் என்ன பண்ணினானங்க? கண்டுக்காமத்தான போனாங்க..? இப்ப.. தனக்குன்னு வந்தவுடனே தாம்..தூம்னு வானுக்கும், பூமிக்குமா குதிக்கிறானுக.. என்னைக் கேட்டா இதெல்லாம் அவனுகளுக்குத் தேவைதான்..