"யாருக்கும் இங்கே வெட்கமில்லை"

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"நாடாளப் பிறந்தவர்கள் நாங்கள். கேள்வி கேட்காமல் அடங்கிச் செல்பவர்கள்தான், சாதாரண மக்களாகிய உங்களுடைய வேலை.." என்பதை இன்னொரு முறையும் நமது தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்துள்ளார்கள்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று தமிழகச் சட்டப் பேரவையில் பொதுச் சொத்துக்கள் சேத வசூல் சட்டத்தை வாபஸ் பெறுவதாக தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், "நாங்கள் யாருக்கும் அடங்காதவர்கள், ஆண்டவனுக்கே பயப்படாதவர்கள்.. கேவலம் ஒரு பேப்பரில் எழுதப்பட்ட சட்டத்திற்கா பயப்படுவோம்..?" என்று மறைமுகமாக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வெட்கங்கெட்ட அரசியல்வாதிகள் அனைவரும்.

தமிழ்நாட்டில் பொதுச்சொத்துக்களை சேதம் செய்வது என்பது இப்போது என்றில்லை. என்றைக்கு அரசியல்வாதிகள் தங்களது சுயநலத்திற்காக அரசியலில் கால் பதித்து இறங்கினார்களோ, அன்றிலிருந்தே நடந்து வருகிறது. அதிலும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன், இதுவொரு முழு நேரத் தொழிலாகவே மாறிவிட்டது.

இத்தகைய வன்முறைகள் உலகத்தில் வேறெங்கும் நடப்பதில்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. உலகம் முழுவதுமே நடந்து வருவதுதான்.. இல்லை என்று மறுப்பதற்கில்லை.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக என்று நினைக்கிறேன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இரவு நேரத்தில் காரில் வந்து கொண்டிருந்த கறுப்பின இளைஞரை, இரண்டு வெள்ளைக்கார போலீஸார் காரிலிருந்து இறக்கி மாட்டடி அடித்தார்கள், காரணமே சொல்லாமல்.

இதை அருகிலிருந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர், வீடியோவில் படம் பிடித்து தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்க.. அது 'ஊடகத் தர்மப்படி' கர்மசிரத்தையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்தக் கறுப்பின இளைஞருக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு நாம் அதிர்ந்தோமோ இல்லையோ.. அமெரிக்கா அதிர்ந்துதான் போனது.. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வன்முறைகள் வெடித்து, கடைகள் சூறையாடப்பட்டன. பொருட்கள் களவாடப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.

கடைசியில் தாக்கப்பட்ட அந்தக் கறுப்பின இளைஞரே டிவியில் தோன்றி "கலவரம் செய்ய வேண்டாம் மக்களே.. விட்டுவிடுங்கள்.. இப்போது அமைதி காணுங்கள்.." என்று கேட்டுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

இதைச் செய்தவர்கள் யாரோ அல்ல. அதே அமெரிக்க மக்கள்தான்.. ஆனால் இனம் மட்டுமே வேறு. அவர்களுடைய நோக்கம் என்ன? தங்கள் இனத்தவரை, இனவெறியின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதைக் கண்டிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தது சரிதான். ஆனால் போராட்டத்தில் வன்முறை எவ்வாறு வெடித்தது?

இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவருமே இளைஞர்கள்தான். கிடைத்தது ஒரு வாய்ப்பு. துணிந்து விட்டார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பம்தான், அவர்களை அத்தகைய வன்முறையைச் செய்ய வைத்து, சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் நம் ஊரில் நடப்பது என்ன?
ஒரு கட்சித் தலைவருக்கு போனில் யாராவது லேசாக, "எப்படிப்பூ இருக்க..?" என்று நலம் விசாரித்தாலே போதும்.. 'இது ஒரு மிரட்டல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறது.. கண்டித்து ஊர்வலம்..' என்று கிளம்பி விடுகிறார்கள்.
இவர்களது ஊர்வலத்துக்கு வருபவர்களெல்லாம் யார்? கண்டிப்பாக அவர்களுடைய அனுதாபிகளாக இருக்க மாட்டார்கள். வீட்டில் வேண்டாத 'பருப்பு'க்களாக இருப்பவர்கள், வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.. இவர்களைப் போன்ற முகவரி தேடியலையும் இளைஞர்கள்தான். "ஊர்வலத்துக்கு வா.. 300 ரூபா தர்றோம்.. பிரியாணியும், 'சரக்கும்' ப்ரீயா கிடைக்கும்.." - இப்படிச் சொல்லித்தான் இவர்கள் அரசியலுக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாக நுழைபவனுக்கு அரசியல் என்பது சமூக சேவை என்று தோணுமா.. அல்லது மிகக் குறுகியக் காலத்தில் எளிதாக காசு, பணம் பார்க்க ஈஸியானதொரு தொழில் என்று தோணுமா? நோக்கம் உயரியதாக இருந்தால் மட்டுமே அந்தச் செயல் வெற்றியடையும்; பெருமையடையும். இங்கு ஆரம்பமே கோணலாகத்தான் ஆரம்பிக்கிறது.

எதிர்க்கட்சி போராட்டம் நடத்தினால் ஆளும்கட்சி பயப்படுகிறது. காரணம், இந்தப் போராட்டத்திற்கு மக்கள் நிறைய பேர் வந்துவிட்டால் எதிர்க்கட்சி பலமாக இருப்பது மக்களுக்குத் தெரிந்துவிடுமே என்று!! இதைத் தடுக்க வேண்டும் என்று, அவர்கள் தங்கள் வீட்டு நாய்களைப் போல் வைத்திருக்கும் காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்கள்.

உடனே காவல்துறையினர் என்ன செய்கிறார்கள்?
எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் முதலில் கைது செய்து ரிமாண்ட் செய்கிறார்கள். அல்லது கைது செய்வதாகச் சொல்லி கல்யாண மண்டபத்திற்குள் கொண்டு சென்று அடைத்துவிட்டு 'சரவண பவன்' சாப்பாடு வாங்கித் தருவார்கள். ஆனால் தொண்டர்களுக்கு..?

"இன்னிக்கு நீங்க கொடுக்குற அடில, அடுத்த எலெக்ஷன்வரைக்கும் அவன் வீட்டை விட்டு வெளில வரக்கூடாது. அப்படி அடிக்கணும்பா.." - ஆளும் கட்சியினரிடமிருந்து வரும், இப்படியரு சொல்லப்படாத உத்தரவால் கொம்பு சீவிவிடப்படுகிறது காவல்துறை.

சமயம் பார்த்துக் காத்திருக்கிறார்கள் காவலர்கள். யாராவது ஒரு தொண்டன் அவர்கள் மீது கை வைத்துவிட்டால் போதும்.. அவ்வளவுதான்.. 'சார்ஜ்' என்ற வார்த்தையை முதலில் பிரயோகித்தது யார் என்று யாருக்குமே தெரியாது.. காவல்துறையின் குண்டாந்தடி, தொண்டர்களைப் பதம் பார்க்கத் தொடங்கி விடும்.

அடி வாங்கும் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களுடைய கோபத்தைக் காட்டத் தொடங்குகிறார்கள். இங்குதான் அரசியல் வன்முறை துவங்குகிறது. வழியில் தென்படும் கடைகள், லைட்டுகள், போர்டுகள் சிதைக்கப்படுகின்றன. கற்கள் வீசப்பட்டு கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன.

பேருந்துகள் கண்ணில் பட்டால் ரொம்பச் செளகரியம்.. ஏனெனில் எந்தத் திசையிலிருந்து எதை வீசினாலும் அடிபடும் வகையில் இருக்கும், அதனுடைய நீளமும், அகலமும், வடிமைப்பும் கலவரக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமானது. பிடித்தமான தனது ரசிகர்களால், தாக்குதலுக்குள்ளாகிறது அப்பேருந்து..

சென்ற முறை தி.மு.க. ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, மதுரை நகரில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஜெகதீசன் என்ற பைனான்ஸியர் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக, அப்போதைய மதுரை மாநகராட்சியின் தி.மு.க. துணை மேயர் திரு.மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, திரு.மிசா பாண்டியனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மதுரையில் தற்போது அரசாட்சி செய்து வரும் தளபதியும், தென்பாண்டி மண்டலத்து பட்டத்து இளவரசருமான திரு.மு.க.அழகிரி, தி.மு.க.விலிருந்து அப்போது நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தின் பின்னணியில், தமிழகத்தின் தற்போதைய முடிசூடா மன்னர் திரு.மு.க.ஸ்டாலின் இருப்பதாக அவர்களுடைய கட்சிக்காரர்களே சொன்னார்கள்.

அவ்வளவுதான்.. "எப்படி எங்கள் 'அஞ்சாநெஞ்சனை' கட்சியை விட்டு நீக்கலாம்?" என்று போர்க்கொடித் தூக்கினார்கள் மதுரையைச் சேர்ந்த உடன்பிறப்புகள். இவர்களுடைய கோரிக்கை ஒரு கட்சி சம்பந்தப்பட்டது. ஆட்சி சம்பந்தப்பட்டதல்ல. அப்படியானால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அப்படியே ஒரு லாரியையோ, பஸ்ஸையோ பிடித்து சென்னைக்கு வந்து 'அறிவால'யத்தை முற்றுகையிட்டுத் தங்களது கோரிக்கையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? பஸ் மறியல்.. தர்ணா.. கடையடைப்பு போராட்டம்..

நான்கு நாட்களாக மதுரையிலிருந்து புறநகர் பஸ்கள் கிளம்ப முடியவில்லை. மதுரையின் பல இடங்களிலும் தொடர்ச்சியான பஸ் மறியல். பயணிகள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்பது அப்போது பயணிகளில் ஒருவனாய் மதுரையில் இருந்த இந்த உண்மைத்தமிழனுக்கும் தெரியும்.

போலீஸ் மறியல் செய்பவர்களைக் கைது செய்யும். உடனே அவர்களை மதுரை எல்லைக்குக் கொண்டு போய், ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிட்டு வருவார்கள். மறுபடியும் அந்தத் தொண்டர்கள் பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மறியலில் உட்கார்ந்திருப்பார்கள். மறுபடியும் போலீஸ் வரும். கைது செய்வதாகச் சொல்லி அனுப்பானடியைத் தாண்டி கொண்டு போய் விட்டுவிட்டு வருவார்கள். இதே கதைதான் நான்கு நாட்களும் நடந்தது.

அதாவது அரசும், ஆளும் கட்சியும், அதன் தலைவர்களும், தொண்டர்களும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினார்கள். ஆனால் இந்த விளையாட்டின் இடையில் மாட்டிக் கொண்டு தவியோ தவி என்று தவித்தவர்கள், என்னைப் போன்ற அப்பாவி பொதுமக்கள்தான். இத்தனை காவல்துறையினர் இருந்தும் என்ன புண்ணியம்? எந்தக் காவல்துறை அதிகாரி அந்த நேரத்தில் பொறுப்பாக பணி செய்தார்? அனைவருமே கண்துடைப்பு வேலையைத்தான் செய்தார்கள்.

'உடன்பிறப்புகள்' என்ற பெயரில் உலா வந்த ரவுடிகள், நான்காவது நாளில் செய்ததுதான் மிகக் கொடுமை. மதுரை கோரிப்பாளையத்தில் மீனாட்சி கல்லூரியின் அருகே வந்து கொண்டிருந்த இரண்டு நகரப் பேருந்துகளை நிறுத்திய தொண்டர்கள் என்ற ரெளடிக் கும்பல், அந்தப் பேருந்துகளிலிருந்த அனைத்துப் பயணிகளையும் இறக்கிவிட்டு ஓட ஓட விரட்டியடித்துவிட்டு, அந்த இரண்டு பஸ்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தியது.

நாசமானது பஸ்கள் மட்டுமா? நல்லதொரு அரசாட்சி என்ற பெயரும், ஜனநாயகம் என்ற வார்த்தையும்தான்..

இரண்டு சகோதரர்களுக்கிடையே நடந்த நீயா? நானா? போட்டியில் மக்களுடைய வரிப்பணத்தில் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய பேருந்துகள் எரிந்து சாம்பலானது..
இதற்கு யார் பொறுப்பு? இந்த 10 லட்சத்தை இப்போது யாரிடமிருந்து வசூல் செய்வது? சரி.. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகளையாவது காவல்துறை என்ன செய்தது? அடையாளத்திற்கு 4, 5 பேரை கைது செய்தது.. ஆனால் வழக்கு விசாரணை இன்னமும் முடியவில்லை. காரணம், வழக்கு கோர்ட்டுக்கே இன்னும் வரவில்லை.

இது ஒருவகையில் ஜனநாயகப் படுகொலைதானே.. இதை ஏன் என்று கேட்கக்கூடாது, மக்கள் தங்களது மனதில் இதைப் பற்றிய அசிங்கத்தையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்றால், இது இந்தக் கேடு கெட்ட, கேவலம் கெட்ட அரசியல்வாதிகளின் சர்வாதிகார உணர்வைத்தானே காட்டுகிறது..

தி.மு.க. மட்டுமா..? பாட்டாளி மக்கள் கட்சி துவக்கத்தில் வன்னியர் சங்கமாக இருந்தபொழுது தமிழ்நாட்டைப் படுத்திய பாட்டை தமிழகத்து மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். ஒரு முறை எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தி.மு.க.வின் செப்டம்பர் மாதத்திய முப்பெரும் விழாவிற்கு வந்துவிட்டு ஊர் திரும்பிய தி.மு.க. தொண்டர்களின் வேன்கள், லாரிகள், பஸ்களை வழிமறித்து தகராறு செய்தனர் வன்னியர் சங்கத் தொண்டர்கள்.

எப்படி தெரியுமா? திண்டிவனத்திலிருந்து வழிநெடுகிலும் மரங்கள் வெட்டப்பட்டு நடுரோட்டில் குவிக்கப்பட்டிருந்தன. திண்டிவனத்தில் அப்போது டாக்டர் ராமதாஸின் கிளினிக் வாசலில் நின்று கொண்டிருந்த வன்னியர் சங்கத் தொண்டர்கள், தி.மு.க. தொண்டர்களைத் தாக்கத் துவங்க.. கலவரம் நேரடி மோதலாக வெடித்தது..

போலீஸ¤ம் வந்தது.. துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் அந்த இடத்தில் கலவரத்தை அவர்களால் அடக்க முடிந்தது. இறந்தவர்கள் 15 பேருக்கும் மேல். இவர்களது சாவுக்கு யார் காரணம்? இந்தக் கலவரத்தின்போது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட வன்னியர் சங்கத் தொண்டர்கள், இன்றுவரை கோர்ட்டிற்கும், வாய்தாவிற்குமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ்..?

அந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து தென் மாநிலம் நோக்கிச் சென்ற பேருந்துகள் அனைத்தும் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை என்று பல இடங்களில் நிறுத்தப்பட்டு நான்கு நாட்களாகப் பயணிகள் எப்படியெல்லாம் துன்பப்பட்டார்கள் என்பதனை, அப்போதைய பத்திரிகைகளை இப்போது படித்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

வெட்டப்பட்ட மரங்களையும், ரோட்டின் குறுக்கே இருந்த தடைகளையும் நீக்கிவிட்டு மறுபடியும் போக்குவரத்தைச் சீர் செய்யவே, காவல்துறைக்கு ஐந்து நாட்கள் ஆனது.
இந்தக் கலவரத்தின்போது வன்னியர் சங்கத்தினரால் ரோட்டோரமாக இருந்த எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன? அவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? இந்த 'மரம் வெட்டிப் புனிதர்'தான் இப்போது 'பசுமைத் தாயகத்தை' அமைத்து, ஊருக்கு ஒரு மரம், செடி, கொடி நட்டு, 'அசோகருக்கு அடுத்த வாரிசு இப்போது நான்தான்' என்று ஓயாமல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் இப்படியென்றால், 'அம்மா'.. நம்ம டாக்டர் புரட்சித்தலைவியும் அவருடைய ரத்தத்தின் ரத்தங்களும்.. எங்கயோ போய்விட்டார்கள்..

ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவி வகித்தபோது, காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி திடுதிப்பென்று சென்னை, மெரீனா பீச்சில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.வி.சி.சுக்லாவே நேரில் வந்து பேசியும், அம்மையார் அசைந்து கொடுக்கவில்லை.

"எங்க அம்மாவே சாப்பிடாம இருக்காங்க. உங்களுக்கெல்லாம் என்னடா சாப்பாடு?" என்ற ரத்தத்தின் ரத்தங்களின் ஆவேசக் குரலால், தமிழ்நாடு முழுவதுமே சட்டப்பூர்வமான கடையடைப்பு, பந்த், தர்ணா என்று அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்போதும் நான் மதுரையில்தான் இருந்தேன்.

அப்போதைய மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த திரு.ராஜன்செல்லப்பாவின் தலைமையில் ஒரு ரவுடிக் கும்பல் திறந்த லாரி ஒன்றில் ஏறிக் கொண்டு மதுரை நகரையே சுற்றி வந்து தங்களது பராக்கிரமத்தைக் காட்டியது. எங்காவது கடையைத் திறந்திருந்தால் உடனே லாரியை நிறுத்தி, அந்தக் கடையைச் சுக்கு நூறாக்கிவிட்டுத்தான் அடுத்த இடத்துக்குக் கிளம்பினார்கள்.

"அம்மா உண்ணாவிரத்தைக் கைவிட வேண்டும்" என்று அப்போதைய பிரதமர் ‘புன்னகை மன்னன்’ திரு.பி.வி.நரசிம்மராவைவிட அதிகம் வேண்டிக் கொண்டவர்கள் தமிழகத்து மக்கள்தான்.. இந்தக் கோபத்தைத்தான் அடுத்து வந்த தேர்தலில் காட்டி, அம்மாவை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

ஆட்சியில் இருந்தால்தான் நாங்கள் இது பற்றிய 'வீரங்களைச்' செய்வோம் என்றில்லை. ஆட்சியில் இல்லாத போதும் எங்களால் செய்ய முடியும் என்று 'ரத்தத்தின் ரத்தங்கள்' சொல்லாமல் சொல்லி செய்த கொடுஞ்செயல்தான் சென்ற, தி.மு.க. ஆட்சியின்போது தர்மபுரி அருகே கோவை வேளாண்மைக் கல்லூரி பஸ்ஸை வழிமறித்துத் தாக்கி, அதில் இருந்த மூன்று அப்பாவி மாணவிகளை உயிரோடு கொளுத்தியது..

இந்தக் கொடூரச் செயலில் ஜெயலலிதாவுக்கு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், அவர் கட்சியின் கட்டளைப்படிதான் இந்த பஸ் மறியல் நடந்தது. பஸ் மறியல் செய்யப் போனவர்கள் 'அம்மா மனதில் தனியிடம் பிடித்து, நாளைக்கு ஒரு பதவியைப் பிடித்து, நாலு காசு சேர்க்கலாம்..' என்ற எண்ணத்தில் உணர்ச்சிவசப்பட்டு இப்படியரு கொடுமையைப் பங்கு போட்டுச் செய்துவிட்டார்கள்.

ஆனால் இவர்களுடைய தவறை இதுவரை ஒரு முறைகூட அம்மா, டாக்டர் புரட்சித் தலைவி தன் வாயாற தவறு என்று ஒத்துக் கொள்ளவில்லை. எப்படிச் சொல்லுவார்?

இப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டா¡ர்கள். சரி.. இதனால் அந்த மூன்று அப்பாவிப் பெண்கள் திரும்பக் கிடைத்துவிடுவார்களா? எரிக்கப்பட்ட அந்தப் பேருந்திற்கு யார் பொறுப்பு? யார் காசில் வாங்கியது அந்தப் பேருந்து? தமிழக மக்களின் பணம்தானே.. அரசியல்வாதிகளா அவர்கள் சொந்தக் காசில் வாங்கிக் கொடுத்தார்கள்..?

தமிழகத்தில் இவர்கள் மட்டுமல்ல.. இன்னும் லெட்டர்பேடு கட்சிகளும் ஏராளமாக இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்குப் போட்டியாக ஜாதிச் சங்கங்களும் புற்றீசல்போல் பெருகி வருகின்றன.
அதுவும், அரசியல் ஆதாயத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு தேர்தலின்போதும் ஜாதிச் சங்கங்கள், அதிகமாக முளைக்கின்றன. இப்போதெல்லாம் மக்கள் பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் முதல் நேற்று முளைத்த லெட்டர்பேடு கட்சிகள்வரை அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று நடத்துகின்றன.

இந்தக் கூட்டங்கள், ஊர்வலங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால் சேதம் அடைந்த சொத்துக்களுக்கு யாரும் நஷ்டஈடு தருவதில்லை.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் கைது செய்யப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, சம்பந்தப்பட்டக் கட்சிகளிடம் இருந்து சேதத்திற்கான நஷ்ட ஈட்டை வசூலிக்க எந்த அரசும் தைரியமாக நடவடிக்கை எடுப்பதில்லை. எப்படி எடுப்பார்கள்? எடுத்தால், முதலில் மாட்டுவது அவர்கள்தானே..

ஆனால் திடீர் ஞானதோயமாக கடந்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் 'புரட்சித்தலைவி' ஒரு புரட்சி முடிவெடுத்தார்.

"அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் என்று நடத்தி அதில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுப் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும். பொதுச்சொத்து சேதத்திற்கான நஷ்டஈட்டையும் தர வேண்டும்." என்று அதிரடிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

இந்தச் சட்டம் கொண்டு வந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘அம்மா’ ஆட்சியில் கடும் நடவடிக்கைக்கா பஞ்சம்? தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்து முன்னணி மற்றும் தனி நபர்கள் என்று பலருக்கும் பல விதங்களில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்துள்ளீர்கள் என்று குற்றம்சாட்டி. அதற்குரிய நஷ்டஈட்டை அரசுக்குச் செலுத்து வேண்டும் என்று உத்தரவையும் பிறப்பித்தார்.

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியிருந்த நஷ்ட ஈட்டுத் தொகையை நீங்களே பாருங்கள்..

1. தி.மு.க. ரூ. 53,264
2. பா.ம.க. ரூ.39,36,448

3. ம.தி.மு.க. ரூ. 3,383

4. இந்து முன்னணி ரூ. 4,20,782

5. தி.மு.க. பிரமுகர் மூக்கையா ரூ. 33,829

6. ஓய்வு பெற்ற
ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பன்- ரூ. 2,39,661

மொத்தம் ரூ.46,87,367

இதில் அதிகத் தொகையைக் கட்ட வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சிதான். கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய். கட்டி விடுவாரா டாக்டரய்யா..?
இது தொடர்பாக அம்மா ஆட்சிக் காலத்திலேயே சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. வழக்குத் தொடுத்தது. நமது நீதிமன்ற பாரம்பரியத்தின்படி தூங்கி வழிந்து கொண்டிருந்த அந்த வழக்கு, இப்போது தி.மு.க. தலைமையிலான ‘மைனாரிட்டி’ அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சூடு பிடித்தது.

"மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தானே அரசியலுக்கு வந்திருக்கிறோம். எங்களிடமே பணம் கேட்டால் எப்படி..?" என்ற நினைப்பில் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த நெருக்கடியில், நஷ்ட ஈடு கேட்டு ‘அம்மா’ ஆட்சியில் அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறுவதாக, இப்போதைய ‘மைனாரிட்டி’ அரசு கோர்ட்டில் தெரிவிக்க, பா.ம.க.விற்கு எதிரான நஷ்ட ஈடு கோரும் வழக்குத் தள்ளுபடியானது. கூட்டணிக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி? சந்தோஷத்தில் திளைத்தார் டாக்டர் ராமதாஸ்.

பா.ம.க. கட்சி மட்டும்தான் கட்சியா? மற்றவர்கள்..
20 வருடமாக தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவரின் மகள் திருமணத்திற்கு, 500 ரூபாய் மொய் வைத்த புண்ணியவானாச்சே, நம்ம 'மாமன்னர்'.. 'விடுவாரா?'
மொத்தமாக ஒரு சட்டம் கொண்டு வந்து அம்மாவின் சட்டத்தையே தூக்கிவிட்டால், இனி யாரும் நஷ்ட ஈட்டைக் கட்ட வேண்டியதில்லை. நமக்கும், "கூட்டணியில் இருக்கிறோம்.. எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்..?" என்று கூட்டணிக் கட்சிகள் கேட்டால், ‘இதோ செய்திருக்கிறோமே? எவ்வளவு பெரிய உதவி..’ என்று சொல்லி அவர்களின் வாயையும் அடைத்த மாதிரியிருக்கும் என்று ஒரு ராஜதந்திர பிளான் போட்டார். (இந்தியாவிலேயே இவர்தானே இது மாதிரி விஷயங்களில் நம்பர் ஒன்) இப்போது ஜெயித்தும் காட்டிவிட்டார்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று இந்த நஷ்ட ஈடு கோரும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக, இன்னொரு சட்டத் திருத்தத்தை தமிழகச் சட்டசபையிலே கொண்டு வந்திருக்கிறார்கள். அறிமுக நிலையிலேயே இருக்கும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க. மட்டுமே, தாங்கள் கொண்டு வந்த சட்டம் என்ற தார்மீகக் காரணத்தால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களின்போது நடக்கும் குற்றச் செயல்கள், அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் செய்யப்படுகிறது. இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்புகளின் மீது சுமத்தும் கோட்பாடு நியாயமானதல்ல.

எனவே, அரசியல் கட்சி அல்லது வகுப்புவாத மொழி அல்லது இனம் சார்ந்த குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலம், கூடுகை, கூட்டம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் அல்லது பிற நடவடிக்கைகளின் போது சொத்து எதற்கும் அழிப்பு அல்லது சேதம் ஏற்படுத்தியதற்கு, அவர்களைப் பொறுப்பாக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நோக்கத்தை கருத்திற்கொண்டு சட்டத் திருத்தம் செய்வதென்று அரசு முடிவு செய்துள்ளது."

- இப்படிக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்த மசோதாவால் அரசியல் கட்சிகளும், ஜாதி, சங்கங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
இனிமேல் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என எது வேண்டுமானாலும் நடத்தலாம். அதில் வன்முறை வெடித்து பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டாலும், கட்சிகளுக்கும், ஜாதிச் சங்கங்களுக்கம் எந்தக் கவலையும் இல்லை.
தைரியமாக, தாராளமாக சிலைகளை உடைக்கலாம். பஸ்களைக் கொளுத்தலாம்.. மரங்களை வெட்டலாம். கடைகளைச் சூறையாடலாம். கவலை வேண்டாம் தொண்டர்களே.. அரசே பச்சைக் கொடி காட்டிவிட்டது.

மக்கள், வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். எதிர்த்து கேள்விகள் கேட்கக்கூடாது.. கேள்வி கேட்பது 'அரசியல்வாதிகளின் ஜனநாயகத்திற்கு' விரோதமானது.
கேள்வி கேட்க முடியவில்லையே என்று வெட்கப்பட வேண்டாம். வெட்கம் இல்லாதவர்கள்தான் அரசியல்வாதிகள். அவர்களுக்கு இந்த மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை உள்ள, யாரைக் காண்டாலும் பிடிக்காது.
ஆகவே மக்களே.. நீங்களும் அவர்களைப் போல எதுவும் இல்லாதவர்களாகவே இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..

ஏனெனில் அரசியல்வாதிகள், மக்களாகிய உங்களைக் காப்பாற்ற ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேவதூதர்கள்..
அவர்களை அனுசரித்து, அவர்களுக்குக் கிடைத்தது போக, அவர்கள் போதும் என்று சொல்லி கீழே போடும் எச்சில் பண்டங்களைத்தான் நீங்கள் உண்ணவோ, அனுபவிக்கவோ வேண்டும்.
இது படைப்பின் நியதி..
வாழ்க்கையின் சாரம்சம் இதுவேயாகும்.

இது, மக்களாகிய உங்களிடம் தெரிவிக்கும்படி இந்த உண்மைத்தமிழனுக்கு, ஆண்டவனால் தெரிவிக்கப்பட்ட செய்தி..

உண்மைத்தமிழன் சொல்லிவிட்டான்.. சொல்லிட்டான்.. சொல்லிப்புட்டான்..

ஜெய்ஹிந்த்!!!

23 comments:

Unknown said...

இனிமேல் நாங்கள் நடத்தும் கூட்டங்களில் பொதுச் சொத்துக்கு பங்கம் வரவே வராது , வந்தால் நாங்கள் பொறுப்பு. இந்தச் சட்டம் அவசியம் தேவை.... என்று சொல்ல எந்தக் கட்சிக்கும் துப்பில்லை :-((

இதில் இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்துவதாக சொல்கிறார்கள்.

சென்ஷி said...

இன்னிக்கும் நாந்தான் ஃபர்ஸ்ட்டு..

வழக்கம் போல பதிவும் நல்ல சூடு

சென்ஷி

துளசி கோபால் said...

என்ன இது அநியாயமா இருக்கு?

அரசு இப்படின்னா மக்களும் அப்படித்தானே? யார் வீட்டு சொத்தையாவது
அழிச்சா, நஷ்ட ஈடு தரவேணாமா?

தடியெடுத்தவன் தண்டல்காரன்(-:

நந்தா said...

அப்படிப் போடு அரிவாளை....

இதுக்கெல்லாம் அசர்ற ஆளுங்களா நாங்க? நாங்க இப்படித்தான் பொழுது போகலைன்னா எதையாவது, யாரையாவது கொளுத்திட்டிருப்போம்...

ஆமா வீட்டுக்கு எப்போ ஆட்டோ வரும்? நாளைக்கு ஆஸ்பிடல்ல வந்து பார்க்கட்டுமா?

Anonymous said...

ஊர்வலத்துக்கு வா.. 300 ரூபா தர்றோம்.. பிரியாணியும், 'சரக்கும்' ப்ரீயா கிடைக்கும்.." - இப்படிச் சொல்லித்தான் இவர்கள் அரசியலுக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.
அட!! இவ்வளவு தான் அரசியல் என்பதா?

உண்மைத்தமிழன் said...

நன்றி கல்வெட்டு அவர்களே.. முதன்முதலாய் என் வீட்டுக்குள் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்..

நன்றி சென்ஷி.. இன்னிக்கு ஒரு நிமிஷம் லேட்டாயிருச்சு போல.. அதான் கல்வெட்டு முந்திக்கிட்டார்..

நன்றி துளசி டீச்சர்.. அரசு எவ்வழியோ அவ்வழியே மக்களும்.. அந்த அளவிற்கு அவர்கள் மூளையை மழுங்க வைத்திருக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். தாங்கள் தாக்குவது தங்களுடைய சொத்துதான் என்பதையே அவர்கள் உணராதவரைக்கும் இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டேதான் இருக்கும்..

நன்றி நந்தா.. ஆனாலும் இம்புட்டு பாசம் இருக்கக்கூடாதுப்பா.. ஆட்டோ வந்திருச்சா..? எந்த ஆஸ்பத்திரிலன்னு கேக்குற பாரு.. நான் செஞ்ச புண்ணியம்.. இப்படி ஒரு தம்பி எனக்கிருக்குன்னு வெளில சொல்லிக்கிறேன்..

நன்றி அனானி.. இப்பத்தான் கேள்விப்படற மாதிரி கேக்குறீகளா.. இது நியாயமா?

Anonymous said...

நம்ம கேப்டனை விட்டுட்டிங்க...
வருமான வரி சோதனை செய்ய வந்த அதிகாரிகளோட வாகனங்களை சேதப்படுத்துனத எப்படி மறந்தீங்க? வருமான வரி சோதனைக்கு காரணம் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் அதை சட்டபூர்வமா எதிர் கொள்ளாம தொண்டர்களுக்கு கொம்பு சீவி விட்டதையும் சொல்லியிருக்கலாம் ? இதுனால நானும் அந்தக் குட்டைதான்னு சொல்லி எங்கள மாதிரி சில பேர்
முகத்துல கரிய பூசுனத சொல்லம விட்டுட்டிங்களே

Anonymous said...

Hi mams,
I think the politics is as playground for rugby, here the peoples are betting themselves as their team will win, but they about to see how harsh fights occur inbetween players, also the umpires are as police officials play on the team who betted the most, totally the peoples are foolish spectators losing their time, properties and money the most. Politicians are the rule supporters for all the time, so we can't do anything, its all about the peoples fault. What to do?......

உண்மைத்தமிழன் said...

//மடத்தமிழன் said...
நம்ம கேப்டனை விட்டுட்டிங்க...
வருமான வரி சோதனை செய்ய வந்த அதிகாரிகளோட வாகனங்களை சேதப்படுத்துனத எப்படி மறந்தீங்க? வருமான வரி சோதனைக்கு காரணம் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் அதை சட்டபூர்வமா எதிர் கொள்ளாம தொண்டர்களுக்கு கொம்பு சீவி விட்டதையும் சொல்லியிருக்கலாம் ? இதுனால நானும் அந்தக் குட்டைதான்னு சொல்லி எங்கள மாதிரி சில பேர்
முகத்துல கரிய பூசுனத சொல்லம விட்டுட்டிங்களே//

மடத்தமிழன் ஸார்.. வெரி ஸாரி.. மறந்தே போச்சு.. அதான் நீங்களே
சொல்லிட்டீங்களே.. இதையும் நான் வழி மொழிகிறேன்..

ஆமா.. அதென்ன ஸார் 'மடத்தமிழன்'.. உண்மைத்தமிழனுக்குப் போட்டியா?

ஏன்னா.. ஏதோ பிளாக்கர்ஸ் மாதிரி ஒரு செட்டப்ல இருக்கீங்க. யாருன்னு பார்க்கலாம்னு
'கிளிக்' பண்ணா கமெண்ட்ஸ் மறையுதே ஒழிய.. உங்க site open ஆகலை.

சரி.. ஏதோ, யார் பெத்த பிள்ளையோ நல்லாயிருந்துட்டுப் போங்க..
இது மாதிரி ஏதாச்சும், எங்கனயாச்சும் உண்மைத்தமிழன் மறந்திட்டான்னு தெரிஞ்சா
எடுத்துக் கொடுக்க இது மாதிரி வந்திருங்க..

ஆனா தயவு செஞ்சு பேரை மாத்திருங்க.. இனிமே 'மடத்தமிழன்' வேண்டாம்.
இது ஒண்ணோடயே போதும்.. அடுத்து வரும்போது 'ஞாபகத் தமிழன்'னு வைச்சுக்குங்க..

தருமி said...

மக்களாகிய நம் இயலாமைதான் பூதாகரமாகத் தெரிகிறது...

Anonymous said...

நீங்க தன இங்க யாருக்கும் வெக்கமில்லைனிங்க சரி வெக்கமில்லாத தமிழன் மடத்தமிழன் தன அதோட கேப்டனை தெரியாத்தனமா நம்பிட்டத நெனச்சு உணர்ச்சி வசப்பட்டு பேர அப்படி குடுத்துட்டேன் மத்தபடி எந்த உள்குத்தும் இல்ல

தென்றல் said...

கம்பெடுத்து சுத்து சுத்துனு சுத்துறீங்க..!

அதான் சொல்லீட்டங்களே...
'யாருக்கும் இங்கே வெட்கமில்லை' ;(

உண்மைத்தமிழன் said...

//தருமி said...
மக்களாகிய நம் இயலாமைதான் பூதாகரமாகத் தெரிகிறது...//

ஐயா பேராசிரியர் அவர்களே.. நம் இயலாமைதான்.. என்ன செய்வது என்பது தெரியாததால் இது பூதாகரமாகத் தெரிகிறது.

செய்கின்ற வினை, கண்ணுக்குத் தெரியாத வைரஸாக நமக்குள்ளேயே இருக்கிறது..

மருத்துவ உதவிக்கு யாரை அணுகுவது? என்ன செய்வது? அட்வைஸ் ப்ளீஸ்..

உண்மைத்தமிழன் said...

//பேர் மாத்துன தமிழன் said...
நீங்க தன இங்க யாருக்கும் வெக்கமில்லைனிங்க சரி வெக்கமில்லாத தமிழன் மடத்தமிழன் தன அதோட கேப்டனை தெரியாத்தனமா நம்பிட்டத நெனச்சு உணர்ச்சி வசப்பட்டு பேர அப்படி குடுத்துட்டேன் மத்தபடி எந்த உள்குத்தும் இல்ல.//

பேர் மாத்தின தமிழன் அவர்களே.. கேப்டனை நினைத்துத் தெரியாத்தனமா கும்பிட்டது தவறில்லை. உங்களுக்கு வயதில் மூத்தவர்களை வணங்குவதில் எந்தத் தயக்கமும் உங்களுக்கு வேண்டாம்.

அவருடைய கட்சித் தொண்டர்கள் செய்ததும் தவறுதான்.. அதுதான் நான் சொன்னனே.. அனைத்துக் கட்சித் தொண்டர்களும் இதைத்தான் செய்வார்கள். காரணம் 'பகுத்தறிவு' என்று நீங்கள் நம்புவதும், நான் நம்புகின்ற 'ஒன்றும்' அவர்களுக்கு கம்மி..

அது அரசு ஊழியர்களின் கார்தான் என்றாலும் அதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்கிற உணர்வு அவர்களுக்கு இருந்திருந்தால் அந்த அசம்பாவிதம் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் நம் அரசு, நமக்கான அரசு, நம்முடைய அரசின் ஊழியர்கள், நமக்காக உழைக்கின்ற அரசு ஊழியர்கள் என்று பெருவாரியான பொதுஜனங்களின் நன்மதிப்பைப் பெறாமல் அவர்களிடமிருந்து வெகு தூரம் அன்னியமாகப் போய்விட்டதால் ந்தப் 'பகுத்தறிவு' நம் மக்களிடையே குறைந்து கொண்டே போகிறது. இதுதான் உண்மை.

சரி.. சரி.. எந்த 'உள்குத்தும்' இல்லைன்னு சொன்னதை நான் முழுசா நம்புறேன்..

அப்படியே இந்த 'ஞாபகத் தமிழன்', 'டிடெக்டிவ் தமிழன்'னு யாரையாச்சும் உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்..

உண்மைத்தமிழன் said...

//தென்றல் said...
கம்பெடுத்து சுத்து சுத்துனு சுத்துறீங்க..!

அதான் சொல்லீட்டங்களே...
'யாருக்கும் இங்கே வெட்கமில்லை' ;(//

நன்றி தென்றல்..

கரு.மூர்த்தி said...

இப்படி உண்மையா சொல்லறீங்களே உண்மைதமிழன் , உங்களை தமிழ்மணத்துல தொடர்ந்து இருக்க விடுவாங்கன்றீங்க ?

உண்மைத்தமிழன் said...

//கரு.மூர்த்தி said...
இப்படி உண்மையா சொல்லறீங்களே உண்மைதமிழன் , உங்களை தமிழ்மணத்துல தொடர்ந்து இருக்க விடுவாங்கன்றீங்க?//

கரு.மூர்த்தி ஸார்.. தமிழ்மணத்துக்கும் இதுக்கும் என்ன ஸார் சம்பந்தம்? பல்வேறு அரசியல் கட்சிகளின் அனுதாபிகளும் வலையுலகில் இருக்கிறார்கள். அனைவருமே தத்தமது கருத்துக்களை தங்களது பதிவுகளில் இட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்துமே படிக்கப்பட்டுத்தான் வருகிறது..

வெறும் பின்னூட்டம் இடுவது மட்டுமே எழுத்துப் பணியல்ல.. செய்திகளை, கருத்துக்களைப் பதிய வேண்டும். முதலில் அதைச் செய்யுங்கள். அதன் பிறகு இப்படி கோள் சொல்வது தானாக உங்களிடமிருந்து விடைபெற்று விடும்.

அப்புறம்.. சொல்ல மறந்திட்டேன்.. வந்ததுக்கு மிக்க நன்றி.. நன்றி.. நன்றி..

கதிரவன் said...

இன்னிக்குத்தான் இதை வாசிக்க நேர்ந்த்து..'சோ'எழுதுன 'யாருக்கும் வெட்கமில்லை'பத்தித்தான் ஏதோ எழுதியிருக்கீங்கன்னு நினைச்சு வந்தேன்.

நல்ல சூடான பதிவு.

அதிகாரத்தில் இருக்கும் & தவறு செய்யும் அரசியல்வாதிகளைத் தண்டிக்க வேண்டிய நீதித்துறையும், நம் நாட்டில் ஒப்புக்கு சப்பாணியாக இருப்பதுதான் முதன்மையான சாபக்கேடு.

Sundar Padmanaban said...

இதுல எதாச்சும் புதுசா? இல்லையே - அதாவது இதுல எதுவும் புதுசுன்னு தோணாத அளவுக்கு மரத்துப் போய் நாமல்லாம் சோத்தாலடித்த 'மர'த் தமிழப் பிண்டங்களாகிவிட்டோம்!

'இலக்கியத்தின் பேரால் ஏமாற்றுபவர்கள் தேசத் துரோகிகள்'ன்னு காது வரைக்கும் வாய்கிழிய அறிக்கை விடத் தெரியுது. வள்ளுவர் அரசியல் பத்தியும் ஆளுபவர்கள் பத்தியும் எழுதியிருக்கிற குறள்கள் தெரியாதா?

அது எப்படிங்க மனசுல 1% கூட குற்றவுணர்ச்சியே இல்லாம இவங்கள்ளாம் அமைதிப்படை சத்தியராஜ் மாதிரி கும்பல் கும்பலா சிரிச்சுக்கிட்டே மக்களைக் கழுத்தறுத்து நாட்டைக் கொள்ளையடிக்க முடியுது? எனக்குத் தெரியும். சிதறுதேங்காயப் பொறுக்க ஓடுற கூட்டமா நாம இருக்கறவரைக்கும் இவங்க நம்ம தலைலயே 'ஒடலு' போட்டுக்கிட்டுத்தான் இருப்பாய்ங்க.

நம்ம தான் சூதானமா இருந்துக்கணும்.

பாப்போம்! :-(

உண்மையை உரத்துச் சொல்ல துணிவு வேண்டும். உங்களுக்கு அது நிறைய இருக்கிறது. இந்தப் பதிவுக்கு வாழ்த்துகள்!

Sundar Padmanaban said...

தலைப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டும் பொருந்தும். நம்மளையும் சேத்துச் சொல்லணும்னா

'ஆள்பவர்களுக்கு வெட்கமில்லை - ஆளப்படுபவர்களுக்கு சொரணையில்லை"

Sundar Padmanaban said...

உங்களுக்குக் கட்டாயம் "சொக்கப்பனை" பற்றித் தெரிந்திருக்கும். சொக்கப்பனை எரியும்போது அது அணையும் வரை பொறுமையில்லாமல் யார் முதலில் கம்பைப் பிடுங்குவது என்று கொஞ்சம்கூட அபாயத்தை உணராமல் அதனைச் சுற்றி நின்று நெருப்பில் கைவிட்டுப் பிடுங்கும் கும்பலைப் பார்த்திருப்பீர்கள். கடைசித் துளி சாம்பல் வரை கூட்டம் அள்ளிப் போகும்.

தமிழகத்தின் (இப்படி எழுதினால் 'மத்த மாநிலத்துல இது நடக்கலையா? உன் கண்ணுக்கு தமிழ்நாடும் கருணாநிதியும்தான் தெரியுதா? இது பார்ப்புகளின் தந்திரம், உன்னை அதைப் பத்தியெல்லாம் எழுதவிடாமல் பூணூல் தடுக்கிறது' என்று பூணூலால் செய்த சிலந்தி வலையில் தாங்களே மாட்டிக்கொண்டு தொங்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த கும்பல் கிளம்பும் என்று எனக்குத் தெரியும்!) இன்றைய நிலையை இந்தச் சொக்கப்பனையோடு ஒப்பிடலாம். "எரிஞ்சாலும் பரவாயில்லை, சுட்டாலும் பரவாயில்லை - கிடைத்தவரைக்கும் லாபம்!" இதுதான் அரசியல்வாதிகள், மக்கள் ஆகியோரது மனநிலை. இதில் நீதியையும் நேர்மையையும் தேடி அலைவது விரயம். அவை கிடைக்க மாட்டா. அவற்றை எரித்த சாம்பலில் முளைத்த நஞ்சுச் செடிகள்தான் ஆளுகின்றன. நஞ்சை மக்களுக்கும் நன்றாகவே பரப்பியிருக்கின்றன.

இந்த நஞ்சு நீங்க நீண்ட காலம் ஆகும்!

உண்மைத்தமிழன் said...

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//சிதறுதேங்காயப் பொறுக்க ஓடுற கூட்டமா நாம இருக்கறவரைக்கும் இவங்க நம்ம தலைலயே 'ஒடலு' போட்டுக்கிட்டுத்தான் இருப்பாய்ங்க.//

உண்மைதான் சுந்தர் ஸார்.. ஆனாலும் ஓடுகிற கூட்டம் மொத்தமும் நின்றால் மட்டுமே அரசியல்வாதிகளையும் நிறுத்த முடியும். ஆனால் அது நம் காலத்தில் முடிகிற விஷயமாக இல்லை..

//'ஆள்பவர்களுக்கு வெட்கமில்லை - ஆளப்படுபவர்களுக்கு சொரணையில்லை"//

ஆள்பவர்களுக்கு வெட்கமில்லைதான் ஸார்.. ஆனால் ஆளப்படுபவர்களுக்கு சொரணையில்லாமல் இல்லை. இருக்கிறது. இதனக்கு அது இருப்பதாகக் காட்டிக் கொண்டாலே அவன் இருக்க மாட்டான் என்ற நிலைமை இருக்கிறதே.. அதைத் தடுப்பதற்கு எந்த கிருஷ்ணன் அவதாரமெடுத்து வருவான் என்று தெரியவில்லை. அவன் வரும்வரையிலும் இப்படித்தான் சொரணையில்லாததைப் போல் மக்கள் நடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் மக்களுக்கு அது பழகிப் போய்விட்டது ஸார்.. யாரையும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை..

//"எரிஞ்சாலும் பரவாயில்லை, சுட்டாலும் பரவாயில்லை - கிடைத்தவரைக்கும் லாபம்!" இதுதான்
அரசியல்வாதிகள், மக்கள் ஆகியோரது மனநிலை.//

உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை. ஏனெனில் மக்கள் பிறப்பில் இருந்து இறப்புவரைக்கும் யாரையாவது சார்ந்தோ, சேர்ந்தோதான் வாழ்கிறான். தனி மனிதன் எனில் போராடலாம்.. கூட்டத்திற்காக வாழ்க்கை என்றால் எவன் போராடுவான்? சொல்லுங்கள்..

தங்களுடைய வருகைக்கும், இந்த நீண்ட பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள் சுந்தர் ஸார்.. வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//கதிரவன் said...
இன்னிக்குத்தான் இதை வாசிக்க நேர்ந்த்து..'சோ'எழுதுன 'யாருக்கும் வெட்கமில்லை'பத்தித்தான் ஏதோ எழுதியிருக்கீங்கன்னு நினைச்சு வந்தேன்.

நல்ல சூடான பதிவு.

அதிகாரத்தில் இருக்கும் & தவறு செய்யும் அரசியல்வாதிகளைத் தண்டிக்க வேண்டிய நீதித்துறையும், நம் நாட்டில் ஒப்புக்கு சப்பாணியாக இருப்பதுதான் முதன்மையான சாபக்கேடு.//

ஜனநாயகத்தில் நீதி என்பது மிகவும் தாமதமாகக் கிடைக்கிறது. அதனால்தான் சில நல்லவைகள் காலம் போன கடைசியில் மக்களுக்குக் கிடைக்கிறது. அநீதிகள் நொடியில் உடனேயே மக்களைத் தாக்கி விடுகின்றன. பாதிக்கப்படுவது நாம்தான்..

தங்களது வருகைக்கு எனது நன்றிகள் கதிரவன்.. வாழ்க வளமுடன்..