Showing posts with label கீர்த்தி சுரேஷ். Show all posts
Showing posts with label கீர்த்தி சுரேஷ். Show all posts

பைரவா - சினிமா விமர்சனம்

13-01-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார்.
விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில்,  ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகிதாஸ்வா, சதிஷ், அபர்னா  வினோத், சிஜு ரோசலின், பாப்ரிகோஷ்,  மைம்கோபி, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுகுமார், படத் தொகுப்பு – பிரவீண், இசை – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, கலை இயக்கம் – பிரபாகரன், சண்டை பயிற்சி   –  அனல் அரசு, நடனம்  _  தினேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமது. தயாரிப்பு மேற்பார்வை – தாண்டவ கிருஷ்ணன் & உதயகுமார், முதன்மை தயாரிப்பு நிர்வாகி – குமரன், தலைமை நிர்வாகி – ரவிச்சந்திரன்.

அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சொந்த ஊர் என்று எந்த பின்னணியும் இல்லாமல் சென்னையில் ஒரு மேன்ஷனில் சதீஷுடன் குடியிருக்கிறார் விஜய்.
ICIC என்னும் வங்கியில் வாராக் கடனை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கியின் மேனேஜரான ஒய்.ஜி.மகேந்திரன், தொகுதி எம்.எல்.ஏ.வின் சிபாரிசில் தண்ணீர் லாரி வாங்க மைம் கோபிக்கு 24 லட்சம் ரூபாயை கடனாக தந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடனுக்கு இன்றுவரையிலும் மைம் கோபி வட்டிகூட கட்டவில்லை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பிரச்சினையாகிறது.
ஒய்.ஜி.மகேந்திரன் மைம் கோபியை நச்சரிக்க.. அவரோ தான் கடன் தொகைக்கு பிணையாக கொடுத்த இடத்தின் பத்திரங்களோடு வந்தால் கடன் தொகையை மொத்தமாக செட்டில் செய்வதாகச் சொல்கிறார். அதை நம்பி செல்லும் ஒய்.ஜி.மகேந்திராவை ஏமாற்றி பத்திரங்களை பிடுங்கிக் கொண்டு அடித்து, அவமானப்படுத்தி அனுப்புகிறார் மைம் கோபி.
இதனை விஜய்யிடம் சொல்லும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்தத் தொகையை வசூலித்து தரும்படி கேட்கிறார். விஜய்யு மைம் கோபி அண்ட் கோ-விடம் அவர்கள் ஒய்.ஜி.மகேந்திரனிடம் விளையாடியதுபோலவே விளையாடி பணத்தை மொத்தமாகப் பெற்று வந்து கொடுக்கிறார்.
அடுத்த மாதமே ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுக்குத் திருமணம் நடக்கிறது. அத்திருமணத்திற்கு மணமகளின் நண்பியான மலர்விழி என்னும் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து வருகிறார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட ஒரு இடையூறில் இருந்து காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வருகிறார் விஜய்.
கீர்த்தியைப் பார்த்தவுடன் காதலாகி டூயட்டும் பாடுகிறார் விஜய். ஊர் திரும்ப நினைக்கும் கீர்த்தியை, மத்திய அமைச்சரின் மகன் பார்க்க வரும்போது ஒரு மர்ம கும்பல் அவனை வெட்டுகிறது. இதனை விஜய் பார்த்துவிடுகிறார்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து கோயம்பேட்டுக்கு பஸ் ஏற செல்கிறார் கீர்த்தி சுரேஷ். கும்பலும் அவரைத் துரத்த.. விஜய்யும் பின் தொடர்கிறார். அங்கே மத்திய அமைச்சரே நேரில் வந்து கீர்த்தியை மிரட்டி அவரை கொலை செய்ய முயலும்போது ஒரு போன் கால் வருகிறது.
அந்த போனில் பேசியவுடன் மத்திய அமைச்சரே பயந்து போய் பேசாமல் போய்விட விஜய் கீர்த்தியைப் பற்றி விசாரிக்கிறார். இப்போது கீர்த்தி தனது வாழ்க்கைக் கதையை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.
பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத்தால் கன்னியாகுமரி அருகேயிருக்கும் பி.கே. மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார் கீர்த்தி. அதே கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த அபர்ணா வினோத்தும் சேர்கிறார். நன்கொடையாக 24 லட்சங்களை கொட்டித்தான் இருவரும் சேர்க்கப்படுகிறார்கள்.
கல்லூரியில் அடிப்படை வசதியே இல்லாமல் இருப்பதும், நோயாளிகள் வராமல் இருப்பதும், ஒரு மருத்துவக் கல்லூரிக்கான தகுதியே இல்லாமல் இந்தக் கல்லூரி இருப்பதும் கல்லூரியில் சேர்ந்த பிறகே அனைவருக்கும் தெரிய வருகிறது.
இது குறித்து மீடியாக்களில் செய்தி பரவ.. இந்திய மருத்துவ கவுன்சிலில் இருந்து சோதனைக்காக வந்து கல்லூரியின் வண்டவாளங்களை தெரிந்து கொள்கின்றனர் கவுன்சிலின் உறுப்பினர்கள். ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு வீக்னெஸ்ஸை பயன்படுத்தி கல்லூரிக்கு அனுமதி பெற முயல்கிறார் கல்லூரியின் நிறுவனரான ஜெகபதி பாபு.
இதற்காக பொய் சொல்லி அபர்ணா வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் இருந்து நடு இரவில் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையே ஆற்றங்கரையோரம் அபர்ணா வினோத் கொலையாகிக் கிடக்கிறார். ஆனால் இதனை தற்கொலை என்று சொல்லி மூடி மறைக்க முயல்கிறார் ஜெகபதி பாபு.
அபர்ணா வினோத்தின் பெற்றோர் துணையுடன் இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த வழக்கில் கூடிய சீக்கிரம் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அந்த ரவுடிகள்தான் இப்போது என்னை எங்கே போனாலும் பாலோ செய்து வருவதாகச் விஜய்யிடம் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இதைக் கேட்டு கோபப்படும் விஜய் திருநெல்வேலிக்கே நேரில் வந்து ஜெகபதிபாபுவுக்கு தண்ணி காட்டுவதாக அவரிடமே சொல்லிவிட்டு திருநெல்வேலிக்கு புறப்புடுகிறார். சொன்னதை செய்து காண்பித்தாரா..? இல்லையா..? ஜெகபதிபாபு என்ன ஆனார் என்பதெல்லாம் இடைவேளைக்கு பின்னான கதை..!
விஜய் தன் ரசிகர்களுக்கு குறை வைக்காமல் தனது பணியை நிறைவு செய்திருக்கிறார். பன்ச் வசனங்கள் பேசுவதைக்கூட கொஞ்சம் அடக்கிக் கொண்டு படத்துக்கான முத்திரை வசனங்களைத்தான் அதிகம் பேசியிருக்கிறார். “சிறப்பு.. மிகவும் சிறப்பு..”, “என்கிட்ட ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. சொன்ன வார்த்தையை காப்பாத்துவேன்னு..”, “நான் மட்டும் வரேன்.. தனியா..” போன்ற வசனங்கள் சிச்சுவேஷனுக்கு ஏற்றதுதான் என்றாலும் அவருடைய ரசிகர்களுக்கு இதன் அர்த்தம் நன்கு புரியும்..!
புதிய ஹேர்ஸ்டைல் பழைய விஜய்யின் அழகை குறைப்பதுபோல இருந்தாலும், நடனம், சண்டை காட்சிகளில் குறைவில்லாமல் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். முதல் சண்டை காட்சியை வித்தியாசமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருப்பதால் பெரிதும் ரசிக்க முடிகிறது.
கீர்த்தி சுரேஷிடம் ரொமான்ஸுக்கான காட்சிகள் குறைவு என்றாலும், நிறைவாக வீட்டு வாசலில் மெளத் மெளனிங்கில் பேசும் காட்சிகள் கலகலப்பு.. சதீஷுடன் வார்த்தை விளையாட்டு  காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார். நடன காட்சிகளில் இன்னமும் இளமை துள்ளல் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது.
கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படத்தில் நடிக்கவும் மிகப் பெரிய அளவில் ஸ்கோப் உள்ளது. ஆனாலும் அடிக்கடி இந்தப் படம் விஜய் படம் என்பது ஞாபகப்படுத்தப்பட்டு வருவதால் இவரது நடிப்பின் மீதான ஆர்வம் போய், விஜய்யின் ரியாக்ஷன் மேலேயே கண்ணாக இருப்பதால் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பில்லை போலும். ஆனாலும், கீர்த்தி பெஸ்ட்டாகவே நடித்திருக்கிறார்.
வில்லன் ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் விஜய்க்கு சவாலே விடுகிறார். செய்த கொடுமைகளை “நான் செய்த மாதிரியும்…” என்று இழுத்து, இழுத்து பேசுவதும்.. ஒவ்வொரு முறையும் விஜய் அண்ட் கோ-வை ஏமாற்றும் வேலை செய்தும் இறுதியில் திரைப்படத்தின் கதைப்படி தோற்பதுமாக இவருடைய நடிப்பில் குறையில்லை. சரியான வில்லன் என்று சொல்ல வைத்திருக்கிறார்.
இவருக்கே வில்லனாகியிருக்கிறார் டேனியல் பாலாஜி. தனது மனைவி மீதிருக்கும் பாசத்திற்கு மட்டும் குறுக்கே யார் வராமலும் பார்த்துக் கொள்பவர்.. இவரது மனைவி இறந்தபோது ஜெகபதி பாபு நைட்ரஸ் ஆக்சைடின் பயனாய் சிரித்துக் கொண்டே வருவதும்.. தொடர்ந்து விஜய்யின் அன்புப் பிடியில் சிக்கி கடைசியாய் பரிதாபமாய் உயிரைவிடுவதுமாக தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
புளிப்பாகாத நகைச்சுவைக்கு சதீஷ், ஒரேயொரு காட்சியில் மட்டுமே தன்னை நிரூபித்திருக்கும் தம்பி ராமையா, சில காட்சிகளுக்கு மட்டும் ஸ்ரீமன், நகைச்சுவை என்கிற பெயரில் ஏதும் இல்லாமல் நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என சிலவைகள் அல்லவையாகவே இருக்கின்றன.
ஒய்.ஜி.மகேந்திரன், ஹரீஷ் உத்தமன், அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஆகியோர்தான் திரைக்கதை நகர்வதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கிறார்கள். சிஜா ரோஸே ஒரு கதாநாயகிதான். இவர் ஏன் இப்படி சைடு கேரக்டரில் நடிக்க வருகிறார் என்று தெரியவில்லை.
மைனா சுகுமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. விஜய், கீர்த்தி, சிஜா ரோஸ் என்று மூன்று அழகர்களையுமே இன்னும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நடன அமைப்பு மற்றும் உடை வடிவமைப்பின் மூலம் கீர்த்திக்கு மேலும் புதிய ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘வரலாம் வா பைரவா’ பாடலும், ‘பப்பரப்பா’ பாடலும் ஓகே ரகம்.. ‘வரலாம் வா’ பாடல் தீம் மியூஸிக்காக பல இடங்களில் சிதறி, சிதறி ஒளிபரப்பாகி விஜய் ரசிகர்களை மட்டுமே சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இறுதி பாடலில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் செம்ம ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். இவர்களை சிறப்பாக ஆட வைத்த நடன இயக்குநர் தினேஷுக்கு ஒரு ஷொட்டு.
‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலமாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் பரதன். சமூக நோக்கத்தை அடிப்படையாக வைத்துதான் தனது அடுத்தடுத்த படங்கள் வெளியாக வேண்டும் என்கிற கொள்கையை ‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கையில் எடுத்திருக்கிறார் விஜய்.
அதன்படியே இந்தப் படமும் உருவாகியிருக்கிறது. மருத்துவக் கல்வியை கூறு போட்டு விற்கும் வியாபார முதலைகளை அம்பலப்படுத்தும் திரைக்கதையை அழுத்தமாகவும், அதே சமயம் அதற்கு உறுதுணையாக வீரியமிக்க வசனங்களின் மூலமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குர் பரதன். குறிப்பாக விஜய் பேசும் வசனங்கள், கோர்ட் காட்சிகள் ஆகியவை ரசிக்க வைக்கிறது.
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம், கள்ளக்குறிச்சியில் சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முறைகேடுகளால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள்.. டி.டி.நாயுடுவின் மருத்துவக் கல்லூரியில் நடந்த முறைகேடுகள்.. என்று இதுவரையிலும் நடைபெற்ற பல அநியாயங்களையும் வசனங்களின் மூலமாக வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இப்போதெல்லாம் ‘கல்வித் தந்தை’ என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்பவர்களெல்லாம் முன்னாளில் பெரிய ரவுடியாகவும், திருடனாகவும்தான் இருந்திருக்கிறார்கள். முன்பு முகமூடி போட்டு கொள்ளையடித்தவர்கள்.. இப்போது முகமூடி போடாமலேயே கல்வி நிறுவனங்களை வைத்து நடத்தி கொள்ளையடித்து வருகிறார்கள்.
‘ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும்போதே அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிறந்தவர்கள்தானா என்று தேடிப் பார்க்கும் நாம், மருத்துவம் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகளை நடத்தக் கூடியவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தானா என்பதை ஏன் பார்ப்பதில்லை?’ என்ற மில்லியன் டாலர் கேள்வியை கேட்டிருக்கிறார் இயக்குநர் பரதன். பாராட்டுக்கள்ண்ணே..!
ஆனால் திரைக்கதைதான் ‘கத்தி’ படத்திற்கு முந்தைய விஜய் படங்களை ஞாபகப்படுத்துகிறது. பழைய டெம்ப்ளேட் திரைக்கதையில் இருந்து மாறுபட்டு தொடர்ச்சியாக 4 படங்களை கொடுத்திருக்கும் விஜய்.. மீண்டும் பழைய திரைக்கதைக்கே போயிருப்பது பெரிய வருத்தமான விஷயம்..!
அப்படியிருந்தும் சில திரைக்கதை டிவிஸ்ட்டுகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. நான் கடவுள் ராஜேந்திரனிடமிருந்து தப்பிக்க பக்கத்து மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுப்பதாகச் சொல்லி மாட்டிவிடுவது.. ஜெகபதி பாபுவின் வீட்டில் வருமான வரித்துறை என்கிற பெயரில் சோதனையிட்டு பணம், நகைகளை கொள்ளையடிப்பது.. ஜெகபதி பாபுவை பாராட்டி போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டி அவரை குழப்பமாக்குவது.. சிஜா ரோஸி, ஹரீஷ் உத்தமன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டேனியல் பாலாஜியின் கேரக்டர் ஸ்கெட்ச்.. நீதிமன்றத்தில் இருந்த தன்னை பெட்ரோல் ஊற்றி எரிக்க திட்டம் தீட்டும் ஜெகபதி பாபுவின் ஆட்களுக்கு விஜய் தண்ணி காட்டுவது.. பிரதமரை கொலை செய்யப் போவதாக ஜெகபதி பாபு மீது பழியைப் போட்டு விஜய் செய்யும் டிராமா.. இப்படி சில காட்சிகளில் லாஜிக்கையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் முற்பாதியில் தேவையில்லாத பல காட்சிகள் ஆங்காங்கே வருவது படத்தின் வேகத்திற்கு பெரும் தடையாக உள்ளது. முதல் பாதியில் வரும் அந்த நீண்ட பிளாஸ்பேக் காட்சிகளை இன்னமும் அதிகமாக நறுக்கியிருக்கலாம்.
கீர்த்தி பிளாஷ்பேக் சொல்லும் காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையம் இல்லாமல், வேறு எங்காவது வைத்திருந்தால் கொஞ்சம் நம்பகத் தன்மையுடன் இருந்திருக்கும். இவ்வளவு நேரமாக அந்த ஒரே இடத்துல இருந்தே கதை சொன்னால் எப்படிங்கோ இயக்குநரே..?
படத்தில் 25 நிமிட காட்சிகளை நீக்கினால்தான் இந்தப் படம் கிரிப்பாக ஒரு பரபரப்புத் தன்மையுடன் இருக்கும்.
‘பைரவா’ விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..!

தொடரி - சினிமா விமர்சனம்

27-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தொடரி’ என்றால் ‘தொடர்ந்து கொண்டே செல்வது’ என்றுதானே பொருள். ‘தொடர் வண்டி’ என்றுதானே ‘ரயிலை’ குறிப்பிட்டுச் சொல்கிறோம். அந்த ‘தொடர் வண்டி’யையே இன்னமும் சுருக்கி ‘தொடரி’ என்று அழைக்கும் ஒரு புதிய பெயரை கொடுத்தமைக்காக இயக்குநர் பிரபு சாலமனுக்கு முதல் நன்றி.
அதிகப்பட்ச செலவில், மாஸ் ஹீரோவை வைத்து மிகப் பெரிய பேனரில் படம் செய்வது என்பது கத்தி மேல் நடப்பது போலத்தான். இயக்குநரின் திறமை மட்டுமே படத்தைக் காப்பாற்றும். நம்பிக்கை காத்திருக்க வைக்கும். ஆனால் செயல்படுத்த அது மட்டுமே போதாது. இந்தப் படத்தின் சிறிய வெற்றிக்கு காரணம் இயக்குநர் எழுதியிருக்கும் இடைவேளைக்கு பின்னான திரைக்கதையும், அழுத்தமான இயக்கமுமே..!

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கேண்டீனில் சப்ளையராகப் பணியாற்றுபவர் தனுஷ். அங்கே சூப்பர்வைஸர் தம்பி ராமையா. இந்த டீமில் கருணாகரனும் ஒருவர்.
அன்றைக்கு அந்த ரயிலில் பிரபல நடிகை சிரிஸ்ரீயும் வருகிறார். அவருடன் அவருடைய அம்மாவும், சிரிஸ்ரீயின் டச்சப் கேர்ளான சரோஜாதேவியும் பயணிக்கிறார்கள்.
இந்தியாவின் சாண எரிவாயு துறையின் மத்திய அமைச்சரான ராதாரவியும் அதே ரயிலில் சென்னைக்கு பயணமாகியுள்ளார். இவருக்குத் துணையாக இரண்டு கருப்பு பூனை படை வீரர்களும், அவருடைய அரசியல் பி.ஏ.வும் வருகிறார்கள்.
சிரிஸ்ரீக்கு உணவு சப்ளை செய்யப் போகுமிடத்தில் டச்சப் கேர்ள் சரோஜா தேவியைப் பார்க்கும் தனுஷ் திகைக்கிறார். ஹீரோயினைவிடவும் அழகாக இருக்கும் சரோஜா மீது பார்த்தவுடன் காதல் வருகிறது தனுஷுக்கு. இதற்காகவே அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்கிறார்.
இந்த நேரத்தில் அமைச்சரின் கருப்பு பூனை படை அதிகாரியான ஹரீஷ் உத்தமனுடன் சண்டை ஏற்பட அது இருவருக்குள்ளும் தீராத வன்மமாக உருவெடுக்கிறது. ஏற்கெனவே வீட்டுப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருக்கும் ஹரிஷ், ஒரே மாநிலத்தவராக இருந்தும் சரோஜாவின் உதாசீனத்தால் மேலும் அவமானப்படுகிறார்.
ஹரிஷின் கைத்துப்பாக்கி தொலைந்துபோய்விட.. அதை தனுஷ்தான் எடுத்திருப்பார் என்று நினைத்து அவரிடம் கேட்டு மேலும் அவமானப்படுகிறார் ஹரிஷ். ஆனால் இந்தத் துப்பாக்கியை அமைச்சர் ராதாரவியை எடுத்து வைத்திருந்து திருப்பிக் கொடுத்து மீண்டும் அவமானப்படுத்துகிறார் ஹரிஷை.
என்ஜின் டிரைவரான ஆர்.வி.உதயகுமாருக்கு அதுதான் கடைசி வேலை நாள். இன்றோடு ஓய்வு பெறுகிறார். உதவி டிரைவரான போஸ் வெங்கட்டுக்கும், அவரது திருமதியாருக்கும் இடையில் போனிலேயே கடும் மோதல். இந்தக் குழப்பத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்துவிட.. ரயில் தண்டவாளத்தில் குறுக்கே வந்த மாடுகளுடன் மோதி ரயில் நிற்கிறது.
டிரைவரும், உதவி டிரைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் ஹரிஷ் சரோஜாவையும், தனுஷையும் கொலை வெறியோடு தாக்க வருகிறார். அவரிடத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் சரோஜா திரும்பவும் ரயில் புறப்படும் சமயத்தில் வண்டியின் என்ஜின் அருகே ஏறிக் கொள்கிறார். அதே நேரம் தனுஷை ஒரு பெட்டியில் வைத்து பூட்டிவிடுகிறார் ஹரிஷ்.
ரயில் புறப்பட்ட சில நொடிகளில் டி.டி.ஆரு.க்கும், போஸ் வெங்கட்டுக்கும் இடையில் சண்டை நடக்க இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார்கள். இதனால், உதவியாளர் இல்லாமலேயே ஆர்.வி.உதயகுமார் வண்டியை செலுத்துகிறார். திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி வந்து மயக்கமாக.. டிரைவரே இல்லாமல் ரயில், ஓவர் ஸ்பீடில் செல்கிறது.. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பஞ்சாய் பறக்கிறது.
ஒரு பக்கம் தனுஷ் பெட்டிக்குள் மாட்டிக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்ஜின் அருகே அமர்ந்திருக்கிறார். ஹரிஷ் இவர்களைத் தேடி வருகிறார். ரயில் வழியில் இருக்கும் ஸ்டேஷன்களுடன் தொடர்பே இல்லாமல் கட்டுக்கடங்காமல் எங்கும் நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
முடிவு என்ன என்பதுதான் படம்..!
ஹிந்தி படமான ‘பர்னிங் டிரெயினின்’ கதையைத்தான் இப்போதைக்கு கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து திருத்தியிருக்கிறார் பிரபு சாலமன்.  படத்தின் முற்பாதியில் சவசவ என்று நீளும் காமெடி காட்சிகளால்தான் படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. படத்தில் 25 நிமிட காட்சிகளை தயவு தாட்சண்யமே இல்லாமல் நீக்கிவிடலாம். அப்படி நீக்கினால் ஒரு கிரிப் கிடைத்திருக்கும்.
முற்பாதி எதை நோக்கி படம் செல்கிறது என்பது தெரியாமலேயே நகர்வதால் இடைவேளை பிளாக்கில்தான் படத்தின் கருவே தென்படுகிறது. இதன் பின்னான பகுதிதான் படத்தின் ஜெட் வேகம். நகைச்சுவை, நடிப்பு, திரைக்கதையில் இருக்கும் சுவாரஸ்யமான டிவிஸ்ட்டுகள் என்று பலவும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
தனுஷ் படத்திற்கு படம் மெருகேறியே வருகிறார். இதிலும் அப்படியே.. நக்கல் செய்கிறாரா..? அல்லது கிண்டல் செய்கிறாரா..? அல்லது இயல்பாகத்தான் பேசுகிறாரா என்பதையே தெரியவிடாத அளவுக்கு பல காட்சிகளில் நடித்திருக்கிறார். இதுவே அவரது நடிப்புக்கு சான்று. அதிலும் தம்பி ராமையாவை ஓவராக கலாய்க்கும் காட்சிகளில் ‘பாவம்யா அந்தாளு’ என்று ரசிகனையே புலம்ப வைத்துவிட்டார் தனுஷ்.
சரோஜா என்னும் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் லவ்வுவது எல்லாம் இயக்குநரின் வேலை என்றாலும் அதையும் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடகியாக வேண்டும் என்கிற அவரது ஆசையைத் தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதுபோல நடித்து காதலியைக் கைப்பிடிக்க முயலும் ஆசை தப்புதான் என்றாலும்.. வழக்கமான சினிமா காதல்தானே என்ற ரீதியில் படத்தை அணுகும்போது மன்னித்துவிட்டுவிடலாம்.
கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடாமலேயே கொள்ளை அழகாகத் தெரிகிறார். நடிப்பும் பட்பட்டென தெறிக்கிறது. இறுதிக் காட்சியில் அந்த நேரத்திய டென்ஷனிலும் அவருடைய நடிப்பே படத்தைத் தாங்கியிருக்கிறது. இவருடைய அப்பாவித்தனத்தை பார்த்து ஒவ்வொரு முறையும் தனுஷ் ‘அடியே’ என்று இழுக்கும்போது ஏற்படும் சின்னச் சின்ன நகைச்சுவைகளே படத்தின் தூண்கள்.
இதேபோல் இன்னொரு பக்கம் தனது தனித்த நடிப்புத் திறனால் படத்திற்கு மேலும் சிறப்பு கூட்டியிருக்கிறார் ‘இளையவேல்’ நடிகர் ராதாரவி. சாண எரிவாயு துறை அமைச்சராக அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும், இன்றைய அரசியல் களத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
‘இந்த வேகத்துல போனா அந்தப் பாலம் இடிஞ்சு விழுந்திருமா?’ என்ற கேள்விக்கு, ‘ம்ஹூம்.. இடியாது. அது வெள்ளைக்காரன் கட்டின பாலம். நம்மாளு கட்டியிருந்தால் நிச்சயம் விழும்..’ என்று அவர் சொல்லும் பதிலுக்குத்தான் அதிகமான கைதட்டல் கிடைத்திருக்கிறது.
அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் வசனத்தை அவர் உச்சரிக்கும்விதமும், அதனூடேயே அவர் காட்டும் நடிப்பும், சோறை எடுத்து ஹரிஷின் முகத்தில் வீசிவிட்டு பெருங்கோபத்துடன் ‘வெளிய போடா‘ என்று சொல்லும்விதமும் அடாவடி அமைச்சரை அப்படியே காட்டியிருக்கிறது.
இன்னொரு பக்கம் பிரபு சாலமன் எந்தவொரு சினிமா இயக்குநரும் செய்யாத ஒரு வேலையைச் செய்திருக்கிறார். அது இந்திய செய்தி ஊடகங்களை நார், நாராக கிழித்திருப்பதுதான்.
இன்றைக்கு இந்தியாவில் தவறான, அவதூறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் திணிக்கும் வடக்கத்திய செய்தி சேனல்களின் பர்கா தத், அர்னாப் கோஸ்வாமி, பிரணாய் ராய் போன்றவர்களால்தான் இந்தியாவின் அரசியல், மக்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டு.. விளம்பரங்களை வாங்கிக் குவித்து மறைமுகமான பிரதிபலன்களையும் அடைந்து, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செயல்களைத்தான் இந்த செய்தி சேனல்களில் பெருவாரியானவை செய்து வருகின்றன.
டி.ஆர்.பி. போட்டியினால் ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை உடனடியாக குற்றவாளி என்றே முடிவு செய்து அவருடைய வாழ்க்கைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைப்பது இந்த செய்தி சேனல்கள்தான்.
டிரெயனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் முதலில் டிரெயின் கடத்தப்பட்டது என்றும், என்ஜின் அருகே கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் பெண் தீவிரவாதி என்று திசை திருப்புவதும்.. டிரெயினில் கொள்ளையடிக்க வந்த கும்பலை டிரெயின் மீது பார்த்துவிட்டு அவர்கள்தான் டிரெயினை கடத்திய தீவிரவாதிகள் என்பதும், அமைச்சரை கடத்திவிட்டார்கள் என்றும் உண்மையே தெரியாமல் அள்ளிவிடும் கப்ஸா டிவிக்களை தோலுரித்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
இதேபோல் கலந்துரையாடலில் வந்து அமர்ந்து கொண்டு நல்லதுக்கும், கெட்டதுக்குமே ஆயிரத்தெட்டு விளக்கங்களை கொடுக்கும் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களையும் வறுத்தெடுத்திருக்கிறார். முக்கியமாக கோபண்ணாவும், ஹெச்.ராஜாவும் வறுபட்டிருக்கிறார்கள்.
ஒரு அவசர காலத்தில் ரயில்வே துறை என்ன செய்ய வேண்டும்..? என்னவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் ஆயிரத்தெட்டு அரசு பார்மாலிட்டீஸை வைத்துக் கொண்டு செய்வது என்பது முடியாத காரியம் என்பதையும் இதில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இப்படியொரு படத்திலும் காதல் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு.. இரு வேறு பதில்கள் இருக்கின்றன. வேறு வழியில்லை. இவ்வளவு பெரிய நடிகரை துணைக்கு வைத்துதான் இப்படியான பெரும் பொருட்செலவிலான படத்தை எடுக்க முடியும். போட்ட காசை எடுக்க வேண்டுமெனில் இப்படியொரு கதையம்சம் அவசியம் தேவையாய் இருக்கிறது. ரசிகன் மாறும் சூழல் வரும்போது இதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மாறிவிடும்.
லாஜிக் மீறல் இல்லாமல் இது போன்ற படங்களை எடுக்கவே முடியாது. சினிமாதானே மறந்துவிடுவார்கள் என்றுதான் அனைத்து இயக்குநர்களும் நினைப்பார்கள். இதையேதான் பிரபு சாலமனும் நினைத்திருக்கிறார்.
இந்திய ரயில்வேயின் தண்டவாளங்கள் இப்போதும் 140 கிலோ மீட்டர் வேகத்தை தாங்க கூடியவையாக இல்லை என்பது முதல் உண்மை. இத்தனை ஸ்பீடில் செல்லும் ஒரு டிரெயின் மீது ஒருவர் எந்தக் கைப்பிடியும் இல்லாமல் நிற்பதோ, நடப்பதோ சாத்தியமே இல்லாதது என்பதும் உண்மைதான்.  
ஆனாலும் இது ஹீரோயிஸ படம் என்பதால் ‘எந்திரன்’ போல், ‘கபாலி’யை போல சண்டையிட வைத்து எடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் மிகப் பெரிய காமெடியாக இத்தனை களேபரத்திலும் கீர்த்தி சுரேஷை லவ்வும் தனுஷ் கடைசியிலும் ஒரு டூயட்டை பாடுவது மகா கொடுமை. இதற்கும் அந்த ஹீரோயிஸம்தான் காரணமாகும்.
எல்லாம் முடிந்து ஹீரோ செத்துப் போவதாக கதையமைத்தால் அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்காதே என்பதால் இத்தனை விபத்துகளுக்குப் பின்பும் ஹீரோவையும், ஹீரோயினையும் உயிருடன் காட்டியிருக்கிறார் பிரபு சாலமன். “அவருடைய சென்ற படமான ‘கயல்’ படத்தில் காதலர்கள் கடைசியில் சாகடித்ததால்தான் அந்தப் படமும் செத்துப் போனது..” என்று ஒரு மவுத் டாக் கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. இதையும் மனதில் வைத்துதான் பிரபு சாலமன் இந்த முடிவையெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் மிக பிரமாதமான இயக்கம். அதிகப்படியான காட்சிகள்.. அதிகப்படியான ஷாட்டுகள்.. பிரபு சாலமன் எப்படி இதை எடுத்தார்..? எத்தனை நாட்களில் முடித்திருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயம்தான். நிரம்ப கஷ்டப்பட்டுத்தான் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை படம் பார்த்தால்தான் புரியும்.
பலவித எள்ளல்கள், எல்லை மீறல்கள்.. கேள்விகள் இருந்தாலும் படத்தின் துவக்கம் முதல் கடைசிவரையிலும் நகைச்சுவை மிளிர அதிலும் இடைவேளைக்கு பின்பு காமெடி தர்பாரே நடந்திருக்கிறது என்றால் நிச்சயம் இது இயக்குநர் பிரபு சாலமனின் சிறப்பான இயக்கத்தினால்தான். அவருடைய இயக்க திறமைக்கு நமது சல்யூட்.
நிச்சயமாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்தான் இந்தத் ‘தொடரி’ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை..!