விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

24-07-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தமிழ் படம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘இறுதி சுற்று’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் Y NOT ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் கதிர், வரலட்சுமி, ‘யு டர்ன்’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரேம், அச்சுயுத் குமார், ‘ஆண்டவன் கட்டளை’ புகழ் ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – P.S.வினோத், இசை – சாம் C.S., வசனம் – மணிகண்டன், பாடல்கள் – முத்தமிழ், நடனம் – கல்யாண், படத் தொகுப்பு – ரிச்சர்ட் கெவின், கலை இயக்குனர் – வினோத் ராஜ்குமார், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாக தயாரிப்பு – சக்கரவர்த்தி ராமச்சந்திரா, தயாரிப்பு மேற்பார்வை – முத்துராமலிங்கம், எழுத்து இயக்கம் – புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பு – சசிகாந்த் YNOT ஸ்டுடியோஸ்.

‘ஓரம்போ’, ‘வா குவார்ட்டர் கட்டிங்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தம்பதிகளான புஷ்கர் – காயத்ரி இயக்கியிருக்கும் மூன்றாவது படம். ஆனால் இதுதான் இவர்களது முதல் வெற்றிப் படம்.
விக்கிரமாதித்தன் கதைகளை ஆதி காலத்தில் இருந்தே கேட்டு வருகிறோம். 
மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளத்தைச் விக்கிரமாதித்தன் சுமந்து வருகிறான். அதே நேரம், தன்னைச் சுமந்து வரும்போது விக்கிரமாதித்தன் எதுவுமே பேசக் கூடாது என்று வேதாளம் ஒரு நிபந்தனையை முன்பே விதித்திருக்கிறது.
ஆனால் விக்கிரமாதித்தன் நடந்து செல்லும்போது, வேதாளம் வேண்டுமென்றே “ஒரு கதை சொல்லட்டுமா..?” என்று ஆரம்பித்து ஒரு கதையை சொல்லும். அந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் அந்தக் கதையைத் தொட்டு ஒரு கேள்வியும் கேட்கும் வேதாளம். சரியான விடை தெரிந்தும் பதில் சொல்லவில்லையானால் விக்கிரமாதித்தனின் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்கிற விதியும் உண்டு.
விக்கிரமாதித்தன், வேதாளம் சொல்லும் கதைகளைக் கேட்டுவிட்டு, பின்பு அந்தக் கதையைத் தொட்டு வேதாளம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை தனது உயிரைக் காக்கும் பொருட்டு சொல்லுவான். ஆனால் மௌனமாகத் தன்னைச் சுமந்து வர வேண்டுமென்கிற நிபந்தனை அப்போது மீறப்படுவதால், வேதாளம் விக்கிரமாதித்தனிடமிருந்து விடுபட்டு மறுபடியும் மரத்தில் ஏறிக் கொள்ளும்.
இந்த கான்செப்ட்டின் மூலமாக பலவிதமான கதைகளை இந்த வேதாளம், விக்கிரமாதித்தன் மூலமாக தமிழக மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்த வேதாளம்-விக்கிரமாதித்தன் கான்செப்ட்டை மட்டும் அடிப்படையாக கொண்டு அழகான கதை, திரைக்கதையில் அற்புதமான இயக்கத்தில் ஒரு பரபரப்பான படத்தை உருவாக்கி அதனை வெற்றியும் பெற வைத்திருக்கிறார்கள் புஷ்கர்-காயத்ரி இயக்குநர் தம்பதிகள். அவர்களுக்கு நமது முதல் நன்றிகள்..!
18 கொலைகளை அசால்ட்டாக செய்திருக்கும் வேதா என்னும் ரவுடியான விஜய் சேதுபதியை பிடிக்க சென்னை காவல்துறையில் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்ஸ்பெக்டர் பிரேம் தலைமையில் இருக்கும் அந்த அணியில் 16 என்கவுண்ட்டர்களை அதேபோல் அசால்ட்டாக செய்து காண்பித்திருக்கும் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விக்ரம் என்னும் மாதவனும் இடம் பிடித்திருக்கிறார்.
ஓரிடத்தில் விஜய் சேதுபதி பதுங்கியிருப்பதாக செய்தி வர தனது போலீஸ் படையுடன் சென்று அங்கேயிருக்கும் விஜய் சேதுபதியின் கூட்டாளிகளை சுட்டுத் தள்ளுகிறார் மாதவன். இந்தத் தாக்குதலில் ரவுடியிஸத்தில் பங்கு பெறாத கதிரும் இடம் பெற்று உயிரையிழக்கிறார். இந்தக் கதிர் விஜய் சேதுபதியின் பாசத்துக்குரிய உடன் பிறந்த தம்பி. ஆனால் கதிரும் துப்பாக்கியால் போலீஸாரை சுட்டார் என்று தவறான அலிபியை தயார் செய்து அனைவரையும் நம்ப வைக்கிறார் மாதவன்.
ஆனாலும் என்கவுண்ட்டரில் நிறைய பேர் இறந்ததையடுத்து மனித உரிமை கமிஷன் விசாரணை மற்றும் பத்திரிகைகளின் கடுமையான எதிர்ப்பினால் முகம் சுழிக்கும் போலீஸ் உயரதிகாரிகள், சீக்கிரமாக வேதாவை கண்டுபிடித்து பிரச்சனையை முடிக்கும்படி உத்தரவிடுகிறார்கள்.
இந்தப் பிரச்சினை காய்வதற்குள்ளாக விஜய் சேதுபதியே தானாகவே முன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் சரணடைகிறார். மாதவன் அவரை விசாரித்தபோது வேதாளம்-விக்கிரமாதித்தன் கதை போல ஒரு கதையைச் சொல்கிறார்.
“ஒரு குற்றச் செயலை செய்தவனை கொல்வதா..? அல்லது அந்தக் குற்றச் செயலைச் செய்யச் சொன்னவனை கொல்வதா..?” என்று புதிரான கேள்வியைக் கேட்கிறார் விஜய் சேதுபதி. “செய்யச் சொன்னவனைத்தான் முதலில் கொல்ல வேண்டும்…” என்று மாதவன் சொல்ல.. அதைத்தான் நான் செய்ததாக சொல்லி இதுவரையிலும் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார் விஜய் சேதுபதி.
இதைச் சொல்லி முடித்தவுடனேயே விஜய்சேதுபதியின் ஜாமீன் மனுவோடு அங்கே வருகிறார் மாதவனின் மனைவியான வக்கீல் ஷ்ரத்தா ஸ்ரீதர்.  மாதவன் பெரும் அதிர்ச்சியாகிறார். விஜய் சேதுபதி ஜாமீனில் விடுதலையாகி வெளியே சென்றுவிட.. இது தொடர்பாக மாதவனுக்கும், அவரது மனைவி ஷ்ரத்தாவுக்கும் இடையில் பனிப்போர் ஏற்படுகிறது.
ஷ்ரத்தாவை வைத்தே விஜய் சேதுபதியை பிடிக்க எண்ணுகிறார் மாதவன். அதற்காக இவர் ஒரு திட்டம் போட.. அத்திட்டம் தோல்வியடைகிறது. ஆனால் இன்ஸ்பெக்டர் பிரேம் தனியே போய் விஜய் சேதுபதியை பிடிக்க திட்டமிட அது தோல்வியாகி பிரேம் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
தன்னுடைய நெருங்கிய நண்பனான பிரேமின் கொலையை மாதவனால் சாதாரணமாக விட முடியவில்லை. அதற்குக் காரணம் விஜய் சேதுபதிதான் என்று நினைத்து விஜய் சேதுபதி இன்னும் கொலை வெறியோடு தேடுகிறார். இறுதியில் என்னாகிறது என்பதுதான் ‘விக்ரம்-வேதா’ படத்தின் திரைக்கதை.
படத்தின் மூன்று கதைகள்.. ஒன்று விஜய் சேதுபதி எப்படி டானாக உருவெடுக்கிறார் என்பது.. இரண்டு, மாதவன் பிரேமின் கொலைக்கு காரணம் தேடி அலைந்து கண்டறிவது.. மூன்று, விஜய் சேதுபதியின் டான் வாழ்க்கையில் ஏற்படும் விஷயங்கள்..! இந்த மூன்றையும் சரி சமமான விஷயத்தில் திரைக்கதையில் வடிவமைத்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
விஜய் சேதுபதியின் அந்த அறிமுகக் காட்சிக்கே ஒரு ‘ஓ’ போடலாம். பின்னணி இசையும் இந்த இடத்தில் அபாரம்.. ஏதோ ஒரு காட்சியாக உருவகப்படுத்தப்பட்டு, அந்த கருப்பு சட்டை கொஞ்சம் முன்னால் நகர்ந்த பின்பே அது விஜய் சேதுபதியாக தெரியும்போது ஏற்படும் கிளர்ச்சியே கைதட்ட வைத்திருக்கிறது.
கொலை செய்துவிட்டு கத்தியுடன் வீர நடை போடும் அந்த தோற்றமே விஜய் சேதுபதிக்கு இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் கச்சிதமாக பொருந்தியிருப்பதைக் காட்டுகிறது. தம்பி மீதான பாசத்தில் அவனிடத்தில் இருந்து முத்தம் கேட்டுப் பெறுவது.. சேட்டனுக்கு பரோட்டோவை எப்படி சாப்பிடுவது என்று சொல்லிக் கொடுப்பது.. சேட்டனுடன் சேர்ந்து தனக்கு துரோகம் செய்யும் கடைசி நண்பனையும் புரட்டியெடுப்பது.. என்று ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை காட்சிகளிலும் அதகளப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
“தோட்டா இருக்கு.. துப்பாக்கி எங்க..?” என்று மிக எளிமையான வசனத்தின் மூலம் அறிமுகமாகும் மாதவன், தொடர்ச்சியான தனது வசன உச்சரிப்பாலும் அழுத்தமான நடிப்பாலும், கொஞ்சமும் சேதாராமாகாத போலீஸ் மிடுக்கில் அவர் காட்டும் ஆக்ரோஷ அதிகாரி வேடம்.. எல்லாமும் சேர்ந்து விக்ரம் கேரக்டருக்கு அழகைக் கூட்டியிருக்கிறது.
மனைவியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் காட்டும் அழகு.. அதே மனைவியுடன் விஜய் சேதுபதியால் முரண்படும் தருணம்.. ‘வெத்து பயலுக’ என்று போலீஸ் உயரதிகாரி சொன்னவுடன் சீறி வரும் கோபம்.. பிரேமின் உண்மையான நிலைமை தெரிந்து அந்த நேரத்தில் தன்னை உணரும் தருணம்.. ‘நான் வெறும் போலீஸாவே இருந்துட்டேன்’ என்று தன்னைத்தானே நினைத்து வருந்தும் காட்சியும்.. கடைசியில் போலீஸாரை காலில் சுட்டு காயப்படுத்திவிட்டு ‘அவங்களை திருத்திரலாம்.. ஆனால் இவனை முடியாது’ என்று சொல்லி விஜய் சேதுபதியின் சாய்ஸை போலவே தன்னுடைய உயரதிகாரியை போட்டுத் தள்ளுவது செம டிவிஸ்ட்டு..!
ஷ்ரத்தா அழகு நாயகியாக வலம் வந்திருக்கிறார். வக்கீலாக அவர் இருப்பதை முதலில் காட்டினாலும் எதிரெதிர் காவலாளிகளாக காட்டியிருக்கும் முரண்பாடுதான் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. தன்னை வைத்து விஜய் சேதுபதியை பிடிக்க நினைக்கும் கணவருடன் கோபப்பட்டாலும், அவருடைய நலனில் அக்கறை கொண்ட மனைவியாக இருக்கும்விதமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
கதிருக்கு இதுவொரு முக்கியமான படம். பங்கு மார்க்கெட் வர்த்தகத்தில் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கும்போது எதற்கு இந்த அடிதடி, வெட்டுக் குத்து என்று அன்பாக கேட்டு அண்ணனை திசை திருப்பப் பார்க்கிறார். அண்ணன் அவருக்கான வாழ்க்கையை மும்பையில் அமைத்துக் கொடுத்த பின்பும், சந்தர்ப்பவசத்தால் இங்கே வந்து மாட்டிக் கொண்டு மரணமடைகிறார்.
இவருக்கும் வரலட்சுமிக்கும் இருக்கும் வயது தாண்டிய காதல் ரசிக்க வைத்திருக்கிறது என்றாலும் அந்தக் காதல் காட்சி இந்தப் படத்துக்குத் தேவைதானா என்றும் கேட்க தோன்றுகிறது. நீக்கியிருக்கலாம்..!
வரலட்சுமி எல்லாவற்றுக்கும் ‘ஆமாம் சாமி’ போடும் தனி கேரக்டர். பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய பின்பும் காதலனை மறக்க முடியாமல் போன் போட்டுச் சொல்லி திரும்பி வந்து நின்று அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் மோதலுக்கு அச்சாரமாக நிற்கும் கேரக்டர். ஆனால் இறுதியில் பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார்.
ஒரு சில காட்சிகள் என்றாலும் தனது தனி வசன உச்சரிப்பால் கவனத்தை ஈர்க்கும் ஈ.ராம்தாஸ், இன்ஸ்பெக்டர் பிரேம், சேட்டனாக நடித்திருக்கும் ஹரீஷ் பெரடி, கடைசிவரையிலும் நண்பனாக நடித்து துரோகம் செய்யும் அக்சுயுத் குமார் நால்ரும் நினைவில் நிற்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். அதிலும் ஹரீஷ் பெரடியின் சில, பல குளோஸப் ஷாட்டுகள் அவரது கேரக்டருக்கு வலுவூட்டியிருக்கின்றன.
அதேபோல் புதிதாக கான்ஸ்டபிளாக நுழைந்திருக்கும் ஒருவர் இந்த என்கவுண்ட்டரை பார்த்தவுடன் பயந்துபோய் வேறு இடத்திற்கு டிரான்ஸ்பர் கேட்பதும், பின்பு ஒரு கட்டத்தில் மாதவனை காப்பாற்றுவதும்.. கடைசியாக தனக்குத்தானே துப்பாக்கி கிடைத்தவுடன் உண்மையான போலீஸாக மாறி மாதவனை கொல்ல முயல்வதும்.. டச்சிங்கான காட்சிகள்..
விஜய் சேதுபதி பேசும் வசனங்கள்தான் அவருடைய கேரக்டரை தூக்கி நிறுத்தியிருக்கின்றன. வேதாளம் – விக்கிரமாதித்தனைவிடவும் பல காட்சிகளில் பல கேரக்டர்கள் பேசும் யதார்த்த வசனங்களே படத்திற்கு மிகப் பெரிய பலம். அந்த வகையில் வசனம் எழுதிய மணிகண்டனுக்கு பாராட்டுக்கள்.
“போடத் தெரியாதவனுக்கு பொருள் எதுக்குடா..?”, “போட்டுத் தள்ளிட்டு வீட்டுக்குப் போய் கொறட்டை விட்டு நிம்மதியா தூங்கிருவேன். ஏன்னா நான் போட்டுத் தள்ளின எவனும் அப்பாவிக இல்லை..”, “ஒருத்தனோட கண்ணை பார்த்தே அவன் ரவுடியா இன்னசெண்ட்டான்னு கண்டுபிடிக்கணும். அவன்தான் போலீஸ்..” என்று பல இடங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வசனத்தை கொட்டியிருக்கிறார்கள்.
ரவுடியின் மகனையும் ரவுடியாக பார்க்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் போலீஸிடமே,” காந்தியோட அப்பா காந்தியா ஸார்..? அவரைச் சுட்ட கோட்சேவின் அப்பா கோட்சேவா ஸார்..?” என்று கேட்டு மூக்குடைக்கும் காட்சியில் கைதட்டல்கள் பறக்கிறது..!
அதேபோல் “பிரச்சினை என்னன்னு பார்க்குறதைவிட, பிரச்சினையை தூண்டிவிட்டவன் எவன்னுதான் பார்க்கணும்..?”, “கொலை செஞ்சவனைவிட, செய்யச் சொன்னவன்தான் நம்மளோட முதல் எதிரி..” என்கிற மாதிரியான வசனங்களும் இந்தப் படத்திற்கு கெத்தை கூட்டியிருக்கின்றன.
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலம். முதல் காட்சியில் காணப்படும் அதே கலர் டோனே கடைசிவரையிலும் பயணிக்கிறது. சண்டை காட்சிகளிலும், என்கவுண்ட்டர்களிலும் கேமிராவை தூக்கி சுமந்து படாதபாடுபட்டு படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் வினோத்திற்கு நமது பாராட்டுக்கள்..! அந்த ராட்டினம் மாடல் அளவு படமாக்கலும், ரவுண்ட் டிராலி ஷாட்டும், விஜய் சேதுபதியை தேடும் படலமும் படத்தை பிரமிப்பாக பார்க்க வைத்திருக்கிறது.
சி.எஸ்.சாம்ஸின் இசையில் ‘ஏய் டாசாங்கு’ என்ற பாடலும், நடனமும், காட்சியமைப்புகளும் ஏக ரகளை.. இதைவிடவும் பின்னணி இசையில் நின்று, நிதானித்து அடித்து, ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர். பாராட்டுக்கள்..!
இது போன்ற கேங்ஸ்டர் படங்களில் இருக்க வேண்டிய விறுவிறுப்பை துளியும் குறையாத அளவுக்கு படத்தின் படத் தொகுப்பு பணியினைச் செய்திருக்கிறார் ரிச்சர்ட் கெவின். துப்பாக்கி சண்டை காட்சிகள், மாதவன்-விஜய் சேதுபதி மோதும் காட்சிகள், கிளைமாக்ஸில் தெறிக்கும் சண்டை காட்சி என்று அனைத்துமே கச்சிதமாக நறுக்கப்பட்டிருக்கின்றன.
முடிவில் யார் உயிருடன் இருப்பார்.. யார் இல்லை என்பதை நம்மிடமே விட்டுவிட்டு படத்தை முடித்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
காவல்துறையின் செயல்பாடுகளில் லாஜிக் மீறலெல்லாம் பார்க்கவே கூடாத அளவுக்கு மிக நுணுக்கமாக பார்த்து, பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் லோக்கல் டான்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளையும் அவர் மற்றவர்களை எதிர்கொள்ளும்விதத்தையும்கூட நல்லவிதமாகவே காட்டியிருக்கிறார்.
போலீஸ் ரெய்டு வரும்போது போதை மருந்து கடத்தல்காரர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்.. எப்படி தப்பிப்பார்கள் என்பதைக்கூட உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் முக்கியமான கிளைமாக்ஸில் வரலட்சுமி இடது கை பழக்கமுள்ளவர் என்று தெரிந்து கொண்டு பிரேம் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று மாதவன் அறிந்து கொள்கிறார். ஆனால் வரலட்சுமி இடது கை பழக்கமுள்ளவர் என்று மாதவனுக்கு எப்படி தெரிந்தது என்றுதான் தெரியவில்லை.
இதேபோல் இந்த ஒரு திடீர் யோசனைக்கு பின்பு எப்போதோ பேசப்பட்ட பிரச்சினைகளை தோண்டியெடுத்து உடன் வேலை செய்த போலீஸாரிடம் சொல்வதும்.. குற்றவாளிகள் தன் கூடவே இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதும்.. தான் மட்டும் எப்போதும் வேலை, வேலை என்று வேலையையே நினைத்து உலகத்தை மறந்து செயலாற்றியதையும் சொல்கிறார் மாதவன். இந்த திடீர் அறிவு எப்படி அவருக்கு வந்த்து என்பதைத்தான் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அதை மட்டும் செய்யாமல் அசுர வேகத்தில் கிளைமாக்ஸை சொல்லியிருக்கிறார்கள்.
என்னதான் சொன்னாலும் ராக்கெட் வேக கதையில், ஜெட் வேக திரைக்கதையில்.. மனதை லயிக்க வைக்கும் இயக்கத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருப்பதால் எல்லாவற்றையும் மறந்து போய் ரசிக்க வைக்கிறது..!
இதுவரைக்கும் தமிழில் வெளிவந்த கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த ‘விக்ரம்-வேதா’ திரைப்படம்.

படக் குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

4 comments:

Unknown said...

"அதேபோல் புதிதாக கான்ஸ்டபிளாக நுழைந்திருக்கும் ஒருவர் இந்த என்கவுண்ட்டரை பார்த்தவுடன் பயந்துபோய் வேறு இடத்திற்கு டிரான்ஸ்பர் கேட்பதும், பின்பு ஒரு கட்டத்தில் மாதவனை காப்பாற்றுவதும்.. கடைசியாக தனக்குத்தானே துப்பாக்கி கிடைத்தவுடன் உண்மையான போலீஸாக மாறி மாதவனை கொல்ல முயல்வதும்.. டச்சிங்கான காட்சிகள்.."

அவர் தான் சார் வசனகர்த்தா.. மணிகண்டன்

Unknown said...

Vimarsanam engira eril yenyaa ellaa kathaiyum sollita? Un vimarsanam padichutu padam paarthaa evanukkachum surprise irukkumaa?

Thirunthatha jenmam ya nee!!

Unknown said...

\\இவருக்கும் வரலட்சுமிக்கும் இருக்கும் வயது தாண்டிய காதல் ரசிக்க வைத்திருக்கிறது என்றாலும் அந்தக் காதல் காட்சி இந்தப் படத்துக்குத் தேவைதானா என்றும் கேட்க தோன்றுகிறது. நீக்கியிருக்கலாம்..!

இது போன்ற கேங்ஸ்டர் படங்களில் இருக்க வேண்டிய விறுவிறுப்பை துளியும் குறையாத அளவுக்கு படத்தின் படத் தொகுப்பு பணியினைச் செய்திருக்கிறார் ரிச்சர்ட் கெவின். துப்பாக்கி சண்டை காட்சிகள், மாதவன்-விஜய் சேதுபதி மோதும் காட்சிகள், கிளைமாக்ஸில் தெறிக்கும் சண்டை காட்சி என்று அனைத்துமே கச்சிதமாக நறுக்கப்பட்டிருக்கின்றன.

\\
yenyaa intha muranbaadu!! oru time editing mosam nu solar, apuram nalla irukkunu solar.

Un review padikurathuku neraa padam paathukalam.

Useless man u r..

Anonymous said...

இஷ்டம் இல்லைனா இங்க வந்து படிக்காதிங்க