அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

01-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குழந்தைகளை மையமாக வைத்து 5 குடும்பங்களின் வாழ்க்கைக் கதையை தெளிவான நீரோடை போன்ற திரைக்கதையில் கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.

முருகப் பெருமானின் திருவடி நிழலில் அவன் பெயரைச் சொல்லியே அனாதை ஆசிரமம் நடத்தி வரும் தம்பி ராமையாவின் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்திருக்கும் ஒரு சிறுவன்.. ஈகோவால் டைவர்ஸ்வரையிலும் போன தாய், தகப்பன் இருவரிடத்தில் யாரிடம் வாழ்வது என்கிற இக்கட்டில் இருக்கும் சிறுவன், அக்காவுக்கு மகள் பிறந்த பின்பும் அவள் மாமனார் வீட்டுக்குப் போகாமல் இருப்பதன் மர்மம் தெரியாமல் இருக்கும் சிறுமி, வரிசையாக 3 பெண் குழந்தைகள் பிறந்த்தால் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்டோ டிரைவர்..  செஸ் போட்டியில் அறிமுகமான காதலனுடன் மிக இளம் வயதிலேயே செக்ஸ் உறவு வைத்து இதன் விளைவாய் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் ஒரு இளம் பெண்.. திருமணமாகி குழந்தையே பிறக்காமல் பார்ப்போர் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆட்பட்டு தினம் தினம் மன சித்வரைத்துக்குள்ளாகி வரும் டீச்சர் வினோதினி.. முள்ளிவாய்க்கால் போரில் பெற்ற மகளைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் ஈழத்து தமிழ் தம்பதிகள்.. என்று இந்த 5 பேரின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு கைக்குழந்தை குறுக்கிடுகிறது.. ஏன்.. எதற்கு.. எப்படி.. என்பதுதான் இந்த ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் சின்ன கரு.
இந்தச் சின்னப் பிள்ளைகள் படிக்கும் கிறிஸ்துவ பள்ளிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நிதியுதவி நிறுத்தப்படும் அபாயம். பள்ளியின் முதல்வர் எப்படியாவது அந்த நிதியுதவி தொடர வேண்டும் என்று பரிதவிக்கிறார். இதற்காக இந்தாண்டு பள்ளி ஆண்டு விழாவிற்கு மாநில கார்டினலை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்.
இதனால் ஆண்டு விழாவில் போடப்படும் நாடகத்தை இன்னும் சிறப்பாக நடத்திக் காண்பித்து எப்படியாவது கார்டினலை இம்ப்ரஸ் செய்ய நினைக்கிறார் பள்ளியின் முதல்வர். எப்போதும் தொடர்ந்து நாடகம் போடும் 10-ம் வகுப்பு மாணவர்களையே இந்த வருடமும் நாடகப் போடச் சொல்கிறார். ஆனால் 8-ம் வகுப்பு பயிலும் இந்த சிறுவர்கள், “நாங்கள் நாடகம் போடுகிறோம். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்..” என்று முதல்வரிடமும், டீச்சர் வினோதினியிடமும் கெஞ்சுகிறார்கள்.
“உங்களுக்குக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்..?” என்று முதல்வர் கேட்க.. “இயேசு பிறக்கிறார் என்கிற நாடகத்தின் கிளைமாக்ஸாக நிஜ குழந்தையையே மேடைக்கு கொண்டு வந்து காட்டுகிறோம்..” என்கிறார்கள் பிள்ளைகள். முதல்வர் நம்ப மறுக்கிறார். ஆனால், கடைசியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் அசிரத்தையினால்  நாடகம் இவர்களின் கைக்கே வந்து சேர்கிறது.
ஒரு வேகத்தில் குழந்தையைக் காட்டுவோம் என்று சொல்லிவிட்டாலும் குழந்தைக்கு என்ன செய்வது என்று பிள்ளைகள் யோசிக்கிறார்கள். ஒரு சிறுமியின் அக்கா குழந்தையைக் கொண்டு வர திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் திடீரென்று அக்கா பிரச்சினையெல்லாம் முடிந்து அவளது மாமனார் வீட்டுக்குப் போய்விட திட்டம் பணால்.
அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும்போது கூவம் ஆற்றின் கரையோரம் ஒரு அனாதை கைக்குழந்தை கிடைக்கிறது. அதனை பிள்ளைகள் எடுத்துச் செல்லும்போது அங்கே வரும் போலீஸ்காரர் பெஞ்சமின் அந்தக் குழந்தையைக் கைப்பற்றி அனாதை ஆசிரமத்திற்கு கொண்டு போகிறார்.
அனாதை ஆசிரமத்திற்கு செல்லும் பிள்ளைகள் குழந்தையைக் கடத்தி தங்களது நாடகத்திற்குக் கொண்டு போக திட்டம் தீட்டுகிறார்கள்.  இவர்களின் இந்தத் திட்டம் நிறைவேறியதா இல்லையா..? அது யாருடைய குழந்தை என்பதுதான் படத்தின் கதையோட்டமான திரைக்கதை.
இப்படியொரு கதையைக் கேட்டுவிட்டு இதனை படமாக்க முன் வந்த மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்டனி நிச்சயம் பாராட்டுக்குரியவர். இவரைத் தவிர வேறு யாராவது இந்தக் கதையைக் கேட்டிருந்தால் நிச்சயமாக ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள். வித்தியாசம் காட்ட வேண்டும் என்றே நினைக்கும் தயாரிப்பாளர் ஆண்டனியிடம், வித்தியாசமான இயக்குநரான சார்லஸ் இணைந்தது கர்த்தரின் விருப்பம்போல..!
இந்தப் படத்தில் ஒரேயொரு மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக் படம் பார்க்கும் அனைவருக்குமே தெரிய வரும். அது பள்ளியின் முதல்வர் “நீங்களே சின்னப் புள்ளைக.. நீங்க எப்படி கைக்குழந்தையை கொண்டு வருவீங்க..?” என்று கேள்வி கேட்டு “இது சின்னப்புள்ளத்தமானல்ல இருக்கு..” என்று சொல்லி நிராகரித்திருந்தால் இது கதையே இல்லை. ஆனால் அந்தக் குழந்தைகள் செய்ய நினைக்கிறார்கள். ஆசிரியர்கள் துணை நிற்பார்கள் என்று முதல்வர் நினைத்திருக்கலாம். எப்படியாவது கொண்டு வருவார்கள் என்று ஆசிரியர்களும் நினைத்திருக்கலாம்.. இப்படி நாம் நினைத்துத்தான் இந்தப் படம் பற்றி மேற்கொண்டு பேச வேண்டும்..! வேறு வழியில்லை.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பின்னணி.. அந்தக் கதைக்குள் குழந்தைகளை பாதிக்கும் ஒரு விஷயம்.. அதிலிருந்து மீள முடியாமல் தவித்த நிலையில் படிப்பு, பள்ளி, நாடகம், சுய மரியாதை.. கவுரவம் இத்தனையையும் தாண்டி அந்தக் குழந்தைகள் ஓடிக் கொண்டிருப்பதை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.
கேரக்டர் ஸ்கெட்ச்சுகளைகூட ரசனையுடன் அமைத்திருக்கிறார் இயக்குநர். எதற்கெடுத்தாலும் “முருகா” என்று சொல்லும் தம்பி ராமையா.. அவரை கோப்ப்பட வைத்து பேச வைக்கும் அவரது துடிப்பான வளர்ப்பு மகன்.. ஆண் பிள்ளைக்கு தவியாய் தவிக்கும் கருணாஸ்.. தன் உடம்புக்கு ஆகாதென்றாலும் கணவனுக்காக கருவைச் சுமக்கும் மனைவி.. துணிக்கடையில் ஒரு சிறிய ஆடையைப் பார்த்தவுடன் மகள் நினைவு வந்து கதறியழும் ஈழப் பெண் ரித்விகா, புள்ளை பெத்திருந்தால்தானே அந்த அருமை தெரியும் என்று வார்த்தைகளை வீசிவிட்டுச் செல்லும் பெண்மணியைப் பார்த்து விக்கித்துப் போய் நிற்கும் வினோதினி.. படிப்பு, காசு இருக்கும் திமிரில் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் டைவர்ஸ்வரைக்கும் வந்து நிற்கும் நரேனும், அவரது மனைவியும்.. கடைசியான செஸ் போட்டியில் காதலனை தோற்கடித்துவிட்டு குழந்தையை டிரைவர் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு வீரநடை போட்டு செல்லும் கிரிஷா..  என்று அமைத்திருக்கும் குடும்பங்களின் பின்னணியே நம்ம பக்கத்து வீட்டுக் கதை போல தோன்றுகிறது.
சிறுவர், சிறுமிகள் மிக அழகாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜான் விஜய்யிடமிருந்து தப்பிக்க நினைத்து இவர்கள் செய்யும் அலப்பறை ருசிகரமானது. இதேபோல் போலீஸ்காரர் பெஞ்சமினிடமிருந்து தப்பிக்கும் காட்சியிலும் தியேட்டர் குலுங்குகிறது.. இறுதியில் தனது தாய், தகப்பனை சேர்த்து வைக்க பையன் படும் கஷ்டமும், மிக எதார்த்தமாக நாடக வசனம் இல்லாமல் அவர்களது பிரச்சினையையே பதட்டத்தில் மேடையில் பேசப் போக.. அதுவே கார்டினல் மனதை மாற்றும்விதமாக இருப்பது இயக்குநரின் டச். இப்படி கோர்க்கும் திறமைக்கு நிரம்ப மூளை வேண்டும். பாராட்டுக்கள் இயக்குநர் ஸார்..
கருணாஸுக்கு ஏன் யாரும் இப்படியொரு கேரக்டர்களை தர மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிக அருமையான நடிப்பு. “மூணு பிள்ளை இருந்தா என்ன..? அதுவும் என் ரத்தம்தான..? விட்ருவனா..? வளர்த்திர மாட்டனா..?” என்று புலம்பித் தள்ளியபடியே தன் மகளைத் தேடியலையும் காட்சியில் மனதைத் தொட்டுவிட்டார். அவருடைய மனைவியாக நடித்தவரும் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கிரிஷாவை. ஒரு அவசரத்தில் காமத்தில் கட்டுண்டுவிட்டு பின்பு வயிற்றில் குழந்தையை சுமந்து கஷ்டப்பட்டு, பெற்றவர்களிடத்தில் திட்டு வாங்கி.. ஆனாலும் காதலனை நம்பி பிள்ளையை பெற்றுவிட்டு கடைசியாக இந்த அவமானத்தை துடைத்தே தீருவது என்றெண்ணி செஸ் போட்டியில் கலந்து கொள்ள வரும் கிரிஷாவை ‘வாவ்’ என்று பாராட்டவே தோன்றுகிறது. புதுமுகம் என்றே தோன்றவில்லை. அருமை..
இதேபோல் ஈழத்துப் பெண்ணாக வரும் ரித்விகா.. திடீரென்று அவர் அழும் அழுகையும், கோவில், கோவிலாக குழந்தைக்காக சுற்றி வரும் துயரமும் மனதைத் தொடும் காட்சிகள்..  மிக அருமையான, உண்மையான ஈழத்து பேச்சுக்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.
விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவில் அனைவருமே மிக அழகாகத் தெரிகிறார்கள். இறுதியான ஸ்கூல் டிராமாவை மட்டும் ஏன் இப்படி இருட்டாக்கினார்களோ தெரியவில்லை. இயேசுவின் மாட்டுத் தொழுவத்தை இன்னும் நன்றாகவே காட்டியிருக்கலாம். ஆனால் பாடல் காட்சிகளிலும், வெளிப்புறக் காட்சிகளிலும் கேமிராவின் உழைப்பு ஸ்கிரீனில் பளிச்சென்று தெரிகிறது..!
வேத்ஷங்கரின் பின்னணி இசை முற்பாதியில் பல காட்சிகளை நாடகத்தனமாக காட்டியிருக்கிறது. இதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். காட்சிகள் நன்றாக இருந்தும் பின்னணி இசையின் மலட்டுத்தனத்தால் அது வேறாக போய்விட்டது.
சில, பல காட்சிகளில் இயக்கம் நாடகத்தனம் என்றாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்டவைகள் மட்டுமே அழகாக, ரசனையாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக அந்தச் சின்னக் குழந்தை முதல்முறையாக குப்புறப் படுக்கும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம். இயக்குநர் சார்லஸ் தனது குழந்தையைத்தான் கூவம் ஆற்றின் கரையோரம் கிடத்தி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காகவும் சேர்த்து இயக்குநருக்கு ஒரு பாராட்டு. இந்த அளவுக்காக ஒரு இயக்குநர் தன் படத்திற்காக மெனக்கெடுவார்..?
இப்போதுதான் ‘பசங்க-2’ வந்து குழந்தைகளை அணுகும் முறையில் பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாற்றுக் கண்ணோட்டம் வேண்டும் என்று போதித்தது. இப்போது இந்தப் படமும் அதே கருத்தை வேறு விதமாகச் சொல்கிறது.
பரவாயில்லை.. தமிழ்ச் சினிமா இன்றைக்கு இந்த அளவுக்காச்சும் முன்னேறியிருக்கிறது என்பதை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.
இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். குழந்தைகளும், பெற்றோர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது..!

0 comments: