காஞ்சனா-2 - சினிமா விமர்சனம்

18-04-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகம் என்று சொல்லும்வகையிலான திரைப்படமாக தமிழில் இதுவரையிலும் ‘சிங்கம்’ படம் மட்டுமே வந்துள்ளது.
ஆனால், படத்தின் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு கதையின் தொடர்ச்சியாக வேறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட ‘பில்லா’ படத்தின் தொடரில் மூன்றாவது கதையும் வெளியாகிவிட்டது.
இப்போது ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’ என்று வரிசையாக ஒரே ஹீரோ, ஒரே கதையமைப்பு என்ற ரீதியில் சீரிஸ் படங்களை எடுத்து பயமுறுத்தி வருகிறார் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ். இது முதல் திரைப்படமான ‘முனி’ திரைப்படத்தின் தொடர்ச்சியான பாகமாக இல்லாமல்.. ஒரே மாதிரியான கதையாடல் கொண்ட திரைப்படங்களாக  உருவாகியிருக்கின்றன. 

தமிழகத்தின் முன்னணி டிவி சேனல்கள் இரண்டுக்கும் கடும் போட்டோ போட்டி. யார் முதலிடத்தைப் பிடிப்பது என்றும், டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முந்துவது யார் என்றும் மோதிக் கொள்கிறார்கள். இதுநாள்வரையில் முதலிடத்தில் இருந்த கிரீன் டிவி இப்போது இரண்டாமிடத்திற்குப் போகிறது.
இது பொறுக்க முடியாத கிரீன் டிவி நிர்வாகியான சுஹாசினி தனது டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அழைத்து இது குறித்து பேசுகிறார். “எதிர் டிவி பக்தி சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பித்தான் முதலிடத்தைப் பிடித்திருப்பதால் நாமும் அதுபோல சென்ஸிட்டிவ்வான, மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஒரு விஷயத்தை தயாரிப்போம். நிச்சயம் முதலிடத்தை திரும்பவும் பிடிப்போம். அவர்கள் பக்தி என்றால் நாம் பேயை பற்றி எடுப்போம்..” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
சுஹாசினி இதற்கு ஓகே சொல்ல.. அதே டிவியில் தயாரிப்பாளராக இருக்கும் டாப்ஸியின் தலைமையில் ஒரு டீம் பேய் இருப்பதாக செட்டப் செய்யும் நிகழ்ச்சிக்காக ஈ.சி.ஆர். ரோட்டிற்குச் செல்கிறார்கள். அதே டிவியில் கேமிராமேனாக பணியாற்றுகிறார் ஹீரோ ராகவா லாரன்ஸ். டாப்ஸியின் மீது ஒரு கண் வைத்து உள்ளுக்குள் காதலில் உருகிக் கொண்டிருக்கிறார். டாப்ஸி என்பதால் பேய் என்கிற விஷயத்தைத் தாண்டியும் இந்த தொடருக்கு கேமிராமேனாக பணியாற்ற ஒப்புக் கொண்டு இவர்களுடன் செல்கிறார்.
போன இடத்தில் கடற்கரை மணலில் படமெடுக்கும்போது டாப்ஸியின் கையில் ஒரு தாலிக் கயிறு சிக்குகிறது. அது கைக்கு வந்தவுடன் அந்த வீட்டில் பல விபரீதச் செயல்களும் நடைபெறுகிறது.
இதனால் மன உறுத்தலுக்கு உள்ளாகும் டாப்ஸி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு மாந்திரீகரிடம் செல்கிறார். அவர் இந்தப் பிரச்சினையை தற்காலிகமாக முடித்து வைத்தாலும் இதில் டாப்சி சந்தேகப்பட்டு தாலியைக் கேட்க.. “மீண்டும் அதே இடத்தில் சென்று தோண்டிப் பார்…” என்கிறார் மந்திரவாதி.
டாப்ஸி தேவையில்லாமல் மீண்டும் அந்தத் தாலியைத் தோண்டியெடுக்க. இந்த முறை தாலிக்குச் சொந்தக்காரியான அந்த பேய் என்னும் ஆத்மா தனது பழி வாங்கும் வேட்டையைத் துவக்குகிறது. பேய் இருக்கிறது என்று சொல்லி செட்டப் செய்து மக்களை ஏமாற்ற நினைத்து நிகழ்ச்சியைத் துவக்கியவர்களுக்கு நிஜமாகவே பேயுடன் இருக்க வேண்டிய சூழலும். பேயுடன் அல்லல்படும் நிலைமையும் ஏற்படுகிறது.
டாப்ஸியும், இவரைக் காதலிக்கும் ராகவா லாரன்ஸும் பேய்க்குரியவர்களாகிவிட.. கடைசியில் என்னாகிறது என்பதுதான் படமே…!
கோவை சரளா, ரேணுகா, மனோபாலா, மயில்சாமி, முத்துக்காளை, நெல்லை சிவா, ஸ்ரீமன், நித்யா மேனன், ஜெயபிரகாஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்ற நட்சத்திரப் பட்டாளத்தை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் நகைச்சுவையில் கில்லி விளையாடலாம் என்பதை செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸுக்கு முந்தைய படங்களை போலவே அதே கேரக்டர் ஸ்கெட்ச். பேய் என்றால் பயம்.. பயம்.. அப்படியொரு பயம்.. வீட்டு படுக்கையறை முழுவதிலும் பேயோட்டும் தாமிர பட்டயங்களாகவும், எலுமிச்சை பழங்களாகவும், குங்குமக் கறையாகவும் மாற்றி வைத்திருக்கிறார்.  படுக்கையில் அனைத்து சாமிகளையும் வரைந்திருக்கும் போர்வைகளை அடுக்கியிருக்கிறார். இந்த வரிசையில் கடைசியாக நித்தியானந்தாவும் உண்டு.
முதல் பாதியில் வரும் பயந்தாங்கொள்ளி லாரன்ஸைவிடவும பிற்பாதியில் வரும் குழந்தை முதல் பாட்டிவரையிலான லாரன்ஸே கவனிக்கப்படுகிறார். நித்யா மேனனை காதலிக்கும் மொட்டை சிவா கேரக்டரில் அதிகம் ரசிக்கப்படுகிறார் என்றே  சொல்லலாம்.
டாப்ஸி என்றொரு நடிகைக்கு இத்தனை அழகாக நடிக்கத் தெரியுமா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்தப் படம். இயக்கம் சரியாக இருந்தாலே நடிப்பு தானாகவே வரும் என்பார்கள். அந்த வரிசையில் ராகவா லாரன்ஸின் தப்பு பண்ணாத இயக்கம் டாப்ஸியை நடிக்கத் தெரிந்த நடிகையாக்கிறது. கொஞ்சம் கிளாமருடனும், திகில் காட்சிகளில் பயமுறுத்தியும், பயந்த காட்சிகளிலும் பயப்பட்டும் ரசிகர்களையும் இதன் கூடவே டிராவல் செய்ய வைத்திருக்கிறார் டாப்ஸி.
ஒரே நாளில் வெளியான இரு படங்களிலும் அதகளம் செய்திருக்கிறார் நித்யா மேனன். ‘ஓ காதல் கண்மணி’க்கு நேர் எதிரான ஒளிப்பதிவு இருந்தும் திரையில் அசத்துகிறார் நித்யா மேன்ன். நடிப்பில் குறை வைக்கவில்லை. உடல் ஊனமுற்றவராக த்த்ரூபமாக அப்படியே உரித்து வைத்திருக்கிறார். லாரன்ஸின் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்தும் இதில் தனது கேரக்டர் பிடித்து நடித்திருக்கிறார் என்றால் நித்யா மேன்னுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.
கோவை சரளாவும், ரேணுகாவும் டாப்ஸியிடம் மாறி மாறி மாத்து வாங்கும் காட்சியில் தொடர்ச்சியாக தியேட்டரில் சிரிப்பலை.. கொஞ்சம் ஓவரோ என்றும் சொல்ல தோன்றுகிறது. இன்னமும் இந்த இடுப்பில் தாவி உட்காரும் மேனரிசத்தைக் கைவிடவில்லை லாரன்ஸ்.. இதனை அடுத்தப் பாகத்தில் தவிர்த்தால் நல்லதுதான்..!
ஒரு சில காட்சிகளே என்றாலும் மொட்டை ராஜேந்திரனின் சிற்சில வசனங்களும் கை தட்டலை அள்ளுகின்றன. தவிர்க்க முடியாத வில்லனாகிக் கொண்டே செல்கிறார் ராஜேந்திரன். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
குழந்தைகளும் சேர்ந்து ரசிக்கும்படிதான் எடுத்திருக்கிறோம் என்றார் ராகவா. படத்தின் பிற்பாதி காட்சிகளில் சில பயமுறுத்தல்கள் குழந்தைகளையும் பயமறுத்தியிருக்கும். அந்த அளவுக்கு ஆடியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். கடைசி பாட்டும், டான்ஸும் பேய்க்கும் சேர்த்தே வெறியை ஏற்றியிருக்கிறது.
ஒலிக்கலவை என்பது அனைத்தையும் சம அளவில் வைத்திருப்பது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் காதைக் கிழித்து தோரணம் கட்டிவிட்டது ஒலி. இதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்..!
காமெடி, பேய் படம் என்பதால் லாஜிக்கெல்லாம் பார்க்கவே தேவையில்லை என்பதால் அனைத்தையும் ஓரங்கட்டிவிடலாம். இசையின் இரைச்சலையும் தாண்டி பாடல் காட்சிகளில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஆடியிருக்கிறார்கள் டாப்ஸியும், ராகவா லாரன்ஸும், முதல் பாடலில் அத்தனை நீளமான கானா வரிகள் தேவைதானா..? காதிலேயே நுழையவில்லை.. ஆனால் ஆட்டம் மட்டும் அசத்தலானது..
ராஜவேலு ஒளிவீரனின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளிலும் இரவு நேர காட்சிகளிலும் தனியாகவே தெரிகிறது. லாரன்ஸ் சின்னப் பொண்ணு போல ரெட்டை சடை போட்டுக் கொண்டு ஆடும் ஆட்டத்திலெல்லாம் ஒளிப்பதிவும் சேர்ந்தே பயமுறுத்தியிருக்கிறது..!
இறுதியில் அடுத்த பாகமும் ரெடி என்று ஸ்டில்ஸ் போட்டிருப்பது ராகவா லாரஸன்ஸின் தன்னம்பிக்கையை காட்டுகிறது..! ஆவியும், பேயும் ஒரு முறையாவது கண்ணுக்குப் படாமல் இருக்கும்வரையில் இது போன்ற படங்களின் மவுசுக்குக் குறையே வராது..!
முனி வரிசையில் அடுத்த வெற்றி இந்தப் படம்..!

0 comments: