ஆம்பள - சினிமா விமர்சனம்

18-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரிந்த குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் மகனின் கதைதான். அரதப் பழசுதான் என்றாலும் வழக்கம்போல சுந்தர்.சி.யின் சூப்பரான திரைக்கதை, வசனத்தில் இயக்கத்தில் இரண்டரை மணி நேரம் பொழுது போக்குப் படமாக வந்திருக்கிறது.

அரசியலுக்கு அடியாட்களை அனுப்பும் அலம்பல் வேலையை ஊட்டியில் செய்து வருகிறார் ஹீரோ விஷால். அந்த ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் சந்தானம் ஒன் சைடாக காதலித்த ஹன்ஸிகாவை நைச்சியமாக பேசி கழட்டிவிட்டுவிட்டு தன் காதலியாக்கிக் கொள்கிறார் விஷால். இதனால் கோபமடைந்த சந்தானம் ஒரு பிளான் செய்து விஷால்-ஹன்ஸிகா காதலுக்கு கொள்ளி வைக்கிறார்.
இதனால் கொதிப்பான விஷால் தன் கொதி நிலையில் இருக்கும் தன் உள்ளத்தை டாஸ்மாக் சரக்கு மூலம் கூலாக்குகிறார். இதனை பார்க்கும் விஷாலின் அம்மா இதுக்காடா உன்னை பத்து மாசம் வயித்துல சுமந்து பெத்தெடுத்து வளர்த்தேன். உங்கப்பாவை விட்டு பிரிஞ்சு இத்தனை நாள்ல ஒரு நாள்கூட அவரை நினைச்சுக்கூட பார்த்த்தில்லை. இன்னிக்கு உன் மேல இருக்குற பயத்துல என்னை நினைக்க வைச்சுட்ட்டா. அப்பாகூட இருக்குற உன் தம்பியை பார்க்கணும்போல இருக்குடா..” என்று கண்ணாம்பா ஸ்டைலில் பேசி முடிக்க..
தன் அப்பாவையும், தம்பியையும் கண்டுபிடிக்க ஊட்டியில் இருந்து மதுரைக்கு வருகிறார் விஷால். வந்த இடத்தில் ரொம்பக் கஷ்டப்படாமல் அப்பாவையும், தம்பியையும் திருடர்களாக கண்டுபிடிக்கிறார் விஷால். இப்போது அப்பாவான பிரபு தன் பிளாஷ்பேக் கதையை ஓப்பன் செய்ய.
பாரம்பரியமான ஜமீன் குடும்பம். பிரபு, கல்யாணத்துக்கு முன்பேயே ஒரு யுவதியுடன் காதல் விளையாட்டில் ஈடுபட.. அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனை மறைத்து.. அந்தப் பெண் இறந்துவிட்டாள் என்று பொய் சொல்லி விஷாலின் அம்மா துளசியை பிரபுவுக்கு கட்டி வைத்திருக்கிறார் அப்பா விஜயகுமார். இப்போது பிரபுவுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள்.  
ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தாத்தா விஜயகுமார். அடுத்த்த் தேர்தலில் எம்.எல்.ஏ. பதவிக்கு நிற்கும்படி தனது மகன் பிரபுவை கேட்கிறார். பிரபு மறுக்க.. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வில்லன் தன்னை நிறுத்தும்படி கேட்கிறார். விஜயகுமார் மறுக்க அவரை கொலை செய்துவிட்டு பழியை பிரபுவின் மீது போடுகிறார் வில்லன்.
பிரபு ஜெயிலுக்குப் போக.. பிரபுவின் உடன் பிறந்த தங்கைகள் மூவரும் பிரபு மீது கொலை வெறியாகிறார்கள். பிரபு ஜெயிலில் இருந்து திரும்பியவுடன் தனது சொத்துக்கள் முழுவதையும் சகோதரிகளின் பெயரிலேயே எழுதிவைத்துவிட்டு மதுரைக்கு வந்து திருட்டுத் தொழில் செய்கிறார்.
அப்பாவின் பிளாஷ்பேக் கதையைக் கேட்டு சுறுசுறுப்பான விஷால் பிரிந்து கிடக்கும் தன் குடும்பத்தை தான் சேர்த்து வைப்பதாகச் சொல்லி களமிறங்குகிறார். என்ன ஆகிறது என்பதுதான் மிச்சம் மீதி கதை.
லாஜிக்கையெல்லாம் பார்க்கவே கூடாது என்பதை முதல் காட்சியிலேயே முடிவு செய்துவிட்டார்கள் போலும். அடியாட்கள் படை அனுப்புவதில் துவங்கி அதே அடியாட்கள் கிளைமாக்ஸிலும் சஸ்பென்ஸாக வந்து படத்தை முடித்து வைப்பது வரையிலும் அக்மார்க் சுந்தர்.சி. படம்தான் இது. இது மாதிரியான டெம்ப்ளேட் கதையில் புதிய திரைக்கதை எழுதி இயக்கி வெல்வது சுந்தர்.சி.க்கு பழக்கமான விஷயம்தான்.
நடிகர் பிரபு இதில் நடித்திருப்பது ஆச்சரியமானது. அதே சமயம் ஆரோக்கியமானதும்கூட.. இப்படித்தான் எதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு கலைக்கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். இன்னும் அடுத்தடுத்து பிரபவும், குஷ்புவும் ஜோடி சேர்ந்து அப்பா-அம்மாவாக நடித்தால்கூட அதில் தவறில்லைதான்..
முதல் பாதி திரைக்கதை மிக மிக சுவாரஸ்யம். சந்தானத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலை பறி போவதற்கு விஷால் ஹன்ஸிகா காதலும் ஒரு காரணம் என்கிற வகையில் இருக்கும் இந்த புதுமையான திரைக்கதை  காமெடி டச்.. சந்தானம் முதற்பாதியில் வந்துவிட்டு பின்பு கடைசியில்தான் தலையைக் காட்டுகிறார். அதுவும் செம கலக்கல்தான். என்ன இருந்தாலும், பன்னி வாயா, போண்டா வாயா என்று திட்டுவதை மட்டும் இன்னமும் நிறுத்தவில்லை.
விஷால் வழக்கம்போல.. ஆக்சன் ஹீரோவிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் காட்டியிருக்கிறார். “நீங்க ஒழுங்கா இருந்தீங்கன்னா நான் ஏங்க பதவிக்கு வர ஆசைப்படுறேன்.?” என்ற வசனத்தின் மூலம் நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு ஆப்பு வைத்திருக்கிறார்.
“ஒரு வரலட்சுமியோ, தனலட்சுமியோ யாரையாவது கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு..” என்று சந்தானம் சொல்லும் டயலாக் மூலம் விஷாலின் வரலட்சுமி யார் என்பதும் புரிகிறது.
சண்டை காட்சிகளில் இயக்குநர் ஹரிக்கே சவால்விட்டிருக்கிறார் சுந்தர்.சி. கார்களும், ஜீப்களும் பறக்கன்ற வேகத்தை பார்த்தால் இதுக்கே காசு காணாமல் போயிருக்கும் போலிருக்கிறது.
சண்டை காட்சிகள், காமெடி காட்சிகளோடு கவர்ச்சி காட்சிகளையும் காண்பிக்கத் தவறவில்லை இயக்குநர். விஷாலின் மூன்று அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் என்று மூன்று முன்னாள் தேவதைகளை முடிந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடலுக்கு ஆடவும் செய்திருக்கிறார்கள்.
இதில் கிரணை சைட் அடிக்கும் வாய்ப்பு சந்தானத்திற்கு. கிளைமாக்ஸில் கிரண் யார் என்று தெரிந்த பின்பு சந்தானம் அடிக்கும் கமெண்ட்டு ரொம்ப, ரொம்ப டூ மச். இப்படித்தான் சந்தானத்தின் மூலமாக தமிழ் நல்லுலகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது..
படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் படத்தின் வசனங்கள். சில டபுள் மீனிங் டயலாக்குகளையும் தாண்டி நகைச்சுவையை பிரதானமாக்கி அள்ளி வீசியிருக்கிறார் வசனகர்த்தா ராதாகிருஷ்ணன். இவரே இயக்குநர் சுந்தர்.சி.க்கு மிகப் பெரிய பலம். இந்தக் காலத்து பொண்ணுகளை பற்றி விஷால் சந்தானத்திற்கு கிளாஸ் எடுக்கும் அந்த நீண்ட, நெடிய காட்சியில் பேசப்படும் வசனங்கள் ஏ கிளாஸ்.. அந்தக் காட்சியில் விஷாலின் வசன உச்சரிப்பும் பாராட்டுக்குரியது. எத்தனை டேக் எடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் கடைசியில் சந்தானம் சொல்லும் அந்த ஒரு வரி கமெண்ட்.. விஷாலின் அந்த உழைப்பையும் காணாமல் போகச் செய்துவிட்டது.
ஹன்ஸிகாவின் மெத்து, மெத்து மேனியை பாடல் காட்சிகளில் கொஞ்சம் கொஞ்சம் காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள். இன்னமும் தமிழ் உச்சரிப்பு சரியாக வராமல் இழுத்து, இழுத்து பேசும் அந்தக் கொடுமையை மட்டும் மன்னித்துவிட்டு பார்த்தால் ஹன்ஸிகா அழகுதான். இவரது இரண்டு தங்கைகளாக வரும் அந்த இரண்டு ஒண்ணுவிட்ட ஹீரோயின்களும் கொஞ்சம் ‘அழகு’ காட்டியிருக்கிறார்கள்.
‘வயசானாலும் உங்க அழகும் போகலை; நடிப்பும் போகலை..’ என்று ரம்யா கிருஷ்ணனை பார்த்து சொல்ல வேண்டும். ஐஸ்வர்யாவின் அந்த கட்டை குரலே தனி நடிப்புதான்.. கிரணுக்கு இனிமேல் ஆல்ரெடி அம்மா கேரக்டர்தான் என்பது உறுதி.
அத்தைகளின் கணவர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக தங்களது மனைவியரின் பக்கத்திலேயே போக முடியவில்லை என்பதை சக ஆம்பளையாக நினைத்து மாப்பிள்ளைகளிடம் வருத்தப்படுவதும், மாப்பிள்ளைகள் ஒரே நாளில் அதற்கு ‘செட்டப்’ செய்வதும்.. ம்ஹூம்.. நினைத்துக்கூட பார்க்காத திரைக்கதைதான்..!
வேகமான திரைக்கதையில் படம் நகரும்விதத்தில்தான் இதன் வெற்றி பேசப்பட்டிருக்கிறது. கொஞ்சமும் லாஜிக்கை பற்றியே யோசிக்காமல் அடுத்து… அடுத்து.. என்று திரைக்கதையை வேகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஹன்ஸிகாவை பார்த்தவுடன் காதல்.. சந்தானத்தின் ஒன் சைடு காதல்.. ஹன்ஸிகா-விஷால் காதல்.. ஒரு டூயட்டு.. கட் செய்தால் சந்தானத்தின் சில்லுண்டி வேலை. காதல் கட்டு.. மதுரை வந்தவுடன் அப்பாவை சந்திப்பது.. இன்னொரு பாடல்.. உடன் வரும் ஒருவனே தனது தம்பி என்று பட்டென்று கஷ்டப்படாமல் சொல்வது.. அவனும் தான் அவர்களை கொல்வதற்காகத்தான் வந்ததாகச் சொல்வது.
மூன்று அத்தைகள் என்று சொன்னவுடனேயே யார் யார் என்பது புரிந்துவிட்டது. அவரது மகளில் ஒருவர் நிச்சயம் ஹன்ஸிகாதான் என்பதும் தெரிந்துவிட்டது. இப்படி நமக்குத் தெரிந்த கதையையே, திரைக்கதையையே கொடுத்தும் காமெடி இயக்கத்தின் மூலம் இதனை ஜெயிக்க வைத்திருக்கிறார் என்றால் இது இயக்குநர் சுந்தர் சி.யின் திறமையினால்தான்..!
சுந்தர்.சி.க்கு எந்த இசையமைப்பாளர் மீது கோபம் என்று தெரியவில்லை. ‘ஹிப்ஹாப் தமிழா’ இசைக் குழுவினரை இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவின் இசைப் பணியை மேடையில் பாடும் மெல்லிசை குழுவின் வேலை என்று நினைத்துவிட்டார்கள் போலும். இவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ஆண் பாடகர்களின் வாய்ஸில் அந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் கொடூரமாக இருக்கிறது. ஒரு பாடகருக்கு இருக்க வேண்டிய கம்பீரமே இல்லாமல்.. ஏதோ ஒரு குரல் போல ஒலிக்கிறது. எந்தப் பாடலையும் ரசிக்க முடியவில்லை. குறைந்த சம்பளத்திற்குக் கிடைத்துவிட்டார்களோ..?
ஆண் வர்க்கத்தை உயர்த்தியும், பெண் வர்க்கத்தை தாழ்த்தியும் பேசும் வசனங்களுடன் 2015-லும் ஒரு தமிழ்ப் படம் ஜெயிக்க முடிகிறதெனில் அது ‘ஆம்பள’ என்ற இந்தத் தலைப்பினால்தான் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்ளட்டும்..!
ஆம்பள – சிரிக்க வைத்திருக்கிறான்..!

0 comments: