டார்லிங் சினிமா விமர்சனம்

17-01-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2014-ம் ஆண்டு முடிந்தும் பேய்ப் பட சீஸன் மட்டும் முடிந்தபாடில்லை. இந்தாண்டிலும் தொடர்கிறது. இந்தாண்டு வெளிவரும் முதல் பேய்ப் படம் என்கிற பெருமையைப் பெறுகிறது இந்த ‘டார்லிங்’.
தெலுங்கில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘பிரேமகதா சரித்திரம்’ படத்தின் தமிழ் ரீமேக். ஆனால் இதே டெம்ப்ளேட் கதையில் ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ என்கிற படம் சென்ற ஆண்டின் இறுதியில் வெளியாகிவிட்டது. இதுவும் அது போன்றதுதான்.

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் தனது நண்பன் பாலாவின் உதவியை நாடுகிறார். பாலாவோ ஹீரோவை ஒரு தலையாக காதலிக்கும் ஹீரோயின் நிக்கி கல்ரானியை எப்படியாவது பிரகாஷோடு இணைத்துவைத்துவிட வேண்டும் என்ற கொள்கையுடன் நாங்கள் இருவரும் உன்னுடன் சேர்ந்து தற்கொலை செய்யவிருக்கிறோம் என்று சொல்லி ஹீரோவை நம்ப வைக்கிறார். இன்னொரு தற்கொலை பார்ட்டியான கருணாஸ் தானாகவே இந்த டீமில் வந்து சேர்கிறார்.
ஏற்கெனவே இரண்டு கொலைகள் நடந்த ஒரு பங்களாவிற்கு தற்கொலை செய்வதற்காகவே வந்து சேர்கிறார்கள் நால்வரும். வந்த இடத்தில் பாலாவின் நாடகத்தால் தற்கொலை படலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்க.. ஹீரோ, ஹீரோயின் லவ் போர்ஷன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அந்த வீட்டிலேயே இருக்கும் பெண் பேய்க்கு இது பிடிக்கவில்லை. ஹீரோ, ஹீரோயினை காதலிக்க விடாமலும், ‘சேர’ விடாமலும் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் பேய் ஹீரோயினின் உடம்பில் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்ய.. தற்கொலை செய்து கொள்ள வந்து தப்பித்தால்போதும் என்கிற நிலைமைக்கு வருகிறார்கள் மற்ற மூவரும்.
கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படமே..!
புதுமுக ஹீரோ பிரகாஷ்குமாருக்கும் நடிப்பு வந்திருக்கிறது. நன்றாகவே நடித்திருக்கிறார். முதலில் இறுக்கமான முகத்துடன் காதல் தோல்வியுடன் உலா வருபவர், பேயை கண்டு பயந்து போன நிலையில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஹீரோயினின் உடலில் பேய் புகுந்திருக்கிறது என்பதை பாலாவிடம் சொன்னாலே கதை முடிந்துவிடும். படமும் முடிந்துவிடும். அதனால் அதை மட்டும் சொல்லாமல் தனது கோபத்தைக் காட்டிவிட்டு.. இயலாமையில் எரிந்து விழுந்து அந்தக் கேரக்டருக்கு நஷ்டம் வைக்காமல் நடித்திருக்கிறார்.
பெஸ்ட் ஸ்கோர் செய்திருப்பது ஹீரோயின் நிக்கி கல்ரானிதான். அழகு பதுமையாக இருப்பவர் பேயாக மாறும் தருணத்தில் பயமுறுத்துகிறார். அதற்கேற்ற மேக்கப்பும், பின்னணி இசையும் இதற்கு துணை போக.. அடுத்து எப்போது தனது சீற்றத்தைக் காட்டும் பேய் என்கிற எதிர்பார்ப்பை படம் முழுவதும் கொண்டு வந்திருக்கிறார். நல்லதொரு ஹீரோயின் தமிழ்ச் சினிமாவுக்கு..! வெல்கம் மேடம்.
இன்னொரு ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. கல்லூரி காதலி. ஒரு பாடல் காட்சியில்தான் முழுமையாக வந்திருக்கிறார். அவ்வளவுதான். அந்த அழகு முகத்தை வைத்தே அந்த ஒரு பாடல் காட்சியை ஒப்பேற்றியிருக்கிறார் இயக்குநர்.
இன்னொரு பக்கம் பாலாவும், கருணாஸும் அதகளம் செய்திருக்கிறார்கள். சூரி கொஞ்சம் சுதாரிப்பில் இருக்க வேண்டும். இதோ பாலா களத்தில் குதித்திருக்கிறார். எந்த ஹீரோவுக்கும் நண்பனாக இருக்கலாம் போன்ற ஒரு தோற்றம். ஆனால் வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் சோடை போகவில்லை.
கருணாஸ் இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை. கிடைத்த வேடங்களில் நடிப்பேன் என்று உறுதியுடன் சொல்லி அவரே கேட்டு வாங்கி நடித்த கேரக்டர். பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். சில இடங்களில் அவருடைய பேச்சுக்கு கத்திரி போட வேண்டும் போல இருக்கிறது. இரண்டு காட்சிகள் வந்தாலும் நான் கடவுள் ராஜேந்திரனின் கலக்கல் காமெடியை ரசிக்க முடிகிறது..
ஹீரோவாகிவிட்டதால் இசையமைப்பு அத்தனை அவசியமில்லை என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. வழக்கம்போல ஒரு பாடலும் புரியவில்லை. அவர்களுக்கு மட்டும் பிடித்தாற்போல் இசைத்திருக்கிறார்கள். காட்சிகளுடன் கூடிய பாடல் காட்சி மட்டுமே ரசிக்க முடிந்த்து. மிச்சத்தில் நிக்கி கல்ரானியும், சிருஷ்டியும் ரசிக்க வைத்திருக்கிறார்கள். பின்னணி இசையில் மட்டுமே கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பேய் சம்பந்தமான அனைத்து காட்சிகளிலும் அதுவே பயத்தைக் கூட்டியிருக்கிறது.
இந்தப் பேயை விரட்ட இவர்கள் செய்யும் கிளைமாக்ஸ் கதை புதிய டெக்னிக்குதான்.. ஆனால் இன்னமும் பேய் அந்த வீட்டில் இருந்து விலகாது என்பதாக சொல்லி முடித்திருப்பது வழக்கமான எல்லா பேய் படங்களிலும் இருப்பதுதான்..!
ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனில் இருந்த டபுள் மீனிங் டயலாக்குகளை இங்கேயும் அள்ளி வீசியிருக்கிறார்கள். இதனை நீக்கியிருக்கலாம். அந்தக் காட்சியை மாற்றியெடுக்க எவ்வளவு நேரமாகும்..? தமிழ் சினிமாவில் மறுபடியும் டபுள் மீனிங் டயலாக்குகள் தலை தூக்குவது வருத்தம் தரக் கூடியது.
தற்கொலை செய்து கொள்ள எதற்காக இப்படியொரு தனி பங்களாவை தேட வேண்டும்.? அவரவர் வீட்டிலேயே செய்து தொலைக்கலாமே..? எதுக்கு கூட்டணி சேர்க்க வேண்டும்..? அந்த வீட்டுக்கு வருவதற்கு லாஜிக்படி காரணமே இல்லை. ஆனாலும் வந்திருக்கிறார்கள். தன் கல்லூரியிலேயே படித்த இத்தனை அழகான பெண்ணை ஹீரோ கடைசிவரையிலும் பார்க்கவேயி்லலை என்பதெல்லாம் நம்ப முடிகிறதா..? இதையெல்லாம் யோசித்தால் படமே எடுக்க முடியாது என்பதால் விட்டுவிடுவோம்..!
பேய்ப் படங்களுக்கே உரித்தான இயக்கத்தை சிறப்பாகச் செய்திருக்கும் அறிமுக இயக்குநர் சாம் ஆண்டனுக்கு நமது பாராட்டுக்கள். அடுத்த வாரம் இந்தப் படத்திற்கு கூடுதலான தியேட்டர்கள் நிச்சயமாக கிடைக்கும்போலத்தான் தெரிகிறது. நாளுக்கு நாள் இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் அதிகரித்து வருவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காமெடியும், அமானுஷ்யமும் என்றுமே சினிமா ரசிகர்களுக்கு போரடிக்காதது. அந்த வகையில் இந்த வாரம் வந்த படங்களில் ‘ஆம்பள’யும், ‘டார்லிங்’கும் தமிழ்ச் சினிமாவுலகத்தையே கலகலப்பாக்கியிருக்கின்றன.
இந்த ‘டார்லிங்’கை தனியாகச் சென்று ரசிக்கலாம்..!

0 comments: