ராகுல்காந்தியுடன் ஒரு சந்திப்பு..!

25-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தை விரும்பிப் படிக்காததன் பலனை கடந்த 22-ம் தேதி முழுமையாக அனுபவித்தேன். முதல்முறையாக முழுமையான ஆங்கில அறிவு இல்லையே என்கிற பெரும் ஏக்கத்தை அன்றைய ராகுல்காந்தியுடனான சந்திப்பு நிகழ்ச்சி எனக்குள் ஏற்படுத்தியது..!


பத்திரிகையாளர் கவிதா முரளிதரனின் சிபாரிசில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜோதிமணி, கடந்த திங்கள்கிழமையன்று உலகத் திரைப்பட விழாவில் படம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார்.

முதலிலேயே அவரிடம், “நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவன். அங்கு வந்து கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தால் என் மனதில் இருக்கும் எதிர்ப்புணர்வுகளைத்தான் கேள்வியாகக்  கேட்பேன்..” என்று தெளிவாகச் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். “மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுடன்தான் உரையாட வேண்டும் என்று எங்கள் தலைவர் ராகுல் விரும்புகிறார். நீங்கள் விரும்பியவற்றைக் கேட்கலாம். தடையில்லை..” என்று உறுதிமொழியளித்ததைத் தொடர்ந்து வருவதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

தாஜ்கன்னிமாரா ஓட்டலில்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சி 12.30-க்கு ஆரம்பம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அரை மணி நேரம் முன்னதாகவே 12 மணிக்கே துவக்கிவிட்டார்கள்.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திரையுலகக் கலைஞர்கள், ஒருபாலின ஈர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரையும் அழைத்திருந்தார்கள்.

அழைப்புக்குக் காரணம் ராகுலுடன் ஒரு நேர்முகம் என்று மட்டுமே நான் நினைத்திருந்தேன். நாட்டு நடப்பு பற்றி எங்களுடைய கருத்தை ராகுல் தெரிந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காகவும் அழைத்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது.
 

பல்வேறு பத்திரிகைகளில் இருந்தும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். விகடனில் இருந்து ஆரோக்கியவேல், குமுதத்தில் இருந்து தளவாய்சுந்தரம், கடற்கரய், என்.டி.டி.வி. ஹிண்டுவின் முரளிதரன், தி வீக் பத்திரிகையின் கவிதா முரளிதரன், ஞாநி, பத்மா, மாலன், மதன், டி.என்.கோபாலன், நமது வலையுலகத் தோழர் அதியமான் என்று எனக்குத் தெரிந்த சிலரும், தெரியாதவர்களில் பலரும் இருந்தார்கள்.

திரையுலகத்தினர் சார்பில் நாசர், அவர் மனைவி கமீலா, நடிகைகள் ரேவதி, ரோகிணி, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் இராம.நாராயணன், தயாரிப்பாளர்கள் 'ஆனந்தா பிலிம்ஸ்' சுரேஷ், அபிராமி ராமநாதன், பெப்ஸியின் செயலாளர் சிவா, அன்பாலயா பிரபாகரன், சித்ரா லஷ்மணன், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா, வெங்கட், கே.எஸ்.சீனிவாசன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி என்று பலரும் வந்து குவிந்திருந்தார்கள்.

அரங்கத்தின் உள்ளே நுழைந்தவுடன் மேடையில் போடப்பட்டிருந்த சேரில் அமர மறுத்த ராகுல், தானே அதைத் தூக்கி வந்து கீழே வைத்து அதில் அமர்ந்து கொண்டார். ஜோதிமணி வரவேற்புரையை நிகழ்த்தியுடன் மேடையேறி மைக் முன் வந்து நின்றார் ராகுல்.

முதல் கேள்வியே நாடு முழுவதையும் சீக்காடாக்கியுள்ள மதுவைப் பற்றிய பேச்சாக அமைந்தது.

“தீவிரவாதம் பற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால் இன்று இருக்க கூடிய alcohol lobbyதான் இளைஞர்களுக்கு எதிரான மிகப் பெரிய தீவிரவாதம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான விஷயமாக இருக்கிறது. அதை உடனடியாக சரிப்படுத்த வேண்டும்.” என்றார் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர்.

தன் கையில் வைத்திருந்த கோரிக்கை மனு போன்ற ஒன்றையும் ராகுலிடம் காட்ட, ராகுலே மேடையின் ஓரத்திற்கு வந்து அதைப் பெற்றுக் கொண்டார். 

இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாக வேறொருவர் எழுந்து, “மது குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல.. அவரது குடும்பத்தையே சீரழிக்கிறது. இதனை உணர்ந்ததாலோ என்னவோ அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குடிப்பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும், மதுவும் இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம். அதனால்தான் மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா மீதுதான் மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணை புரிவது போலத்தான் தமிழக அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக அரசு ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக்கடைகள் மூலம் தினம்தினம் 100, 150 ரூபாயை பிடுங்கிக் கொள்கிறது. இதனால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்...” என்றார்.

இதற்குப் பதில் அளித்த ராகுல்காந்தி, “இது மிகவும் தீவிரமான பிரச்சினை இது பற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும். மங்களூர் பப்களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதையும் நான் ஏற்கவில்லை..

அதே சமயம் மகாத்மா காந்தி பிரச்சாரம் செய்ததைப் போல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை ஓர் ஒழுக்கப் பிரச்சினையாக அணுகாமல் அதை சமூகப் பிரச்சினையாக அணுக வேண்டும்..” என்றார்.

இந்த நேரத்தில் ராகுலை இடைமறித்த ஞாநி, “அரசே மது விற்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா..? உண்டு, இல்லை என்று குறிப்பாகச் சொல்லுங்கள்..” என்றார். தயக்கமே இல்லாமல்  “ஏற்கவில்லை” என்றார் ராகுல்.

வந்திருந்தவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அமர வைத்திருந்ததால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சான்ஸ் வழங்கலாம் என்று முடிவெடுத்து மைக்கை பிரிவுக்கு ஒன்றாக மூவரிடம் கொடுத்திருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாக பலரும் எழுந்து சப்தமாக கேள்வி கேட்கத் துவங்க.. அவர்களிடம் மைக்கை கொடுக்கும்படியாகிவிட்டது.

“உங்களைச்  சுற்றி சந்தேகத்திற்குரிய நபர்கள் இருக்கும்போது எப்படி சாதாரண மக்களை நீங்களும், உங்களது கட்சியும் சென்றடைய முடியும் என்று நம்புகிறீர்கள்...?” என்று சுற்றி வளைத்து ஒருவர் கேட்டார்.

இதற்குப் பதில் சொன்ன ராகுல், “அரசியல் கட்சிகள் தம்மை வெளிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். மக்களை இன்னமும் நெருங்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் இளைஞர் காங்கிரஸில் ஜனநாயக ரீதியாக தேர்தல்களை நடத்தி வருகிறோம். நேற்று கேரளாவில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஒரு குற்றசாட்டுகூட இல்லை. அரசியலுக்கு வரும் நபர்களில் மாற்றத்தை எப்படி கொண்டு வருவது..? அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.  அறிவுஜீவிகள் அரசியலுக்கு வராதது சரியான விஷயமில்லை. நீங்கள் ஏன் காங்கிரஸில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது..?” என்று திருப்பிக் கேட்க கைதட்டல் தூள் பறந்தது..

சினிமாக்காரர்கள் சார்பில் 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா மைக்கை கையில் வைத்திருந்ததால் 'ஆனந்தா பிலிம்ஸ்'  சுரேஷுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஏதோ நாட்டுப் பிரச்சினையைத்தான் பேசப் போகிறார் என்று பார்த்தால் அவரோ, தற்போது மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் திரைப்பட வசூலில் இசையமைப்பாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் பங்கு தருவதற்கான சட்ட மசோதாவை எதிர்த்தும், அது பற்றியும் பேசினார்.

இதனை ராகுலே எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முக பாவனையிலேயே தெரிந்தது. “இந்தச் சட்டம் திரையுலகத்தை அழித்துவிடும்..” என்றார் சுரேஷ். இவருக்குத் துணையாக அபிராமி ராமநாதனும் எழுந்து “மத்திய அரசாங்கம் தற்போது அறிமுகப்பபடுத்தியிருக்கும் சேவை சட்டம் மற்றும் காப்புரிமை சட்டம்  எங்களை  மிகவும்  பாதிக்கும்” என்றார்.

ராகுலோ, “இது பற்றி மேலும் தகவல்கள் கொடுத்தால் நான் கவனிக்கிறேன். நீங்கள் தில்லி வந்து என்னைச் சந்திக்கலாம்..” என்றார். அதற்குள்ளாக தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் எழுந்து, “சினிமாவுலகில் வீடியோ பைரசி ஒரு பெரிய ஆபத்தாக இருக்கிறது. இதை தடுக்க சி.ஆர்.பி.சி சட்டத்தை உரிய முறையில் மாற்ற வேண்டும்.” என்றார்.

இதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, “சட்டத்தில் எது தவறு என்று நினைக்கிறீர்கள்? (இது பற்றி ராகுல் காந்தி விரிவாக பேசினார், அரசியலில் உள்ள சிக்கல்கள் பற்றி சொன்னார்)  இது பற்றி தில்லி வந்து என்னைப் பாருங்கள். நிச்சயம் நான் உதவி செய்கிறேன்..” என்று சொல்லி முடிக்கப் பார்த்தார். ஆனாலும் திரைக்கலைஞர்கள் விடாமல் வற்புறுத்த ராகுலே பேச்சை டைவர்ட் செய்யும் பொருட்டு, “நெக்ஸ்ட்” என்று கை காட்டி எஸ்கேப்பானார்.

அடுத்து சக்தி அறக்கட்டளையின் அநிருத்தன் வாசுதேவன் எழுந்து ஒரு நீண்ட கேள்வியைக் கேட்டார். “பாலின சிறுபான்மையினர் தொடர்ந்து பலவிதமான ஒடுக்கு முறைகளை சந்தித்து கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட இளைஞர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல உழைக்க முடியவில்லை.  மிக மோசமான ஒடுக்கு முறைகளை அவர்கள் தினசரி சந்திக்கிறார்கள்.

அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அது பற்றி மௌனத்தையே கடைப்பிடிக்கிறார்கள். இந்த விஷயத்தில், தமிழக அரசாங்கம் சில குறிப்பிட முயற்சிகளை எடுத்து வருகிறது. அரவாணிகளுக்காக ஒரு நல வாரியம் அமைத்திருக்கிறார்கள். இதை பிற மாநிலங்களும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும். ஒரு நபரின் பாலியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.

இதற்குப் பதில் சொன்ன ராகுல், “ஒருவருக்கு ஒழுக்கம் இருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. எனக்கு என் ஒழுக்கம் இருக்கிறது. எனக்கு என் கருத்துகள் இருக்கின்றன. அதை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் வெளிபடுத்தும் உரிமையும் எனக்கு இருக்கிறது.  நான் என்ன சொல்கிறேன் என்றால் உங்களுடைய ஒழுக்கத்தை எனது கருத்துகளைக் கொண்டு தீர்மானிப்பது எனது வேலையில்லை. இதுவரை இந்தப் பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதோ, அது எங்களாலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா..? article 377  விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருந்தோம். காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் அதை ஆதரித்தார்கள். ஒரு தனி நபராக, உங்கள் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து..” என்று ராகுலும் மிக நீட்டமாகவே விளக்கமளித்தார்.

இலங்கை பிரச்சினைப் பற்றி அதுவரையில் யாரும் தொடாமல் இருந்த நிலையில் கவிதா முரளிதரன் அது பற்றி கேள்வியெழுப்பினார்.

“நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில் இலங்கையில் உள்ள தமிழர்கள், காங்கிரஸ் அரசாங்கத்தால் தாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார்கள். போரினால் பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.  பேரழிவு போர்  சமயத்திலும் இந்தியா தலையிடவில்லை. போர் முடிந்த பிறகு அவர்களுக்கு  வீடுகள் கட்டி தருவது தவிர  நாம் எதுவும் செய்யவில்லை. இத்தோடு தமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு நினைப்பதுபோல் தெரிகிறது..” என்றார் கவிதா.

இதனைக் குறுக்கிடாமல் பொறுமையுடன் கேட்ட ராகுல் தான் தயாராக கையில் வைத்திருந்த குறிப்புகளைப் படித்தே இதற்குப் பதில் சொன்னார்.

“இலங்கை பிரச்னையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை என்பது தவறு. 2000 கோடி ரூபாய் ரயில்வே லைன் அமைக்க கொடுத்திருக்கிறோம். 80,000  வீடுகள் கட்ட உதவி செய்திருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் ஒரு மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அங்கு இந்திய தூதரகம் திறக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் திறக்கும் எண்ணமும் இருக்கிறது. நீங்கள் சில வீடுகள் என்று சொல்கிறீர்கள். 80,000 வீடுகள் என்பது சில வீடுகள் அல்ல. 2000 கோடி ரூபாய்  என்பது கொஞ்சமான நிதியும் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பது நமது நாட்டு நலன் சார்ந்த விஷயம்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து பல முனைகளில் இருந்தும் குரல்கள் எழும்பின. “தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்திருகிறதா?” என்று கேட்டார் ஒருவர்.

இதற்கும் பதில் அளித்த ராகுல், “இலங்கை அரசாங்கம் தமிழர்களை நடத்தும் விதம் குறித்து எங்களுக்கு கடுமையான ஆட்சேபனைகள் இருக்கிறது. நாங்கள் இலங்கை அரசாங்கம் மீது அழுத்தத்தை கொடுத்துதான் வருகிறோம். பிரணாப் முகர்ஜி, நாராயணன் உட்பட பல பிரதிநிதிகளை அனுப்பியிருகிறோம்.  ஆனால் இன்னொரு நாடு மீது கொடுக்கப்படும் அழுத்தத்திற்கு சில எல்லைகள் இருக்கிறது. நாங்கள் அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட அழுத்தத்தை நாம் கொடுக்க மாட்டோம் என்று நீங்கள் ஏன் நினைகிறீர்கள்? அவர்கள் நமது மக்கள்..” என்றார்.

இந்த நேரத்தில் வேறொருவர் எழுந்து “நீங்கள் இலங்கை அரசு செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிக்கூட பேசவில்லையே..” என்றார்.

சற்று டென்ஷன் கூடிய நிலையில் பேசத் துவங்கிய ராகுல், “மன்னிக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கு நடந்த ஐந்து  தேர்தல் கூட்டங்களிலேயே நானே அதைப் பற்றி பேசியிருக்கிறேன். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல,  மனிதர்கள் அப்படி நடத்தப்படக்கூட கூடாது.  நமக்கு இலங்கை தமிழர்களுடன் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிற்கு இருக்கிறது. தமிழ்நாட்டிருக்கு இருக்கிறது. இந்த அரசாங்கத்தால் என்ன முடியுமோ, அதை நாம் அவர்களுக்கு நிச்சயம் செய்வோம். அதை நான் தனிப்பட்ட முறையிலும் செய்வேன். இந்தப் பிரச்னை தீர்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்..?” என்று அவரே கேள்வியெழுப்பினார்.

இந்த நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாலன் எழுந்து “இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்திருக்க வேண்டும்..” என்றார்..

இந்த நேரத்தில் ஒரு கேள்வி அரங்கத்தில் எழுந்தது.  ”நீங்கள் ராஜபக்சேவை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்தீர்களே..?” என்று..! கேள்வி கேட்டவர் எழுத்தாளர் தேவிபாரதி.

பட்டென்று தனது கைகளைத் தூக்கிக் கும்பிட்டுக் காட்டிய ராகுல், “அவரை நான் அழைக்கவில்லை” என்றார்.  தேவிபாரதியும் விடாமல், “உங்களது காங்கிரஸ் அரசுதான் ராஜபக்சேவை அழைத்தது. அது எங்கள் விருப்பத்திற்கு எதிரானது..” என்றார்.

கூடவே அடுத்துச் சொல்ல வேண்டியவைகளை தமிழில் தேவிபாரதி சொல்லத் துவங்க.. ஒரு அளவுக்கு மேல் புரியாத நிலையில் கேட்டுக் கொண்டிருந்த ராகுல்.. பட்டென்று அவரைப் புறக்கணித்துவிட்டு அடுத்த நபருக்குத் தாவிவிட்டார். இந்த நேரத்தில் இவருக்கு வேறு யாராவது ஆங்கிலத்தில் பேசி கை கொடுத்திருக்கலாம்..

அடுத்து பஞ்சாயத்து அமைப்புகள் அவற்றின் செயல்பாடுகள் பற்றி ஒருவர் கேள்வியெழுப்பினார். இந்த நேரத்தில் ராகுலின் செயலாளர் இன்னும் 2 நிமிடங்கள்தான் என்று ஞாபகப்படுத்திவிட ராகுல் அவசரத்துடன் பேசத் தொடங்கினார்..

“பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி நிறைய ஆர்வம் இருக்கிறது. இதை பற்றி என்னை தில்லி வந்து சந்தியுங்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.

விடைபெறும்போது, “ நான் கிளம்புகிறேன். விடைபெறுவதற்கு முன்பு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இலங்கை தமிழர் பற்றிய பிரச்னையை எழுப்பியிருக்கிறீர்கள். இந்திய அரசாங்கம் தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் கொடுகிறது. இது எனக்கு தெரியும். காரணம், இந்திய அரசாங்கத்திடம் நானே இதைப் பற்றி தொடர்ந்து பேசியிருக்கிறேன். இனி நான் இதை தனிப்பட்ட முறையில் இன்னும் தீவிரமாக எழுப்புவேன். தனிப்பட்ட முறையிலும் கவனம் செலுத்துவேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கீழே இறங்கிய ராகுலிடம் கை குலுக்கவும், புகைப்படம் எடுக்கவும் கூட்டம் முண்டியடித்தது. ஒரு சிலர் சில கோரிக்கைகள் பற்றிய கோப்புகளை அவரிடம் கொடுத்தார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

நிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களில் ராகுலுடன் வந்திருந்த இளைஞரணித் தலைவர்களே மைக்குகளை வாங்கிக் கொண்டார்கள். வந்திருப்பவர்களில் முக்கியப் பிரமுகர்கள் யார் என்று அந்த வெளிமாநில இளைஞரணித் தலைவர்களுக்குத் தெரியாததால், நமது பிரபலங்கள் பலருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

ராகுலே கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன்.. கேள்வி கேட்டவர்களும் மிக அதிகமான நீளத்திற்கு கேள்விகளை இழுத்துக் கொண்டே போனதும்கூட நேரமின்மைக்கு ஒரு காரணமாகிவிட்டது.

150 பேரை அழைத்து ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்தாக வேண்டுமெனில் முடிகிற காரியமா..? ஒருவருக்கு ஒரு கேள்வி.. இரண்டு வரிகளில் கேள்விகளை முடித்திருந்தால்கூட நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் கேள்வி கேட்க எழுந்த மதனைக்கூட உட்கார வைத்துவிட்டார்கள்.

நானும் ஐந்து கேள்விகளோடு சென்றிருந்தேன். இன்னும் ஒரு பதினைந்து நிமிடங்கள் நீடித்திருந்தால்கூட நிச்சயமாக ஒரு கேள்வியாவது கேட்டிருப்பேன். வாய்ப்பில்லாமல் போனதில் எனக்கும் வருத்தம்தான்..!

அதே சமயம் இன்னும் கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்திருந்தால் பலரையும்போல் இடைமறித்தே அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது..! ம்.. இப்போது வருத்தப்பட்டுப் புண்ணியமில்லை..!

அத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு போனதையே சில நண்பர்களும், தோழர்களும் விரும்பவில்லை. “ராகுலை நீங்கள் ஏன் சென்று சந்திக்க வேண்டும்..?” என்கிறார்கள்.

நான் கேட்க நினைத்திருந்த கேள்விகளில் ஒன்று : “நளினியையும், மற்றவர்களையும் விடுதலை செய்ய ஏன் நீங்களும், உங்களுடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை? உங்களுடைய தாயார் விரும்பினால் நளினியை விடுதலை செய்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று கலைஞர் சொல்லிவிட்டாரே. இப்போது நீங்களும், உங்களது தாயாரும் விரும்பினால் நளினி விடுதலையாவாரே. ஏன் அவருக்குக் கருணை காட்ட மறுக்கிறீர்கள்..?” என்பதைத்தான்..!

இந்தக் கேள்வியை சக பத்திரிகையாளர்களே ராகுலிடம் கேட்கலாம். சோனியாவிடம் கேட்கலாம். கேட்டிருக்கலாம். ஆனால் இதுவரையில் எனக்குத் தெரிந்து கேட்கவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

இது என்றில்லை..! கலைஞரிடம்கூட நீராராடியா டேப் விவகாரத்தில் கனிமொழி, தயாநிதி பற்றிச் சொல்லியிருப்பதற்கு என்ன பதில் என்றுகூட நமது பத்திரிகையாளர்கள் கேட்டதில்லை. கேட்க முடிவதில்லை என்பதுதான் உண்மையானது.

ஏனெனில் கலைஞர் அதன் பின்பு கோபப்படுவார். பிரஸ் மீட்டை கேன்ஸல் செய்வார். நமக்கு நியூஸ் எதுவும் கிடைக்காது என்பதோடு, இது போன்ற ஆளுகின்ற அரசுகளை சங்கடப்படுத்தும் கேள்விகளை பத்திரிகை முதலாளிகளே விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கிறது..!

இதேபோலத்தான் ஜெயலலிதாவிடம் “எப்படி ஒரே வருடத்தில் 66 கோடிக்கு அதிபதியானீர்கள்?” என்றோ, கனிமொழியிடம் “ராசா மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கரிசனம்..? நீராராடியாவிடம் அப்படி பேசியிருக்கிறீர்கள்?” என்றோ யாரும் கேள்வி கேட்டதே இல்லை.

பத்திரிகையாளர்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதால் முதலாளிகள் எப்படி இருக்கச் சொல்கிறார்களோ.. என்ன எழுதச் சொல்கிறார்களோ அதையே செய்துவிட்டுப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பத்திரிகை முதலாளிகள் மாறினால் ஒழிய இந்த நேரடியான, உண்மையான, பத்திரிகை தர்மம் வெளிப்பட வாய்ப்பில்லை.. இந்தச் சூழலில் இது போன்று எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்கிற வாய்ப்பு வருகின்றபோது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்துத்தான் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம்.. சென்றேன்.. அழைத்தமைக்காக அமைப்பாளர்களுக்கு எனது நன்றிகள்..!

பத்திரிகைகளை உள்ளே அனுமதிக்காததால் பெரும் ஏமாற்றத்துடன் அவர்கள் வெளியிலேயே காத்திருந்தார்கள். ராகுல்காந்தி ஹோட்டலை விட்டு வெளியேறிய பின்புதான் பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். வெளியில் வந்த பிரபலங்களிடமும், மூத்தப் பத்திரிகையாளர்களிடமும் பல்வேறு சேனல்களும் நடந்ததைக் கேட்டு பேட்டியெடுத்துக் கொண்டன.  இதில் அதிகமாகக் கல்லா கட்டியவர் அண்ணன் ஞாநிதான்..!

ஈழப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு ஏற்படும்வரையிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கான எதிர்ப்புக் குரல் நீடிக்கும் என்பதை ராகுல் இந்தக் கூட்டத்தின் மூலம் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!

இந்தக் கட்டுரைக்கு பெருமளவில் உதவிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரனுக்கு நன்றி..!

சில இணையத்தளங்கள், சில பத்திரிகைகளில் கிடைத்தத் தகவல்களை வைத்தும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் நன்றி..!

52 comments:

Indian Share Market said...

இந்த தேசத்தின் மண்வாசனை தெரியாதவர் ராகுல். தேசத்திற்காக பாடுபடக்கூடிய தேசிய இயக்கங்களுக்கும ், தேசத்திற்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களுக்கும ் வேறுபாடு தெரியாதவர். நல்ல வேளையாக, ராகுல் பிரதமராக வேண்டும் என்ற காங்கிரசின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. அவர் எங்கெல்லாம் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்கிறாரோ, அங்கெல்லாம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது.

Unknown said...

நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே!

Sanjai Gandhi said...

இந்தப் பதிவுக்கு ரொம்ப நன்றி அண்ணாத்தே.. நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இயலாத சில நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன்.

//இதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, “சட்டத்தில் எது தவறு என்று நினைக்கிறீர்கள்? (இது பற்றி ராகுல் காந்தி விரிவாக பேசினார், அரசியலில் உள்ள சிக்கல்கள் பற்றி சொன்னார்) //

இதை முழுமையாக எழுத முடியுமா? பின்னூட்டத்திலாவது.

உமர் | Umar said...

//நாட்டு நடப்பு பற்றி எங்களுடைய கருத்தை ராகுல் தெரிந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காகவும் அழைத்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது.//

தெரிந்தால் சரி.

//ஈழப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு ஏற்படும்வரையிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கான எதிர்ப்புக் குரல் நீடிக்கும் என்பதை ராகுல் இந்தக் கூட்டத்தின் மூலம் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!//

உணர்ந்திருந்தாலும் பயனிருக்காது. ஈழ விஷயத்தில் முடிவெடுக்கும் மையங்கள் இவரது வார்த்தைக்கு காது கொடுக்க வாய்ப்பில்லை.

raja said...

ராகுல் ஒரு மிட்டாய் கடை மாதிரிதான்.. வாங்க முடியாத ஏழைகள் முறைத்து பார்ப்பது போல பார்த்து வந்திருக்கிறீர்கள். இப்பொழுதைக்கு கடையின் ஒனர் அவர் அல்ல.. தமிழ்ர்களை கொன்று குவித்த...(இன்னும் ராமேஸ்ரத்தில் கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிற....) உதவி செய்யும் இந்திய அரசுதான் கடையின் ஒனர்... ஞாநி அங்கு சென்றதற்கான அர்த்தம்.. சொகுசான,முதுகெலும்பு இல்லாத நடுத்தரவர்க்கத்தின் பிரதிநிதி எனும் போர்வையில் இந்திய வாரிசுக்கு தனது ஆதரவை தரச்சென்றிருப்பார்.கள்ளத்தனத்தின் உச்சம் என்று சொன்னால் நான் அவரைத்தான் சொல்வேன். அவர் இலங்கை பிரச்சினையை அங்கு மற்றவர்கள் பேசுவதை பார்த்து ராகுல் கானை விட அதிகம் எரிச்சலடைந்து இருப்பார். எனக்கு முன் சொன்னவரைப்போல நீங்கள் ஒரு அப்பாவிதான். எனக்கு எந்த சந்தேகமுமில்லை.

Sanjai Gandhi said...

//இந்த தேசத்தின் மண்வாசனை தெரியாதவர் ராகுல். //

இந்த தேசத்தின் மண்வாசனை பற்றி உங்களிடம் விளக்கம் எதிர்பார்க்கிறேன். ஏன்னா எனக்கும் தெரியலை. தேசத்தின் மண்வாசனை என்றால் என்ன?

//தேசத்திற்காக பாடுபடக்கூடிய தேசிய இயக்கங்களுக்கும ், தேசத்திற்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களுக்கும ் வேறுபாடு தெரியாதவர். //

தேசத்திற்கு பாடுபட்ட எந்த இயக்கம் பற்றி ராகுலுக்கு தெரியவில்லை? புதிர் போடாம கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாஸ். தெரிஞ்சிக்கிறேன்.

//நல்ல வேளையாக, ராகுல் பிரதமராக வேண்டும் என்ற காங்கிரசின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை.//

ஜோசியம் பொய் என்பதை நீங்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் உணர்வீர்கள். நாங்கள் அவரை பிரதமராக்கியே தீருவோம். சாமர்த்தியம் இருந்தால் யாரும் தடுக்கலாம். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்.

//அவர் எங்கெல்லாம் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்கிறாரோ, அங்கெல்லாம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது.//

அப்படி எங்கே தோல்வியை சந்தித்தது? கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிக நேரங்களும் அதிக இடங்களிலும் பிரச்சாரம் செய்தவர் ராகுல்காந்தி மட்டுமே. வேறு எந்தக் கட்சித் தலைவரும் அவ்வளவு பிரச்சாரம் செய்ததில்லை. 206 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கட்சி இருக்கா இல்லையா என்றே தெரியாமல் இருந்த பிகாரில் தனியாக போட்டியிட்டு 3 எம்பிக்கள். இப்போ சட்ட மன்றத் தேர்தலில் தனியாகவே 24 லட்சம் ஓட்டுகள். உத்திர பிரதேசத்தில் 22 எம்பிக்கள். மாயாவதிக்கும் அதே 22 எம்பிக்கள் தான். முலாயமுக்கு 20 பேர் தான். இதெல்லாம் ராகுலின் வெற்றி.

இஷ்டத்துக்கு வாந்தி எடுக்காம விவாதம் செய்ய தைரியம் இருக்கா ஷேர் மார்க்கெட் நண்பரே?

பிரச்சாரத்துக்கே வரக் கூடாது என தடை போடும் அளவு அவமானப் பட்டது காவி கூடாரத்தின் மோடி தான். ஏன்னா, அவர் வந்தா பிகாரில் தோற்றுவிடுவோம் என நிதிஷுக்கு தெரியும்.

G.Ganapathi said...

எதற்காக கருணை காட்டவேண்டும் ?... குற்றம் நடக்கவில்லை என்பதர்க்கவா ?.. இல்லை அவரின் பங்கு குறைவு என்பதற்க ?.. அல்லது புலிகள் ஆதரவால் என்பதால ?.. ஈழ தமிழர் நலனை நலனாக பார்க்காமல் அரசியலாகவும் அடையலத்திர்க்காகவும் பயன்படுத்தவேண்டும் என்பதலா ?.. அவர்களை குறை கூறவேண்டும் என்பதலா ?.. அல்லது மன்னிப்பது மனித குணம் என்பதலா ?.. புலிகளுக்கு அவர்கள் பாட்டி கொடுத்த அளவிற்கு மிஞ்சிய ஆதரவிர்க்கவா ?... அவரின் அப்பா ஆண்டான் பாலசிங்கம் பிரபாகரன் போன்றோரை மிரட்டி பணியவைத்து ஒப்பந்தத்தில் கையெப்பம் வாங்கினார் என்று நம்பபடுவதால ?... இனமும் மலையக மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நளினியை விடுதலை செய்து அவர்களை கண்டு கொள்ளவைக்கலம் என்பதாலா ?.. சாஸ்திரி சிறிமாவோ ஒப்பத்தின் படி அங்கே இருந்த மலையக மக்கள் 500000 மக்களை நாடு கடத்திய போது மொம்னமாக இருந்தகாரனத்திர்க்காகவா ?... குமரப்பா புலேந்திரன் போன்ற புலிகளில் முன்னணி தலைவர்களுக்கு பலாலி விமானதளத்தில் சயனைட் கொடுத்து அவர்களே ( ஆன்டன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் )கொலை செய்து அல்லது தற்கொலைக்கு துணை புரிந்து அமைதிக்காக என்று போயிருந்த இந்திய படைகளை தாக்கியதற்கா ?.. அப்படி தாக்கி விட்டு அமைதிப்படை தான் காரணம் என்று பலி சுமத்தியதர்க்கா ?.. இதன் காரணாமாக பிற போராளி குழுக்களுக்கு ராஜீவ் அரசாங்கம் அதரவு அளித்தர்க்கா ?.. விபிசிங் சந்திரசேகர் ( என் தந்தையின் நண்பாரக சந்திர சேகர் இருந்தாலும் அவரிடத்தில் இதுபோன்ற சில குறைபாடுகளினால் எனக்கு அவரை பிடிக்காது ) போன்ற அரசாங்கங்களில் உளவுத்துறை மோசமாக செயல்பட்டதற்க ?. அந்த பிற போராளி குழுக்களுக்கு ஆதரவு வழங்கியதற்காக தமிழகத்தில் மிக பெரிய அவமானத்தை ஏற்ப்படுத்திய குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருந்ததாலா ?... தன்னுடைய சர்வதிகார போக்கிர்க்கவும் தன்னைத்தவிர பிறர் இருக்க கூடாது என்று புலி தலைவர் பிரபாகரன் செயல்பட்டதால ?.. இவர் ஒரு பெண் தன் குழந்தையை பிரசவிதபின் அந்த குழந்தையுடன் வாழததால ?... அந்த பெண் குழந்தையை தமிழகத்தில் தமிழக மக்களை நம்பி இங்கேயே விட்டு வைக்காமல் இலங்கைக்கும் பிரான்சுக்கும் கனடாவிற்கும் அனுப்பியதால ?... அந்த பெண் குழந்தைக்கு இங்கே தமிழ் இனர்வாளர்கள் / புனர்வால்கள் ஆதரவு அளித்து கவனிக்காமல் விட்டு விட்டு இவரின் விடுதலையை மட்டும் மைய படுத்தி அரசியலை கொண்டு செல்வதாலா ?..

G.Ganapathi said...

தன் தண்டனை காலம் இவளவுதான் என்று அறியாமல் இருப்பதலா ?... ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் என்று மட்டும் நம்புவதாலா ?.. ( அப்பறம் எதுக்கு எதற்கு ஆயுள் தண்டனை என்று பெயர் ?..) சமுகத்திற்கு சேவை செய்த தலைவர்கள் என்று நம்பப்படும் ஹளைவர்களில் பிறந்த இறந்த தினத்தை முன்னிட்டு கருணையின் அடிப்படையில் சமூக குற்றவாளிகள் மட்டும் விடுதலை அடைகிறார்களே இவர் ஒரு பெண்தானே பிறகு ஏன் என்பதலா ?.. சிறையில் அலைபேசி பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்ததால ?.. அல்லது தேர்தலுக்கு தேர்தல் அப்போது ஆளும் கட்சியை தமிழர்கள் எனும் ஏமாளிகள் மீது எதிர்புறம் திருப்ப பயன்படும் என்பதால ?..

Boopathy said...

"அறிவுஜீவிகள் அரசியலுக்கு வராதது சரியான விஷயமில்லை. நீங்கள் ஏன் காங்கிரஸில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது..?” என்று திருப்பிக் கேட்க கைதட்டல் தூள் பறந்தது.." But somebody should have asked about what qualification do he (Rahul Khan) have other than born from Nehru family?

http://karya6.blogspot.com/2009/08/who-was-jawaharlal-nehru.html See the link to know about Rahul Khans history !!!

நாஞ்சில் பிரதாப் said...

குப்பன்:யார் இந்த ராகுல் காந்தி? ஊருக்கு புதுசா? எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கு....

குப்பன்
குமாரசெட்டிப்பாளையம்
தமிழ்நாடு

சுப்பன்: எலே அவரு ராசிவ் காந்தி புள்ளை...
குப்பன்: ஆமா..தாத்தனும் வந்தாக, பாட்டியும் வந்தாக, அப்பனு வந்தாக இப்போ இவரு வந்ருக்காரு என்ன கிழிக்கப்பறோறாலே...
கடைசிவரைக்கும் நமக்கு இந்த குடிசை வீடுதாம்லே......

நாஞ்சில் பிரதாப் said...

//அறிவுஜீவிகள் அரசியலுக்கு வராதது சரியான விஷயமில்லை. நீங்கள் ஏன் காங்கிரஸில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது..?” என்று திருப்பிக் கேட்க கைதட்டல் தூள் பறந்தது//

அறிவுஜீவிகள் காங்கிரஸ்க்கு வந்தால் எப்படி ஊழல்ஜிவிகளாக மாறிவிடுகிறார்கள் அல்லது மாற்றிவிடுகிறார்கள். என்னப்பண்றது....

நாட்டுல கல்விஅறிவு 100 சதவீதம் இருந்தா பரவால்ல.....எல்லாமே அரைகுறையால்ல இருக்கு....

டுபாக்கூர் பதிவர் said...

கருனாநிதி மாதிரி கேள்வி பதில் அறிக்கை விட்டாலும் குறை சொல்கிறீர்கள். அம்மா மாதிரி அடுத்தவன் எழுதிக் கொடுத்ததை தன் பெயரில் வெளியிட்டாலும் குறை கண்டுபிடிக்கிறீர்கள்.ராகுல் மாதிரி நேராக சந்திக்கிற முயற்சியிலும் திருப்தியில்லை உங்களுக்கு....

ஆரோக்கியமான முன்னெடுப்புகளை வரவேற்காவிட்டாலும் நேர்மையாக எதிர்கொள்ளுங்கள்.

உங்கள் பிரச்சினை ஆங்கிலத்தில் மட்டுமில்லை...ம்ம்ம்ம்ம்

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

இந்த தேசத்தின் மண்வாசனை தெரியாதவர் ராகுல். தேசத்திற்காக பாடுபடக் கூடிய தேசிய இயக்கங்களுக்கும், தேசத்திற்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களுக்கும் வேறுபாடு தெரியாதவர். நல்ல வேளையாக, ராகுல் பிரதமராக வேண்டும் என்ற காங்கிரசின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. அவர் எங்கெல்லாம் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்கிறாரோ, அங்கெல்லாம் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது.]]]

ராகுல் வளர்ந்தவிதம் அப்படி..!!! காங்கிரஸின் கலாச்சாரத்திலேயே இருப்பதால்தான் அவரால் உணர முடியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...
நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே!?]]]

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்..?

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

இந்தப் பதிவுக்கு ரொம்ப நன்றி அண்ணாத்தே. நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இயலாத சில நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன்.

//இதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, “சட்டத்தில் எது தவறு என்று நினைக்கிறீர்கள்? (இது பற்றி ராகுல் காந்தி விரிவாக பேசினார், அரசியலில் உள்ள சிக்கல்கள் பற்றி சொன்னார்) //

இதை முழுமையாக எழுத முடியுமா? பின்னூட்டத்திலாவது.]]]

முடியல தம்பி.. தமிழாக இருந்தால் இன்னும் நிறையவே எழுதியிருக்கலாம்..

இதற்கே பல பேரிடம் கேட்டு, கேட்டுத்தான் எழுதியிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...

//நாட்டு நடப்பு பற்றி எங்களுடைய கருத்தை ராகுல் தெரிந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காகவும் அழைத்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது.//

தெரிந்தால் சரி.

//ஈழப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு ஏற்படும்வரையிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கான எதிர்ப்புக் குரல் நீடிக்கும் என்பதை ராகுல் இந்தக் கூட்டத்தின் மூலம் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!//

உணர்ந்திருந்தாலும் பயனிருக்காது. ஈழ விஷயத்தில் முடிவெடுக்கும் மையங்கள் இவரது வார்த்தைக்கு காது கொடுக்க வாய்ப்பில்லை.]]]

அடுத்து ராகுலே பிரதமராக வரலாம் என்று நினைக்கிறேன்.. அப்போது அவருடைய நிலைப்பாட்டில் ஒருவேளை மாற்றம் வரலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

ராகுல் ஒரு மிட்டாய் கடை மாதிரிதான்.. வாங்க முடியாத ஏழைகள் முறைத்து பார்ப்பது போல பார்த்து வந்திருக்கிறீர்கள். இப்பொழுதைக்கு கடையின் ஒனர் அவர் அல்ல.. தமிழ்ர்களை கொன்று குவித்த, (இன்னும் ராமேஸ்ரத்தில் கொன்று குவித்துக் கொண்டிருக்கிற) உதவி செய்யும் இந்திய அரசுதான் கடையின் ஒனர்.]]]

இந்திய அரசு என்று இப்போது இங்கே யாரைச் சொல்கிறீர்கள்..? அப்படியானால் இதில் ராகுல் யார்..?

[[[ஞாநி அங்கு சென்றதற்கான அர்த்தம். சொகுசான, முதுகெலும்பு இல்லாத நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி எனும் போர்வையில் இந்திய வாரிசுக்கு தனது ஆதரவை தரச் சென்றிருப்பார். கள்ளத்தனத்தின் உச்சம் என்று சொன்னால் நான் அவரைத்தான் சொல்வேன். அவர் இலங்கை பிரச்சினையை அங்கு மற்றவர்கள் பேசுவதை பார்த்து ராகுல்கானைவிட அதிகம் எரிச்சலடைந்து இருப்பார். எனக்கு முன் சொன்னவரைப்போல நீங்கள் ஒரு அப்பாவிதான். எனக்கு எந்த சந்தேகமுமில்லை.]]]

ஞாநி மீது ஏன் இந்த வன்மம்..? எனக்குத் தெரிந்து ஞாநி தற்போதைய காங்கிரஸ் அரசின் ஆதரவாளர் இல்லை..

Unknown said...

நண்பரே(பூபதி):அகில இந்திய ரிதியில் தெரிந்த முகம் காங்கிரசில் ஒன்னே ஒன்னு சொல்லுங்க பார்ப்போம்.அதனாலதான் கையில,காலில விழுந்து,இத்தாலியா இருந்தாலும் பரவாயில்ல ராஜீவ் மனைவி என்று சொன்னா குமரி முதல் காஷ்மீர் வரை மக்களுக்கு படம் காட்டி பொழ(ஆட்சிக்கு வந்து ஆண்டிமுத்து மாதிரி ஆளுகளை வச்சு ஊழல் பண்ணிட்டு தப்பி)ச்சுக்கலாம்-ன்னு சோனியா அம்மாவை கட்சிக்கு வலிச்சுகினு வந்தாங்க.இதெல்லாம் தெரியாம எல்லோரும் என்னென்னமோ பேசிகினு கீறீங்கோ.ஹ்ம்ம்..நாமோ போங்க..நம்ம நாட்டுக்கும் ச்டேட்டுக்கும் எப்பதான் விடிவுகாலமோ.

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...

இந்த தேசத்தின் மண்வாசனை பற்றி உங்களிடம் விளக்கம் எதிர்பார்க்கிறேன். ஏன்னா எனக்கும் தெரியலை. தேசத்தின் மண்வாசனை என்றால் என்ன?]]]

தெரிந்தவராக இருந்திருந்தால் இலங்கை படைகளுக்கு இந்திய அரசு உதவியிருக்காது..! அல்லது இவர் வேடிக்கை பார்த்திருக்க மாட்டார்..!

[[[ஜோசியம் பொய் என்பதை நீங்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் உணர்வீர்கள். நாங்கள் அவரை பிரதமராக்கியே தீருவோம். சாமர்த்தியம் இருந்தால் யாரும் தடுக்கலாம். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்.]]]

எமக்கு வாய்த்திருக்கும் எதிர்க்கட்சிகள் சக்தியில்லாமல், திராணியில்லாமல், கூட்டணி பலமில்லாமல் இருப்பதால்தான் நீங்கள் ஆட்சியில் இருக்க முடிகிறது..!

[[[206 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கட்சி இருக்கா இல்லையா என்றே தெரியாமல் இருந்த பிகாரில் தனியாக போட்டியிட்டு 3 எம்பிக்கள்.]]]

3 எம்.பி.க்கள் கிடைத்ததே வெற்றியா..? அங்கே ஒரு காலத்தில் ஆட்சிக் கட்டிலில் இருந்ததே காங்கிரஸ்தான் என்பது தம்பிக்குத் தெரியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

எதற்காக கருணை காட்டவேண்டும்?

மனித நேயம் நமக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக..!

உண்மைத்தமிழன் said...

[[[Boopathy said...

"அறிவுஜீவிகள் அரசியலுக்கு வராதது சரியான விஷயமில்லை. நீங்கள் ஏன் காங்கிரஸில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது..?” என்று திருப்பிக் கேட்க கைதட்டல் தூள் பறந்தது.."

But somebody should have asked about what qualification do he (Rahul Khan) have other than born from Nehru family?

http://karya6.blogspot.com/2009/08/who-was-jawaharlal-nehru.html

See the link to know about Rahul Khans history !!!]]]

இதை இப்போது பேசி புண்ணியமில்லை. அவரிடம் நான் வேண்டுகோள் வைக்கும் நிலையில் உள்ளோம். எனவே அதனைச் செய்வதுதான் சரி..!

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் பிரதாப் said...

குப்பன்:யார் இந்த ராகுல் காந்தி? ஊருக்கு புதுசா? எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கு....

குப்பன்
குமாரசெட்டிப்பாளையம்
தமிழ்நாடு

சுப்பன்: எலே அவரு ராசிவ்காந்தி புள்ளை...

குப்பன்: ஆமா. தாத்தனும் வந்தாக, பாட்டியும் வந்தாக, அப்பனு வந்தாக இப்போ இவரு வந்ருக்காரு என்ன கிழிக்கப் பறோறாலே. கடைசி வரைக்கும் நமக்கு இந்த குடிசை வீடுதாம்லே.]]]

ஹா.. ஹா.. ஹா.. ஏழை படும் பாடு..!

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் பிரதாப் said...

//அறிவுஜீவிகள் அரசியலுக்கு வராதது சரியான விஷயமில்லை. நீங்கள் ஏன் காங்கிரஸில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது..?” என்று திருப்பிக் கேட்க கைதட்டல் தூள் பறந்தது//

அறிவுஜீவிகள் காங்கிரஸ்க்கு வந்தால் எப்படி ஊழல்ஜிவிகளாக மாறி விடுகிறார்கள் அல்லது மாற்றி விடுகிறார்கள். என்ன பண்றது?
நாட்டுல கல்விஅறிவு 100 சதவீதம் இருந்தா பரவால்ல. எல்லாமே அரைகுறையால்ல இருக்கு.]]]

அதுதான் பிரச்சினை.. முற்றிலும் அரைகுறைகள்தான் நம்மை ஆளுகிறார்கள்..!

இல்லாவிடில் ஒரு லட்சத்துக்கு கோடி ஊழலெல்லாம் ஒரு ஊழலா என்றா கேட்பார்கள்..?

உண்மைத்தமிழன் said...

[[[டுபாக்கூர் பதிவர் said...
கருனாநிதி மாதிரி கேள்வி பதில் அறிக்கை விட்டாலும் குறை சொல்கிறீர்கள். அம்மா மாதிரி அடுத்தவன் எழுதிக் கொடுத்ததை தன் பெயரில் வெளியிட்டாலும் குறை கண்டுபிடிக்கிறீர்கள். ராகுல் மாதிரி நேராக சந்திக்கிற முயற்சியிலும் திருப்தியில்லை உங்களுக்கு....]]]

ஆமாம்.. அவர் கொடுத்த பதிலில்தான் திருப்தியில்லை என்று சொல்கிறேன்..! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?

[[[ஆரோக்கியமான முன்னெடுப்புகளை வரவேற்காவிட்டாலும் நேர்மையாக எதிர்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை ஆங்கிலத்தில் மட்டுமில்லை. ம்ம்ம்ம்ம்]]]

ராகுலின் இது போன்ற முயற்சிகளை வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மக்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[thamizhan said...

நண்பரே(பூபதி):அகில இந்திய ரிதியில் தெரிந்த முகம் காங்கிரசில் ஒன்னே ஒன்னு சொல்லுங்க பார்ப்போம். அதனாலதான் கையில, காலில விழுந்து, இத்தாலியா இருந்தாலும் பரவாயில்ல ராஜீவ் மனைவி என்று சொன்னா குமரி முதல் காஷ்மீர்வரை மக்களுக்கு படம் காட்டி பொழ(ஆட்சிக்கு வந்து ஆண்டிமுத்து மாதிரி ஆளுகளை வச்சு ஊழல் பண்ணிட்டு தப்பி)ச்சுக்கலாம்-ன்னு சோனியா அம்மாவை கட்சிக்கு வலிச்சுகினு வந்தாங்க. இதெல்லாம் தெரியாம எல்லோரும் என்னென்னமோ பேசிகினுகீறீங்கோ. ஹ்ம்ம்.. நாமோ போங்க.. நம்ம நாட்டுக்கும் ச்டேட்டுக்கும் எப்பதான் விடிவுகாலமோ.]]]

விடிவே இல்லை..!

Bibiliobibuli said...

நான் கும்மி சொன்ன கருத்தை தான் வழிமொழிகிறேன்.

உண்மைத்தமிழன்,இருந்தாலும் ராகுல் காந்தி விடயத்தில் நீங்க கொஞ்சம் அப்பாவியா இருக்கீங்களோன்னு தோணுது.

உமர் | Umar said...

//அடுத்து ராகுலே பிரதமராக வரலாம் என்று நினைக்கிறேன்.. அப்போது அவருடைய நிலைப்பாட்டில் ஒருவேளை மாற்றம் வரலாமே..? //

பிரதமர்தான் முடிவெடுக்கிறார் என்று நம்புகின்றீர்களா? அதிலும் வெளியுறவுக்கொள்கைகளில் சாதாரணமாகவெல்லாம் நிலைப்பாடு மாறாது.

Bibiliobibuli said...

கும்மி,

இந்திய வெளியுறவுக்கொள்கைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. அத்தோடு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அது பற்றிய புரிதலும் வரவேண்டும். இல்லையென்றால் ஜெயலிதா போன்றோர் நான் மட்டும் தேர்தலில் ஜெயித்தால் ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்புவேன் என்று தமிழ்நாட்டுக்கென்றே தனியா வெளியுறவு கொள்கை இருப்பது போலெல்லாம் உட்டாலங்கடியாப் பேசுவாங்க.

உமர் | Umar said...

Rathi,

//இந்திய வெளியுறவுக்கொள்கைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து//

அதுதான் அனைவரின் விருப்பமுமாக இருக்கின்றது. ஆனால், இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தம், வெளியுறவுக் கொள்கையை மீள்பரிசீலனை பண்ணவிடாது.

SurveySan said...

therinja aangilaththil thikki thikkiyaavadhu kettirukkalaam thala.

kanagu said...

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் மக்களின் மீது கொஞ்சமாவது பரிவு இருப்பது போல் காட்டி கொள்வது ராகுல் காந்தி மட்டுமே... அந்த வகையில் அவரை எனக்கு பிடிக்கும்...

மேலும் அவர் முயற்சி செய்து நம் நாட்டை பற்றி புரிந்து கொள்வார் என நம்புகிறேன்..

இங்கு மத்தியில் நடக்கும் பல விஷயங்கள் அரசியல் கட்சிகளின் கையில் இல்லாத போது அவரால் என்ன செய்ய முடியும்...

இந்த பதிவிற்கு நன்றி அண்ணா.. இல்லையெனில் இப்படி ஒன்று நடந்ததே எனக்கு தெரியாமல் போய் இருக்கும்..

kanagu said...

/*therinja aangilaththil thikki thikkiyaavadhu kettirukkalaam thala.*/

இதை நான் வழிமொழிகிறேன்...

Margie said...

/*therinja aangilaththil thikki thikkiyaavadhu kettirukkalaam thala.*/

சொல்றது ரொம்ப சுலபம். சுத்தி இருக்கறவங்க எல்லாம் பட படன்னு பேசும் போது, வடிவேலு சொல்றாப்ல, "ஸ்ஸ்ஸ்... அப்பா, இப்பவே கண்ண கட்டிக்கிட்டு வருதே"-ன்னு தோணும். உங்களுக்கு அந்த அனுபவம் இருந்ததில்ல போலருக்கு.

Margie said...

I am all for youngsters to join politics and serve people, even if it is Nehruji's family as long as their intention is pure/good and for the people.

Margie said...

/*பத்திரிகை முதலாளிகள் மாறினால் ஒழிய இந்த நேரடியான, உண்மையான, பத்திரிகை தர்மம் வெளிப்பட வாய்ப்பில்லை.. இந்தச் சூழலில் இது போன்று எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்கிற வாய்ப்பு வருகின்றபோது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்துத்தான் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம்.. சென்றேன்.. அழைத்தமைக்காக அமைப்பாளர்களுக்கு எனது நன்றிகள்..!*/


சார், நான் அங்க இருந்திருந்தால், ராகுல் கிட்ட "ராகுலோட இந்த வளர்ச்சி, கட்சி-யில அவரோட, அதே நாள்-ள சேர்ந்த எல்லோருக்கும் இருக்குதா?"-ன்னு கேட்டிருப்பேன். இன்னும் நிறைய கேட்டிருந்திருக்கலாம். உங்கள மட்டும் சொல்லல. அங்க வந்த எல்லோரையும் சேர்த்து தான் சொல்றேன்.

/*150 பேரை அழைத்து ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்தாக வேண்டுமெனில் முடிகிற காரியமா..? ஒருவருக்கு ஒரு கேள்வி.. இரண்டு வரிகளில் கேள்விகளை முடித்திருந்தால்கூட நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.*/

ஆனா, நீங்க சொல்றதும் justifiable -ஆ தான் இருக்குது.

/*பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் கேள்வி கேட்க எழுந்த மதனைக்கூட உட்கார வைத்துவிட்டார்கள்.*/

மதன் சார்-ராலயே ஒண்ணும் கேட்க முடியலன்னா, யார என்ன சொல்றது?

உண்மைத்தமிழன் said...

[[[Rathi said...
நான் கும்மி சொன்ன கருத்தைதான் வழிமொழிகிறேன். உண்மைத்தமிழன், இருந்தாலும் ராகுல் காந்தி விடயத்தில் நீங்க கொஞ்சம் அப்பாவியா இருக்கீங்களோன்னு தோணுது.]]]

வாங்க ரதி.. பார்த்து ரொம்ப நாளாச்சு..! செளக்கியமா..?

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னணியில் இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் இருந்தன என்பதை நான் மறக்கவில்லை..

ஆனால், ராகுலே முன் வந்து பதில் சொல்லத் தயாராக இருக்கும்போது நாம் ஏன் தயங்க வேண்டும்..? இதுதான் நான் அங்கே சென்றதற்கான காரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...

//அடுத்து ராகுலே பிரதமராக வரலாம் என்று நினைக்கிறேன்.. அப்போது அவருடைய நிலைப்பாட்டில் ஒருவேளை மாற்றம் வரலாமே..? //

பிரதமர்தான் முடிவெடுக்கிறார் என்று நம்புகின்றீர்களா? அதிலும் வெளியுறவுக் கொள்கைகளில் சாதாரணமாகவெல்லாம் நிலைப்பாடு மாறாது.]]]

ஆமாம்.. இப்போது இருக்கும் பிரதமர் இத்தாலி அன்னையின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rathi said...

கும்மி, இந்திய வெளியுறவுக் கொள்கைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. அத்தோடு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அது பற்றிய புரிதலும் வரவேண்டும்.

இல்லையென்றால் ஜெயலிதா போன்றோர் நான் மட்டும் தேர்தலில் ஜெயித்தால் ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்புவேன் என்று தமிழ்நாட்டுக்கென்றே தனியா வெளியுறவு கொள்கை இருப்பது போலெல்லாம் உட்டாலங்கடியாப் பேசுவாங்க.]]]

ஜெயலலிதா மட்டுமல்ல கலைஞரும் அதைத்தானே இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...

Rathi,

//இந்திய வெளியுறவுக் கொள்கைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து//

அதுதான் அனைவரின் விருப்பமுமாக இருக்கின்றது. ஆனால், இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தம், வெளியுறவுக் கொள்கையை மீள்பரிசீலனை பண்ணவிடாது.]]]

அரசியல்வியாதிகள் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு நேரடி பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் இதனை செய்ய முன் வர மாட்டார்கள் என்பதுதான் உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...
therinja aangilaththil thikki thikkiyaavadhu kettirukkalaam thala.]]]

சொல்லியிருக்கலாம்தான்.. சூழல் அப்படி அமையவில்லை.. தடாலடியாக பேசியிருக்க வேண்டும். எனது நா முன் வரவில்லை..

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் மக்களின் மீது கொஞ்சமாவது பரிவு இருப்பது போல் காட்டி கொள்வது ராகுல்காந்தி மட்டுமே... அந்த வகையில் அவரை எனக்கு பிடிக்கும்...

மேலும் அவர் முயற்சி செய்து நம் நாட்டை பற்றி புரிந்து கொள்வார் என நம்புகிறேன். இங்கு மத்தியில் நடக்கும் பல விஷயங்கள் அரசியல் கட்சிகளின் கையில் இல்லாதபோது அவரால் என்ன செய்ய முடியும்...?

இந்த பதிவிற்கு நன்றி அண்ணா.. இல்லையெனில் இப்படி ஒன்று நடந்ததே எனக்கு தெரியாமல் போய் இருக்கும்..]]]

வருகைக்கு நன்றி கனகு..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

/*therinja aangilaththil thikki thikkiyaavadhu kettirukkalaam thala.*/

இதை நான் வழிமொழிகிறேன்...]]]

முடியல கனகு.. அவர் சொல்கின்ற பதில் பாதி புரிந்தது.. மீதி புரியவில்லை.. அதனால் கொஞ்சம் தயக்கமாகிவிட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[Margie said...

/*therinja aangilaththil thikki thikkiyaavadhu kettirukkalaam thala.*/

சொல்றது ரொம்ப சுலபம். சுத்தி இருக்கறவங்க எல்லாம் படபடன்னு பேசும்போது, வடிவேலு சொல்றாப்ல, "ஸ்ஸ்ஸ்... அப்பா, இப்பவே கண்ணக் கட்டிக்கிட்டு வருதே"-ன்னு தோணும். உங்களுக்கு அந்த அனுபவம் இருந்ததில்ல போலருக்கு.]]]

புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Margie said...
I am all for youngsters to join politics and serve people, even if it is Nehruji's family as long as their intention is pure/good and for the people.]]]

இளைஞர்கள் அரசியலில் இணையத் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வழி நடத்தத் தகுதியுள்ள தலைவர்கள் யார்..?

உண்மைத்தமிழன் said...

[[[Margie said...
சார், நான் அங்க இருந்திருந்தால், ராகுல்கிட்ட "ராகுலோட இந்த வளர்ச்சி, கட்சி-யில அவரோட, அதே நாள்-ள சேர்ந்த எல்லோருக்கும் இருக்குதா?"-ன்னு கேட்டிருப்பேன். இன்னும் நிறைய கேட்டிருந்திருக்கலாம். உங்கள மட்டும் சொல்லல. அங்க வந்த எல்லோரையும் சேர்த்துதான் சொல்றேன்.]]]

கேட்டிருக்கலாம். வாய்ப்பு கிடைத்திருக்க, கிடைக்க வேண்டுமே..?

[[[நீங்க சொல்றதும் justifiable -ஆ தான் இருக்குது.]]]

இல்லை.. உண்மையாகத்தான் சொல்கிறேன்..!

[[[மதன் சார்-ராலயே ஒண்ணும் கேட்க முடியலன்னா, யார என்ன சொல்றது?]]]

அவர் யாரென்று தெரியாதவர்களிடம்தான் மைக் இருந்தது. அதனால்தான் குழப்பம்..!

Sundar said...

என்னங்க இது? மறுபடியும் ஒரு வழ வழ கொழ கொழ பேட்டி!!!

மது நாட்டுக்கு கெடுதல் தான்!
தீவிரவாதம் வேண்டாம் தான்!
பாலின ஒடுக்குமுறை கூடாதுதான்!
இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை தான்!
கிராமங்கள் முன்னேர வேண்டும் தான்!

இதற்க்கு எல்லாம் அடிப்படை, ஊழல் செய்யாத அரசியல்வாதி தேவை இல்லையா???

இங்கு கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாம் நிர்வாகம், ராஜதந்திரம், கொள்கை சம்பத்தப்பட்ட உயரிநிலை கேள்விகள்.

இவரை ஒரு தலைவராக பார்க்கும் முன், ஒரு இந்திய பிரஜையாக, சாதாரண குடிமகனாக கேள்விகள் கேட்டிருக்கவேண்டும்!

1. ஸ்பெக்ட்ரம் ஊழலில், பத்திரிக்கைகள்/பொதுமக்கள் மனதில் இருக்கும் அடிப்படை வாதங்களை வைத்து, இவரின் கருத்து என்ன என்று கேட்டிருக்கலாம். திடேரென்று தோன்றிய நிறுவனங்கள், நிறுவங்கள் அதிக விலைக்கு விற்றது, இவை போன்றவை ஊழலா இல்லையா என்று “ஆம்/இல்லை” பதில் கேட்கலாம்!

2. தாத்தாவின் (அல்லது அம்மாவின்) வாரிசுகள் இன்று கோடிகளில் இருக்கிறார்களே, அது பற்றிய நேரிடையான பதில் கேட்கலாம்!

3. எனக்கு மேலும் சரியான கேள்விகள் தெரியவில்லை. ஆனால் நான் சொல்ல வருகிறது புரிகிறதா?

நடந்து கொண்டிருக்கும் ஊழல்களுக்கு இவரின் பதில் என்ன? இவைகளை தடுக்க என்ன நடவடிக்கை? இவரது கட்சியில், அல்லது பிற கட்சிகளில் உள்ள வாரிசு ஊழல், அவர்களின் தொழில்கள் பற்றி வாய்கிழிய பேசும் பத்திரிக்கைகள்/பொதுமக்களை அழைத்து அவர்களிடம் அந்த கேள்விகளை கேட்க செய்யலாமே???

இந்த மாதிரி சந்திப்பு எல்லாம் இவரை பிரபல படுத்த மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று!

வழக்கம்போல், வழ வழ கொழ கொழ அரசியல் கூட்டம், ஏனைய பிரபலங்கள் துணையுடன்!

சுந்தர்

ரிஷி said...

///Sundar said...

என்னங்க இது? மறுபடியும் ஒரு வழ வழ கொழ கொழ பேட்டி!!!

மது நாட்டுக்கு கெடுதல் தான்!
தீவிரவாதம் வேண்டாம் தான்!
பாலின ஒடுக்குமுறை கூடாதுதான்!
இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை தான்!
கிராமங்கள் முன்னேர வேண்டும் தான்!

இதற்க்கு எல்லாம் அடிப்படை, ஊழல் செய்யாத அரசியல்வாதி தேவை இல்லையா???

இங்கு கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாம் நிர்வாகம், ராஜதந்திரம், கொள்கை சம்பத்தப்பட்ட உயரிநிலை கேள்விகள்.

இவரை ஒரு தலைவராக பார்க்கும் முன், ஒரு இந்திய பிரஜையாக, சாதாரண குடிமகனாக கேள்விகள் கேட்டிருக்கவேண்டும்!


நடந்து கொண்டிருக்கும் ஊழல்களுக்கு இவரின் பதில் என்ன? இவைகளை தடுக்க என்ன நடவடிக்கை? இவரது கட்சியில், அல்லது பிற கட்சிகளில் உள்ள வாரிசு ஊழல், அவர்களின் தொழில்கள் பற்றி வாய்கிழிய பேசும் பத்திரிக்கைகள்/பொதுமக்களை அழைத்து அவர்களிடம் அந்த கேள்விகளை கேட்க செய்யலாமே???

இந்த மாதிரி சந்திப்பு எல்லாம் இவரை பிரபல படுத்த மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று!

வழக்கம்போல், வழ வழ கொழ கொழ அரசியல் கூட்டம், ஏனைய பிரபலங்கள் துணையுடன்!

சுந்தர்///

முழுமையாக வழிமொழிகிறேன். பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களின்/பிரதிநிதிகளின் பேட்டிகள்/சந்திப்புகள் எப்போதுமே வழவழா கொழகொழாதான்!

உண்மைத்தமிழன் said...

சுந்தர்..

நீங்கள் கேட்டிருப்பதெல்லாம் மிகச் சரியானவைதான்..!

ஆனால் வந்தவர்கள்தான் இதைக் கேட்டிருக்க வேண்டும்..!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வியூ.. அவரவர் கோணத்தில் எது முக்கியம் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் பேசுவார்கள். கேட்பார்கள்..

எனக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தால் இதில் சொல்லியிருப்பது போலத்தான் கேட்டிருப்பேன்..!

உண்மைத்தமிழன் said...

ரிஷி உங்களது பதிலை நான் வழிமொழிகிறேன்..!

எப்பூடி..?

G.Ganapathi said...

எல்லா குற்றங்களுக்கும் மனித நேயத்தை முன்னிறுத்தி மன்னிப்பு வழங்கி விடலாம் .... கண்துடைப்பிற்கு தண்டனை வழங்கி வார்டு கவுன்சிலர் இறந்த தினம் பிறந்த தினம் கொண்டாடி அந்த தண்டனை காலத்தை குறைத்து விடுதலை செய்துவிடுவோம் மனத நேயத்தை காப்போம் . ஆனால் அதே மனித நேயம் குற்றவாளிகள் மீது திருப்பி கேக்க பயன்படகூடது அப்போது அது இருத்தலியல் மனிதநேயம் ஆகிறது வாழ்க மனித நேயம் வளர்க மனித நேயம் .

நாளைக்கு நான் ஒரு அம்பது பொண்ணுங்களை கற்பழிக்கலாம் என்று இருக்கேன் தயவு செய்து மனித நேயம் படைத்த அனைத்து உள்ளங்களும் எனது விடுதலைக்கு அறைகூவல் விடுங்கள் . அல்லது கருணாநிதி , ஜெயலலிதா , சோனியா , ராசா , ராஜபக்சே , கற்பனையில் உயிர்வாழும் பிரபாரன் போன்றவர்களை குண்டு வைத்து கொல்கிறேன் . இதே மனித நேயத்தை பறைசாற்றி எனது விடுதலைக்கும் ஆவன செய்யுங்கள் .

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

எல்லா குற்றங்களுக்கும் மனித நேயத்தை முன்னிறுத்தி மன்னிப்பு வழங்கி விடலாம்.

கண் துடைப்பிற்கு தண்டனை வழங்கி வார்டு கவுன்சிலர் இறந்த தினம் பிறந்த தினம் கொண்டாடி அந்த தண்டனை காலத்தை குறைத்து விடுதலை செய்துவிடுவோம் மனத நேயத்தை காப்போம்.

ஆனால் அதே மனித நேயம் குற்றவாளிகள் மீது திருப்பி கேக்க பயன்படகூடது அப்போது அது இருத்தலியல் மனிதநேயம் ஆகிறது வாழ்க மனித நேயம் வளர்க மனித நேயம்.

நாளைக்கு நான் ஒரு அம்பது பொண்ணுங்களை கற்பழிக்கலாம் என்று இருக்கேன். தயவு செய்து மனித நேயம் படைத்த அனைத்து உள்ளங்களும் எனது விடுதலைக்கு அறைகூவல் விடுங்கள். அல்லது கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா, ராசா, ராஜபக்சே, கற்பனையில் உயிர் வாழும் பிரபாரன் போன்றவர்களை குண்டு வைத்து கொல்கிறேன். இதே மனித நேயத்தை பறைசாற்றி எனது விடுதலைக்கும் ஆவன செய்யுங்கள்.]]]

கணபதி ஸார்..

தண்டனை என்பதே மனிதன் திருந்துவதற்காகத்தான்.. பல்லுக்குப் பல்.. கைக்கு கை, காலுக்குக் கால் என்பதெல்லாம் ஜனநாயக நாட்டில் ஏற்புடைய சட்டங்களாக இருக்கக் கூடாதவை..!

அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாமே என்பதுதான் எனது கருத்து..!

abeer ahmed said...

See who owns findingmichael.com or any other website:
http://whois.domaintasks.com/findingmichael.com