தினத்தந்தி வரலாற்று சுவடுகள் புத்தக வெளியீட்டு விழா - என்னை வெறுப்பாக்கிய கருணாநிதி..!

02-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள் பக்கத்தை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்க முடியாது.. கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வரலாற்றுச் சுவடுகள் பகுதி கிட்டத்தட்ட 6 வருட காலம் தொடர்ந்து நடந்தது தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு மாபெரும் சாதனைதான்..!

தனது நூலகத்திலும், அந்தக் காலத்திய தினத்தந்தி இதழ்களில் இருந்தும் பல அரியச் செய்திகளைத் தொகுத்து வழங்கியவிதம் வாசகர்களைக் கவர்ந்திருந்தது.


அந்த வரலாற்றுச் சுவடுகள் புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடந்தது. விழாக்களுக்கு சென்று மிகுந்த நாட்களாகிவிட்டது என்பதினாலும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க நான் ஆர்வமாக இருந்ததினாலும் விழாவுக்குச் சென்றிருந்தேன்.

அழைப்பிதழுடன் வந்தவர்களையெல்லாம் அரங்கத்தின் கீழ்த் தளத்திலும், இல்லாமல் வந்திருந்த பொதுமக்களை மேல்தளத்திலுமாக தள்ளிவிட்டார்கள் காவலர்கள். சின்ன ஐயா சிவந்தி ஆதித்தனாரின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும், நாடார் அமைப்புகளின் உறுப்பினர்களுமாக திரண்டு வந்திருந்ததால் நிற்கவே இடமில்லாத அளவுக்கு கூட்டம் கும்மிவி்டடது.

சமீப காலமாக கருணாநிதி சென்னையில் கலந்து கொள்ளும் விழாக்களில் எல்லாம் கூட்டம் கூடாமல் கூட்டத்தைத் திரட்ட கட்சிக்காரர்களை விரட்டும் வேலைகளெல்லாம் நடந்தது. ஆனால் இன்றைக்கு இது அப்படியே உடான்ஸாக இருக்க கருணாநிதி நிச்சயம் மகிழ்ந்திருப்பார்..

இடமில்லாமல் தவித்தவர்களுக்காக அரங்கத்தின் வெளிப்புறத்தில் பெரிய ஸ்கிரீனைக் கட்டி நேரடி ஒளிபரப்பு செய்ததும் பாராட்டத்தக்கது..

முதல் இரண்டு வரிசைகளை அமைச்சர்களுக்கும், முக்கிய வி.வி.ஐ.பி.களுக்காகவும் புக் செய்து வைத்திருந்தாலும் அங்கேயும் போய் மன்றத்துக்காரர்கள் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்ய.. அவர்களுடன் மன்றாடி எழுப்பி பின்பக்கம் தள்ளிக் கொண்டு வந்தார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.

அப்படியும் பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்களையும், நிர்வாகிகளையும் முன் வரிசையில் உட்கார வைத்து அதன் பின் வருகின்ற வி.ஐ.பி.களுக்காக அவர்கள் எழுந்து கொண்டு சீட் பிடித்துக் கொடுத்த காமெடியும் நடந்தது..!


சீர்காழி சிவ.சிதம்பரத்தின் கச்சேரி எப்போதும் வழக்கம்போல களை கட்டியிருந்தது. என்ன குரலய்யா.. இந்த வம்சத்திற்கு. கேட்டவுடனேயே பளிச்சென்று சொல்லிவிடலாம் போல தனித்தன்மையுடன் இசையுலகில் நீடித்த புகழுடன் இருக்கிறது சீர்காழி குடும்பம்..! வாழ்க அவர்தம் இசைத் தொண்டு..!

முதல்வர் வருகிறார் என்பதால் அமைச்சர் பெருமக்கள் ஆவலுடன் ஓடோடி வந்திருந்தார்கள். இவர்களுடன் திரை நட்சத்திரங்கள் வந்தபோது கை தட்டல் ஓங்கி, ஓங்கி ஒலிக்க.. அவ்வப்போது அமைச்சர்களே திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.

கவிஞர் வைரமுத்து. நடிகர்கள் விஜய், சத்யராஜ், பாக்யராஜ், வடிவேல், விவேக், பிரசன்னா, டைரக்டர்கள் தங்கர்பச்சான், ராஜகுமாரன், நடிகைகள் குஷ்பு, தேவயானி என்று சிலர் மட்டுமே வந்திருந்தார்கள்..!

இதில்  குஷ்பூ, விவேக், வடிவேல் மூவருக்கும் கிடைத்த வரவேற்பில் பாதியளவுகூட கலைஞர் வருகையின்போது கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் சோகமானதுதான்..! அதேபோல் கலைஞரின் பேச்சு துவங்கிய உடனேயே கூட்டம் கலையத் தொடங்கியதும் நடந்தது..!

வந்திருந்த அக்கம்பக்கத்துல இளைஞர்கள் கலைஞர் பேசிக் கொண்டிருக்கும்போது தாழ்வாரத்தில் மிகச் சப்தமாக கூச்சலையும், தியேட்டர் வசனங்களையும் பேசிக் கொண்டே போக.. சிறிது சலசலப்பு இருந்தது. ஆனால் காவலர்களோ லேசுபாசாக அவர்களை மிரட்டி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.. ம்ஹூம்.. கேட்டால்தானே..! அனைவருமே பேட்ஜுடன் இருந்ததால் மீண்டும், மீண்டும் மாடிக்கு ஓடுவதும், கீழே இறங்கி ஓடுவதுமாக கபடி விளையாட.. நெல்லைத் தமிழ் பேசியபடியே வந்த ஒரு பெரிசு நெல்லைத் தமிழில் ஒரு போடு போட்டு விரட்டியதைப் பார்த்து காவல்துறையினரே சிரித்துவிட்டார்கள்..

போகும்போது அந்த நெல்லை பெரிசு “நம்ம மக்காளுகதான்.. பெரிய வாலுக. அவ்ளோதான்..” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டுச் சென்றார்..!

இப்போதெல்லாம் கலைஞரின் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியை எவ்வளவு சுருக்கமாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களாம். இந்தக் கட்டுப்பாடு சினிமா நிகழ்ச்சிகளுக்குமா என்று தெரியவில்லை. அங்கேதான் அவர் 6 மணி நேரம் என்றாலும் ஆடாமல், அசையாமல் அமர்ந்திருக்கிறார்.

இந்த விழாவில் மேடையில் 5 கச்சிதமாக பேர் மட்டுமே பேசி முடித்துவிட்டு மிக விரைவில் 8.30 மணிக்கெல்லாம் விழாவை நிறைவு செய்துவிட்டார்கள்.

இதில் பாராட்ட வேண்டிய விஷயம்.. தினத்தந்தி இந்த நிகழ்ச்சியை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்காதது ஒன்றுதான். அனைத்து பத்திரிகையாளர்கள், வீடியோ இணையத்தளங்களையும் அழைத்திருந்ததால் வீடியோகிராபர்கள் கூட்டம் நிறைய..!

தினத்தந்தியின் தொலைக்காட்சியில் மட்டும் இது ஒளிபரப்பாகும் என்று நினைக்கிறேன். ஹலோ எஃப்.எம்.மில் நேரடி ஒளிபரப்பு என்றார்கள். நான் கேட்கவில்லை..!

ஆனாலும் தினத்தந்திக்கு இதே போல் இன்னாரு விழா நடத்தும் சாத்தியம் இருக்கிறது. வரலாற்றுச் சுவடுகள் வரிசையில் சினிமா பகுதியை மட்டும் தனி புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்களாம். அன்றைக்கு முழுக்க, முழுக்க சினிமாக்காரர்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது..! அதுல காசு அள்ளிரலாம்..!


வாசலிலேயே புத்தக விற்பனையும் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.. 864 பக்கங்கள் கொண்ட அழகான வடிவமைப்பில் உட்பக்கங்கள் அனைத்தும் நல்ல தரமான ஆர்ட் பேப்பரில், கலர் புகைப்படங்களுடன் புத்தகம் மிக அழகாக உள்ளது. 375 ரூபாய் என்பது நிச்சயம் கட்டுப்படியாகும் என்று நான் நினைத்தேன். ஆனால் நம்ம கருணாநிதிக்கு இதுவும் பொறுக்கவில்லை. என்ன செய்தார் என்பதை அவருடைய பேச்சைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் திரு.சிவந்தி ஆதித்தன் வரவேற்புறையாற்றினார். அதன் பின்னர் திரு.அவ்வை நடராசன், திரு.வா.செ.குழந்தைசாமி, மானமிகு வீரமணி போன்றவர்கள் வாழ்த்திப் பேசிய பின்பு கலைஞர் பேசினார்.

தினமலர் பத்திரிகைக்கு சுப.அறவாணன் நிரந்தரமான பேச்சாளர் என்பதைப் போல தினத்தந்திக்கு வா.செ.குழந்தைசாமி.. அவருடைய பேச்சில் நிறைய பொது அறிவு விஷயங்கள் வெளிப்பட்டன..

டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் அதே ஊரில் உள்ள பல்கலைக்கழகத்தில்தான் இருந்தாராம். கென்னடியின் மறைவையொட்டி விடுமுறை வேண்டாம் என்று சொல்லி அந்தப் பல்கலைக்கழக ஊழியர்கள் அடுத்தடுத்த நாட்களில் வேலையும் செய்தார்களாம். இதனை நம்ம ஊருடன் ஒப்பிட்டுப் பேசியது சுவையானதாக இருந்தது..

வீரமணி பேசும்போது தினத்தந்தியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தலையங்கம் பகுதியை புகழ்ந்து தள்ளினார். அன்றைய தலையங்கத்தில் வந்திருக்கும் செய்தியை அப்படியே படித்தும் காட்டி காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக இடித்தும் காட்டினார். அவர் இடிப்பதை உணர்ந்து கட்சிக்காரர்கள் பலத்த கரவொலி எழுப்ப காங்கிரஸ் பேரியக்கத்தின் உண்மைத் தொண்டர்களான திருநாவுக்கரசரும், கோபண்ணாவும் அமைதியே திருவுருவாக கேட்டுக் கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி.

தினத்தந்தி திட்டமிட்டுத்தான் அன்றைய தினத்தின் தலையங்கத்தை அப்படி எழுதியிருக்கிறது என்பது அத்தனை பத்திரிகையாளர்களாலும் யூகிக்க முடிந்த ஒன்றுதான். காங்கிரஸ் தி.மு.க.வைவிட்டு விலகினால் இதனால் பாதிப்பு அவர்களுக்குத்தான். நாட்டுக்கும் கெடுதல்.. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லியிருந்தது அந்தத் தலையங்கம்..!

கலைஞரும் தன் பேச்சில் இதனைக் குறிப்பிட்டார். மேலும் சிற்சில இடங்களில் சொற்விளையாட்டே நடத்தினார். இந்த விஷயத்தில் தமிழ் என்னமாய் இந்த மனிதரின் நாவில் விளையாடுகிறது..? கூடவே அவர் இந்தப் புத்தகத்தி்ன் விலையைப் பற்றிச் சொன்னதுதான் எனக்குக் கடுப்பைக் கிளப்பிவிட்டது. அது இந்தப் பதிவின் இறுதியில்..

கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சுக்களை சிறிதளவு போடலாம் என்று நினைத்து வேகம், வேகமாக குறிப்பெடுத்திருந்தேன் முட்டாள்தனமாக..! வீட்டுக்கு வந்து யோசித்த பின்புதான் நாளைக்கு தினத்தந்தியிலேயே விளக்கமாக வருமே என்ற அறிவே வந்தது. நமக்குத்தான் எப்பவுமே அறிவு கொஞ்சம் லேட்டாத்தானே வேலை செய்யும்..

அதனால் மறுநாள் தினத்தந்தியில் வந்திருந்த பேச்சுக்களை அப்படியே இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன். படிக்க நேரமிருப்பவர்கள் படியுங்கள்.. மிகச் சுவையாகத்தான் பேசியிருக்கிறார்கள்..

விழாவில், `தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வரவேற்று பேசியது :-

இரண்டாம் உலகப் போரும், இந்திய சுதந்திரப் போராட்டமும் உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்-அதாவது 1942-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் - `தினத்தந்தி' தொடங்கப்பட்டது. அது முதல் இன்றுவரை, வரலாற்று முக்கியம் வாய்ந்த அனைத்துச் செய்திகளையும் `தினத்தந்தி' பதிவு செய்துள்ளது.

கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றை மட்டும் நூல்களிலும், பாடப்புத்தகங்களிலும் சுருக்கமாக அறிய முடிகிறதே தவிர, பெரும்பாலான வரலாற்று நிகழ்ச்சிகளை பொது மக்கள் விரிவாக அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.

இக்குறையைப் போக்க, `தினத்தந்தி' தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை நடந்துள்ள முக்கிய நிகழச்சிகளைத் தொகுத்து வழங்கத் தீர்மானித்து, "வரலாற்றுச் சுவடுகள்" என்ற தலைப்பில் `தினத்தந்தி`யில் நெடுந்தொடராக வெளியிட்டோம். இந்தத் தொடர் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

"வரலாற்றுச் சுவடுகள்'' தொடரைப் புத்தகமாக வெளியிட்டால் அனைவரும் படிக்கவும், பாதுகாக்கவும் வசதியாக இருக்கும் என்று வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களின் விருப்பத்திற்கிணங்க, புத்தகமாக வெளியிடுகிறோம்.

இந்த நூலுக்கு, முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அணிந்துரை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதினோம். எங்கள் வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக் கொண்ட முதல்வர், ஏராளமான பணிகளுக்கு இடையே, நூல் முழுவதையும் படித்துப் பார்த்து புகழாரம் சூட்டியுள்ளார். அவர் அளித்துள்ள அணிந்துரை, இந்த நூலுக்கு மணிமகுடமாகத் திகழ்கிறது.

"இது ஓர் அரிய ஆவணம். அரிய கருவூலம்'' என்று பாராட்டியுள்ள முதல்-அமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

இந்த நூலின் முதல் பிரதியைப் பெறுவதற்கு வருகை தந்திருக்கும் டாக்டர் வா.செ.குழந்தைசாமி மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஏழு பல்கலைக்கழகங்களில் `டாக்டர்' பட்டம் பெற்றவர். என் தந்தையார் பெயரால் `தினத்தந்தி' வழங்கி வரும் `மூத்த தமிழறிஞர்' விருதை இந்த ஆண்டு பெற்றவர். அவர் இந்த நூலின் முதல் பிரதியைப் பெறுவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துரை வழங்க வருகை தந்துள்ள முனைவர் அவ்வை நடராசன், தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றி ஆராய்ச்சிகள் செய்து, பல அரிய நூல்களை எழுதி புகழ் பெற்றவர். தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து, தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர். வாழ்த்துரை வழங்க அவர் இங்கு வந்திருப்பது குறித்துப் பெருமை அடைகிறோம்.

திராவிடர் கழகத்தின் தலைவராகவும், பெரியாரால் தொடங்கப்பட்ட `விடுதலை'  நாளிதழின் ஆசிரியராகவும் விளங்கும் கி.வீரமணி, `தினத்தந்தி'யுடன் நீண்ட காலத் தொடர்புடையவர். அவர் இந்த நூலை பாராட்டுவது, தந்தை பெரியார் அவர்களே இங்கு வந்து பாராட்டுவது போன்றது என்று எண்ணி மகிழ்கிறேன்.

தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள `தினத்தந்தி', தமிழ்ப் பெருமக்களுக்கு இந்த நூலை வழங்குவதில் பெருமை அடைகிறது. தமிழ் மக்களின் பேராதரவால், இந்த நூல் காலத்தை வென்று வாழும் என்ற நம்பிக்கையுடன், இந்த இனிய விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன்.

இவ்வாறு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் பேசினார்.

"வரலாற்றுச் சுவடுகள்'' புத்தகத்தில் அடங்கியுள்ள வரலாற்றுத் தொகுப்பினை விளக்கி, `தினத்தந்தி' பொது மேலாளர் டி.ஆர்.பீம்சிங் பேசினார் :-

தலைசிறந்த பத்திரிகையாளர், தமிழ் பத்திரிகையின் முன்னோடி என்றெல்லாம் நாடு போற்றும் தமிழர் தந்தை ஆதித்தனார் பேச்சு வழக்கு தமிழை கொச்சை நீக்கி எழுத வேண்டும் என்கிற புதிய சூத்திரத்தை உருவாக்கி வாசகர்கள் எளிதாக படித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எளிய தமிழை பயன்படுத்தினார். அண்மைக் காலங்களில், தமிழ் பத்திரிகைகள் எல்லாம், `தினத்தந்தி'யை பின்பற்றி எளிய தமிழில் எழுதி வருவதே தினத்தந்திக்கு மாபெரும் வெற்றியாகும்.

`தினத்தந்தி' பத்திரிகையில் உலகப் போர் விபரங்களை தமிழர் தந்தை ஆதித்தனார் எழுதினார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தாலும், தமிழ்ச் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முதல் உலகப் போர் பற்றியும் எழுதினார். 1942-ம் ஆண்டில் இந்தியாவை இங்கிலாந்து ஆண்டு கொண்டிருந்தது. இந்தியா வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று அப்போது சுதந்திர போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா விடுதலை அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவியேற்ற பண்டித நேருவின் உரையை, ஆதித்தனார் மொழி பெயர்த்து செய்தியாக வெளியிட்டார். "இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் அடைகிறது. உலகமே உறங்கும் இந்த வேளையில் இந்தியா உயிர்த்தெழுந்து சுதந்திர நாடாக நிற்கப் போகிறது'' என்கிற செய்திதான் அது.

1947-க்குப் பின்னர், இந்தியாவில் ஜனநாயக முறை வந்தது. அதன் பின்னர் நடந்த செய்திகள், உடனுக்குடன் `தினத்தந்தி'யில் பிரசுரம் ஆனது. இவையெல்லாம் அந்தந்த காலத்தில் செய்திகள், ஆனால் இப்போது அவை வரலாறு. ஹிட்லர் மரணம் அடைந்தது - 2-ம் உலகப்போர் முடிவுக்கு வந்தது அப்போதைய செய்தி. ஆனால் இன்று வரலாறு. 1969-ல் சந்திரனில் மனிதன் காலடி வைத்தது அப்போதைய செய்தி. ஆனால் இன்று வரலாறு.

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலம் முக்கிய பங்கு வகித்த பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்கு "பெரியார்'' என்ற பட்டம் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் கொடுக்கப்பட்டதும், பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வர் ஆனதும், பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அன்று செய்தி. ஆனால் இன்று வரலாறு.

டால்மியாபுரம் ரெயில் நிலையத்தில் கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்ய தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கலைஞர் மறியல் செய்ததும், ரெயில் வருவது தெரிந்து பயந்து எழுந்து ஓடி விடுவார்கள் என்று காவல்துறை எதிர்பார்த்து ஏமாந்ததும், நிற்காமல் வந்த ரெயில் சில அடிகள் தூரத்தில் `கீரீச்' என்ற ஓசையுடன் நிறுத்தப்பட்டதும், அப்போதும் உறுதியோடும் துணிச்சலோடும் படுத்திருந்த கலைஞரை காவல்துறை கைது செய்ததும் 57 ஆண்டுகளுக்கு முன்னால் செய்தி, ஆனால் இன்று வரலாறு. (ங்கொய்யால.. ஜால்ராவுக்கு ஒரு அளவு இல்லியா..?)

கடந்த 70 ஆண்டுகளாக வெளிவந்த முக்கிய வரலாற்று செய்திகளை தொகுத்து சமீப காலங்களில் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டோம். இதற்கு ஆயிரக்கணக்கான வாசகர்களிடமிருந்து பாராட்டுகள் வந்தன. ஆனந்தவிகடன் ``வாரப் பத்திரிகைகள் தவறவிட்ட பகுதி அது. தினத்தந்தி அதை பயன்படுத்திக் கொண்டது'' என்று எழுதியது.

தினத்தந்தி இயக்குனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், "இந்த தொடர் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டால், இளைய தலைமுறைக்கு பயன் உள்ளதாக இருக்கும். மேலும் அனைவருக்குமே, 1942-ல் இருந்து இன்றுவரை தினத்தந்தியை ஒரு சேரப் படிக்கும் உணர்வும் உண்டாகும் என்று கருதினார். அந்த முயற்சியின் பலன்தான் இந்த ``வரலாற்று சுவடுகள்'' என்கிற தினத்தந்தி வெளியீடு.

இவ்வாறு டி.ஆர்.பீம்சிங் கூறினார்.

முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் பேச்சு :
 

"சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் இந்த அளவுக்கு திரளான கூட்டத்தை பட்டம் பெறுகிற நாளிலேகூட நான் பார்த்ததில்லை. எதிரே மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலை உலகத்தினர், இலக்கிய சுடர்கள், இளைஞர்கள் என்று எழுச்சியான கூட்டம் உள்ளது.

எழுச்சியான கூட்டம் என்றாலே அது `தினத்தந்தி'யின் கூட்டமாகத்தான் இருக்கும். தினத்தந்திக்கு எப்போதுமே பெருந்திரளான கூட்டம் உண்டு என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் `தினத்தந்தி'யை தொடங்கிய நாள் முதல் கொண்டு இன்றுவரை எளிய தமிழில் வெளிவந்து கொண்டு இருக்கிறது என்று இங்கே குறிப்பிட்டார்கள். அது எளிமையான தமிழ் மட்டுமல்ல. அது பழகு தமிழ்நடையில் இருக்கிறது.

`தினத்தந்தி' எளிமையான தமிழில் வலிமையான கருத்துக்களை எடுத்துச்சொல்லி வருகிறது. பாமரர்களும் படித்து மகிழத்தக்க பழகு தமிழில் `தினத்தந்தி'யை நடத்தி வெற்றி வாகை சூடியவர் சி.பா.ஆதித்தனார். அவரது வழியில் அவருடைய மகன் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கடமை உணர்ச்சியோடு தினத்தந்தியை நடத்தி வருகிறார்.

`தினந்தந்தி'யை அந்த நாள் முதல் இந்த நாள்வரை வரி விடாமல் படித்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவர் இந்த நூலை வெளியிடுவது மகிழ்ச்சியாகும்.

"வரலாற்றுச் சுவடுகள்'' புத்தகம், இந்திய விடுதலைப் போர், உலகப் போர், இந்திய அரசியல், தமிழக அரசியல், தமிழக நிகழ்வுகள் உள்பட 308 கட்டுரைகள், 800 பக்கங்கள் கொண்டு விளங்குகிறது. அதுமட்டுமல்ல அழகிய தாளில் அச்சிடப்பட்டுள்ளது. கவர்ச்சியான படங்களை கொண்டுள்ளது. வரைந்த படங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த படங்கள் பாடங்களாக நாம் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. `தினத்தந்தி'யின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் ஒவ்வொருவர் இல்லந்தோறும் இருக்க வேண்டியது ஆகும்.

`தோள் கண்டார் தோளே கண்டார்' என்று சொல்வது உண்டு இந்த நூலை கண்டார் நூலையே கண்டார். தாள் கண்டார் தாளே கண்டார் என்பதுபோல வரலாற்றுச் சுவடுகளில் உள்ள படங்களை கண்டார் படங்களையே கண்டார் என்று சொல்லும் வகையில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த நண்பர் சி.பா.ஆதித்தனார் இங்கிலாந்தில் டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகை எப்படி வருகிறது என்பதை பார்த்துதான் `தினத்தந்தி'யை தொடங்கினார். கலகம் ஊட்டும் கார்ட்டூன் படங்களை `தினந்தந்தி' தராமல் கருத்துள்ள கார்ட்டூன் படங்களை தருகிறது.

சோழ மன்னன் ராஜராஜன், தஞ்சை பெரிய கோவிலை கட்ட 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 17 ஆண்டா என்று வியந்தது உலகு. ஆனால் 24 வருடங்கள் முயன்று தென்குமரியில் வானுயர்ந்த திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நிறுவினார். சிலை அமைக்கப்பட்ட முழு வரலாற்றை `தினத்தந்தி' சிறப்பாக தொகுத்து தந்துள்ளது. அந்த திருவள்ளுவர் சிலையால் கலங்கரை விளக்கத்திற்கு கேடு வரும் என்ற நிலை வந்தது. ஆனால் அந்த நிலை முதல்-அமைச்சர் கருணாநிதியால் மாற்றப்பட்டுள்ளது.

`தினத்தந்தி'யின் "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற ஏடு தமிழகத்திற்கு ஒரு வரலாற்று ஏடு, கால ஏ டு, பொன் ஏடு, வைர ஏடு. `தினத்தந்தி'க்கே உரிய வைர வரிகளால் "வரலாற்று சுவடுகள்'' என்ற நூல் வனப்பாக இழைக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனாரையும், இளையவர் பாலசுப்பிரமணிய ஆதித்தனையும் தமிழ்நாடு மகிழ்ச்சியோடு பாராட்டுகிறது.

இந்திய விடுதலை கால போராட்டத்தை ஒரு பளிங்கு போல வரலாற்றுச் சுவடுகள் தெளிவாக வெளியிட்டுள்ளது. வரலாற்றுச் சுவட்டில் உள்ளத்தை தொடாத பகுதிகளே இல்லை.

"வரலாற்றுச் சுவடுகள்'' மெருகுடனும், பொலிவுடனும், ஆற்றலுடனும் திகழ்கிறது. இந்த நூலை வெளியிட சிறப்பானவர், தகுந்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதிதான்...''

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வா.செ.குழந்தைசாமியின் பேச்சு :

`தினத்தந்தி' நாளிதழ் கொண்டு வந்திருக்கும் "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு முன்பு, நான் தனிப்பட்ட முறையில் `தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

விளையாட்டு என்பது உலகில் இன்று முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு துறை. அதிலே தலைமைப் பொறுப்பு வகிக்கும் தமிழர்கள் மிகக் குறைவானவர்கள். டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் 10 ஆண்டுகள் தலைவராக இருந்தவர். இப்போது ஆயுட்காலத் தலைவர்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் துணைத் தலைவராக எட்டு ஆண்டுகள் இருந்தவர். அதன் நிதிக் குழுவின் தலைவராக இருந்தவர். இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர். சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் நிதிக் குழுத் தலைவர். இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் என்று வரும்போது நிதிக் குழுவின் முதல் தலைவராக அவர்தான் இருந்தார். சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் நிதிக் குழுத் தலைவர் என்று வரும்போது இப்போதும் அவர்தான் இருக்கிறார். நிதிக் குழு என்று வரும்பொழுதெல்லாம் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களை தலைவராக நியமிப்பது அவர் கைராசி உள்ளவர் என்பது மட்டுமல்ல, கை சுத்தம் என்பதாலும்தான் அந்தப் பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.

இதை பாராட்டும் வகையில், இந்த மாதம் 13-ந் தேதி சீனாவில், ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த அதே நகரில், அவருக்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சார்பில், `ஓ.சி.ஏ.அவார்டு ஆப் மெரிட்' என்ற உயரிய விருது வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து இந்த விருதை பெறுவது டாக்டர் சிவந்தி ஆதித்தன்தான் என்பதில் பெருமையோடு தலைவர் அவர்கள் சார்பிலும், அவை பெருமக்கள் சார்பிலும், என் சார்பிலும் அவரைப் பாராட்டுவதில் நான் மகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்கிறேன்.

இரண்டாவதாக "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற தலைப்பில் வந்திருக்கும் இந்த நூல், `தினத்தந்தி'யில் தொடர்ந்து வந்த பகுதியின் தொகுப்புகள் ஆகும். `தினத்தந்தி'யைப் பற்றியும் நான் ஒரு கருத்து சொல்ல வேண்டும்.

அது சாதாரணமான தினத்தாள் அல்ல என்பது மட்டுமல்ல `தினத்தந்தி'யின் பெருமை. உலக நாகரீகத்தை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு யுகமும் ஒரு கருவியால் உருவானது. எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அடையாளம் தெரியாத மேதையால் உருவாக்கப்பட்ட மிக எளிய கருவிதான் வேளாண்மை யுகத்தை உருவாக்கியது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீராவி எந்திரம்தான் தொழில் யுகத்தை உருவாக்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பொறிதான் கல்வி யுகத்தை உருவாக்கியது.

15-ம் நூற்றாண்டிலே ஐரோப்பாவில் அச்சு எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு பிறகு அங்கு அச்சு எந்திரத்தின் மூலம் மக்களிடம் நூல்களும், பத்திரிகைகளும் விழிப்புணர்வை கொண்டு வந்தன.

அதைப் போலவே படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி, பத்திரிகை செய்தி பாமரர்களையும் எட்டும் நிலையை உருவாக்கி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதனையைச் செய்த மாபெரும் கருவி `தினத்தந்தி' என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

`தினத்தந்தி'யில் வந்திருக்கும் செய்திகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறத்தக்கவை. பல்கலைக் கழகங்கள் பயன்படுத்தக்கூடியவை. இந்த நேரத்தில் மூன்று சான்றுகளை மட்டும் கூற விரும்புகிறேன்.

மகாத்மா காந்தியை 1948-ல் சுட்டுக் கொன்றார்கள். அதைக் குறிப்பிட்டுள்ள வரலாற்று சுவடு, அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஐக்கிய நாடுகள் சபை நடந்து கொண்டிருந்தது. இந்த செய்தியைப் பார்த்தவுடன் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஐக்கிய நாடுகள் சபை ஒத்திவைக்கப்பட்டது என்பது முக்கியமல்ல. ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களாக இருந்த எல்லா நாடுகளிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

நாம் அறிந்த அளவில், ஒரு தனி மனிதனுக்கு எந்த நாட்டிலும், எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கு உலக நாடுகள் அனைத்தும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டது அன்றும் காந்திக்குத்தான், அதற்கு பிறகு யாருக்கும் அப்படிப்பட்ட ஒரு பெருமையைச் செய்ததில்லை.

இரண்டாவதாக வரலாற்றுச் சுவட்டில் இடம் பெற்றிருக்கும் ஒரு செய்தி என்னவென்றால், விண்வெளி பயணம் ஆகும். விண்வெளி வரலாற்றில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் மாபெரும் போட்டி உண்டு. அதில் ரஷ்யா முந்தியது. 1957-ல் பூமியை வலம் வரும் ஸ்புட்னிக் என்ற விண்கலம் பூமியை வலம் வந்தது. 1961-ல் யூரி காகரின் என்ற ரஷ்ய இளைஞர் பூமியைச் சுற்றி வந்து பத்திரமாகப் பூமிக்கு திரும்பினார்.

அதே 1961-ல் அமெரிக்கா ஷெப்பர்டு என்பவரை பூமியை வலம் வர அனுப்பி வைத்தது. அப்போது பதவியில் இருந்த கென்னடி சொன்னார், 1970-க்குள் ஒரு அமெரிக்கன் சந்திரனில் கால் வைப்பான் என்று சபதம் செய்தார். அது ஏதோ வீம்புக்கு சொன்னது போலப்பட்டது. ஏனென்றால், பூமியில் இருந்து 3-1/2 லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறது சந்திரன். அதைச் சுற்றி வருவதற்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும்.

அந்த விண்கலத்தில் இருந்து ஒருவர் சந்திரனைச் சுற்றி வர வேண்டும். அந்த கலத்தில் இருந்து சந்திரனில் ஒருவர் இறங்க வேண்டும். இதை 1970-க்குள் அமெரிக்கா செய்து முடிக்கும் என்று கென்னடி கூறினார். அப்போது அது வீம்புபோல பட்டாலும் அதற்கு ஓராண்டுக்கு முன்பே 1969-ல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்வைத்தார்.

1961-ல் கென்னடி இந்த வாக்குறுதியை கொடுத்தார். அவர் இல்லாவிட்டாலும், அந்த நாடு அந்த வாக்குறுதியை நிறைவேற்றியது. அதாவது சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற ஒரு குறிக்கோள் இருக்கிறது. அதை கென்னடி இருந்து செய்யாவிட்டாலும் அந்த நாடு செய்தது.

ஆனால், அந்த குறிக்கோளுக்கு ஆசிரியராக, தலைவராக விளங்கும் நமது தலைவர் முயற்சியில் இருந்து ஒரு சான்று கூற விரும்புகிறேன். திருவள்ளுவர் சிலையை நான் நிறுவுவேன் என்று 1975-ல் தலைவர் கலைஞர் சொன்னார். அதற்கு பிறகு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் ஆளவிடப்படவில்லை. மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது.

1996-ல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தபோது அதை நினைவில் வைத்து, 1975-ல் தமிழ் மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2000-ம் ஆண்டிலே அவர் நிறைவேற்றினார். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வாக்குறுதியின் உருவமாக நடமாடும் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது டாக்டர் கலைஞர்தான் என்று கூறினால் அதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.

`தினத்தந்தி'யின் வரலாற்று சுவடுகள், பள்ளியிலும், பல்கலைக் கழகத்திலும் பயன்படத்தக்கது. ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது. எப்படிப்பட்ட நூல் மக்களுக்கு தேவையோ, எந்த நூல் இல்லையோ அப்படிப்பட்ட ஒரு நூலை, `தினத்தந்தி' "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற பெயரில் நமக்கு கொடுத்திருக்கிறது.

கி.வீரமணி பேச்சு :


இங்கே வரவேற்புரையாற்றிய போது பெருமதிப்புக்குரிய சிவந்தி அவர்கள், `வீரமணியை ஏன் அழைத்திருக்கிறோம் என்றால், தந்தை பெரியாருக்கும், வீரமணிக்கும், தினத்தந்திக்கும் மிக நீண்டகால தொடர்பு உண்டு. இவர் வந்து வாழ்த்தினால் பெரியாரே வந்து வாழ்த்தியதாக ஆகும் என்ற மகிழ்ச்சியிலேதான் அழைத்திருக்கிறோம்' என்று என்னை அழைத்ததை நியாயப்படுத்தினார்கள். மிக்க நன்றி.

இது ஒரு தலைமுறை உறவல்ல. நான்காவது தலைமுறை உறவு. இதுவும் பதிய வேண்டிய வரலாற்றுச் சுவடுதான். பத்திரிகை உலகில் அமைதியான அறிவுப் புரட்சியை செய்தவர் ஆதித்தனார். அவரது மாமனார் மணச்சை ஓ.ராமசாமி நாடார் மலேசியா நாட்டில் இருந்தார்.

1929-ம் ஆண்டு தந்தை பெரியார் மலேசியாவுக்கு போனபோது, ஒரு புது ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் பெரியார் வர வேண்டும் என்று ஏற்பாடு செய்த பெருமை ஓ.ராமசாமி நாடாரையே சாரும்.

அதுமட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகத்துக்கும், இந்த குடும்பத்துக்கும் எவ்வளவு உறவு உண்டு, எவ்வளவு தொண்டு மனப்பான்மை உண்டு என்பதற்கு அடையாளம் அவர். சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தச் சங்கத்துக்கு அடையாளமாக மிகப் பெரிய கட்டிடத்தை அளித்த பெருமை மணச்சை ஓ.ராமசாமி நாடாரை சாரும்.

அந்த பாரம்பரியத்தில் இருந்து ஆதித்தனார், அதற்கு அடுத்து சிவந்தியார், அதற்கு அடுத்து பாலசுப்பிரமணியனார் என்று அவர்களுடன் எங்களுடைய திராவிட இயக்கத்து உறவு இருக்கிறதே அது 4 தலைமுறையை கண்ட உறவு.

எனவே கலைஞர்தான் இந்த புத்தகத்தை வெளியிட சரியானவர், உரிமை பெற்றவர் என்ற அளவிலே அவரை அழைத்துள்ளார்கள். 1958-ல் வாலாஜாபாத் நகராட்சியிலே நகர்மன்ற தலைவராக இருந்த சி.ஆர்.வரதராஜன், பெரியாரை அழைத்து, ஆதித்தனார் வாழ்ந்தபோதே அவருடைய படத்தை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தை திறந்து வைத்த பெரியார் கூறிய வார்த்தைகளை இந்த விழாவுக்கு பெரியார் கூறும் வாழ்த்தாகவே பதிவு செய்கிறேன்.

அந்த விழாவில் பெரியார், `எனது நண்பரும், எனது கொள்கையில் கூட்டுப் பணி செய்பவருமான ஆதித்தனாரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி' என்று பேச்சை தொடங்கினார். அந்த சொல் எவ்வளவு ஆழமுடையது. ஏன் இவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட பொருத்தம் இருக்க முடியாது.

தினத்தந்தி மூலம் ஆதித்தனார் செய்த தமிழ்த் தொண்டும், தமிழ் சமுதாயத்துக்கு செய்த தொண்டறமும், பெரியாரின் கொள்கையில் செய்த கூட்டுப் பணியாகும். எனவே அந்த கூட்டுப் பணிக்கு உரிமையுள்ளவர்களாக வந்திருக்கிறோம். நாங்கள் விருந்தினராக வரவில்லை. நாங்கள் பக்கத்து வீட்டுகாரர்கள். அது மட்டுமல்ல பாசத்துக்கு உரியவர்களும்கூட. சில பக்கத்து வீட்டுக்கு சண்டை உண்டு. ஆனால் இங்கு நிரந்தர உறவு உண்டு. அதற்கு எந்த விதமான பாகுபாடும் கிடையாது.

மீண்டும் மனுதர்மம் இந்த நாட்டில் மறுபிறவி எடுக்க விடமாட்டோம் என்று முதல்-அமைச்சர் தெளிவாக கூறினார். அந்த தத்துவம், தாற்பரியம் இந்த விழாவிலும் இருக்கிறது. 7.9.61 அன்று அறந்தாங்கியில் ஆதித்தனாரை பெரியார் பாராட்டி பேசியபோது, `ஒரு லட்சம் விற்பனையாகும் தினத்தந்தி பத்திரிகை என்ற சிறந்த ஆயுதம் ஆதித்தனாரிடம் உள்ளது' என்று குறிப்பிட்டார்.

49 ஆண்டுகளுக்கு முன்பு 1961-ம் ஆண்டில் ஒரு தமிழர் ஏடு ஒரு லட்சம் விற்பனை என்றால், இந்த சாதனை தினத்தந்திக்கு மட்டும்தான் உரியது, வேறு எவருக்கும் கிடையாது.

இன்று தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் என்பது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆற்றல் இல்லை, அறிவு இல்லை, தகுதி இல்லை, திறமை இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டம் நாணி வெட்கப்படக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சரித்திர சாதனையை இந்த ஏடு நடத்தி இருக்கிறது. இந்த ஏட்டின் தொகுப்புகள் இப்போது வரலாற்றுச் சுவடுகள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

மற்றவர்கள் மறைத்த செய்தியை தினத்தந்தி மறைக்காமல் தந்துள்ளது. அதுதான் இதன் தனிச்சிறப்பு, தனித்தன்மை. காந்தியார் வடபுலத்தில் இருந்து வரும்போது, ஆச்சாரியார் ஏதேதையோ அவரிடம் சொல்கிறார். அவர் திரும்பும்போது, `தமிழகத்தில் வகுப்புவாத கோஷ்டி இருக்கிறது' என்று கூறினார்.

உடனே சுயமரியாதை உருவமான, காந்தியின் தலைசிறந்த சீடரான பச்சைத் தமிழர் காமராஜர், தன்மானத்தை பெரிதாகக் கருதி நின்ற காரணத்தால், `காந்தி அவர்களே எங்களை நீங்கள் புண்படுத்திவிட்டீர்கள். இதோ எனது ராஜினாமா' என்று பதவி விலகினார் காமராஜர். காந்தியாரை எதிர்த்த அந்த வரலாறு, வரலாற்றுச் சுவடில் பதிவாகியுள்ளது.

அதன் தொடர்ச்சிதான் இன்றைய இனப் போராட்டம். அன்று காமராஜர், அந்த இடத்தில் அண்ணாவுக்குப் பிறகு கலைஞர். வானொலியில் அறிஞர் அண்ணா பேசும்போது, பத்திரிகை தொழில் சொந்த தொழிலா? அல்லது பொது சேவையா? என்று கேட்டார்கள். ம.பொ.சி.க்கும், அண்ணாவுக்கும் இடையே நடந்த உரையாடல் அது. சொந்தத் தொழிலாக இருந்தாலும் அது பொது சேவையாக இருக்க வேண்டும், மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று இருவருமே சொன்னார்கள். அதை இன்று ஆழமாக தினத்தந்தி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

கையேடாக தொடக்கி துண்டறிக்கையாக எடுத்து பல தியாகங்களை செய்து இன்று முரசொலியை வளர்த்து இருக்கிறார்கள். அதுபோல்தான் விடுதலையின் வரலாறும். நாங்களெல்லாம் கொள்கை ஏடுகள் என்பதால் பல எதிர் நீச்சல்களை போட்டோம். கொள்கையையும் ஓரளவுக்கு காத்துக் கொண்டு, மக்களின் விருப்பங்களையும் தெரிந்து கொண்டு, இரண்டையும் இணைத்து வெற்றி பெற்றது தினத்தந்தி ஒன்றுதான். ஆதித்தனாரின் பாரம்பரிய வெற்றிகளிலே ஈடு இணையற்ற மிகப் பெரிய வெற்றி.

தினத்தந்தியின் நாளைய வரலாற்றுச் சுவடுகளுக்கு இன்று அடித்தளமாக இருப்பது என்னவென்றால், சமீபத்தில் வரும் அதன் தலையங்கங்கள்தான். அனைத்தும் அற்புதமான தலையங்கங்கள். அவை முரசொலியின் தலையங்கமா அல்லது விடுதலையின் தலையங்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

ஏனென்றால், நியாயம் என்றால் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக அவை எழுதப்படுகின்றன. ஒரு பத்திரிகை தனது கருத்தை சொல்லக் கூடிய பகுதி அது. இன்று பல உயர்சாதி ஏடுகள் தங்கள் தலையங்கத்தில் விஷத்தை கொட்டுகின்றன.

இன்று (30-ந் தேதி) வந்த தலையங்கத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலைஞர் தனது வியூகத்தை எப்படி வகுத்து இருக்கிறார் என்று மக்களுக்கு அறிவூட்டும் தலையங்கம் அது. `ஆட்டத்தை தொடங்கிவிட்டார்' என்ற அற்புதமான தலைப்பின் கீழ் வரும் தலையங்கம் அது. எதை ஆழமாக கூற வேண்டுமோ, அதை சம்மட்டி அடியாக அடித்தும், சொடுக்குகள் போலவும் கொடுத்து இருக்கிறார்கள். (அந்த தலையங்கத்தின் பெரும்பகுதியை படித்துக் காட்டினார்).

`நவம்பரிலேயே ஆளும் தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன. தேர்தல் விளையாட்டில் 2 அணி கேப்டன்களும் தயாராகிவிட்டனர்' என்று எழுதப்பட்டு உள்ளது. இதில் நடுநிலை தவறாமல் எழுதும்போது சொல்ல வேண்டிய கருத்தை எடுத்துக் காட்ட தயங்கவில்லை. அதில் திருவாசகம் என்ற வார்த்தையை நல்ல சொல்லாட்சியுடன் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில்தான் தலைவர் ஒரு கருத்தும், மற்றவர்கள் ஒரு கருத்தும் சொல்ல முடியும் என்ற அப்பட்டமான உண்மையை அதில் கூறியுள்ளனர்.

உண்மையை சரியான நேரத்தில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு இந்த பத்திரிகை பின்வாங்காது என்ற உண்மைக்காக தலை வணங்குகிறோம். ஆயிரம் பாராட்டுகள். வரலாற்றுச் சுவடுகள் பெருகட்டும்.

கருணாநிதியின் பேச்சு :-


தினத்தந்தி நாளிதழின் "வரலாற்றுச் சுவடுகள்'' எனும் மிகப்பெரிய இந்த நூலை வெளியிடுகின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன் - பெருமையடைகிறேன்.

தினத்தந்தி - மேட்டுக்குடியிலே வாழ்கின்றவர்களுடைய பத்திரிகை இல்லை. அது - காடுமேடுகளில் தங்களுடைய வாழ்க்கையை நடத்துகின்ற சாதாரண ஏழையெளிய மக்களுடைய பத்திரிகை - சாமானிய மக்களுடைய பத்திரிகை. அந்தப் பத்திரிகை சார்பில் "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற தலைப்போடு அரிய நூல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள்.

நான் இந்த விழாவில் இந்த நூலை வெளியிடுவேன் என்று விளம்பரப்படுத்தியிருந்தாலும்கூட, உண்மையிலேயே இதை வெளியிட்டவர் சிவந்தி ஆதித்தன்தான். கட்டுரைகளைத் தயாரித்து, தொகுத்து, அச்சியற்றி இன்றைக்கு மக்கள் முன்னால் கொண்டுவந்து, அதைப் பரப்புகின்ற இந்தப் பணியைச் செய்திருப்பவர், என்னுடைய அருமை நண்பர் சிவந்தி ஆதித்தன்.

ஆனால், வெளியிடுவதற்கு ஒரு அடையாளம் வேண்டும். அந்த அடையாளமாக என்னை ஆக்கி, அதை அவர் வெளியிடுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உணர்வின் அடிப்படையில் - நான் வெளியிடுவதும் ஒன்றுதான்; அவர் வெளியிடுவதும் ஒன்றுதான். அதே உணர்வோடு ஒரு சில வார்த்தைகளை உங்களுக்கு இந்த விழாவிலே வழங்க விரும்புகிறேன்.

நான் நீண்ட நேரம் பேச இயலாது. காரணம், அதிக நேரம் பேசக் கூடாது என்று மருத்துவர்கள் எனக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். குரல் அந்த அளவிற்கு ஒத்துழைப்பதும் இல்லை; ஒத்துழைத்தாலும் நான் மருத்துவர்களுடைய அறிவுரையையும் மீறி - வேலூர் போன்ற இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசி, இருந்த தொண்டையையும் கெடுத்துக் கொண்டிருக்கிறேன். "தொண்டை'' கெடுத்துக் கொள்ளவில்லை; "தொண்டையை''த்தான் கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மிக அருமையான விழா இது. இந்த விழாவில் தினத்தந்தியினுடைய வரலாற்றுச் சுருக்கத்தை சிவந்தி ஆதித்தன் அவர்கள் தன்னுடைய வரவேற்புரையிலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்; அவ்வை நடராசன் - அவருக்கே உரிய தமிழ் ஆற்றலோடு தினத்தந்தி நாளிதழ் எப்படியெல்லாம் மக்களிடத்திலே இடம் பெற்றிருக்கிறது - அவர்களுடைய மனதிலே பதிந்திருக்கிறது என்பதை இங்கே எடுத்துச் சொன்னார்; முன்னாள் துணைவேந்தர் - தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி பல வரலாற்றுச் சான்றுகள், குறிப்புகள், பல தலைவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரம் - இவற்றையெல்லாம் கோடிட்டுக்காட்டி, அரியதோர் புதையல் போன்ற சொற்பொழிவை இங்கே ஆற்றியிருக்கின்றார். நம்முடைய தமிழர் தலைவர் - எனது இளவல் வீரமணி - "பெரியார் நோக்கில் தினத்தந்தி'' என்ற தலைப்பில் பேசவில்லையென்றாலும், அந்தத் தலைப்பில் பேசியது போலவே பல கருத்துக்களை இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்.

அதை அவர் கூறும்போது, மேடையிலே எனக்கு ஒரு குறிப்பு வந்தது. அந்தக் குறிப்பு - "1951, 1952, 1953, 1954 ஆண்டுவரை, சென்னையிலும், பிற ஊர்களிலும், பெரியார் பேசுகின்ற பொதுக் கூட்டங்கள் அனைத்திலும், தமிழர்கள் அனைவரும் தவறாமல் - தமிழன் நடத்தும் "தினத்தந்தி''யை வாங்கிப் படியுங்கள்'' என்று பிரச்சாரம் செய்துதான் பேசி முடிப்பார்''.

அதற்குக் காரணங்கள் கூறும்போது, "மெயில்'', "இந்தியன் எக்ஸ்பிரஸ்`` போன்ற ஆங்கில தினசரிகளும், "தினமணி'', "மித்திரன்'', "நவசக்தி'' போன்ற தமிழ் தினசரி பேப்பர்களும், "ஆனந்த விகடன்'', "கல்கி'' போன்ற வாரப் பத்திரிகைகளையும் "யாரோ'' நடத்துகிறார்கள் - பெரியார் சொன்ன வார்த்தையை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், விழா நடத்துகின்ற நண்பர் சிவந்தி ஆதித்தனுக்கு நான் சங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை.

"தினத்தந்தி பேப்பர் மட்டும்தான், தமிழன் நடத்துவது - தமிழர்கள் அனைவரும் தவறாமல் "தினத்தந்தி'' பேப்பரை வாங்கிப் படியுங்கள்'' என்று கூட்டம் முடியும் நேரத்தில் பெரியார் பேசி முடிப்பார் - இது குறிப்பு.

இதையே நான் பேசி முடிக்க வேண்டுமென்று அந்தத் தோழர் எனக்கு செய்தியாக அனுப்பியிருக்கிறார் என்று கருதுகிறேன். நான் இந்த மேடையிலே பேசாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் இனி எந்தப் பேப்பரைப் படிப்பது - எதைப் படிக்காமல் இருப்பது என்கின்ற அந்த முடிவை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களே அந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

தினத்தந்தி வெளியிட்டுள்ள இந்த "வரலாற்றுச் சுவடுகள்'' புத்தகம் - பெரிய புத்தகம். நான் உரிமையோடு சிவந்தி ஆதித்தனிடம் சொன்னேன். அதனுடைய விலை 375 ரூபாய் - எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் - 375 ரூபாய் என்று அதனுடைய விலையைப் போட்டிருக்கிறீர்களே, அது நிரம்ப அதிகமாகத் தெரிகிறதே? என்று சிவந்தியிடம் சொன்னேன். "நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொன்னார்.

நான் அவ்வளவு இரக்கமற்றவன் அல்ல; எனக்கும் தெரியும். ஒரு நூல் வெளியிடுவது என்றால், அச்சடிப்பது என்றால், விற்பனை செய்வது என்றால், அதற்காக உரிய கமிஷன் உள்பட எவ்வளவு அடக்கம் ஆகும் என்பது எனக்கும் தெரியும். முழு வடிவமாக ரூ.375-ஐ, ரூ.300 என்று கொடுத்தால் (கூட்டத்தினர் கைதட்டல்) - என்னை ஆதரிப்பதற்கு இவ்வளவு பேர் இருக்கிறீர்கள் - இங்கே கையொலி செய்தால் மாத்திரம் போதாது; இங்கிருந்து விடை பெற்றுத் திரும்பும் போதோ, அல்லது வீட்டிற்குச் செல்லும்போதோ, உங்களுடைய கையிலே இந்த "வரலாற்றுச் சுவடு'' இருக்க வேண்டும். அதை மறந்து விடக்கூடாது.

இதில் என்னென்ன குறிப்புகள் இருக்கின்றன என்று புரட்டிப் பார்த்தால், எனக்கேகூட இந்த தினத்தந்தி வரலாற்றுச் சுவடு புத்தகத்தைப் பார்த்த பிறகுதான், பல விஷயங்கள் - புதைந்து கிடக்கின்ற ரகசியங்கள் எல்லாம்கூட தெரிந்தன. யாருக்காவது தெரியுமா?

ஜின்னாவுக்கு 40-வது வயதில் ஒரு காதலி இருந்தாள்.. இது தினத்தந்தியில் இருக்கிறது. "காதலி'' தினத்தந்திக்கு இல்லை. ஜின்னாவுக்கு.. - அவருக்கு வயது 16 - 18 கூட ஆகவில்லை. 40 வயதுள்ள ஜின்னா அவரைக் காதலித்தார். ஆனால், ஜின்னாவினுடைய பெற்றோர் அதற்குச் சம்மதித்தும்கூட, அந்தப் பெண்ணின் பெற்றோர் பெரிய பிரபுக்களின் குடும்பத்தார் என்ற காரணத்தால், ஜின்னாவினுடைய குடும்பத்தைவிட செல்வாக்கு மிகுந்த குடும்பம் என்ற காரணத்தால், அந்தப் பெண்ணின் தந்தை அந்தக் காதல் திருமணத்தைத் தடுத்து விட்டார்.

காரணம் அப்போது 16 வயதுதானே ஆகிறது, 18 வயதாகட்டும் என்று சொல்லி விடுகிறார். இரண்டாண்டு காலம் அந்தப் பெண் காத்திருந்து - 18 வயதானதும் ஜின்னாவை அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டார். இந்தக் குறிப்பு இந்தச் சுவடிலே இடம் பெற்றுள்ளது.

அது மாத்திரமல்ல; அதற்குப் பிறகு ஜின்னா நீண்ட காலம் வாழ முடியவில்லை. ஒரு கொடிய நோய்க்குள்ளாகி பிறகு மறைந்து விடுகிறார். ஆனால் அவருடைய கனவாக இருந்த பாகிஸ்தான் அவர் வாழும்போதே உதயமாகி விடுகிறது. பாகிஸ்தான் பெற்ற பிறகுதான் அவர் மறைந்தார் என்று ஜின்னாவின் வரலாற்றுக் குறிப்பை இதிலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

1942-ம் ஆண்டு நம்முடைய பெருமதிப்புக்குரிய ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தி ஏட்டினைத் தொடங்குகிறார். அந்த ஏட்டின் சார்பாக பெரிய மலர் போல தயாரிக்கப்பட்ட இந்த அழகிய நூலை வெளியிடுகின்ற நானும், அதே 1942-ம் ஆண்டுதான் திருவாரூரில் "முரசொலி'' பத்திரிகையைத் தொடங்கினேன்.

முரசொலியும், தினத்தந்தியும் எப்படி ஒரே நேரத்தில் தொடங்கி வளர்ந்தன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் தினத்தந்திக்குக் கிடைத்த அளவிற்கு வளர்ச்சி முரசொலிக்கு இல்லை. நான் அதை ஒத்துக் கொள்கிறேன்.

எந்தவொரு பத்திரிகைகாரரும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தினத்தந்தியைவிட, "முரசொலி'' பத்திரிகை ஆயிரம் அதிகமாகப் போயிற்று என்றுதான் சொல்வான். நான் உண்மையைச் சொல்வதற்குக் காரணம், முரசொலி பத்திரிகை, திராவிட நாடு, விடுதலை, திராவிடன் போன்ற இந்தப் பத்திரிகைகள் எல்லாம் ஒரு கொள்கை அடிப்படையில், அந்தக் கொள்கைக்காக நடத்தப்படுகின்ற பத்திரிகைகளாகும்.

நான் சிறுவனாக இருந்த போது படித்த பத்திரிகை "பகுத்தறிவு'' - "குடியரசு'' போன்ற ஏடுகள். வார ஏடுகள். பல்லாயிரக்கணக்கில் வெளியிடப்பட்டன என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தும்கூட, பல்லாயிரக்கணக்கான பத்திரிகைகள் பகுத்தறிவோ - முரசொலியோ - விடுதலையோ - வெளியிடப்படாவிட்டாலும்கூட - பத்திரிகைகள் பல்லாயிரக்கணக்கில் பரவவில்லையே தவிர, பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பகுத்தறிவாளர்களாக ஆவதற்கு அந்த ஏடுகள் துணை நின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட காலக்கட்டத்திலேதான், 1942-ம் ஆண்டில் பெரியவர் ஆதித்தனார் அவர்கள் இந்த ஏட்டினைத் தொடங்கினார். எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் தினத்தந்தியின் தொடக்கக் காலத்திலே இருந்தது என்பதை நான் கேள்விப்பட்டும் இருக்கிறேன் - நேரடியாக அறிந்தும் இருக்கிறேன். எதிலும் ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர் மறைந்த மாமேதை, பத்திரிகை உலகத்தின் ஜாம்பவான், தமிழர்களின் நலம் பாடிய பெரியவர் ஆதித்தனார் என்பதை நானும் அறிவேன், நாடும் அறியும்.

அப்படிப்பட்டவருடைய உழைப்பு, திறமை, ஆற்றல் இவைகள் எல்லாம் சேர்ந்துதான் அன்றைக்கு மதுரையிலே ஆரம்பிக்கப்பட்ட "தினத்தந்தி'' பத்திரிகை தமிழ்நாடு முழுதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் எல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இன்றைக்கு இதற்கு ஈடில்லை, இணையில்லை என்கின்ற அளவிற்கு வியாபித்திருக்கின்ற தினத்தந்தியாகும்.

ஏதோ பத்திரிகை நடத்தினால் ரொம்ப சுகமாக பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று யாரும் சொல்ல முடியாது. அவரும் ஒரு தொழிலாளர் போராட்டத்தில் பனைமரத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆதித்தனார் கையிலே விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டார். இன்றைக்கு யார் யாரோ கையிலே விலங்கு போட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இல்லாத விலங்கைப் போட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கு உண்மையிலேயே ஆதித்தனார் அவர்களை விலங்கிட்டு, தெருவிலே அழைத்து வந்த காட்சியைப் படம் பிடித்து பத்திரிகைகள் எல்லாம் வெளியிட்டன.

இப்படி தொழிலாளர் போராட்டத்திற்காக கைதாகி, அதன் பிறகு மொழிப் போராட்டத்தின் போது நானெல்லாம் கைது செய்யப்பட்டபோது அவரும் கைதாகி - நான் பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே இருந்தபோது அவரும் மற்றொரு சிறைச்சாலையிலே இருந்தார் என்கிற அளவிற்கு தியாகங்கள் புரிந்த தியாக தழும்பேறிய உடல்தான் ஆதித்தனாருடைய உடல் என்பதை நான் இங்கே உருக்கத்தோடு உணர்ச்சியோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ பத்திரிகை நடத்தியதால் அதிலே சம்பாதித்தார் என்று சொல்லிவிட முடியாது. பத்திரிகை நடத்துபவர்கள் சிலர் சம்பாதிக்கின்றார்கள், இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி குறிப்பிட்டதைப் போல, பத்திரிகையிலே லாபம் வரலாம், பத்திரிகைகளினால் சம்பாதிக்கலாம், வருமானம் வரலாம், ஆனால் வருமானத்தை மாத்திரம் பார்த்து நாம் கட்டிக் காக்க வேண்டிய தமிழர் மானத்தை மறந்து விடக்கூடாது. அதை மறக்காமல் தினத்தந்தி இருந்தது - இன்றைக்கும் அதை மறக்காமல்தான் தினத்தந்தி பத்திரிகையினுடைய இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்தப் பத்திரிகை வீரமணி குறிப்பிட்டதைப் போல தலையங்கம் எழுத ஆரம்பித்திருக்கிறது. தினத்தந்திக்கு உள்ள ஒரு சிறப்பு அதிலே தலையங்கம் வராமல் இருக்கும். அதுதான் ஒரு சிறப்பாக இருந்தது. இப்போது அந்தச் சிறப்புத் தேவையில்லை - நாம் சிறப்பாக இருந்தால் போதாது - மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் - அதற்கு நாம் நம்முடைய அறிவுரைகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து தலையங்கம் தீட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

முரசொலியிலே தலையங்கங்கள் எழுதி நிரம்ப நாட்களாகி விட்டன. யாரும் எழுதுவதில்லை. முரசொலியிலே எழுதுவதெல்லாம், மக்களுக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்வதெல்லாம் உடன்பிறப்புக் கடிதம்தான். கடிதம் எழுதும்போது நேரடித் தொடர்பு - தலையங்கம் எழுதும்போது வேறு மாதிரியான தொடர்பு.

அந்தத் தொடர்பை நான் சில நாட்களாக தினத்தந்தி பத்திரிகையிலே தேடிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையெனினும், எடுத்த எடுப்பிலேயே கண்ணுக்குத் தெரிகின்ற வகையிலே தலையங்கம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதுவொரு ஆறுதல். அந்தத் தலையங்கமே எனக்கு ஆர்வத்தை எழுப்புகிறது என்று சொல்ல மாட்டேன் - அந்தத் தலையங்கமே என்னை வாழ வைக்கிறது என்று சொல்ல மாட்டேன் - அந்தத் தலையங்கம் எனக்கு ஒரு "ஆறுதல்''. வேறு பத்திரிகைகளின் தலையங்கங்களைப் படித்துவிட்டு, இந்தத் தலையங்கத்தைப் படிக்கும்போது எனக்கு ஒரு ஆறுதல். எப்படி வெளியிலே சென்று வீட்டுக்கு திரும்புகின்றவரையில் - நமக்கு வேண்டாதவர்கள் நம்மை அடித்து, நொறுக்கி, ஏதேதோ செய்து காறித் துப்பி, காயப்படுத்தி நம்மை அனுப்பும்போது, வீட்டிற்கு வந்தால், வீட்டிலே இருக்கின்ற தாய் - "ஏனப்பா! இவ்வளவு நேரம் கழித்து வந்தாய்?'' என்று கேட்டால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்?

அதைப் போல, தினத்தந்தியின் தலையங்கத்தைப் படிக்கும்போது, எனக்கு ஒரு ஆறுதல். சொந்தங்கள் நம்மை சீராட்டும்போது, பாராட்டும்போது நமக்கு ஆறுதல்தான். விடுதலை பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால், எனக்கு ஆறுதல் மாத்திரமல்ல - ஒரு ஆக்ரோஷமே வரும் - விடுதலை பத்திரிகையின் மீது அல்ல - விடுதலையால் இன்று நேற்றல்ல - நான் பயிற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுக் காலம் ஆகிறது. குடியரசு - விடுதலை போன்ற இந்த ஏடுகள் எந்த அளவிற்கு தமிழனை தலைநிமிரச் செய்திருக்கின்றன என்பதை நான் அறிந்தவன். அறிந்ததை மற்றவர்களுக்குச் சொன்னவன் - இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பவன்.

எனவே, நம்முடைய சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஒரு அரிய முயற்சியாக இந்த நூலை - "நூல்'' என்றுதான் சொல்வேன். ஏனென்றால் இதுவொரு பத்திரிகையினுடைய தொகுப்பு அல்ல - இதுவொரு வரலாற்று ஏடு. இன்னும் ஒரு நூறாண்டுகளுக்குப் பிறகு படித்தாலும்கூட, ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்தது போன்ற ஒரு உணர்வு நிச்சயமாக எதிர்காலத் தமிழர்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு அருமையான பொக்கிஷத்தை, கருவூலத்தை இன்றைக்கு சிவந்தி ஆதித்தன் வழங்கியிருக்கிறார்.

இதைப் போன்ற கருத்து நிறைந்த பெட்டகங்கள் நிரம்ப தமிழகத்திலே உலவிட வேண்டும். அப்படி உலவினால்தான், யார், யார் எப்படி வாழ்ந்தார்கள்? எந்தெந்த அரசு எப்படி நடந்தது? என்னென்ன செய்திகள் நம்முடைய நாட்டின் சரித்திரத்தில் அடங்கியிருக்கின்றன என்ற உண்மைகளையெல்லாம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

உள்ளே ஏராளமான படங்கள் - நான் இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் - உள்ளே இவ்வளவு படங்கள் இருக்கின்றன என்று சொல்வதற்குக் காரணம், 300 ரூபாய் பெறுமானம் உள்ளதுதான் இந்தப் புத்தகம் என்பதை உங்களுக்கு வலியுறுத்துவதற்காகத்தான். இட்லர் பிறந்த இடம் - "இட்லர் பிறந்த வீடு'' என்று இந்த மலரிலே இருக்கிறது. ஒரு மாடிக் கட்டடம் - அங்கேதான் இட்லர் பிறந்தார் என்று இருக்கிறது.

அதைப் போல, முசோலினியும், அவரது நண்பர்களும், அவருடைய காதலியும் மக்களால் துரத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, தூக்கிலே தொங்க விடப்பட்டு, அப்படித் தொங்குகின்ற அந்தப் பிணங்களை ஊரார் பார்த்து கேலி செய்துவிட்டு போகின்ற அளவிற்கு அவருடைய கொடுமைகளையெல்லாம் சித்தரிக்கின்ற அந்தச் சரித்திரச் சான்றை படமாக - இருந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி பல தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிலே இருக்கின்றன.

காந்தியடிகளுடைய வரலாறு - வரலாற்று நிகழ்வுகள் - பண்டித நேரு அவர்களுடைய ஆற்றல் - பகத்சிங்கினுடைய வீரம் - நம்முடைய தமிழ்த் தேச தியாகிகளுடைய தியாகம் - அத்தனையும் இந்தப் புத்தகத்திலே இருக்கிறது.

ஒரு முறை இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால், பல புத்தகங்களைப் படித்த பயன் நிச்சயமாக உண்டாகும் என்ற அந்த உறுதியை உங்களுக்கு சொல்லி - இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். படித்துப் பயன் பெறுங்கள் - நாட்டு மக்கள் விழிப்புணர்வோடு உலவிட பயன்படுங்கள் -

அதற்கு உறுதுணையாக உங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக நம்முடைய சிவந்தி ஆதித்தன் வெளியிட்டிருக்கின்ற இந்த அருமையான நூலினை 300 ரூபாய் விலைக்குத் தருகிறார்கள். இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் மீண்டும் அதைச் சொன்னேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கலைஞரின் பேச்சு வழக்கம்போல உள்குத்து, வெளிக்குத்து என்று எல்லாக் குத்துக்களும் இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது..! கூடவே நூலின் விலையைக் குறைக்கச் சொல்லி பலத்த கை தட்டலை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

ஆனால் அரங்கத்தி்ன் உள்ளே நுழையும்போதே அதனை வாங்கிக் கையில் வைத்திருந்த என்னைப் போன்றவர்களின் சாபத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டார்..! அன்றைக்கு அங்கேயே நான் கேட்கும்போது 800 சொச்சம் புத்தகங்கள் விற்பனையானதாகச் சொன்னார்கள். ஒரு சிலர் பள்ளிகளுக்காக என்று சொல்லி 20, 25 பேக் செய்து வாங்கிக் கொண்டு போனார்கள்..!

எல்லாருக்கும் 75 ரூபாய் மொய்..! இதனை முன்பேயே சொல்லியிருந்து தினத்தந்திக்காரர்கள் குறைத்திருந்தால் முன்னமேயே வாங்கிய என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு 75 ரூபாய் மிச்சமாயிருக்கும்..!

இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான்..  பாருங்கள்..!

பரவாயில்லை. போனால் போகட்டும்.. நீங்களாவது 300 ரூபாய்க்கு வாங்கி அனுபவியுங்கள். நிச்சயம் ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொது அறிவுப் புத்தகம் இது.! வாங்கத் தவறாதீர்கள்..!

பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!

64 comments:

உமர் | Umar said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!//

நான் ஸ்க்ரோல் செய்து கீழே வந்துவிட்டேன்.

உசிலை விஜ‌ய‌ன் said...

உண்மை தமிழரே நான் இதை இங்கு அமெரிக்காவில் வாங்க விரும்புகிறேன். இதன் சர்வதேச அளிப்பு பற்றிதெரியுமா?

ராஜரத்தினம் said...

கருணாநிதி வெளியிட்ட எந்த புத்தகத்தையும் நான் வாங்குவதில்லை மன்னிக்கவும்! இதில் பாதிக்கும் மேலே நான் படிக்கவில்லை. படிக்க முடியவில்லை.

பழமைபேசி said...

கடுமையான உழைப்பாளி... அட நீங்கதான்! இம்மி பிசகாம, தட்டச்சி வலையேத்தி.... உங்க கடமையுணர்வுக்கு வந்தனம்!!!

pichaikaaran said...

"பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!"



அந்த கீ போர்டை தொட்டு வணங்கினால்தான் , என் மனம் ஆறும்.. ஐயோ பாவம்..

கண்ணிருடன், பார்வையாளன்

செங்கோவி said...

அண்ணே, உங்களுக்கு இருக்குறது விரலா..உரலா..

/பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!/

டைப் பண்ண உங்க கையைத் தான் நாங்க தொட்டுக் கும்பிடணும்...

பதிவு-ன்னா இது பதிவு..அப்படியே பதிஞ்சிருக்கீங்களே..கலைஞர் பேச்சு மட்டுமே படித்தேன்..
--செங்கோவி

ராஜ நடராஜன் said...

நாட்டு நடப்புக்களை அனைத்து மக்களும் படிக்க உதவியதில் தினத்தந்திக்கு முக்கிய பங்குண்டு.

அதேபோல் பழமை சொன்னபடி அம்மி நகராமல்...இல்லை இம்மி குறையாமல் எழுதுவதில் உங்கள் எழுத்து நிபுணத்துவம் தெரிகிறது.

Unknown said...

தினத்தந்தி தமிழர்களுக்கு செய்த சேவை என்ன தெரியுமா...திருச்செந்துர் முழுவதும் சுற்றிவளைத்து வாங்கியது..இப்பொழுது நாம் கொடுக்கும் ஒருபேப்பருக்கான(தினத்தந்தி) பணத்தை, அவர்கள் நமக்கு இலவச பேப்பரோடு, அப்பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் இலாபத்தில் மட்டும்தான் நட்டம் என்பது தகவல். அப்படியெனில் நிகரலாபம் என்னவென்று யோசித்து பாருங்கள்..மொத்த சமுகமும் அழுகிபுளுத்துகிடக்கறது. எதுவும் சொல்வதற்கு இல்லை.

Indian Share Market said...

அருமையா எழுதியிருக்கீங்க பாஸ்...................

சூனிய விகடன் said...

இந்த முழுநீளப் பதிவை, திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி அவர்களே ரசித்துப் படித்து உங்களின் எழுபத்தைந்து ரூபாயை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என என் குல தெய்வம் முத்தூர் குப்பண்ணசாமியை வேண்டிக்கொள்கிறேன்

சூனிய விகடன் said...

மறந்துட்டேன்...உங்க விரல்களுக்கு ஒரு ஷொட்டு

முனிசாமி. மு said...

வரலாற்று சுவடுகள் புத்தகத்தை இவ்வளவு எழுதிய நீங்கள் அதனை உருவாக்கியவர்(உண்மையில்) பற்றியோ அல்லது அது குறித்து விழாவில் யாரும் பேசாதது குறித்தோ ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடாதது ஏன் .....முடிந்தால் அதனை கண்டுபிடித்து எழுதுங்கள்....

a said...

நிகழ்சியை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்..........

கண்டிப்பாக நூலை வாங்க வேண்டும்....... எங்கள் வூர் பள்ளிக்கும் சேர்த்து......... அறிமுகத்திற்க்கு நன்றி

VISA said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!
//

இது அபாரமான உள் குத்தாவில்ல இருக்கு.

Paleo God said...

மைனஸ் ஒன்னுன்ணே..








































































































































இதப் படிச்சப்பறம் என் கண்ணாடி பவரச் சொன்னேன் :((


இதுதான் பெரிய பதிவா இல்லை இதவிட...

நசரேயன் said...

அண்ணே தட்டிய கை விரல்களை வாழ்த்த வயதில்லை .. வணங்குகிறேன்

Jayadev Das said...

//இட்லர் பிறந்த இடம் - "இட்லர் பிறந்த வீடு'' என்று இந்த மலரிலே இருக்கிறது. ஒரு மாடிக் கட்டடம் - அங்கேதான் இட்லர் பிறந்தார் என்று இருக்கிறது.

அதைப் போல, முசோலினியும், அவரது நண்பர்களும், அவருடைய காதலியும் மக்களால் துரத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, தூக்கிலே தொங்க விடப்பட்டு, அப்படித் தொங்குகின்ற அந்தப் பிணங்களை ஊரார் பார்த்து கேலி செய்துவிட்டு போகின்ற அளவிற்கு அவருடைய கொடுமைகளையெல்லாம் சித்தரிக்கின்ற அந்தச் சரித்திரச் சான்றை படமாக - இருந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி பல தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிலே இருக்கின்றன.// இதே வரிசையில் கருணாநிதியும் சேருவார். இன்னும் சில வருடங்கள் கழித்து இதே தினத் தந்தியில் கருணாநிதி எப்படி இலவசம் கொடுத்து, அதைச் சரிகட்ட சாரயத்த ஊத்தி, அதுவும் போதாமல் வளர்ச்சி திட்டங்களுக்கு வரும் பணத்தையும் இலவசத்துக்கே கொடுத்து ஆறு கோடி தமிழ் சனத்தை ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாமல் பண்ணினார் என்றும், உலக மகா ஸ்பெக்ட்ரம் ஊழலை எப்படி சாதித்து இந்திய மக்கள் எல்லோருக்குமே ஆப்பு வைத்தார் என்றும் வரும்.

உண்மைத்தமிழன் said...

[[[கும்மி said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!//

நான் ஸ்க்ரோல் செய்து கீழே வந்துவிட்டேன்.]]]

இன்னா நெஞ்சழுத்தம்.. இதை என்கிட்டயே வேற சொல்றியா..? ம்..

உண்மைத்தமிழன் said...

[[[உசிலை விஜ‌ய‌ன் said...
உண்மை தமிழரே நான் இதை இங்கு அமெரிக்காவில் வாங்க விரும்புகிறேன். இதன் சர்வதேச அளிப்பு பற்றி தெரியுமா?]]]

தெரியவில்லை நண்பரே..! அங்கே இது போன்ற புத்தகங்களை வாங்கித் தரும் ஏஜென்ஸிகளை கேட்டுப் பாருங்கள். ஒருவேளை இணைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...
கருணாநிதி வெளியிட்ட எந்த புத்தகத்தையும் நான் வாங்குவதில்லை மன்னிக்கவும்! இதில் பாதிக்கும் மேலே நான் படிக்கவில்லை. படிக்க முடியவில்லை.]]]

தங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றிகள் ஸார்..! கடைசிவரையிலும் இப்படியே இருங்கள். பிழைத்துக் கொள்வீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
கடுமையான உழைப்பாளி... அட நீங்கதான்! இம்மி பிசகாம, தட்டச்சி வலையேத்தி.... உங்க கடமையுணர்வுக்கு வந்தனம்!!!]]]

முக்கால்வாசி காப்பி பேஸ்ட் தம்பி.. பாரா, பாராவாக பிரித்ததுதான் என் அதிகப்படியான வேலை..! இந்தப் பாராட்டுதல் எனக்கு வரக் கூடாது. தினத்தந்தியின் நிருபர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!"

அந்த கீ போர்டை தொட்டு வணங்கினால்தான், என் மனம் ஆறும்.. ஐயோ பாவம்..

கண்ணிருடன், பார்வையாளன்]]]

உங்களுடைய கண்ணீர் அனுதாபத்தை எனது கீ போர்டிடம் சொல்லிவிட்டேன். அவர் தங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார். உங்களிடமும் அதனை இப்போது, இப்படிச் சொல்லிவி்ட்டேன்..

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

அண்ணே, உங்களுக்கு இருக்குறது விரலா.. உரலா..

/பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!/

டைப் பண்ண உங்க கையைத்தான் நாங்க தொட்டுக் கும்பிடணும்...

பதிவு-ன்னா இது பதிவு..அப்படியே பதிஞ்சிருக்கீங்களே.. கலைஞர் பேச்சு மட்டுமே படித்தேன்..
--செங்கோவி]]]

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி செங்கோவி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

நாட்டு நடப்புக்களை அனைத்து மக்களும் படிக்க உதவியதில் தினத்தந்திக்கு முக்கிய பங்குண்டு.

அதேபோல் பழமை சொன்னபடி அம்மி நகராமல் இல்லை இம்மி குறையாமல் எழுதுவதில் உங்கள் எழுத்து நிபுணத்துவம் தெரிகிறது.]]]

ஹி.. ஹி.. எல்லாப் புகழும் போகட்டும் தினத்தந்திக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[kama said...

தினத்தந்தி தமிழர்களுக்கு செய்த சேவை என்ன தெரியுமா. திருச்செந்துர் முழுவதும் சுற்றிவளைத்து வாங்கியது. இப்பொழுது நாம் கொடுக்கும் ஒரு பேப்பருக்கான(தினத்தந்தி) பணத்தை, அவர்கள் நமக்கு இலவச பேப்பரோடு, அப்பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் இலாபத்தில் மட்டும்தான் நட்டம் என்பது தகவல்.
அப்படியெனில் நிகர லாபம் என்னவென்று யோசித்து பாருங்கள். மொத்த சமுகமும் அழுகி புளுத்து கிடக்கறது. எதுவும் சொல்வதற்கு இல்லை.]]]

நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை தோழரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
அருமையா எழுதியிருக்கீங்க பாஸ்.]]]

நன்றிகள் ஸார்..!

Jayadev Das said...

குஷ்புவும் பிரபுவும் திருட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள், நடிகை ரேவதி மேனன் என்ற ஒளிப்பதிவாளருடன் திருமணம் போன்ற வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த செய்திகளை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக பதிவு செய்த பாரம்பரியம் மிக்க நாளிதழ் என்பதை யாரும் மறுக்க முடியாது.

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...
இந்த முழு நீளப் பதிவை, திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி அவர்களே ரசித்துப் படித்து உங்களின் எழுபத்தைந்து ரூபாயை உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என என் குல தெய்வம் முத்தூர் குப்பண்ணசாமியை வேண்டிக் கொள்கிறேன்]]]

அப்படியொன்று நடந்தால் அடுத்த நொடியே நான் உடன்பிறப்பாக மாறிவிடுவேன்..! ஹி.. ஹி.. இது எப்படி இருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...
மறந்துட்டேன். உங்க விரல்களுக்கு ஒரு ஷொட்டு...]]]

என் விரல்களின் சார்பில் உங்களுக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[முனிசாமி. மு said...
வரலாற்று சுவடுகள் புத்தகத்தை இவ்வளவு எழுதிய நீங்கள் அதனை உருவாக்கியவர்(உண்மையில்) பற்றியோ அல்லது அது குறித்து விழாவில் யாரும் பேசாதது குறித்தோ ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடாதது ஏன் ..... முடிந்தால் அதனை கண்டு பிடித்து எழுதுங்கள்....]]]

தினத்தந்தியின் பணியாற்றும் ஆசிரியர் குழுதான் தனது நூலகத்தில் இருந்து இதனைத் தொகுத்து எழுதியதாக தெரிகிறது. தனி நபர்கள் எழுதித் தொகுத்ததாகத் தெரியவில்லை.

உங்களுக்குத் தெரியுமெனில் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
நிகழ்சியை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்..........
கண்டிப்பாக நூலை வாங்க வேண்டும்....... எங்கள் வூர் பள்ளிக்கும் சேர்த்து......... அறிமுகத்திற்க்கு நன்றி]]]

கண்டிப்பாக பள்ளிக்காக வாங்கிக் கொடுக்கலாம் யோகேஷ்.. செய்யுங்கள். அதுதான் உண்மையான சேவை..!

உண்மைத்தமிழன் said...

[[[VISA said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!//

இது அபாரமான உள் குத்தாவில்ல இருக்கு.]]]

ஹா.. ஹா.. ஹா.. கண்டு பிடிச்சிட்டீங்களா..? பெரிய ஆளுங்க நீங்க..!

உண்மைத்தமிழன் said...

பலாபட்டறை தம்பி..!

நெசம்தான்.. என் பதிவுகளில் இதுதான் நீளமானது. ஆனால் எழுதியதில் இல்லை..!

Jayadev Das said...

கருணாநிதியின் குறைகளை யாராவது சுட்டிக்காட்டி எழுதிவிட்டால் அவர்களை பார்பனன், தமிழ்த் துரோகி, திராவிட எதிரி என்பார். ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ஊழலை ஒரு தலித்து பண்ணினால் அது நியாம் என்பார். வாய்ச் சொல்லில் வீரடி என்பது இந்த மஞ்சள் துண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
அண்ணே தட்டிய கை விரல்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.]]]

நன்றி நாசரேயன்.. முழுசா படிக்கிறதே இல்ல போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...
கருணாநிதியின் குறைகளை யாராவது சுட்டிக் காட்டி எழுதிவிட்டால் அவர்களை பார்பனன், தமிழ்த் துரோகி, திராவிட எதிரி என்பார். ஒன்னே முக்கால் லட்சம் கோடி ஊழலை ஒரு தலித்து பண்ணினால் அது நியாம் என்பார். வாய்ச் சொல்லில் வீரடி என்பது இந்த மஞ்சள் துண்டுக்கு மட்டுமே பொருந்தும்.]]]

நூற்றுக்கு நூறு உங்களது பின்னூட்டத்தை வழிமொழிகிறேன் நண்பரே..!

வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

//இட்லர் பிறந்த இடம் - "இட்லர் பிறந்த வீடு'' என்று இந்த மலரிலே இருக்கிறது. ஒரு மாடிக் கட்டடம் - அங்கேதான் இட்லர் பிறந்தார் என்று இருக்கிறது. அதைப் போல, முசோலினியும், அவரது நண்பர்களும், அவருடைய காதலியும் மக்களால் துரத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, தூக்கிலே தொங்க விடப்பட்டு, அப்படித் தொங்குகின்ற அந்தப் பிணங்களை ஊரார் பார்த்து கேலி செய்துவிட்டு போகின்ற அளவிற்கு அவருடைய கொடுமைகளையெல்லாம் சித்தரிக்கின்ற அந்தச் சரித்திரச் சான்றை படமாக - இருந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி பல தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிலே இருக்கின்றன.//

இதே வரிசையில் கருணாநிதியும் சேருவார். இன்னும் சில வருடங்கள் கழித்து இதே தினத்தந்தியில் கருணாநிதி எப்படி இலவசம் கொடுத்து, அதைச் சரி கட்ட சாரயத்த ஊத்தி, அதுவும் போதாமல் வளர்ச்சி திட்டங்களுக்கு வரும் பணத்தையும் இலவசத்துக்கே கொடுத்து ஆறு கோடி தமிழ் சனத்தை ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாமல் பண்ணினார் என்றும், உலக மகா ஸ்பெக்ட்ரம் ஊழலை எப்படி சாதித்து இந்திய மக்கள் எல்லோருக்குமே ஆப்பு வைத்தார் என்றும் வரும்.]]]

வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்கிற அர்த்ததத்தில் இதனை ஏற்றுக் கொள்ளலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
கடுமையான உழைப்பாளி... அட நீங்கதான்! இம்மி பிசகாம, தட்டச்சி வலையேத்தி.... உங்க கடமையுணர்வுக்கு வந்தனம்!!!]]]

கிரெடிட்ஸ் கோஸ் டூ டெய்லி தந்தி ரிப்போர்ட்டர்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...
குஷ்புவும் பிரபுவும் திருட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள், நடிகை ரேவதி மேனன் என்ற ஒளிப்பதிவாளருடன் திருமணம் போன்ற வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த செய்திகளை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக பதிவு செய்த பாரம்பரியம்மிக்க நாளிதழ் என்பதை யாரும் மறுக்க முடியாது.]]]

ஜெயதேவ் ஸார்.. நாட்டில் கலைஞர்களும் ஒரு அங்கம்தான்.. எது முக்கியம் என்பதை அன்றைன்றைய செய்திகளை வைத்துத்தான் நாம் முடிவெடுக்கிறோம்..

இந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துவிட்டு பின்பு பேசுங்கள்..! நான் தினத்தந்தியை பற்றி இங்கே பேசவில்லை. அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள புத்தகத்தைப் பற்றி மட்டும்தான் பேசுகிறேன்..!

Sugumarje said...

நேரில் கண்ட அனுபவம் கிடைத்தது :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

பகிர்வு அருமை சரவணன் அண்ணே..

/// நிச்சயம் ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொது அறிவுப் புத்தகம் இது.! வாங்கத் தவறாதீர்கள்..!//

கண்டிப்பா.. எல்லோருக்கும் பயன்படக்கூடியது.

உண்மைத்தமிழன் said...

[[[Sugumarje said...
நேரில் கண்ட அனுபவம் கிடைத்தது :)]]]

அப்பாடா.. இந்த ஒரு வார்த்தை போதும்..! மிக்க மகிழ்ச்சி..!

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பகிர்வு அருமை சரவணன் அண்ணே..

/// நிச்சயம் ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொது அறிவுப் புத்தகம் இது.! வாங்கத் தவறாதீர்கள்..!//

கண்டிப்பா.. எல்லோருக்கும் பயன்படக் கூடியது.]]]

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்.. என்ன இப்பல்லாம் முன்பு மாதிரி அடிக்கடி வருவதில்லையே..? ஏன் நண்பரே..?

hayyram said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!// படிச்சி முடிப்பதற்குள் மூச்சு முட்டி விடுவதை சரியாகப் புரிந்து எழுதியிருக்கிறீர்கள். இந்த வரியை படித்தவுடன் சிரிப்பு தான் வந்ததது. தகவல்களுக்கு நன்றி!

ஜோ/Joe said...

/இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான்.. பாருங்கள்..!
//

அண்ணே :)))))))

நா. கணேசன் said...

விரிவான பதிவுக்கு நன்றி. தினத்தந்தி மேனேஜ்மெண்ட்டை அணுகி யூனிக்கோடுக்கு மாறச் சொல்லுங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே காலைல படிக்க ஆரமிச்சேன். இருங்க லஞ்ச சாப்டு வந்து மீதி படிக்கிறேன்

எண்ணங்கள் 13189034291840215795 said...

இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான்..

//

:)

பல விபரம் நன்று

A Sivakumar said...

!...இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான்.. பாருங்கள்..!

Super Punch

Anonymous said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!// என்னைப்போன்ற இளைஞர்களுக்கு தொடர்ந்து நல்ல தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குவதே சரியாக இருக்கும்! ஞாயிறு காலை 8 மணிக்கு சத்யம் தியேட்டரில் 'அம்பேத்கர்' முன்பதிவு செய்துவிட்டேன்!

உண்மைத்தமிழன் said...

[[[hayyram said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!//

படிச்சி முடிப்பதற்குள் மூச்சு முட்டி விடுவதை சரியாகப் புரிந்து எழுதியிருக்கிறீர்கள். இந்த வரியை படித்தவுடன் சிரிப்புதான் வந்ததது. தகவல்களுக்கு நன்றி!]]]

எப்படியோ சிரிச்சீங்களா இல்லையா..? அது போதும் எனக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோ/Joe said...

/இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான். பாருங்கள்! //

அண்ணே :)))))))]]]

எல்லாம் அனுபவந்தான் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[நா. கணேசன் said...
விரிவான பதிவுக்கு நன்றி. தினத்தந்தி மேனேஜ்மெண்ட்டை அணுகி யூனிக்கோடுக்கு மாறச் சொல்லுங்கள்.]]]

இன்னும் கொஞ்ச நாட்களில் மாறிவிடுவார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே காலைல படிக்க ஆரமிச்சேன். இருங்க லஞ்ச சாப்டு வந்து மீதி படிக்கிறேன்]]]

இன்னுமா லஞ்ச் சாப்பிட்டு முடிக்கலை..!

உண்மைத்தமிழன் said...

[[[பயணமும் எண்ணங்களும் said...
இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான்.//

:)

பல விபரம் நன்று]]]

வருகைக்கு நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[A Sivakumar said...

!...இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான்.. பாருங்கள்..!

Super Punch]]]

அனுபவந்தான்..! யோசிச்சுப் பாருங்க. நான் சொன்னது புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...

//பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!//

என்னைப் போன்ற இளைஞர்களுக்கு தொடர்ந்து நல்ல தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குவதே சரியாக இருக்கும்!

ஞாயிறு காலை 8 மணிக்கு சத்யம் தியேட்டரில் 'அம்பேத்கர்' முன்பதிவு செய்துவிட்டேன்!]]]

போய் வாருங்கள் சிவா..!

தருமி said...

//சின்ன ஐயா சிவந்தி ஆதித்தனாரின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும்,..//

அப்படி ஒண்ணு இருக்கா..?

//தினத்தந்தியின் தொலைக்காட்சியில் மட்டும் இது ஒளிபரப்பாகும்//
அப்படி ஒண்ணு இருக்கா ..? //நமக்குத்தான் எப்பவுமே அறிவு கொஞ்சம் லேட்டாத்தானே வேலை செய்யும்.. //அப்படி ஒண்ணு இருக்கா..?

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//சின்ன ஐயா சிவந்தி ஆதித்தனாரின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும்,..//

அப்படி ஒண்ணு இருக்கா..?]]]

நீங்க இத்தனை நாளு "உள்ள" இருந்தீங்களா ஐயா..?

[[[//தினத்தந்தியின் தொலைக்காட்சியில் மட்டும் இது ஒளிபரப்பாகும்//

அப்படி ஒண்ணு இருக்கா ..?]]]

ஆமாங்கய்யா.. மலர் டிவின்னு லோக்கல் கேபிள் சேனலா இருக்கு..

[[[//நமக்குத்தான் எப்பவுமே அறிவு கொஞ்சம் லேட்டாத்தானே வேலை செய்யும்.. //

அப்படி ஒண்ணு இருக்கா..?]]]

ரொம்ப லொள்ளு..!

ராஜரத்தினம் said...

//தங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றிகள் ஸார்..! கடைசிவரையிலும் இப்படியே இருங்கள். பிழைத்துக் கொள்வீர்கள்..!//
இதை எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள்? கருணாநிதி போலவா? அவர்தான் ஆயுதம் வேண்டாம், அறிவாயுதம் வேண்டும் சொல்லி உசுப்பேத்துவார். நான் எந்த காலத்திலும் கருணாநிதியை ஆதரித்தவன் இல்லை. அவரின் கைதை தவிர! அது கூட அவர் வயதானவர் என்ற அடிப்படையில்தான்.

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

//தங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றிகள் ஸார்..! கடைசிவரையிலும் இப்படியே இருங்கள். பிழைத்துக் கொள்வீர்கள்..!//

இதை எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள்? கருணாநிதி போலவா? அவர்தான் ஆயுதம் வேண்டாம், அறிவாயுதம் வேண்டும் சொல்லி உசுப்பேத்துவார். நான் எந்த காலத்திலும் கருணாநிதியை ஆதரித்தவன் இல்லை. அவரின் கைதை தவிர! அது கூட அவர் வயதானவர் என்ற அடிப்படையில்தான்.]]]

இந்தக் கருத்துடன் நூற்றுக்கு நூறு நானும் உடன்படுகிறேன் ஸார்..! கருணாநிதி மீதான எதிர்ப்பில் நாம் இருவருமே ஒரே வரிசையில்தான் உள்ளோம்..!

கவின் இசை said...

sir! Can u tell me how to get this book.? i have tried a lot.

கவின் இசை said...

sir! Can u tell me how to get this book.? i have tried a lot.

உண்மைத்தமிழன் said...

[[[கவின் இசை said...

sir! Can u tell me how to get this book.? i have tried a lot.]]]

எந்த ஊரில் இருக்கிறீர்கள் கவின்..? சென்னையில் என்றால் புக் பாயிண்ட், நியூ புக்லேண்ட்ஸ், மற்றும் முக்கிய புத்தகக் கடைகளில் கிடைக்கும். இப்போது இல்லையெனில் ஸ்டாக் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் அடுத்த ஜனவரியில் புத்தகக் கண்காட்சிக்குள் அடுத்த பதிப்பை கொண்டு வந்துவிடுவார்கள்..! கவலை வேண்டாம்..!