ஆப்பிள் பெண்ணே..! - சினிமா விமர்சனம்

16-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள்.. பெயர் தெரியாத தயாரிப்பாளர்.. இயக்குநர்.. நிச்சயம் படம் இப்படித்தான் இருக்கும் என்ற யூகத்தோடு போய் உட்கார்ந்தால், 99 சதவிகிதம் அதுபடியேதான் நடக்கும். 1 சதவிகிதம் மட்டுமே அட.. பரவாயில்லையே என்று சொல்ல வைக்கும்..! அப்படிச் சொல்ல வைத்திருக்கும் படம் இதுதான்.. கவனிக்கவும்.. “பரவாயில்லையே..” என்றுதான்..!


ஒரு அம்மாவுக்கும், மகளுக்குமான பாசப் போராட்டம்தான் படமே..! ஆனால் திரைக்கதையும், இயக்கமும்தான் படத்தின் பிற்பாதியில் மிகவும் ரசிக்க வைக்கிறது..!

ஊட்டி மலைக்கிராமம் அருகில் ஹோட்டல் நடத்துகிறார் ரோஜா. அவருடைய மகள் ஐஸ்வர்யா.. பள்ளி மாணவி. அவரை ஒருதலையாக்க் காதலிக்கும் ஒரு இளம் ஹீரோ.. காதலை ஏற்க மறுத்து தான் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஐஸ்வர்யா..!
இன்னொரு பக்கம் அம்மா ரோஜாவை பார்க்கவே கடைக்கு கூட்டம் கூடி வருவது மகளுக்குத் தெரிகிறது.. ரோஜாவின் உடை, நடை பாவனைகள்.. ஆண் கஸ்டமர்களை கிக் ஏற்றுவது போலவே இருப்பதாக மகள் குற்றம்சாட்டுகிறாள்.. அம்மா இதை ஏற்க மறுக்க.. மகளுக்கும், அம்மாவுக்கும் பிணக்கு..!

இன்னொரு பக்கம் அந்த ஊர் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார் ஏட்டு தம்பி ராமையா. ரொம்ப தன்மானச் சிங்கம். அவரை முதல் முறையாகவே அவமானப்படுத்தும் இன்ஸ்பெக்டரையே ஆபத்தில் உதவ மறுப்பவர்.. இவரை ஒரு சந்தர்ப்பத்தில் கிண்டலாக பார்த்து சிரிக்கும் ஐஸ்வர்யாவை அவமானப்படுத்த செல்போனில் வீடியோ எடுக்கிறார். இதனை ரோஜா பார்த்துவிட்டு தம்பி ராமையாவை அடித்து, உதைத்து அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்..

இதனால் ஊண், உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கும் தம்பி ராமையா அம்மாவையும், மகளையும் பலி வாங்கத் துடிக்கிறார். இதற்கேற்றாற்போல் ஐஸ்வர்யா ரோஜாவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து தம்பி ராமையாவிடம் சிக்கிக் கொள்ள.. தம்பி ராமையா தனது சித்து வேலைகளைத் தொடர்கிறார்.. ரோஜா ஒரு பக்கம் தனது மகளைத் தேடி அலைய.. மகளோ தான் கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற கனவோடு இருக்க.. தம்பி ராமையாவோ அம்மா, மகள் இருவரையும் ஒரே கல்லில் வீழ்த்த திட்டம் போட.. முடிவில் தமிழ்ச் சினிமாவுக்கேற்ற முடிவோடுதான் முடிகிறது என்றாலும், டிவிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக நடந்து முடிவதுதான் படத்தின் ஹைலைட்ஸ்..!

முதல் பாராட்டு ரோஜாவுக்கு..! இந்த வயதில் இந்தக் கேரக்டரில் இப்படி நடிப்பதற்கு வேறு யாரும் முன் வர மாட்டார்கள்..! நான் கூட படத்தின் துவக்கத்தில் என்னய்யா இது இப்படி காட்டுறாய்ங்க என்று ஜெர்க் ஆனதென்னவோ உண்மை..! ரோஜாவின் அழகை பார்க்கவே கூட்டம் வருகிறது என்பதையும், அவர் இப்போதும் இளமை துள்ளலுடன் இருக்கவே விரும்புகிறார் என்பதை காட்டும்விதமாகவும் காட்சிக்குக் காட்சி கேமிரா ரோஜாவின் இடுப்பையே கவர் செய்திருந்தது..! பின்பு கதை புரிந்தவுடன்.. இதுவும் புரிந்தது..! இயக்குநரும் இதே கதையைத்தான் சொன்னார்.. தேங்க்ஸ் டூ ரோஜா..!

புதுமுக ஹீரோயின் ஐஸ்வர்யா.. மலையாளத்துக்கே உரிய வாசம்.. படபடவென வசனங்களை கொட்டும் கேரக்டர்.. நச்சென்று நடித்திருக்கிறார்.. இவரை ஒப்பிடுகையில் ஹீரோவான  அந்தச் சின்னப் பையன் பாவம்தான்..! ஒட்டாமலேயே காதலை ஓட்டியிருக்கிறார்கள் கடைசிவரையிலும்.. காதலை ஏற்றுக் கொள்ள வைக்க ஹீரோ செய்யும் டார்ச்சரும், நாடகமும் முடிவுக்கு வரும் சூழலின் திரைக்கதை சூப்பர்..! அந்த்த் தங்கை கேரக்டரும் நன்றாகவே நடித்திருக்கிறார்..!

தம்பி ராமையாவுக்கு இதில் அழுத்தமான வில்லன் கேரக்டர்.. முகத்தில் வில்லத்தனம் தெரியாமல் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் போலும்..! கொஞ்சம், கொஞ்சம் மாறுதலோடு மாடலாடியிருக்கிறார்..! ஆனாலும் உடல் மொழியோடு, வாய் மொழியும் சேர மறுத்ததால்  வில்லத்தனத்தில் பாதியைத்தான் தாண்டியிருக்கிறார்.. ஆனாலும் இயக்கத்தின் வெற்றியால் இவரது பரிதவிப்புதான் படம் பார்க்கும் ரசிகனை பதட்டமடைய வைத்திருக்கிறது..!

எழுதி, இயக்கியிருக்கும் ஆர்.கே.கலைமணி ஏற்கெனவே 'தை பொறந்தாச்சு', 'சூப்பர் குடும்பம்', 'எங்கள் ஆசான்' ஆகிய படங்களை இயக்கியவர்..! சின்ன பட்ஜெட்டில் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கும் இயக்குநர்களுக்கு, ஒரு சின்ன நம்பிக்கையை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்..! 

ரோஜாவின் கல்யாணம் பற்றிய பிளாஷ்பேக்.. ஐஸ்வர்யா யார் என்பதற்கான பிளாஷ்பேக்.. திருடன் ஒருவனை வைத்து ஐஸ்வர்யாவை பழி வாங்க பிளான் செய்யும் திட்டம்.. இத்திட்டம் சொதப்பலாகி அடுத்தடுத்து தம்பி ராமையாவை டென்ஷனாக்கும் காட்சிகள்.. ரோஜாவும் பதற்றத்தோடு மகளைத் தேடுவது.. மருத்துவமனையில் ரவுடி தப்பிப்பது.. இன்ஸ்பெக்டரின் மிரட்டல்கள்.. இத்தனையையும் இடைவேளைக்கு பின்பு கொஞ்சமும் டெம்போ குறையாமல் கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!

ஏதோ ஒரு படத்துக்கு போனோம் என்று உள்ளே போனால்.. கொஞ்சம் யோசிக்க வைத்துதான் அனுப்புகிறார்கள்.. இது ஒன்றே போதும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு. இவரும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் முனைப்போடு நடித்தால் அடுத்தவர்களின் படத்திலும் நடிக்கலாம்..!

சின்ன பட்ஜெட்.. குறுகிய நாட்கள் தயாரிப்பு என்பதால் சில காட்சிகளை ஒரே கோணத்தில் எடுத்திருக்கிறார்கள்.  ஆனாலும் ரசிக்க முடிகிறது..! லாஜிக்கையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு.. இந்தக் கால பிள்ளைகள், பெற்றவர்களுக்கே புத்தி சொல்லும் பொறுப்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்த இயக்குநரின் வார்த்தையை மதிப்போம்..! 

இந்த மாச கோட்டா ஒரு படம்தான்னா அவசியம் இந்தப் படத்தைப் பார்த்திருங்க.. மத்த படங்களையெல்லாம் பின்னாடி டிவிலகூட போடுவாங்க. ஆனா இது டிவிக்கு வருமான்றது சந்தேகம்..! அதுக்காகச் சொல்றேன்..!

நன்றி..!

4 comments:

Rajesh Rajangam said...

jeya moviesla poduvanga

உண்மைத்தமிழன் said...

[[[Rajesh Rajangam said...

jeya moviesla poduvanga..]]]

மொதல்ல வாங்குவாங்களான்னே தெரியலையே..? வாங்கினால் சந்தோஷம்தான்..!

Nondavan said...

இந்த மாச கோட்டா ஒரு படம்தான்னா அவசியம் இந்தப் படத்தைப் பார்த்திருங்க.. மத்த படங்களையெல்லாம் பின்னாடி டிவிலகூட போடுவாங்க. ஆனா இது டிவிக்கு வருமான்றது சந்தேகம்..! அதுக்காகச் சொல்றேன்..! // சூப்பர் அண்ணே.... நிஜம்...

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இந்த மாச கோட்டா ஒரு படம்தான்னா அவசியம் இந்தப் படத்தைப் பார்த்திருங்க.. மத்த படங்களையெல்லாம் பின்னாடி டிவிலகூட போடுவாங்க. ஆனா இது டிவிக்கு வருமான்றது சந்தேகம்..! அதுக்காகச் சொல்றேன்..!//

சூப்பர் அண்ணே.... நிஜம்...]]]

நெட்ல வருமான்னு தெரியலை.. வந்திருச்சுன்னா சொல்றேன்..!