அகிலன் - சினிமா விமர்சனம்



28-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளரை பாவம் என்போம். அதே தயாரிப்பாளர் படம் தோல்வியாகும் என்பது தெரிந்தே படத் தயாரிப்பில் நுழைந்திருக்கிறார் என்றால், அது அவரது விதி என்று சொல்லிவிட்டுப் போகலாம்..! இந்தப் படமும் அந்த விதி கணக்கில்தான் சேரும்..!

மதுரையைச் சேர்ந்த அக்மார்க் ஒரிஜினல் எம்.பி.பி.எஸ். டாக்டரான சரவணனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மிகப் பெரிய ஆவல். முகத் தோற்றம் அழகாக இருப்பதால் இந்த எண்ணம் அவருக்கு வந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தனக்கான கதையைத் தேர்வு செய்ய வேண்டி, வசதியான இயக்குநரைத் தேடிப் பிடித்திருக்கிறார். அந்த இயக்குநரும் எப்படியாவது ஒரு படத்தை இயக்கம் செய்துவிட்டால் போதும். ஒருவேளை படம் ஹிட்டானால் நமக்கும் வாழ்க்கை கிடைக்கும். கூடவே, இப்போது வாழ்க்கையை ஓட்ட பணமாவது கிடைக்குமே என்ற ஆர்வத்திலும், எண்ணத்திலும் இதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் போலும்..!

மதுரையைக் களமாகக் கொண்ட இந்தப் படத்தின் கதைக் கரு நிஜமாகவே ஒரு கமர்ஷியல் படத்திற்கு பொருத்தமானது..! வித்தியாசமானதும்கூட..! 


நகரில் 2 இளம் பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையால் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் எப்படியாவது மக்களைச் சமாதானப்படுத்த நினைக்கிறார்கள். தீயணைப்புப் படையினர் தீ விபத்தில் இருந்து மக்களைக் காப்பது எப்படி என்று டெமான்ஸ்ட்ரேஷன் செய்து காண்பிப்பார்களே.. அதுபோல் காவல்துறையும் ஒரு கடத்தல் சம்பவத்தை கிரியேட் செய்து, அதனை அவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு காட்டி அவர்களைச் சாந்தப்படுத்த நினைக்கிறார்கள்.

மதுரையின் துணை கமிஷனர் ராஜ்கபூரின் ஏற்பாட்டில் ஹீரோவான சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் கடத்தல்காரராக நடிக்கிறார். ஒரு கான்ஸ்டபிளின் மகள் திருமணத்தன்று அந்தக் கல்யாண மண்டபத்தில் மணமக்களோடு மேலும் சிலரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு 1 கோடி ரூபாய் கேட்டு நாடகத்தைத் துவக்குகிறார் அகிலன். ஆனால் போகப் போக அது ஒரிஜினல் கடத்தலாகிறது. போதாக்குறைக்கு ராஜ்கபூரின் மகளையும் பிணைக் கைதியாக்கிக் கொள்கிறார் அகிலன். 10 நிமிடத்தில் முடிந்துவிடும் என்று நினைத்த இந்த கடத்தல் நாடகம் இரவு வரையிலும் நீடிக்க ஒரு பக்கம் மீடியாக்கள்.. இன்னொரு பக்கம் உயரதிகாரிகள்.. இவர்களைச் சமாளித்து எப்படி இந்தக் கடத்தல் நாடகத்தை சுமூகமாக முடிக்கிறார்கள் என்பதுதான் படம்..!

தயாரிப்பாளர் சரவணன் தான் ஹீரோவாக நடித்ததற்குப் பதிலாக வேறு பெரிய ஹீரோக்களை வைத்து, கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்திருந்தால் நிச்சயமாக பெரிய அளவுக்குப் பேசப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு கதையில் ஒரு நம்பகத் தன்மையும், வித்தியாசமும் இருக்கிறது.. இப்படிச் செய்திருந்தால் ஒரு சிறந்த புதுமுக  தயாரிப்பாளர் என்ற பெயராவது சரவணனுக்குக் கிடைத்திருக்கும்..!


நடிப்பென்று பார்த்தால் யாருக்குமே பெரிய ஸ்கோப் இல்லை. அகிலன் இன்னமும் போக வேண்டிய பாதையும், கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கு.. அம்ரீத் என்ற புதுமுகம் ஹீரோயின். ஹீரோவுக்கே ஸ்கோப் இல்லைன்னும்போது, அம்மணிக்கு என்ன இருந்திரப் போகுது..? வழக்கம்போல் ஹீரோவின் உதவும் கணத்தைப் பார்த்தவுடனேயே கண்ணில் லவ்வைக் காட்டிவிட்டு, பாடல் காட்சிகளிலும் ஆடிவிட்டு தனது பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்..!

கல்யாண மண்டபத்தில் சிங்கம்புலி கொஞ்சம் காமெடி செய்து உதவியிருக்கிறார். கஞ்சா கருப்பு, போண்டாமணி காமெடியெல்லாம் 1980-களிலேயே பார்த்து, பார்த்து சலித்துப் போன விஷயம்..! ஒரே ஆறுதல் ராஜ்கபூரின் அலட்டல் இல்லாத நடிப்பு..! இந்தப் படத்தில் சவுண்ட்விடாமலேயே வந்து போயிருக்கிறார்..! டிஜிட்டல் உதவியால், உள்ளூரிலேயே ஷூட்டிங்கை வைத்து, நடிகர், நடிகையர்களுக்குக்கூட சர்வீஸ் அபார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து முடிந்த அளவுக்கு சுருக்கமாக எடுத்திருக்கிறார்கள். 

ஒரு கடத்தல் விஷயம் என்றால் அதில் கொஞ்சமாவது பரபரப்பு வேண்டாமா..? அகிலன் திடீரென்று மனம் மாறுவதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அவர் மனம் மாறுவது அவரது வேலைக்கே உலை வைக்கிற விஷயம் என்பது தெரிந்தும் அவர் செய்வாரா..? வழக்கம்போல போலீஸை எவ்வளவு காமெடியாக காட்ட வேண்டுமோ அத்தனையையும் காட்டியிருக்கிறார்கள்.  

பல இடங்களில் லாஜீக் மீறல்.. காட்சிகளின் முன், பின் தவறுதலான சேர்க்கைகள்.. ஒரு காட்சிகூட மனதில் ஒட்டாத அளவுக்கு இருக்கும் லைட்டான இயக்கம்.. வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகள்.. ஒரு புதுமுக நடிகரின் படத்தில் இருக்கக் கூடாத அத்தனையையும் வைத்துக் கொண்டு பெரிய படம் போல் காட்டியிருக்கிறார்கள்..! வேறென்ன சொல்ல..? 

திரு.சரவணன் அடுத்து தானே நடிக்காமல் ஒரு நல்ல இயக்குநரின் உதவியோடு  தயாரிப்புப் பணியை மட்டும் செய்தால், இத்திரையுலகம் நிச்சயம் அவரை அரவணைக்கும்..!

6 comments:

Ponchandar said...

இந்த மாதிரி படமெல்லாம் பார்க்கிறது எப்படி நேரம் ஒதுக்கிறீங்கன்னே தெரியலை ! ! !

உண்மைத்தமிழன் said...

அலுவலகப் பணிகளில் இதுவும் ஒன்று நண்பரே..!

M. Shanmugam said...

நல்ல விமர்சனம் தந்தமைக்கு நன்றி

Cinema News

Sampath said...

Looks like it is the copy of Korean film "Going by the book (2007)" ..

http://www.imdb.com/title/tt1193460/?ref_=fn_al_tt_1

http://en.wikipedia.org/wiki/Going_by_the_Book

உண்மைத்தமிழன் said...

[[[M. Shanmugam said...

நல்ல விமர்சனம் தந்தமைக்கு நன்றி.]]]

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sampath said...

Looks like it is the copy of Korean film "Going by the book (2007)" ..

http://www.imdb.com/title/tt1193460/?ref_=fn_al_tt_1

http://en.wikipedia.org/wiki/Going_by_the_Book]]]

அடப்பாவிகளா..! இதுவும் காப்பியா..? சம்பத்ஜி நீங்க சொல்லலைன்னா எனக்கு மட்டுமில்ல இங்க இருக்குற யாருக்குமே தெரிஞ்சிருக்காது.. மிக்க நன்றி..!