கைப்புள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம்...!

13-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கைப்புள்ள ஸ்டாலின் என்ற தலைப்பில் பத்திரிகையாளர் அன்பு புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் சென்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த பல ஊழல்கள், மற்றும் முறைகேடுகளை தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை வைத்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

இத்தகவலை கூகிள் பஸ்ஸில் வெளியிட்டதுமே வழக்கம்போல தி.மு.க.வின் தொண்டரடிப் பொடியாழ்வார்களும், அடிமைகளும் அ, ஆ, இ, ஊ என்று துள்ளிக் குதித்தார்கள். கைப்புள்ள் என்ற பெயர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. இது தனி மனிதத் தாக்குதல் என்றெல்லாம் பொங்கித் தீர்த்தார்கள்.

ஸ்டாலின் வேறு கருணாநிதி வேறல்ல.. கருணாநிதி வேறு தி.மு.க. வேறல்ல.. தி.மு.க. வேறு ஊழல் வேறல்ல.. ஆக.. அடிப்படையே தவறாக இருக்கும்போது ஸ்டாலினை மட்டும் ஏதோ அவதாரப் புருஷனாக கற்பனை செய்து கொண்டு இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன் அவர்கள் அடிமைகள் என்று..!

சரி.. போகட்டும். அந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரையே கைப்புள்ள ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டன் ஒருவன் எழுதியிருக்கும் உண்மைக் கடிதம்தான்.. இந்தப் பிரச்சினையைத் தொட்டுவிட்ட பாவத்திற்காக இந்தக் கடிதத்தையும் தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன்.. 

இதில் பல கருத்துக்கள் அடிமை உணர்வில் எழுதப்பட்டிருப்பதால் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், பத்திரிகையாளர் அன்பு இப்போதும் தி.மு.க.வின் தொண்டர் என்பதாலும் அவரைக் குறி வைத்து துள்ளிக் குதிக்கும் லேட்டஸ்ட் தொண்டர்கள், அன்புவை பற்றியும் தெரிந்து கொள்ளட்டுமே என்பதால் வேலைவெட்டியை விட்டுவிட்டு தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன்..

படித்துப் பாருங்கள்..!

கைப்புள்ள மு.க.ஸ்டாலின்..!

எங்கள் எதிர்காலத்தின் நம்பிக்கையான அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு..


தலைவரிடமிருந்துதான் ஓய்வின்று உழைப்பதைக் கற்றோம். தலைவரிடம் இருந்துதான் சோதனைகளிலும், கழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற மன உறுதியைப் பெற்றோம். தலைவரிடம் இருந்துதான் கடிதம் எழுதும் கலையையும் கற்றுக் கொண்டோம்.. எந்த நெருக்கடியிலும் கழகத்தை நிமிர்த்திவிடும் ஆற்றல் தலைவரின் கடிதங்களுக்கு உண்டு. அந்தளவுக்கு என்னைப் போன்ற உடன்பிறப்புகளின் கடிதம் நிச்சயம் இருக்காது. அதே நேரத்தில், எங்கள் மனதில் உள்ளதை கடிதம் மூலமாக உங்களிடம் தெரிவிக்கும் ஆர்வத்தோடு நாங்கள் எழுதும் இந்தக் கடிதத்தை நீங்கள் நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

“இடுப்பு வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை. தோளில் போட்டிருக்கிற பளபள துண்டு பத்திரமாக இருக்க வேண்டும்..” என்று நினைத்தால் என்ன ஆகும்? அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியை, இயக்கத்தின் மீது பற்றுக் கொண்ட என்னைப் போன்ற உண்மையான தொண்டர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். நமக்குள்ளே எழுந்த போட்டி காரணமாகவும், நம்மவர்கள் சிலர் நடந்து கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவும், சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடைந்தோம் என்று 100 நாட்கள் கழித்து இப்போதுதான் தலைவருக்கு தெரிந்துள்ளது என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது.

தேர்தல் களத்தில் தி.மு.க. தோல்வியே காணாத கட்சியல்ல. நாம் ஆட்சியைப் பிடித்த தேர்தல்களைவிட, ஆட்சியைப் பிடிக்காத தேர்தல்கள்தான் அதிகம். தற்போது சந்தித்திருக்கும் தோல்வியைவிடவும் கடுமையான, மோசமான தோல்விகளை எல்லாம் கழகம் சந்தித்திருக்கிறது. அவற்றிலிருந்து கழகம் மீண்டும் வந்திருக்கிறது. இப்போதைய தோல்வி கழகத்தினர் மனதில் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. மீண்டெழ முடியுமா என்ற சந்தேகம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் நேற்று தோன்றிய கட்சிகள் எல்லாம் கவர்கின்றன. பெண்களின் வாக்குகளும், அந்தக் கட்சிகளுக்கே சாதகமாக அமைகின்றன. கொள்கையோ, கோட்பாடோ இல்லாமல் தோன்றிய கட்சிகள் வளர்ச்சி பெற்று வருகின்ற நிலையில், கொள்கை வழிவந்த நம் கழகம் ஏன் செல்வாக்கைப் பெருக்க முடியவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் உங்களுக்கு இருந்த அக்கறையில் கால் பங்காவது நமது ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களுக்கும், மாவட்டப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்கும், ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் இருந்ததா..?

உழைக்கின்ற தொண்டன் உழைத்துக் கொண்டேயிருக்கிறான். அவன் இன்னும் மைதா மாவை காய்ச்சி, பழைய பெடல் இல்லாத சைக்கிளில் “கலைஞர் வாழ்க.. உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே..” என்று வால் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறான். பழைய சைக்கிளுக்கு பெடல் கட்டை வாங்கிப் போட முடியவில்லை அவனுக்கு. பதவி கிடைத்தவர்களோ குவாலிஸ், ஸ்கார்பியோ, இன்னோவா என பலவித பல்லக்குகளில் ஊர்வலம் போகிறார்கள். நகரங்களும், ஒன்றியங்களும் நான்கைந்து கார்களுடன் பவனி வந்தால், பொதுமக்களின் நிலை அவர்களுக்கு எங்கே தெரியும்..?

தலைவரும், தளபதியும் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச் சேர்கிறதா என்பதைக்கூட மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கண்டு கொள்ளவில்லை. கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி சம்பாதித்த கழக நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை. நேற்று இவர் எப்படி இருந்தார். இன்றைக்கு எத்தனை வசதியாக இருக்கிறார் என்று மக்கள் தங்கள் மனதுக்குள் கேள்வி கேட்டார்கள். அதற்கான விடையை தேர்தலில் வெளிப்படையாகச் சொன்னார்கள். 

மக்களிடமிருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டார்கள் நம் கட்சியின் அதிரடி பிரபலங்கள். கட்சியை வளர்க்கவில்லை. ஆட்சியில் அறிவித்தத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை. தங்களையும், தங்கள் குடும்பத்தையுமே வளர்த்துக் கொண்டார்கள். “குடும்ப ஆட்சி” என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் சொன்னபோது நமக்கு கசப்பாக இருந்த்து. கோபம் வந்த்து. ஆனால் பொதுமக்களிடமும் அந்த எண்ணம் ஆழ்மனம்வரை ஊடுருவியிருக்கிறது என்பதுதான் உண்மை. மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை கழகத்தில் குடும்ப ஆதிக்கம் நிலவியதுதான் உண்மை. அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தலைவரும், நீங்களும் எதற்காக சிறை சென்றார்கள் என்பதை நாடறியும். கல்லக்குடி போராட்டத்திற்காகத் திருச்சியிலும், தாய் மொழியைக் காப்பதற்காகப் பாளையங்கோட்டையிலும் சிறைப்பட்டவர் தலைவர். ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில் மிசா சிறையில் சித்ரவதைகளைச் சந்தித்து தியாகத் தழும்பு பெற்றவர் நீங்கள். ஆனால், தலைவரின் குடும்பத்தில் மற்றவர்களும் சிறை சென்றிருக்கிறார்கள். அவர்கள் எந்தப் போராட்டத்திற்காகச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்? எந்தத் தியாகத் தழும்பைப் பெற்றார்கள்? இந்திய தேசத்தையே உலுக்கியெடுத்த அலைக்கற்றை ஊழலில் பிடிபட்டு அல்லவா சிறை சென்றிருக்கிறார்கள்.

உங்களால் அன்போடு வளர்க்கப் பெற்ற ஆ.ராசா, உங்கள் சகோதரி கனிமொழி ஆகியோர் 2ஜி அலைக்கற்றை ஊழலில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்கள். அலைக்கற்றை ஊழலில் நம் கட்சியின் பங்கு என்ன என்பது பற்றி கிராமத்தில் தள்ளுவண்டியில் தக்காளி, வெங்காயம் விற்பவனுக்குக்கூட தெரிந்திருக்கிறது.

கனிமொழியை ஜாமீனில் வெளியே எடுப்பதில் காட்டிய அக்கறை, கட்சியைக் காப்பாற்றுவதில் உங்களுக்குக்கூட இல்லை. நீங்கள் தி.மு.க.வின் கைப்பிள்ளையாக இருந்தீர்களே தவிர, உண்மைத் தொண்டனைப் பற்றி புரிந்து செயல்படவில்லை. தலைவருக்குத் தொண்டனைவிட, கட்சியைவிட குடும்பம்தான் பெரிதாகத் தெரிந்திருக்கிறது. அதைத்தான் மற்ற அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் செய்தார்கள். கட்சிக்காரர்களிடமே காசு வாங்கிக் கொண்டுதான் சிறு மாறுதல்கூட போட்டார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் பி.ஏ. கோபாலிடம் என் தங்கையின் இட மாறுதலுக்காக மனு கொடுத்தேன். 60,000 ரூபாய் கேட்டார். அமைச்சரிடம் சொன்னேன். அவரும் “என்ன கோபால்..? இவர் கட்சிக்காரர்..” என்றார். கோபாலோ, “என்னண்ணே பண்ணுறது..? இந்த மாசம் முதல்வர் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது 2 கோடியாச்சே..?” என்றார் சாதாரணமாக..

கடைசியில் பொண்டாட்டி நகைகளை அடகு வைத்து 50,000 ரூபாய் கொடுத்தேன். 3 மாதங்கள் சென்னைக்கு அலைந்தவகையில் செலவு 15,000. கடைசிவரை மாறுதலும் கிடைக்கவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. கடைசியில், மாவட்ட கல்வி அதிகாரியிடம் 10,000 ரூபாய் கொடுத்துதான் மாறுதல் பெற்றேன்.

13 ஆண்டு காலம் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, இளைஞரணியை கட்டியமைத்து கழகத்தைக் காக்கும் பணியில், தலைவருக்குத் துணை நின்றவர் நீங்கள். கழகத்தில் பிளவு ஏற்பட்டு சிலர் தனிக்கட்சி கண்டபோது, கழகத்தின் கட்டுக்கோப்பு சிதறாமல் கட்டிக் காத்ததில் உங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இத்தனை செயல்களையும் செய்தும்கூட, அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு தளதி அவர்கள் நான்கு முறை எம்.எல்.ஏ.வாக வேண்டியிருந்தது.

தலைவரின் உடல்நிலைக் காரணத்தினாலேயே துணை முதல்வர் பதவி கிடைத்தது. கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளைப் பெறுவதற்கு 40 வருட காலம் கழகப் பணியாற்ற வேண்டியிருந்தது. இத்தனை கால தாமதங்களுக்கும் காரணம், நீங்கள் நம் தலைவரின் பிள்ளை என்பதுதான்.

தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் நிலை என்ன..? அமைச்சர் பதவிகளையும், எம்.பி. பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் உடனடியாகக் கேட்டு வாங்குகிறார்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் மிரட்டி வாங்குகிறார்கள். தலைவரின் மகன் அழகிரி, மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர். பேரன் தயாநிதி மாறன், மத்திய அமைச்சர். மகள் கனிமொழியின் மனம் கவர்ந்த ஆ.ராசாவுக்கும்(?) மத்திய அமைச்சர் பதவி. இப்படி கொடுத்தால் தொண்டன் என்ன செய்வான்..?


கட்சிக்காகச் சொத்தை விற்றவனுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர் பதவிகூட கொடுக்கப்படவில்லை. அப்படியே சீட் கொடுத்தாலும் மாவட்டச் செயலாளர் உத்தரவின்பேரில் ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர்கள் தோற்கடித்துவிடுவார்கள். அப்புறம் எப்படி கட்சியில் உண்மைத் தொண்டன் இருப்பான்..?

வாரிசு அரசியலுக்குப் பெயர் பெற்றது காங்கிரஸ் கட்சியும், நேரு குடும்பமும்தான். ஆனால் அங்குகூட அந்தக் குடும்பத்திலிருந்து ஒரு வாரிசு மட்டும்தான் பொறுப்புக்கு வருகிறார். சோனியா கட்சித் தலைவராக ஆட்சிக்கு வழிகாட்டுகிறார் என்றால், ராகுல்காந்தி இதுவரை மத்திய அமைச்சராகாமல் இருக்கிறார். பிரியங்கா எந்தப் பொறுப்புக்கும் வரவில்லை. ஆனால் கழகத்தின் நிலைமை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு, திண்டுக்கல் ஆத்தூரில் சீட்டு.  அவர் மகன் செந்திலுக்கு, பழனியில் சீட்டு. பழனியில் கட்சிக்காரன் எவனுமே இல்லையா என்ன..?

திருச்சியில் நேரு குடும்பம் ஆடிய ஆட்டத்திற்கு அளவே இல்லை. நேருவின் தம்பி ராமஜெயத்தை கட்சிக்காரர்கள் “எம்.டி.” என்றுதான் அழைக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சவுண்டையா, ராமஜெயம் இருவர் அணி, மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டுவிட்டார்கள். இதில் பல தொண்டர்களின் ஐந்து, பத்து சென்ட் இடங்கள்கூட தப்பவில்லை. தொண்டர்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள்.

நேரு லால்குடி அருகே உள்ள பூவாளூரில் கந்தன் ரைஸ் மில்லை விலைக்கு வாங்கி 10 கோடி ரூபாய் செலவில் அதி நவீன அரிசி ஆலையாக மாற்றியுள்ளார். அந்த அரிசி ஆலைக்கு எதிரே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பாவம், அந்த அரிசி ஆலையால் 2000 பள்ளி மாணவர்கள் தினமும் பாதிக்கப்படுகிறார்கள்.

தி.மு.க. கட்சிக்கே முதலில் கார் வாங்கிக் கொடுத்தவர் பூவாளூர் ஆனந்தன். திருச்சி மாவட்ட தி.மு.க.வில் “பெரியவர் குடும்பம்” என்று அன்பாக அழைப்பார்கள். அவர் குடும்பமோ, கட்சிக்காக சொத்தையே அழித்தவர்கள். ஆனால், இன்று அவர்கள் குடும்பமே அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.

தலைவரே, “என்னய்யா பூவாளூர்க்காரர்களே..” என்று அன்பாக அழைப்பார். 1989-க்கு பின்பு பூவாளூர்க்காரர்கள் குடும்பம் தலைவருக்கு மறந்துவிட்டது. ஏனென்றால் தலைவருக்கு மாமூல் கொடுப்பவராக கே.என்.நேரு மாறிவிட்டார். பூவாளூர் ஆனந்தன் குடும்பத்தை அரசியலிலிருந்தே ஓரம்கட்டிவிட்டார்கள்.

நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போது மேயராக இருக்கும் ஏ.எல்.சுப்ரமணியத்தின் மகன் இலட்சுமணனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட 3 கோடி ரூபாயில், 1 கோடியை செலவு செய்துவிட்டு, மீதி 2 கோடி ரூபாய் அவர்கள் வீட்டு கஜனாவுக்கு போய்விட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். பொன்முடி கிளாஸ்மேட் என்பதால் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக ராதாமணி அறிவிக்கப்பட்டார். கடைசியில் சி.பி.எம். வேட்பாளரிடம் தோற்றுப் போனார். ராதாமணிக்குப் பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சியாருக்கு கொடுத்திருந்தால், விக்கிரவாண்டியில் தி.மு.க.தான் வெற்றி பெற்றிருக்கும்.


இப்படி அனைத்து மாவட்டங்களிலும் கட்சிக்காக உழைத்தவர்கள், ஓரங்கட்டப்பட்டார்கள். அதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. அ.தி.மு.க.வில் உண்மையாக உழைக்கிற எந்தத் தொண்டனுக்கும் என்றைக்காவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் கழகத்தில் எவ்வளவு உழைத்தாலும், பதவியில் நீண்ட காலமாக இருக்கிறவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் எல்லாம் கிடைக்கும் என்ற நிலைமை இருக்கிறது.

தப்பு செய்தால் தலைமை தூக்கியெறிந்துவிடும் என்ற பயம் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இருக்கிறது. நம் கழகத்திலோ, தப்பு செய்துவிட்டு தலைவர் குடும்பத்தினரில் யாரையாவது பிடித்து சரி பண்ணிவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. இப்படியிருந்தால் உண்மைத் தொண்டர்கள் எப்படி ஈடுபாட்டோடு கட்சிப் பணியாற்றுவார்கள்..? புதியவர்கள் எப்படி கட்சிக்குள் வருவார்கள்..?

தலைவர் தன் 75 ஆண்டு கால பொது வாழ்வில் சந்தித்திராத சோதனைகளையும், சோகங்களையும் மட்டுமன்றி அவமானங்களையும் சந்திப்பது இப்போதுதான். எதற்கும் கலங்காத உள்ளம் படைத்த அவர், கலங்கி நிற்பதை உண்மையான உடன்பிறப்புகள் அறிவார்கள்.

தலைவரைச் சுற்றி நிற்கும் ஜால்ரா கூட்டங்களும், ஜால்ரா ஆசாமிகளும் உண்மைகளை மறைப்பதையே இன்றுவரை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். 

ஜெயலலிதாவின் பதவியேற்புக்கு இடது சாரி தலைவரான பரதனும் வருகிறார். இந்துத்துவா கொள்கை கொண்ட நரேந்திர மோடியும் வருகிறார். இவர்கள் இருவர் பக்கமும் சாயக்கூடிய சந்திரபாபு நாயுடுவும் வருகிறார். எல்லாத் தரப்பிலிருந்தும் அவருக்கு ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு இன்று தேசிய அளவில் எந்தக் கட்சி துணையாக இருக்கிறது..? கூட இருந்தே கழுத்தறுத்துவிட்டது காங்கிரஸ். நமது தரப்பு நியாயங்களை பிற கட்சிகளிடம் எடுத்துச் சொல்வதற்குக்கூட நம்மிடம் சரியான தலைவர்கள் இல்லாமல் போனது ஏன்..?

உண்மையான விசுவாசத்துடன் கழகப் பணியாற்றுபவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அதிகார மையங்கள் கழகத்தில் அதிகளவில் இருப்பதால், ஏதேனும் ஒரு மையத்தின் துணையுடன் சமாளித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு பொறுப்பில் இருப்பவர்கள் நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள். 

அதிகார மையங்கள் நீடிக்கும்வரை, கழகத்திற்கான சோதனைகளும், தோல்விகளும் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். மேல் மட்டத்திலிருந்து மாவட்ட நகர ஒன்றியங்கள் வரையிலான அதிகார மையங்கள் கலைக்கப்பட வேண்டும். கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.


புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென்றால் மாணவரணியிலும், இளைஞரணியிலும் புதிய உறுப்பினர்கள் பெருக வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணி மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கானவர்கள் தேர்தல் நேரத்தின்போது எங்கே சென்றார்கள்..? ஆளும் கட்சியாக இருந்ததால் அவரவரும் மாநாட்டுக்கு ஆட்களைத் திரட்டி வந்தார்கள்.

தேர்தல் தோல்வி சாதாரணமானது. கழக அமைப்பு என்பது வலிமையானது. கழகம் வலிமையாக இருந்தால் அடுத்தத் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறலாம். அமைப்பு சீர்குலைந்தால் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும் வெற்றி பெற முடியாது. என்னைப் போன்ற உடன்பிறப்புகளைவிட தளபதி அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

சட்டசபையில் உங்கள் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சிகள் பலத்துடன் திகழ முடியும். அது, ஆளும்கட்சிக்கு பெரும் சவாலைக் கொடுக்கும். இந்த நேரத்தில், 2001-2006 சட்டசபைக் கூட்டங்களை மனதில் கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது.

முதல்வர் ஜெயல்லிதா, தி.மு.க.வினரைப் பார்த்து, “எங்கே உங்கள் தளபதி.. ஓடி ஒளிந்துவிட்டாரா?” என கேட்டது, தி.மு.க.வினரின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எந்தப் பிரச்சினையையும் துணிவோடும், எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தாமல் பேசும் முதல்வர் ஜெயல்லிதாவின் பேச்சுக்கு, ஈடுகொடுக்கும்வகையில் செயல்பட வேண்டிய நெருக்கடி உள்ளது.

சட்டமன்றத்தில் கட்சியை வழி நடத்த இருப்பதுபோல, மக்கள் மன்றத்திலும் நீங்கள் வழி நடத்த வேண்டும். இது என் ஒருவனின் கருத்தல்ல..

ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மைத் தொண்டர்களின் கருத்து. தமிழக மக்களின் கருத்து.
எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்

அப்பாவித் தொண்டன்


21 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...
This comment has been removed by the author.
எஸ்.ஏ.சரவணக்குமார் said...
This comment has been removed by the author.
எஸ்.ஏ.சரவணக்குமார் said...

போங்கணே..! வேல மெனக்கெட்டு இத ஒக்காந்து தட்டச்சி பண்ணுன நேரத்துக்கு எங்கயாவது ஜாப் டைப்பிங் செஞ்சிருந்தா ஒருவேள சோத்துக்கு பிரயோஜனப்பட்டு இருக்கும்.
இருந்தாலும், உங்க உழைப்பு மலைக்க வைக்கிறது! தட்டுங்க, தட்டுங்க படிக்கத்தான் நாங்க இருக்கோமே ....! :)))

Udhay said...
This comment has been removed by a blog administrator.
MANO நாஞ்சில் மனோ said...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் பி.ஏ. கோபாலிடம் என் தங்கையின் இட மாறுதலுக்காக மனு கொடுத்தேன். 60,000 ரூபாய் கேட்டார். அமைச்சரிடம் சொன்னேன். அவரும் “என்ன கோபால்..? இவர் கட்சிக்காரர்..” என்றார். கோபாலோ, “என்னண்ணே பண்ணுறது..? இந்த மாசம் முதல்வர் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது 2 கோடியாச்சே..?” என்றார் சாதாரணமாக..//

ஒரு மாசத்துக்கு ரெண்டு கோடியா, நாசமாபோவ இதெல்லாம் எவன் வீட்டு பணம்...??? இப்பிடியா மக்களை கொள்ளையடிப்பாங்க!!!!

Ponchandar said...

யாரப்பா அங்கே ! ! ! தலைவருக்கு உடனடியாக இதை FAX செய்யவும் ! ! !


(அப்படியே செய்தாலும் அவர் கைக்கு போகாது)

குடிமகன் said...

//பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் பி.ஏ. கோபாலிடம் என் தங்கையின் இட மாறுதலுக்காக மனு கொடுத்தேன். 60,000 ரூபாய் கேட்டார். அமைச்சரிடம் சொன்னேன். அவரும் “என்ன கோபால்..? இவர் கட்சிக்காரர்..” என்றார். கோபாலோ, “என்னண்ணே பண்ணுறது..? இந்த மாசம் முதல்வர் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது 2 கோடியாச்சே..?” என்றார் சாதாரணமாக..//

இதெல்லாம் சாதாரணமப்பா...

Hai said...

ஐயோ பாவம் இன்னும் திருந்துவாங்கன்னு நினைக்கிறாங்க பாருங்க. இருக்குற கேசில் எல்லாம் ஜாமீன் வாங்குரதுக்குள்ள அடுத்த தேர்தல் வந்துரும்.

settaikkaran said...

அண்ணே! வந்து பார்த்தபோது தமிழ்மணம் ஓட்டு 8/13-ன்னு இருந்திச்சு! ரெண்டுமே ராசியில்லாத நம்பர்னு சொல்லுவாங்கன்னு ஒண்ணைச் சேர்த்துட்டேன். (நாம என்ன மஞ்சள்துண்டா போட்டுக்க முடியும்?)

ஒரு வாசகன் said...

படிக்க படிக்க ரத்தம் கொதிக்குதையா..... இன்னமும் கருணாநிதியை நம்புபவர்கள் இருக்கின்றார்களே... அதிலும் ஒரு பிரபல பதிவர் திமுக - கருணாநிதி பற்றி யாராவது விமர்சித்தால் தொலைத்துவிடுவார். விரைவில் நீங்களும் வாங்கிக்கட்டில் கொள்ளப்போகின்றீர்கள் :-)

raja said...

Nanjil Sir,

ippo try panni parunga... freeya panni kudukurangalam. -:)

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.ஏ.சரவணக்குமார் said...

போங்கணே..! வேல மெனக்கெட்டு இத ஒக்காந்து தட்டச்சி பண்ணுன நேரத்துக்கு எங்கயாவது ஜாப் டைப்பிங் செஞ்சிருந்தா ஒருவேள சோத்துக்கு பிரயோஜனப்பட்டு இருக்கும். இருந்தாலும், உங்க உழைப்பு மலைக்க வைக்கிறது! தட்டுங்க, தட்டுங்க படிக்கத்தான் நாங்க இருக்கோமே!:)))]]]

சரவணக்குமார்.. அட்வைஸுக்கு நன்றி.. என்னதான் இருந்தாலும், வலைப்பதிவுக்காக சில கஷ்டங்களை ஏத்துக்கத்தான் செய்யணும்.. இதுவும் ஒரு தொழில் சார்ந்த சேவைதானே..?

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் பி.ஏ. கோபாலிடம் என் தங்கையின் இட மாறுதலுக்காக மனு கொடுத்தேன். 60,000 ரூபாய் கேட்டார். அமைச்சரிடம் சொன்னேன். அவரும் “என்ன கோபால்..? இவர் கட்சிக்காரர்..” என்றார். கோபாலோ, “என்னண்ணே பண்ணுறது..? இந்த மாசம் முதல்வர் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது 2 கோடியாச்சே..?” என்றார் சாதாரணமாக..//

ஒரு மாசத்துக்கு ரெண்டு கோடியா, நாசமா போவ... இதெல்லாம் எவன் வீட்டு பணம்...??? இப்பிடியா மக்களை கொள்ளையடிப்பாங்க!!!!]]]

பின்ன ச்சும்மாவா? கொள்ளையடிச்சுத்தானே 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்காங்க.. இதுக்குக் கிடைச்ச தண்டனைதான் இப்ப ஒவ்வொருத்தரா உள்ள போயிக்கிட்டிருக்காங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

யாரப்பா அங்கே ! ! ! தலைவருக்கு உடனடியாக இதை FAX செய்யவும் ! ! !

(அப்படியே செய்தாலும் அவர் கைக்கு போகாது)]]]

போனாலும் ஒண்ணும் வேகாது பொன்சந்தர்..! சம்பாதிக்கிறதே குறியா இருக்கிறவங்களுக்கு சாதாரண தொண்டனை பற்றி என்ன கவலை இருக்கப் போவுது..?

உண்மைத்தமிழன் said...

[[[குடிமகன் said...

//பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் பி.ஏ. கோபாலிடம் என் தங்கையின் இட மாறுதலுக்காக மனு கொடுத்தேன். 60,000 ரூபாய் கேட்டார். அமைச்சரிடம் சொன்னேன். அவரும் “என்ன கோபால்..? இவர் கட்சிக்காரர்..” என்றார். கோபாலோ, “என்னண்ணே பண்ணுறது..? இந்த மாசம் முதல்வர் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது 2 கோடியாச்சே..?” என்றார் சாதாரணமாக..//

இதெல்லாம் சாதாரணமப்பா...]]]

அரசியல் வாழ்க்கைலதானே..!!!!

உண்மைத்தமிழன் said...

[[[அரைகிறுக்கன் said...

ஐயோ பாவம் இன்னும் திருந்துவாங்கன்னு நினைக்கிறாங்க பாருங்க. இருக்குற கேசில் எல்லாம் ஜாமீன் வாங்குரதுக்குள்ள அடுத்த தேர்தல் வந்துரும்.]]]

ஹா.. ஹா.. ஹா.. பளீச் கமெண்ட்.. ஐ லைக் இட்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

அண்ணே! வந்து பார்த்தபோது தமிழ்மணம் ஓட்டு 8/13-ன்னு இருந்திச்சு! ரெண்டுமே ராசியில்லாத நம்பர்னு சொல்லுவாங்கன்னு ஒண்ணைச் சேர்த்துட்டேன். (நாம என்ன மஞ்சள் துண்டா போட்டுக்க முடியும்?)]]]

மிக்க நன்றி சேட்டைக்காரன்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

படிக்க படிக்க ரத்தம் கொதிக்குதையா..... இன்னமும் கருணாநிதியை நம்புபவர்கள் இருக்கின்றார்களே... அதிலும் ஒரு பிரபல பதிவர் திமுக - கருணாநிதி பற்றி யாராவது விமர்சித்தால் தொலைத்துவிடுவார். விரைவில் நீங்களும் வாங்கிக் கட்டில் கொள்ளப்
போகின்றீர்கள் :-)]]]

அதெல்லாம் வாங்கியாச்சு நண்பரே.. கூகிள் பஸ்ஸில் நேற்று சண்டையெல்லாம் நடந்து முடிந்துவிட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[raja said...

Nanjil Sir,

ippo try panni parunga... freeya panni kudukurangalam. -:)]]]

இப்பவா..? அடப் போங்கப்பா.. இப்பவும் காசுதான்.. காசில்லாமல் ஒரு காரியமும் நடக்காது..!

Prakash said...

Why you have not yet wrote about this : 200 கோடி மதிப்புள்ள , சென்னையின் மையபகுதிலுள்ள, (செம்மொழி பூங்கா எதிரில்) 115 கிரௌண்ட் அரசு நிலத்தை தனியாருக்கு (தோட்டகலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகருக்கு) தாரைவார்த்து கொடுக்கப்பட்டது உண்மையே......

---- சென்னை கலெக்டர் ஒப்புதல் அது அரசு நிலம்மல்ல அதனால் கொடுத்தோம்....

20 வருஷம் குடியிருந்தாலும், பட்டா கொடுக்காத அரசு, அதிமுக பிரமுகர் கேட்டவுடன் 115 கிரௌண்ட் நிலத்தை தூக்கி கொடுத்தது எப்படி...

http://time​sofindia.indiatimes.​com/city/chennai/Col​lector-refutes-MKs-c​harge-says-property-​on-Cathedral-Rd-not-​govts/articleshow/10​308598.cms

உண்மைத்தமிழன் said...

[[[Prakash said...

Why you have not yet wrote about this : 200 கோடி மதிப்புள்ள , சென்னையின் மையபகுதிலுள்ள, (செம்மொழி பூங்கா எதிரில்) 115 கிரௌண்ட் அரசு நிலத்தை தனியாருக்கு (தோட்டகலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகருக்கு) தாரைவார்த்து கொடுக்கப்பட்டது உண்மையே......

---- சென்னை கலெக்டர் ஒப்புதல் அது அரசு நிலம்மல்ல அதனால் கொடுத்தோம்....

20 வருஷம் குடியிருந்தாலும், பட்டா கொடுக்காத அரசு, அதிமுக பிரமுகர் கேட்டவுடன் 115 கிரௌண்ட் நிலத்தை தூக்கி கொடுத்தது எப்படி...?]]]

இது ஆத்தா ஸ்டைல் சுருட்டல்..! அக்ரி கிருஷ்ணமூர்த்திக் கொடுத்தாலும் ஒன்றுதான்.. ஜெயலலிதாவுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்..! கேடு நினைப்பவன் கேடாய்ப் போவான் என்று பேப்பரிலேயே படித்துக் கொண்டிருக்கிறோமே..? என்றைக்குத்தான் அதனை கண்கூடாகப் பார்ப்பது..?