கலைஞர் டி.விக்குள் வந்த பணம் கடனா...? ஊழலா...? பங்கா...?

27-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆ.ராசாவின் தயவில், ஏர்​டெல், பி.எஸ்.​என்.எல். தவிர, கிட்டத்தட்ட மற்ற அனைத்துத் தொலைபேசி நிறுவன அதிகாரிகளும் திகார் ஜெயில் நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தக் கட்டக் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன!

கடந்த 2-ம் தேதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் யுனிடெக் வயர்​லெஸ் (தமிழ்நாடு) லிமி​டெட், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய மூன்று நிறுவனங்கள் உட்பட 12 நபர்களைக் குற்றவாளி​களாக அறிவித்தது.

இந்த விவகாரத்தில் கைதான ஷாகித் பால்வா மட்டுமே, டெலிகாம் நிறுவனம் சம்பந்தப்​பட்டவர். மற்ற டெலிகாம் நிறுவன உரிமையாளர்களை சி.பி.ஐ. அழைத்து விசாரித்ததே தவிர, யாரையும் கைது செய்ய​வில்லை. ஆனால், சி.பி.ஐ. அவர்களின் பெயர்களை நேரடியாகக் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

இந்த டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும், பலமிக்க தொழில் அதிபர்களின் பின்புலத்தில் இருந்த காரணத்தால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் சி.பி.ஐ. நினைத்ததை சாதித்தது.

குற்றப் பத்திரிகையில் இடம் பெற்று இருந்த மூன்று நிறுவனங்களுக்கும் பயம் தொற்றிக்கொண்டது. 'இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, சி.பி.ஐ. நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரும்’ என்று தகவல் வரவே, இந்த டெலிகாம் நிர்வாகிகள் கடந்த 13-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

ஷாகித் பால்வாவின் கூட்டாளியும் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் மற்றும் டி.பி. ரியாலிட்டி எம்.டி. ஆகிய பொறுப்பில் உள்ள வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் டெலிகாம் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கௌதம் தோஸி, ஏ.டி.ஏ.ஜி. தலைவர் சுரேந்தர பைப்பாரா, இதே நிறுவனத்தின் உதவித் தலைவர் ஹரி நாயர் ஆகிய ஐந்து பேரும் முன் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவர்களுக்காக, முகுல் ரோத்தாக், கே.டி.எஸ்.துள்சி போன்ற பிரபல வழக்கறிஞர்கள் ஆஜாரானார்கள்.

''இவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு​களுக்கு, ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனை​யோ கிடைக்கப்போவது இல்லை. ஒரு வேளை, குற்றச்சாட்டு நிரூபணம் ஆனாலும், அதிகபட்சம் ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரை தண்டனை கொடுக்கப்படும். சி.பி.ஐ. புலன் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, இவர்களைக் கைது செய்யவில்லை. சி.பி.ஐ. அழைத்த நேரத்தில் எல்லாம் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். இப்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், இவர்களைக் கைது செய்ய வேண்டியது இல்லை. அப்படிக் கைது செய்தால், ஜாமீனில் விடுவிக்க வேண்டும்!'' என்று வாதாடினார்கள்.

இவர்களது மனுவுக்குப் பதில் அளித்த சி.பி.ஐ., ''இவர்களை வெளியேவிட்டால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களைக் கலைத்து​ விடுவார்கள்!'' என்றது. மூன்று நாட்கள் தொடர்ந்து வாதங்கள் நடந்தன. இறுதியில், கடந்த 20-ம் தேதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி, இவர்களது முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தததோடு, ஐந்து பேர்களையும் நீதிமன்றக் காவலில், திகார் ஜெயிலிலுக்கு அனுப்பினார். 

ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயங்கா கதறி அழ, ஆ.ராசாவும் ஷாகித் பால்வாவும் அவரைத் தேற்றினார்கள். ரிலையன்ஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டனர்.

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத் தலைவர் சுரேந்திர பைப்பாரா, தனக்கு உள்ள இருதய நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைச் சொல்ல, சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித், 'அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதில் தடை இல்லை’ என்றார். ஆனால் நீதிபதி அதை ஏற்றுக் கொள்ள​வில்லை. 'அவரது உடல்​நிலை அவ்வளவு மோசம் இல்லை’ என்றும், 'இந்த சமயத்தில் இவர்கள் வெளி​யே இருந்தால், விசாரணை பாதிக்கும்’ என்று கூறி முன் ஜாமீன் தர மறுத்தார்.

இதன் எதிரொலியாக இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் சந்தையில் மளமளவென இறங்கின. டி.பி. ரியாலிட்டி நிறுவனம் 2-ஜி ஊழலுக்குப் பின்னர் 77 சதவிகிதம்வரை பங்கு மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்தது. இதே மாதிரி, யுனிடெக் நிறுவனத்துக்கும் 5,000 கோடிவரை நஷ்டமாம். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒட்டு மொத்தமாக சுமார்  26,000 கோடிவரை இழந்து உள்ளது.

கைதாகியுள்ள வினோத் கோயங்காவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஷாகித் பால்வாவைப் போன்று கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தந்தையின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலில் குதித்தார்.

குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட், ஹோட்டல், பால் என்று 30 விதமான தொழில்​களில் முத்திரை பதித்தவர். சரத்பவார் குடும்பத்தினரோடு பல தொழில்களில் சம்பந்தப்பட்டவர். அதுவும், ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சரான பின்னர், வினோத் கோயங்காவின் ரியல் எஸ்டேட் தொழில் கிடுகிடுவென வளர்ந்தது. பின்னர், ஷாகித் பால்வாவுடன் சேர்ந்து, டி.பி. ரியாலிட்டி நிறுவனத்​தை உருவாக்கி, டெலிகாம் பிசின​ஸில் ஈடுபட்டார்.

அனுபவ ரீதியில் வினோத் கோயங்காவின் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் வளர்ந்தது என்றால், சஞ்சய் சந்திராவும் அவரது தந்தையும் யுனிடெக் நிறுவனத்தை முறைப்படி தொழில் நுட்பத்தைப் படித்து வந்து உயர்த்தினார்கள்.

சஞ்சய் சந்திராவின் தந்தை ரமேஷ் சந்திரா, ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து, ரூர்க்கி அரசு ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர். தந்தை வழியிலேயே மண்ணியல் சம்பந்தப்பட்ட தொழில்​ நுட்பப் படிப்பைப் படித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்து, அங்கேயே பணியாற்றினார் சஞ்சய்.

பின்னர் 1965-ல் தந்தையும் மகனும், மண்ணியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக் கூடங்களைத் தொடங்கி, ரியல் எஸ்டேட்டில் இறங்கினார்கள். அதன் பின்னர் மின்சாரம், ஹோட்டல், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று ஒவ்வொன்றாகக் கால் பதிக்க, இவர்களின் சொத்து மதிப்பு  40,000 கோடி வரை உயர்ந்தது. 

ஷாகித் பால்வாவின் டி.பி. ரியாலிட்டி மற்றும் டைன​மிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து வந்த பணம், குஸேகான் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்துக்கு வந்து, பின்னர் சினியுக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. அதன் பிறகு, சினியுக் நிறுவனம் அதை, கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்கிறது.  டி.பி. ரியாலிட்டி, குஸேகான், சினியுக் ஃபிலிம்ஸ் என்று வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், இயக்குநர்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவர்கள்.

கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட பணம் தங்களுக்குத் திரும்பிவிட்டது என்று இவர்கள் கணக்கு சொல்ல, சி.பி.ஐ. சந்தேகித்துக் கைது செய்துள்ளது. சினியுக் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் முரானி, பணத்தை கலைஞர் டி.வி-க்கு முன் பணமாகக் கொடுத்தாகக் குறிப்பிட்டார். தங்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்த குஸேகான் நிறுவனம், இதை கலைஞர் டி.வி-க்கு கொடுக்கக் கூறியதாக முரானி குறிப்பிட்டார்.

குஸேகான் நிறுவனம், பணத்தைக் கடனாகக் கொடுத்ததாகவும், பின்னர் கலைஞர் டி.வி. பங்குகளை வாங்கத் திட்டம் இட்டதாகவும், ஆனால் விலை வித்தியாசத்தில் பணத்தைத் திரும்பப் பெற்றதாகவும் குறிப்பிட்டது. ஆனால், ஆதாரங்​களை சரியாகக் கொடுக்கத் தவறியதற்காக, குஸேகான் நிறு​வனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பால்வாவையும், ராஜீவ் பி.அகர்வாலையும், சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது.


 

இந்த விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி போன்றோர் சிக்குவார்களா அல்லது சரத்குமார் மட்டும் சிக்குவாரா என்று கேள்​விகள் எழுந்த்துள்ள நிலையில், இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சரத்குமார், கனிமொழி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கொடுக்கப்பட்டதற்காகவே, ஆ.ராசா சம்பந்தப்பட்ட கட்சியின் தொ​லைக்காட்சிக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. கருதுகிறது. ஆனால் சரத்குமாரோ, ''கடனாக வாங்கினோம், பின்னர் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கொடுத்துவிட்டோம்!'' என்று கூறியுள்ளார்.

கடன் கொடுத்த காரணத்தை சி.பி.ஐ. கேட்டபோது, குஸேகான் நிறுவனத்தினர், 'போர்டு மீட்டிங்கில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக’ சொன்னது. அந்த மீட்டிங்கின் மினிட்ஸ் குறிப்பு என ஒரு நகலை மட்டும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தனர். ஒரிஜினல் மினிட்ஸ், கலைஞர் டி.வி-க்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால் சரத்குமார், 'எங்களுக்கு தகவல்தான் கொடுத்தார்களே தவிர, குறிப்பு அனுப்பவில்லை’ என்று பதில் கொடுத்தார்.

ஒரிஜினல் மினிட்ஸ் கொடுக்காத குஸேகான் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஆசிப் பால்வாவும் ராஜீவ் பி. அகர்வாலும் கைது செய்யப்​பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கைதுகள் இனி தொடரலாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-05-2011

21 comments:

க ரா said...

எல்லாருக்கும் தெரிஞ்சத எழுதாம எதுனாச்சும் புதுசா ஒசிச்சு எழுதலாம்ல அண்ணாச்சி :)

Trails of a Traveler said...

கைதுகள் தொடர்வது மட்டும் போறாது. இவர்களிடமிருந்து நஷ்டத்துக்கு உண்டான ஈடு தொகையையும் பெற வேண்டும்!

Ram

சசிகுமார் said...

தலைவர் திரும்பவும் ஜெயிச்சிட்டா இதெல்லாம் மறைந்து போய் விடும்.

ராஜ நடராஜன் said...

//சரத்பவார் குடும்பத்தினரோடு பல தொழில்களில் சம்பந்தப்பட்டவர். //

அண்ணே!இந்த கோண வாயனும் பெரிய திருடன் மற்றும் பாதாள உலக மக்களோடு தொடர்பு கொண்ட ஆள்ன்னு செய்திகள் கசிய விடப்பட்டது.

நம்மூருக்கு எப்படி தாத்தாவோ அதே மாதிரி மராட்டிய மாநிலத்துக்கு இந்த ஆள்.அன்னா ஹசாரே கொதித்து எழுந்ததற்கும் கூட இந்தாளு ஒரு காரணம்.பார்த்து ஏதாவது சுனியம் இந்தாளுக்கு செய்யுங்கண்ணே.

sasibanuu said...

Why always copy & paste from Junior Vikatan & all. Have you got permission from them. First, this is one of the corruption

subha said...

pls stop copying

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி said...

எல்லாருக்கும் தெரிஞ்சத எழுதாம எதுனாச்சும் புதுசா ஒசிச்சு எழுதலாம்ல அண்ணாச்சி :)]]]

எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னு பொத்தாம்பொதுவா சொல்லாதீங்க தம்பி..!

ஜூ.வி. படிச்சவங்களுக்குத் தெரியும். படிக்காதவங்களுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[Ram said...

கைதுகள் தொடர்வது மட்டும் போறாது. இவர்களிடமிருந்து நஷ்டத்துக்கு உண்டான ஈடு தொகையையும் பெற வேண்டும்!

Ram]]]

எனக்கும் இதே ஆசைதான். ஆனால் இந்தத் தரித்திரம் பிடித்த இந்திய அரசியலில் அது முடியாது போலிருக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[சசிகுமார் said...

தலைவர் திரும்பவும் ஜெயிச்சிட்டா இதெல்லாம் மறைந்து போய் விடும்.]]]

ஜெயிக்கக் கூடாது சசிகுமார்..! இவர்கள் இன்னுமொரு முறை ஆட்சிக்கு வந்தால் தமிழகமே காணாமல் போய்விடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//சரத்பவார் குடும்பத்தினரோடு பல தொழில்களில் சம்பந்தப்பட்டவர்.//

அண்ணே! இந்த கோண வாயனும் பெரிய திருடன் மற்றும் பாதாள உலக மக்களோடு தொடர்பு கொண்ட ஆள்ன்னு செய்திகள் கசிய விடப்பட்டது.

நம்மூருக்கு எப்படி தாத்தாவோ அதே மாதிரி மராட்டிய மாநிலத்துக்கு இந்த ஆள். அன்னா ஹசாரே கொதித்து எழுந்ததற்கும்கூட இந்தாளு ஒரு காரணம். பார்த்து ஏதாவது சுனியம் இந்தாளுக்கு செய்யுங்கண்ணே.]]]

உண்மைதான். மிகப் பெரிய கேடிகளில் சரத்பவாரும் ஒருவர்தான். ஆனால் எந்த வழக்கும் தன் மீது திரும்பாத அளவுக்கு பார்த்துக் கொள்வதில் திறமைசாலி. அதனால்தான் தப்பித்துக் கொண்டே வருகிறார்..! பார்ப்போம். இவருக்கென்று ஒரு முடிவு வருமே..!?

உண்மைத்தமிழன் said...

[[[sasibanuu said...

Why always copy & paste from Junior Vikatan & all. Have you got permission from them. First, this is one of the corruption.]]]

மீடியா உலகில் இது அனைவருக்கும் தெரிந்த, அனைவராலும் செய்யப்படும் ஒரு விஷயம்தான்.. எங்கேயிருந்து எடுக்கப்பட்டது என்ற முழு விஷயத்தையும் நான் சொல்லிவிட்டாலே போதுமானது..!

ஜூ.வி.யை படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காகவும், எனது தளத்தில் ஸ்பெக்ட்ரம் பற்றி முழுமையான தகவல்களைத் தொகுத்து வைப்பதற்காகவும் இதனை செய்து வருகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[subha said...

pls stop copying.]]]

நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் தப்பில்லை சுபா..!

Unknown said...

//ஜூ.வி. படிச்சவங்களுக்குத் தெரியும். படிக்காதவங்களுக்கு..?/

அண்ணாச்சியின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

Indian Share Market said...

மீண்டும் ஒரு உண்ணாவிரத,பதவி விலகல் நாடகத்தை அய்யா கருணாநிதி நடத்துவாரா? இல்லை எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என விலகிக் கொள்வார? காடு வா வாவென்று அழைக்கும் இன்றைய நிலையில் கண்ணை மூடிக் கொள்வாரா?எத்தனை அப்பாவிகளின் கண்ணீர் சும்மா விடுமா?

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...

//ஜூ.வி. படிச்சவங்களுக்குத் தெரியும். படிக்காதவங்களுக்கு..?/

அண்ணாச்சியின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?]]]

என் கடமை என்றைக்கும் ஓயாது ஜெய்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...

மீண்டும் ஒரு உண்ணாவிரத, பதவி விலகல் நாடகத்தை அய்யா கருணாநிதி நடத்துவாரா? இல்லை எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என விலகிக் கொள்வார? காடு வா வாவென்று அழைக்கும் இன்றைய நிலையில் கண்ணை மூடிக் கொள்வாரா? எத்தனை அப்பாவிகளின் கண்ணீர் சும்மா விடுமா?]]]

இந்தத் தேர்தலோடு தி.மு.க. அதோ கதியாக வேண்டும்..! அவ்வளவு பாவத்தைச் சம்பாதித்திருக்கிறார்கள் பாவிகள்..!

MANI said...

உ.த. அண்ணே எங்கள விட்ருங்க கெஞ்சி கேட்டுக்கிறேன். ஜீ.வி. தமிழ்புக்குதானே நாங்களே படிச்சிக்கிறோம். இனிமேல் இந்த ஈயடிச்சான் காப்பி எல்லாம் வேண்டாம்ணே!. எதாச்சும் இங்கிலீசு ஸ்டோரிய வேணா மொழிபெயர்த்து எழுதுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். ரொம்ப நாளாச்சுன்ணே உங்க ஸ்டைல் எழுத்துக்களை படிச்சு சீக்கிரம் உங்க பாணியில் ஒரு பதிவு போடுங்கணே! இல்லாட்டி உங்களையே உங்களுக்கு மறந்துடபோவுது.

MANI said...

எங்க ஏக்கத்தை சீக்கிரம் தீர்த்து வையுங்கணே!

abeer ahmed said...

See who owns leisiba.info or any other website:
http://whois.domaintasks.com/leisiba.info

abeer ahmed said...

See who owns livejournal.com or any other website.

abeer ahmed said...

See DNS records for blogspot.com
http://dns.domaintasks.com/blogspot.com