Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-28-05-2010

28-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இன்றைக்கு முதலிலேயே கேசரி

ஜாஸ்மின் - பத்தாம் வகுப்பில் முதலிடம்

இந்த வருட பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் சற்று ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. மாநகராட்சி பள்ளிகளில் கல்வித் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற பொதுஜன நினைப்பில் மண்ணைத் தூவியிருக்கிறார் ஜாஸ்மின் என்னும் மாணவி.

நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளி மாணவியான ஜாஸ்மின், 495 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதல் மாணவியாகி அசத்தியிருக்கிறார். அவருடைய தந்தை வீடு, வீடாகச் சென்று துணிகள் விற்பனை செய்பவராம். தான் நன்கு படித்து கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்து அதன் பின் ஐ.ஏ.எஸ். படித்து எங்களது குடும்பத்தைக் காப்பாற்றுவேன். இதுதான் எனது லட்சியம் என்று டிவி பேட்டியில் அந்த மாணவி சொன்னதைக் கேட்டு அசந்து போனேன்.. ம்.. பொறுப்புள்ள மகளாகவும் அந்தப் பெண் வளர்ந்து வருகிறாள். வாழ்த்துகிறேன்..

கூடவே ஜாஸ்மின் படித்த பள்ளியின் ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இப்போதெல்லாம் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கத்தான் மிடில் கிளாஸ் குடும்பங்களில் போட்டா போட்டி நடக்கிறது.. சென்ற வருடம் கோடம்பாக்கம் மாநகராட்சி விண்ணப்பங்கள் வந்த கியூ சாலையையும் தாண்டி நின்று கொண்டிருந்ததை பார்த்தேன்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. நல்லதுதான்..

இட்லி

கருணாநிதி - ஆர்.எம்.வீரப்பன் கள்ளத் தொடர்பு..

“நாங்க திட்டுற மாதிரி திட்டுவோம்.. அடிக்கிற மாதிரி அடிப்போம்.. அழுகுற மாதிரி அழுவோம்.. இதையெல்லாம் உண்மைன்னு நினைச்ச உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது”ன்னு மறுபடியும் ஒரு லட்சத்தி ஒண்ணாவது தடவையா தமிழினத் தலைவர் நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் ஆர்.எம்.வீரப்பன் இருந்தபோதும்” என்னோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். அப்போதும் என் மீது மாசற்ற அன்பையும், பாசத்தையும் கொட்டியவர் வீரப்பன்” என்று புளகாங்கிதமடைந்து புல்லரிக்கும் வகையில் வீரப்பனின் மகன் திருமணத்தில் பேசியுள்ளார்.

“வேல் திருடி வீரப்பனை பதவியில் இருந்து நீக்கம் செய். அவரை கைது செய்து சிறையில் அடை.. தமிழ் மக்களின் முழு முதற் கடவுளான முருகப் பெருமானின் வேலைத் திருடி சினிமா எடுக்கும் வீரப்பனே உனக்கெதுக்கு மந்திரி பதவி..?” - இப்படியெல்லாம் கோஷமிட்டபடியே ஒரு காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களை கால் வலிக்க மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடந்தே அழைத்துச் சென்ற இந்த மாமேதை.. இன்றைக்கு தாங்கள் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். இதையும் ஒரு கூட்டம் கூடி கை தட்டி ஆரவாரம் செய்திருக்கிறது. இப்படியொரு ஆட்டு மந்தைகள் இருக்கின்றவரையில் இவரை மாதிரியான ஆட்கள் எதுவும் பேசலாம்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மட்டும்தான் மலம் துடைக்கப் பயன்படுத்தலாம் என்றில்லை. இவர் மாதிரியான அறிவுச் சுரங்கங்கள் எது பேசினாலும், இனிமேல் அவற்றை அதற்கே பயன்படுத்தலாம். தப்பில்லை..

தோசை

கனகவேல் காக்க - விமர்சனமா எழுதுற..?

ஏதோ பிளாக்குல வர்ற சினிமா விமர்சனங்களை படிச்சிட்டுத்தான் பொதுமக்கள் அத்தனை பேரும் சினிமாவுக்குப் போறாங்கன்னு எல்லாருக்கும் நினைப்பா அல்லது மாயப்பிரமையான்னு தெரியலை.

பத்திரிகைகளில் கடுமையான விமர்சனத்தை வைத்தால்கூட எதுவும் பேசாமல் இருப்பவர்கள், வலைத்தளங்களில் எழுதிவிட்டால் உடனேயே புருவத்தை உயர்த்துகிறார்கள். கோபப்படுகிறார்கள்.

நான் எழுதிய கனகவேல் காக்க திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துவிட்டு ஒருவர் போனில் அழைத்தார். 

“நீங்கதான் உண்மைத்தமிழனா?”
“ஆமா.. நீங்க..?”
“நான் கனகவேல் காக்க புரொடியூஸர் பேசுறேன்.. என்னங்க எழுதியிருக்கீங்க விமர்சனம்னு..”

-    இப்படி ஆரம்பித்து சட்டென்று லைன் கட்டானது.

நான் சுதாரித்து நிற்பதற்குள் மறுபடியும் அழைப்பு.. இம்முறை நான் “ஹலோ.. ஹலோ” என்று சொல்ல மறுமுனையில் பதிலே இல்லை. இதுபோல அன்றைக்கே மூன்று முறை அழைப்பு வருவதும், நான் தொண்டை கிழிய “ஹலோ.. ஹலோ” என்று சொல்வதுமாக ஓய்ந்தது.

அன்றைக்குத்தான் என்று நினைத்தேன். அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் எனது சோகம்.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காலையில் 11.15 மணிக்கு போன் வரும். நான் “ஹலோ” என்பேன். மறுமுனையில் பேச்சே வராது. கட் செய்வார்கள். மீண்டும் அழைப்பு வரும். எடுத்தால் மீண்டும் மெளனம்.

சரி நாம அடிச்சுப் பார்ப்போம்னு செஞ்சா ரிங் போகவே மாட்டேங்குது.. என்னன்னு தெரியலை.. நம்பர் வேணுமா - 442081180048. இதுதான். இது எந்த ஊர் நம்பர்னு தெரியலை. ஆனா அவர் அடிச்சா எனக்கு வருது. நான் அடிச்சா போக மாட்டேங்குது.. இன்னாடா இது சோதனை..? முருகன் விதவிதமா சோதனையைக் கொடுக்குறான் பாருங்க..

வடை

அட்சயத் திரிதியை - அள்ளிக்கோ தங்கத்தை..!

இந்த அட்சயத் திரிதியை என்கிற வார்த்தை மிகச் சமீபமாக ஒரு ஐந்தாண்டு காலத்திற்குள்தான் தமிழக மக்கள் கேட்டுத் தெரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு முன்னர் கேள்விப்பட்டதே இல்லை.

அன்றைய தினத்தில் நகை வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது என்று எந்த புண்ணியவான் பரப்பிவிட்டானோ அவன் தலையில் சத்தியமாக இடிதான் விழ வேண்டும்.

பணத்தைக் கொண்டு போய் கொட்டினால் நகைக்கடைக்காரர்களுக்கு லாபம். அவர்கள் விளம்பரம் கொடுக்கும் டிவிக்காரர்களுக்கு கொழுத்த லாபம்.. பக்கம், பக்கமாக விளம்பங்களை வாங்கிக் குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் செம லாபம்.. இந்த மூன்று பேரும் கூட்டணி அமைத்துக் கொண்டு நம் மக்கள் முழித்திருக்கும்போதே அவர்கள் தலையை மொட்டையடிக்கிறார்கள்.

அன்றைய காலையில் தி.நகரில் கூட்டமே இல்லை. ஆனால் அனைத்து தொலைக்காட்சிகளும் சொல்லி வைத்தாற்போல் “தி.நகரில் கூட்டம் அலை மோதுகிறது.. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது” என்று ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து வாங்கின காசுக்கு மேலேயே கூவிவிட்டார்கள்.

இனி நான்காவது எஸ்டேட் என்கிற பெயரைத் தூக்கிப் போட்டுவிட்டு அரசியல்வியாதிகள் லிஸ்ட்டிலேயே இந்த மீடியாக்களையும் சேர்த்துவிடலாம்.. வேறு வழியே இல்லை..

பொங்கல்

குஷ்புவால் ஆடிப் போன ஜெயா டிவி

குஷ்புவின் திடீர் முடிவால் இன்றுவரையிலும் ஜெயா டிவி அதிர்ச்சியுடன்தான் இருக்கிறது. “இதுகூட தெரியாம என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ஆபீஸ்ல?” என்று டாப் லெவல் பார்ட்டிகளுக்கு கார்டனில் இருந்து போனிலேயே மசாஜ் நடந்திருக்கிறது.

அதிர்ச்சியானவர்கள் நம்ப முடியாமல் இருந்ததற்குக் காரணம்.. குஷ்பு தி.மு.க.வில் சேர்கின்ற அதே நாள், அதே நேரத்தில் ஜெயா டிவிக்கு வந்து அவருடைய அடுத்த பிராஜெக்ட்டுக்காக அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தாராம்.

இதற்காக அந்த அக்ரிமெண்ட்டையெல்லாம் பக்காவாக எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்த டிவி பெரிசுகளுக்கு, கலைஞர் செய்திகளில் வந்த ஸ்கிரால் நியூஸை பார்த்து நெஞ்சு வலி வராத குறை.

“இத்தனை நாட்கள் நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு.. நல்ல கவுரவமாத்தானே வைச்சிருந்தோம். எம்.டி. கார் நிறுத்துற இடத்துல இவர் காரையும் நிறுத்திக்குற அளவுக்கு உரிமை இருந்துச்சே.. ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாமே..” என்று தயாரிப்பு தரப்பு முனங்கினாலும், எடுத்து கையில் வைத்திருக்கும் 15 எபிசோடுகளுக்கான சம்பளப் பட்டுவாடாவில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

“அதென்ன ஜூஜூபி சம்பளம்..? வாங்க.. அதுக்கு மேலேயே கவனிக்கிறோம்” என்று அறிவாலயத்தில் கிடைத்த உறுதிமொழியுடனேயே அடைக்கலமாகியிருப்பதால் குஷ்புவுக்கு இதில் கவலைப்பட ஏதுமில்லை..

ரவாதோசை

ஸ்டார் ஹிந்தி சேனலின் டான்ஸ் புரோகிராம்

ஒரு நாள் சேனல் சேனலாக மாற்றிக் கொண்டே வரும்போது ஸ்டார் சம்பந்தப்பட்ட ஒரு சேனலில் ஏதோ ஒரு டான்ஸ் புரோகிராம். அனைவரும் ராஜாக்கள் டிரெஸ்ஸில், தர்பார் செட்டப்பில் அமர்ந்திருந்தார்கள். சரி. ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்..

சனியனே கண்ணுக்குள் வந்து உக்கார்ற மாதிரி ஒரு கான்செப்ட்.. மகாபாரதத்துல திரெளபதியின் சேலையை உருவுற மாதிரி சீனு.. இதுல நடிச்ச நடிகை ஏதோ வீர வசனத்தை பாடியபடியே ஆட.. துச்சாதனனாக நடித்தவர் நிஜமாகவே சேலையை முழுவதுமாக உருவி தனது கழுத்தில் போட்டுக் கொண்டு கெத்தாக பார்க்க.. அந்த நடிகை அப்போதும் விடாமல் விரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முடியும் சபதத்தை எடுக்கின்றவரையில் அப்படியே டான்ஸ் ஆடிக் காட்டிவிட்டுத்தான் உள்ளே போனார். என்ன கொடுமைடா இதுன்னு யோசிக்கிறதுக்குள்ள.. தொடர்ந்து வந்த இன்னொரு கோஷ்டியும் இதே மாதிரி ஒரு டான்ஸை ஆடிக் காட்டுச்சு. அப்புறம் இன்னொரு கோஷ்டி..

போதுமடா சாமி.. இனிமே இந்த நாட்டுல எத்தனை கோயில் கட்டினாலும் சரி.. எம்புட்டு தடவை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் சரி.. நாடு நாஸ்திதான்..

ஸ்பெஷல் தோசை

குழந்தைக்கு அம்மாவின் இன்ஷியல் - மும்பை கல்வித்துறை

தமிழ்நாட்டில் இந்த மாதிரியான வசதிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. மிகச் சமீபத்தில் மும்பை கல்வித்துறை மாணவர்களின் டி.சி.யில் அவர்களுக்கு பெயருக்கு இன்ஷியலாக அவர்களது தாயாரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளது.

அப்பாவின் பெயரையே இன்ஷியலாக வைப்பது வழிவழியாக நம்ம வீட்ல நடக்குறதுதான். ஒரு வித்தியாசமா அம்மா பெயரை வைக்கலாமே என்றுகூட என் வீட்டில் யாரும் யோசித்ததில்லை. தமிழ்நாட்டில் பலரும் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அம்மாவின் பெயரையே தனது பெயருக்கு முன்னால் சேர்த்து வைத்துக் கொண்டவர்களும் உண்டு. அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலனின் அம்மா பெயர் வசந்தா. தனது தாயார் மீதிருக்கும் அதீத அன்பு காரணமாகத்தான் வெறும் பாலனாக இருந்த அவர் வசந்தாவையும் சேர்த்துக் கொண்டு உச்சரிப்புக்காக வசந்தபாலனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இன்ஷியலில் முக்கியத்துவம் கொடுப்பதினால் பெண்கள் மீதான மரியாதையும், அணுகுமுறையும் நமது சமூகத்தில் நிச்சயம் மாறும். இதைவிட சிறந்த வழி இன்ஷியலில் அம்மாவின் பெயரையும், அப்பாவின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.. எதுக்கு அப்பாவையும் விடணும்..? அவங்களும் பாவமில்லையா..?

சட்னி

உலகக் கோப்பை கால்பந்து

இப்போதுதான் டி-20 மேட்ச்சுகள் முடிந்து நள்ளிரவில் தூங்கப் போய் மறுநாள் அலுவலகத்தில் நீண்ட கொட்டாவி விட்டுக் கொண்டேயிருந்தது முடிவுக்கு வந்தது.. அடுத்த அட்டகாசம் அடுத்த மாதம் 11-ம் தேதி துவங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்து.. பூமிப்பந்தின் நான்கில் ஒரு பங்கு ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் இந்த விளையாட்டு தென் ஆப்பிரிக்காவின் அடுத்த பத்தாண்டுகளுக்குத் தேவையான பொருளாதார வசதியை ஏற்படுத்தி கொடுக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

வரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களின் வசதிக்காக தென் ஆப்பிரிக்கா தயாராகிவரும் சூழலில் புதிதாக தலைநகர் ஜோஹன்னஸ்பர்க்கில் பிச்சைக்காரர்களே கண்ணில்படக்கூடாது. அத்தனை பேரையும் கண் காணாத இடத்திற்கு கொண்டு போய்விட்டுவிடுங்கள் என்று உத்தரவாகிவிட்டதாம். கூடவே பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

பிச்சைக்காரர்களுக்கு சங்கம் இல்லை என்பதால் நாய் பிடிக்கிற வேன் மாதிரி போலிஸ் வேனில் அள்ளிக் கொண்டு போவதை பி.பி.ஸி. சுவாரசியமாகக் காட்டியது. அதே நேரத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களோ, “நாங்க என்ன பாவம் செஞ்சோம்..? அதான் காண்டம் இல்லாம யாரையும் பக்கத்துல வர விட மாட்டோம்னு சொல்லிட்டோம்ல.. அப்புறமென்ன..? நாங்களும் இந்த சீசன்ல நாலு காசு பார்த்தாத்தான பொழைக்க முடியும்..” என்று போர்க்கொடி தூக்கி ஆர்ப்பாட்டமான ஊர்வலம் நடத்தியதையும் காட்டினார்கள்.

ஆனாலும் அரசு தனது தரப்பில் உறுதியுடன் இருக்கிறது. இந்த கால்பந்து திருவிழாவுக்காக உலகம் முழுவதிலும் இருக்கின்ற காண்டம் தயாரிக்கின்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை லட்சக்கணக்கில் வாங்கிக் குவித்திருக்கிறது தென்னாப்பிரிக்க அரசு. இதற்கு ஐ.நா.வும் நிதியுதவி செய்திருக்கிறதாம்.

“என்ன இருந்தாலும் இவங்களை நம்ப முடியாது.. கடைசி நேரத்துல நிறைய ஆளை பிடிக்கணும்னு நினைச்சு அவசர, அவசரமா காரியத்துல இறங்கினாங்கன்னு வைங்க.. இங்க வந்து போற கால்பந்து ரசிகர்கள்ல நாலு பேருல ஒருத்தருக்கு எய்ட்ஸ் நிச்சயம்..” என்றார் பேட்டியளித்த ஒரு அதிகாரி.

இதற்கெல்லாம் ஒரே வழியாக என் யோசனை.. அனைத்துப் போட்டிகளையும் விடிய, விடிய இரவிலேயே நடத்திவிட்டால் என்ன? இந்தத் தொல்லையும் இல்லை. விடிஞ்சாலும் தூக்கக் கலக்கத்துல தூங்கணும்னு நினைச்சு பாதிப் பேரு ரூம்ல அடைஞ்சு கிடப்பாங்கள்ல.. ஏதோ எனக்கு வந்த யோசனையைச் சொல்றேன்.. புரிஞ்சுக்கிட்டு நடந்தா தென்னாப்பிரிக்க அரசுக்கு நல்லது. என் பேச்சைக் கேட்கலைன்னா போய்ச் சாவுங்க.. எனக்கென்ன..?

சாம்பார்

ராஜபுதன இளவரசி காயத்ரி தேவி

“உசிர் இழுத்துக்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை.. ஆளு வீட்ல இருந்தாத்தான் மருவாதை” அப்படீன்னு நம்மூர் பெரிசுக சொல்லிக் கேள்விப்பட்டிப்பீங்க.. அப்படித்தான் நடந்திருக்கு ராஜஸ்தான்ல..

இந்தியாவின் கவர்ச்சிக் கன்னியாகவும், ராஜபுதன அழகிகளில் முதலிடத்தைப் பிடித்தவருமான ராணி காயத்ரிதேவி சமீபத்தில்தான் முருகனடி சேர்ந்தார். அவர் இருந்த காலம்வரையிலும் அவருடைய சொந்தங்களுக்கும், அவருக்குமிடையில் மிச்சம், மீதி இருக்கின்ற கோட்டைகளும், கொத்தளங்களும் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை, சச்சரவுகள் இருந்து கொண்டேயிருந்தன.

ஒரு வழியாக அம்மா போய்ச் சேர்ந்தவுடன் சொத்துத் தகராறு ஏற்பட்டு நம்மூர் ஹரி படத்து வெட்டுக் குத்துக்கு அஞ்சாத அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மாநில, மத்திய அரசுகள் தலையிட்டு கூல் செய்து வைத்திருக்கின்றன.

இதில் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது காயத்ரி தேவி உயிரோடு இருந்தபோது அவருக்காகவே, அவருடனேயே வாழ்ந்து வந்த சில குடும்பங்கள்தான். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அரண்மனையை ஒட்டிய வீடுகளில் குடியிருந்து காயத்ரிக்கு கார் ஓட்டிய டிரைவர்களின் வீடுகள், காயத்ரியின் செயலாளராக இருந்தவர்களின் வீடுகள், பணிப்பெண்களின் வீடுகள், அரண்மனையில் வேலை பார்த்தவர்களின் வீடுகள் என்று அனைத்தையும் ஒரே நாளில் தரை மட்டமாக்கி அவர்களை வெளியேற்றியிருக்கிறார்கள்.

பாவம் அந்த பெண்கள்.. ராஜ விசுவாசத்தோடு இறுதிவரையில் உடன் இருந்ததற்கு அடையாளமாக அந்த ராணியின் விலைமதிக்க முடியாத புன்னகை தாங்கிய புகைப்படத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு விசும்பலுடன் முக்காடு போட்டுக் கொண்டு போவதைக் காண்பித்தபோது எனக்கு விசுக்கென்றுதான் இருந்தது.

ராஜ விசுவாசத்திற்குக் கூடவா நாட்டில் நன்றியில்லாமல் போய்விட்டது..? என்ன கொடுமை சரவணா இது..?

இடியாப்பம்

அடுத்த ரவுண்ட் மாலைப் பத்திரிகை

ஏதோ 'மாலை முரசு', 'மாலை மலர்', 'தமிழ் முரசு' என்று மாலை பத்திரிகைகள் கொஞ்சம் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. இவைகளிலும் யார் முந்தி, யார் பிந்தி என்றெல்லாம் கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்க சந்தேகமேயில்லாமல் தமிழ் முரசு முந்தி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் துணை முதல்வரின் வீட்டு மாப்பிள்ளை மற்றொரு மாலை பத்திரிகையை சப்தமில்லாமல் விலைக்கு வாங்கி காலத்திற்கேற்றாற்போல் வடிவமைப்பை மாற்றும் டிங்கரிங் வேலைகளை செய்து வருகிறார்.

மிக விரைவில் 'மாலைச்சுடரை' கையில் ஏந்தியபடியே தளபதியின் குடும்ப உறுப்பினர்கள் போஸ் கொடுக்கும் விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வருவது உறுதி..

அப்போ 'தமிழ் முரசு' சொல்றதெல்லாம் பொய்யுன்னு விளம்பரம் வருமா..?

பில்ட்டர் காபி

ஒரு கல்யாணம் - உறவு முறை குழப்பம்

விரைவில் ஒரு திருமணம் ஊரறிய நடக்கப் போகிறது. வாழ்த்தலாம் என்று நினைப்பதற்குள் ஏதோ ஒரு பொறி தட்ட.. குழப்பம்தான் ஏற்பட்டது. நீங்களாவது தீர்த்து வையுங்களேன்.

ஏ என்பவரின் அக்கா மகளுக்கும், அதே ஏ-யின் மனைவியின் உடன்பிறந்த அண்ணனுக்கும் திருமணம்..

இது சரியான உறவு முறைதானா..? எனக்கு சந்தேகம்.. உங்களுக்கு..?
 
சாம்பார் இட்லி

பார்த்ததில் பிடித்தது

ஆ.. தங்கம்..!

17-03-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன.

எப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது.

இன்றுவரையிலும் ஒரு குண்டுமணி தங்கம்கூட உடலில் ஒட்டாத அளவுக்கு வாழ்க்கையில் ராசியுடையவன் நான். என்றாவது ஒரு நாளாச்சும் ஒரு மோதிரமாவது வாங்கிக் கையில் போட வேண்டும் என்ற சின்னப்புள்ளைத்தனமான ஆசை மட்டுமே எனக்குள் உண்டு.

இனி அந்த மாதிரி ஆசையையெல்லாம் அப்படியே மனசுக்குள்ள கும்மிவிட்டு தங்கத்தில் குளித்திருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு வாழ்க்கையை ஓட்டிவிடணும்போல இருக்கிறது இன்றைய தினசரிகளில் வெளிவந்திருக்கும் தங்கம் பற்றியச் செய்திக் கட்டுரைகள்.

இனி தினசரி செய்திக் கட்டுரைகளுக்குள் செல்வோம்.

“தங்கத்தின் விலை இன்றைக்கு முதன்முறையாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 10,040 ஆக உயர்ந்துள்ளது. கிராம் விலை ரூ.1255 ஆக இருந்தது.

22 காரட் தங்கத்தின் விலை சென்னை சந்தையில் ஒரு கிராமுக்கு நேற்று ரூ.1253 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து உச்சபட்சமாக 10,040 ரூபாய் அளவுக்கு உயர்ந்து, இறுதியில் ஒரு பவுன் விலை ரூ.10024 ஆக இருந்தது.

சமீப காலமாக தங்கத்தின் விலை தினமும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதற்குச் சில காரணங்களை இந்தத் தொழிலில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

முதல் காரணம்... பங்குச் சந்தை வீழ்ச்சி. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக அங்கு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இரண்டு.. அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

இதனால் மற்ற நாடுகளில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விலக்கிக் கொள்ளும்போது இந்தியா போன்ற நாடுகளிலும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படுகிறது.
இதன் காரணமாக பங்கு முதலீட்டாளர்கள் தங்கத்தில் பெருமளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

மூன்று... தென் ஆப்ரிக்காவில் கடுமையான மின்வெட்டு காரணமாக தங்கம் வெட்டி எடுப்பது பெரிதும் பாதித்துள்ளது. இதனால் உற்பத்தி பெருமளவு குறையத் தொடங்கியுள்ளது.

தேவை அதிகமாக வரும்போது உற்பத்தியில் சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கம் தேவைப்படும் தொழில் துறையினரும், தங்க நகை உற்பத்தியாளர்களும் இப்போதே தங்கத்தை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நான்கு... டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் அன்னியச் செலாவணி அதிகம் வைத்திருக்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன.

பெரிய நாடுகளே அதிக அளவில் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்து வருவதால், உற்பத்தியைவிடவும் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஐந்து... கச்சா எண்ணெய்-தங்கத்தின் மதிப்பு இவை இரண்டும் 15:1 என்ற விகிதத்தில் இருந்து வந்தது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு 15 பேரல் எண்ணெய் நிகராக இருந்தது. அது சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் 9:1 ஆகிவிட்டது. அது மீண்டும் 15:1 ஆகும்வகையில் தங்கத்தின் விலை எகிறுகிறது.

ஆறு... வீட்டுக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நஷ்டம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வங்கி திவாலாகி வருகிறதாம்.

100 டாலர் இருந்த வங்கிப் பங்குகளின் மதிப்பு 2 டாலராகச் சரிந்துள்ளதாம். இதனால் வந்த விலைக்கு பங்குகளை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள்.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் நேற்று 30 பைசா சரிந்துள்ளது. பொதுவாக இது போன்ற நிலைமை வந்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் கூடுமாம்..

இவைகளைத்தான் தற்போதைய திடீர் தங்கத்தின் விலையுயர்வுக்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.

யார் என்ன காரணம் சொன்னால் என்ன?
மரத்தில் தொங்கும் முருங்கைக்காயின் விலையே கைக்கு எட்டாமல் மேலே, மேலே போய்க் கொண்டிருக்க.. பூமிக்குள் கண்ணுக்குச் சிக்காமல் அமிழ்ந்து கிடக்கும் தங்கத்தின் விலை மட்டும் கைக்கு சிக்கிவிடுமா என்ன..?

‘விலையைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!’ என்ற பெருமையுடையை அந்தத் தங்கம் பற்றிய சில விபரங்களைப் பார்ப்போம்..

தங்கம் தரத்தின் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறதாம். இந்த அழகின், ‘அலகின்’ பெயர் ‘காரட்’. அதனை சதவீத அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள்.

24 கேரட் என்பது 100 சதம்.
22 கேரட் 91.75 சதம்.
18 காரட் 75 சதம்.
14 காரட் 58.5 சதம்.
12 காரட் 50.25 சதம்,
10 காரட் 42 சதம்,
9 காரட் 37.8 சதம்,
8 காரட் 33.75 சதம்

என்று தரம் பிரித்திருக்கிறார்கள்.

பல்வேறு நாடுகளில் இந்தத் தரம் வித்தியாசப்படுகிறதாம்.

இந்தியா, இலங்கை, அரபு நாடுகள் - இவற்றில் 22 காரட்
சீனா, ஹாங்காங், தைவான் - இவற்றில் 24 காரட்
வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் - இவற்றில் 21 காரட்
தெற்கு ஐரோப்பிய நாடுகள் - இவற்றில் 18 காரட்
ரஷ்யாவில் - 14 காரட்
அமெரிக்கா, வடக்கு ஐரோப்பிய நாடுகளில் 8 முதல் 18 காரட்
என்று அளவிடப்படுகிறதாம்.

உலகம் முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் லண்டன் உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது.

லண்டனின் கரன்சி, ‘பவுன்ட்’ ஆக இருந்தாலும், ‘டாலரில்’தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தங்கத்துக்கான தேவை மற்றும் இருப்பின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்கின்றனர். அதை பவுனுக்கும், கிராமுக்கும் மாற்றி ஒவ்வொரு நாட்டிலும் விலையை முடிவு செய்கின்றனராம். ஒரு அவுன்ஸ் என்பது 31.10 கிராம் கொண்டதாம்.

தங்கம் நகை செய்ய மட்டும் பயன்படுவதில்லை. செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்பு, தங்கப்பல், மருந்து தயாரிப்பு என பல துறைகளிலும் தங்கம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

1933ம் ஆண்டு நிலவரப்படி 71 சதவிகிதம் தங்க நகை செய்யவும், 22 சதவிகிதம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்யவும், தங்கப் பல் செய்ய 7 சதவிகிதம் தங்கமும் பயன்படுத்தப்பட்டது.

இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கான தங்கத்தின் தேவை, நகை தயாரிப்பையும் மிஞ்சிவிட்டதாம்.

தங்க நகை தயாரிப்பு குறைந்து, முதலீட்டுக்கான தங்க நாணயங்களும், தங்க பிஸ்கட்டுகளும் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தங்கத்தில் முதலீடு செய்வதிலும், நகை மீதான மோகத்திலும் எப்போதுமே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.
2. அமெரிக்கா
3. சீனா
4. சவுதி அரேபியா
5.வளைகுடா நாடுகள்
6.துருக்கி
7.இந்தோனேசியா
8.எகிப்து

- இப்படி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன தங்கப் பித்துள்ள நாடுகள்.

தங்கத்தின் உற்பத்தியில் 1991-ம் ஆண்டுவரை சோவியத் யூனியன்தான் முதலிடத்தில் இருந்ததாம்.
சோவியத் பல நாடுகளாக உடைந்து சிதறிய பிறகு, தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 2007-வரை தென்னாப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் கோலோச்சி வந்தது. இந்த ஆண்டில் அந்த முதலிடத்தை சீனா பிடித்துள்ளதாம்.

தங்கத்தின் உற்பத்தியில் உலக நாடுகளின் பங்காக பார்த்தால்,
சீனா 11.3 சதவீதமும்,
தென் ஆப்ரிக்கா 11.1 சதவீதமும்,
அமெரிக்கா 10.4 சதவீதமும்,
ஆஸ்திரேலியா 10.3 சதவீதமும்,
இந்தோனேஷியா 7 சதவீதமும்,
பெரு 6.9 சதவீதமும்,
ரஷ்யா 6.2 சதவீதமும்,
கனடா 3.8 சதவீதமும்,
மற்ற நாடுகள் 33 சதவீதமும்
கொண்டுள்ளன.

இதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ள 1.58 லட்சம் டன் தங்கத்தில் 65 சதவிகிதம் 1950-க்குப் பின் கிடைத்தவைதானாம்.

பப்புவா நியூகினியா என்ற நாட்டில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. அங்குள்ள தங்கச் சுரங்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் டன் குப்பைகளும் வெட்டி எடுக்கப்படுகின்றன.

ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ள எல்லா நகரங்களிலும் ஒரு நாளைக்குச் சேரும் குப்பையைவிட இது அதிகம்.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு மோதிரத்துக்குத் தேவையான தங்கத்துக்காக 20 லட்சம் டன் குப்பை வெளியே எடுக்கப்படுகிறதாம்.

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்த அமோக வளர்ச்சியை கீழே காணுங்கள்..

1920- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00
1930- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.14.80
1931- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00
1936- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.24.62
1940- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ 29.20
1945- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.49.60
1950- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.79.36
1954- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.58.00
1960- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ. 89.70
1961- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.104.00
1969- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.150.00
1970- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.147.20
1971- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.156.00
1972- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.200.00
1974- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.392.00
1975- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.408.00
1976- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.424.00
1977- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.488.00
1978- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.602.00
1979- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.996.00
1980- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,064.00 & ரூ.1,136.00
1981- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,304.00
1982- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,342.00
1983- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,368.00
1984- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,454.00
1985- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,544.00
1986- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.1,652.00
1987- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,016.00
1990- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.2,720.00
1991- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,472.00
1992- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,552.00
1994- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,584.00
1995- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,744.00
1996- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,000.00
1997- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,400.00
1999- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,424.00
2000- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,504.00
2001- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,368.00
2002- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.3,392.00
2003- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,152.00
2005- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.4,696.00 & ரூ.4,964.00
2006- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.6,144.00 & ரூ.6,824.00
2007- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.7,516.00
2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை ஜனவரி-4 ரூ.8,072.00
2008- ம் ஆண்டில் 1 பவுன் விலை பிப்ரவரி-9 ரூ.8,644.00
2008-மார்ச்-1 ரூ.9264.00
2008-மார்ச்-15 ரூ.9640.00
2008-மார்ச்-17 ரூ.10,024.00

இந்த வகையில் வருடாவருடம் மக்கள் தொகையைப் போலவே தங்கமும் மக்களோடு, மக்களாக உயர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது.
இந்தியாவில் குவிந்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 16.29 லட்சம் கோடி என்று கணக்கிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் பெண்களின் முதல் விருப்பமான தங்க நகைகள் கையில், கழுத்தில், காலில் கிடந்து அவர்களுக்கு அலங்காரமாகத் திகழ்கிறது.
மனிதர்கள் மட்டும் போட்டால் போதுமா? சாமிக்கு வேண்டாமா? சாமிக்கும் ஏதாவது செஞ்சாத்தானே அது நம்மை பத்திரமா பாத்துக்கும் என்ற பேராசையில் பக்தன் தனக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு கொடுக்கல், வாங்கல் என்ற அக்ரிமெண்ட்டை பத்திரப் பதிவு செய்யாமல் ஏற்படுத்திக் கொண்டு நகைகளை அள்ளிவிட..
இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற அத்தனை கோவில்களிலும் குடி கொண்டிருக்கும் சாமிகள்தான் நிறைய தங்கத்தை ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். வாழ்க சாமிகள்..
அதோடு கூடவே, கோவிலில் குடி கொண்டிருக்கும் எல்லா சாமியும் “எனக்குத் தங்கத்துல கோபுரம் கட்டலைன்னா உன் கண்ணு முழியைத் தோண்டிருவேன்”னு எல்லா கோவில்காரங்க கனவுலேயும் வந்து சொல்லுச்சாம். அதான் ஊர், ஊருக்கு, மாநிலத்துக்கு மாநிலம் தங்கத்தாலேயே கோபுரம் கட்டி வெச்சு புண்ணியம் சேரத்துட்டாங்க..
ஏதாவது செஞ்சாவது தன்கிட்ட காசு இருக்கிறதை காட்டணும்னு நினைச்சு தங்கத்தால் பல் கட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்தத் தங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் அபூர்வமாகக் கிடைக்கக் கூடியது என்பதால்தான் தங்கத்துக்கு மதிப்பு.
அதோடு கூடவே இன்னொரு சிறப்புமுண்டு.
ஒரு கிராம் தங்கத்தைக் கொண்டு உங்கள் வீட்டு மேஜை மீது போடும் விரிப்பு அளவுக்கு ஒரு தகடு செய்திட முடியுமாம்.

இது மதிப்புமிக்கது என்பதனால், மனித நாகரிகம் உருவான காலத்தில் இருந்தே இதற்காக அடித்துக் கொண்டவர்கள் அதிகம்.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும்தான் பெரும்பாலான போர்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.

அலாவுதீன் கில்ஜியில் இருந்து, நேற்று அமைந்தகரையில் பிடிபட்ட செயின் திருடன்வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் கொள்ளை.. அதிலும் தங்கத்தை..

இப்போதும் உலகம் முழுவதும் அன்றாடம் நடைபெறும் பெரும்பாலான திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களின் பின்னணியில் நம்முடைய தங்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது.

தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்ட இந்தியர்களும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நகைக்காக வாங்குவோரைக் காட்டிலும் பதுக்கல்காரர்களும், கறுப்பு பண முதலைகளும் தங்கள் கையிருப்பை தங்கமாக மாற்றி, பதுக்கி வைப்பதுதான் அதிகம்.
ஆண்டுக்கு 950 டன் தங்கத்தை இந்தியர்கள் வாங்குகின்றனராம்.

உலகம் முழுவதும் 1,45,000 டன் தங்கம் இருப்பதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 13,000 டன் தங்கம் இருப்பது இந்தியாவில்.

இன்றைய விலை நிலவரத்தில் இதன் மதிப்பு 16,28,900 கோடி ரூபாய்.

ஆத்தாடி.. இதில் பெரும்பாலான தங்கம், எதற்கும் பயனில்லாமல் பரணில், பஞ்சு மெத்தைகளுக்குள், பீரோக்களுக்குள், வங்கி, லாக்கர்களுக்குள் சுகமாய் முடங்கிக் கிடக்கிறது.

யார் சொன்னது இந்தியாவா ஏழை நாடுன்னு..? அடப் போங்கப்பா..!

நன்றி : தினகரன், தினத்தந்தி, தினமலர்