ஈழப் பிரச்சினை-சென்னையில் அமைதி ஊர்வலம்

22-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து வாருங்கள் என்றழைத்து அபயம் தேடி ஓடி வரும் அப்பாவி மக்கள் மீது விரைந்து எறிகணைகளை வீசி அவர்களை கொத்துக் கொத்தாய் விரைவாய் மேலுலகம் அனுப்பிக் கொண்டிருக்கும் இலங்கை இனவாத அரசினை கண்டித்து உலகத் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும், இடங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்தப் போராட்டங்கள் நடைபெறாத ஊர்களும், நாட்களும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

அந்த வரிசையில் இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள் என்ற முழக்கத்துடன் எந்த அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாத ‘நாம்' என்கிற அமைப்பு ஒரு அமைதி நடைப்பயணத்தை இன்று சென்னையில் நடத்தியது.

“இதயமுள்ளோரே வாருங்கள்.. இணைந்து நடப்போம்.. போர் நிறுத்தம் வேண்டுவோம்” என்ற அன்பான வேண்டுகோளோடு அழைத்திருந்தார்கள்.

அமைதி ஊர்வலம் சென்னை தலைமைச் செயலகம் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகிலிருந்து துவங்கி அண்ணா சாலை, ராஜாஜி மண்டபம் இருக்கும் ஓமந்தூரார் தோட்டம் அருகே முடிவதாக ஏற்பாடு.

மதியம் 3 மணிக்கு நான் அங்கு சென்றிருந்தபோது ஓரளவுக்கு கூட்டம் கூடியிருந்தது. வந்திருந்தவர்களில் பலரும் கட்சி சார்பற்றவர்கள் என்பதால் அனைவரும் கள அரசியலுக்கு புதுமுகங்களாகத் தெரிந்தார்கள். ஆனால் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் பலரும் துடிப்பு மிக்கவர்களாகத் தெரிந்தார்கள். ‘நாம்' அமைப்பின் வெள்ளை நிற டீ ஷர்ட் அணிந்து மிக பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள்.

ஊர்வலத்தில் கொண்டு போக வேண்டிய பதாகைகள் பலவும் மிக, மிக வித்தியாசமான முறையில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

போஸ்டர்களில் ‘சோ'வுக்குத் தனி இடம் கொடுத்து தமிழினத்தின் ஒரே எதிரி என்று பெயர் வைத்துவிட்டார்கள். இதில், ‘ஹிந்து' ராம், அப்துல்கலாமையும் கொஞ்சம் கலாய்த்திருந்தார்கள்.

போஸ்டர்களில் சில உங்களது பார்வைக்காக..!







































உலகப் புகழ் பெற்ற முத்துக்குமாரின் இறுதி சாசனம் மறுபடியும் இங்கே வேறொரு வடிவில் பிரிண்ட் செய்யப்பட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஈழப் போராட்டம் தொடர்பான துண்டறிக்கைகளும், செய்திகளும் தரப்பட்டன. விடுதலை ராசேந்திரன் எழுதிய ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?' என்கிற புத்தகம் மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் வசிக்கும் ஈழத்து தமிழர்கள் பலரும் தத்தமது குடும்பத்தினருடன் வந்திருந்தார்கள்.

வள்ளலார் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்திய சுவிசேஷ திருச்சபையைச் சேர்ந்தவர்கள், ரவிசங்கர்ஜியின் ‘வாழும் கலை' இயக்க உறுப்பினர்கள், பகுத்தறிவுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், திராவிடர் கழகத்தின் உறுப்பினர்கள், பெரியார் திராவிட கழக உறுப்பினர்கள், கண் பார்வையற்றோர் சிலர், திருநங்கைகள், கிறிஸ்துவ மத அமைப்புகள், சுவாமி முத்துக்குமார தம்பிரான் அவர்கள்.. என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் திரண்டு வந்திருந்தார்கள்.

பதிவுலகில் இருந்து கே.ஆர்.அதியமான், அதிஷா, லக்கி, மாடசாமி, நந்தா, அவருடைய தம்பி, மற்றும் பிரின்சு என்.ஆர்.சாமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவல்துறை மிக அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தும், ஊர்வலத்தின் நோக்கம் கருதியும், கலந்து கொள்பவர்களைப் பற்றி தெரிந்திருந்ததாலும் அவ்வளவாக டென்ஷனாகாமல் ஹாயாகவே இருந்தனர்.

பல்வேறு பத்திரிகையாளர்கள், ஊடகச் செய்தியாளர்களும் வந்திருந்தார்கள். மக்கள் டிவி ஊர்வலம் முழுவதையும் படம் பிடித்தது.

போஸ்டர்களில் பிரபாகரனை வாழ்த்தி எழுதப்பட்டிருந்த ஒன்றைச் சுட்டிக் காட்டிய ஒருவர், அது பற்றி கமெண்ட் செய்யப் போக.. அருகில் இருந்த இன்னொருவர் டென்ஷனாகி அவரைத் திட்டித் தீர்த்துவிட்டார். பிரபாகரன், மற்றும் புலிகளை வாழ்த்தி எழுதியிருந்த போஸ்டர்கள்தான் அநேகம் இளைஞர்கள் கைகளில் இருந்தது.

ஊர்வலத்தை முன்பு போர் நினைவுச் சின்னத்திலிருந்து கடற்கரை காந்தி சிலை வரையிலும்தான் என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால் காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை, மாலை நேரம்.. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதனால் காவல்துறை வேறு இடம் தேடும்படி வற்புறுத்தியதாம். ‘பிரச்சினை வேண்டாம்' என்பதால் ஓமந்தூரார் தோட்டம் வரையிலும் நடைப் பயணத்தை வைத்துவிட்டார்கள்.

அரசியல் கலப்படமற்ற கூட்டம் என்பதால் தனி மனித துதிபாடுகளும், அரசியல் சேட்டைகளும் இல்லாமல் கூட்டம் ஒழுங்கு காத்தது.. துவக்க நேரம் மாலை 4 மணி என்றாலும்கூட, பல இடங்களில் இருந்து மக்கள் வர வேண்டியிருந்ததால் காத்திருந்து மாலை 4.40 மணிக்கு ஊர்வலம் துவங்கியது.

ஊர்வலத்தினர் கைகளில் போஸ்டர்களையும், தட்டிகளையும் ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பியபடியே வந்தனர்.

“கொல்லாதே கொல்லாதே
ஈழ மக்களைக் கொல்லாதே..!

ஈழப் போராட்டம்
எங்கள் போராட்டம்!

ஈழப் போர்
எங்கள் போர்!

வேண்டும், வேண்டும்
தமிழ் ஈழம்!

தடையை நீக்கு! தடையை நீக்கு!
புலிகள் தடையை நீக்கு..!

மத்திய அரசே; மத்திய அரசே,
இலங்கைக்கு உதவாதே..!

எங்கள் தேவை
தமிழ் ஈழம்!

ராஜபக்சே கேக்குறான்
ரேடார் கேக்குறான்
குண்டு கேக்குறான்
கொடுக்காதே.. கொடுக்காதே..!
மத்திய அரசே கொடுக்காதே..!

என்று கோஷங்களை எழுப்பியபடியே ஊர்வலம் நகர்ந்தது.
கண் பார்வையற்றோர்கூட கோஷங்களை எழுப்பியபடியே வந்தது ஊர்வலத்திற்கு ஒரு உத்வேகத்தைக் கூட்டியது.

ஊர்வலம் கொடி மர சாலை வழியாகச் சென்ற போது எதற்கும் இருக்கட்டும் என்று நினைத்து அங்கேயிருந்த ராணுவ அலுவலகத்தின் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள்.

மன்றோ சிலை சாலையில் வரும்போது ரோட்டையே மறித்தபடி போகலாம் என்று நினைத்து “போக்குவரத்தை நிறுத்துங்கள்..” என்று சிலர் காவல்துறையினரிடம் சொன்னார்கள். ஆனால் பின்னால் வந்து கொண்டிருந்த அமைப்பினர், அதைத் தடுத்து ஊர்வலத்தையே ஓரமாக நகர்த்திக் கொண்டுபோய் போக்குவரத்திற்கு இடம் கொடுத்தனர்.

பொருட்காட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அங்கு வருகை தந்து கொண்டிருந்த பொதுஜனங்களுக்கு இந்த ஊர்வலத்தினால் அவர்களுக்குள் ஒரு கவன ஈர்ப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. ஆனாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மன்றோ சாலையில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்ததாலும் ஊர்வலத்தினருக்கு ஒரு மனக்குறை இருந்தது உண்மைதான்.

2 கிலோ மீட்டர் தூரமே இருக்கும் என்பதனால் மாலை 5.40 மணிக்கு ஊர்வலம் ஓமந்தூரார் தோட்டத்தை அடைந்தது. அங்கு தாகசாந்திக்காக முதலில் தண்ணீர் தரப்பட்டது. விரிவான ஏற்பாட்டை செய்திருந்தார்கள் அமைப்பினர்.

‘நாம்' அமைப்பின் சார்பாக அருட்திரு.ஜெகத் கஸ்பார் பேசினார்.

ஈழத்தில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டுமென்றும், அதற்கான வழிமுறைகளை செய்யும்படி நாம் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் அதற்காகத்தான் இந்த ஊர்வலம் என்றும் சொன்னார்.

தொடர்ந்து 7 தீர்மானங்களை செந்தில் என்பவர் வாசிக்க கூட்டத்தினர் ஒவ்வொரு தீர்மானத்தின் இறுதியிலும் கை தட்டி தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செந்தில் அத்தீர்மானங்களை படித்துக் காண்பித்தார். 6-வது தீர்மானத்திற்குத்தான் அதிகமான கை தட்டல் எழுந்தது என்பதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைதிப் பேரணி தீர்மானங்கள்

1. ஸ்ரீலங்கா ராஜபக்சே அரசு தமிழ் மக்கள் மீது நடத்தும் இன அழித்தல் யுத்தத்தை தடுத்து நிறுத்தும் உடனடி முயற்சிகள் எடுத்திட இந்திய அரசை வேண்டுகிறோம்.

2. இந்திய அரசே, தமிழ் மக்களின் தியாகங்கள் நிறைந்த நீண்ட போராட்ட வரலாற்றினை கருத்திற்கொண்டு, அவர்தம் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நிரந்தர அரசியற் தீர்வு பேச்சுவார்த்தைகள் தொடங்க ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்து.

3. முல்லைத்தீவு பகுதியில் 2,20,000 தமிழர்கள் உணவு, மருந்துப் பொருட்களின்றியும், விமான, எறிகணை குண்டு வீச்சுக்களாலும், புழுப்பூச்சிகள்போல் செத்து மடிகின்றனர். சமீப நாட்களாக அங்கு வெறும் 70,000 மக்கள் மட்டுமே இருப்பதால் ஸ்ரீலங்கா அரசு கூறத் தொடங்கியுள்ளது. இது வரும் வாரங்களில் லட்சத்திற்கும் மேலான தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் சதியோ என அஞ்சுகிறோம். இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான படுகொலையாக முடியப் போகும் இப்பேரழிவினை உடனடியாகத் தடுத்து நிறுத்த இந்திய அரசையும், உலக நாடுகளையும் வேண்டுகிறோம்.

4. ஸ்ரீலங்கா அரசு 30 ஆண்டுகளாய் தமிழ் மக்களுக்கெதிராகப் புரிந்து மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் பதிவு செய்து, விசாரித்து நீதி வழங்க அனைத்துலக போர்க்குற்ற நீதியமையகம்(International War Crimes Tribunal) அமைக்க ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர இந்தியா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாய் இந்தியாவின் வெளியுறவு வளங்கள் ஸ்ரீலங்காவின் தமிழர் அழிப்பு போரை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அணுகுமுறையில் உறுதியான மாற்றத்தை இந்திய அரசிடம் வேண்டுகிறோம்.

5. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா நாடுகளின் சுய நல அபிலாஷைகள் ஈழத் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு முக்கியமானதோர் காரணம். இந்நாடுகள் ஆறரை கோடி இந்தியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் கொணரவும், ஸ்ரீலங்கா மீது போர்க் குற்ற நீதி மையம் அமைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் கொணர்ந்திட வேண்டுகிறோம்.

6. ஈழத் தமிழ் மக்கள் பேரழிவின் விளிம்பில் நிற்கும் இக்காலத்தில் தமிழக அரசியற் கட்சிகள் தேர்தல் அரசியலின் சிக்கல்களினின்று மேலேழுந்து ஒரே குரலாய் ஒலிக்க வேண்டுமெனவும் மன்றாடுகிறோம்.

7. இன அழித்தலுக்கெதிரான இந்தியர்கள் அமைப்புடன் இணைந்து செயற்பட மனிதநேயம் கொண்ட அனைவரையும் அழைக்கின்றோம்.

கூட்டம் கரவொலி எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுக்க தொடர்ந்து திரு.கஸ்பார் “தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கடவுளை நம்புகிறவர்களும், கடவுளை நம்பாதர்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அது இந்த தமிழ் ஈழப் போராட்டத்திற்காகத்தான்” என்றார்.

மேலும், “ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளும், சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் போர்க்களப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம் என்று சொல்லியுள்ள சூழலில், இலங்கை அரசு அங்கிருக்கும் மக்கள் வெறும் 70000 பேர்தான் என்று சொல்லியிருப்பது கவனத்துக்குரியது.

வரும் நாட்களில் போரைத் தீவிரப்படுத்தி பொதுமக்களை கொன்று குவித்து கடைசியில் இந்தக் கணக்கை நேர் செய்யப் போகிறார் ராஜபக்சே என்று நினைக்கிறோம். அந்தச் சூழல் ஏற்படுவதற்குள் ஐ.நா. இதில் தலையிட வேண்டும். நாமும் மறுபடியும் ஒரு முறை இதேபோன்று போராட வேண்டி வரும் என்று நினைக்கிறேன். அப்போது மறுபடியும் அழைப்பேன். சந்திப்போம்..” என்றவர் இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டி ஒத்துழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்தார்.

கொஞ்சமும் அரசியல் கட்சிகளின் பின்னணி இல்லாமல் நாத்திகம், ஆத்திகம் என்றல்லாம் பேதம் பிரிக்காமல் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்திருக்கிறது இந்த ஈழப் போராட்டம்.

எப்படியாவது, யாராவது முனைந்து நடவடிக்கை எடுத்து இந்தக் கொடூரத்தை நிறுத்திவிட மாட்டார்களா என்ற நினைவோடு வீட்டிற்கு வந்து தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தால், “வக்கீல்-போலீஸ் ஒற்றுமை ஏற்படவில்லையெனில் உண்ணாவிரதம் இருப்பேன். முதல்வர் மருத்துவமனையில் இருந்து அறிவிப்பு” என்று பிளாஷ் செய்தி ஓடியது.

வெறுத்தே போய்விட்டது எனக்கு..!

என்றைக்கு இவர் திருந்துவார்..?


புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : புதினம் மற்றும் 'நாம்' அமைப்பு

59 comments:

லேகா பக்க்ஷே said...

காவல் துறை, சட்டத்துறைகளின் கலவரம் கவலை அளித்திருந்த நிலையில், இந்த அமைதிப் போராட்டம் மனதில் தைரியத்தை மீண்ண்டும் கொண்டு வந்து விட்டது.
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.
ஈழத் தமிழர்கள், தொப்புள் கொடி உறவோ இல்லையோ, ஆனால் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு ஒரு அபயம் நேரிட்டால், இந்திய மத்திய அரசு ஏரெடுத்தும் பார்க்காது. இந்த வகையில், தமிழர்களாக பிறந்த அனைத்துலக தமிழர்களுமே ஒரு அக்கினி புழுவே தான்.
தொடர்ந்து போராடுவோம்.

Anonymous said...

He will never change. Surprisingly, he believes that people believe him. Forthcoming Parliamnet election result can be starting point for a change. -krishnamoorthy

Senthil said...

Hi,
Could you please post this blog
in the following blog.
http://stop-the-vanni-genocide.blogspot.com/

If you can give permission to others
to use this article,it will be serve the purpose.
---Senthil

Anonymous said...

mika arumayana urvalam. karunanithi ippothum emathi vittar. attack on lawyers is a planed one. to arrest 15 lawyers they dont need 500 police. and mostly commandos who came to spot in Bombay attack after 2 hours. but in Chennai they came immediately. it is not against lawyers. it is against Eelam supporters. he anyhow stopped the rise of students. and now lawyers

பதி said...

விரிவான பதிவிற்கு நன்றி உண்மைத் தமிழரே !!!!!!!!!!!

காலம் கடந்தே இருப்பினும் இது போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புவோம்.

Anonymous said...

இலங்கை தமிழர்கள் மானங்கெட்ட இந்தியா என்று நம்மை தூற்றுவார்கள். நமது ஆட்கள் நிஜமாலுமே மானங்கெட்டு அவர்களுக்காக சென்னையில் ஊர்வலம் போவார்கள்!!!

Anonymous said...

மிக மிக அருமை...
தொடரட்டும் இந்தப் பணி!

எஸ்.பிரபாகர்
மதுரவாயல்

Anonymous said...

பதிவுக்கு நண்றி,

Vassan said...

நீங்கள் போட்டிருக்கும் படங்களை வைத்து ஒரு ஒளித்துண்டை உருவாக்கி யூ டியுப் ல் மேலேற்றியுள்ளேன், சில படங்களையும் கூடுதலாக சேர்த்து.

விழித்தெழு


படங்களுக்கு நன்றி.

Anonymous said...

Mr.Anonymous,
When the Punjab riots took place, and thousands of innocent Punjabi's were killed, what do you think Punjabi's around the world called India? Do you know the riots and attacks that occured in the West against India at that time? Why? Because innocent Punjabis were being killed and the government looked on. Same Congress government. Yet today, Punjabis dominate the identity of India around the world. Their food, culture, dance, music is the most uniformly identified as Indian.

Likewise, today, India is aiding the killings of thousands of Tamils. Why? Congress government.

You don't need to look far for anger at India. Not even in Tamilnadu. Look across states at Andhra, Kerala, or even Karnataka. The only way that the administrations are keeping this dissatisfaction down is by keeping south indians divided.

Nobody hates Indians. But what India Congress is doing is rubbish. The same Eelam Tamil people were yesterday eating dinners with Indians and watching bollywood films. So don't try to show a color to the protest that isn't there.

The people are pointing out India's role in this genocide. A role that even Indians are being kept unaware of by the government and media. For your interest, protest was there even in front of Pakistan embassy.

-kajan

Anonymous said...

நன்றி உண்மைத்தமிழனே..

புகைப்படங்கள் எதையும் போடவில்லையே..?

-/சுடலை மாடன்/- said...

தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Anonymous said...

ஏண்டா நீயி எல்டிடிஈ ஆளா?

தமிழர் நேசன் said...

Its time, we people have to be united against all anti tamil elements..

thanks for your post..

அரவிந்தன் said...

கையாலகாத மாநில அரசினை கண்டித்து ஒரு கோஷமும் எழுப்படவில்லையா.?

அப்படி கோஷம் போட்டால் கனிமொழி கோவித்துகொள்வார் என்று கஸ்பார் சும்மா இருந்துவிட்டாரா.

எப்படியிப்பினும் ஒரு சில தமிழின தூரோகிகளையாவது படம் போட்டு காட்டினார்களே அந்த விதத்தில் மகிழ்ச்சிதான்

மிகப்பெரிய தூரோகி உடல்நிலையை காரணம்காட்டி மருத்துமனையில் படுத்துகொண்டே அரசியல் செய்கிறதே

superlinks said...

வணக்கம்‌

benza said...

[[[ திரு.கஸ்பார் “தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கடவுளை நம்புகிறவர்களும், கடவுளை நம்பாதர்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அது இந்த தமிழ் ஈழப் போராட்டத்திற்காகத்தான்” என்றார்]]]

இதென்ன புதுமை - - - தமிழ் நாட்டில் இப்படி ஒரு அமைதியான ஊர்வல கூட்டம்

அரசியல் கலப்பு இல்லாததோ ?

மெத்த மகிழ்ச்சி !

benza said...

[[[ மேலும், “ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளும், சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் போர்க்களப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம் என்று சொல்லியுள்ள சூழலில், இலங்கை அரசு அங்கிருக்கும் மக்கள் வெறும் 70000 பேர்தான் என்று சொல்லியிருப்பது கவனத்துக்குரியது ]]]

ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு களின் கணக்கை நான் நம்புகின்றேன் - - -

கோதபாய அரசியல் பொய் உளறுகின்றார்

நையாண்டி நைனா said...

நல்லா பதிவு போட்டு இருக்கீங்க. எங்கள மாதிரி அங்கே வரமுடியாத ஆட்கள் எல்லாம் இதை படிச்சி தெரிஞ்சிக்கறோம்.

puduvaisiva said...

என்றைக்கு இவர் திருந்துவார்..?

:-)))))))))))))))))

be cool tamila

Puduvai siva

உண்மைத்தமிழன் said...

//லேகா பக்க்ஷே said...
காவல் துறை, சட்டத்துறைகளின் கலவரம் கவலை அளித்திருந்த நிலையில், இந்த அமைதிப் போராட்டம் மனதில் தைரியத்தை மீ்ண்டும் கொண்டு வந்து விட்டது.
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.
ஈழத் தமிழர்கள், தொப்புள் கொடி உறவோ இல்லையோ, ஆனால் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு ஒரு அபயம் நேரிட்டால், இந்திய மத்திய அரசு ஏரெடுத்தும் பார்க்காது. இந்த வகையில், தமிழர்களாக பிறந்த அனைத்துலக தமிழர்களுமே ஒரு அக்கினி புழுவேதான்.
தொடர்ந்து போராடுவோம்.//

தமிழர்கள் என்றில்லை லேகா.. பொதுவாகவே வெகுஜன மக்களின் ஆதரவு யாருக்கு, எதற்கு இருக்கிறதோ அதற்கு நேர் எதிரான முடிவுகளை சொந்தக் காரணத்திற்காக எடுப்பது நமது அரசியல்வியாதிகளின் பொழுதுபோக்கு..

இதுதான் எப்போதும் எங்களுக்கு நடப்பது. எங்கள் தலைவிதி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
He will never change. Surprisingly, he believes that people believe him. Forthcoming Parliamnet election result can be starting point for a change. -krishnamoorthy//

கொடுத்த இலவசங்கள் அனைத்தும் ஓட்டுக்களாக திரும்பி வரும் என்பது அவருடைய அபார நம்பிக்கை.. அதுதான் அவரை இப்படி செயல்பட வைக்கிறது..

உண்மைத்தமிழன் said...

//Sen said...
Hi, Could you please post this blog
in the following blog.
http://stop-the-vanni-genocide.blogspot.com/
If you can give permission to others
to use this article,it will be serve the purpose.
---Senthil//

தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் செந்தில்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
mika arumayana urvalam. karunanithi ippothum emathi vittar. attack on lawyers is a planed one. to arrest 15 lawyers they dont need 500 police. and mostly commandos who came to spot in Bombay attack after 2 hours. but in Chennai they came immediately. it is not against lawyers. it is against Eelam supporters. he anyhow stopped the rise of students. and now lawyers.//

நான் அப்படி நினைக்கவில்லை அனானி..

இவர்கள் கமாண்டோ படையினர் அல்ல.. ஆயுதப் படையினர். பக்கத்திலேயே இருப்பார்கள். 10 நிமிடத்தில் வந்து நிற்பார்கள்.

ஏதோ காவல்துறை வஞ்சம் தீர்த்து பழி தீர்த்துக் கொண்டதாக மட்டுமே நான் நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//பதி said...
விரிவான பதிவிற்கு நன்றி உண்மைத் தமிழரே !!!!!!!!!!! காலம் கடந்தே இருப்பினும் இது போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புவோம்.//

நன்றி பதி ஸார்..

அந்த விழிப்புணர்ச்சி எந்த அளவிற்கு வரும் என்றுதான் தெரியவில்லை..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இலங்கை தமிழர்கள் மானங்கெட்ட இந்தியா என்று நம்மை தூற்றுவார்கள். நமது ஆட்கள் நிஜமாலுமே மானங்கெட்டு அவர்களுக்காக சென்னையில் ஊர்வலம் போவார்கள்!!!//

அது ஒரு கோபத்தில் சொல்வதுதான் அனானி..

நம் குடும்பத்திலேயே சகோதரர்களுக்குள் சண்டை மூண்டால் சொல்வதில்லையா.. அது போலத்தான்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...

மிக மிக அருமை...
தொடரட்டும் இந்தப் பணி!

எஸ்.பிரபாகர்
மதுரவாயல்//

நன்றி பிரபாகர்..

உண்மைத்தமிழன் said...

//Vassan said...
நீங்கள் போட்டிருக்கும் படங்களை வைத்து ஒரு ஒளித்துண்டை உருவாக்கி யூ டியுப் ல் மேலேற்றியுள்ளேன், சில படங்களையும் கூடுதலாக சேர்த்து.
விழித்தெழு
படங்களுக்கு நன்றி.//

நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் வாசன்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
Mr.Anonymous, When the Punjab riots took place, and thousands of innocent Punjabi's were killed, what do you think Punjabi's around the world called India? Do you know the riots and attacks that occured in the West against India at that time? Why? Because innocent Punjabis were being killed and the government looked on. Same Congress government. Yet today, Punjabis dominate the identity of India around the world. Their food, culture, dance, music is the most uniformly identified as Indian. Likewise, today, India is aiding the killings of thousands of Tamils. Why? Congress government. You don't need to look far for anger at India. Not even in Tamilnadu. Look across states at Andhra, Kerala, or even Karnataka. The only way that the administrations are keeping this dissatisfaction down is by keeping south indians divided. Nobody hates Indians. But what India Congress is doing is rubbish. The same Eelam Tamil people were yesterday eating dinners with Indians and watching bollywood films. So don't try to show a color to the protest that isn't there. The people are pointing out India's role in this genocide. A role that even Indians are being kept unaware of by the government and media. For your interest, protest was there even in front of Pakistan embassy.
-kajan//

கஜன் ஸார்..

மனிதர்கள் பலவிதம்.. அது அனைவருக்கும் பொருத்தமானதுதான்..

நீங்கள் இந்தியரா அல்லது இலங்கையரா என்று கேட்டால் தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றுதான் சொல்வார்கள். அது ஊறிப் போன விஷயம்..

மொழியை வைத்துப் பார்க்கின்றபோது தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க தேசியம் முன் வர வேண்டும் என்று நினைக்கிறோம். தேசிய அரசியலில் இருக்கும் அரசியல்வியாதிகள்தான் வர மறுக்கிறார்கள். தேசம் முழுவதும் இருக்கும் மக்கள் அல்ல..

இப்போது இந்திய அரசு இலங்கைக்கு எந்தவித உதவியும் வழங்காமல் இருந்தால் இங்கே யாரும் கேட்கப் போவதில்லை.. இலங்கைக்கு உதவினால்தான் ஓட்டுப் போடுவோம் என்று இங்கே எந்த மக்களுக்கு கூக்குரல் எழுப்பவில்லை.

இது ஒரு அம்மையாரின் பழிக்குப் பழி வாங்கும் உணர்ச்சியின் விளைவு. அனுபவிப்பது அப்பாவி மக்கள்.. இது தவறு என்று அந்த அம்மாவுக்கு எடுத்துச் சொல்லலாம்.. ஆனால் அவர்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் அனைவரும் எச்சிக்கலை அரசியல்வியாதிகளாக இருப்பதால்தான் அது நடக்க மறுக்கிறது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
நன்றி உண்மைத்தமிழனே.. புகைப்படங்கள் எதையும் போடவில்லையே..?//

புகைப்படங்கள் கேட்டேன்.. பதிவிடும் நேரம்வரையிலும் கைக்கு வரவில்லை. அதனால் முடியவில்லை..

உண்மைத்தமிழன் said...

//-/சுடலை மாடன்/- said...
தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி.
நன்றி - சொ.சங்கரபாண்டி//

ஓ.. சுடலைமாட சாமியா..?

சவுக்கியம்தானா..? ஏதோ பிளைட் டிக்கெட் அனுப்புறேன்.. அமெரிக்கா வந்து ஊரைச் சுத்திப் பார்த்துட்டு போங்கன்னு கூப்பி்ட்டீங்க..

டிக்கெட் வரும், வரும்னு காத்திருந்து கண்ணு பூத்துப் பூச்சு சாமியோவ்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஏண்டா நீயி எல்டிடிஈ ஆளா?//

இல்லை..

ஆனால் தீவிரமான ஈழ மக்களின் போராட்டத்தின் ஆதரவாளன்..

எனது பழையப் பதிவுகளைப் படித்துப் பார் அனானி..

உண்மைத்தமிழன் said...

//தமிழர் நேசன் said...
Its time, we people have to be united against all anti tamil elements.. thanks for your post..//

நன்றி தமிழர்நேசன்..

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை மறக்க வேண்டாம். படித்தவர்களுக்கே மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.. இதுதான் கொடுமை..

உண்மைத்தமிழன் said...

//அரவிந்தன் said...
கையாலகாத மாநில அரசினை கண்டித்து ஒரு கோஷமும் எழுப்படவில்லையா.? அப்படி கோஷம் போட்டால் கனிமொழி கோவித்துகொள்வார் என்று கஸ்பார் சும்மா இருந்துவிட்டாரா.//

எப்படி போடுவாங்க..? எல்லாத்துலேயும் ஒரு அரசியல் இருக்கே..

//எப்படியிப்பினும் ஒரு சில தமிழின தூரோகிகளையாவது படம் போட்டு காட்டினார்களே அந்த விதத்தில் மகிழ்ச்சிதான். மிகப்பெரிய தூரோகி உடல் நிலையை காரணம்காட்டி மருத்துமனையில் படுத்துகொண்டே அரசியல் செய்கிறதே.//

என்ன செய்றது..? நம்ம தலையெழுத்து..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[ திரு.கஸ்பார் “தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக கடவுளை நம்புகிறவர்களும், கடவுளை நம்பாதர்களும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அது இந்த தமிழ் ஈழப் போராட்டத்திற்காகத்தான்” என்றார்]]]
இதென்ன புதுமை - - - தமிழ் நாட்டில் இப்படி ஒரு அமைதியான ஊர்வல கூட்டம்? அரசியல் கலப்பு இல்லாததோ? மெத்த மகிழ்ச்சி!//

ஆமாம் பென்ஸ் ஸார்..

பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
[[[ மேலும், “ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளும், சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் போர்க்களப் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம் என்று சொல்லியுள்ள சூழலில், இலங்கை அரசு அங்கிருக்கும் மக்கள் வெறும் 70000 பேர்தான் என்று சொல்லியிருப்பது கவனத்துக்குரியது]]]
ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளின் கணக்கை நான் நம்புகின்றேன் - - -
கோதபாய அரசியல் பொய் உளறுகின்றார்.//

கோத்தபாயா பச்சைப் பொய்யை புளுகுகின்றார்.. நன்றாகவே தெரிகிறது..

இந்திய அரசுக்குத்தான் தெரியமாட்டேங்குது..

உண்மைத்தமிழன் said...

//நையாண்டி நைனா said...
நல்லா பதிவு போட்டு இருக்கீங்க. எங்கள மாதிரி அங்கே வரமுடியாத ஆட்கள் எல்லாம் இதை படிச்சி தெரிஞ்சிக்கறோம்.//

அதுக்காகத்தானே எழுதுறேன்.. படிச்சி தெரிஞ்சுக்குங்க நைனா..

ஆமா.. எந்த ஊர்ல இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?

உண்மைத்தமிழன் said...

//புதுவை சிவா :-) said...
என்றைக்கு இவர் திருந்துவார்..?
:-)))))))))))))))))
be cool tamila
Puduvai siva//

எனக்குத் தெரியலைன்னு சொல்லித்தான போட்டிருக்கேன்.. நீங்களாவது சொல்லக் கூடாதா..? பீ கூல் ஆகுறது இப்போதைக்கு முடியாது போலிருக்கே.. வயிரும், நெஞ்சும் எரியுது..

லேகா பக்க்ஷே said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//Anonymous said...
இலங்கை தமிழர்கள் மானங்கெட்ட இந்தியா என்று நம்மை தூற்றுவார்கள். நமது ஆட்கள் நிஜமாலுமே மானங்கெட்டு அவர்களுக்காக சென்னையில் ஊர்வலம் போவார்கள்!!!//

அது ஒரு கோபத்தில் சொல்வதுதான் அனானி..

நம் குடும்பத்திலேயே சகோதரர்களுக்குள் சண்டை மூண்டால் சொல்வதில்லையா.. அது போலத்தான்..//


ஒரு சின்ன உதாரணம். ஒரு ஹிந்தி பேசும் குழந்தை (பெயர் குறிப்பிட விரும்ப வில்லை), தன் தாயிடம் "அம்மா அபி மாதிரி நானும் தமிழ் பேசப் போறேன் என்று சொல்லிச்சு. அம்மாவுக்கு கோவம் வந்திரிச்சு.."நீ என்ன தமிழ் நாட்டு காரணயா கட்டப் போறே, ஒழுங்க மராத்தி பேச கத்துக்கோ" என்று ஹிந்தியில் திட்டி தீர்த்திடிச்சு. இந்தனைக்கும் குழந்தைக்கு 4 வயசு தான்.
எப்படி இருக்கு? நம்ம நாட்டுக்குள்ளேயே நமக்கு நல்ல மரியாதை.
இங்கே மானக்கெட்ட இந்தியா என்பது, வெறும் காங்கரஸ் கட்சியையே, இது எல்லோருக்கும் பாத்தவுடன் விளங்கும். தமிழர்களிடம் புரிந்து கொள்ளுதல் தான் இல்லையே.

உண்மைத்தமிழன் said...

///லேகா பக்க்ஷே said...
//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
/Anonymous said...
இலங்கை தமிழர்கள் மானங்கெட்ட இந்தியா என்று நம்மை தூற்றுவார்கள். நமது ஆட்கள் நிஜமாலுமே மானங்கெட்டு அவர்களுக்காக சென்னையில் ஊர்வலம் போவார்கள்!!!/
அது ஒரு கோபத்தில் சொல்வதுதான் அனானி.. நம் குடும்பத்திலேயே சகோதரர்களுக்குள் சண்டை மூண்டால் சொல்வதில்லையா.. அது போலத்தான்..//
ஒரு சின்ன உதாரணம். ஒரு ஹிந்தி பேசும் குழந்தை (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), தன் தாயிடம் "அம்மா அபி மாதிரி நானும் தமிழ் பேசப் போறேன் என்று சொல்லிச்சு. அம்மாவுக்கு கோவம் வந்திரிச்சு.."நீ என்ன தமிழ்நாட்டு காரணயா கட்டப் போறே, ஒழுங்க மராத்தி பேச கத்துக்கோ" என்று ஹிந்தியில் திட்டி தீர்த்திடிச்சு. இந்தனைக்கும் குழந்தைக்கு 4 வயசுதான். எப்படி இருக்கு? நம்ம நாட்டுக்குள்ளேயே நமக்கு நல்ல மரியாதை. இங்கே மானக்கெட்ட இந்தியா என்பது, வெறும் காங்கரஸ் கட்சியையே, இது எல்லோருக்கும் பாத்தவுடன் விளங்கும். தமிழர்களிடம் புரிந்து கொள்ளுதல்தான் இல்லையே.//

உண்மைதான் லேகா..

புரிந்து கொள்ளுதல் இல்லாமையால்தான் இந்த அனானியும் இப்படி கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்..

Anonymous said...

//ஒரு சின்ன உதாரணம். ஒரு ஹிந்தி பேசும் குழந்தை (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), தன் தாயிடம் ‘அம்மா அபி மாதிரி நானும் தமிழ் பேசப் போறேன் என்று சொல்லிச்சு. அம்மாவுக்கு கோவம் வந்திரிச்சு..‘நீ என்ன தமிழ்நாட்டு காரணயா கட்டப் போறே, ஒழுங்க மராத்தி பேச கத்துக்கோ‘ என்று ஹிந்தியில் திட்டி தீர்த்திடிச்சு. இந்தனைக்கும் குழந்தைக்கு 4 வயசுதான். எப்படி இருக்கு? நம்ம நாட்டுக்குள்ளேயே நமக்கு நல்ல மரியாதை.//

தமிழன் இன்னொரு சாதி தமிழனுக்கே பொண்ணு தர மாட்டான்.ஆனா மராத்திகாரன் மட்டும் உங்களுக்கு பொண்ண குடுக்கணுமா...நல்ல இருக்குது கதை.

//இங்கே மானக்கெட்ட இந்தியா என்பது, வெறும் காங்கரஸ் கட்சியையே, இது எல்லோருக்கும் பாத்தவுடன் விளங்கும். தமிழர்களிடம் புரிந்து கொள்ளுதல்தான் இல்லையே//

அதை நேரடியாக சொல்லுங்கள். என்ன வேதாந்த பாடமா எடுக்குறீங்க? மானங்கெட்ட காங்கிரஸ் அரசுன்னு நேரடியாக சொல்லலாமே? நாங்களும் உடனடியாக ஆதரிப்போமே?

நீங்க விவகாரமாய் சொல்லிவிட்டு எமக்கு புரிதல் இல்லை என்று சொல்வதை விட நீர் புரிகிறா மாதிரி நேரடியாக சொல்லலாமே?


தமிழன் அண்ணே, நீங்களும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். ஆயிரந்தான் அண்ணந்தம்பினாலும் எவனும் அம்மாவை அசிங்கப்படுத்துவதை பொறுக்கமாட்டான். பாரதிதாசன் சொன்னார் ‘தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விட மாட்டேன்‘ எனறு. அதுமாதிரிதான் தாய்நாடும்!!!

லேகா பக்க்ஷே said...

அனானியே, அம்மா மராத்தி கத்துக்கோ என்று சொன்னது, குழந்தையின் தந்தை மொழியை. கூடுதல் விளக்கம் தேவை என்றால், முதலில் ஒரு முகவரியோடு வெளியில் வாரும்.
என்னது, நீங்களும் சேர்ந்து ஆதரிபிங்க்களா? அப்போ இப்போ நடக்கிற போராட்டம் எல்லாம் என்ன, அடுத்த எலேக்க்சனுக்கு ஓட்டு கேக்கிறிங்களா? அவங்க வேறு தமிழர்களா?

சும்மா போங்க அனானி, அம்மாவே தன் சொந்த பிள்ளைகள் குரலை கேக்க நேரம் இல்லாது, ஆயுத வியாபாரம் நடத்துறாங்க - நீங்க வேற, அம்மாவும் ஆட்டுக்குட்டியும்!

benza said...

Sri Lanka's War On Several Fronts
By Emily Wax
Washington Post Foreign Service ல் காணப்படும் விபரம் இலங்கை அரசு
எவ்வாறு புலிகளை மடக்கியது என்பதை விளக்குகின்றது.

புலிகள் ஐந்து ஜனாதிபதிகள் - - - எட்டு அரசாங்கங்கள் - - - பற்பல
அரசியல் கட்சிகள் - - - பத்து போர் நிறுத்தங்கள் - - - ஊடாக ஒவ்வோர்
முறையும் புது பொலிவுடன் யுத்தம் செய்தார்கள்.

இம் முறை புலிகளால் தேர்தலில் ஆதரிக்கப்பட மஹிந்தா ராஜபக்ச
45,000 சிங்கள கிராமப்புற மக்களை பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து
மாதாந்தம் சம்பளமும் கொடுத்து இணைத்துள்ளார்.

புலிகள் புகுந்து மக்களை கொன்ற கிராமங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன்
இணைந்துள்ளனர்.

இத்தகைய வெறுப்புணர்வை தமிழ் மக்கள் தாங்கவேண்டியதுதான் !

இதன் மேலதிக விபரம் இங்கு http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/02/21/AR2009022101806.html?wpisrc=newsletter

Anonymous said...

//அனானியே, அம்மா மராத்தி கத்துக்கோ என்று சொன்னது, குழந்தையின் தந்தை மொழியை. கூடுதல் விளக்கம் தேவை என்றால், முதலில் ஒரு முகவரியோடு வெளியில் வாரும்.
என்னது, நீங்களும் சேர்ந்து ஆதரிபிங்க்களா? அப்போ இப்போ நடக்கிற போராட்டம் எல்லாம் என்ன, அடுத்த எலேக்க்சனுக்கு ஓட்டு கேக்கிறிங்களா? அவங்க வேறு தமிழர்களா?//


உடனே உள்ளே வெளியே விளையாட ஆரம்பிச்சுடாதீங்க....நான் வெளிய வரம இருப்பதுதான் எனக்கு சேப்டி. அதுகிடக்கட்டும்... என்னமோ அந்த பொம்பளைதான் அத்தனை இந்தியனுக்கும் அத்தாரிட்டி மாதிரி பேசுறீங்க? இந்தி பேசத் தெரியாமயே பல பதவி வகித்த அப்துல் கலாம் மாதிரி பல பேர் உண்டு அவருக்கு எல்லா இந்தியனுந்தான் சல்யூட் அடிச்சான். இப்ப ரகுமானுக்கு ரகுமான் துஜே சலாம்னு மரியாதை பண்ணுறாங்க.எல்லா மொழியிலேயும் சில பாஸிட்டுகள் இருக்கதான் செய்யுறாங்க. ஏன் தமிழ் மொழி வெறினுக இல்லையா?

சில வருசத்திற்கு முன்னாடி பம்பாயில் இந்திய திரைப்பட விழா ஒன்று நடைபெற்றது. இந்திய சினிமாவின் 75/100 ஆண்டு விழாவோ ஞாபகம் இல்லை. அதில் பாரதிராஜா பேசினார்... நான் கொஞ்சம் தமிழ்ல பேசனும், ஏன்னா தமிழ் சினிமா காரணமாய்தான் இந்த மேடையில் நிக்குறேன் என ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு "என் இனிய தமிழ் மக்களே" என்று சொன்னதுதான் தாமதம் எல்லோரும், பெரும்பாலோனோர் இந்திகாரனுக, எழுந்து நின்று கைதட்டினர். எனக்கு கண்ணில் தண்ணீர் வந்தே விட்டது. அப்போது ஒன்று புரிந்தது... நம்மை பிரிக்கும் ஆட்கள் நம் தலைவர்களும் தப்பான நமது கருத்துகளும்தான் என்பதை உண்ர்ந்தேன்.

நமது நாட்டில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். நான் நல்லதை பார்க்கிறேன். நீங்கள் நாம் ஓட்டுப் போட்டு அனுப்பிய தலைவர்கள் செய்யும் தவறுக்கு நாட்டை குறை சொல்கிறீர். இந்தியாவில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி. இங்கு சும்மா நாலு பேர் கத்தி பயனில்லை. ஓட்டு மொத்த தமிழகமும் இணைந்தால்தான் பலன்.

சிங்களவன் இலங்கை தமிழனை இப்பதான் கொல்லுற மாதிரி இந்தக் கத்து கத்துறீங்களே. போன எலகசன்கள் நடந்த போது அவன் என்ன தமிழனுக்கு பூஜைய பண்ணினான்? அப்பவே ஈழம் வாங்கித்தரும் கட்சிக்குதான் ஒட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே?
அட அப்பதான் புத்தியில்லை... இப்ப கருத்துக்கணிப்பிலாவது ஈழத்தமிழனுக்கு ஆதரவளிக்கும் பாமக, மதிமுக வி.சி. -க்கு ஆதரவளிக்கலாமே? இப்பவும் அதிமுகவும் திமுகவும்தான். பிரியாணிக்கு ஓட்டுப் போட்டும் நம்மிடமிருந்து வரும் தலைவர்கள் எப்படி இருப்பார்கள்????

குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு நமது குற்றவுணர்ச்சியை மறைக்க நமக்கு கிடைத்த ஸ்கேப்கோட்... நமது தேசம் ...இந்தியா

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//ஒரு சின்ன உதாரணம். ஒரு ஹிந்தி பேசும் குழந்தை (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), தன் தாயிடம் ‘அம்மா அபி மாதிரி நானும் தமிழ் பேசப் போறேன் என்று சொல்லிச்சு. அம்மாவுக்கு கோவம் வந்திரிச்சு..‘நீ என்ன தமிழ்நாட்டு காரணயா கட்டப் போறே, ஒழுங்க மராத்தி பேச கத்துக்கோ‘ என்று ஹிந்தியில் திட்டி தீர்த்திடிச்சு. இந்தனைக்கும் குழந்தைக்கு 4 வயசுதான். எப்படி இருக்கு? நம்ம நாட்டுக்குள்ளேயே நமக்கு நல்ல மரியாதை.//
தமிழன் இன்னொரு சாதி தமிழனுக்கே பொண்ணு தர மாட்டான்.///

இதுவே தவறாகத் தெரியவில்லையா அனானி.. நம்மிடம் இருக்கின்ற தவறுகளை தவறு என்று முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும்..

//ஆனா மராத்திகாரன் மட்டும் உங்களுக்கு பொண்ண குடுக்கணுமா... நல்ல இருக்குது கதை.///

ஹிந்தி, மராத்தி கதையை எந்த விதத்திலும் ஏத்துக்க முடியாது.. அவங்க ரியலிஸ வாழ்க்கையோட பொருத்திப் பார்க்குறாங்க.. தமிழைக் கத்துக்குற நேரத்துல அவங்க மராத்தி கத்துக்கிட்டா அவங்களுக்கு நல்லதுதானே.. இதுல என்ன தப்பு இருக்கு..? இப்ப நாம தேவையில்லாம மராத்தி கத்துக்கணும்னு நினைப்போமா..? அந்த நேரத்துல ஆங்கிலமோ, இந்தியோ கத்துக்கிட்டா நமக்கு ஏதாவது பலன் இருக்கும்னு நினைப்போம்ல.. அது மாதிரிதான்.. எல்லாருக்கும் அவரவர் பிரச்சினை..

//இங்கே மானக்கெட்ட இந்தியா என்பது, வெறும் காங்கரஸ் கட்சியையே, இது எல்லோருக்கும் பாத்தவுடன் விளங்கும். தமிழர்களிடம் புரிந்து கொள்ளுதல்தான் இல்லையே//
அதை நேரடியாக சொல்லுங்கள். என்ன வேதாந்த பாடமா எடுக்குறீங்க? மானங் கெட்ட காங்கிரஸ் அரசுன்னு நேரடியாக சொல்லலாமே? நாங்களும் உடனடியாக ஆதரிப்போமே? நீங்க விவகாரமாய் சொல்லிவிட்டு எமக்கு புரிதல் இல்லை என்று சொல்வதைவிட நீர் புரிகிறா மாதிரி நேரடியாக சொல்லலாமே?///

முத்துக்குமார் இறுதி ஊர்வலத்திலும் இதே வீர வசனம்தான் எழுப்பப்பட்டது. பொதுவாகவே இந்தியா சொல்கிறது என்று செய்தியில் படிக்கப்பட்டாலே அது அப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு சொல்வதாகத்தானே அர்த்தம்..

அந்த அர்த்தத்தில் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

//தமிழன் அண்ணே, நீங்களும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். ஆயிரந்தான் அண்ணந் தம்பினாலும் எவனும் அம்மாவை அசிங்கப்படுத்துவதை பொறுக்கமாட்டான். பாரதிதாசன் சொன்னார் ‘தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடமாட்டேன்‘ எனறு. அது மாதிரிதான் தாய்நாடும்!!!//

நம் அம்மாவை யாரும் பழிக்கவில்லை.. இருக்கின்ற அண்ணன், தம்பிகளுக்குள் மனப் பிரச்சினை.. வார்த்தைகள் விழத்தான் செய்யும்.. பாதிப்பு அந்த அளவுக்கு என்று இருக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகத்தான் நாம் பேச வேண்டும். அதுதான் மனித நேயம்..

நெருப்பு என்று சொல்வதால் வாய் வெந்து விடுமா என்ன..?

உண்மைத்தமிழன் said...

///லேகா பக்க்ஷே said...
//அம்மாவே தன் சொந்த பிள்ளைகள் குரலை கேக்க நேரம் இல்லாது, ஆயுத வியாபாரம் நடத்துறாங்க - நீங்க வேற, அம்மாவும் ஆட்டுக்குட்டியும்!///

புரிகிறது லேகா..

அனானி அண்ணைக்கு அனுபவம் இல்லைன்னு நினைக்கிறேன்.. அதுதான்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
Sri Lanka's War On Several Fronts
By Emily Wax
Washington Post Foreign Service ல் காணப்படும் விபரம் இலங்கை அரசு
எவ்வாறு புலிகளை மடக்கியது என்பதை விளக்குகின்றது.
புலிகள் ஐந்து ஜனாதிபதிகள் - - - எட்டு அரசாங்கங்கள் - - - பற்பல
அரசியல் கட்சிகள் - - - பத்து போர் நிறுத்தங்கள் - - - ஊடாக ஒவ்வோர்
முறையும் புது பொலிவுடன் யுத்தம் செய்தார்கள். இம்முறை புலிகளால் தேர்தலில் ஆதரிக்கப்பட மஹிந்தா ராஜபக்ச 45,000 சிங்கள கிராமப்புற மக்களை பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து மாதாந்தம் சம்பளமும் கொடுத்து இணைத்துள்ளார். புலிகள் புகுந்து மக்களை கொன்ற கிராமங்களில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் இணைந்துள்ளனர்.
இத்தகைய வெறுப்புணர்வை தமிழ் மக்கள் தாங்கவேண்டியதுதான் !
இதன் மேலதிக விபரம் இங்கு http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/02/21/AR2009022101806.html?wpisrc=newsletter//

ஆஹா பென்ஸ் ஸார்..

நல்ல தகவல்கள்..

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் பிரபாகரன்..

ஆனால் இதில் அப்பாவி தமிழ் மக்களும் மாட்டிக் கொண்டார்களே ஸார்.. அதுதானே பிரச்சினை..?

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//என்னமோ அந்த பொம்பளைதான் அத்தனை இந்தியனுக்கும் அத்தாரிட்டி மாதிரி பேசுறீங்க?//

இன்னிக்கு சிச்சுவேஷன் அதுதானே அனானி..

அந்தப் பெண்மணி நினைத்தால் சிங்கள ராணுவத்தின் தாக்குதலை உடனடியாக நிறுத்த முடியம்.. நிலைமை உங்களுக்கும் தெரியும்தானே.. அதனால்தான் அவரைக் குற்றம்சாட்டிப் பேசுகிறார்கள்.

//நம்மை பிரிக்கும் ஆட்கள் நம் தலைவர்களும் தப்பான நமது கருத்துகளும்தான் என்பதை உண்ர்ந்தேன்.//

தவறான கருத்து நம்முடையது அல்ல.. அரசியல்வியாதிகளுடையது..

//நமது நாட்டில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். நான் நல்லதை பார்க்கிறேன். நீங்கள் நாம் ஓட்டுப் போட்டு அனுப்பிய தலைவர்கள் செய்யும் தவறுக்கு நாட்டை குறை சொல்கிறீர்.//

நாடு தவறு செய்கிறது என்றால் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களைத்தான் அது குறிக்கிறது.. ஒட்டு மொத்த நாட்டையே அல்ல.. நாடு என்றால்கூட நாட்டு மக்களைத்தான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்..

//இந்தியாவில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி. இங்கு சும்மா நாலு பேர் கத்தி பயனில்லை. ஓட்டு மொத்த தமிழகமும் இணைந்தால்தான் பலன்.//

இதைத்தான் நானும் சொல்லி வருகிறேன்.. தேர்தலில் ஈழப் பிரச்சினை முதன்மையடைந்தால்தான் ஒரு நல்ல வழி பிறக்கும். இல்லாவிடில் கஷ்டம்தான்..

//சிங்களவன் இலங்கை தமிழனை இப்பதான் கொல்லுற மாதிரி இந்தக் கத்து கத்துறீங்களே. போன எலகசன்கள் நடந்த போது அவன் என்ன தமிழனுக்கு பூஜைய பண்ணினான்? அப்பவே ஈழம் வாங்கித் தரும் கட்சிக்குதான் ஒட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே? அட அப்பதான் புத்தியில்லை... இப்ப கருத்துக் கணிப்பிலாவது ஈழத்தமிழனுக்கு ஆதரவளிக்கும் பாமக, மதிமுக வி.சி.-க்கு ஆதரவளிக்கலாமே? இப்பவும் அதிமுகவும் திமுகவும்தான். பிரியாணிக்கு ஓட்டுப் போட்டும் நம்மிடமிருந்து வரும் தலைவர்கள் எப்படி இருப்பார்கள்?
குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு நமது குற்றவுணர்ச்சியை மறைக்க நமக்கு கிடைத்த ஸ்கேப்கோட் நமது தேசம் இந்தியா..//

இது நச்சுன்னு இருக்கு அனானி..

வலையுலகத்திலேயே பாதிப் பேருக்கு அரசியல் என்றாலே அலர்ஜி என்கிறார்கள்.. பிடிக்கவில்லை என்கிறார்கள். என்ன செய்வது..?

அவரவர் மன இயல்பை நாம் தவறென்று சொல்ல முடியுமா..?

பொதுமக்களுக்கு ஈழப் பிரச்சினை ஏன் அவ்வளவு முக்கியமாகப் படவில்லையெனில் அவர்கள் இங்கேயே தனித் தீவாக வாழப் பழகிவிட்டார்கள்..

இங்குள்ளவர்கள் மீது இங்கிருப்பவர்களுக்கே பாசமும், நேசமும் இல்லாதபோது கடல் கடந்திருப்பவர்கள் மீது இருக்குமா..?

வால்பையன் said...

எதிர்ப்பு பலமா இருக்கே!
வரும் நாடாளுமண்ற தேர்தலில் இதற்காக ரிசல்ட் தெரிந்து விடும்.

அதே நேரம் யார் தனீஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று தெளீவாக தெரியவில்லையே.

புஷ்ஷின் ஆட்டத்துக்கு பிறகு ஒபாமா வந்தால் போர் பதட்டம் அடங்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அது மீண்டும் உயிர் பெற்று விட்டதே!

இதே போல் அடுத்து வரும் அதிகாரமையமும் இதே போல் நடந்து விட்டால்.......................

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...
எதிர்ப்பு பலமா இருக்கே! வரும் நாடாளுமண்ற தேர்தலில் இதற்காக ரிசல்ட் தெரிந்து விடும்.//

கண்டிப்பாகத் தெரிந்துவிடும்..

//அதே நேரம் யார் தனீ ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று தெளீவாக தெரியவில்லையே.//

அதிலேயே ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் இடையே குழப்பங்கள் உள்ளன. கம்யூனிஸ்ட்கள் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை..

//புஷ்ஷின் ஆட்டத்துக்கு பிறகு ஒபாமா வந்தால் போர் பதட்டம் அடங்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அது மீண்டும் உயிர் பெற்று விட்டதே!//

அது ஆப்கனில் மட்டுமே..

//அடுத்து வரும் அதிகார மையமும் இதே போல் நடந்து விட்டால்//

ஈழத்து மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது.. சுத்தமாக துடைத்து எடுக்கப்படுவார்கள்..

benza said...

இலங்கை அரசாங்கம் பத்திரையாளர்களை கடத்துவது கொலைசெய்வது கற்பனை கதைகள் இல்லை என்றே நம்பவேண்டியுள்ளது ---

இரு நாட்கள் முன்னர் யாழ் நகர்
முன்னனணி நாளிதழ் ''உதயன்'' ஆசிரியர் வித்தியாகரன் கொழும்பில் வைத்து கடத்த பட்டாராம் ---

பின்னர் ஊடக அழுத்தம் மிஞ்சியதும் போலிஸ் தானாக முன் வந்து ''அவர் கைது செய்யபட்டுள்ளார் '' என்று அறிக்கை விடுத்துளார்கள்.

''உதயன்'' புலி ஆதரவான பத்திரிகை ---

ஆனால் அதனது சுதந்தரத்தில் கை வைப்பது அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தையும் எதிர் காலத்தில் இதனை நாம் நம்ப முடியாது என்பதும் படி படியாக உறுதியாகின்றது.

மனித சுதந்தரத்தில் நம்பிக்கை வைத்துள்ள நாம் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் !

benza said...

உண்மை தமிழன் சொன்னார்
[[[ நீங்கள் இந்தியரா அல்லது இலங்கையரா என்று கேட்டால் தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றுதான் சொல்வார்கள். அது ஊறிப் போன விஷயம் ]]]

இலங்கையில் உள்ள மலையக இந்திய பாமர மக்களிடையே இருக்கும் தேச பக்தியை நான் எப்போதும் ஒரு மன நெகிழ்ச்சியுடனும் அதிசயத்துடனும் கண்டுள்ளேன் ---

நான் கூறுவது அவர்கள் ஓட்டுருமை இழந்து சொந்த தேசம் இல்லாது இருந்த காலம் ---

இப்போது அநேகமானோர் ஓட்டுருமை பெற்றுள்ளதால் நிலைமை மாறியிருக்கலாம் ---

அந்த நாட்களில் எந்த வறிய குடிசைக்குள் நுழைந்தாலும் ஒரு ''போக்கை வாய் காந்தி தாத்தா'' ஒரு ''ஜவகர்லால் நேரு'' ஒரு ''முண்டாசு பாரதி'' தவறாது தொங்குவார்கள்.

இப் பரிதாபத்துக்குரிய மக்களது தேச பக்தி எவ்வாறு இந்த உன்னத நிலைக்கு வளர்ந்தது ---

இவர்களிலும் பார்க்க படித்த பணகார வீடுகளில் தேச பக்திக்குரிய எதையுமே காண முடியாது ---

இதை ஆராய்ந்தால் ஊடக உரிமையாளர்கள் இலகுவாக தகுதியான அரசாங்கத்தை உருவாக்கலாம்.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
இலங்கை அரசாங்கம் பத்திரையாளர்களை கடத்துவது கொலைசெய்வது கற்பனை கதைகள் இல்லை என்றே நம்பவேண்டியுள்ளது
இரு நாட்கள் முன்னர் யாழ் நகர்
முன்னனணி நாளிதழ் ''உதயன்'' ஆசிரியர் வித்தியாகரன் கொழும்பில் வைத்து கடத்த பட்டாராம் ---
பின்னர் ஊடக அழுத்தம் மிஞ்சியதும் போலிஸ் தானாக முன் வந்து ''அவர் கைது செய்யபட்டுள்ளார் '' என்று அறிக்கை விடுத்துளார்கள்.
''உதயன்'' புலி ஆதரவான பத்திரிகை --- ஆனால் அதனது சுதந்தரத்தில் கை வைப்பது அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தையும் எதிர்காலத்தில் இதனை நாம் நம்ப முடியாது என்பதும் படிபடியாக உறுதியாகின்றது.
மனித சுதந்தரத்தில் நம்பிக்கை வைத்துள்ள நாம் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும்.//

எத்தனை குரல் கொடுத்தென்ன பென்ஸ் ஸார்..

கேட்பவருக்குக் கேட்க வேண்டுமே..?

இலங்கை அரசு ஐ.நா.வையும் மதிக்க மறுக்கிறது. இதையும் சகித்துக் கொண்டு ஐ.நா. இலங்கைக்கு கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது..?

இதுதான் கலிகாலமோ..?

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
உண்மை தமிழன் சொன்னார்
[[[ நீங்கள் இந்தியரா அல்லது இலங்கையரா என்று கேட்டால் தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றுதான் சொல்வார்கள். அது ஊறிப் போன விஷயம் ]]]
இலங்கையில் உள்ள மலையக இந்திய பாமர மக்களிடையே இருக்கும் தேச பக்தியை நான் எப்போதும் ஒரு மன நெகிழ்ச்சியுடனும் அதிசயத்துடனும் கண்டுள்ளேன் --- நான் கூறுவது அவர்கள் ஓட்டுருமை இழந்து சொந்த தேசம் இல்லாது இருந்த காலம் ---
இப்போது அநேகமானோர் ஓட்டுருமை பெற்றுள்ளதால் நிலைமை மாறியிருக்கலாம் ---
அந்த நாட்களில் எந்த வறிய குடிசைக்குள் நுழைந்தாலும் ஒரு ''போக்கை வாய் காந்தி தாத்தா'' ஒரு ''ஜவகர்லால் நேரு'' ஒரு ''முண்டாசு பாரதி'' தவறாது தொங்குவார்கள். இப்பரிதாபத்துக்குரிய மக்களது தேச பக்தி எவ்வாறு இந்த உன்னத நிலைக்கு வளர்ந்தது ---
இவர்களிலும் பார்க்க படித்த பணகார வீடுகளில் தேச பக்திக்குரிய எதையுமே காண முடியாது ---
இதை ஆராய்ந்தால் ஊடக உரிமையாளர்கள் இலகுவாக தகுதியான அரசாங்கத்தை உருவாக்கலாம்.//

இதுதான் எங்கட நாட்டிலும் நடக்கிறது..!

எமது நாட்டுத் தேசியத் தலைவர்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்பவர்கள் எங்களுடைய ஏழை, நடுத்தர வர்க்கக் குடும்பத்தினர்தான்..

பணத்திற்குத்தான் நிறைய வேலைகள் இருக்கிறதே.. இந்தப் பக்கம் திரும்புவார்களா என்ன..?

benza said...

http://mail.google.com/mail/?zx=wi0icygg4h23&shva=1#inbox/11fcbe0398242440

IBNLive. com Breaking Newsletter

Unidentified gunmen opened fire on a bus carrying Sri Lankan cricket team as they were on their way to Gadaffi stadium in Lahore on Tuesday morning, Dawn news channel reported. The channel showed footage of two gunmen opening fire. Four policemen are reported dead, seven players have been reported injured.

உண்மைத்தமிழன் said...

///benzaloy said...
http://mail.google.com/mail/?zx=wi0icygg4h23&shva=1#inbox/11fcbe0398242440

IBNLive. com Breaking Newsletter
Unidentified gunmen opened fire on a bus carrying Sri Lankan cricket team as they were on their way to Gadaffi stadium in Lahore on Tuesday morning, Dawn news channel reported. The channel showed footage of two gunmen opening fire. Four policemen are reported dead, seven players have been reported injured.///

பயங்கரவாத நாட்டில் வேறென்ன நடக்கும் பென்ஸ் ஸார்..?

அங்கே சட்டம், ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை என்பது தெள்ளத்தெளிவு..

யார் ஆட்சி நடத்துகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

மதமும், அரசுகளும் ஒன்று சேர்ந்தால் இதுதான் நடக்கும்..

இலங்கை அணியினரை எதற்காகத் தாக்கினார்கள் என்பதும் புரியவில்லை..

காரணமே கிட்டவில்லை..

benza said...

[[[ எத்தனை குரல் கொடுத்தென்ன பென்ஸ் ஸார்..
கேட்பவருக்குக் கேட்க வேண்டுமே..?
இலங்கை அரசு ஐ.நா.வையும் மதிக்க மறுக்கிறது. இதையும் சகித்துக் கொண்டு ஐ.நா. இலங்கைக்கு கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது..?
இதுதான் கலிகாலமோ? ]]]

Bloggers குரல் எடுபட்டுள்ளது --- Porno படம் வகுப்பில் காட்டியதாக குற்றம் கண்டு தண்டிக்கப்பட்ட லேடி டீச்சர் ''சுற்றவாளி'' என காணப்படவில்லையா மீள் விசாரணையில் ?

அது பிளாக்கர் பவர் இல்லாது வேறு என்னவாம் ?

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
Bloggers குரல் எடுபட்டுள்ளது --- Porno படம் வகுப்பில் காட்டியதாக குற்றம் கண்டு தண்டிக்கப்பட்ட லேடி டீச்சர் ''சுற்றவாளி'' என காணப்படவில்லையா மீள் விசாரணையில்? அது பிளாக்கர் பவர் இல்லாது வேறு என்னவாம்?//

பென்ஸ் ஸார்..

இதென்ன மேட்டர்.!? எனக்குத் தெரியாதே..?

கொஞ்சம் சுட்டி இருந்தால் கொடுக்கிறது..?!

abeer ahmed said...

See who owns scientificcommons.org or any other website:
http://whois.domaintasks.com/scientificcommons.org