புகையிலையை ஒழிப்போம்-அன்புமணிக்கு ஒரு ஆதரவு

07-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் டாக்டர் அன்புமணிக்கு எனது கைகள் வலிக்க தட்டி எனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் அன்புமணி அரசியல்வாதிகளில் தான் ஒரு மருத்துவர் என்பதை பொதுவிடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு தடை, மீறினால் அபராதம் என்று இப்போது கொண்டு வந்துள்ள முனைப்பான சட்டத்தால் முழுமையாக நிரூபித்திருக்கிறார்.

பொதுவிடங்களில் புகைப்பிடித்தலைத் தடை செய்தமை குறித்து புகை ஆர்வலர்களும், புகை விரும்பாத ஆர்வலர்களும் மாறி, மாறி சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். தடை செய்தமைக்கான காரணம், புகை விடுவதால் வெளி வரும் நச்சுப் பொருளான நிகோடினால், அப்புகையை வெறுமனே சுவாசிக்கும் அக்கம்பக்கத்தினர் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு என்கிறது சுகாதாரத் துறை.

புகை பிடிப்பவர்களை அதிகம் தாக்குவது புற்றுநோயும், இதய நோயும்தான். புற்று நோயில் தொண்டை புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய்ப்புற்று நோய், கணையத்தில் புற்று நோய் என்று நிகோடினால் தாக்கப்படும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இந்தப் புற்று நோய், வகை.. தொகையில்லாமல் தாக்கி வருகிறது. புகையிலையினால் அதிகப்பட்சமாக வாய்ப்புற்று நோய் தோன்றுகிறது. புகையிலையிலும் இந்த நிகோடின்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் மனித குலத்தின் முக்கிய நோய் எதிரிகளில் ஒருவர் இந்த நிகோடின்தான்.

பொதுவாகப் புகைப் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களை கணக்கெடுத்தால் அதில் அதிகம் பேர் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் பழக்கம் எப்படி அமைந்ததெனில், அது மரபு ரீதியாக, வழி வழியாக ஆண்களுக்கு ஒரு அடையாளமென்ற முட்டாள்தனமான நம்பிக்கை இளைஞர்களுக்குள் ஏற்படுவதினால்தான் என்று நினைக்கிறேன்.

மேலும், மிக, மிக எளிதாக தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகளில் கிடைப்பதான ஒன்று என்பதாலும்தான் அந்தச் சனியனான ‘வெண்குழல்’ இளைஞர்களின் கைகளில் அதிகம் தவழ்ந்து வருகிறது. அடிப்படையில் மனோதிடத்தை இது அதிகப்படுத்துவதாகச் சொல்லித்தான் நிறைய ஆண்கள் இதனைக் குடிக்கிறார்கள். இந்தத் தத்துவத்தை இவர்களுக்கு உணர்த்தியது, சந்தேகமே இல்லாமல் நமது திரையுலகச் ‘சக்கரவர்த்திகள்’தான்.

திரைப்படங்களில் தங்களது ஆஸ்தான ஹீரோக்களின் புகை விடும் ஸ்டைலை பார்த்துத்தான் ரசிகர்களும் புகைப்பழக்கத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டதென்னவோ மறக்க முடியாத உண்மைதான்.

எனது சொந்தக்கார அண்ணன் ஒருவர் அவர் உயிரோடு இருந்தவரையிலும் ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் குடிப்பார். ஒன்றை கீழே போடுகிறார் எனில் இன்னொன்றை பற்ற வைத்துவிட்டுத்தான் செய்வார். தீவிரமான சிவாஜி ரசிகர். “புதிய பறவை” படத்தில் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” பாடல் காட்சியின்போது செளகார்ஜானகியைப் பார்த்தபடியே சிவாஜி ஸ்டைலாக புகைவிடும் ‘நடிப்பைப்’ பார்த்துதான், தனக்குப் புகை மீது ‘வெறி’ வந்ததாக ‘உயிரோடு இருந்தபோது’ பெருமையாகச் சொன்னார்.

இப்படி சில அப்பாவிகள் வரும் ஆபத்து தெரியாமல் அதனைத் தொட்டுவிட்டு பின்பு அதனைவிட முடியாமல் இப்போதும் தவிக்கிறார்கள். எவ்வளவு விலையேற்றினாலும் வேறு ஏதாவது செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிகரெட்டுக்கென்றே தனி பட்ஜெட் போட்டுவிடுகிறார்கள் புகை விரும்பிகள்.

நமது வலையுலகத்திலும் பல இளைஞர்கள் வெண்குழல் பற்ற வைக்கும் நாயகர்களாகவே இருக்கிறார்கள். “புகை பிடிக்காதே தம்பி..” என்று சொல்ல வேண்டியவர்களே, “சிகரெட் இருக்கா..?” என்று கேட்டு வாங்கும் கொடுமையும் நமக்குள் நடக்கிறது.

நான் சந்தித்த பல பதிவர் சந்திப்புகளிலும் புகை விடுவதற்காகவே இடை, இடையே தப்பித்து ஓடும் பதிவர்களை நினைத்துக் கோபப்பட்டிருக்கிறேன். சிறந்த எண்ணங்களை, எழுத்தாக்கி, அந்த எழுத்தை ‘மீண்டும், மீண்டும் படிக்க வைக்கும் போதை’யாக மாற்றுவதைப் போன்ற எழுத்தாற்றல் மிக்க அசாத்தியத் திறமை படைத்தப் பதிவர்களெல்லாம், இந்தச் சனியனைக் கையில் தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாகத்தான் வருகிறது.

நான் கடைசியாக கலந்து கொண்ட தமிழ்மண நிர்வாகிகளின் பதிவர் சந்திப்பிலும் நமது வலைப்பதிவர்களில் பாதிப் பேர் இப்படித்தான் திடீர், திடீரென்று எழுந்து வெளியே ஓடினார்கள். விருந்தினர்களைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு இவர்கள் வெளியே தனியே கூட்டம் நடத்துகிறார்களே என்று வெளியில் வந்து பார்த்தால், அனைவரின் கைகளிலும் அந்தப் பாழாய்ப் போன வெண்குழல்.

அன்றைய தினத்தில் ‘தோளர்’ வளர்மதி, ‘நன்பர்’ பைத்தியக்காரன் என்ற இரண்டு பின்னவீனத்துவ நாயகர்கள்விட்ட சிகரெட் புகையில் முக்கால்வாசி எனது நுரையீரலுக்குள்தான் சென்றது.. வேறு வழியில்லாமல் முருகனை நம்பி சுவாசித்துக் கொண்டேன். அவர்கள் கையில் சிகரெட் இல்லாத நேரத்தில் போய் பேசலாம் என்றால் தூங்கும்போது மட்டும்தான் அது முடியும் என்பதாக எனக்குப் பட்டது. வேறு வழியில்லாமல் கிட்டத்தில் பேசப் போய், புகை நான் விட்டதா அல்லது அவர்கள் விட்டதா என்று கேட்கும் அளவுக்கு புகை மண்டலத்தை கிளப்பினார்கள்.

போதாக்குறைக்கு அப்போதைய புத்தம் புதிய பதிவர் ஒருவரின் அருகில் பேசுவதற்காகச் சென்றேன். அவரருகில் சென்றவுடனேயே எனது கையில் சிகரெட்டால் சூடாக ஒரு சூடு வைத்தார். அலறிப் போய் நான் கையை எடுத்தவுடன் அவரும் பதறிப் போய் அதுவரையில் தனது கரத்தின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினார்.

“என்ன அண்ணே.. சுட்ருச்சா.. ஸாரிண்ணேன்.. ஏதோ அண்ணன் வர்றாரே.. ஒரு மரியாதைக்கு இருக்கட்டும்னு மறைச்சு வைச்சேன்.. எப்படிண்ணேன் கரெக்ட்டா அது மேல போயி கைய வைச்சீங்க..?” என்று ‘அப்பாவி’யாய்க் கேட்டார். என்ன சொல்வது? வேறு வழியில்லாமல் கையைப் பிடித்தபடியே, “தெரியாம வைச்சுட்டேன்பா” என்றேன். ஆனாலும், அந்தப் பதிவர் ‘தெரிந்தே வைத்தாரா? அல்லது தெரியாமல் வைத்தாரா?’ என்பதில் எனக்கு இன்றைக்கும் ஒரு சந்தேகம் உண்டு.!!!

தனி மனித உரிமை.. தனி மனித உரிமை என்று கூச்சல் போட்டு, கோஷம் கொப்பளிக்க, கொடி பிடிப்பதற்கு இது ஒன்றும் நிஜமான தனி மனித உரிமைப் பிரச்சினையில்லை. சமூகப் பிரச்சினை.. “என்ன நோய் வருமாம்ல.. வரட்டும்.. வந்துட்டுப் போகட்டும்.. பார்ப்போம்.. எத்தனையோ சமாளிச்சிருக்கோம். இதை சமாளிக்க மாட்டோமா..” என்று வாய்ச்சவடால் விடுவதற்கு இது ஒன்றும் காசு, பணம் பிரச்சினையில்லை.. உயிர் பிரச்சினை..

புகை பிடிக்கின்ற அனைவரையுமே புற்றுநோய் தாக்குவதில்லை. ஆனால் மற்ற ஏதேனும் ஒரு நோய் தாக்கி விடுகிறது. சராரசியாக 45-லிருந்து 55 வயதுவரையில் மாரடைப்பு வந்து இறந்து போனவர்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தீர்களானால், அதில் முக்கால்வாசிப் பேர் புகைப்பிடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

நோய் வரும். தாக்கும்.. என்பதெல்லாம் நன்கு தெரிந்த பின்பும் புகை விடுபவர்கள் அதனை ஏற்க மறுத்து அது எங்களது உரிமை என்ற ரீதியில் பேசுவது எனக்கு முட்டாள்தனமாகப்படுகிறது. நோய் வராவிட்டால் சந்தோஷம்தான்.. ஆனால் வந்துவிட்டால்..? இந்த ரீதியில் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.. கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுவோமே...

இன்றைய பொருளாதாரச் சூழலில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாள் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தாலே ஒரு மாச சம்பளத்தை மொத்தமாக கொடுத்துவிட்டுத்தான் வர வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவமனை, உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகளின் கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன. இதில் புகையினால் நோய் என்று வந்து நாம் மருத்துவமனையை நாடுவது, கண்ணை விற்று பின்னர் சித்திரம் வாங்கும் கதைதானே..

‘எப்படியும் நாங்கள் பொழைச்சுக்குவோம்’ என்று கும்மியடிப்பவர்கள், படுக்கையில் வீழ்ந்தால் தலகாணியை நகர்த்தி வைக்கக்கூட ஒரு ஆள் உடன் இருக்க வேண்டும் என்பதனை தயவு செய்து மறக்க வேண்டாம்.

மருத்துவமனைக்கு வந்த பின்பு உங்கள் சிகரெட்டுக்கு லைட்டர் துணையுடன் பற்ற வைத்தவரோ, அல்லது சிகரெட் வாங்கிக் கொடுத்தவரோ 24 மணி நேரமும் உடன் இருந்து உங்களைப் பார்த்துக் கொள்ளப் போவதில்லை. கஷ்டப்படப் போவது முழுக்க, முழுக்க நீங்களும், உங்களது குடும்பத்தினரும் மட்டும்தான்.

எவ்வளவோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் உங்களது சேமிப்பு, நீங்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் கண் முன்பே கரையும் கொடுமையை மத்திய தர வர்க்கம், அதற்கும் கீழான வர்க்கத்தினரெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது. நமது சேமிப்புதான் நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பாதுகாப்பு. அதையும் நாமே செலவு செய்துவிட்டு பின்பு நமது குழந்தைகளை பிற்காலத்தில் பணத்திற்காகக் கஷ்டப்பட வைக்கவும் கூடாது.

ஒருவிதத்தில் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து குடும்பத்தினரையும் சேர்த்து கஷ்டப்படுத்துவது அவர்களின் தனி மனித உரிமையை பாதிக்கும் விஷயம்தானே.. எப்படி உங்களுக்குப் புகைப் பிடிக்கும் பழக்கம் தனி மனித உரிமை என்கிறீர்களோ, அதே போலத்தானே உங்களது குடும்பத்தினருக்கும் இருக்கும்..

மருத்துவமனை வாழ்க்கை என்பது சாதாரணமா...? நினைத்துப் பார்த்தால் திரும்பவும் அந்த வாழ்க்கையை வேறு எந்த மனிதரும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் அனுபவித்த எந்தவொரு மனதும் நினைக்கும். நானும் அதனால்தான் சொல்கிறேன்.

எனது தந்தை எப்போதும் சார்மினார் சிகரெட்தான் குடிப்பார். சிகரெட்டிற்கு காசு இல்லாதபோது சொக்கலால் பீடி குடிப்பார். இடையில் கொஞ்ச நாட்கள் சுருட்டு பிடித்தார். இப்படி அனைத்து வித வழிகளிலும், ‘புகையை விடத்தான் செய்வேன். என்னைக் கேட்கவே ஆள் இல்லை..’ என்று வீட்டில் தனி ராஜாங்கமே நடத்தினார்.

அந்த சிகரெட்டை வாங்கிவர நான்தான் போக வேண்டும். நான் இல்லாவிடில் எனது அம்மாவை அனுப்புவார். ஆனால் தான் போக மாட்டார். அவர் ஒருவகையான ஆணாதிக்கத்தில் இருந்தவர். ஆனால் பாசமானவர். இருந்தும் என்ன செய்ய..? ஆடிய ஆட்டமெல்லாம் ஒரு நாள் ஓய்ந்து போனது.

தொண்டை புற்று நோய் வந்து சாப்பிட முடியாமல், வயிற்றில் டியூப் போட்டு.. அதில் பால் ஊற்றி பின்பு, அதிலேயும் செப்டிக் ஆகி.. முடியாமல் போக.. பசி.. பசி.. பசி.. என்று பசியால் துடித்த துடிப்பு இருக்கிறதே.. சாப்பிட சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாமல் சாவது எவ்வளவு கொடுமை என்பது தெரியுமா உங்களுக்கு? பட்டினியாக இருந்தே சாவைச் சந்தித்த அந்தக் கொடுமையை என்னால் மறக்கவே முடியவில்லை, நான் இந்தக் குடி, புகை, புகையிலை, மதுவை அடியோடு வெறுப்பதற்குக் முதல் காரணம் இது ஒன்றுதான்.

என் அப்பன் முருகன் அவனாகவே புற்று நோயையோ அல்லது வேறு ஏதோ ஒரு கர்மத்தையோ கொடுத்து என்னை கூப்பிட்டால், கண்டிப்பாக போய்த்தான் ஆவேன். போக மாட்டேன் என்று சொல்ல முடியுமா என்ன..? சொன்னால்தான் விட்டுவிடப் போகிறானா..? ஆனால் நானாக வரவழைத்துக் கொள்ள மாட்டேன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னுடைய சில நிமிட சிற்றின்பத்திற்காக எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் நான் அந்த நரக வேதனையில் ஆட்படுத்த மாட்டேன் என்ற உறுதிதான், என்னை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

புகை விடுபவர்களுக்கு நோய் வராமல் இருக்க வேண்டும் என்றுதான் நானும் வேண்டிக் கொள்கிறேன். வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் எனது கேள்வி.

புகை பிடிக்கத் தடை சட்டம், பொதுவிடங்களில் மட்டும்தானே ஒழிய.. அவரவர் வீட்டுக்குள் புகை பிடித்துக் கொள்ள எந்தத் தடையுமில்லை என்கிறது அரசாங்கத்தின் புதிய விதிமுறை. இதுவும் ஒரு வகையில் மிக, மிக ஆபத்தான சட்ட விதிமுறைதான்.

புகை பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என்பதனை வளர்ந்து வரும் சமுதாயத்தினரிடம் நாம் சொல்லிப் பழக்க வேண்டிய இந்தக் காலத்தில், வீட்டுக்குள்ளே இருந்து குடிச்சுத் தொலை என்றால் எப்படி?

வெளியில் பஸ்ஸ்டாண்டில், மக்கள் கூடும் இடங்களில் புகையை சுவாசிக்கும் வாய்ப்புள்ள பொதுமக்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அந்தப் புகையை இனிமேல் அளவுக்கு அதிகமாகப் ‘பிடிக்கப்’ போகிறார்கள். நமது ஆணாதிக்கம் சார்ந்த சமூகத்தில் ஏற்கெனவே குடிகார ஆண்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அரசே உரிமம் கொடுத்துவிட்டதைப் போல் இருக்கிறது இந்த விதிமுறை.

பிள்ளைகளுக்கு அடையாளங்களாக இருக்க வேண்டிய அப்பன் வீட்டுக்குள்ளேயே இருந்து சிகரெட் குடித்தால், பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? அந்தப் பழக்கம் தவறு என்ற மனப்பான்மை அவர்களுக்குள் எப்படி ஏற்படும்? ‘நம்ம அப்பாவே குடிக்கிறார்.. நாமளும் குடிப்போம்’ என்றுதான் இப்போது விடலைப் பசங்கள் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனை ஊக்குவிப்பதைப் போல் உள்ளது மறைமுகமான இந்த அனுமதி. இதற்கு என்ன தீர்வு என்பதையும் நாம் இப்போது யோசிக்க வேண்டும்.

இந்தப் புகையால் மட்டும்தான் நோய் வருகிறதா..? பேருந்துகள் விடும் கட்டுபாடற்ற புகையினாலும்தான் நோய் வருகிறது. அதனால் பேருந்துகளை தடை செய்துவிடுவார்களா என்றெல்லாம் நமது ‘வலையுலக சிங்கங்கள்’ கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

புற்றுநோய் தாக்கியவர்களில் தானாகவே நோயை வரவழைத்துக் கொண்ட வகையினர்தான் அதிகம் என்பது மருத்துவக் குறிப்புகள் சொல்லும் உண்மை. எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறைந்த சதவிகிதத்தினர்தான். இதற்கு யாரையும் காரணமாகச் சொல்ல முடியாது. இந்தக் குறைந்த சதவிகிதத்தினருக்காக பெரும்பான்மை சதவிகிதத்தினர் செய்வது சரி என்று சொல்லிவிட முடியுமா என்ன..?

மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு கிராமம் முழுக்கவே சிறுநீரகத்தில் கோளாறு, பலருக்கு புற்று நோய், சிலருக்குத் தோல் நோய், இன்னும் பலருக்கு யானைக்கால் நோய் என்று பல வியாதிகளும் ஒட்டு மொத்தமாகத் தாக்கியிருக்கும் விஷயங்களும் இப்போது பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன.

இவைகள் அந்தந்தப் பகுதிகளில் நிலவி வரும் தட்பவெப்பநிலை, உண்ணும் உணவு, பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் பாதிப்பாகத்தான் இருக்கும். இல்லை என்று சொல்லவில்லை. இதனால் ‘முதலில் அங்கே சரி செய்துவிட்டு பின்பு இங்கே வா..’ என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்தானே..

“ஏன் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். சிகரெட் குடித்தால் புற்றுநோய்.. இதே புற்றுநோய் மதுபானம் அருந்தினாலும் வருகிறதே.. அதனை தடை செய்யுங்கள். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து சம்பாதிக்கத் தெரிகிற அரசாங்கத்திற்கு சிகரெட் பிடிப்பது மட்டும்தான் குற்றமாகத் தெரிகிறதா..?” என்றும் வாக்குவாதங்கள் தொடர்கின்றன.

இதுவும் தவறுதான்.. ஆனால் தவறு என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இல்லாத காரணத்தினால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதைய தமிழக நிலவரப்படி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால், நமது கஜானா அடுத்த நொடியே காலியாகிவிடும். அடுத்த மாத இலவசத் திட்டங்களுக்கு பைசா இருக்காது. இலவச் திட்டங்கள் இல்லாமல் போனால் அடுத்து மறுபடியும் ஆட்சிக்கு வர முடியாது.. எது முக்கியம் நாம் ஆட்சிக்கு வருவது முக்கியமா? அல்லது மக்கள் உயிர் முக்கியமா..?

இந்தப் பட்டிமன்றத்தில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவது மட்டுமே முக்கியம். மக்கள் குடிகாரர்களாக மாறி சாவது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். இனிமேல் உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது நீங்கள்தான். ஆனாலும் தடை செய்யப்பட அதிகாரமுள்ள துறைகளில், தடை செய்து காப்பாற்றப்பட வேண்டிய சில உயிர்களையாவது காப்பாற்றலாமே.. அது சரிதானே.. அதைத்தான் மிஸ்டர் அன்புமணி இப்போது செய்திருக்கிறார்.

இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு ஒன்றுதான். அது சிகரெட், பீடி, புகையிலை, மது போன்ற நோய்வாய்ப்பட வாய்ப்புள்ள அனைத்து வகை போதை வஸ்துக்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுதல் வேண்டும். ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை.

நாட்டின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் கிடைக்கும் வருவாயில் 40 சதவிகிதம் இந்த வஸ்துக்கள் மூலமாகவே வருகிறது என்கிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. பணம் கொட்டும் துறையாக வளர்ந்து செழித்திருக்கும், இந்த புகையிலை சார்பான தொழில்களை தடை செய்து அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டத் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டுமெனில் அதற்கெல்லாம் தொலைநோக்கோடு செயல்படக்கூடிய ஒரு அரசாங்கம் வேண்டும்.

அடுத்து ஆட்சியில் அமர்த்துவது முதல் மகனையா அல்லது, இரண்டாவது மகனையா.. மகளா, பேரனா, வளர்ப்பு மகனா, உடன் பிறவா சகோதரியா, சகோதரியின் உடன் பிறந்த சகோதரர்களா, ராஜகுருவா என்றெல்லாம் நமது அரசியல்வாதிகளின் சிந்தனை சென்று கொண்டிருக்கும்போது, இந்த தொலை நோக்குப் பார்வை அவர்களுக்கு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியவில்லை.
அமைச்சர் அன்புமணி பொது இடங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை இந்தச் சட்டத்தின் மூலம் காட்டிவிட்டார். அதற்காகத்தான் முதலிலேயே நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இவராவது இதையாவது செய்தாரே என்று சந்தோஷப்படலாம்.

இனி நாம் நமது தாய்க்குலங்கள் மீதுதான் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லத்தில் கண்ணியத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை எங்களுக்குத்தான் உள்ளது என்ற நோக்கில் தாய்க்குலங்கள் வீட்டிற்கு உள்ளேயும் இதே போல் தடை உத்தரவு கொண்டு வந்தார்களானால், அடுத்த இரண்டாவது தலைமுறையிலாவது புகையிலை இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

அப்படியொரு சூழலை நாம் உருவாக்க நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும், போதைப் பொருட்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வை நமது பிள்ளைகளிடத்தில் நாம் கற்பிக்க வேண்டும். அது நமது கடமையும்கூட..
போதைப் பொருட்களை ஒழிப்போம்..
புகையில்லா உலகத்தைக் காண்போம்..

வாழ்க வளமுடன்

டிஸ்கி-1 : நமது வலையுலக மருத்துவர் ப்ரூனோ அவர்கள் நிகோடின் பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் புள்ளி விவரத்துடன் இதில் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.. மருத்துவருக்கு எனது நன்றி.

டிஸ்கி-2 : இப்படியொரு கருத்துடன் எப்போது நான் பதிவைப் போடுவேன் என்று ‘வெறி’யுடன் காத்திருக்கும் வெளிநாட்டு ‘தைலாபுர’ பதிவருக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

26 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

இன்னும் படிக்கல...
படிச்சுட்டு வர்றேன்..

நாமக்கல் சிபி said...

இந்தப் பதிவை (வழக்கம்போல)முழுவதும் படித்துப் பார்க்கும் அளவுக்கு எனக்குப் பொறுமையும் நேரமும் இல்லை என்பதால் இந்தப் பதிவை நான் வரிக்கு வரி வழி மொழிகிறேன்!

மருத்துவர் அன்புமணி அவர்கள் (ஆட்சி, பதவி, தேர்தல் நிதி போன்றவற்றை எல்லாம் ஒதுக்கி வவத்துவிட்டு) இன்னும் பல துணிச்சலான கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

புருனோ Bruno said...

//அப்படியொரு சூழலை நாம் உருவாக்க நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும், போதைப் பொருட்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வை நமது பிள்ளைகளிடத்தில் நாம் கற்பிக்க வேண்டும். அது நமது கடமையும்கூட..
போதைப் பொருட்களை ஒழிப்போம்..

புகையில்லா உலகத்தைக் காண்போம்..//

வழிமொழிகிறேன்

Ganesan said...

முதலில் டாக்டர் அன்புமணிக்கு எனது கைகள் வலிக்க தட்டி எனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Dr.anbumani, verymuch tried to bring this law , he got lot of troubles from the politicians. in coffee with anu , vijay tv program, in his interview he openly said at about 5 chief ministers , 50 MPs personally talked to dr.anbu mani , not to bring this law.but he is clear in his mind to bring this law. Congrats dr.anbumani.

வர்றாரே.. ஒரு மரியாதைக்கு இருக்கட்டும்னு மறைச்சு வைச்சேன்.. எப்படிண்ணேன் கரெக்ட்டா அது மேல போயி கைய வைச்சீங்க..?” என்று ‘அப்பாவி’யாய்க் கேட்டார். என்ன சொல்வது? வேறு வழியில்லாமல் கையைப் பிடித்தபடியே, “தெரியாம வைச்சுட்டேன்பா” என்றேன். ஆனாலும், அந்தப் பதிவர் ‘தெரிந்தே வைத்தாரா? அல்லது தெரியாமல் வைத்தாரா?’ என்பதில் எனக்கு இன்றைக்கும் ஒரு சந்தேகம் உண்டு.!!!

Enne unmai tamilan, pona idathulueum sudu vachundagla, correcta pera note pannikonga, madurai auto, venam athu old style scorpio anupuchiruvom.




துணையுடன் பற்ற வைத்தவரோ, அல்லது சிகரெட் வாங்கிக் கொடுத்தவரோ 24 மணி நேரமும் உடன் இருந்து உங்களைப் பார்த்துக் கொள்ளப் போவதில்லை. கஷ்டப்படப் போவது முழுக்க, முழுக்க நீங்களும், உங்களது குடும்பத்தினரும் மட்டும்தான்.

Nalla sollunga.




இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு ஒன்றுதான். அது சிகரெட், பீடி, புகையிலை, மது போன்ற நோய்வாய்ப்பட வாய்ப்புள்ள அனைத்து வகை போதை வஸ்துக்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுதல் வேண்டும். ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை.

Chanceye kitayathu. Eppti rule vanthal, ITC, GTC IND, PANPARAG, MANIKCHAND enthe nalu companiyum in a single day 1000 crs kudupargal kudga vendivankalaku.


Congarts sir , urs social look article.

Wishes
Kaveri ganesh

உண்மைத்தமிழன் said...

//உருப்புடாதது_அணிமா said...
இன்னும் படிக்கல... படிச்சுட்டு வர்றேன்..//

கமெண்ட் முழுசா பண்ணலை. அப்ப நானும் தேங்க்ஸ் பண்ணலை.. அப்புறமா பண்ணுவேன்..

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
இந்தப் பதிவை (வழக்கம்போல)முழுவதும் படித்துப் பார்க்கும் அளவுக்கு எனக்குப் பொறுமையும் நேரமும் இல்லை என்பதால் இந்தப் பதிவை நான் வரிக்கு வரி வழி மொழிகிறேன்!//

மொத்தப் போறேன்... வாத்தியார் பதிவுல வரிக்கு வரி கமெண்ட் போட நேரமிரு்க்கு. என் பதிவைப் படிக்கவே நேரமில்லையா..

இந்த சல்ஜாப்பெல்லாம் இங்க வேணாம்.. முழுசா படிச்சிட்டு வரிக்கு வரி கமெண்ட் போடணும்..

//மருத்துவர் அன்புமணி அவர்கள் (ஆட்சி, பதவி, தேர்தல் நிதி போன்றவற்றை எல்லாம் ஒதுக்கி வவத்துவிட்டு) இன்னும் பல துணிச்சலான கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!//

நானும் வாழ்த்துகிறேன்..

உண்மைத்தமிழன் said...

///புருனோ Bruno said...
//அப்படியொரு சூழலை நாம் உருவாக்க நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும், போதைப் பொருட்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வை நமது பிள்ளைகளிடத்தில் நாம் கற்பிக்க வேண்டும். அது நமது கடமையும்கூட.. போதைப் பொருட்களை ஒழிப்போம்.. புகையில்லா உலகத்தைக் காண்போம்..//
வழிமொழிகிறேன்///

நன்றி ப்ரூனோ ஸார்.. உங்களுடைய நிகோடின் பற்றிய பதிவுதான் இந்தப் பதிவை எழுத வைத்துள்ளது..

உண்மைத்தமிழன் said...

//KaveriGanesh said...
Dr.anbumani, very much tried to bring this law , he got lot of troubles from the politicians. in coffee with anu , vijay tv program, in his interview he openly said at about 5 chief ministers , 50 MPs personally talked to dr.anbumani, not to bring this law. but he is clear in his mind to bring this law. Congrats dr.anbumani.//

அட அப்படியா.. அந்த நிகழ்ச்சியை நான் பார்க்க முடியாமல் போய்விட்டது..

நிச்சயம் இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் இது..

உண்மைத்தமிழன் said...

//KaveriGanesh said...
Enne unmai tamilan, pona idathulueum sudu vachundagla, correcta pera note pannikonga, madurai auto, venam athu old style scorpio anupuchiruvom.//

அந்தத் தம்பிக்கு ஆட்டோவே அதிகம். சைக்கிள்ல போயே தூக்கிரலாம்.. பாவம் விட்ருங்க.. சின்னப் பையன்.. பொழைச்சுப் போகட்டும்..

//Chanceye kitayathu. Eppti rule vanthal, ITC, GTC IND, PANPARAG, MANIKCHAND enthe nalu companiyum in a single day 1000 crs kudupargal kudga vendivankalaku.//

அதனால்தான் எந்த அரசு வந்தாலும் தடை மட்டும் செய்யவே மாட்டார்கள் என்பது அரசியல் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்..

Cable சங்கர் said...

//நிச்சயம் இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம் இது..//

அவரது துறையில் ஓரு நாளைக்கு வருமானம் பல கோடிகள்.. சட்டம் என்னவோ நல்லா தான் இருக்கும் அதுக்கு பின்னாடி அவர் சம்பாதிக்க போற அமெள்ண்ட் ரொம்ப பெரிசு அதுக்குதான் இத்தனை பில்டப். எனிவே அன்புமணியை பாராட்டுகிறேன். உங்களுக்காக.. உண்மை தமிழன்.

Unknown said...

பொது இடங்களில் புகைப் பிடிப்பதைத் தடுக்கும் சட்டம் உடனடியாக பலனளிக்காவிட்டாலும், நாளடைவில் பொது இடத்தில் புகைப்பிடிப்பவரின் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தி, உளவியல் ரீதியான பலனை நிச்சயம் தரும். இதனை மிகவும் போராடி கொண்டு வந்த மத்திய அமைச்சர் ரா.அன்புமணி அவர்களுக்கும், அவருக்கு ஊக்கமளித்த அய்யா ச.ராமதாசு அவர்களுக்கும் பாராட்டிப் பதிவெழுதிய உங்களுக்கும் நன்றிகள் பல.

உண்மைத்தமிழன் said...

cable sankar said...
//அவரது துறையில் ஓரு நாளைக்கு வருமானம் பல கோடிகள்.. சட்டம் என்னவோ நல்லாதான் இருக்கும் அதுக்கு பின்னாடி அவர் சம்பாதிக்க போற அமெள்ண்ட் ரொம்ப பெரிசு அதுக்குதான் இத்தனை பில்டப். எனிவே அன்புமணியை பாராட்டுகிறேன். உங்களுக்காக.. உண்மை தமிழன்.//

சங்கர் ஸார்..

அன்புமணி இதில்(மட்டும்) சம்பாதிக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அன்புமணியின் பதிவிக் காலத்திற்குப் பிறகு வரும் புதிய அமைச்சர் சம்பாதிக்கலாம்.. கூடவே இந்த விதிமுறை ஏதாவது ஒரு மொக்கை காரணம் சொல்லப்பட்டு நீக்கப்பட்டலாம். அல்லது திருத்தப்படலாம்.

எத்தனையோ அரசியலை பார்த்திருக்கோம்.. இதையும் பார்த்திர மாட்டோமோ..

பொய்யன் said...

good post. 100 percent vazhimozhikiren

admin said...

ரொம்ப நல்ல கட்டுரை திரு.உண்மைத்தமிழன். :)

உண்மைத்தமிழன் said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
பொது இடங்களில் புகைப் பிடிப்பதைத் தடுக்கும் சட்டம் உடனடியாக பலனளிக்காவிட்டாலும், நாளடைவில் பொது இடத்தில் புகைப்பிடிப்பவரின் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தி, உளவியல் ரீதியான பலனை நிச்சயம் தரும். இதனை மிகவும் போராடி கொண்டு வந்த மத்திய அமைச்சர் ரா.அன்புமணி அவர்களுக்கும், அவருக்கு ஊக்கமளித்த அய்யா ச.ராமதாசு அவர்களுக்கும் பாராட்டிப் பதிவெழுதிய உங்களுக்கும் நன்றிகள் பல.//

நன்றி பெரியசாமி அவர்களே.. அந்தக் குற்ற உணர்வே சிகரெட் பயன்படுத்தும் அளவைக் குறைக்கும் என்பதில் எனக்கும் உடன்பாடே..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நூறு சதம் ஒத்துக் கொள்ள வேண்டிய பதிவு.

அன்புமணி இதற்காப் பாராட்டப் பட வேண்டியவர்.

உண்மைத்தமிழன் said...

//பொய்யன் said...
good post. 100 percent vazhimozhikiren//

மிக்க நன்றி பொய்யன் ஸார்.. தங்கள் தளத்தையும் மேய்ந்துள்ளேன். விரைவில் வருகிறேன்.

உண்மைத்தமிழன் said...

//admin said...
ரொம்ப நல்ல கட்டுரை திரு.உண்மைத்தமிழன்.//

மிக்க நன்றி..

Sundararajan P said...

//தனி மனித உரிமை.. தனி மனித உரிமை என்று கூச்சல் போட்டு, கோஷம் கொப்பளிக்க, கொடி பிடிப்பதற்கு இது ஒன்றும் நிஜமான தனி மனித உரிமைப் பிரச்சினையில்லை. சமூகப் பிரச்சினை..//

சரியான கருத்து தம்பி. தனி மனித உரிமை என்பது அடுத்தவர் உரிமையை பறிக்காமல் நமது உரிமையை துய்ப்பதுதான்.

கொஞ்சம் சின்னதா எழுதி இருந்தா உடனே பின்னூட்டம் போட்டிருக்கலாம்...பதிவை சொன்னேன்.

தம்பின்னு சொல்லி இருக்கேன். மகிழ்ச்சிதானே?

உண்மைத்தமிழன் said...

//அறிவன்#11802717200764379909 said...
நூறு சதம் ஒத்துக் கொள்ள வேண்டிய பதிவு. அன்புமணி இதற்காப் பாராட்டப் பட வேண்டியவர்.//

நன்றி அறிவன்.. அவரால் முடிந்ததை செய்துள்ளாரே என்று பாராட்டுவதை விட்டுவிட்டு சிகரெட்டு ஏன் தடை விதிக்கவில்லை என்று வம்படியாகக் கேள்வி கேட்கிறார்கள்.. முட்டாள்தனம்.

ரவி said...

இந்த நீளமான பதிவை படித்து டென்ஷன் ஆகிவீட்டது...

டென்ஷன் தீர ஒரு தம் போட்டுவிட்டு வருகிறேன்...

உண்மைத்தமிழன் said...

///சுந்தரராஜன்...! said...
//தனி மனித உரிமை.. தனி மனித உரிமை என்று கூச்சல் போட்டு, கோஷம் கொப்பளிக்க, கொடி பிடிப்பதற்கு இது ஒன்றும் நிஜமான தனி மனித உரிமைப் பிரச்சினையில்லை. சமூகப் பிரச்சினை..//
சரியான கருத்து தம்பி. தனி மனித உரிமை என்பது அடுத்தவர் உரிமையை பறிக்காமல் நமது உரிமையை துய்ப்பதுதான்.///

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணா.. அடுத்தவர் மூக்கைத் தொடும்வரைதான் உனது எல்லை என்பதை வலைப்பதிவர்கள் பலரும் அவ்வப்போது மறந்துவிடுகிறார்கள்..

//கொஞ்சம் சின்னதா எழுதி இருந்தா உடனே பின்னூட்டம் போட்டிருக்கலாம்...பதிவை சொன்னேன்.//

முருகா.. இது பெரிய பதிவா.. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்காங்குறேன்.. மக்கள் சட்டம் வலைத்தளத்துல இருந்து எடுத்துக் காட்டட்டுமா.. எது சின்னது.. எது பெரிசுன்னு..

//தம்பின்னு சொல்லி இருக்கேன். மகிழ்ச்சிதானே?//

ஐயோ.. கொள்ள சந்தோஷம்ண்ணேன்..

உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ..

நித்யன் said...

ஐயா...

உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். நான் முதல் மற்றும் இதுவரை கடைசி முறையாக கலந்து கொண்ட பதிவர் சந்திப்பில் திடீர் திடீரென நண்பர்கள் காணாமல் போய் திரும்பி வந்தனர். அது புகைவிடத்தான் என்று பிறகு தெரிந்தது. அப்போதே சிறிதாக மனதில் ஒரு வருத்தம் பிறந்தது. அது ஒன்றும் சிறந்த பண்பாக என்னால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. நான் புகை பிடிப்பதை சொல்லவில்லை. பத்து பதினைந்து பேர் கூடியிருக்கும் இடத்தில் சொல்லாமல் விலகிச் செல்வது....

அதை பதிவு செய்தமைக்கும் நன்றி.

அன்பு நித்யகுமாரன்.

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
இந்த நீளமான பதிவை படித்து டென்ஷன் ஆகிவீட்டது... டென்ஷன் தீர ஒரு தம் போட்டுவிட்டு வருகிறேன்...//

ங்கொய்யால.. இதுக்கு கமெண்ட் போடாமலேயே இருந்திருக்கலாம். இதைப் படிச்சு இன்னும் பயபுள்ளை திருந்த மாட்டேங்குறானேன்னு எனக்கு டென்ஷனாகுது..

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
ஐயா... உங்கள் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். நான் முதல் மற்றும் இதுவரை கடைசி முறையாக கலந்து கொண்ட பதிவர் சந்திப்பில் திடீர் திடீரென நண்பர்கள் காணாமல் போய் திரும்பி வந்தனர். அது புகைவிடத்தான் என்று பிறகு தெரிந்தது. அப்போதே சிறிதாக மனதில் ஒரு வருத்தம் பிறந்தது. அது ஒன்றும் சிறந்த பண்பாக என்னால் ஒத்துக்கொள்ள இயலவில்லை. நான் புகை பிடிப்பதை சொல்லவில்லை. பத்து பதினைந்து பேர் கூடியிருக்கும் இடத்தில் சொல்லாமல் விலகிச் செல்வது.... அதை பதிவு செய்தமைக்கும் நன்றி.
அன்பு நித்யகுமாரன்.//

ஐயா சாமி.. அப்படீன்னா சொல்லிட்டுப் போய் புகைவிட்டால் நல்ல பண்புன்னு சொல்ல வர்றீங்க..? அப்படித்தான..? வெட்டணும்ய்யா உங்களையெல்லாம்..

abeer ahmed said...

See who owns openlibrary.org or any other website:
http://whois.domaintasks.com/openlibrary.org