Showing posts with label cinema reviews. Show all posts
Showing posts with label cinema reviews. Show all posts

நேர் எதிர் - சினிமா விமர்சனம்

30-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


Copy, Inspiration இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பாமரனான எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதனை வைத்துத்தான் தமிழ்ச் சினிமாவில் இயக்குநர்கள் பலரும் கும்மியடிக்கிறார்கள். Across the Hall  என்ற ஹாலிவுட் படத்தின் சீன் பை சீன்.. ஷாட் பை ஷாட்.. அப்படியே ரீமேக் செய்துவிட்டு டைட்டிலில் Inspiration என்று சொல்லி படத்தின் பெயரை போட்டுவிட்டால் அனுமதி வாங்கிவிட்டதாக அர்த்தமாகிவிடுமா..? படத்தின் இயக்குநர், திரைக்கதை, வசனம், இயக்கம் என்று காப்பி செய்த அனைத்திலும் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார். இதுதான் சிக்கலாகிறது..! 

இதைவிட பெரிய கொடுமை.. இதே படத்தை காப்பியடித்து தயாரான சென்ற வருடம் ‘உன்னோடு ஒரு நாள்’ என்ற படம் வெளியாகியேவிட்டது. அதன் இயக்குநர் துரை கார்த்திகேயன் அப்படம் வெளிவரும் முன்பேயே ஒரு விபத்தில் காலமாகிவிட்டதால் நாம் எதுவும் கேட்க முடியாது..! ஆனால் இந்த இரண்டு படங்களின் முதல் காட்சியும் இறுதிவரையிலான திரைக்கதையும் ஒன்றுதான்..!

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இது உறைக்க ஆரம்பித்ததால் படத்தினை முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த நேர்எதிர் படத்தில் கதிராக நடித்த பார்த்தியின் நடிப்பு படத்தினை கொஞ்சம் ரசிக்கவும் வைத்தது என்பதைச் சொல்லியாக வேண்டும்..!

தான் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண், இரவு நேரத்தில் ஒரு ஹோட்டலுக்குள் செல்வதை பார்க்கும் கதிர் அவளைத் தேடி அதே ஹோட்டலுக்கு வந்து லஞ்சம் கொடுத்து காதலியின் அறைக்கு நேர் எதிர் அறையில் ரூம் போட்டுவிட்டு.. தனது நண்பன் கார்த்திக்குக்கு போன் செய்து தனது காதலி பற்றியும், அவளை கொலை செய்யப் போகிறேன் என்றெல்லாம் போனில் மிரட்டி டென்ஷனை ஏற்ற.. படத்தின் திரைக்கதையோட்டத்தில் படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லைதான்..! ஆனால் ஒரிஜினல் பாராட்டு.. அந்த ஹாலிவுட் படத்தின் கதாசிரியர்களுக்கும், திரைக்கதை ஆசிரியர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்..!

கார்த்திக் எங்கே இருக்கிறார் என்பதையே சஸ்பென்ஸோடு ஆரம்பிக்கிறார்கள். பின்பு கார்த்திக்கை ஏன் இதில் இழுத்திருக்கிறார் என்பதையும் கதிர் இறுதியில் என்ன செய்யப் போகிறார் என்பதையும் இறுதிவரையில் சஸ்பென்ஸாகவே கொண்டு சென்று  முடித்திருக்கிறார்கள். ஆனால்  இது ஹாலிவுட் படத்துக்கு மட்டுமே தோதானது.. தமிழ்ச் சினிமாவுக்கு ச்சும்மா வெத்து வேட்டுதான். லாஜிக் மிஸ் ஆவதால், தமிழுக்காக கொஞ்சம் மாற்றியிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.. 

நடிப்பு என்று பார்த்தால் கதிராக நடித்தவ பார்த்திதான் படத்திற்கு உயிர்.. தண்ணியடித்துவிட்டு சிவப்பான கண்களோடு.. வார்த்தைகளை மென்று முழுங்கி அவர் கொடுத்திருக்கும் உச்சரிப்பும், நடிப்பும் ஏ ஒன்.. பாராட்டுக்கள்.. இவருக்கு அடுத்து நமது தல அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்டு.. இவருக்கு நல்ல நடிப்பார்வமும், திறமையும் இருந்தாலும் கோடம்பாக்கம் இவரை அரவணைக்காதது ஏன் என்று தெரியவில்லை..?
படத்தின் பெரும்பாலான காட்சிகள் வசனத்தின் மூலமாகவே நகர்த்தப்படுவதால் நடிப்புக்கு மிகப் பெரிய ஸ்கோப் உள்ள படம் இது.. படத்தின் நாயகியும் அழகோ அழகு.. அவருக்காக ஒரேயொரு பாடல் காட்சியை இணைத்திருக்கிறார்கள். அதையும் அம்சமாக படமாக்கியிருக்கிறார்கள்..! 

மூலக் கதையில் இருக்கும் அதே டிவிஸ்ட்டுகள் மற்றும் ஆக்சன் காட்சிகள்.. வசனங்கள் மூலமாக படத்தின் சஸ்பென்ஸ் உச்சத்தை தொடும்போதுதான் கொஞ்சம் சொதப்பி விட்டார்கள்.. நீராவி என்ற வித்தியாசமான பெயருடன் ரூம் பாயாக வரும் எஸ்.எம்.பாஸ்கரின் பேச்சும், நடிப்பும் படத்திற்கு உறுதுணை.. பங்கு பிரிப்பதில் ஏற்படும் பிரச்சினையை ஆளாளுக்கு போர்டில் எழுதிக் காட்டும் காட்சி செம காமெடி.. 

காதலியைத் தேடி வந்த காதலன்.. யார் அந்த இடையில் புகுந்த நபர்.. எதற்காக கார்த்திக்கின் துப்பாக்கியை கதிர் கொண்டு வர வேண்டும்..? கார்த்திக்தான் அந்த நபர் என்பதை கதிர் எப்போது உணர்கிறார்..? அவரை மாட்டிவிட இறுதியில் என்ன செய்கிறார் என்பதையும் வரிசையாக குழப்பமில்லாமல் கொண்டு போய் முடித்திருக்கிறார்கள். பின்னணி இசையையும் கொஞ்சம் ரம்மியமாக இழைத்திருந்தால் தேவலை.. கர்ண கொடூரம்.. 

ரீமேக் படத்தினை இன்ஸ்பிரேஷனில் செய்தது என்று சொல்லித் தப்பித்த குற்றத்திற்காக இப்படத்தினை புறக்கணிக்க முடியாது என்றாலும், காப்பியடித்த இன்னொரு படமான ‘உன்னோடு ஒரு நாள்’ படத்தினைவிடவும் மேக்கிங்கில் இது அசத்தியிருக்கிறது என்பதாலும் பாராட்டுக்கள்..!

பார்க்க விரும்புவர்கள் பார்க்கலாம்..!

கோலிசோடா - சினிமா விமர்சனம்

30-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சாலை ஓரங்களில் சில சமயங்களில் நம் கண்ணில்படும் அழுக்கு உடையணிந்த சிறுவர்களை பார்க்கின்றபோது நம்ம நிலைமை எவ்வளவோ தேவலையப்பா என்றுதான் நினைக்கத் தோன்றும்.. தெருக்களில் கிடக்கும் பொருட்களை அள்ளி தோளில் சுமக்கும் சாக்குப் பைகளில் போட்டுக் கொண்டு ரோட்டோர டீக்கடைகளில் பன்னும், டீயும் குடித்துவிட்டு அக்கம்பக்கம் மலங்க மலங்க விழிக்கும் சிறார்களை பார்த்து பயந்ததுண்டு.. பாவப்பட்டதுண்டு.. இப்படிப்பட்ட வாழ்க்கை இவர்களுக்கு ஏன் முருகா என்று வருந்தியதுண்டு..!

காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதே, அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை இன்றைக்கும் கோயம்பேட்டுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம். ஒரு மூட்டையை இறக்கினால் 5 ரூபாய்.. இப்படித்தான் அந்த அதிகாலை வேளையில்  4 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக வரும் அனைத்து வண்டிகளுக்கும் ஆளாய்ப் பறப்பார்கள் அந்த சிறுவர்கள். அதில் வரும் காசுதான் அவர்களின் அன்றாடப்படி.. 

இந்தச் சிறுவர்களின் தாய் தந்தை யார்.. குடும்பம் எங்கே..? உற்றார், உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது.. ஏன் அவர்களுக்கே தெரியாது.. அது பற்றிய சிந்தனையே இல்லாமல் கிடைக்கின்ற காசில் சாப்பிட்டுவிட்டு மீண்டும், மீண்டும் உழைத்துக் கொண்டேயிருக்கும் 4 சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன கதைதான் இந்த கோலிசோடா..!

புள்ளி, குட்டிமணி, சித்தப்பா, சேட்டு என்ற நான்கு சிறுவர்களும் ஆச்சியின் கடையில் ஏற்றல் இறக்கல் வேலைகளைச் செய்து பிழைத்து வருகிறார்கள்.. இவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் ஆச்சி.. கோயம்பேடு மார்க்கெட்டையே கைக்குள் வைத்திருக்கும் மீட்டர் வட்டி தாதா நாயுடுவின் உதவியை நாடுகிறாள். நாயுடு பலவித யோசனைகளுடன் மூடிக் கிடக்கும் ஒரு கடையைக் கை காட்ட.. அதில் ஆச்சி மெஸ் உருவாகிறது..!

இந்தப் பையன்களின் கடின உழைப்பில் ஆச்சியின் அரவணைப்பில் மெஸ் ஓஹோவென ஓடிக் கொண்டிருக்கும்போது நாயுடுவின் மைத்துனன் மயிலின் வில்லங்கத்தால் அதில் ஓட்டை.. ஒரு இரவு நேரம் குடித்துவிட்டு.. பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்ணை நைச்சியமாக அங்கே அழைத்து வந்து ஏமாற்றி அனுபவித்துவிட்டு.. அங்கேயே தூங்கியிருந்து காலையில் எழுந்தும் டார்ச்சர் செய்யும் மயிலை இந்தப் பையன்கள் அனைவரின் முன்பாகவும் அடித்துவிட.. பிரச்சினை இங்கேயிருந்துதான் துவங்குகிறது..!

கவுரவம் என்ற ஒற்றைச் சொல்லுக்காகவே உயிர் வாழும் நாயுடு.. இது தன்னுடைய கவுரவப் பிரச்சினை என்று சொல்லி பையன்களை அடிக்கச் சொல்லி ஏற்பாடு செய்ய.. அதுவும் சொதப்பலாகி.. போலீஸ் கேஸாகிறது.. மறுபடியும் ரவுண்டு கட்டி அடித்து பையன்களை பிரித்து இந்தியாவின் ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய் தள்ளுகிறார்கள்.. 

இராப்பகலாக உழைத்து, உழைத்து உருவாக்கிய அந்தக் கடையை நம்பியே வாழ்ந்திருந்த அந்த நால்வருக்கும் அந்தக் கடையை விட்டுக் கொடுக்க மனசில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் தனித்தனியே பிரிந்திருக்கிறாகள். அவர்களது உற்ற தோழியாக இருக்கும் ஏடிஎம் என்ற சீதா, இவர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்க்க.. இவர்களுக்குள் ஒரு வைராக்கியம் பிறக்கிறது. எப்பாடுபட்டாவது அந்த ஆச்சி மெஸ்ஸை மீட்டே தீர வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான் மிச்சம், மீதி படம்..!

ஏற்கெனவே ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தினை இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அதைவிட பரபரப்பாக இந்தப் படத்தினை படைத்திருக்கிறார்..! முதல் பாதியில் முக்கால்வாசி நேரமும் படம் எதை நோக்கி போகிறது என்பதே தெரியாமல் இருந்தாலும் இடைவேளையின்போதுதான் படத்தின் கதையே துவங்குகிறது.. அங்கிருந்து துவங்கும் விறுவிறுப்பான திரைக்கதையை அதன் டெம்போ குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்..! 

அந்தச் சிறுவர்கள் நான்கு பேரும் ஷார்ப்பான செலக்சன்.. ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும் பட்டப் பெயர்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணப் பெயர்கள் எல்லாமே நகைச்சுவை ததும்பிய சோகங்கள்..! அந்த வயதுக்கே உரித்தான எதிர் பாலின கவர்ச்சி.. அதை அடையும் பொருட்டு அவர்கள் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள்.. அதன் எதிர்வினை.. பள்ளிக்குச் செல்லும் மாணவியிடம் செல்போனை வைத்து டிராமா போடுவது.. பின்பு அவள் யாரென தெரிந்து ஜெர்க் ஆவது.. ஆச்சி அவர்களை அதன் பின்பும் அரவணைப்பது என்று சட்டு சட்டென்று திரைக்கதை மாறினாலும், ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தின் பாசம், நேசம், அன்பு, முட்டல், மோதல்களை இயல்பாகவே சொல்லியிருப்பதால் ரசிக்க முடிகிறது..!

நான்கு பையன்களின் கடின உழைப்பை மயிலுடனான சண்டை காட்சியில் காண முடிகிறது.. மிக பரபரப்பான அந்தச் சண்டை காட்சியை அமைத்துக் கொடுத்திருக்கும் சண்டை பயிற்சியாளரையும் அதனை கச்சிதமாக படம் பிடித்திருக்கும் விஜய் மில்டனையும் எவ்வளவு பாராட்டனாலும் தகும்.. அந்த ஒரு காட்சிக்கே காசு செத்துச்சு எனபார்களே... அந்த டயலாக்கை இந்தப் படத்தின் இந்தக் காட்சிக்கு சொல்லிக் கொள்ளலாம்..!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்.. மந்திரவாதி என்ற இமான் அண்ணாச்சிக்கு ஒரு சோகக் கதை.. அவ்வப்போது இவர் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.. போலீஸ் ஸ்டேஷனில் தண்ணியடித்துவிட்டு குடிகாரர்களின் சார்பாக இவர் பேசும் வசனங்கள் நிச்சயம் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்.. 

யாமெனி கேரக்டரைவிட ஏடிஎம் என்னும் அந்தச் சின்னப் பெண்ணின் தேர்வும், நடிப்பும் கச்சிதம்.. இப்படியொரு கேரக்டரை படைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.. மெஸ்ஸின் வாசலில் பையன்களை நையப்புடைக்கும் காட்சியில்  யாமெனியும், ஏடிஎம்முன் உட்புகும் காட்சிகளும், சண்டையில் அவர்களுக்கு உதவுகின்ற போர்க்களமும் ஒரு வித்தியாசமான உணர்வை பார்வையாளர்களுக்கு நிச்சயம் தரும்.. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணாமாகவும் இருக்கலாம்..!

சேலம் சுஜாதாவிற்கு மிக அழுத்தமான கேரக்டர்.. தன்னை கிண்டல் செய்வதைக்கூட தாங்கிக் கொண்டு பையன்கள் மீது உண்மையான அன்பு வைத்திருந்து அவர்களுக்காக செய்யும் உதவிகளும்.. தன் மகளை சைட் அடிக்கிறார்கள்.. ஒரு பையன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் உதவிகளைத் தொடர்ந்து செய்வதும்.. மார்க்கெட் சங்கத் தேர்தலில் நிற்க வந்து நின்று, நாயுடுவிடம் தப்பு பண்ணிட்ட.. என்று முறைப்பு காட்டும்விதத்திலும்   இந்த ஆச்சி அசத்தியிருக்கிறார்..

ஒளிப்பதிவின் நாயகனே படத்தின் இயக்குநர்தான் என்பதால் ஒளிப்பதிவு பற்றி சொல்லியா தர வேண்டும்..? கோயம்பேட்டின் பிரமாண்டத்தை பல காட்சிகளில் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இவரது கேமிரா இருட்டிலும்கூட மென்மையான ஒளியில் காட்சிகளை மிக அழகாக படமெடுத்திருக்கிறது.. ஒரு பக்கம் கேரளா.. இன்னொரு பக்கம் அரபிக் கடல்.. இன்னொரு கோணம் பெளத்த கோவில்.. என்று பல இடங்களிலும் இந்த கேமிரா கவிஞனின் கேமிரா இயங்கியிருக்கிறது.. 

துண்டு துண்டான சில பாடல் காட்சிகள் இருப்பதுதான் ஒரேயொரு குறை.. ஆனாலும்  இசையமைப்பாளர் பின்னணி இசையில்தான் அதிக கவனம் செலுத்தி அதிரடி ஆடியிருக்கிறார்..  சம்பந்தமே இல்லாமல், கடைசியான ஒரு பாடல் காட்சியில் புவர் ஸ்டார் சீனிவாசனும், ஆண்டர்சனும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.. வெகுஜன ரசிகர்களையும் கொஞ்சம் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிறார் இயக்குநர். இயக்குநர் பாண்டிராஜின் வசனங்கள் படத்திக்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது.. பையன்களின் சோக்க் கதையை வசனத்தாலேயே கடந்து செல்கிறார்.. ஆச்சியை மருத்துவமனையில் நாயுடு மிரட்டும்போது நான் நேத்தே செத்து போயிட்டேன் என்று சொல்லும் அந்த ஒரு வரி வசனம் பல கதைகளைச் சொல்கிறது.. இமான் அண்ணாச்சி போலீஸிடம் பேசும் வசனங்கள்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயுடுவை சமாதானப்படுத்த முயலும் காட்சிகள்.. இறுதியில் தங்களுக்கென இருக்கும் ஒரேயொரு அடையாளமே அந்த ஆச்சி மெஸ்தான் என்பதை மட்டுமே பையன்கள் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அவர்கள் பையன்களாகவே இருக்கிறார்கள் என்பதை நாயுடுவுக்கும், ஆடியன்ஸுக்கும் கச்சிதமாகப் புரிய வைத்திருக்கிறார்கள்..!   

நாயுடுவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. கவுரவத்திற்காக அவர் எதையும் செய்வார் என்பதையும் அளந்து, அளந்து வசனத்தில் கொடுத்திருக்கிறாகள்.. மெஸ்ஸில் ஒரு பெண்ணை பயன்படுத்தியதற்காக மயிலையும் அடித்துவிட்டு, பையன்கள் அடித்தது தப்பு.. அது எனக்கு கவுரவப் பிரச்சினை.. என்று சொல்லி குண்டை தூக்கிப் போடும் அந்த கவுரவமான நடிப்புக்கு ஒரு சோடா கடையையே எழுதி வைக்கலாம்..! மனிதர் வாழ்ந்திருக்கிறார்.. மொட்டையடித்த நிலையில் பையன்களை தேடி வந்து உதைக்கும் காட்சியிலும், அந்த கிளைமாக்ஸில் அவருக்கு இருக்கும் அந்தச் சின்ன டிவிஸ்ட்டும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது..!

இத்தனை நல்லவராக இருப்பவர் ஏன் கவுரவத்தை முதன்மையாக நினைக்கிறார்..? அடித்துத் துரத்துபவர் கொலையே செய்திருக்கலாமே..? ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய்விடப்பட்டவர்கள்.. ஒரு சின்னப் பெண்ணின் முயற்சியால் ஒன்றிணைவது சாத்தியமா..? சின்ன பையன்களை நம்பி ஆச்சி தன்னையே பணயம் வைப்பது.. இத்தனை பெரிய ரவுடிக்கு எதிராக களமிறங்க ஒரு நொடியில் முடிவெடுப்பது.. ஆத்தாவை பாசத்துடன் கட்டியணைத்த நிலையிலேயே ஆர்வத்தில் பெண்ணின் கையையும் பிடித்திழுக்கும் காதல் காட்சி..  சில இடங்களில் அவர்களது வயதுக்கு மீறிய வசனங்கள்.. கோயம்பேட்டில் எது நடந்தாலும், போலீஸின் கைகள் கட்டப்பட்டிருப்பது.. போன்ற காட்சிகளெல்லாம் படத்தின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்ப்பதாகவே இருந்தாலும், திரைக்கதையின் வேகத்தில் இதுவெல்லாம் வீட்டுக்கு வந்த பின்புதான் தோன்றுகிறது..!

இதில் இருக்கும் டிவிஸ்ட்டுகளும், சில காட்சிகளும் பலமான குறியீடுகளாகவே படத்தில் தென்படுகின்றன.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் படம் அவார்டு படமாகும் சூழல் வருவதால் அதனை நாம் தவிர்த்துவிடுவோம்..! சின்னச் சின்ன குறைகளை  பொருட்படுத்தாமல் விட்டோமானால்.. வழக்கு எண் போலவே இந்தப் படமும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் கருதப்படும்.. இயக்குநர் விஜய் மில்டனுக்கும், நடித்தவர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.. இந்தப் படம் நிச்சயம் பல விருதுகளை வாரிக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை..! 

மிஸ் பண்ணிராதீங்க..!

மாலினி 22 பாளையங்கோட்டை - சினிமா விமர்சனம்

30-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


குடும்ப உறவுகளே முக்கியம் என்ற சிந்தனையின்பால் நிறைந்திருக்கும் இந்திய சமூகச் சூழலில் கற்பழிப்புகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது..! உலகளாவிய வர்த்தக கோட்பாடுகள் நமது நாட்டின் கடைக்குட்டி கிராமம்வரையிலும் பரவியிருக்கும் நிலையில் பெண்களை போகப் பொருளாகக் கொள்ளும் உணர்வுகள் மெல்ல மெல்ல அதிகரித்தே வருகிறது.. நாகரிகம் என்ற போர்வையில் ஆண், பெண் உறவுகள் பிரெண்ட்ஷிப் என்ற வகையில் பிரிக்க முடியாத வகையில் செல்லும்போது, அவ்வப்போது அந்த எல்லைக் கோட்டை தாண்டி இது போன்ற கொடூரங்களும் நிகழ்ந்துவிடுகின்றன..!

சாதாரணமாக கற்பழிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் மிகப் பெரிய ஒரு சமூகக் குற்றத்தை நாம் தாண்டிச் செல்கிறோம் என்பதுதான் உண்மை.. ஒழுக்கம் என்பது யாதெனில் என்று நாம் நமது வாரிசுகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் முன்பாகவே அதனைக் கடந்து செல்ல ஆணை பிறப்பிக்கின்றன இன்றைய வாழ்வியல் சூழல். திருமண பந்தம் தாண்டிய காதல்களும், கற்பழிப்புகளும் எல்லை தாண்டிய நிலையில் இன்றைய தலைப்புச் செய்திகளாவதற்குக் காரணம் நம் குடும்ப மரபுகளே.. பெண்கள், ஆண்களுக்கு அடிமைகள் என்ற இந்திய ஆணின் பொது புத்தியில் புதைக்கப்பட்டிருக்கும் விஷத்தை வெளியில் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை..!

பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தையையே கடந்த சில ஆண்டுகளாகத்தான் நாம் கேள்விப்படுகிறோம்.. அதற்கு முன்வரையிலும் கற்பழிப்புதான்.. இந்த வார்த்தையை கொண்டு வருவதற்கே நமக்கு இத்தனை ஆண்டுகளாகிவிட்டன.. இந்தக் கொடூரங்களை நிறுத்தத்தான் வேண்டும் என்று நாம் விரும்பினாலும், நாள்தோறும் நடக்கும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன..! 

இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கும் குடும்பம், தாய், சகோதரிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனாலும் இன்னொரு பெண்ணை தன் குடும்பத்து பெண் போல நினைக்கும் பக்குவமும், எண்ணமும் பெரும்பாலானோர்க்கு வருவதில்லை. இந்தக் கொடுமைக்கு உள்ளான பெண், போலீஸ், நீதிமன்றம், சட்டம் என்று பெரும் போராட்டம் நடத்தி, தன்னையும் மீடியாவுக்கு வெளிப்படுத்திக் கொண்டு... அதன் பின்னர் அந்த வெளிச்சத்தின் அவலத்திலேயே மிச்சமான தனது வாழ்க்கையை கழிக்க வேண்டுமா..? இது முடியுமா..? சமூகம் அவர்களை இனிமேல் எப்படி கவனிக்கும்..? இதைத்தான் இதுவரையிலான திரைப்படங்கள் சொல்லி வந்தன.. அதே கொடுமைக்கு பெண்களே வேறு வகையிலான தீர்ப்பை தாங்களே எழுதிக் கொள்ள ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்..!

2012-ம் ஆண்டில் மலையாளத்தில் '22 பீமேல் கோட்டயம்' என்ற பெயரில் வெளிவந்து பல விருதுகளை வாரிக் குவித்த படம்தான் தமிழுக்கு இந்தப் பெயரில் ரீமேக்காகியிருக்கிறது.. மலையாளத்தில் ரீமா கல்லிங்கால் செய்த கேரக்டரில் நித்யா மேனன்.  பஹத் பாஸில் செய்த கேரக்டரில் மலையாள நட்சத்திர தம்பதிகளான நடிகை ஜெயபாரதி-நடிகர் சத்தாரின் மகன் கிரிஷ் ஜெ.சத்தார்.. மலையாளத்தில் பயமூட்டிய பிரதாப்போத்தன் கேரக்டரில் தெலுங்கு நடிகர் நரேஷ்.. 

பாளையங்கோட்டையைச் சேர்ந்த நர்ஸான நித்யாவின் கனவு, கனடா சென்று நர்ஸிங் பணியாற்ற வேண்டும் என்பது. இதற்காக சென்னைக்கு வந்து ஒரு மருத்துவமனையில் 2 வருடங்களாக நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். கனடாவுக்கு விசா எடுக்கும் பணியையும் செய்து கொண்டேயிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த முதிர் கன்னி கோவை சரளா.. மற்றும் ஒரு பெரும் பணக்காரரின் கீப்பாக இருக்கும் நண்பியுடன் அந்தப் பணக்காரரின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கிறார்கள்.

டிராவலிங் ஏஜென்ஸி வைத்திருக்கும் சத்தார், அழகே அழகான நித்யாவின் அழகில் மயங்கி அவளை காதலிக்கிறான்.. உருகுகிறான்.. மருகுகிறான்.. அவளை இம்ப்ரஸ் செய்ய விரும்பி அவன் விரிக்கும்வலையில் நித்யா மயங்கிவிடுகிறாள்.. அவனுடைய பாஸ் என்ற நரேஷ்.. நித்யாவை சந்திக்கும் தருணத்தில் நல்லவனாகவே காட்சியளிக்கிறார்.. ஆனால் அவர்தான் கடைசியில் அவளுக்கு எமனாகிறார்.. உடன் இருக்கும் தனது காதலனும் நரேஷுக்கு துணை என்பதையறியும்போது, யோசிக்கக் கூட நேரமில்லாத சூழலில் திட்டமிட்ட சதியால் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறாள் நித்யா..

சிறையில் இருக்கும் அனுபவசாலிகளால் உலக அறிவு அவளுக்கு புகட்டப்பட.. தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கயவர்களை சும்மாவிடக் கூடாது என்றே முடிவெடுக்கிறாள் நித்யா. சிறையில் அவளுடைய அறையில் தோழியாக இருக்கும் ஜானகியின் துணையுடன் வெளியே வரும் நித்யா நரேஷையும், சத்தாரையும் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்காக பழி வாங்குகிறாள். அது எப்படி என்பதுதான் சஸ்பென்ஸான கதை.. இதனை தயவு செய்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று இயக்குநர் ஸ்ரீபிரியாவே தனது கைப்பட கடிதமெழுதி பத்திரிகையாளர்களிடம் கொடுத்திருக்கிறார்.(மேடம், உங்க கையெழுத்து சூப்பர்..) எனக்கும் இதுதான் சரியென்று படுகிறது.. ஆனால் அதுவென்ன என்பதை அவசியம் நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

படத்தில் தான் வரும் காட்சிகளிலெல்லாம் கண்ணை இமை கொட்டாமல் பார்க்க வைக்கிறார் நித்யா மேன்ன்.. திமிரான அழகி என்பார்கள் அவரை.. அதுவும் ஒருவகையில் சரியானதுதான்.. அத்தனை அழகையும் தனது நடிப்பிலும் காட்டியிருக்கிறார்.. முதலில் அப்பாவியாக இயல்பாக கோட்டாவின் கல்யாண பிரபோஸலுக்கு அழகு காட்டுவதில் இருக்கிறது அவரது நடிப்பு..! சத்தாரின் தேன் தடவிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நம்பி தன்னைத் தொலைப்பதுவரையிலும்.. கேன் ஐ செக்ஸ் வித் யூ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அரண்டு போய் கதறுவதிலும் வெகு இயல்பான நடிப்பு.. 

இதே நித்யாதான் கடைசியில் அந்த இரண்டு பழி வாங்கல்களைச் செய்கிறாரா என்ற சந்தேகமும் வரத்தான் செய்கிறது..! மென்மையான அவரை விஜயசாந்தி ரேஞ்சுக்கு மாற்ற ரொம்பவே கஷ்டப்படவில்லையாம் இயக்குநர். அவராகவே மாறிவிட்டார் என்றார் பத்திரிகையாளர் சந்திப்பில்.. நரேஷிடம் ஸ்டைலாக அதிகாரத்துடன் பேசும் காட்சியிலும்,  சிஸ்டர் என்று கெஞ்சியவுடன் எழுந்து சென்று நரேஷின் கன்னத்தில் அறையும் ஒரு கணத்தில் தியேட்டரில் கைதட்டல்கள் நிச்சயம்..! இதேபோலத்தான் சத்தாருடன் இறுதியில் செய்யும் சமரும், அவ்வப்போது அவனது தொலைந்து போன ஆம்பளைத்தனத்தை சுட்டிக் காட்டும் ஸ்டைலும் ரசிக்க வைக்கிறது..!  அம்மணி தனது இரும்புத் திரையைக் கழட்டிவிட்டு களத்தில் இறங்கினால் இங்கேயும் நடிப்புத் திலகமாக வலம் வரலாம்..!

சத்தாருக்கு தமிழில் இது முதல் படம். மலையாளத்தில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறாராம்..! அப்பாவியாய் நடிக்கத் துவங்கி.. அடப்பாவி என்று சொல்ல வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அவருடைய அப்பாவின் ஜாடை அப்படியே தெரிகிறது..!  கிளைமாக்ஸில் அவருடைய பரிதவிப்பை பார்ப்பவர்களுக்கு அந்த எண்ணமே வராது என்று நினைக்கிறேன்..! வெல்டன்..

யார் நடித்தாலும் நம்ம பிரதாப்போத்தனை மிஞ்ச முடியுமா என்ற சந்தேகத்தோடுதான் இருந்தேன்.  அது வேறு களம்.. வேறு இயக்குதல் முறை என்பதால் நரேஷ் சில காட்சிகளே என்றாலும் தனது நடிப்பில் குறை வைக்கவில்லை.. அந்த பன்ச் டயலாக்கை இரண்டு முறை உச்சரிக்கும் விதம்தான், படத்தின் டர்னிங் பாயிண்ட்டே. அதனை உணர்ந்து நடித்திருக்கிறார்.. 

குறிப்பிடத்தக்க இன்னொரு கேரக்டர் ஜெயிலில் ரூம்மேட்டாக இருக்கும் ஜானகி.. இப்படியொரு முகத்தை, சினிமாவில் வெயிட்டான கேரக்டரில் பார்த்திருக்க மாட்டீர்கள். மிரட்டியிருக்கிறார்..  கூடுதலாக கோட்டா சீனிவாசராவ்.. ஆஸ்பத்திரி பேஷண்ட் கேரக்டர்.. தனது சொத்துக்களில் பாதியை தர தயார் என்று சொல்லி நித்யாவிடம் தன்னை கல்யாணம் செஞ்சுக்கோயேன் என்று சொல்லும் செல்லமான பேஷண்ட்.. இவரது உதவியும் கடைசியில் நித்யாவுக்கு வந்து சேர்வதை போன்ற திரைக்கதை படத்துக்கு ஒரு வெயிட்டை கொடுத்திருக்கிறது..!

எப்போதும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்கள், தமிழில் வெற்றி பெறாது.. அது ஒருவகையான சாபக்கேடு.. ஏனெனில் மலையாளத்தின் இயக்கமும், கதையாக்கமும் வேறு.. சொல்லப்படும் விதமும் வேறு வேறு.. தமிழில் இயக்கத்தின்போது சில சமரசங்கள் செய்யத்தான் வேண்டும். இதற்காகவே இதில் கோவை சரளா கேரக்டரும்.. அதையொட்டிய காட்சிகளும் இருக்கின்றன. இது கொஞ்சம் போரடிக்கிறது என்றாலும், இதைத் தவிர்த்து இயக்குநரின் இயக்கத்தில் ஒரு குறையும் சொல்ல முடியவில்லை..!

மலையாளத்தில் நண்பிகளின் பேச்சுகளிலேயே ஒரு எல்லை மீறிய கமெண்ட்டுகள் நிறையவே இருக்கும்.. ரெஸ்ட்டாரெண்ட்டில் ஹீரோவை பார்த்த நண்பி அவனது பின்புறம் கவர்ச்சியா இருக்குல்ல என்று கேட்டு சிரிப்பார்.. இது தொடர்பாக அவர்களுக்குள் நடக்கும் பேச்சுக்களே சுவாரசியமா இருக்கும். இதை அப்படியே தமிழாக்கம் செய்தால் தொலைந்தது கதை என்பதால் கோவை சரளாவை வைத்து முதிர் கன்னி கதையாடல் செய்திருக்கிறார்கள்..! அதேபோல் ஜென்ஸி என்ற நண்பியின் தற்போதைய தொழில், அவளுடைய கீப் வாழ்க்கை பற்றியெல்லாம் மலையாளத்தில் துவைத்துப் போட்டிருப்பார்கள். இதில் அவற்றை அடியோடு நீக்கியிருக்கிறார்கள்.. போகட்டும். விட்டுவிடுவோம்..!

மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு.. அரவிந்த் சங்கரின் இசை.. முத்துக்குமாரின் பாடல்கள்.. இதையும் தாண்டி இயக்குதலும் சிறப்பாகவே இருக்கிறது.. பல வருடங்களுக்கு பிறகு தமிழ்ச் சினிமாவை இயக்கியிருக்கும் ஸ்ரீபிரியா மேடத்திற்கு பாராட்டுக்கள். இப்படியொரு படத்தை தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள் என்ற நிலையில் துணிந்து தயாரித்திருக்கும் அவரது கணவரும், நடிகருமான ராஜ்குமார் சேதுபதிக்கும் எனது பாராட்டுக்கள்..!

நல்ல படம் வர்றதில்லையே என்று புலம்புவர்களும்.. மாற்று சினிமா வேணாமா என்று கதறுபவர்களும்.. பெண்களுக்கு ஒரு தீர்வு சொல்லக்கூடாதா என்று முழக்கமிடுபவர்களும் ஒரு சேர பார்த்து, அனுபவிக்க வேண்டிய திரைப்படம்.. தயவ செய்து மிஸ் பண்ணிராதீங்க..!

கலவரம் - சினிமா விமர்சனம்

29-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஒரு பிளாஷ்பேக்கை முடிச்சிட்டு அப்புறமா மெயின் பிக்சருக்குள்ள நுழையலாம். 2000-ம் வருஷம். பிப்ரவரி 2-ம் தேதி. பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயல்லிதாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. இந்த்த் தீர்ப்பு வந்தவுடன் கொதித்தெழுந்த அ.தி.மு.க.வின் அடிமை தொண்டர்கள் தமிழ்நாடெங்கும் போராட்டங்களையும், எதிர்ப்பு ஆர்ப்பாடங்களையும், கலவரமும் செய்தனர்.

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியர் தர்மபுரிக்கு கல்விச் சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். இலக்கியம்பட்டி அருகே அவர்கள் வந்த பஸ் கலவரத்தில் சிக்கியதில் அந்த பேருந்துக்கு அ.தி.மு.க. தொண்டர்களே தீ வைத்தனர்.. இதில் 3 அப்பாவி மாணவிகள் சிக்கி உயிரிழந்தனர்.. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ்செல்வன்..!

அதையும் ஆத்தாவின் இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிலீஸ் செய்யும் அளவுக்கு தைரியமாக இருந்த இந்த டீமுக்கு எனது பாராட்டுக்கள்..!
ஏற்கெனவே கல்லூரி படத்தில் பாலாஜி சக்திவேல் இதனை கிளைமாக்ஸ் காட்சியாக வைத்திருந்தாலும், அதன் தாக்கம் தியேட்டர் கேண்டீன்காரர்களைக்கூட தாக்கவில்லை. இப்போது இந்தப் படம் டிக்கெட் விற்பவர்களைக்கூட தாக்கவில்லை..!

இதுவும் மதுரையைக் களமாகக் கொண்ட கதைதான்..! ஏதோ மதுரையே ரவுடிக் கும்பல்களின் கையில் இருப்பதுபோல சினிமாக்காரர்களின் நினைப்பு..! இப்பத்தான் ஜில்லால மதுரைக்காரய்ங்களை கொத்து புரோட்டா போட்டாங்க. இப்போ இது அடுத்தது..! ஆதிமூலம், மூலமான ஒரு மெகா ரவுடி. மாவட்ட அமைச்சரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். கட்டதுரை, பட்டறை பரமன் போன்ற மிகச் சிறந்த துணை ரவுடி தளபதிகளை களத்தில் இறக்கிவிட்டு மதுரையில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர்..!

தன்னுடைய எதிர்ப்பையும் மீறி தேர்தலில் ஜெயிக்கும் எம்.எல்.ஏ.வை நட்ட நடு ரோட்டில் குத்திக் கொல்கிறார். இந்தக் கேஸில் போலீஸ் அவரை கைது செய்கிறது.. இதனை எதிர்த்து தனது அடிப்பொடி தளபதிகள் மூலமாக நகரில் கலவரத்தை உண்டு செய்கிறார் ஆதிமூலம்.. இந்தக் கலவரத்தில்தான் கதையின் ஹீரோக்களான சக்தி பொறியியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டு 4 மாணவிகள் கருகி சாம்பலாகிறார்கள்..! 

மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க.. அவர்களைச் சமாளிக்க வேண்டி டெல்லியில் இருந்து அஸிஸ்டெண்ட் கமிஷனர் வெற்றிச்செல்வனை விசாரணை அதிகாரியாக கொண்டு வருகிறார்கள். இவர் வந்து விசாரித்து முடிக்கும்போது கேஸை குளோஸ் செய்யும்படி லோக்கல் அமைச்சர் அட்வைஸ் செய்கிறார். போடா நீயாச்சு.. உன் கேஸாச்சுன்னு சொல்லி பைலை தூக்கியெறிந்துவிட்டு செல்கிறார் வெற்றிச்செல்வன்..! ஆனால்.. அவர் அமைதியாக இல்லை.. 

இன்னொரு பக்கம் தங்களது தோழிகள் நால்வரை பலி கொடுக்கும் மாணவர்கள் நேர்மையாக முயன்றும் கலவரத்தில் ஈடுபட்ட அரசியல்வியாதிகள் தப்பித்துவிடுவார்கள் என்பதால் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக் கொண்டு அவர்களை அழிக்க புறப்படுகிறார்கள். இவர்களுக்கு வெற்றிச்செல்வன் உதவிகள் செய்து எப்படி அந்தக் கயவர்களை பரலோகத்திற்கு பார்சல் செய்ய வைக்கிறார் என்பதுதான் படமே..! இவர் ஏன் உதவி செய்கிறார் என்கிற மகா, மகா சஸ்பென்ஸையும், எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதையும் தங்களால் முடிந்த அளவுக்கு தெலுங்கு பட லெவலுக்கு எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்..!

இது மாதிரியான சென்சிட்டிவ்வான பிரச்சினைகளை படமாக்கும்போது லாஜிக் மீறல்கள் அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.. அரசு நடைமுறைகளும், நாட்டு நடப்புகளும் உடனுக்குடன் காட்சி ரீதியாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் இன்றையச் சூழலில் இந்த அரசியல்-மாணவர்கள்-போலீஸ்-கலவரம் காட்சிகளின் நம்பகதன்மை எந்த அளவுக்கு இருக்க வேண்டும்..? அவற்றின் நம்பகத்தன்மை இல்லையேல் படத்தின் மீதான பிடிப்பும் ரசிகனுக்கு இருக்காது..! இதுவும் அப்படித்தான்..!

வெற்றிச்செல்வனாக வரும் சத்யராஜ் டெல்லியில் இருந்து கூப்பிட்டவுடன் வருகிறாராம்..! சாதாரணமாக மதுரைக்குள் நடந்த ஒரு கலவரத்திற்கு மத்திய அரசு அதிகாரியை இழுப்பதென்றால் சாதாரணமா..? சரி.. வருபவர் யாரென்று அமைச்சருக்கே தெரியாது என்று ரீல் விடுகிறார்கள். 4 மாணவிகள் எரிந்தார்கள்.. இவர்களின் குடும்பத்தினர் யார் என்பது தெரியாமலா இருக்கும்.. இறந்தவர்களில் ஒரு மாணவி சத்யராஜின் மகள் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியில் வெடிக்கிறார்களாம்.. உளுத்துப் போன வெடி..! யாராவது நம்ப முடிகிறதா..?

ஊரில் 2 கொலைகள் நடக்கின்றன.. அதிலும் முக்கியமான ரவுடிகள்.. போலீஸ் தேடாதா..? இருக்கிற போலீஸெல்லாம் ஆதிமூலத்திடம் லஞ்சம் வாங்கித் திளைப்பவர்கள் என்று சொல்லும்போது எந்தளவுக்கு அவர்களின் போர்ஸை காட்டியிருக்க வேண்டும்..? 
வெற்றிச்செல்வனாக சத்யராஜ்.. வந்திறங்கும்போதே கெட்டப்போடுதான் இறங்குகிறார்.. பேச்சிலேயே தனது ஆக்சனை காண்பித்துவிட்டு போகிறார்.. இவரை வைத்து இயக்கி.. பழைய சத்யராஜை காட்ட வேண்டுமென்றால் அது மணிவண்ணனால்தான் முடியும் என்பது உறுதி போலிருக்கு..! சில காட்சிகளில் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார்.. மிச்சம், மீதியெல்லாம் அந்த இயக்குநருக்கே வெளிச்சம்..!

நான்கு ஹீரோக்கள்.. அவ்வளவு நடிக்க வாய்ப்பில்லை.. நான்கு ஹீரோயின்களையும் படத்தின் பிற்பாதியில்தான் காட்டுகிறார்கள்.. முதல் ஷாட்டிலேயே படத்தின் கதையைச் சொல்லத் துவங்கிவிட்டதால் படம் ரன் வேகத்தில் பறக்கிறது..! முதல் பாடல் காட்சி ஏன்.. எதற்கு என்று தெரியவில்லை.. சொய்ங்.. சொய்ங் என்று கானா பாலா பாடுகிறார்.. இரண்டாவது பாடல் காட்சி இடைவேளைக்கு பின்பு அந்த மாணவர்களுக்காக கொடைக்கானலில் எடுத்திருக்கிறார்கள்.. எதுக்குன்னுல்லாம் கேட்கப்படாது..! 

பல காட்சிகளும சட்டு, சட்டென்று பறப்பதால் அடுத்த காட்சி இதுதான் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.. இதுவே படத்தின் பெரிய பலவீனம்..! மிகப் பெரிய டிவிஸ்ட்டுகளைக்கூட சர்வசாதாரணமாக காட்டியிருக்கிறார்கள்..! ஆதிமூலமாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் தணிகலபரணி மட்டுமே ஒரேயொரு ஆறுதல்..! அன்னார் இன்னும் பல படங்களில் நடித்து தனது திறமையைக் காட்ட்ட்டும்..!

சந்திரனின் ஒளிப்பதிவில் கலவரம் நடக்கும் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்..! கொடைக்கானல் பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் அனல் பறக்கிறது. என்றாலும் சண்டை துவங்கியவுடனேயே படம் முடிஞ்சிருச்சு என்ற பீலிங்கோடு சீட்டில் இருந்து எழும் 80-களின் காலத்துக்கே கூட்டிச் சென்றுவிட்டார் இயக்குநர்..!

கொஞ்சம் அழுத்தமான இயக்கம்.. சிறப்பான நடிப்பு.. இறுக்கமான திரைக்கதை இவற்றோடு வந்திருந்தால் இந்த டீமுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்..! ஏமாற்றமே மிஞ்சியது..!

விடியும்வரை பேசு - சினிமா விமர்சனம்

29-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தமிழ்ச் சினிமா ஒரு பிரமிக்கத்தக்க தொழில்துறையாக வளர்ந்திருப்பதற்கு அடிப்படை காரணம்.. மக்களுக்கு சினிமா மீதிருக்கும் ஒரு கவர்ச்சி.. சினிமாவின் மூலம் கிடைக்கும் புகழை தேடும் மனசு.. தாங்களும் சினிமாவில் நுழைந்தால் ஏதாவது ஒரு வகையில் பிரபலமாகலாமே என்கிற ஆர்வம்.. இதில் நடிகர், நடிகைகள் இப்படித்தான் உள்ளே வருகிறார்கள்.. சிலருக்கு மட்டுமே நடிப்பில் ஆர்வம். பலருக்கும் பணத்தின் மீது ஆர்வம். 

வருகின்றவர்கள் நடிப்புக்கு ஏற்றவாறு முகமோ, நடிப்பு திறமையோ இல்லையென்றாலும், ஏதாவது ஒரு விதத்தில் கிளிக்காகிவிட்டால் ஏணியில் ஏறிவிடலாமே என்கிற எண்ணத்தில்தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தாங்களே படத்தைத் தயாரித்து தங்களுக்கு தோதான இயக்குநரைத் தேடிப் பிடித்து தன்னை மோல்டு செய்து அல்லது அடித்து, உதைத்தாவது நடிக்க வைத்துவிடுங்கள் என்பார்கள்.. அந்த இயக்குநருக்கும் டைட்டில் கார்டில் இயக்குநர் என்ற பெயருக்கு கீழே தன் பெயரை பார்க்க வேண்டும் என்பது வரலாற்று ஆசையாக இருந்திருக்கும். பட்டென்று ஒத்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு.. தன்னிடம் இருக்கும் திறமைக்கேற்ப படத்தை முடித்துத் தருவார்.. இனி ஆண்டவன் விட்ட வழியென்பார்.. இந்த விடியும்வரை பேசு படமும் ஆண்டவன் விட்ட வழியில் ஓடி, ஓடி.. தற்போது காலை காட்சியாக சில இடங்களில், சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி..!

தயாரிப்பாளரின் மகன்தான் ஹீரோ என்பதால் வேறு எதையும் கேட்க முடியாது.. ஹீரோயின்கள் இவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல்  பிடித்துவிட்டாரகள். இசையமைப்பாளராக மோகன்ஜியை அறிமுகப்படுத்திவிட்டார்கள். இவர் ஒருவர்தான் இந்தப் படம் மூலமாக பேசப்படுவார் என்று நினைக்கிறேன்..! கதை நல்ல மெஸேஜை சொல்கிறது என்பதென்னவோ உண்மைதான்.. ஆனால் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்கின்றவகையிலான நடிகர், நடிகைகள் இல்லாததாலும்,  வந்தவர்களையும் சோதனைக்குள்ளாக்கி அனுப்பி வைக்கும் அளவுக்கு படத்தின் இயக்கம் 'சிறப்பாக' இருந்ததினாலும் படம் பேசப்படவில்லை என்பது வருத்தமான செய்திதான்..!

ஹீரோ கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார். ஊரில் ஏற்கெனவே அவருக்காக ஒரு முறைப் பெண் தாலியுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். சென்னை வந்தவுடன் ஹீரோவுக்கு ஒரு மிஸ்டு கால் மூலமாக ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது.. ஊரில் இருக்கும் மாமா பெண்ணை மறந்துவிட்டு, முகம் தெரியாத அந்த சிட்டி பெண்ணை காதலிக்கத் துவங்குகிறார் ஹீரோ.. அந்தப் பெண்ணுக்காக இரவு பகலாக கடலை போட்டு தன் வேலையைக் கூட விடுகிறார் ஹீரோ. இந்த விவரம் தெரிந்து ஊரில் இருக்கும் மாமா பெண் விஷத்தைக் குடித்துவிடுகிறார்.. தனது பிறந்த நாளுக்காக அழைத்தும் அந்த செல்போன் கடலை பொண்ணு வராமல் போக.. ஹீரோவுக்கு லேசுபாசாக மன நலம் பாதிக்கிறது.. ஒரு பாடல் காட்சியிலேயே முற்றிலும் மென்டலாகி, பெண்கள் தனியாக நின்று சிரித்துப் பேசினாலே செல்போனை பிடுங்கி எறிந்து உடைக்கும் அளவுக்கு தீவிரமாகிறார்..  அந்த கடலை பொண்ணும் ஒரு நாள் வேறொரு விவகாரத்தில் தீவிரவாதியுடன் செல்போனில் பேசியதாக போலீஸில் மாட்டுகிறாள். இங்கே மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மெல்ல மெல்ல மீண்டு எழும் ஹீரோ, திரும்பவும் பேக் டூ பெவிலியனாக மாமா பெண்ணிடமே அடைக்கலமாகிறார்.. இவ்வளவுதான் கதை..  

இதில் நகரத்து பெண் கிராமத்து பெண்.. யார் இதில் பெஸ்ட்டு என்ற கோணமோ.. அல்லது செல்போனில் முகம் பார்க்காமல் சதா பேசிக் கொண்டேயிருக்கும் ஸாரி கடலை போட்டே வாழ்க்கையை ஓட்டுவது நல்லதா கெட்டதா என்ற கோணத்திலும் படத்தின் கதையை சொல்லியிருக்கலாம்.. எது என்று படம் பார்த்த எனக்கு புரியவில்லை. பார்க்காத நீங்கள் படித்துவிட்டாவது சொல்லுங்கள்..!

முகத்தை பார்த்து ஹீரோ என்று சொல்ல முடியாது. ஆனால் வேறு கேரக்டர்களில் நடிக்க தோதான பாடியுடன் இருக்கிறார்.. நடிப்பு.. ச்சே.. ச்சே.. வேண்டாம்.. நாம இத்தனை வருஷமா எழுதின சினிமா விமர்சனமெல்லாம் பொய்யாகிவிடும்.. ஹீரோயின்ஸ்.. கிராமத்துப் பொண்ணு வைதேகி.. கிராமத்துக்கே உரித்தான அழகு.. பாவாடை, தாவணியில் சிக்கென்று இருக்கிறார்.. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் நளினமும், முக பாவனைகளும் அபாரம்.. உடலின் வடிவமைப்பு அதைவிட அபாரம்.. என்ன.. நம்மூர் ஹீரோக்களுக்கு சுத்தமா பிடிக்காதே..? நன்மா என்ற இன்னொரு ஹீரோயின் சிட்டி பொண்ணு.. நல்ல வாகையாக இருக்கிறார்.. நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் பயன்படுத்திக் கொள்ளாமல்.. வெறுமனே உட்கார வைத்து பேசி பேசியே கடத்திவிட்டார்கள்..  கிரேன் மனோகரின் செல்போன் காமெடி கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது.. அவ்ளோதான்..!

படத்தின் இயக்கம்.. ம்ஹூம்.. சொன்னால் அடிக்க வருவீர்கள்.. அப்படியொரு அமெச்சூர்தனம்.. இதுதான் பெரிய மைனஸ் பாயிண்ட்.. ஒரேயொரு பிளஸ்.. பாடல்களும், இசையும், பாடல் காட்சிகளும்தான்.. 'ஏதாவது நீயாக' என்ற பாடல் இந்த ஆண்டு மிக முக்கிய மெலடி பாடல்களில் ஒன்றாக டிவி சேனல்களில் வலம் வரும் என்று நினைக்கிறேன். படத்தைப் பார்க்காதவர்கள் யூடியூபில்  இந்த பாடலையாவது பார்த்து பெருமூச்சு விடுங்கள்..!

நன்றி 

வணக்கம்.