Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

மதுபான கடை - சினிமா விமர்சனம்

06-08-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கதைக்குள்ள போறதுக்கு முன்னால 2 மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தைப் பத்திச் சொல்றேன்.. மதுரையின் இலக்கியச் செல்வர் கார்த்திகைபாண்டியனின் திருமணத்திற்கு மதுரை செல்வதற்காக நானும், அண்ணன்கள் தண்டோராவும், வாசுவும் பெருங்களத்தூர் பஸ்ஸ்டாண்டில் ஒரு மதியவேளையில் மொட்டை வெயிலில் நின்று கொண்டிருந்தோம்.


எங்களுக்குச் சற்றுத் தொலைவில் 3 பெண் குழந்தைகள், 1 பையனுடன் கணவன், மனைவி நின்றிருந்தனர். அந்தாள் மனைவியிடம் “காசு கொடு காசு கொடு” என்று செல்போனை பிடுங்குவதும், பர்ஸை பிடுங்குவதுமாக கெஞ்சிக் கொண்டிருந்தான். மனைவியோ வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் வீசியெறிந்து அவனை கேவலப்படுத்திக் கொண்டிருந்தாள்.. “டேய்.. டேய் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..? உனக்கெல்லாம் பொண்டாட்டி, பிள்ளைக ஒரு கேடா.. சம்பாதிக்க துப்பில்லை.. குடிக்க காசு கேக்குதா உனக்கு..?” என்று எட்டியிருந்த கடைக்காரர்களுக்கூட கேட்கும் அளவுக்கு திட்டித் தீர்த்தாள்.. ஆனாலும் நம்மாளு இம்மியும் அசையவில்லை. காசு கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.. ஒரு அளவுக்கு மேல் அதைப் பார்க்கவே கடுப்பாக இருந்தது.. இத்தனை பேர் சுற்றி நிற்குமிடத்தில் இப்படி கேவலப்படுகிறோமோ என்ற சொரணைகூட இல்லாத அந்தக் குடிகாரனை காலில் கிடப்பதை எடுத்து நாலு சாத்து சாத்தலாம் போலத்தான் தோன்றியது..!

குடிகாரர்களின் உலகம் புரிந்து கொள்ள முடியாததுதான்.. ச்சும்மா ஜாலிக்குக் குடிக்கிறோம் என்று குடிப்பவர்கள்கூட ஒரு பெக் உள்ளே போனவுடன் ஊரில் இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் தன்னைச் சுற்றியே நடப்பதாக நினைத்து அளந்துவிடுவார்கள்..! பிரச்சினைகளோடு இருப்பவர்கள் அதனை மறக்கவே குடிக்கிறேன் என்று சொன்னாலும், மீண்டும், மீண்டும் அதனுடையே உழல்வார்கள்..! 

ஆனால் இதில் இருக்கும் ஒரேயொரு அழகான முரண்பாடு எனில், அத்தனை தீவிரமான குடிகாரர்களும் மிகுந்த பாசக்காரர்களாக இருக்கிறார்கள்..! அவர்களுடைய குடியே அவர்களை அன்னியப்படுத்துகிறது என்பது அவர்களுக்கு புரிந்தாலும், பாசத்தையும் வெளிப்டுத்த்த் தெரியாமல், குடிப்பதையும் நிறுத்த முடியாமல்.. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்..! இந்த முரண்பாட்டை எனது தந்தை, நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று பலரிடமும் கண்டிருக்கிறேன்..!

விபச்சார விடுதியினை போலவே டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் பற்றியும் அது பற்றி அறியாத மக்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கிறது..!  விதம்விதமான குடிகாரர்கள் ஒன்று கூடும் அந்த இடத்தில், ஒரு நாளில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் தைரியமாகவே இதில் கதை என்று எதுவும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். இந்தத் தைரியத்துக்கு முதலில் எனது சல்யூட்..!




டாஸ்மாக் ஊழியர்.. பார் ஓனர்.. 2 சப்ளையர்கள்.. பார் ஓனரின் மகள்.. பார் கிளீனர்கள்.. பாத்திரம் கழுவும் அம்மா.. சமையல்காரர்.. குடிக்க வரும் அன்றாட வாடிக்கையாளர்கள்.. மாமூல் போலீஸ்காரர்.. என்று இவர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது கதை..!

பத்து காசு பாக்கெட்டில் இல்லாமல் பாருக்குள் நுழைந்து டீஸண்ட்டாக பிச்சையெடுத்து ஓசி சரக்கடிக்கும் அந்த கேரக்டரும், யாரைப் பார்த்தாலும் எகத்தாளம் பேசினாலும், உணர்ச்சிவசப்பட்டால் காலில் விழுகவும் தயங்காத பெட்டிஷன் மணியும்தான் படத்தின் பிரதான கேரக்டர்கள்..! கதை இவர்களாலேயே அவ்வப்போது நகர்த்தப்படுகிறது..!

கடையில் இருந்து வெளியேறச் சொல்லும்போது போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் பெட்டிஷன் மணியை ஏதோ பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் இந்தப் புண்ணியவான்தான் எழுதியிருக்கிறார். 2 முக்கிய பாடல்களையும் இவரேதான் பாடியிருக்கிறார். 

துவக்கத்தில் இவர் செய்யும் அலம்பல்களுக்கு ஒட்டு மொத்த பதிலடியாக காதல் தோல்வியால் சரக்கடிக்க வந்திருக்கும் இளைஞன், இவரிடம் பெண்களைப் பற்றிப் பேசும்பேச்சில் தியேட்டரே அதிர்கிறது..! இதற்கு மணி கொடுக்கும் ரியாக்ஷன்தான் சூப்பர்..!

ஓசி சரக்கடிக்கும் நபர், ஒவ்வொருவரின் சோகத்திலும் பங்கெடுத்துக் கொள்வதுபோல தானும் கொஞ்சம் லவட்டிக் கொள்வது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..! ஒவ்வொரு பாரிலும் இப்படியும் ஒருத்தன் நிச்சயம் இருப்பான் என்கிறார்கள் வலையுல பார் அனுபவஸ்தர்கள்.. 

துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ஒரே இடத்தைத்தான் காண்பிக்கப் போகிறோம் என்பதை முதலிலேயே முடிவு கட்டிவிட்டதால் காட்சிகளை மாற்றிப் போட்டு, கதாபாத்திரங்களையும் மாற்றி, மாற்றி வரவழைத்து, வசனத்தில் தேனையும், மிளகாயையும் குழைத்து, ஒரு சைட் டிஷ்ஷாக அளித்திருக்கிறார் இயக்குநர்..! படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் அலுப்புத் தட்டியது என்னவோ உண்மைதான்.. இருந்தாலும் பெட்டிஷன் மணியின் புண்ணியத்தில் அது சிறிது நேரத்திலேயே காணாமலும் போனது..!

இவ்வளவு களேபரத்திலும் சப்ளையரின் காதல் காட்சியில் ஒரு அதீத உடற்சேர்க்கைக்கான முன்னுரை காத்திருப்பதை முதல் காட்சியிலேயே உணர்த்துகிறார் இயக்குநர்.. காதலர்களின் லிப் டூ லிப் காட்சி இதனாலேயே கொஞ்சமும் அதிர்ச்சியைத் தரவில்லை.. அதான் முன்னாடியே எதிர்பார்த்தோமோ என்பதாலும், காதலர்கள் ஊரைவிட்டுக் கிளம்பும் இறுதிக் காட்சியும் மனதில் நிற்காமலேயே போய்விட்டது..!





இயக்குநரின் இயக்குதல் திறமை பல இடங்களில் பளீச்சிடுகிறது..! டாஸ்மாக் வாசலில் கடை திறக்க லேட்டாவது குறித்து எழும் சர்ச்சை.. வாத்தியார், பையன்கள் காட்சிகள்.. சண்டைக் காட்சியை படமெடுத்த கேமிரா கீழே தள்ளப்பட்டவுடன் அப்படியே நிலைகுத்தி நிற்க.. யாரோ தூக்கிவிட்ட பின்பு மீண்டும் சரியான இடத்துக்கு வந்து நிற்பது.. பார் ஓனர் தனது மகளின் முத்தக் காட்சியை பார்த்துவிட்ட பின்பும் அமைதி காத்து, அடியாட்கள் மூலம் காதலனை அடிக்க செட்டப் செய்யும் காட்சி.. என்று பல இடங்களில் இயக்குதலை ரசிக்க முடிகிறது..!

பாலை படத்தின் இசையமைப்பாளர் வேத்ஷங்கர்தான் இதற்கும் இசை. 4 பாடல்களில் 3 ஓகே ரகம்தான்.. பின்னணி இசையை சில இடங்களில் உலாவ்விட்டும், பல இடங்களில் அடித்து ஆடவும் அனுமதித்திருக்கிறார் இயக்குநர். உதாரணத்திற்கு சப்ளையர்களை வாடா போடா என்றழைக்கும் அந்த கேரக்டரின் வருகையின்போதும், பெட்டிஷன் மணியிடம் டிப்டாப் இளைஞன் சரக்கை ஆட்டையைப் போடும் காட்சியிலும் இசையை கேட்டுப் பாருங்கள்.. பாருக்குள் அடிதடி நடக்கும்போது அத்தனையையும் நிறுத்திவிட்டு நம்மை யோசிக்கவும் வைக்கிறார்கள்..!

சமரசம் உலாவும் இடமே பாடல் காட்சியை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். கூடவே அப்பாடல் காட்சியிலேயே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.. “கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்” பாடலை இறுதி டைட்டில் காட்சிகளில் போட்டதற்குப் பதிலாக படத்தின் நடுவிலேயே வைத்திருக்கலாம்.. மிக இனிமையாகவும் இருந்தது..

ஒரு பாரின் உள்ளரங்கை கச்சிதமாக நிர்மாணித்தது.. தப்பும் தவறுமாக தமிழில் எழுதி வைத்திருப்பது.. எதற்கும் அஞ்சாத சப்ளையர்கள் மனநிலை.. உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கேன் என்பது போன்ற அவர்களது தொடர்ச்சியான பேச்சுக்கள்.. அடாவடியாக பேசும் ஆளை சோத்துக் கையாலேயே அடித்துவிரட்டுவது.. கடை மூட இன்னும் 10 நிமிஷம் இருக்கு என்று டாஸ்மாக்கிற்கு வந்து சட்டம் பேசும் குடிமகன்கள்.. மாமூவை வெட்கமில்லாமல் வந்து வாங்கிச் சொல்லும் கான்ஸ்டபிள்.. டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு காலையிலேயே பொய் சொல்லி காசு வாங்கி வந்துவிட்டு.. தலைகுனிந்த நிலையிலேயே அமர்ந்திருக்கும் இளைஞன்.. ராமர் வேடத்தில் இருப்பவனை பிச்சைக்காரனை போலவும், அனுமாரை அவனுக்காக கட்டிங் வாங்கிக் கொடுக்கும் ஆளாகவும் காட்டியிருப்பது.. மதுவில் கலப்படம் செய்வது.. குடிகாரர்களின் பேச்சுக்கள் அனைத்தையும் குடியினால் விளைந்த பேச்சாகவே எடுத்துக் கொள்வதாக படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் காட்டியிருக்கும் வசனங்கள்.. என்று இது அனைத்திலும் இயக்குநரின் கைவண்ணம் அமோகம்..!

டிஜிட்டல் கேமிரா.. முற்றிலும் புதுமுகங்கள்.. சின்ன பட்ஜெட்.. இதனாலேயே இந்தப் படத்தை ஓஹோ என்று சொல்லலாமா என்கிறார்கள்..! டிஜிட்டலில் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற கதைகளை படமாக்கலாமா என்று திட்டுபவர்களும் உண்டு..! ஆனால் இது போன்ற “குறிப்பாக எது பற்றியும் இல்லாத - நான் லீனியர் வகை திரைப்படங்கள்” தமிழுக்கு நிச்சயம் புதுசுதான்.. 

இதையே ஒரு கோவில், ஒரு பள்ளிக்கூடம், ஒரு மருத்துவமனை என்று அமைத்திருந்தால் படம் சாதாரண தமிழ்ப் படங்களைப் போல பிரித்து மேய்ந்திருக்கலாம்.. ஆனால் இது டாஸ்மாக் பாராகவே அமைந்துவிட்டதால் இந்தக் குடிகாரர்களின் சேட்டைகளையும், அனுபவங்களையும், விரோதங்களையும், பேச்சுக்களையும், சோகங்களையும், தாகங்களையும் தமிழகத்துப் பெண்கள் பார்க்க முடியாமல் போய்விட்டது என்பது சோகம்தான்..!

“இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தாலே எப்படியும் பெண்கள் வர மாட்டார்களே.. பின்பு எப்படி தைரியமாக வைத்தீர்கள்..?” என்று இயக்குநரிடம் பிரஸ் மீட்டிலேயே கேட்டேன்.. “இது எனக்கும் தெரியும்தான்.. ஆனால் படம் வெளியான பின்பு மெளத் டாக்கினால் நிச்சயம் வருவார்கள்..” என்றார் உறுதியாக.. இப்போது வருகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்..! ஆனால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்..!

கதையை விட்டுத் தள்ளுங்கள்.. ஆனால் இயக்கம் சூப்பர்..! தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு சிறந்த புதுமுக இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல்லாம்..! அடுத்தடுத்த படங்களில் இந்த இயக்குநர் புதுவித கதைகளில் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்..!

குடியினால் 'குடி' இழந்தவர்கள்

02-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில சமயங்களில் இதழ்களில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளைவிட அதற்கு வரும் எதிர்வினைகள்தான் அருமையாக இருக்கும்.

அதேபோன்று நான் சமீபத்தில் படித்த 'குமுதம் தீராநதி'யில், வெளி வந்திருக்கும் எதிர்வினை இது. படித்துப் பாருங்கள்.

"கடந்த தீராநதி இதழில் அ.மார்க்ஸ் அவர்கள் குடி சம்பந்தமாக எழுதியிருந்தார். 'மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு தினமும் இரண்டு பெக் விஸ்கி குடிப்பார்' என்று வேறு சொல்லியிருந்தார்.

இதைப் படித்ததும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அண்மையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், விஜயகாந்தை 'குடிகாரன்' என்று சொல்ல பதிலுக்கு 'அவர் பக்கத்திலிருந்து ஊத்திக் கொடுத்தாரா..?' என்று கேட்க, குடிமக்கள் பிரச்சினையைவிட இவர்களுக்கு குடிப் பிரச்சினை பெரியதாய் போயிருந்தது.

சமீபத்தில் ஒரு முறை கலைஞர்கூட ஜெயலலிதாவை விமர்சிக்கையில், 'நேத்து கொஞ்சம் அதிகமா போச்சு' என்று சொல்லியிருந்தார்.

'இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று அவர்களுக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியதாலும் கைது செய்யப்பட்டார்' என்று அன்றைய ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது.

யார் அந்தப் பிரபலமான நடிகர்? அன்றைக்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய பி.யூ.சின்னப்பாதான் அந்த பிரபல நடிகர்.





மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் மாதம் 15 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து டைரக்டர் பி.கே.ராஜா சாண்டோ இயக்கிய 'சந்திரகாந்தா' படத்தில் இணை கதாநாயகனாக சினிமா உலகத்திற்குள் வந்தவர் பி.யூ.சின்னப்பா. இந்தப் படத்தில் அவரது சொந்தப் பெயர் புதுக்கோட்டை சின்னச்சாமி.

அடுத்து வந்த 'ராஜமோகன்', 'அனாதைப் பெண்',' ய்யாதி', 'பஞ்சாப் கேசரி', 'மாத்ருபூமி' போன்ற எல்லாப் படங்களும் ஹிட். அதனால் புதுக்கோட்டை சின்னச்சாமி, 'பி.யூ.சின்னச்சாமி' என்று பெயர் மாறுகிறது.

1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளிவந்த 'உத்தமபுத்திரன்' என்ற படம் சூப்பர் ஹிட். இதனால் சின்னப்பாவும் சூப்பர் ஹிட்டானார். சின்னப்பாவிற்கு சினிமாவிற்குள் வந்த காலத்திலிருந்தே மதுப் பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு அவரது புகழ் வளர வளர மதுப் பழக்கமும் வளர்ந்துவிட்டது.

முடிவு, புதுக்கோட்டையில் தனது நண்பர்களுடன் 'மணமகள்' படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பி.யூ.சின்னப்பா அன்றிரவே சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மயக்கமாக வருகிறது என்று ரத்தம், ரத்தமாக வாந்தியெடுத்து மயக்கமடைந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பரிசோதித்த டாக்டர், கையை விரித்து விட்டார். ஆமாம், மிதமிஞ்சிய குடியால் பி.யூ.சின்னப்பா இறந்து போனார்.

இதேபோல், 1948-ல் 'குண்டூசி' என்ற இதழில் ஒரு செய்தி. 'நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருமலையில் சென்ற பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மதுவிலக்கு விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக சித்தூர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டால் இம்மாதம் 17-ம் தேதியன்று ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டார்..'

1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் ராஜரத்தினம் பிள்ளை. இதைக் கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை நேரு வாசித்தார்.

'சினிமா ராணி' என்று போற்றப்பட்ட டி.பி.இராஜலட்சுமிதான் முதன் முதலில் இயக்கிய 'மிஸ் கமலா(1936)' படத்தில் கடைசியில் வரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசித்தார். இதுதான் சினிமாவுக்கு அவர் அறிமுகமான விதம்.

பிறகு 1940-ல் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய 'காளமேகம்' படத்தில் டி.என்.இராஜரத்தினம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார்.

இப்படி புகழ் பெற்றிருந்த டி.என்.இராஜரத்தினம் ஒரு மணி நேரத்தில் ஒரு கேஸ் அதாவது 12 பாட்டில்கள் மதுவை அருந்தும் அளவுக்கு மதுவிற்கு அடிமையாக இருந்தார். 1930-லிருந்து 1950-வரை அவர் சம்பாதித்த தொகை 5 கோடி. முதலில் கார் வாங்கிய நாதஸ்வர வித்வான்.

ஆனால் மிதமிஞ்சிய குடியினால் 1956 டிசம்பர் மாதம் 12-ம் தேதி மாரடைப்பால் இறந்து போனார். தன் வாழ்நாளில் 5 கோடி சம்பாதித்த டி.என்.இராஜரத்தினம் இறந்தபோது அவரது ஈமச்சடங்கு செலவை என்.எஸ்.கிருஷ்ணன்தான் செய்தார்.




மதுவிலக்குப் பிரச்சாரத்தைப் பற்றி மக்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுத்த என்.எஸ்.கிருஷ்ணன், அதிக மது அருந்தி வந்ததன் காரணமாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை, குலை வீக்கம் நோயினால் 1957 ஆகஸ்ட் 30-ம் தேதியன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இறந்து போனார்.

அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம். என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாப் பிரவேசம் செய்தது 1935-ம் ஆண்டு ன்றால், அதே வருடம் வெளியான 'ரத்னாவளி' படத்தின் மூலம்தான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மதுரமும் சினிமா நடிகையானார்.

'வஸந்தசேனா' என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு, இந்தப் படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக பீகார் சென்றபோதுதான் அங்கே டி.ஏ.மதுரத்தை என்.எஸ்.கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். கலைவாணர் இறந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்த டி.ஏ.மதுரம், அவருக்கும் ஏற்பட்ட குடிப்பழக்கத்தால் உடல் நலிவுற்று இறந்து போனார். அவர் இறந்தது 23.05.1974-ல்.

அடுத்ததாக நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி. அன்றைய காலத்தில் புகழ் பெற்ற நாடக சபாக்களில் ஒன்றான மங்கள கான சபா பெரும் நஷ்டத்தில் யங்கி வந்தது. இதை என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபா என்று பெயர் மாற்றி கே.ஆர்.ராமசாமியிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். கே.ஆர்.இராமசாமி குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்ததால், கம்பெனி மீண்டும் அதே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நாடக சபா மூலமாகத்தான் அண்ணாவின் 'வேலைக்காரி' நாடகம் பிரபலமடைந்தது. இந்த நாடக சபாவிற்காக காஞ்சிபுரத்தில் 'திராவிட நாடு' ஏட்டை நடத்தி வந்த அண்ணாவிடம் ஒரு நாடகம் எழுதித் தருமாறு கே.ஆர்.இராமசாமி வேண்டினார். அண்ணாவைச் சந்திக்கும்போதுகூட கே.ஆர்.இராசாமி போதையிலேயே இருந்திருக்கிறார். இதைப் பார்த்து அண்ணாவே அப்பவே கண்டித்திருக்கிறார்.

பிறகு அண்ணா 'ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். கே.ஆர்.இராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் சிபாரிசில் 'சிவசக்தி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பிறகு 1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'நம் நாடு' படம்வரையிலும் நடித்துப் பெரும் புகழைப் பெற்று வந்தார். அடுத்த இரண்டு வருடத்திலேயே அதாவது 1971 செப்டம்பர் மாதத்தில் தனது அதிகப்பட்ச குடியினால் இறந்து போனார்.

சரி அடுத்த நபர் யார்..? சாவித்திரி..

தமிழில்-85, தெலுங்கில்-92, இந்தியி-3, கன்னடத்தில்-1, மலையாளத்தில்-1. இதெல்லாம் அவர் நடித்தப் படங்கள்.

'·பாரின் ஸ்காட்ச்', 'வாட் 69', 'ஜின்', 'விஸ்கி', 'ரம்', 'பிராந்தி', 'பீர்', 'சர்க்கார் சாராயம்', 'ஜிஞ்சர் பிரிஸ்'.. இதெல்லாம் அவர் குடித்து முடித்த மதுவகைகள்.

இவர் காதல் மன்னன் ஜெமினிகணேசனின் இரண்டாவது மனைவி. 1951-ல் நடிகையான சாவித்திரி தனது சொந்த நிறுவனமான ஸ்ரீசாவித்திரி புரொடெக்ஷன்ஸ் சார்பில் 'குழந்தை உள்ளம்' என்ற படம் எடுத்தார். ஜெமினிகணேசன் கதாநாயகன். சவுகார்ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகள். படம் படு தோல்வி.

இரண்டாவதாக சிவாஜியை வைத்து 'பிரதாப்' (1971) என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் படு தோல்வி. இதனால் தனது சொத்து பெரியளவிற்குத் தொலைந்தன. துக்கம் தாளாமல் எப்போதும் மதுவுடனேயே இருந்தார் நடிகையர் திலகம் சாவித்திரி.

வாழ்வின் ஒட்டு மொத்த நிம்மதியும் இழந்த சாவித்திரி, 1981 டிசம்பர் 26 நள்ளிரவில் இறந்து போனார்.

தனது உழைப்பால் வெற்றி முகத்தில் இருந்த சமயத்தில்தான் சொந்தப் படம் எடுத்து அதில் தனது சொத்துக்களையெல்லாம் இழந்து, கடைசியில் குடியில் மூழ்கி கல்லீரல் வீங்கி இறந்து போனார் சந்திரபாபு.

குடியினால் அழிந்த சினிமா பிரபலங்கள் இவர்கள் மட்டுமல்ல, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வயலார், ராமவர்மா, கம்பதாசன் இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

- தமிழ் உத்தம்சிங்
புனல்குளம்