Showing posts with label பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு. Show all posts
Showing posts with label பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு. Show all posts

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - குன்ஹா தீர்ப்பு விவரம் - 5

18-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



ஜெ.வீட்டில் சோதனையில் சிக்கிய நகைகள்

தங்கம், வைர நகைகள் போயஸ் கார்டன் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை ஊழல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அப்படி கண்டு​பிடிக்கப்பட்ட நகைகளில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு பதவிக்கு வருவதற்கு முன் வைத்திருந்தது எவ்வளவு? பதவிக்கு வந்தபிறகு வாங்கிக் குவித்தவை எவ்வளவு? அவற்றின் மதிப்பு என்ன? என்ற விவரங்களை நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் அரசுத் தரப்பு சாட்சிகளையும் ஆவணங்களையும் வைத்துத் தெளிவாக நிரூபித்த விதம்... இதோ..!

ஜெ. வீட்டில் 5 நாள்கள் சோதனை!

''ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், அதிரடி சோதனை நடத்த ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1996, டிசம்பர் 7-ம் தேதி ஊழல் தடுப்பு போலீஸார் நல்லம்ம நாயுடு தலைமையில், ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்றபோது, ஜெயலலிதா வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, நல்லம்ம நாயுடு உடனடியாக சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரைச் சந்தித்து, ஜெயலலிதாவைச் சிறையில் சந்திக்க அனுமதி கேட்டார். அவரைச் சிறையில் சந்தித்த நல்லம்ம நாயுடு, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காட்டி, 'சோதனை நடத்தும்போது உங்கள் தரப்பில் யாராவது இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை நியமியுங்கள்’ என்றார். அதன்படி, பாஸ்கரன் மற்றும் விஜயன் என்ற இருவரை ஜெயலலிதா தனது சார்பில் நியமித்தார்.

மதியம் 12.30 மணிக்கு நல்லம்ம நாயுடு தலைமையில் சென்ற ஊழல் தடுப்பு போலீஸார் மற்றும் ஜெயலலிதா சார்பில் நியமிக்கப்பட்ட பாஸ்கரன் மற்றும் விஜயன் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்று, இரவு பகலாக 5 நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். 




சோதனையின்போது முத்து, பவளம், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க வைர ஆபரணங்கள் கிலோ கணக்கில் சிக்கின. உடனே, அவற்றை போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் வைத்துப் பூட்டி லஞ்ச ஒழிப்புத் துறை சீல் வைத்தது. அறையின் சாவிகள் ஜெயலலிதா நியமித்த பாஸ்கரனிடமே ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து நல்லம்ம நாயுடு, சுங்கத் துறை கூடுதல் ஆணையரைத் தொடர்புகொண்டு நகைகளை மதிப்பீடு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த ஒருவரை அனுப்பும்படி கேட்டார். அதன்படி சுங்கத் துறை ஆணையர், தங்கள் துறையில் நகைகளை மதிப்பீடு செய்வதில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாசுதேவன் என்பவரை அனுப்பி வைத்தார். 20-ம் தேதி நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு, சிறப்பு கலெக்டர் கிருஷ்ண​மூர்த்தி, வழக்கறிஞர் சேகர், சந்திரசேகர், ஜெயலலிதாவின் அத்தை, போலீஸ்காரர்கள் கல்யாண​சுந்தரம், புருஷோத்தமன் மற்றும் நகை மதிப்பீட்​டாளர் வாசுதேவன் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர். பாஸ்கரன், இவர்கள் முன்னிலையில் அறைகளைத் திறக்க, வாசுதேவன் நகைகளை மதிப்பீடு செய்துள்ளார். மதிப்பீடு செய்யப்பட்ட நகைகளின் எண்ணிக்கை, அவற்றின் எடை ஆகியவற்றை நல்லம்ம நாயுடு தலைமையிலான போலீஸார் பட்டியல் போட்டு மகஜர் தயாரித்துள்ளனர். அதன்பிறகு தங்கம் மற்றும் வைர நகைகளை நந்தனம் கருவூலத்துக்கு எடுத்துச் சென்று உள்ளனர். வெள்ளிப் பாத்திரங்கள் எதை​யும் அவர்கள் எடுக்கவில்லை. அவற்றை பாஸ்கரனிடமே ஒப்படைத்து போயஸ் கார்டன் வீட்டிலேயே வைக்கச் சொல்லிவிட்டனர்.''

மகஜர் விவரம்

''1996, டிசம்பர் 21-ம் தேதியிட்டு தயாரிக்கப்​பட்ட மகஜரில் உள்ள விவரம், '20.12.1996 அன்று மதியம் 3.30 மணியில் இருந்து மறுநாள் காலை 8.30 மணி வரை 36, போயஸ் கார்டன் இல்லத்தில் நகை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில் வி.பாஸ்கரனும் இவற்றைப் பார்வையிட்டார்.

அரசாங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டரின் பி.ஏ-வான டி.ஏ.டி.​ஆபிரகாம், நகர நிலச் சீரமைப்புச் சிறப்பு தாசில்தார் பக்கிரிசாமி ஆகியோர் இருந்தனர். நகைகளை மதிப்பீடு செய்தவர் சுங்கத் துறையில் நகை மதிப்பீட்டு வல்லுநராக உள்ள வாசுதேவன். இவர் 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அந்த மகஜரில் உள்ள விவரங்கள்படி, 468 வகைகளில் அந்த வீட்டில் நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அத்துடன், 13 வகையான தங்க நகைகள் 16, செவாலியே சிவாஜி கணேசன், தி.நகர் என்ற முகவரியில் இருந்த வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பாஸ்கரனும் அரசுத் தரப்பினரும் கையெழுத்திட்டு உள்ளனர். இதையடுத்து பாஸ்கரனுக்கு ஒப்புகை ரசீதும் கொடுக்கப்பட்டு உள்ளது. மகஜரின்படி 468 விதமான தங்க வைர ஆபரணங்கள் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பது உறுதியாகிறது. அவை என்னென்ன நகைகள், அவற்றின் எடை, அதன் விலை மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் பட்டியல் போட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

நகைகள் தன்னுடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பதை ஜெயலலிதா தரப்பு மறுக்கவில்லை. ஆனால், போயஸ் கார்டன் மற்றும் சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பையும் விலையையும் அரசுத் தரப்பு தவறாகக் கணக்கிட்டு உள்ளது என்று வாதிடுகின்றனர். அத்துடன் அரசுத் தரப்பு கைப்பற்றிய 23,113 கிராம் தங்க ஆபரணங்களும் 4,475 கிராம் எடையுள்ள மற்றொரு செட் ஆபரணங்களும் 91-க்கு முன்பாகவே தங்களிடம் இருந்தவை என்று சொல்கிறார்.''



ஜெ.விடம் இருந்த மொத்த நகைகள்

''1991-க்கு முன்பே சசிகலாவிடம் 1,802 கிராம் தங்க ஆபரணங்கள் இருந்தன என்றும் தங்களின் வாதத்தில் குறிப்பிடுகின்றனர். அ.தி.மு.க தொண்டர்களால் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்ட 3,365 கிராம் எடையுள்ள தங்க வாள், கேடயம் போன்றவற்றை தான் சம்பாதித்த சொத்துகளாகக் கருதுவது நியாயமில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் வழங்கிய அந்த நினைவுப் பரிசுகளைப் பாதுகாப்புக் கருதி தன்னுடைய வீட்டில் வைத்திருந்ததாகவும் ஜெயலலிதா குறிப்பிடுகிறார். மேலும் 'எனது வீட்டிலும் சிவாஜி கணேசன் வீட்டிலும் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்துள்ள வாசுதேவன், அவற்றை முற்றிலுமாக தவறாக மதிப்பிட்டுள்ளார். ஏனென்றால், அவர் கைப்பற்றிய வருடத்தின் மதிப்பில் நகைகளைக் கணக்கிட்டுள்ளார். ஆனால், அவை எல்லாம் பூர்வீக நகைகள். புதிய மாடல்கள் வரும்போது, அதற்கேற்ப பழைய நகைகளை அழித்து, புதிய டிசைன்களில் செய்வது எங்கள் வழக்கம். பூர்வீக நகைகளைப் புதிய வடிவத்துக்கு மாற்றும்போது அதன் மதிப்பைக் கணக்​கீடுகளில் குறிப்பிடுவது எளிதான காரியம் அல்ல. அதோடு மிக முக்கியமாக 1991-96 வரை பதவியில் இருந்த காலத்தில் புதிய நகைகள் வாங்கியதற்கு ஆதாரமாக எதையும் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.''

அரசுத் தரப்பு சாட்சியம்

''இந்த இடத்தில் அரசுத் தரப்பு சாட்சி சுப்புராஜ் நீதிமன்றத்தில் சொன்ன விவரங்கள் முக்கியமானவை. இவர் கோவை, ராஜவீதியில் உள்ள கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனியின் மேனேஜராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர். அவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில், 'கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிர்வாகியும் பங்குதாரருமான சாந்தகுமாரும் நானும் சேர்ந்து, 1992-ம் வருடம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் அங்கு சென்ற ஐந்து நிமிடத்தில் சசிகலா வந்தார். எங்கள் முன் 4 டிரேக்களில் தங்க வைர நகைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அந்த நகைகளை மதிப்பீடு செய்து தரவேண்டும் என்று சசிகலா எங்களிடம் கேட்டார். அத்துடன் நகைகள் வாங்கியதற்கான எந்த பில்களும் கிடையாது என்றும் சொன்னார். இதையடுத்து நாங்கள் அந்த நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்தோம்.

1986-87 காலகட்டத்தில் வாங்கியதாக சசிகலா சொன்ன 19 நகைகளையும், 1987-88 காலத்தில் வாங்கியதாக 44 நகைகளையும், 1988-89-ல் வாங்கியதாகச் சொன்ன 69 நகைகளையும், 1989-90-ல் வாங்கியதாகச் சொன்ன 96 நகைகளையும் எடைபோட்டு ஒரு பேப்பரில் தெளிவாகக் குறித்துக்கொண்டு கோவை திரும்பிவிட்டோம். கோவை வந்தபிறகு, அவற்றுக்கு விலை மதிப்பீடு செய்து அதுபற்றித் தனித்தனியாக நான்கு அறிக்கைகளை கொரியர்மூலம் போயஸ் கார்டன் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தோம். அந்த நான்கு அறிக்கைகளும் சசிகலா பெயரில் வேண்டும் என்று கேட்டதால், அவருடைய பெயருக்கே அறிக்கை கொடுத்தோம். நாங்கள் கணக்கிட்டதில் அந்த நகைகளின் மதிப்பு ஒரு கோடியே 41 லட்சத்து 18 ஆயிரத்து 91 ரூபாய்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த நகை மதிப்பீட்டுக்காகத் தங்களுக்குத் தரவேண்டிய தொகைக்கு நான்கு பில்களையும் அனுப்பியதாகவும், இப்போது வரை அந்தத் தொகை தங்களுக்கு வரவில்லை என்றும் கூறி உள்ளனர்.

மேலும், 'ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட 468 நகைகளில் 29 நகைகளை மட்டும்தான் தங்களால் இப்போது அடையாளம் காணமுடிகிறது. மற்றவை எல்லாம் நாங்கள் பார்க்காத புதிய ரகங்கள்’ என்று சொல்லி உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி அறக்கட்டளை தங்க நகைக்கடையை நடத்துபவர் ஸ்ரீஹரி. இவர் மற்றொரு அரசுத் தரப்பு சாட்சி. வி.பி.சி.டி. (உம்மிடி பங்காரு செட்டி டிரஸ்ட்) என்று எழுத்துகள் பொறிக்கப்பட்டி​ருக்கும் நகைகள் அனைத்தும் இந்தக் கடையில் இருந்து வாங்கப்பட்டவை. இந்த ஆதாரத்தின்படி ஜெயலலிதா வீட்டில் சோதனையில் கண்டுபிடிக்கப்​பட்ட பல நகைகள் உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் இருந்து வாங்கியவைதான். 1975-க்குப் பிறகு, ஜெயலலிதா இவரிடமும் நகைகளை வாங்கி வருகிறார் என்று ஸ்ரீஹரி தன்னுடைய சாட்சியில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவர் சார்பில் ஒருவர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து, 'முதலமைச்சருக்கு தங்க, வைர ஆபரணங்கள் வேண்டும். கொண்டு வாருங்கள். வாங்கும் நகைகள் அனைத்துக்கும் அவர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால், பணம் செலுத்தியதற்கான பில்கள் தேவை இல்லை’ என்று சொன்னதாகத் தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், சசிகலாவுக்கு வைர ஒட்டியாணம் செய்து கொடுத்ததையும் அதற்கான தொகையை, தான் பெற்றுக் கொண்டதையும் ஸ்ரீஹரி தனது சாட்சியத்தில் சொல்லி உள்ளார். இவர் ஜெயலலிதாவுக்காக நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்த சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகளில் இவர், தான் பார்த்ததாக 51 நகைகளை அடையாளம் கண்டும் சொல்லி உள்ளார்.

அதன்படி ஸ்ரீஹரி 62 நகைகளை மதிப்பிட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 206 ரூபாய். மேலும் 1991-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். 1992-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்துள்ளார் அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். அதே வருடம் மார்ச் மாதம் இவர் ஜெயலலிதாவுக்காக மதிப்பீடு செய்து கொடுத்த நகைகளின் மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய். இதுபோன்ற மதிப்பீடுகளை அடிப்படையாக வைத்து ஜெயலலிதா 1991-ம் ஆண்டுக்கான சொத்துவரியை தாக்கல் செய்துள்ளார்.''

இதுபோல் பதவிக்கு வந்தபிறகு தாக்கல் செய்த சொத்துவரி ஆதாரங்களின் மூலம் ஜெயலலிதா சிக்கிக் கொண்ட விதம் அடுத்த இதழில்...

- ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர் விகடன்

ஜெயலலிதாவிற்கு தண்டனை போதாது - 7 வருடங்கள் கொடுத்திருக்க வேண்டும்..!

27-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதன்முதலாக ஒரு திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமரர் எம்.ஜி.ஆர்.தான் அந்தச் சாதனையைச் செய்தவர்.

இப்போது அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு நடிகைதான் முதல்வராகி, ஊழல் குற்றச்சாட்டினால் நீதிமன்றத்தினால் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஜெயிலுக்குள் போன அசிங்கமும் நடந்திருக்கிறது..! இதனால் கேவலப்பட்டு போயிருப்பது எம்.ஜி.ஆர். துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்..!




அமரர் எம்.ஜி.ஆர். தன் அரசியல் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்ததுதான். இந்த உண்மையை அவரும் தனது கடைசி காலத்தில் உணர்ந்துதான் இருந்தார். ஆனால் அதற்குள் நிலைமை அவருடைய கையை மீறியும் போய்விட்டது.  இதற்கு மேல் நடந்ததெல்லாம் காலத்தின் கொடூரம்..!

1991-1996-ம் ஆண்டுவரையிலும் ஒரு விபத்தின் காரணமாய் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. தனக்கு இரண்டாண்டுகளாக வருமானமே இல்லை என்று வருமானவரித் துறையினரிடம் மனு தாக்கல் செய்தார். அந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் முடிவில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றதாக சொன்னவர் இந்த வழக்கில் சிக்கி 66 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்களை வாரிக் குவித்திருந்ததை கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

ஏதோ சுப்பிரமணிய சாமியின் புண்ணியத்தால்.. ஜெயலலிதா-சுவாமி இருவரின் ஈகோத்தனத்தால் தமிழ்நாட்டுக்கு விளைந்த ஒரேயொரு நன்மை இந்த வழக்கு மட்டுமே.. 

2001-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவின் முறைகேடான செயல்பாட்டினால் இந்த வழக்கு புதைகுழிக்கு போய்க் கொண்டிருப்பதை அறிந்த பின்புதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றச் செய்தார். இந்த நேரத்தில் பேராசிரியருக்கு நமது நன்றிகள்..! 

இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும், வழக்கை நடத்தவிடாமலும்.. இழுத்தடித்துப் பார்த்த ஜெயலலிதாவால்தான், இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நீண்டு வந்தது.

இந்த்த் தீர்ப்பினால் அவரது அரசியல் எதிரிகள் என்று சொல்லப்படும் யாருமே மகிழப் போவதில்லை. "எப்படி இருந்த கட்சியை இப்படி பேசும்படி செய்துவிட்டார்களே..." என்று அவர்களுக்கே சற்று விசனம்தான்.. “முதன்முதலாக ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற மாநிலம் எது..?” என்று வரும் காலங்களில் இந்தியாவில் நடக்கப் போகும் அனைத்துவகை போட்டி தேர்வுகளில் கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் பெயரும் நாறிவிட்டதில் வேறு சிலருக்கு வருத்தம்.. 

நிச்சயமாக இந்த வழக்கின் முடிவு குறித்து சந்தோஷப்படுபவர்கள் ஜெயல்லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும்.. அவரால் பாதிக்கப்பட்டவர்களும்தான்.. 

இந்தத் தீர்ப்பே மென்மையானது.. எப்போதும் அரசியல்வியாதிகளாலேயே அரசியல் சட்டம் திருத்தப்படுவதால் அவர்களுக்கேற்றாற்போலவே இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தையும் திருத்தி வைத்திருக்கிறார்கள்.. 300 ரூபாய் பறித்த வழக்கிற்கே இப்போதெல்லாம் 4 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படுகிறது. காரணம் கேட்டால், “அப்போதுதான் அவன் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டான்...” என்பார்கள். ஆனால் இந்த 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பிற்கும் அதே நான்காண்டுகள்தானா..?

அதிலும் இவர்களுக்கு ஒரு விதிவிலக்காம்.. அரசியல்வியாதிகளுக்குக் கிடைக்கும் தண்டனைகள் இரண்டாண்டுகளுக்குள் இருந்தால் கோர்ட்டில் விலக்குப் பெற்று அரசியலில் நீடிக்கலாம்.. பதவியில் இருக்கலாம்.. தண்டனை காலம் முடிந்தவுடனேயே மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதெல்லாம் அரசியல்வியாதிகள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாங்களே போட்டுக் கொண்ட விதிமுறைகள்தான்..!

இந்த நாட்டை பிடித்த மிகப் பெரிய சனியனே இப்போதைக்கு ஊழல்தான்.. மதவாதமெல்லாம் இதற்கு பின்புதான்.. இந்த ஊழல் விவகாரத்தில்தான் மதம், ஜாதியையெல்லாம் கடந்து அனைத்து அயோக்கியர்களும் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

'ஒரு நாள் சிறை தண்டனை பெற்றால்கூட.. ஒரு ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்திருந்தால்கூட அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடவே முடியாது' என்று நியாயமான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.. 

'ஒரு லட்சம் ரூபாய்க்குள் ஊழல் செய்தால் பத்தாண்டு கால தண்டனை'யும், 'அதற்கும் மேலே என்றால் ஆயுள் தண்டனை' என்று அமல்படுத்தினால்தான், இந்த நாட்டில் கொஞ்சமாவது அரசியல்வியாதிகளும், அதிகார வர்க்கமும் அடங்குவார்கள்.. இப்படி ஆள், ஆளுக்கு ஒரு கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டு இவர்களுக்காகவே சட்டத்தை வளைத்துக் கொண்டு அவ்வப்போது தங்களுடைய சுய லாபத்திற்காக சட்டத் திருத்தங்களை செய்வதெல்லாம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிதான்.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தண்டனை நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் தண்டனையை நான் கூடுதலாக எதிர்பார்த்தேன். குறைவு என்பதுதான் எனது கருத்து. இந்த ஊழல் குற்றச்சாட்டில் அதிகபட்ச தண்டனையான 7 வருடங்களையே கொடுத்திருக்கலாம். 100 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்காவிட்டால் 1 வருடம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் பேத்தலான தீர்ப்பு.. 100 கோடி பெரிசா.. ஒரு வருஷம் பெரிசான்னு கேட்டா.. “100 கோடிதான்” என்பார்கள் அரசியல்வியாதிகள். "இந்த ஒரு வருஷத்தையும் ஆஸ்பத்திரி பெட்லேயே ஏ.ஸி. ரூம்ல படுத்து கழிச்சிட்டா போவுது.. ஆனா அந்த 100 கோடியை எப்படி திரும்ப வந்து சம்பாதிக்க முடியும்..?" இப்படி இவர்கள் யோசிக்க மாட்டார்களா..? 1995-ல் சசிகலா அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டபோது, கோமாவில் இருப்பது போல டிராமா போட்டு நடிக்கலையா..? 

பரவாயில்லை.. இந்த அளவுக்கு இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, துணிச்சலுடன் தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அவர்களுக்கு எனது நன்றி. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.. 

ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சென்னைக்கு வந்தாலும் தினமும் தனது அடிமையான பினாமி முதலமைச்சருக்கு நேரடி உத்தரவு மட்டுமே இட முடியும்.. ஆட்சியை மறைமுகமாக நடத்தலாம். ஆனால் வெளிச்சத்திற்கு வர முடியாது. 

2016-க்குள்ளாக கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கை முடித்து நிரபராதி என்று வந்தால்தான் அடுத்த்த் தேர்தல் பிரச்சாரத்திற்கே வர முடியும். இல்லையெனில் எப்போது உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி... அதன் பிறகு இவர் ஜெயிலுக்குள் போய் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வந்து வீட்டில் இருந்தபடியே கட்சியின் மறைமுகத் தலைவராகச் செயல்பட்டு அடுத்த ஆறு ஆண்டு கால 'வனவாச'த்தைக் கழித்துவிட்டு அவர் அரசியலுக்கு திரும்பி வருவதற்குள் இங்கே என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்..?

இந்த வழக்கில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்தமைக்கு  மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான கட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள். ஆனால் மைக்கேல் டி குன்ஹா அப்படிப்பட்டவரல்ல என்றுதான் கர்நாடக மாநில மீடியாக்களும் சொல்கின்றன. இந்த விஷயத்தில் பா.ஜ.க., ஜெயலலிதாவுக்கு உதவவில்லை என்றாலும், இனிமேல் நிச்சயம் உதவி செய்யத்தான் போகிறது.. 

தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட கட்சிகளை ஒழித்துக் கட்டினால்தான் தேசிய கட்சிகள் தலையெடுக்க முடியும் என்று காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சியின் முக்கியத் தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது என்பது உண்மையாகவே இருக்கலாம். 

இதனால்தான் 2-ஜி வழக்கை அம்பலப்படுத்தி கூட்டணி கட்சி.. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கட்சி என்றுகூட பாராமல் தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக் கொண்டது காங்கிரஸ்.. அது நினைத்தது போலவே தமிழகத்தில் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து விலக்கியதில் பெரும் பங்கு 2-ஜிக்கே உண்டு. இப்போது பா.ஜ.க.வின் முறை..

முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ் என்று முந்தைய நண்பர்களுடன் இப்போது தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் போய்விட.. அவரால் தன்னுடைய ஈகோத்தனத்தைவிட்டுக் கொடுக்காமல் பேரம் பேச முடியவில்லை.. 

தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட அன்றைக்கு தன்னை சந்தித்த மத்திய சட்ட அமைச்சரிடம் என்ன பேசினாரோ தெரியாது.. ஆனால் அதற்கான சாதகமான விளைவுகள் 'நமோ நாராயணனிடம்' இருந்து வராததால் தூத்துக்குடி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே பா.ஜ.க.வை விளாசித் தள்ளினார் ஜெயலலிதா.

இன்றைக்கு நமது 'நமோ நாராயணன்' அமெரிக்கா சென்றிருக்கும்வேளையில் ஜெயல்லிதா ஜெயிலுக்குள் குடி புகுந்திருக்கிறார். காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஜெயலலிதா எதிர்பார்த்ததெல்லாம் இனிமேல் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும்,  இனி வரும் காலங்களில் அவர் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. இந்த இரு கட்சிகளுடன் வேண்டாவெறுப்பாக கூட்டணி வைக்க வேண்டி வரும் என்றே நம்புகிறேன்..! இதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்.. 

திராவிடக் கட்சிகளை விரட்டிவிட்டால் ஆட்சியைப் பிடித்தவிடலாம் என்று காவிகளும், காங்கிரஸும் திட்டம் போட்டாலும் ஜெயலலிதாவும், கருணாநிதியும், ஸ்டாலினும், வைகோவும் உள்ளவரையில் அது நடக்காது.. கூட்டணியில் இரண்டாமிடம் மட்டுமே கிடைக்க சாத்தியங்கள் உண்டு. 

எப்படியிருந்தாலும் எந்தக் காலத்திலும் எனக்கு யாருமே தேவையில்லை என்று சொன்ன, நினைத்த ஜெயலலிதா இப்போது இந்த இரு தேசியக் கட்சிகளில் ஏதாவது ஒன்றை காக்கா பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவருடைய வலையில் எந்தக் காக்கா விழும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

அடங்காமல் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் ஜெயலலிதா..!

14-05-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது.

 கடந்த 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் 306 சொத்துகளின் பட்டியலை மாறி மாறி வாசித்து முடித்தபோது, அத்தனை பரபரப்பு.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பின் இறுதி வாதம் 15-வது நாளாக கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. சரியாக 10.30 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி சிங், குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கம்போல் ஆஜராகவில்லை.

அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன். 

இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை. இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர்களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது'' என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30-க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர். மேலும் சில ஆவணங்களை 15-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லி முடித்தார் பவானி சிங்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்....

''இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009.

ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36-ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடி கட்டடம் ரூ.50,000.

ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058.

மேலும் அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன.  

தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125.

அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315.

மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. 

சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420. 

ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039.

புதுக்கோட்டையில் 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371.

டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152.

சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000.

வெலகாபுரம் கிராமத்தில் மெடோ ஆக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060.

ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கடசுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. 

சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530.

சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை 4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904-க்கு ஷாப்பிங் மால்

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919

மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. 

சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பையனூர் பங்களா ரூ.1,25,90,261.

ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901.

போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000.

சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன.

இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211.

ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561.

மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570.

சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242

சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 

என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா - ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப். 

ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914

பட்டுப் புடவைகள் ரூ.61,13,700 

மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870. 

28 கிலோ தங்க நகைகள் 

1,000-க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் 

என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573 ஆகும்'' என்று விடாமல் வாசித்து முடித்தார்.

நீதிமன்றம் முடிந்து வெளியே வந்த பெங்களூரு தி.மு.க வழக்கறிஞர் நடேசன், ''ஜெயலலிதா வாங்கியிருக்கும் இந்த 306 சொத்துகளின் இப்போதைய மதிப்பு பல நூறு கோடியைத் தாண்டும். அரசுத் தரப்பு இறுதி வாதம் 15-ம் தேதியோடு நிறைவு பெறும். அதன் பிறகு ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் தொடங்கும். அது முடிந்ததும் இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்புக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும்'' என்றார்.

அ.தி.மு.க வழக்கறிஞரும் சேலம் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் மணிகண்டன், ''இந்தச் சொத்துகள் அனைத்தும் 20 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டவை. அதில் பலர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் நிலத்தின் மதிப்பு குறைவு. ஆனால், இன்று நிலத்தின் வேல்யூ அதிகரித்துள்ளது. நான் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டை மூன்று லட்சத்துக்குக் கட்டினேன் என்றால், அதன் மதிப்பு இப்போது 30 லட்சமாக அதிகரித்து இருக்கும். நான் 30 லட்சத்துக்கு வீடு கட்டினேன் என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போன்றதுதான் இந்த வழக்கும். இதைச் சொத்துக் குவிப்பு என்று சொல்வதே அடிப்படையற்ற வாதம். கருணாநிதியைப் போல வெறும் கையை வீசிக்கொண்டு அம்மா அரசியலுக்கு வரவில்லை. அவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் இருந்து அம்மா கூடிய சீக்கிரத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு வெளியே வருவார்'' என்றார்.

நன்றி : ஜூனியர்விகடன் - மே-14