Showing posts with label ஜானகி எம்.ஜி.ஆர்.. Show all posts
Showing posts with label ஜானகி எம்.ஜி.ஆர்.. Show all posts

இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் - அஞ்சலி

10-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கடந்த 7-ம் தேதி காலை திரையுலக பி.ஆர்.ஓ. நண்பர் விஜயமுரளி அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி தமிழ்த் திரையுலகத்தில் அரை நூற்றாண்டு காலமாக பணியாற்றிய ஒரு இயக்குநரின் மரணத்தை தெரிவித்தது..! ஆனால் அந்த இயக்குநரின் 50 வருட கால சினிமா வாழ்க்கையைப் பற்றி கோடம்பாக்கம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அந்த மனிதரும் அதைப் பற்றி இறுதிவரையிலும் கவலைப்பட்டவரில்லை..!

நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனின் கை காட்டலில் நான் அறிந்து கொண்ட ICAF என்னும் அமைப்பில் சேர்ந்து உலகப் படங்களை ஆர்வத்துடன் கண்டு கொண்டிருந்த நேரம்..! ஒரு வெளிநாட்டு பட விழாவைத் துவக்கி வைக்க மேடையேறி முதன்முதலாக எனக்கு அறிமுகமாகியிருந்தார் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன். 





அந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சுதான் கலகலப்பு.. அவ்வளவு சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை பொங்கவும் பேசி கூட்டத்தைக் கவர்ந்திருந்தார். “இவர்தான் மூன்று முகம் இயக்குநர்” என்று இயக்குநர் வேதம் கே.கண்ணனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட அந்த நாளில் இருந்து, சென்ற மாதம் நான் கடைசியாகப் பேசியவரையிலும் என் மீது அன்பு காட்டி, நட்பு வைத்திருந்து ஒரு நல்ல நண்பனாகவே இருந்து வந்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

என்னுடைய ஜாதகத்தைக் கேட்டறிந்ததில் இருந்து இவர் என்னை அழைத்தது “லூட்டி சரவணன்” என்றுதான்..! “வீட்டுக்கு வீடு லூட்டி' சீரியலை நானும் பார்த்திருக்கேன்.. நீங்கதான் எழுதினதா..? நல்லாயிருந்துச்சே.. அப்புறம் ஏன் நிறுத்துனீங்க..?” என்றவர் என் முன்பாகவே தனது செல்போனில் “சரவணன் லூட்டி” என்று என் பெயரை பதிவு செய்த தினத்தையும் நான் மறக்க முடியாததுதான்..!

கோடம்பாக்கம் இயக்குநர்கள் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் பிலிம் சேம்பர் வரும் இவருடன்தான் பெரும்பாலான நேரங்களில் நான் அருகே அமர்ந்து உலகப் படங்களை ரசித்திருக்கிறேன். நான் முதலில் சென்றால் இவருக்கும், இவர் முதலில் சென்றால் எனக்குமாக சீட் போட்டு வைக்கும் அளவுக்கான நட்பு கடைசிவரையிலும் இருந்தது..!

படம் முடிந்தவுடன் என்னுடைய TVS XL Super-ல் நானே அவரது வீட்டில் அவரை டிராப் செய்வேன்.. “உன் வண்டி என்னைத் தாங்குமா..?” என்று முதல் முறை மட்டுமே கேட்டார். அடுத்த முறைகளெல்லாம் “நீ எங்க உக்காந்தாலும், படம் முடிஞ்சவுடனே வாசல்ல வந்து நில்லு.. உன் வண்டிலதான் நானும் வருவேன்..” என்று உரிமையுடன் கேட்டு பல நாட்கள் என்னுடன் பயணம் செய்திருக்கிறார்..

எம்.ஜி.ஆர்., சிவாஜி, சிவக்குமார், ஜெய்சங்கர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று முன்னணி ஹீரோக்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவருக்கு, சில காலம் நான் சாரதியாக இருந்த அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் பெருமையாகத்தான் இருக்கிறது..! 

என்னுடைய நிலையில் இருந்து பார்த்தால்தான் இது புரியும். அன்றைய நாளில் ஒரேயொரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த ஒரு புதிய இயக்குநரிடம் இதே உலகப் பட விழாக்களில் நட்பு பாராட்டச் சென்று நான் அருகில் சென்றவுடனேயே “கொஞ்சம் திங்க் பண்ணிக்கிட்டிருக்கனே..!” என்று முகத்தில் அடித்தாற்போல்  ஜாதி வெறியையும் தோற்கடிக்கும் திமிர்ப் பேச்சைக் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.. இன்னொரு புதிய இயக்குநர். எனக்கு நல்ல அறிமுகம். அவரது படத்தின் ஸ்கிரிப்ட்டைகூட நான் டைப் செய்து கொடுத்திருக்கிறேன். அரங்கத்தில் அவர் அருகே சீட் உள்ளது என்று எதேச்சையாக அறிந்து அருகில் அமர்ந்து “ஹலோ ஸார்..” என்று சொன்னவுடனேயே லேசாக புன்சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டு, விருட்டென எழுந்து 2 சீட்டுக்கள் பின்னால் போய் அமர்ந்து என்னை அவமானப்படுத்தியதையும் மறக்க முடியாது..!

யாரோ, ஊர் பேர் தெரியாத அனாதைகள் கூட்டத்தில் ஒருவனாக, சினிமா ரசிகனாக மட்டுமே பிலிம் சேம்பரில் முகத்தைக் காட்டியிருக்கும் எனக்கு இப்படியொரு பெரிய இயக்குநர் நண்பராக இருந்தது அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த ஒரு டானிக்கும்கூட..!

“சாயந்தரமா வீட்டுக்கு வாங்க.. நிறைய பேசலாம்..” என்பார்.  அவருடைய மனைவி வந்து “டைம் ஆச்சு..” என்று சொல்லும்வரையிலும் பேசிக் கொண்டேயிருப்பார். கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல.. பொதுவாகவே வயதானவர்கள் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிலும் உழைப்பாளிகளாக தங்களை இந்தச் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொண்டவர்கள் தங்களுடைய அனுபவங்களை யாரிடமாவது பகிர வேண்டும் என்று நினைக்கிறார்கள். துரதிருஷ்டம் வேகமாக வர.. அதிர்ஷ்டம் ஓடத்தில் வரும் என்பதை போல இந்தப் பாக்கியம் பலருக்கும் கிடைப்பதில்லை..!

“என்னோட திரையுலக வாழ்க்கை அனுபவங்களை எழுதறதுக்கு ஒரு பத்திரிகை கிடைக்கலை.. ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா..?” என்றார்..! அப்போது விகடனில் இது பற்றி கேட்டுப் பார்த்தேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக 'தினகரனி'லும், 'கல்கி'யிலும் கொஞ்சம், கொஞ்சமாக எழுதினார்.  மிச்சம், மீதியாக பல விஷயங்களை அவரது இல்லத்திலும், பிலிம் சேம்பரிலும், உலக திரைப்பட விழாக்கள் நடைபெற்ற ஆனந்த், உட்லண்ட்ஸ், பைலட் தியேட்டர்களிலும் அவருடன் பேசியதும், பழகியதும், தெரிந்து கொண்டதும் இன்றைக்கும் மனதில் பசுமையாகவே இருக்கிறது..!

ஏ.ஜெகந்நாதன் தனது சினிமா வாழ்க்கையை 1958-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸில் இருந்துதான் துவக்கியிருக்கிறார். இயக்குநர்  டி.பிரகாஷ்ராவ் அந்தச் சமயத்தில் ஜூபிடரில் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். ஏ.ஜெகந்நாதன் முதலில் துணை இயக்குநராகப் பணியாற்றியதும் இந்தப் படத்தில்தான்.! இந்தப் படம் முடியும்போது அப்படத்தின் கதாசிரியர் வித்வான் மா.லட்சுமணன், இவரின் சுறுசுறுப்பான வேலைகளினால் கவரப்பட்டு, இயக்குநர் ப.நீலகண்டனிடம் இவரை உதவியாளராகச் சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்துதான் தனக்கு சுக்ரதிசை திரும்பியதாகச் சொன்னார் ஜெகந்நாதன் ஸார்.

“வரிசையா எம்.ஜி.ஆர். படம்.. 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'மாட்டுக்கார வேலன்', 'ராமன் தேடிய சீதை', 'என் அண்ணன்', 'சங்கே முழங்கு', 'கணவன்', 'நீரும் நெருப்பும்', 'நல்லவன் வாழ்வான்', 'ஒரு தாய் மக்கள்'ன்னு ப.நீலகண்டன் இயக்கிய அத்தனை படங்களிலும் நான் வேலை செஞ்சேன். அப்போ எம்.ஜி.ஆர். படத்துல கரெக்ட்டா பேமெண்ட் வந்திரும்.. அதுனால எனக்கு அடுத்தடுத்த பல வருடங்கள் சோத்துக்குப் பஞ்சமில்லாம போச்சு.. நான் இந்த கோடம்பாக்கத்துல ஸ்டெடியா நின்னதுக்கு ரொம்ப பெரிய காரணம் இது ஒண்ணுதான்.. இடைல இடைல டி.பிரகாஷ்ராவ் ஸாரும் வெளிப்படங்கள் செய்யும்போது என்னைக் கூப்பிட்டுக்குவாரு.. நான் நீலகண்டன்கிட்ட சொல்லிட்டுப் போயிட்டு வருவேன்.. ‘படகோட்டி’ படத்துல என்னை இணை இயக்குநரா பிரமோஷன் கொடுத்து பெருமைப்படுத்தினாரு பிரகாஷ்ராவ்..” என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

“தொட்டால் பூ மலரும்” பாடல் ஷூட்டிங் எடுக்கப் போகும்போது அதை எப்படி எடுக்கலாம்ன்னு பிரகாஷ்ராவ் ஒரு ஐடியா பண்ணிட்டு வந்திருந்தாரு..! ஆனா இயக்குநர் வரும்போது எம்.ஜி.ஆர். ரொம்ப யதார்த்தமா தென்னை மரத்துல கையை வைச்சு அந்தப் பாட்டை பாடி ஹம்மிங் பண்ணிக்கிட்டிருக்கிறதை தூரத்துல இருந்து பார்த்தாரு.. என்ன நினைச்சாரோ தெரியலை.. என்னைக் கூப்பிட்டு “ஏன் அதையே ஸாங் லீடிங்கா நாம வைச்சுக்கக் கூடாது?”ன்னாரு..! அப்படி திடீர்ன்னு உருவானதுதான் அந்தப் பாடலின் துவக்க வரிகளின் காட்சிகள்.. இப்போதும் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி ரொமான்ஸ்களில் இந்தப் பாடலும் தனியிடத்தைப் பிடிச்சிருக்கு...” என்றார்.

1958-ம் ஆண்டில் இருந்து இயக்குநர் பணியைக் கற்றுக் கொண்ட இவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது எம்.ஜி.ஆரின் முதலாளி ஆர்.எம்.வீரப்பன்தான்.. சின்ன பட்ஜெட்டில் தனது மகள் செல்வி பெயரில் துவங்கிய புது கம்பெனிக்காக ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்த ஆர்.எம்.வீ., “ஜெகந்நாதனை இந்தப் படத்தை இயக்கச் சொல்ல்லாமா?” என்று எம்.ஜி.ஆரிடமே கேட்டுவிட்டுத்தான் இந்தப் பணியினை இவருக்கு வழங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். ஜெகந்நாதனை பெரிதும் பாராட்டிவிட்டு, “இவருடைய பணியினை நான் நன்கு அறிவேன்.. மிகச் சிறந்த உழைப்பாளி. என்னோட ஸ்டூடண்ட் மாதிரி.. ப.நீலகண்டனிடம் பணியாற்றிய போது இவரது திறமையைப் பார்த்து நான் பெரிதும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..” என்றெல்லாம் சொல்லி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதுவே மிகச் சிறந்த விஸிட்டிங் கார்டாகிவிட்டது இவருக்கு..!




இந்த ‘மணிப்பயல்’ படம்தான் திராவிட இயக்கத்தினருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ஜெகந்நாதன் ஸார் செய்த புண்ணியம் என்றே சொல்ல வேண்டும். மாஸ்டர் சேகரின் நடிப்பில் பேரறிஞர் அண்ணாவின் புகழ் பாடும் புலமைப்பித்தன் எழுதிய அந்த புகழ் பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் பாடல் காட்சி இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது..! 'வங்கக் கடல் அலையே வாய் மூடித் தூங்குமெங்கள் தங்கத் தமிழ் மகனைத் தாலாட்டிப் பாடினையோ..” என்ற இந்த வரிகளைக் கேட்டு கண் கலங்காத ரசிகர்கள் இருந்திருக்க முடியாது..!  “அண்ணா.. அண்ணா.. எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா…” என்ற இந்தப் பாடல் இன்றுவரையிலும் அண்ணாவின் தம்பிகளுக்குப் பிடித்தமானதே..!

இதற்குப் பின் “உனக்கு ஒரு படம் பண்ண வாய்ப்பு தரேன்..” என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்த இடைவேளையில்தான், ஜெய்சங்கரின் ‘இதயம் பார்க்கிறது’ என்ற சின்ன பட்ஜெட் படத்தையும் இயக்கியிருக்கிறார். இதற்குப் பின் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி..!’ சஸ்பென்ஸ் காட்சிகளோடு, எம்.ஜி.ஆரின் அதே அம்மா சென்டிமெண்ட்.. காதல் களியாட்டங்கள்.. அவரது புகழ் பாடும் காட்சிகள் என்று ‘ஏ கிளாஸ் எம்.ஜி.ஆர் படம்’ என்ற பெயரை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான் பெற்றது..!

படத்தின் துவக்கக் காட்சியில் வரும் “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற..” பாடல் எம்.ஜி.ஆருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது..!  இந்தப் படத்தை சிறப்பான முறையில் இயக்கியதற்காக எம்.ஜி.ஆரிடமிருந்து பரிசாக வாங்கி ஜெகந்நாதன் ஸார் அணிந்திருந்த, அந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி தொட்டுப் பார்ப்பேன்.. சிரிப்பார்.. அதைப் பற்றிப் பேசினாலும், எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினாலும் பேசிக் கொண்டேயிருப்பார். அதற்குள் வீடு வந்துவிட்டால், “நாளைக்கு மிச்சத்தைச் சொல்றேன்..” என்று பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்..!

அப்படி அவர் பாதியிலேயே சொல்லாமலேயே விட்டுவிட்டது “இன்பமே..” பாடல் காட்சியை ஷூட் செய்த தினங்களில் வி.என்.ஜானகி அம்மாளை ஸ்பாட்டுக்கு தன்னுடன் வர விடாமல் செய்ய எம்.ஜி.ஆர். செய்த சதி வேலைகள்..! பாதிதான் சொன்னார் இயக்குநர்.. மீதி, இனியும் கேட்க முடியாது..!

அந்தப் பாடல் காட்சி என்றில்லை.. “அந்தப் படம் முழுவதுமே ராதாசலூஜா காட்டிய கவர்ச்சி மிகவும் அதீதமாக இருந்ததே..?” என்றேன்.. “அப்போ எம்.ஜி.ஆரை.. எல்லா லேடீஸும் தன்னோட ஹஸ்பெண்ட்டாவே நினைச்சு ரசிச்சுக்கிட்டிருந்தாங்க. அதுனாலதான் எம்.ஜி.ஆரை வைச்சு படம் பண்ற அத்தனை இயக்குநர்களும் கதாநாயகிகளை கவர்ச்சியாவே காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. விநியோகஸ்தர்களும் இதைத்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விரும்புறதாவே சொன்னதால எங்களுக்கும் வேற வழியில்லாம போச்சு..” என்றார்..!

இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட்டுக்கு பின்பும் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம்.. “அடுத்த 2 வருடங்கள் மட்டுமே எம்.ஜி.ஆர். நடித்தார்.  அதிலும் என்னுடைய குருநாதர் நீலகண்டனே எம்.ஜி.ஆரின் 2 படங்களை இயக்குவதற்காக காத்திருந்தார். கே.சங்கர், ஸ்ரீதர் தலா ஒரு படம் பண்ணினாங்க.. அதுக்குள்ள எம்.ஜி.ஆரும் தேர்தல்ல ஜெயித்து முதலமைச்சராகிவிட்டதால் ஒரு படம் செஞ்சாலும், மறக்க முடியாத படமா செஞ்சுட்டதா இப்போவரைக்கும் எனக்கு பெருமைதான்..” என்றார்..

“இப்படியே டைப் அடிச்சுக் கொடுத்திட்டு காலத்தை வீணாக்காத.. ஏதாவது சினிமா கதை இருந்தா சொல்லு.. நான் யார்கிட்டயாச்சும் சொல்றேன்.. அப்படியாச்சும் உள்ள நுழைஞ்சு பொழைச்சுக்கோ..” என்றார் ஜெகந்நாதன் ஸார். அப்போதும், இப்போதும் என்னிடம் ஒரு கதை இருந்தது. இருக்கிறது.. “அது மலையாளத்துல பண்ணா நல்லாயிருக்கும்.. நீங்க வேண்ணா படிச்சுப் பாருங்க ஸார்.. புடிச்சிருந்தா யார்கிட்ட வேண்ணாலும் சொல்லுங்க..” என்று சொல்லி அந்தக் கதையைக் குடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு மறுநாள் போன் செய்து என்னை வீட்டுக்கு கூப்பிட்டார்.

போனவனை காபியோடு வரவேற்று உட்கார வைத்து, “படிச்சேன்.. நீ சொன்ன மாதிரி இது தமிழுக்கு சூட்டாகாது. மலையாளத்துக்குத்தான் ஆகும்.. வேண்ணா பாலாஜிகிட்ட சொல்லலாமா..?” என்று கேட்டுவிட்டு என்னை கேட்காமலேயே போனை எடுத்து டயல் செய்தார்.. ரிங் போய்க் கொண்டேயிருந்தது.. எடுக்க ஆளில்லை போலும்.. போனை வைத்துவிட்டு, “ரொம்ப வருஷமாச்சு பாலாஜிகிட்ட பேசி.. அவரோட தயாரிப்புல ஒரு படம் செஞ்சேன். பாதி படம் செஞ்சுக்கிட்டிருக்கும்போதே அதே கதையை எனக்குத் தெரியாமலேயே தெலுங்குல செய்ய ரைட்ஸ் கொடுத்திட்டாரு பாலாஜி.. இது எனக்கு ரொம்பக் கோவமாகி காச் மூச்சுன்னு கத்திட்டேன்.. அன்னிக்கு பேசினதுதான்.. இப்போதான் உனக்காக பேசப் போறேன்..” என்று சொல்லிவிட்டு மீண்டும், மீண்டும் டயல் செய்தார். ஆளில்லை போல தெரிய.. “சரி விடு.. நாளைக்கு நான் பேசிட்டு சொல்றேன்..” என்றார்.. எனக்காக இத்தனை வருட பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்து தனது ஈகோவை கைவிட எத்தனித்த அவருடைய அந்த நிமிடத்தை இப்போது நினைத்தால் பெருமையாக உள்ளது.. கடைசியில் அவர் திரு.பாலாஜியிடம் பேசிவிட்டு பின்பு என்னிடமும் சொன்னார். “நீ அவரை போய்ப் பாரு..” என்றார். நான் திரு.பாலாஜிக்கு  போன் செய்த நேரம் அவருக்கு மிகவும் துரதிருஷ்டமான நேரம்.. அத்தோடு நான் அதை விட்டுவிட்டேன்..!

‘இதயக்கனி’க்கு பின்பு பிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்தளித்திருக்கும் லிஸ்ட்படி பார்த்தால் பல படங்களை ஜெகந்நாதன் இயக்கியிருந்தாலும் முழு தகவல்களைத் திரட்ட முடியவில்லை. நான் நேரிலும் கேட்டபோது “அதையெல்லாம் நோட் போட்டு எழுதி வைச்சிருந்தேன். வெள்ளையடிக்கும்போது எங்கோ மிஸ்ஸாயிருச்சு.. இப்போ எனக்கே மறந்து போச்சு” என்றார்.. ‘ஆயிரம் வாசல் இதயம்’, ‘குமார விஜயம்’, ‘நந்தா என் நிலா’, ‘குரோதம்’, ‘முதல் இரவு’, ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ போன்ற படங்களை இயக்கியிருப்பது தெரிகிறது.. இதில் ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ‘சின்னச்சாமி’ என்ற பாரதிராஜாவின் ஒரிஜினல் பெயர்தான் டைட்டிலில் வருமாம்..!

'குரோதம்' படத்தில் இவர் அறிமுகப்படுத்திய மலேசிய நடிகர் பிரேமை நீங்கள் மறந்திருக்க முடியாது..! இந்தப் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது.  “முதல் இரவு” படத்தில் சிவக்குமார், சுமித்ரா நடித்திருந்தார்கள். “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்” என்ற பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றிருந்தது.. இந்தப் பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னேன்..  “ஊட்டியில் மாலை மயங்கிய நேரங்களிலேயே இந்தப் பாடல் காட்சியை படமாக்கியதாகவும், இளையராஜாவின் அற்புதமான இசைதான் பாடலை ஹிட்டாக்கிவிட்டது..” என்றார்..! “சிவக்குமாருக்கு அப்போதைய காலக்கட்டத்தில் பொருத்தமான ஜோடி சுமித்ராதான்.. படம் சரியாப் போகலைன்னாலும் எனக்கும், சிவக்குமாருக்கும் இந்தப் படத்துல ஆத்ம திருப்தி..” என்றார்..!

8 ஆண்டுகளுக்கு முன்பாக உலக திரைப்பட விழா சென்னையில் துவங்கியபோது மிக ஆர்வமாக கலந்து கொண்டவர், கடைசியாக சென்ற ஆண்டு வரையிலும் தினம் தவறாமல் வந்திருந்து படங்களை பார்த்துச் சென்றார். சென்ற ஆண்டுதான் கடைசி ஆண்டோ தெரியவில்லை.. இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமனும், ஜெகந்நாதன் ஸாரும்தான் போன வருஷம் முழுக்க ஜோடி போட்டு உட்லண்ட்ஸ் தியேட்டர்ல சுத்தினாங்க..! நான் தியேட்டருக்குள் வேக வேகமா படியேறும்போதே அவரிடமிருந்து போன் வரும். “மிஸ்டர் லூட்டி சரவணன்.. உட்லண்ட்ஸ்ல படம் போர்.. சிம்பொனிக்கு வாங்க.. அங்கதான் உக்காந்திருக்கேன்..” என்பார். சமயங்களில் பல முக்கியத் திரைப்படங்களை முன்பே பார்த்திருப்பதால் “அந்தப் படத்துக்கு போங்க.. இந்தப் படத்துக்கு போங்க..” என்று அவரே திசை திருப்பிவிடுவார்..!

முதல் 2 உலகப் பட விழாக்கள் ஆனந்த் தியேட்டரில் நடந்தபோது நான் வெட்டி ஆபீஸராக இருந்தேன். அப்போதெல்லாம் தினம்தோறும் எனக்கு மதியச் சாப்பாடும், மாலை சிற்றுண்டியும் ஜெகந்நாதன் ஐயா வழங்கியதுதான்..! இப்போதும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்..! ஆனந்த் தியேட்டரில் அன்றொரு நாள் பார்த்த ஒரு படம் மிக மிக வித்தியாசமாக படத்தின் கிளைமாக்ஸே 4 விதமாக இருந்தது.. கடைசி 5 நிமிடங்கள் ரசிகர்கள் அனைவரும் நின்று கொண்டுதான் இருந்தோம். அப்படியொரு சுவாரஸ்யம்..!

வண்டியில் வீட்டிற்கு போகும்வழியில் பாம்குரோம் பக்கத்தில் இருக்கும் செட்டி நாடு ஹோட்டலுக்கு விடச் சொன்னவர்.. அங்கேயே எனக்கு இரவு டிபன் வாங்கிக் கொடுத்து அந்தப் படத்தைப் பற்றி ரீல் பை ரீல் பாராட்டிப் பேசினார்..! “இப்படியெல்லாம் எடுக்கணும்யா.. எங்க நம்ம ஆளுக ரசிச்சானுங்கன்னா எடுக்கலாம்.. யாருய்யா நஷ்டப்பட்டு கை தட்டலுக்காக படம் எடுக்க முன் வரப் போறாங்க..?” என்று பெரிதும் வருத்தப்பட்டார்..!

உதவி செய்வதும், கை காட்டுவதும்.. கனிவாகப் பேசுவதும்.. ஒரு புறத்தில் இருந்தாலும் சுயமரியாதையில் மிக உறுதியாகவே இருந்தார் ஐயா.. நான் எப்போதும் எனது குருநாதர் கே.பி.யை பெயர் குறிப்பிடாமல், “டைரக்டர்” என்றே சொல்வது வழக்கம்.  ‘மின்பிம்பங்கள்’ காலம் தொட்டே இப்படித்தான்..! இவரிடமும் பேசும்போது “இன்னிக்கு டைரக்டரை பார்த்தேன் ஸார்.. டைரக்டர்கிட்ட பேசுனேன் ஸார்..” என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று கோபப்பட்டு, “ஏம்ப்பா இங்க பாலசந்தர் மட்டும்தான் டைரக்டரா..? மத்தவன்லாம் அஸிஸ்டெண்ட்டா..? என்ன.. எப்போ பார்த்தாலும் ‘டைரக்டர்’.. ‘டைரக்டர்’ன்னுட்டு..!” என்று சிடுசிடுத்தார்..

அவரது கோபத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும், பதில் சொல்ல முடியாமல் நிற்க.. இன்னும் கோபமானார்.. “என்னய்யா டைரக்டர் அவரு(கே.பாலசந்தர்)..? ஒரு ஷாட்கூட ஒழுங்கா வைக்கத் தெரியாது..! நாங்க எடுத்ததெல்லாம் சினிமாய்யா.. அவர் எடுத்தது சினிமாவா..? இங்கேயும் வந்து நாடகம் மாதிரியே டைம் லேப்ஸ் கொடுத்து கிடைச்ச கேப்புல காலண்டரை காட்டுறது.. காலை காட்டுறது.. பொம்மைய காட்டுறதுன்னு  டயலாக் டெலிவரிக்கு டைம் கொடுத்தே, தமிழ்ச் சினிமாவையும் நாடமாக்கிட்டாரு.. இதுல என்னய்யா சினிமாத்தனம் இருக்கு..?” என்று பொங்கித் தீர்த்துவிட்டார்..!

மெளனமாக அவர் சொன்னது முழுவதையும் தாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனை இரவு 11 மணிக்கு கைப்பேசியில் மீண்டும் அழைத்தார் ஜெகந்நாதன் ஸார். “அது வந்து.. ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்.. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.. அவர்கிட்ட சொன்னாலும் எனக்கொண்ணும் ஆட்சேபணையில்லை.. சொல்லலைன்னாலும் வருத்தப்பட மாட்டேன்.. அவரோட மேக்கிங் ஸ்டைல் பத்தி என்னோட கருத்து இதுதான்.. கொஞ்சம் ஸ்பீடா சொல்லும்போது வேற மாதிரி வந்திருச்சு. உங்களுக்கு ஒண்ணும் கோபமில்லையே..?” என்றார் 75 வயது நிரம்பிய அந்த முதியவர்..! இப்போது நினைத்து பார்த்தாலும் இதில் கோபிக்க ஏதுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது..!

1982-ம் வருடம் ஜெகந்நாதன் ஸாரின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பு முனை.  சத்யா மூவிஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த 'மூன்று முகம்' படத்தை ஜகந்நாதன் டைரக்ட் செய்தார்.  ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த ரஜினியின் கேரக்டர் ஸ்கெட்ச்தான் படமே..! இந்தப் படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னபோது, “பிறந்த நாள் கேக்கை வெட்டும்போது அந்தத் தீச்சுவாலையில்  பிளாஷ்பேக் கதை விரியும்..” என்று ஜெகந்நாதன் ஸார் சொன்னபோது, ரஜினி கை தட்டி ரசித்தாராம்.. “இது நல்லாயிருக்கு ஸார்.. கண்டிப்பா நல்லா வரும் ஸார்..” என்று முதலிலேயே ரெடியாகிவிட்டாராம்..!

முதலில் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டருக்கு ரவிச்சந்திரன்தான் நடிப்பதாக இருந்ததாம்.. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட அதையும் ரஜினியே செய்யட்டுமே என்று ஆர்.எம்.வீ.யும் கதை இலாகாவினரும் சொல்லிவிட்டார்களாம்.. அந்த கேரக்டருக்காக தனி ஸ்டைல் இருந்தால் நல்லாயிருக்குமே என்று ஜெகந்நாதன் ஸார் விருப்ப்ப்பட்டிருக்கிறார். “நீங்க சொல்லுங்க ஸார்.. செஞ்சு பார்த்திருவோம்..” என்று ரஜினியும் ஓகே சொல்லி “இதுவரைக்கும் வேகமாக பேசித்தான் நடிச்சிருக்கேன்.. அதே ஸ்பீட்ல நடந்தா நல்லாயிருக்குமா..? செஞ்சு பார்க்கலாமா..?” என்று ப்ளோரிலேயே பல முறை நடந்து காட்டினாராம்.. இதுவும் போதாமல், மேக்கப் அறையில்கூட குறுக்கும், நெடுக்குமாக நடந்து பார்த்துவிட்டு “இப்போ ஓகே ஸார்..” என்றாராம்..! “அந்த ஸ்டைல்தான் படமே..! அதுனாலதான் படம் ஜெயிச்சது.. நான் திரும்பவும் ஜெயிச்சேன்..” என்றார்..!

“ரஜினி அதுக்கப்புறம் பல நேரம் திடீர், திடீர்ன்னு போன் செய்வாரு.. அப்புறம் போனே செய்றதில்லை.. ரொம்ப நாளாச்சு..  செளந்தர்யா கல்யாணத்துல பார்த்ததுதான்..” என்ற வருத்தத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாரை, இன்னும் கொஞ்சம் கோபப்பட வைத்துவிட்டார் ரஜினி.

இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவில் ஜெகந்நாதன் ஸார் ரஜினியின் அருகில் சென்று பேச முயல.. “ஓகே.. ஓகே..” என்று வழக்கம்போல ஆசீர்வாதம் செய்வது போல சொல்லி  மறுதலித்துவிட்டார் ரஜினி. ஏற்கெனவே நடு ராத்திரியில் மேடையேற்றிய கோபத்தில் இருந்த ஜெகந்நாதன் ஸாருக்கு இது இன்னுமொரு கோபமாகிவிட்டது.. “என்ன சரவணா இது..? ச்சும்மா தலையை ஆட்டி.. ஓகே ஓகேன்னா என்ன அர்த்தம்..? அவர்ல்ல எந்திரிச்சு வந்து என்னை விசாரிக்கணும்.. நானே தள்ளாடிக்கிட்டு நடந்து வர்றேன். ஏதோ மூணாம் மனுஷன் மாதிரி பேசினா எப்படி...?” என்று மிகவும் வருத்தப்பட்டார்..!

இதுவும் கொஞ்ச நாள்தான்..! இதற்குச் சில நாட்கள் கழித்து ரஜினி தனது வீட்டில் தன்னை வைத்து இயக்கிய பெரிய இயக்குநர்கள்.. தனக்கு நெருக்கமான திரையுலகப் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விழா எடுத்தார்..! இந்த விழாவுக்கு ஜெகந்நாதன் ஸாருக்கும் அழைப்பு வந்தது. லதா ரஜினியே போன் செய்து அழைத்திருந்தார். விழாவுக்கு போய்விட்டு வந்து அன்று மாலையே என்னை போனில் அழைத்து சந்தோஷப்பட்டார்..!

“இன்னிக்கு ரஜினியை பார்த்தேன் சரவணன்.. நல்லா பேசினாரு.. ‘உடம்பை பார்த்துக்குங்க’ன்னு சொன்னாரு..  ‘உங்களை நிறைய மிஸ் பண்ணிட்டேன்’னு சொன்னாரு.. எனக்கும் வருத்தமாத்தான் இருந்தது.. ‘எனக்கு உடம்புக்கு முடியலை. இல்லாட்டி உங்களை அடிக்கடி வந்து பார்ப்பேன்’னு சொன்னேன்.. ‘இல்ல.. இல்ல.. நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க.. போன்ல பேசுவோம்’னு சொன்னாரு..! அவருக்கு உ.வே.சா. பத்தின புத்தகத்தை பரிசா கொடுத்தேன்..! உங்காளும்(கே.பி.) வந்திருந்தாரு.. ரொம்ப நாள் கழிச்சு அவர்கிட்டேயும் பேசினேன்.. அவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசா கொடுத்திட்டு வந்தேன்..! ஆனா உன்னைப் பத்தி எதுவும் சொல்லலை.. ரஜினி வாசல்வரைக்கும் வந்து வழியனுப்பி வைச்சாரு.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..!” என்றார்.

அடிப்படையில் ஜெகந்நாதன் ஸார் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் இரண்டாம் பேட்ச் மாணவர். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தவர்.. தமிழ் இலக்கியத்தில் நிரம்ப ஆர்வம் கொண்டவர்.. அதிலும் சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர்.. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். சென்னையில் உ.வே.சா.வுக்கு சிலை அமைக்கப்பட்ட பின்பு, உ.வே.சா.வின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும்  அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

உ.வே.சா.வை பற்றிப் பேசச் சொன்னாலும் மணிக்கணக்காகப் பேசுவார். அவரைப் பற்றி தூர்தர்ஷனுக்காக 13 வாரத் தொடராக “தமிழ்த் தாத்தா” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியிருந்தார்..!  வீட்டில் இருந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை இலக்கிய புத்தகங்கள்தான்..! “சிலப்பதிகாரத்துக்கு உரைநடையாக புத்தகம் இருக்குமா?” என்று நான் கேட்டிருந்தேன்.. எனக்காக பல இடங்களிலும் விசாரித்துவிட்டு மிகவும் கவலையோடு “இதுவரைக்கும் யாரும் அப்படி எழுதலை சரவணா..!” என்று வருத்தப்பட்டு சொன்னவிதம் , எனக்குள் அவர் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியது..!

இலக்கியத் தொடர்பில் பல முக்கிய இலக்கிய பத்திரிகைகளை வாசித்து வந்தாலும் அசோகமித்திரனுடன் பழக்கம் இருந்ததாகச் சொன்னார்..!  ஒரு முறை அசோகமித்திரன் இவரிடம், “கரகாட்டக்காரன்-சின்னத்தம்பி.. இந்த ரெண்டு படமும் எப்படிங்க ஜெயிச்சது..? ஏன் இந்த ஓட்டம் ஓடுச்சு..?” என்று கேட்டாராம்..! “இதுக்கு ஆன்ஸர் தெரிஞ்சா, நானே இதே மாதிரி படம் செஞ்சிர மாட்டேனா...?” என்று இவரும் பதில் சொன்னாராம்..!

மூன்று முகம் வெளியான அடுத்த வருடமே ஜெகந்நாதன் ஸாருக்கு மீண்டும் ஒரு டபுள் ஆக்சன்..! 1983 நவம்பர் 4. தீபாவளியன்று சிவாஜி பிலிம்ஸின் ‘வெள்ளை ரோஜா’வும், ரஜினியின் ‘தங்க மகன்’ இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே ஹிட்டடித்தன..! ‘வெள்ளை ரோஜா’வில் சாப்ட்டான கேரக்டரில் நடிப்பு சாயல் இல்லாமல் இருந்தால் ஜெயிக்குமா என்ற நடிகர் திலகத்தின் சந்தேகத்தை தீர்த்துவைத்து, உடன் ராம்குமாரையும் வில்லனாக நடிக்க வைத்து ஜெயித்துக் காட்டினார்.  இதே 'வெள்ளை ரோஜா', இந்திக்கும், கன்னடத்திற்கும் படையெடுத்திருக்கிறது. இந்தியில் ஜிதேந்திராவும் கன்னடத்தில் பிரபாகரும் நடிக்க இவைகளையும் ஜெகந்நாதன் ஸாரே இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குநருக்கான ஒரேயொரு பிலிம்பேர் விருதையும் ‘வெள்ளை ரோஜா’ படத்துக்காகவே வாங்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்..!

ரஜினி, சிவாஜியுடன் மட்டுமா என்ற கேள்விக்கு 1987 பொங்கலில் வெளியான சத்யா மூவிஸின்  'காதல் பரிசு' படம் விடை சொன்னது. இதில் ‘காதல் மகாராணி’ பாடல் “நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ ஸ்டைலில் இருப்பதாக நான் சொன்னவுடன்.. “அதேதான்.. அந்த ஸ்டைல்ல ஒரு பாட்டு வேணும்ன்னு விருப்பப்பட்டோம். அதுனால அதே மாதிரி  எடுத்தோம்.. இருந்தாலும் கமல், அம்பிகாவோட ஆர்ட் டைரக்சனும் அற்புதமாக வேலை பார்த்தாங்க.. இப்பவும் அந்தப் படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு அதுதான்...” என்றார். “ஆனால் எனக்கு கூ.. கூ.. என்று குயில் கூவாதா..? பாட்டுதான் பிடிக்குது..” என்றேன்.. “அந்த டான்ஸெல்லாம் ச்சே.. ச்சே.. சான்ஸே இல்லை.. கமலுக்கு மட்டும்தான்..” என்றேன்..

“கமல் இதுக்கு முன்னாடி நான் டைரக்ட் செஞ்ச படங்கள்லேயே சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கான்.. அப்பல்லாம் ஆழ்வார்பேட்டைல அவனை ஏத்திக்கிட்டு அதே கார் என் வீட்டுக்கு வந்து என்னையும் கூட்டிக்கிட்டு கிளம்பும்.. அன்னிக்கு டான்ஸ் ரிகர்சல்ன்னா வண்டிலேயே கையை, காலை ஆட்டிக்கிட்டு ஏதாவது செஞ்சுக்கிட்டேதான் வருவான்.. டயலாக் போர்ஷன்னா மனப்பாடம் செஞ்ச மாதிரி டயலாக்கை சொல்லிக்கிட்டேதான் வருவான்.. டெடிகேஷன் பெர்ஷன்.. அதுனாலதான் இந்த அளவுக்கு வந்திருக்கான்..! இந்தப் படத்துலகூட லொகேஷன் வந்த பின்னாடி இடத்தைப் பார்த்துட்டு, திரும்பத் திரும்ப டான்ஸ் மூவ்மெண்ட்ஸை மாத்தி, மாத்தி ரெடி பண்ணிக் குடுத்தான்.. அதான் அந்த டான்ஸ் இப்பவும் பேசப்படுது..” என்றார்..!

சத்யா மூவிஸ் தயாரிப்பு மட்டுமல்ல.. வெளி தயாரிப்புப் படங்களையும் ஒப்புக் கொண்டு இயக்கியிருந்தாலும் அவருடைய கடைசி ஹிட் ‘காதல் பரிசு’தான். ‘முத்துக்கள் மூன்று’, 'கொம்பேறி மூக்கன்', 'நாளை உனது நாள்', ஓ மானே - மானே, 'கற்பூர தீபம்' 'என் தங்கை', மில் தொழிலாளி', 'அர்ச்சனா ஐ.ஏ.எஸ்', 'ஹீரோ' என்று லிஸ்ட்டில் பல படங்களும் அடக்கம். இடையில் சுருளிராஜனை ஹீரோவாக வைத்துகூட ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஜெகந்நாதன் ஸார் இயக்கிய கடைசிப் படம் ‘வாட்ச்மேன் வடிவேலு’. சிவக்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். “அதற்குப் பின்பும் பட வாய்ப்பு வந்தது.. அந்த நேரத்துல உ.வே.சா. பத்தின டாக்குமெண்ட்ரி எடுக்கப் போனதால கொஞ்சம் கேப் விழுந்திருச்சு.. அதுனால அப்படியே கோடம்பாக்கம் கை விட்டுப் போயிருச்சு” என்றார்..!

கோடம்பாக்கம் கைவிட்டாலும் சின்னத்திரையிலும் சில தொடர்களை இயக்கியிருக்கிறார் ஜெகந்நாதன் ஸார்.. வரிசைக்கிரமமாக பார்த்தால் ‘தாலி’, ‘மர்மம்’, ‘நரசிம்மாவதாரம்’, ‘பவானி’, ‘கோர்ட்டு தீர்ப்பு’, ‘பெண் ஒரு ஜீவ நதி’ என்று சில குறுந்தொடர்களை இயக்கிய நிலையில் மேலும் பலவற்றுக்கு கதை ஐடியா மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானது ஒரு பக்கம்.. துணைக்கு யாருடைய உதவியும் இல்லாதது..! சேனல்களில் அறிமுகம் இல்லாதது - இதெல்லாம் சேர்ந்து கொண்டதால் இதுவே போதும் என்று தனது படைப்புலகத்தில் இருந்து விலகியிருந்தார் ஜெகந்நாதன் ஸார்..!

சென்ற வருட உலகத் திரைப்பட விழாவின் அனைத்து நாட்களிலும் வராமல் போனாலும் கடைசி 4 நாட்கள் முழுவதுமாக என்னுடன் இருந்தார்..! நான் ஈரோடு சென்று திரும்புவதாகச் சொன்னபோது “உனக்கு இப்போ அந்த விருது ரொம்ப முக்கியமா..? இப்போ மிஸ் பண்ற படங்களை எப்படி திரும்பப் பார்ப்ப..?” என்று லேசாகக் கோபித்தும் கொண்டார்..!  இடையிடையே ஐசிஏஎஃப்பின் புதிய பட திரையிடூகள் பற்றி போனில் பேசுவோம்..! ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இட நெருக்கடியால் சில நேரங்களில் உட்கார முடியாததால், இப்போதெல்லாம் போக முடியவில்லை என்று ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்..!

அவருடைய மகள்கள் இருவரும் திருப்பூரிலும், திருச்சியிலும் இருப்பதால் அடிக்கடி டூர் சென்றுவிடுவார். ஏதாவது முக்கிய படங்கள் ரிலீஸாகும்போது மட்டுமே போன் செய்து ரிசல்ட் என்ன என்று ஆர்வத்துடன் விசாரிப்பார். “இதுவும் ஊத்திக்கிச்சா..?” என்று அவர் மெல்ல சொல்லும்போது எனக்கு புரையேறுவது போல சிரிப்பு வரும்..! ஆனாலும் அவர் சிரிக்காமல் “அவன் இவ்ளோ அலட்டும்போதே நினைச்சேன்.. இப்படித்தான் எடுத்துத் தொலைப்பான்னு..” என்பார்..!

திருப்பூரில் தான் இருந்தபொழுதுகூட அந்த ஊரில் நடந்த பல புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.. “இப்போ எல்லாருமே வரலாறு தெரியாமலேயே பேசுறாங்க.. எழுதுறாங்க.. நம்மளை கொஞ்சம் பேச விட்டா பேசலாம்.. எங்க முடியுது..” என்று அலுத்துக் கொண்டவருக்கு சினிமாவைக் கற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வம் இறுதி வரையிலும் இருந்திருக்கிறது. இதுதான் ஆச்சரியம்..! சிலருக்கு மட்டுமே இது சாத்தியம்..!

ஒரு மகன். பெயர் அருண்.. மைக்ரோசாப்ட் கம்பெனியில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பது குறித்து அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதே சமயம்.. பெரிய குறையும் அதுதான் என்பார். “எனக்குப் பின்னாடி என் பேரைச் சொல்ல இங்க யாருமே இல்லை..” என்பார். “என்னோட அஸிஸ்டெண்ட்கூட யார், எங்க இருக்காங்கன்னே தெரியலை.. ஒருத்தராச்சும் ஏதாவது ஒரு நல்ல நாள்ல வந்து பார்த்திட்டு போகக் கூடாதா..?” என்பார்.. எனக்குத் தெரிந்து இவருடன் நீண்ட நாட்கள் அஸிஸ்டெண்ட்டாக இருந்தவர்களில் யாரும் இயக்குநர்களாக பரிணமிக்கவில்லை என்பது உண்மை..!

78 வயதாகி சற்றுத் தளர்ச்சியான நடையில் இருந்தாலும், 2 ஆண்டுகளுக்கு முன்னால்தான் அமெரிக்கா சென்று 6 மாதங்கள் தனது மகன் வீட்டில் தங்கியிருந்துவிட்டு வந்தார்..!  திருப்பூரிலேயே பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டுவிட்டதாகவும், சீக்கிரமா சென்னைக்கு வந்துட்டு கூப்பிடுறேன் என்று மட்டுமே கடைசியாக  பேசும்போது கூறியிருந்தார்.  திரும்பி வருவார் என்றுதான் நானும் நம்பியிருந்தேன். நான் மட்டுமல்ல.. அவர் வீட்டு போர்டிகாவில் இப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அந்த 40 வால்ட்ஸ் பல்பும் அவருக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது..!

அவரது பூதவுடலை சென்னை கொண்டு வந்திருந்தால் இயக்குநர்கள் சங்க மாலையோடு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியிருக்கலாம்.. ஆனால் வாய்ப்பில்லாமல் போய்விட்டதெண்ணி அவர் நிச்சயம் வருத்தப்படுவார் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவர் சினிமாவை நேசித்தார்.. தான் சினிமாக்காரன் என்பதை மிகவும் உயர்வாகவே கருதினார்.. அந்த உயர்வுக்குரிய மரியாதை அவரது உடலுக்கு கிடைக்காமல் போனது வருத்தமானதே..! ஆனால் இது எல்லாவற்றையும்விட அவருக்கு இன்னொரு பெயர் கிடைத்திருக்கிறது.. தான் பிறந்து வாழ்ந்த அதே ஊரில் ஒரு பண்பட்ட மனிதனுக்கு இறப்பும் கிடைக்கிறது என்றால் அது அவரவர் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்..!

1935 டிசம்பர் 25-ம் தேதி இதே திருப்பூரில் ஆறுமுகம் முதலியாருக்கும்,  ராமாத்தாளுக்கும் மகனாகப் பிறந்த ஜெகந்நாதன் அதே ஊரில் தனது தந்தை பெயரில் கட்டியிருந்த.. பெற்றோர் இருந்திருந்த வீட்டிலேயே இறந்தும் போனது அவருக்குக் கிடைத்த கொடுப்பினை..!

என்னைப் போன்ற சாதாரணமானவர்களையெல்லாம் நடுவீட்டில் உட்கார வைத்து மரியாதை செய்து நம்பிக்கையூட்டிய எனது மூத்தோர் ஜெகந்நாதன் ஐயாவுக்கு என்னால் முடிந்தது இந்தச் சிறிய அஞ்சலிதான்..!

அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..!

1988 ஜனவரி 28-ல் தமிழக சட்டப் பேரவையில் நடந்தது என்ன..?

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்பு முதலமைச்சரான ஜானகி எம்.ஜி.ஆரை ஏற்காமல் ஜெயலலிதாவின் பின்னால் அ.தி.மு.க.வின் 31 எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்து நின்றதால் கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தது..!

சட்டப் பேரவையில் ஜானகியம்மாள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நடந்த நிகழ்வுகளையும், சட்டப் பேரவையில் நடந்த கலாட்டாக்களையும் அன்றைய ஜூனியர்விகடனின் ஆசிரியராக இருந்த எனதருமை மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.சுதாங்கன் விவரமான கட்டுரையாக எழுதியிருந்தார்.

அதனை இந்த வார ஜூனியர்விகடன் பழசு என்றும் புதுசு என்ற பகுதியில் வெளியிட்டிருக்கிறார்கள். அன்றைய நிகழ்வுகளை அறிந்திருக்காதவர்கள் இதனைப் படித்துத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..!

நேற்றும் நமதே - 9: 03.02.1988

தங்கள் பிடியில் சிக்கிய ஆட்சியை நிலைநிறுத்த, ஜானகி கோஷ்டியினர் ஆடிய ஆட்டத்தைப்போல், தமிழகம் இதுவரை கண்டது இல்லை.

புதுப் புது சாகசங்கள், உத்திகளைக் கையாண்டு பார்த்​தார்கள். யாருக்கும் எதையும் தரத் தயாராக இருந்தார்கள். யார் காலிலும் விழ ரெடி. வாரி வழங்கப் பண மூட்டைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, கடைசி நிமிடம் வரைப் பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தார்கள்!

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதே இவர்களுக்கு முதல் வேலையாக இருந்தது. ஜெயலலிதா அணியில் இருந்தவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க எல்லாவித ஆசைகளையும் காட்டிப் பார்த்தார்கள். பி.ஹெச்.பாண்டியனைக் கைக்குள் போட்டுக் கொண்டு, 'கட்சி மாறிகளாக அறிவித்துப் பதவி பறிக்கப்படும்’ என்று தினமும் ஒரு பக்கம் எச்சரிக்கை வேறு!

போலீஸ் பட்டாளம் ஒன்று ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ-க்களின் வீடுகளைத் தேடிப் போய்ப் பயமுறுத்திப் பார்த்தது. பல எம்.எல்.ஏ-க்களின் மனைவியரிடம் லட்சங்கள் தருவதாகப் பேசிப் பார்க்கப்பட்டது. ஆனால், கே.கே.எஸ்.எஸ்.ஆர். திரட்டிவைத்து இருந்த எம்.எல்.ஏ-க்களை மட்டும் திசை மாற்ற முடியவில்லை!


நாள் நெருங்க நெருங்க, ஜானகி கோஷ்டியினருக்குப் பதற்றம் அதிகமா​யிற்று. 'சமரசத் திட்டம்’ என்ற ஒன்றை உலவவிட்டார்கள். அதன்படி, நெடுஞ்செழியனுக்கு உதவி முதல்வர் பதவி தரப்படும். மற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் அமைச்சரவையில் இடம் உண்டு. ஜெயலலிதாவை மட்டும் ஒதுக்கினால் போதும்!

ஜெயலலிதா அணியினரிடம் இந்த சமரசத் திட்டத்துடன் போனது யார் தெரியுமா? ஜானகியின் சகோதரர் நாராயணன் என்ற மணி. ஜெய​லலிதா கோஷ்டியைச் சேர்ந்த ஒவ்வோர் அமைச்சர் வீட்டையும் தேடிப் போய்ப் பேசினார். ''ஜானகி அம்மாவே உங்கள் வீட்டுக்கு வந்து கூப்பிடத் தயார்...'' என்று சொன்னார் மணி. முதலில் போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவிடம் பேசச் சொல்லுங்கள்!'' என்றார்கள் மாஜி மந்திரிகள்!

இந்தப் பேச்சுவார்த்தையால், சலசலப்புக்கு ஆளானார் க.ராஜாராம். ''ஜானகி அரசை நிலைநிறுத்த நான் உதவப் போகிறேன். அது கவிழாது... அதில் போய்ச் சேருங்கள்!'' என்று ராஜாராமுக்குப் புத்திமதி கூறினாராம் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன். தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்த ராஜாராமை மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளுமாறு எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு செய்தவர் ஆர்.வி. ஆகவே, ஜனாதிபதி பேச்சைத் தட்ட முடியாத நிலை!

குழம்பிய மனத்துடன் ராஜாராம் சென்னை திரும்பியபோது, ஜானகி ஆதரவாளரான நடிகை லதா அவரை சந்தித்தார். ஜானகிக்கு உதவுமாறு 'மனமுருக’ லதா கேட்டுக்கொள்ள, ராஜாராம் மனம் மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது! உடனே பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரைச் சந்தித்து 'ஜானகி கரத்தைப் பலப்படுத்த’ வேண்டினார் ராஜாராம். முகத்​தைத் திருப்பிக்கொண்டு வாசல் கதவைக் காட்டினார்கள் அவர்கள்.

இந்திரா காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஜானகி கோஷ்டியினருக்குக் குறைய ஆரம்பித்தது. அவர்களுக்கு எதிரியாக, மூப்பனார் கோஷ்டியினர் செயல்பட்டனர். சிவாஜி கோஷ்டியினர், தங்கபாலு கோஷ்டியினர் இரண்டையும் 'விலை பேசி’ வலை வீசிப் பிடித்தாகிவிட்டது! இந்த அசிங்கம் எல்லாம் டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தது. நடுநிலை வகிக்கலாம் என்று நினைத்த பிரதம மந்திரி மனம் மாறினார்.

கிட்டத்தட்ட 12 இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இவர்கள் வலையில் பிடிபட்டதை அறிந்த பூட்டாசிங், முதல்வர் ஜானகியை டெலி​போனிலேயே அழைத்து நேரடியாகவே எச்சரிக்கை செய்தார். ''ஐயோ... இதெல்லாம் எனக்குத் தெரியாது!'' என்று புலம்பினார் ஜானகி.

எப்படியோ சிவாஜியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஆர்.எம்.வீ., அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அனுப்பி 'ஜானகியை ஆதரிக்க வேண்டும்’ என்று இ.காங்கிரஸில் பிரசாரம் செய்யவிட்டார். ஒரு கட்டத்தில் இவர்கள் பிரதமருக்கே தந்தியடிக்கத் திட்டம் போட்டு இருந்தனர். இதை அறிந்த மூப்பனார் கோஷ்டியினர், உடனே இயங்கி ஜானகியை ஆதரிக்கக் கூடாது என்று ராஜீவ் காந்திக்குத் தந்தி அனுப்பினார்கள்.

வி.வி.சாமிநாதன் ஒவ்வொரு எதிர்க் கட்சியினரிடமும் ஓடினார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கெஞ்சிப் பார்த்தார். அப்துல் சமதிடம் மன்றாடினார்.

ஜனாதிபதி ஆர்.வி., கவர்னர் குரானா, சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் ஆகிய மும்மூர்த்தி​களிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்டார்கள் ஜானகி கோஷ்டியினர்!

கட்சி மாறியவர்களை நீக்கும் சட்டத்தின் கீழ், ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ-க்களை நீக்கும் அறிகுறிகளைத் தோற்றுவித்தனர். இதைப்பற்றி ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ-க்களும் மாஜி மந்திரிகளும் குரானாவிடம் 'இது நியாயமா?’ என்று புகார் செய்தபோது, ''எம்.எல்.ஏ-க்களை அந்த சட்டத்தின் கீழ் நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே! அதில் நான் தலையிட வழி இல்லை...'' என்று நழுவினார் குரானா!

சட்டசபையில் நடக்கும் ஓட்டெடுப்பில், தனது கட்சி முடிவுக்கு எதிராக வாக்களித்தால்தான் ஒரு எம்.எல்.ஏ. பதவி இழப்பார் என்பது சட்டம். ஆனால், அப்படி எதுவுமே நடக்காததற்கு முன்பே 'பதவி நீக்குவேன்’ என்று எச்சரிக்க ஆரம்பித்துவிட்டார் சபாநாயகர். நடுநிலை வகிக்க வேண்டிய சபாநாயகர் ஜானகி கோஷ்டியின் எடுபிடி ஆனார்!

இந்த நிலையில் டெல்லி சென்றார் ஜெயலலிதா. பிரதமருடன் ஒரு மணி நேரம் பேசினார். இந்தச் செய்தி ஜானகி கோஷ்டியினர் வயிற்றில் புளியைக் கரைத்தது. டெல்லியில் இருந்து திரும்பிய ஜெய​லலிதா, பிரதமர் சந்திப்புபற்றி ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் மௌனம் காத்தார்!

உடனே ஜானகி கோஷ்டியினர், ஜனாதிபதியைத் தண்டனிட்டார்கள். ஜானகி ஆதரவு எம்.பி-க்கள் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு, ''ஒன்றும் நடக்காது... தைரியமாக இருங்கள்!'' என்று உற்சாகம் ஊட்டினார்கள்!

ஜனவரி 27-ம் தேதி மாலையில் இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம். பூட்டாசிங் டெல்லியில் இருந்து ஜானகி கோஷ்டியினருக்கு 'ஓலை’ எடுத்து வர இருந்தார். டெல்லியில், விமானத்தில் ஏறப்போனார் பூட்டாசிங். ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வந்து, திரும்பிப் போனார். அவரது சென்னை விஜயம் ரத்து ஆயிற்று. ஜானகி அரசுக்கு, 'இன்னும் ஒரே ஒரு சான்ஸ்’ கொடுக்குமாறு பிரதமரிடம், ஜனாதிபதி வேண்டிக்கொண்டதாக டெல்லியில் இருந்து செய்தி!

அன்று பிரதமரின் அறிக்கை வெளியானது. 'ஒன்றுபட்ட அ.தி.மு.க-வையே இ.காங்கிரஸ் ஆதரிக்கும்’ என்றது அந்த அறிக்கை. இதுபற்றி ஒவ்வொரு முகாமும் ஒவ்வொரு மாதிரி விளக்கம் கூறின. ஆர்.வி-யின் முயற்சியால் - ஜானகி அமைச்சரவையை எதிர்ப்பது இல்லை என்றே டெல்லி சொல்கிற சூழ்நிலை உருவானது. ஜானகி கோஷ்டி திடீர் குஷி அடைந்தது. ஆனால், இது நீடிக்கவில்லை. விடியற்காலை 3 மணிக்கு, ஜானகி அமைச்சரவையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனப் புது  உத்தரவு வந்தது.

28-ம் தேதி காலை 8 மணிக்கு இ.காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ-க்களின் கூட்டம். மேலிடப் பார்வையாளராக வந்த பாண்டிச்சேரி முதல்வர் பரூக், 'சாம... பேத... தான... தண்ட’ங்களைப் பிரயோ​கித்துப் பேசினார். தங்கபாலு கோஷ்டியினருக்கும் சிவாஜி கோஷ்டியினருக்கும் அதில் எச்சரிக்கைகள் இருந்தன. தங்கபாலு கோஷ்டியினர் 'கப்சிப்’ ஆயினர்! சிவாஜி கோஷ்டியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ-க்கள் மட்டும் ஜானகி கோஷ்டியிடம் 'விசுவாசத்தைக் காட்ட’ முடிவு செய்தனர். ஆனால், சட்டசபையில் 13 ஓட்டு வித்தியாசத்தில் ஜானகி அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் தோற்று ஜானகி மந்திரிசபை கவிழும் நிலை.

ஜானகி கோஷ்டி சதி வேலைகளில் இறங்கினர். குரானா ரகசியமாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டார். ஜெயலலிதா அணியின் மாஜி மந்திரிகளின் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பதவிகளைப் பறிக்க பி.ஹெச்.பாண்டியன் முடிவு செய்தார். அப்படிச் செய்தால், மீதி எம்.எல்.ஏ-க்களில் பலர் தங்கள் பக்கம் வரலாம் என்பது திட்டம்.

28-ம் தேதி சட்டசபை கூடியவுடன் முதலில் ஜானகி அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பி.ஹெச்.பாண்டியன் இந்த நியாயத்தை மீறினார். ஐந்து இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக டெலிபோனில் எனக்குச் சொன்னார்கள் என்று 10 மணிக்குக் கூடிய சட்ட​மன்றத்தை, 12 மணிக்குத் தள்ளிவைத்தார்.


12 மணிக்கு மீண்டும் கூடியபோது, 'கட்சி மாறுவதைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அணி​யின் ஆறு மாஜி அமைச்சர்களுடைய எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதாக’ அறிவித்து மன்றத்தை மீண்டும் 3 மணிக்கு ஒத்திவைத்தார்!

''இப்படி அடிக்கடி அன்று சபையை ஒத்திவைத்ததே ஒரு திட்டமிட்ட சதி! தங்களுக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களைத் திரட்ட ஜானகி கோஷ்டியினர் முயல்வதற்கு வேண்டிய நேரம் கொடுத்தார் பாண்டியன்...'' என்று குமுறினார் பண்ருட்டி ராமச்​சந்திரன்.

இடையில், தி.மு.க-வின் 12 எம்.எல்.ஏ-க்கள் உதவியைப் பெற நாஞ்சிலார் காலில் விழுந்தனர் - ஆர்.எம்.வீ., வி.வி.சாமிநாதன், முத்துசாமி ஆகிய அமைச்சர்கள், ''நாங்கள் இன்னும் முன்பே உங்களைத் தேடி வந்திருப்போம். ப.உ.சண்முகம்தான் தி.மு.க. உறவு வேண்டாம்... இ.காங்கிரஸ் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று தடுத்தார்...'' என்று அவர்கள் அழுதனர்.

நாஞ்சிலார் சற்று மனம் உருகிவிட்ட​தாகக் கேள்வி. பல முறை கலைஞருடன் அவர் டெலிபோனில் தொடர்பு கொண்டார். உருப்​படியான பதில் கலைஞரிடம் இருந்து வரவில்லை.

உண்மையில் அன்று காலை முதல் ஜானகி கோஷ்டியினர் ஒரு வதந்தியை சிவாஜி கோஷ்டி மூலம் காங்கிரஸில் பரப்பினர். 'தி.மு.க., ஜானகிக்கு ஆதரவு தருகிறது’ என்பது அது. இப்படி வதந்தி பரப்பினால் இ.காங்கிரஸ் நிலை மாறும் என்று கனவு கண்டார்கள், பாவம்!

''கலைஞரை நேரடியாகப் பாருங்கள்... முதல்வர் ஜானகியையே பார்க்கச் சொல்லுங்கள்!'' என்றாராம் நாஞ்சிலார்.

'இ.காங்கிரஸ் ஆதரவு தர மறுக்கிறார்கள். இந்த நிலையில் நீங்கள்தான் உதவ வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஜானகி, கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதித் தர, அதை எடுத்துக்​கொண்டு மூன்று மந்திரிகள் கலைஞரைப் பார்க்க ஓடினார்கள். கலைஞர் அந்தக் கடிதத்தைப் படித்தார். எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார். ஆனால், ஜானகியை எதிர்த்து ஓட்டு அளிப்பது என்ற முடிவில் மாறுதல் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி, திருப்பி அனுப்பிவிட்டார்.

சில தி.மு.க. தலைவர்களுக்குப் பல விதமான ஆசைகள் காண்பிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி. ''ஜானகியின் கடிதத்தைப் பார்த்ததும் முதலில் கலைஞர் சற்று யோசித்தார். சிலர், 'நடுநிலை வகிக்கலாம்’ என்றார்கள். ஆனால், அன்பழகன், ஆற்காடு வீராசாமி போன்றோர் இதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். 'ஜானகியை எதிர்ப்பது என்று முன்பு செய்த முடிவை மாற்றினால், கட்சித் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ் நாட்டில் நமக்கு இருக்கும் மதிப்பும் போய்விடும்.’ என்று அவர்கள் வாதாடினர்.

கலைஞர், 'ஆதரவு கிடையாது’ என்ற முடிவையே உறுதி செய்தார். இதை ஒரு காகிதத்தில் எழுதி, தன் கையெழுத்திட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் காட்டுமாறு ஆற்காடு வீராசாமியை உடனே அனுப்பினார்.

கடைசி வரை ஜானகி அரசை எதிர்க்கப்​போவதாக சொல்லி வந்த முஸ்லிம் லீக், திடீர் என்று பல்டி அடித்தது. 'நடுநிலைமை’ என்று அறிவித்தது. ஜானகி கோஷ்டியைச் சேர்ந்த ஆலடி அருணா, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமதைக் கையைப் பிடித்து, எங்கோ அழைத்துப் போனதை நிருபர்கள் பார்த்தனர்!

தி.மு.க. ஆதரவும் இல்லை என்பது வெட்டவெளிச்சமானவுடன், இனி பி.ஹெச்.பாண்டியனே கதி என்று சரண் அடைந்தனர்.வானளாவிய அதிகாரங்​களைப் பிரயோகிக்கத் தொடங்கினார் பி.ஹெச்.பாண்டியன்!

3 மணிக்கு, அவை கூடியபோது சபாநாயகரின் உத்தரவின்பேரில் சாரிசாரியாக போலீஸ் நுழைந்தது. கூடவே குண்டர்களும் நுழைந்தார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஜெய​லலிதா அணி எம்.எல்.ஏ-க்கள் 27 பேர் பதவிகள் பறிக்கப்பட்டன.

உள்ளே தப்பித் தவறி இருந்துவிட்ட எட்டு தி.மு.க-வினர் எதிர்த்து ஓட்டளிக்க - ஜானகி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் 99 பேர் ஆதரித்து ஓட்டுப் போட - ஜானகி அரசின் மீது நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது!

''இப்படி மோசடியான ஒரு முறையில், உலகில் எந்த சட்டசபையிலும் அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது இல்லை. ஒரே ஓர் உதாரணம் இருக்கலாம். இதே முறையில்தான் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தார்!'' என்றார் வியந்துபோய் நின்ற டெல்லி பிரமுகர்!

ஆபத்தான முன்னுதாரணமாகத் திகழக்கூடிய இந்த நாடகங்களை மத்திய அரசு இத்தனை நாட்கள் நடக்க அனுமதித்ததே, மிகவும் கண்டிக்கத்தக்கது! இந்த மாதிரி ஆபாசக் காட்சிகள் அரங்கேறாமல், மெஜாரிட்டி ஆதரவு இல்லை என்றவுடனேயே, மத்திய அரசு... சட்டசபையைக் கலைத்திருக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்து!

நன்றி-ஜூனியர்விகடன்-18-05-2011

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்த கதை..!

01-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனால் கலைத்துறையின் உச்சத்தைத் தொட்ட நிலையிலும் எம்.ஜி.ஆரை போல அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை..! இது காலத்தின் கட்டாயமாக அவருக்கு கிடைத்த அனுபவம்..!


அவர் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, அவரே தோற்றுப் போய் அவரது கட்சியினர் ஒருவர்கூட ஜெயிக்காமல் அவமானத்துக்குள்ளாகி, கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதாதளம் கட்சியில் தனது எண்ணற்ற தொண்டர்களுடன் கரைந்து போனார்..! கடைசியில் ஜனதா தளம் கட்சியும் கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விட அதிலிருந்தும் ஒதுங்கியவர் தனது மரணம் வரையிலும் அரசியலைத் தொடவில்லை..!

அவர் கட்சி ஆரம்பித்த அன்று அவரது வீட்டில் நடந்த நிகழ்வுகளை அன்றைய ஜூனியர் விகடன் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அரசியலில் ஆர்வமுடையவர்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது..!

அதற்கு முன்பாக அப்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலை கொஞ்சம் தெரிந்து கொண்டு அதன் பின்பு ஜூ.வி.க்குள் நுழைவோம்.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்த மறுநாளில் இருந்தே ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க.வில் உருவானது..!

ஜெயலலிதா தனது வீட்டின் பால்கனியில் நின்றபடியே தினம்தோறும் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கத் தொடங்கினார். இதனாலேயே அவருக்கு பால்கனி பாவை என்ற நற்பெயரும் கிடைத்தது. இந்தப் பெயரை அவருக்குச் சூட்டியது கா.காளிமுத்து..!

அப்போதைய சட்டப் பேரவையில் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 132. இதில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள். மீதமிருந்தவர்கள் ஆர்.எம்.வீ.யுடன் இருந்தார்கள். ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவைச் சமாளிக்க வேண்டி இதற்கு ஜானகியம்மாள்தான் முதல்வராக வேண்டும் என்று லாபி செய்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி அவரையே முதல்வராகத் தேர்வு செய்தார். அதுவரையிலும் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பதவி வகித்து வந்தார். அவர் தன்னைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுப் பார்த்தார். ஒரு எம்.எல்.ஏ.கூட அவரை ஆதரிக்காதது அவரது துரதிருஷ்டம்தான்..! 1989 ஜனவரி 7-ம் தேதியன்று ஜானகியம்மாள் தமிழகத்தின் முதல் பெண் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

 

132 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். சபாநாயகர் பி.எச்.பாண்டியனும், துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்பிரமணியனும் ஜானகியை ஆதரித்தனர். அதே சமயத்தில் அப்போது திமுகவின் பத்து உறுப்பினர்கள்  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்தற்காக அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது.

புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 1988, ஜனவரி 26- ல் நடத்தப்பட்டது. இன்றைக்குத்தான் பல ஆண்டுகள் கழித்து கோபாலபுரத்தில் கால் வைத்தார் ஆர்.எம்.வீரப்பன்..! கலைஞரை சந்தித்து அ.தி.மு.க.வின் ஜானகி தலைமையிலான ஆட்சிக்கு தி.மு.க.விடம் ஆதரவு கேட்டார்..!

நினைத்துப் பார்க்க முடியாத மாற்றம்.. எம்.ஜி.ஆர். மறைந்து சில நாட்களுக்குள்ளாகவே ஆட்சியைப் பிடிக்க ஆளாய் பறந்து, "தீய சக்தி" என்று வர்ணித்து, யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ, அதே நபரிடம் போய் ஆதரவு கேட்டார் எம்.ஜி.ஆரின் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன். கலைஞர் எப்போதும்போல் கட்சியின் மேல் மட்டத்தினருடன் கலந்தாலோசித்து சொல்வதாக வீரப்பனை அனுப்பி வைத்தார்.!


சட்டப் பேரவையில் தி.மு.க., இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. சபாநாயகர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை கட்சி கொறடா உத்தரவை மீறியதற்காக அவையிலிருந்து நீக்கினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே  சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது.  கூடவே ஜேப்பியாரின் தலைமையில் நுழைந்த ஒரு கும்பல் ஜானகியம்மாள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதாகச் சொல்லி ஜெயலலிதாவை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களை பதம் பார்த்துவிட்டனர். பலருக்கும் ரத்தக் காயம்..!

அவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார்.  ஆனால் இதனை மாநில கவர்னர் குரானா ஏற்கவில்லை..!

காங்கிரஸின் காலை வாரி விடும் கலாச்சாரத்தின்படி இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த மத்திய காங்கிரஸ் அரசு, ஜனவரி 31-ம் தேதியன்று ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை  பிரகடனப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. இரு பிரிவினரும் தனித்தனியாக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று பேட்டியளித்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அ.தி.மு.க.வாக ஏற்க மறுத்தது. அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.

சட்டப் பேரவையின் வாக்கெடுப்பின்போது ஜானகியம்மாளை ஆதரிக்க வேண்டும் என்று சிவாஜி, காங்கிரஸ் மேலிடத்திடம் வற்புறுத்தினார்.  ஆனால் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களோ.. "இதுதான் சரியான சந்தர்ப்பம்..  அ.தி.மு.க.வை பலமிழக்க வைத்தால், அது நமது காங்கிரஸுக்குத்தான் நல்லது. எதிர்காலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தலாம்" என்று மேலிடத்திடம் வற்புறுத்த.. ராஜீவ்காந்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக தடம் மாறினார். ஜானகியம்மாளுக்கு ஆதரவில்லை என்று காங்கிரஸ் முடிவெடுத்தது..! இதுவே ஜானகியம்மாளுக்கும், அதிமுகவுக்கும் பெரும் அதிர்ச்சி. இதனைவிட அதிர்ச்சி சிவாஜிக்கு..!

எம்.ஜி.ஆரின் மீதிருந்த அபிமானம், ஜானகியம்மாளின் மீதி்ருந்த பாசம் மற்றும் இரக்கத்தில் சிவாஜி இதனைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது ஜென்ம விரோதியான மூப்பனாருடன் மோதி அவரால் ஜெயிக்க முடியவில்லை. 

மிகுந்த வேதனையுடன் நான்கு பக்கங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.






இந்த நேரத்தில்தான் இடையில் நுழைந்தார் ஆர்.எம்.வீரப்பன்..! சிவாஜியை சந்தித்து தனிக் கட்சிக்கு தூபம் போட்டார். கட்சியின் செலவுகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், கட்சிக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், தேர்தல் நேரத்தில் தாங்கள் இருவரும் கூட்டணி வைத்துக் கொண்டால், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்றும் ஆசை வார்த்தை காட்ட.. இதுவரையிலும் தனக்கான மரியாதையைச் செய்யத் தவறிய காங்கிரஸுக்கு பாடம் புகட்ட நினைத்து சிவாஜியும் தலையாட்டினார். அதன் விளைவுதான் அவர் ஆரம்பித்த கட்சியான 'தமிழக முன்னேற்ற முன்னணி'..!

இனி ஜூ.வி.யின் அன்றைய நேரடி வர்ணனையைத் தொடர்ந்து படியுங்கள்..!

10.02.1988

கடைசியில், சிம்மக் குரலோன் புதுக் கட்சி தொடங்கியேவிட்டார்!  பிப்ரவரி மாதம் 10-ம் தேதி சென்னை - தி.நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான 'பிள்ளை’கள் கூடினார்கள்.  தொடக்க நாளன்று சிவாஜி மிகவும் டென்ஷ​னாகவே காணப்பட்டார். காரணம் - கட்சியின் பெயர்(தமிழக முன்னேற்ற முன்னணி)கூட 10-ம் தேதி, காலை 10 மணிவரையிலும்கூட முடிவாகாமல் இருந்ததுதான்..!

''சிவாஜிக்கு எந்தப் பதவியும் தராமல் அலட்சியப்​படுத்தி, அவர் எதிர்பார்ப்புகளை நிராகரித்தே வந்தது இந்திரா காங்கிரஸ். இந்த நிலையில் வேறு கட்சிக்கு உடனே போவது என்பது கௌரவக் குறைச்சல். எனவேதான், சிவாஜியைத் தனிக் கட்சி ஆரம்பிக்க ஆர்.எம்.வீ. வற்புறுத்தினார்.

இதனால், எதிர்வரும் தேர்தலில் இ.காங்கிரஸுக்குத் தேர்தல் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் போகலாம். சிவாஜி மன்ற ரசிகர்களுக்கு மட்டும்தான் கொடி கட்டவும், கூட்டத்துக்கு ஆள் திரட்டவும் தெரியும் என்பது மேலிடம் கவனிக்க மறந்த விஷயம். ஆனால், ஆர்.எம்.வீ. அதை மறக்காமல் செயல்​பட்டார்...'' என்று நம்மிடம் சொன்னார் ஜானகி கோஷ்டி ஆதரவாளர் ஒருவர்.

ஆனாலும், புதுக் கட்சித் தொடங்க சிவாஜி லேசில் உடன்படவில்லை. அவரை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், 'தமிழ் தேசம்’, 'தமிழர் காங்கிரஸ்’ 'சிவாஜி காங்​கிரஸ்’, 'தமிழக முன்னேற்றக் கழகம்’ என்று சுமார் 50 பெயர்களை சிவாஜியின் ஆதரவாளர்கள்  தேர்ந்து எடுத்து அவர் முன் வைத்தார்கள்.

''ஏம்ப்பா கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே, இவ்ளோ வேகமா செயல்படறீங்களே... இந்த வேகம் கடைசிவரை இருக்குமாப்பா?'' என்று கேட்டார் சிவாஜி. தொடர்ந்து, ''எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸ் பெயரை உபயோகப்படுத்த வேண்டாம். 'தேசியம்’கிற வார்த்தை வர்ற மாதிரி ஒரு பேரைத் தேர்ந்தெடுங்க...'' என்று சொன்னார். ஆனால், 'தேசியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த அனுமதி கிடைக்காது என்ற தகவல் வந்தது. கடைசியில் 'தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற பெயர் சிவாஜிக்குப் பிடித்துவிட்டது.

கட்சிக் கொடியின் நிறம், அதன் பொருள், கொள்கை போன்ற விஷயங்கள், வெங்கட்ரமணன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்) ஆகியோர் அடங்கிய ஒரு குழு முடிவு செய்து சிவாஜியின் ஒப்புதலைப் பெற்றது.

சிவாஜி மூலம் எம்.எல்.ஏ. பதவி பெற்றவர்கள் சிலர் இந்தப் புதுக் கட்சியில் சேராமல் நழுவியது குறித்து சிவாஜி வருத்தப்பட்டார். ''நம்பிக்கைத் துரோகம் பல ரூபத்திலே தொடருதேப்பா...'' என்றார்.

அருகில் இருந்த சைதை துரைசாமி, ''நாங்க இருக்கோம்ணே... கவலைப்படறதை விட்டுட்டுத் தலை​வருக்குரிய பந்தாவைக் காட்ட ஆரம்பிங்கண்ணே..'' என்றார்  சிவாஜியிடம்.

இதுபோல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையேதான் புதன்கிழமை தொடக்க விழா நடந்தது. சாலையின் முனையில் பிரமாண்டமான கட்-அவுட். அதில்கூடக் கவனமாக சிவாஜியின் வேஷ்டியில் இருந்த காங்கிரஸ் பார்டரை நீக்கி இருந்தார்கள்!

வீட்டுக்கு வெளியே பெரிய பந்தலும், வீட்டுத் தோட்டத்தில் ஷாமியானாவும் போட்டு அலங்காரம். காலை 8 மணியில் இருந்தே, ரசிகர்களின் கூட்டம். வந்தவர்கள் எல்லோருமே மிகவும் அந்நியோன்யமாக, சிவாஜி வீட்டின் எல்லா அறைகளுக்கும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள்.

மெயின் ஹாலில் சிவாஜி தன் மகன் ராம்குமாருடன் அமர்ந்திருந்தார். சிவாஜி மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாகத் தங்கள் படைகளுடன் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ 'தமிழக முதல்வர் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் எழுப்பி மாலை போட்டுவிட்டுச் சென்றார்கள்.

திருநெல்வேலி ரசிகர் மன்றத்தினர் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் போட, ராம்குமார் அவர்களை அருகே அழைத்து, ''இன்னும் என்னங்க... அண்ணன் சிவாஜிங்கிறீங்க... தலைவர் சிவாஜின்னு சொல்லுங்க...'' என்று உத்தர​விட்டதும், அடுத்து வந்தவர்கள் எல்லாம் 'தலைவர்’ கோஷமே எழுப்பினார்கள்.

புதுக் கட்சி உருவாக்கித் தலைவரான சிவாஜி, அன்றே வாரிசையும் அறிமுகப்படுத்திவிட்டாரா? அப்பாவுக்கு அருகில் இருந்த ராம்குமாரிடம், ''என்ன... நீங்களும் அரசியல் பிரவேசமா?'' என்றதும், ''நோ... நோ... அப்பாவுக்கு ஹெல்ப்பா இன்னிக்கு மட்டும்... அதுவும் இந்த புது அனுபவத்தை என்ஜாய் பண்றதுக்காகத்தான்...'' என்று சொல்லிவிட்டு, ''இதுல ஒண்ணும் தப்பில்லையே...'' என்று 'சிவாஜி’ பாணி​யிலேயே கேட்டார்.

ஒரு ரசிகர் வெகு ஆவேசமாய் வந்து தன் கையை பிளேடால் கீறி ரத்தம் தொட்டு, ''பாரதப் பிரதமர் டாக்டர் சிவாஜி...'' என்று உணர்ச்சிகரமாய்க் குரல் கொடுக்க... ராம்குமார், தளபதி சண்முகம், ராஜசேகரன் உட்பட எல்லோருமே, ''வாழ்க...'' என்றனர். தொடர்ந்து அந்த ரசிகர், ''துரோகி ராஜீவ்காந்தி...'' என்று கத்த, சிவாஜி மிகச் சத்தமாய்... ''வாழ்க...'' என்றார்.(பலே!)

தொடர்ந்து, ''எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன்... நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் ரொம்ப உயர்வா இருக்கணும்.  படிச்சவங்களும் பாராட்டற மாதிரி இருக்கணும். யாரையும் 'ஒழிக’ கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா... அதுவும் மறைந்த அந்த அன்னையோட பிள்ளையை - என்ன இருந்தாலும் ரொம்ப பெரிய பதவியிலே இருக்கறவரை, அப்படி சொல்லக் கூடாது. அரசியல்லே நாமளாவது நாகரிகத்தோட, நாணயத்தோட, நல்லோரோட கைகோத்து நடப்போம்...'' என்றார் கம்பீரமாக!

ஒரு மூதாட்டி - சுமார் 80 வயது இருக்கும்.  ''அப்பா... நானொரு அநாதை... அந்த மவராசன் - எம்.ஜி.ஆரு இருந்தவரைக்கும் எனக்குக் கொள்ளி போட வருவாருன்னு நெனைக்காட்டியும், எம் புள்ளையா நெனைச்சிருந்தேன்... இனி நீதாம்பா எம் புள்ளை...'' என்று அழுதபடியே ஏதேதோ பேச, சிவாஜி எழுந்து அந்த மூதாட்டியின் காலில் விழுந்து, ''உங்க ஆசீர்வாதம் கிடைக்கவே எனக்குக் குடுத்து வெச்சிருக்கணும். உங்க பிள்ளையாவே ஏத்துக்​கிட்டீங்களே... என் பாக்கியமம்மா... பாக்கியம்!'' என்றவர் உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, ''சாப்பிட்டீங்களாம்மா...'' என்று கேட்டு, சாப்பிட ஏற்பாடு செய்து அனுப்பி​னார்!

அடுத்து சிறுவர்கள் நான்கைந்து பேர் வந்து மாலை போட்டுவிட்டு, ''அண்ணே... எங்க ஏரியா முழுக்க உங்க பக்கம்தாண்ணே...'' என்றார்கள். சிவாஜி சிரித்தபடியே, ''உங்க ஏரியான்னா? உங்க வயசுப் பிள்ளைகளா? ஹூம்... உங்க ஆதரவு இருந்தா, டிஸ்ட்ரிபியூட்டருக்குத்தான் லாபம்... எனக்கு இல்லையேப்பா. ஆனா, பெரியவங்க சொல்றபடி கேட்டு நடக்கணும்... படிக்கிறீங்களா?'' என்று விசாரித்து, தட்டிக் கொடுத்து அனுப்பினார்.

காலை 10 மணியில் இருந்தே காத்திருந்த நிருபர்களில் ஒருவர், ''எப்போ சார் கட்சியைத் தொடங்கப் போறாரு...?'' என்றார். அதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், ''கொஞ்சம் பொறுங்க சார்... இன்னிக்குப் புதன்​கிழமை... பன்னிரெண்டு டூ ஒன்றரை ராகு காலம். அது முடிஞ்சதும் கரெக்டா 1.35-க்கு ஆரம்பிச்சிடலாம். நல்ல காரியத்தை நல்ல நேரத்துலே பண்ணுவோமே...'' என்று சமாதானப்​படுத்தினார்.

சரியாக மதியம் 1.40 மணிக்குக் கை கூப்பியபடியே மேடைக்கு அருகே வந்த சிவாஜி, பிள்ளையார் கோயிலை நமஸ்கரித்துவிட்டு மகன் ராம்குமாருடன் மேடை ஏறினார். சிவாஜியை வாழ்த்தும் கோஷமும், பட்டாசு வெடிக்கும் கோஷமுமாகத் தூள் கிளம்பியது.

முதலில், தளபதி சண்முகம் புதிய கட்சியின் தலைவராக சிவாஜியை முன்மொழிந்தார். அதை ஒவ்வொரு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்களும் வழிமொழிந்தார்கள். பலரும் தம் பேச்சின் முடிவில் 'ஜெய்ஹிந்த்’ என்று சொன்னார்கள். சண்முகம், ''பழக்க தோஷம்... லேசிலே போகுமா...'' என்று சொல்லிச் சிரித்தார்.

கடைசியில் சிவாஜி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டு, புதுக் கட்சி ஆரம்பித்ததற்கான அறிக்கையை வாசித்து முடித்தார்.

மேடையைவிட்டு இறங்கும் சமயம் ஒரு தயாரிப்பாளர் சிவாஜியின் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே, ''பூஜையைப் பிரமாதமா போட்டி​ருக்கீங்க அண்ணே...'' என்றார். சிவாஜி தனக்கே உரிய பாணியில், ''வாஸ்தவம்தான்... வழக்கப்படி நம்ம பிள்ளைங்க காப்பாத்துவாங்கங்கற நம்பிக்கைதான்...'' என்றார்!

காப்பாற்றுவார்களா?
''எட்டப்பர்களை ஒழிக்க வந்த கட்டபொம்மன்!''

காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த கூட்டம், அவர் காங்கிரஸில் இருந்த​போது இருந்ததைவிட, உணர்ச்சிபூர்வமாகவே பூரித்திருந்தது. காங்கிரஸ் பிரமுகர்களின் கார்கள் மட்டும் மிஸ்ஸிங்.

'வருங்கால முதல்வரே! தமிழினத் தலைவரே! வருக வருக’ போன்ற ஸ்லோகங்கள் சிவாஜியைத் தனி உலகத்​துக்கு அழைத்துச் சென்று இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தில் பிரஸ் மீட் வைத்தார். அங்கு என்னென்ன சொன்னாரோ, அது அப்படியே திருமண விழாவிலும் பிரதிபலித்தது.

''தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை ராஜினாமா செய்ய வைத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்த சிவாஜி, குருஷேத்திர யுத்தத்தில், பாண்டவர்களுக்கு உதவிய கண்ணனைப் போன்றவர். அவரை எங்கள் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டோம்!'' என்றார் செல்வேந்திரன்.

மணமக்களை வாழ்த்த வந்த ஒருவர், ''தலைவர் சிவாஜி, எட்டப்பர்களின் கொட்டத்தை அடக்க வந்த கட்டபொம்மன்!'' என்றார். ''எங்கள் இதய தெய்வம் டாக்டர் சிவாஜி!'' என்றார் பழக்கடை பாண்டியன்.

கடைசியில் பேசிய சிவாஜியின் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. ''நான் 30 வருஷமா கட்சி கட்சினு அலைஞ்சு, வேறு எதையும் சிந்திக்காமல் போயிட்டதால, சொந்தக்காரப் பயலுக எவனுமில்லாமப் போயிட்டானுக... (கூட்டம், 'நாங்கள் இருக்கிறோம்’ என அலறியது.) நம்மகிட்ட 3,60,000 மன்ற மறவர்கள் இருக்காங்க. ஒண்ணுமில்லாத கட்சி இப்போ காங்கிரஸ்தான். பொய்யை வெச்சே ஒரு கட்சி இருக்கிறதுன்னா, அது காங்கிரஸ்தான்.

இலங்கைப் பிரச்னையில் இவங்க ஆதரவும் கையெழுத்தும் எப்படி வாங்கினாங்கங்கிறது மத்தவங்களுக்கு வேணாத் தெரியாம இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்குமா? எனக்கு அங்கே மரியாதை கிடைக்கலேப்பா.  தேசியம், தேசியம்னு... பம்பாய் நம்மது, காஷ்மீர் நம்மது, டில்லி நம்மதுன்னு நினைச்சு என்னத்தைக் கண்டேன்? எல்லாம் கைவிட்டிடுச்சி. பார்த்தேன்... இனி இந்த தமிழ் மக்கள்தான்! அவங்க காலடியில வந்து விழுந்திடுவோம்கிற முடிவுக்கு வந்துட்டேன். தோளில்வெச்சு சுமந்தா, சுமக்கட்டும். இல்லாட்டி, காலில் போட்டு மிதிச்சாலும் மிதிக்கட்டும். ஏன்? 30 வருஷம் காங்கிரஸுக்கு உழைச்சதுக்கு தண்டனை வேணுமே! என் உசுரு போறதும் இந்த தமிழ் மக்கள் மடியிலேயே போகட்டும். என்ன செய்யறது... காலங்கெட்ட நேரத்துலதான் புத்தி வருது!

சரி நான்தான் வேஸ்ட் பண்ணிட்டேன். நீங்களாவது (எதிர்வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு காங்கிரஸ் பிரமுகரைப் பார்த்து) காலாகாலத்துல வந்து சேருங்க. (கரவொலி) இல்லேன்னா, அங்கேயே கிடந்து சாவுங்க. பாவம் இவரு... டெல்லிக்குக் கொண்டுபோன ஏலக்காய் மாலையைச் சேமிச்சு வைச்சிருந்தா, பெரிய ஏலக்காய்க் கடையே வைக்கலாம். என்ன ஆச்சு... ஒண்ணும் ஆகலை...''

அந்த மணமேடையை அரசியல் மேடையாக்கி, முழு அரசியல்வாதிக்கு உரிய தகுதியைப் பெற்றுவிட்டார் சிவாஜி!

நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011

மீண்டும் நான்..!

1989 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க.-ஜனதா தளம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன. ஜெயலலிதா அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியில் நின்றன. ஜானகி அ.தி.மு.க.வும், நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்னணியும் கூட்டணி வைத்திருந்தன. இந்த நேரத்தில் மருங்காபுரி மற்றும்  மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாகக் காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை.

1989, ஜனவரி 21-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 69.69 % வாக்குகள் பதிவாகின. தி.மு.க. கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏறியது..! ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு 32 தொகுதிகள் கிடைத்தது. ஜானகி எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள்தான் கிடைத்தன. நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை..! சிவாஜியே திருவையாறு தொகுதியில் தோல்வியடைந்தது மிகப் பெரும் சோகம்..!

திமுக
இடங்கள்
அதிமுக (ஜெ)
இடங்கள்
மற்றவர்கள்
இடங்கள்
திமுக
150
அதிமுக (ஜெ)
27
அதிமுக (ஜா)
2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
15
இந்திய கம்யூனிஸ்ட்
3
காங்கிரசு
26
ஜனதா கட்சி
4


அதிமுக
2




சுயேட்சைகள்
5
மொத்தம் (1989)
169
மொத்தம் (1989)
30
மொத்தம் (1989)
35
மொத்தம் (1984)
24
மொத்தம் (1984)
--
மொத்தம் (1984)
17

அ.தி.மு.க.வின் ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வழக்கமான ஆதரவு சிதறிவிட்டது. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட தி.மு.க. குறைவான வாக்குகளைப் பெற்றாலும், பெருவாரியான இடங்களில் வென்றது.

சிவாஜியை எதிர்த்து தி.மு.க.வின் சார்பில் துரை சந்திரசேகரன் என்னும் புதுமுகம் போட்டியிட்டார். தேர்தலில் துரை சந்திரசேகர் பெற்ற வாக்குகள்  36981. சிவாஜி வாங்கியது 26338. 10643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் சிவாஜிகணேசன்..! இத்தோடு நடிகர் திலகத்தின் தனிக்கட்சி ஆசையும் முடிவுக்கு வந்தது..!

சிவாஜியின் வலது, இடமாக சினிமாவுலகில் திகழ்ந்து வந்த நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜனும், வி.கே.ராமசாமியும்.. இவர்கள் இருவருமே சிவாஜியின் கட்சியில் இணைந்தார்கள். மேஜர்தான் கட்சியின் பொருளாளர் என்று நினைக்கிறேன்..! தேர்தலில் இருவரும் பிரச்சாரமும் செய்தார்கள்.

கட்சி தேர்தலில் படு தோல்வியடைந்தவுடன் மேஜர் சுந்தர்ராஜன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக பத்திரிகைகளுக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு அக்கடிதத்தை சிவாஜிக்கு அனுப்பி வைத்தார். இதனை மிகப் பெரிய அவமானமாகக் கருதிய சிவாஜி, அன்றோடு மேஜருடனான தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டார். மேஜர் விரும்பியும், அவருடன் பேச மறுத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்த மேஜர் சுந்தர்ராஜனை சந்திக்க விரும்பாமல் மாடியிலேயே உட்கார்ந்து கொண்ட சிவாஜியை யாரும் சமாதானப்படுத்த முடியவில்லை. அன்றைக்கு சிவாஜியின் வீட்டில் இருந்து வெளியேறிய மேஜர் சுந்தர்ராஜன், திரும்பவும் சிவாஜி இறந்த தினத்தன்று அவருக்கு மாலை போடத்தான் அந்த வீட்டிற்கு வந்தார்.

வி.கே.ராமசாமியும் அந்தத் தேர்தல் தோல்வியோடு தனது அரசியல் ஆசையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு சினிமாவுக்கே போய்விட்டார்..! சிவாஜி இறந்த பின்பு அடுத்தடுத்து முதலில் வி.கே.ராமசாமியும், பின்பு மேஜர் சுந்தர்ராஜனும் இறந்தது சோகம்தான்..!

"சிவாஜி தேர்தலில் பிரகாசிக்காததற்குக் காரணம் அவருக்குப் பொய் சொல்லத் தெரியாது.." என்றார் சோ. சிவாஜி இறந்த தினத்தன்று அவருக்கான இரங்கல் அஞ்சலியிலும், சோ இதைத்தான் குறிப்பிட்டார். "சிவாஜி ஒரு பச்சைக் குழந்தை.. ஒரு குழந்தை எப்படி பேசுமோ. என்ன செய்யுமோ அதைத்தான் தன் வாழ்க்கை முழுவதும் செய்தார். பேசினார்.. இதனால்தான் அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.." என்றார் சோ..!

இதையேதான் இன்றுவரையிலும் அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது திண்டுக்கல் வந்த சிவாஜியை நாகல்நகர் பொதுக்கூட்டத்தின்போது மிக அருகில் பார்த்து பரவசமடைந்தது எனக்கு இப்போதும் நியாபகத்துக்கு வருகிறது.

அன்றைக்கு திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கி வித்தியாசமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் சிவாஜி. “இத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்...” என்றெல்லாம் பேசியவர், ஜெயலலிதாவை பற்றி எதையும் சொல்லவில்லை. இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அம்மு பாவம்.. நல்ல பொண்ணு. ஏதோ சேர்வார் சேர்க்கை சரியில்லை. அதான் இப்படி செய்யுது..” என்று மனதில் இருந்ததை பளிச்சென்று சொன்னார் சிவாஜி..!

ஏற்கெனவே சிவாஜி, ஜெயலலிதாவை விமர்சிக்காமல் தவிர்ப்பது பற்றி கோபத்தில் இருந்த ஆர்.எம்.வீரப்பன், இதைக் கேள்விப்பட்டு இன்னமும் கடுப்பாகி, சிவாஜி தேர்தல் செலவுகளுக்காகக் கேட்டிருந்த பணத்தினை கொடுக்க வேண்டாம் என ராமசாமி உடையாரிடமும், சைதை துரைசாமியிடமும் சொல்லிவிட்டாராம்.. தொலைந்தது கதை..!

கடைசி நேரத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு எதிரேயிருந்த சிவாஜி கார்டனில் ஒரு பகுதியை விற்று 5 கோடி ரூபாய் அளவுக்கு செலவுகளைச் செய்தார் சிவாஜி. அத்தனையும் காலி..!

பிறிதொரு முறை ஒரு திருமணத்தன்று மூப்பனாரின் அருகில் அமர்ந்திருந்தபோது “போச்சு போச்சு.. 5 கோடி போச்சு..” என்று உச்சுக் கொட்ட மூப்பனார் சிவாஜியின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனது வரலாற்றுச் சம்பவம்..! 


நடிக்கத் தெரிந்தவர்கள் நடிக்கலாம். அரசியல் செய்யத் தெரிந்தவர்கள் அரசியல் செய்யலாம். இரண்டும் தெரிந்தவர்கள் இரண்டையும் செய்யலாம் எம்.ஜி.ஆரை போல். தெரியாதவர்கள் தெரிந்ததை மட்டும் செய்யலாம். இதற்கு முழு முதற் உதாரணம் நடிகர் திலகம் சிவாஜிதான்..!