Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts

அவன்-இவன் - சினிமா விமர்சனம்

18-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரஜினியின் ‘எந்திரன்’ திரைப்படத்திற்குப் பின்பு தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு இத்திரைப்படத்திற்குத்தான். சென்னையில் முதல் மூன்று நாட்களுக்கான முன் பதிவு முழுமையாக நிரம்பியுள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் மகி்ழ்ச்சியில் திளைக்கின்றன.

தமிழ்ச் சினிமா காட்ட மறுத்த, மறுக்கும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை படம் பிடித்துக் காட்டுவதே பாலாவின் தனித்துவம்..! அந்த வகையில் இதுவும் ஒரு தனித்துவமான படம்தான்..!

விசுவாசம்.. இதுதான் பாலா இதுவரையிலும் எடுத்த நான்கு திரைப்படங்களில் கடைசி மூன்று படங்களின் முடிச்சு. இந்த ஐந்தாவது படத்திலும் இதுதான் மூக்கணாங்கயிறு..!


மணப்பாறை ராம்ஜி நகரை போன்று, ஊரே திருடர்களாக இருக்கும் ஒரு குக்கிராமம். இக்கிராமத்தை உள்ளடக்கிய கமுதிக்குப்பத்தின் தற்போதைய ஜமீன்தாரர் ஜி.எம்.குமார் என்றும் ஹைனஸ். தனது அரண்மனையையும், இம்பாலா காரையும் வைத்தே ஜமீன் அந்தஸ்தை ஓட்டி வரும் இவரின் செல்லப் பிள்ளைகள் அண்ணன், தம்பிகளான விஷாலும், ஆர்யாவும்..

இறைச்சிக்காக மாடுகளை கேரளாவுக்குக் கடத்தும் வில்லனை ஜமீன், தனது செல்வாக்கை வைத்து போலீஸில் காட்டிக் கொடுக்க.. அந்த வில்லன் பதிலுக்கு ஜமீனை மிகக் கொடுமையான முறையில் கொலை செய்ய.. வழக்கமான பாலாவின் ஹீரோயிக்கள் விசுவாசம் என்னும் கேடயத்தைத் தூக்க.. அவன்-இவன்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் இறுதிக் காட்சி..!

இப்படத்தில் கதை என்பதே இல்லை என்பதுதான் இப்படத்தின் சிறப்பு..! சில சம்பவங்களின் தொகுப்புதான் இத்திரைப்படம்..!

திருடர்கள் பரம்பரையில் வந்த இவர்களின் தந்தையின் இரு தார சக்களத்தி சண்டையில் சிக்கியிருக்கும் விஷால், ஆர்யாவின் சமூகத்தைக் காட்டுகின்ற நோக்கில், இங்கே நாம் அதிகம் கண்டு கொள்ளாத நமது சக மக்கள் இன்னமும் நிறைய பேர் உள்ளார்கள் என்பதையும் பாலா சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் இதுபோல் ஜமீன் குடும்பம் தற்போது எங்கே உள்ளது என்று தேடித்தான் பார்க்க வேண்டும். ஒரு வேளை இல்லாத ஒன்றை பாலா இருப்பதுபோல் வலுக்கட்டாயமாக சுவையுடன் நமக்குள் திணிக்கிறாரோ என்றும் தோன்றுகிறது..!

எந்த ஊரில் இதுபோல் ஜமீன்தாரை தேரில் உட்கார வைத்து ஊர் மக்கள் இழுத்து வருகிறார்கள்..? ஒரு காலத்தில் என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போதைய நிலைமையில் எடுத்துக் காட்டுவது கொஞ்சம் அதிகப்படியான உருவாக்கமாகத்தான் தெரிகிறது.. இதனை ஜமீனாக எடுத்துக் கொள்ளாமல் தாதாயிஸமாக காட்டியிருந்தால்கூட கொஞ்சம் ஏற்றுக் கொண்டிருக்கலாம்..!

வழக்கமான பாலாவின் கதாநாயகர்களைப் போல விஷாலும், ஆர்யாவும் எதையும் செய்வார்கள் என்கிற பாணியிலேயே நம்மைத் துவக்கத்திலேயே பழக்கப்படுத்துகிறார்கள்..! ஆனால் விஷாலின் கேரக்டர் ஸ்கெர்ச் மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது..!

விஷாலுக்கு நிச்சயமாக இதுதான் முதல் திரைப்படம். அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.. கிட்டத்தட்ட அரவாணியைப் போன்ற அவருடைய நடை, உடை, பாவனைகளுக்குப் பதிலாக, அவர் நாடகத்தில் ஸ்திரீ பார்ட் ஏற்பவராக இருப்பதால் அது போன்றே இருக்கப் பழகுகிறார் என்பதெல்லாம் நம்மை நம்ப வைக்க செய்திருப்பதாகவே தோன்றுகிறது..!

படத்தின் பல குறியீடூகளுக்கு விஷால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்..! ஆர்யாவால் பல முறை அவமானப்படுத்தப்பட்டும், எதுக்கும் லாயக்கில்லை என்றெல்லாம் குத்திக் காட்டப்பட்டும் குலத் தொழில் செய்ய துணிவில்லையென்றும் சொல்லப்படும் விஷால்தான், ஆர்யாவை வனத்துறை காவலர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்..!

காட்டாற்றின் கீழே அவ்வளவு பெரிய மரத்தில் அம்மணமாகத் தொங்கும் ஜமீனின் உடலைப் பார்த்து மயங்கி விழுவது ஆண் மகன் ஆர்யாவாகவும், கதறலுடன் அந்த மரத்தின் மீதேறி ஜமீனின் உடலை நீரில் விழுக வைத்து பின்னர் தண்ணீரிலிருந்து தூக்குவது ஸ்திரீ பார்ட் விஷாலாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது  குறியீடாக இல்லாமல் வேறென்ன..?

காலம் முழுக்க திருடனாக இருந்தவன்  வில்லனிடம் அடிபட்டு விழுக.. மேக்கப் போடும் கலைஞனாக அதுவும் பெண்ணாக உணரப்பட்டவன்தான், தனது விசுவாசத்தைக் காட்டும்விதமாக பகைவனைப் பழி தீர்க்கிறான்.. உச்சபட்ச குறியீடு இதுதான்..!

பெண் போல் இருக்கிறானே என்றெல்லாம் நம்மிடையே ஒரு எண்ணத்தை விதைத்துவிட்டு போலீஸ்காரியுடன் அவரது காதலைத் துவக்கி வைத்த சிறிது நேரத்திலேயே, அந்த கேரக்டர் மீதான நமது பரிதாப உணர்வு காணாமல் போய்விடுகிறது.. ஜமீன் சொல்வதைப் போல விஷால் இதற்குப் பின்பு நல்ல கலைஞனாகவே உணரப்படுகிறார். இது சூர்யா முன்னிலையில் அவர் காட்டும் நவரச நடிப்புணர்ச்சியின் மூலமாக உணர்த்தப்படுகிறது..!

முதல் குத்துப் பாடலில் ஆடுகின்ற விஷாலின் நடனம் நிச்சயமாக இந்தாண்டு முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் முதலிடத்தில் இடம் பிடிக்கப் போகிறது..! அசத்தல் நடனம்..! அரவாணிகளுடன் இணைந்து ஆடிய ஆட்டம் என்றாலும் பாலாவின் தனித்துவம் வாய்ந்த நடனக் காட்சியில் இதுவும் ஒன்று. இதுவே வேறொரு இயக்குநராக இருந்தால் குளோஸப் வைத்தே கொன்றொழித்திருப்பார்கள்..! மிகச் சிறந்த நடன இயக்கம்..!

விஷாலின் மொன்னை நடிப்பை ‘சிவப்பதிகாரம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பார்த்து நொந்து போயிருந்த என்னைப் போன்ற தமிழ் ரசிகர்கள், நிச்சயம் இந்தப் படத்திற்காக அவரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடலாம்..!

காவல்துறையினர் கொடுக்கும் விருந்திற்காக ராமராஜன் உடையில் ஸ்டைலாக வந்திறங்கும் விஷால், தனது காதலியின் பின்னால் ஒய்யாரமாக நடந்து செல்வாரே.. அந்த ஒரு ஷாட்டே டாப் கிளாஸ்..! இந்தக் கல்யாண மண்டபத்தில் தண்ணியடித்துவிட்டு அவர் செய்கிற அலப்பறைகள் எதுவும் வீணாகவில்லை. விஷாலா இப்படி என்று நிறையவே யோசிக்க வைத்திருக்கிறார் பாலா.

போலீஸ்காரியின் வீட்டில் திருட  வந்து மாட்டியவுடன் தனது குரலை டக்கென மாற்றிக் கொண்டு உதார் விடுவது.. சித்தியும், ஆர்யாவும் தன்னைத் தி்ட்டித் தீர்க்கும் காட்சியில் முகத்தாலேயே முறைப்பை உணர்த்துவது என்று விஷாலை பாராட்ட வேண்டிய காட்சிகள் நிறையவே..!

இந்தப் படத்தில் ஒவ்வாமையாக எனக்குத் தோன்றுவது ஆர்யாவின் காதல் காட்சிகள்தான்..! பெண்ணியவாதிகள் இப்படத்தைப் பார்த்து இனி என்ன கருத்து சொல்வார்களோ தெரியவில்லை.. அந்த அளவுக்கு எதனால் காதல் வருகிறது என்பதே தெரியாமல் ஆர்யாவின் ஆண்மைத்தனமான காதல் காட்சிகள் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை..! அதிலும் தனது காதலியை குட்டிக்கரணம் போடச் சொல்லும் காட்சிகள் ரொம்பவே ஓவர்..!

இதற்குப் பதிலாக டூயட் காட்சியில் ஆர்யாவும் பதில் குட்டிக் கரணம் போட்டாலும் இதை காதலியை மகிழ்விப்பதற்காகவே என்று சொல்லி பாலா ஒரு ஆணாதிக்கவாதி என்று குற்றம்சாட்டுபவர்களுக்கு தானே வலிந்து ஒரு வாய்ப்பைக் கொடுத்துவிட்டார்.

கதை இப்படித்தான் என்றெல்லாம் சொல்லப்படாமல் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளையே திரைக்கதையாக்கி அதையே இடைவேளை வரையிலும் கொண்டு சென்றிருப்பதுதான் ஆச்சரியம்..! ஆனாலும் இடைவேளைக்குப் பின்பு கதைக்குள் நம்மையும் இழுத்துக் கொண்டு ஜீவித்திருக்கிறார் பாலா..!

இப்படி கதை எதை நோக்கிப் போகிறது என்கிற விஷயமே இல்லாமல் நகர்த்தியிருப்பதற்கு மிக உதவியாக இருப்பது திரைக்கதையும், வசனங்களும்தான்..! 2 நிமிடங்களுக்கொரு முறை வசனங்களால் தியேட்டர் அதிர்கிறது..!

அதிலும் இதில் இருக்கின்ற வசனங்களையெல்லாம் கேட்டால் படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் தூங்கிவிட்டார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது..! இரட்டை அர்த்த வசனங்கள் என்றால்கூட கள்ளச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போகலாம். ஆனால் இதில் நேரடியான வசனங்களே இப்படித்தான் இருக்கின்றன. அந்தக் கிராமத்து மக்களின் இயல்பான வசனங்களைத்தான் எழுதியிருக்கிறேன் என்று எஸ்.ரா. சொன்னாலும், அனைத்தையும் வெளிப்படையாக்குதல் என்றால் சென்சார்ஷிப் எதற்கு என்ற கேள்வி எழுகிறதே..?

அதிலும் அம்பிகா பேசும் சில வசனங்கள் அதீத ஆபாசத்தன்மை கொண்டவை.. ‘குஞ்சாமணி’, ‘மாவு மாவா போகுது’, ‘நட்டுக்கிட்டு நிக்குது’, ஆர்யா ஜமீனிடம் தண்ணியடித்துவிட்டு பேசும் அந்த ‘ஏ’ ரக வசனங்கள், பெண் போலீஸிடம் பேண்ட்ல ஜிப் இருக்கா...? என்று கேட்பது.. ஆர்யா தனது பின்புறத்தைப் பற்றிப் பேசுவது  என்று பலவும் விசனப்பட வைக்கின்றன.. இந்தப் படத்திற்கு இதெல்லாம் தேவையா என்று..?

இந்தக் குறிப்பிட்ட சமூகம்தான் என்றில்லை.. தரமணி ஏ.சி. அறையில் பொட்டி தட்டுபவன்கூட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசுவான்.. கோபம் வந்தால் எந்தத் தமிழனிடமும் ஆர்யா ஜமீனிடம் உதிர்க்கும் அந்த வசனம்தான், முதல் வார்த்தையாக வெளிவரும். இதில் எந்த ஜாதிக்கார தமிழர்களும் விதிவிலக்கில்லை..! பின்பு எதற்கு இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று சுட்டிக் காட்டி அவர்கள் மீது அசூயையை வரவழைக்க வேண்டும்..? இயல்பை காட்டுவதிலும் இயக்குநர்களிடம் ஒரு அளவுகோல் தேவை.

எஸ்.ரா.தான் இந்த வசனங்களை எழுதினாரா என்று எனக்கு இப்போது சந்தேகமாகவும் இருக்கிறது. பாலாவின் கைவண்ணம் இதில் இருந்திருக்காதா என்றும் யோசனை வருகிறது. இது பாலாவின் மீதிருக்கும் ஒட்டு மொத்தத் திறமை மீதான அபிமானம்.

அதே சமயம் இத்தனை ஆண்டுகளாக எஸ்.ரா.வின் எழுத்தை வாசித்து வரும் ஒரு ரசிகன், இப்படிப்பட்ட வசனங்களின் ஒரு சிறிய முன்னுரையைக்கூட அவரது எழுத்துக்களில் இதுவரையில் வாசித்ததில்லை என்பதால் சட்டென்று ஏற்க முடியாமல் கொஞ்சம் திணறுகிறான்..!

பாத்திரப் படைப்புகளில் காவல் துறையினரை கேலிக்கூத்தாக்கியிருப்பது இத்திரைப்படத்தில் மட்டும்தானா..? நீதிபதியின் வீட்டுக்கு திருடனை அழைத்துச் சென்று பூட்டை உடைக்கச் சொல்லுவது.. ஊரில் திருட்டுக்களே நடக்கக் கூடாது என்றெண்ணி பூஜை செய்வது.. திருடர்களிடமே வந்து கெஞ்சி கூத்தாடுவது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடப்பதுதான். போலீஸ் ஸ்டேஷனிலேயே பூஜை நடத்துவது இங்கே சர்வசாதாரணம்..! ஆக, அப்படிப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரும், போலீஸாரும் இருக்கின்ற சூழலில் நடந்த கதையாகவே இதனை நாம் எடுத்துக் கொள்வோம்..!

பாலாவின் பெர்பெக்ஷன் என்பதே அவருடைய இயக்குதல் மற்றும் படைப்புத் திறனிலும் மேலோங்கியிருக்கும். இதிலும் அவ்வாறே.. அத்தனை நடிகர்களையும் ஒருசேர நடிக்க வைத்திருக்கிறார். உதாரணமாக முதல் குத்துப் பாடல் முடிந்ததும் விஷால் படியேறி ஜமீனிடம் தப்பியோடும்போது படிக்கட்டுகளில் நின்று கூச்சல் போடும் ஆட்டக்காரிகளின் நடிப்பை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.. எந்த வித்தியாசத்தையும் உணர முடியாது..!

ஒட்டு மீசையுடன் ஜமீனாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் முதல் காட்சியிலேயே விஷாலின் ஆட்டத்தைத் தாங்க முடியாத சிரிப்போடு சிம்மாசனத்தின் குறுக்கே படுத்து சிரிப்பதோடு தன்னை வித்தியாசப்படுத்தியிருக்கிறார்..! இதே ஜமீன்தான் அம்மணமாக வில்லனின் முன்பாக கூனிக் குறுகி நடுங்கிய தோரணையில் நிற்பதை பார்க்கின்றபோது அதற்குள் இத்தனையும் நடந்து முடிந்துவி்ட்டதா என்று சட்டென்று யோசிக்க வைக்கிறது திரைக்கதை..! ஜமீனின்  புறாக்களுடனான புலம்பல் தனிமை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம்..!

ஆர்யாவின் அம்மாவாக வரும் பிரபா தனது மகனுக்காக அம்பிகாவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து பேசுவதும், செயற்கரிய செயலைச் செய்து, சுழல் விளக்கு வைத்த காரில் வந்திறங்கிய மகனை ஆட்டம், பாட்டத்தோடு வரவேற்கும் அந்தக் காட்சியும் ரசனைக்குரியது. அந்தம்மா இதைவிட கெட்ட ஆட்டத்தையெல்லாம் தெலுங்கில் நிறையவே ஆடியிருக்கிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..!

இரண்டு ஹீரோயின்களில் மதுஷாலினிக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் போலீஸ்கார ஜனனி ஐயரின் பேச்சைவிட அவரது கண்கள் நிறையவே பேசுகிறது. விஷாலை நடுரோட்டில் வழிமறித்து பேசுவதாகட்டும்.. வாக்கிடாக்கி கேட்டு வீடு தேடி வந்து கெஞ்சுவதாகட்டும் இந்தப் பொண்ணையும் இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் பாலா..!

அம்பிகா பீடி குடிப்பது, சின்னப் பையன் ஜமீனை யோவ் பெரிசு என்று அழைப்பது.. பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இன்ஸ்பெக்டரை அண்ணன் என்று அழைப்பது.. நீதிபதி இன்ஸ்பெக்டரை மிரட்டுவது.. அம்பிகாவும், பிரபாவும் குடும்பத்திற்கென்ற சூழல் வந்தவுடன் இணைந்து பேசுவது என்று பல கலவைகள் பாலாவால் கலக்கப்பட்டிருக்கிறது..

“எனக்கொரு ஆசை சார்.. இந்த லைட் வைச்ச கார்ல ஒரு தடவையாச்சும்..” என்ற வார்த்தையோடு முடித்துவிட்டு அடுத்தக் காட்சியில் அந்தக் காரில் ஆர்யா பயணிப்பது.. ஜமீனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் இடையிடையே பழி வாங்கும் படலத்தைக் காட்டி மிரட்டியிருப்பது, இறுதியில் தேரோடு வில்லனையும் சேர்த்து சொக்கப் பானை கொளுத்துவது என்று எதிர்பாராத சில தருணங்கள் திரைப்படத்திற்கு சுவை கூட்டியிருப்பது உண்மை.

படத்தில் எந்தக் காட்சியாலாவது இயக்கம், நடிப்பு சொதப்பல் என்று சொல்லவே முடியாத அளவுக்கு பாலாவின் மிகத் திறமையான இயக்குதல் தொடர்ந்திருக்கிறது..!

ஒரேயொரு நெருடல்.. கோவிலுக்கே சாமியாய் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த ஜமீன் இறந்தவுடன் ஆர்யா, விஷால் தவிர சுற்றி நிற்கும் மற்ற மக்களுக்கு அந்த எண்ணம் வராதது ஏன் என்றுதான் தெரியவில்லை..

ஜமீனுக்கு அடங்கிய ஊர் மக்கள்.. தெய்வமாக வழிபடும் தன்மை.. தேரில் அமர வைத்து இழுத்து வருவது.. இதெல்லாம் ஆண்டான், அடிமையை, சாதிப் பாகுபாட்டை மீண்டும் எதிரொலிக்கிறது என்றெல்லாம் பல்வேறுவிதமான சர்ச்சைகள்..!

குற்றம், குறை சொல்பவர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. நாம் மறக்க நினைக்கும், இந்தியச் சாதியத்தின் படிமங்களை மீண்டும், மீண்டும் இது பறை சாற்றுகிறது.. இந்துத்துவாவுக்கு மீண்டும், மீண்டும் வால் பிடிக்கிறார் என்றெல்லாம் பாலாவை நோக்கி குற்றச்சாட்டுக்கள் வந்தாலும், இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து அவரும் மறைமுகமாக இதற்கு படத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார்..!

“கும்பிடறேன் சாமி” என்று ஆர்யாவுக்கு வைத்திருக்கும் பெயர்க் குறிப்பு எவனா இருந்தாலும் இனிமேல் எங்களை சாமி என்றுதான் பேச்சுக்காகவாவது அழைக்க வேண்டும் என்கிற அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது..!

சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்துத்துவா என்று அலறித் துடிக்கும் தத்துவ மேதைகளுக்கு உதவியாக, பாலா தான் நம்பும் நாத்திகவாதத்தையும் ஒரு காட்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார். “பக்தனுக்கு என்ன வேண்டும் என்று தெரியாத நீயெல்லாம் ஒரு கடவுளா..?” என்று ஆர்யா மூலமாகக் கேட்கிறார் பாலா.

மாடுகளை இறைச்சிக்காக கடத்துவதைத் தடுக்கும் ஜமீனிடம் வில்லன் கேட்கும் கேள்வி நியாயமானதுதான்.. “குர்பானிக்காக மாட்டை வெட்டித் திங்குறாங்களே.. அவங்களை போய் கேள்வி கேட்டியா நீயி..” என்ற இந்தக் கேள்விக்குள் உணர்த்துகின்ற, உணர்த்தப்படுகின்ற விஷயங்கள் நிறையவே உள்ளன.

நமது பல்வேறு மதங்கள், சமயங்கள், சாதிகள் பின்னிப் பிணைந்திருக்கும் இந்தச் சூழலில் இது போன்ற எதார்த்தவாத கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது கஷ்டம்தான்..! ஒருவருக்கு புனிதமானது மற்றொருவருக்கு பிடிக்காததாக இருக்கிறது..! ஆனால் இவை இரண்டுமே சமூகம் சார்ந்த பழக்கமாக இருப்பதால் இரண்டையுமே நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படியொரு சூழல் இருக்கிறது என்பதைச் சொல்லிக் காட்டுவதாலேயே அவர் அதற்கு ஆதரவானவர் என்று சொல்லி முத்திரை குத்திவிடக் கூடாது..! 

சமூகத்தின் கடைக்கோடியில், பிணியில் சிக்கி, கவனிப்பாறின்றி வாழும் மனிதக் கூட்டங்களின் வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளை மட்டும் இத்திரைப்படத்தில் பிய்த்து, பிய்த்து கொடுத்திருக்கிறார் பாலா. இதில் விபூதியும், சந்தனமும், குங்குமமும் தெளிப்பதோடு கூடவே, மனிதர்களுக்கு பொதுவான ரத்தமும் சிந்தப்படுகிறது என்பதுதான் உண்மை..!

பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!

அவன்-இவன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..!

2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்

06-01-09


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

உயிர்மை பதிப்பக வெளியீட்டில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள எட்டு நூல்களின் வெளியிட்டு விழா நேற்று மாலை 7 மணிக்கு சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலை இயக்குநர் திரு.தோட்டாதரணி, ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான திரு.வெ.இறையன்பு, நாடக இயக்குநர் திரு.முத்துசாமி, எழுத்தாளர் திரு.திலீப்குமார், முனைவர் மணி, தேனுகா, தோழர் சி.மகேந்திரன், சன் செய்திகள் ஆசிரியர் திரு.ராஜா, டாக்டர் ஆர்.திருநாவுக்கரசு, கவிஞர் கெளரிசங்கர், கவிஞர் ரவிசுப்பிரமணியம் இவர்களுடன் புதுமுக எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

திரு.பாரதிமணி அவர்களைப் பற்றி நான் ஏற்கெனவே (இந்தப் பதிவில்)
சொல்லியிருக்கிறேன். தனது 77-வது வயதில் எழுத்தாளராக அவதாரமெடுத்திருக்கும் திரு.பாரதிமணி அவர்கள்தான் நேற்றைய புத்தக வெளியீட்டு விழாவில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்தவர். அவருடைய எழுத்து நடையைப் போலவே பேச்சும் அனைவரையும் நேரத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கட்டிப் போட்டிருந்தது.

அவருடைய பேச்சில் இருந்து சில வரிகளை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்.

“நான் ஒரு நடிகன். ஸ்கிரிப்ட் இல்லாமல் என்னால பேச முடியாது. அதுனால இந்த விழாவுக்கு அழைத்தபோதே என்னை பேச கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருந்தேன். அப்படியிருந்தும் மனுஷ்யபுத்திரன் பலியாடு மாதிரி முதல் ஆளா கூப்பிட்டு பேச வைச்சுட்டாரு..

நான் டில்லியில் இருந்த காலக்கட்டத்தில் தமிழகத்திலிருந்து வரும் அனைத்து பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் எனது வீட்டில் நடக்கும் ‘மண்டகப்படி பூசை'யில் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அப்போது ஒரு முறை டெல்லியில் நடந்த உலகத் திரைப்பட விழாவை பார்ப்பதற்காக எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் வந்திருந்தபோது எனது இல்லத்திற்கும் வந்தார். அதுதான் இவருடனான எனது முதல் சந்திப்பு.

இதன் பின்பு ‘ஊருக்கு நூறு பேர்' என்கிற ஜெயகாந்தனின் கதையை எடிட்டர் லெனின் திரைப்படமாக ஆக்கிய போது அதன் பிரிவியூ காட்சி ‘குட்லக்' தியேட்டரில் நடந்தது. அந்தக் காட்சி முடிந்தபோது பிரபல உலகப் புகழ் பெற்ற ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “நான் ‘மின்பிம்பங்கள்' நிறுவனத்துக்காக 10 எபிசோட் வரக்கூடிய அளவுக்கான டெலிசீரியல் எடுக்கப் போறேன். அதுல நீங்க நடிக்கணும்..” என்று கேட்டுக் கொண்டார். [நானும் அப்போதுதான் ஐயாவைப் பற்றி தெரிந்து கொண்டேன்]

நானும் ஒத்துக் கொண்டு அந்த சீரியலில் நடிப்பதற்காக காரைக்குடிக்கு சென்றபோதுதான் அந்த சீரியலின் கதை, திரைக்கதை, வசனத்தை நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதுகிறார் என்பது தெரிந்தது. இந்த சீரியல் கதை மிகவும் அற்புதமாகவும், அழகாகவும், நேர்த்தியான இயக்கத்திலும் செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர் பல இடங்களில் என்னைச் சந்தித்தவர்கள் அனைவருமே அந்த சீரியலில் நான் நடித்ததை சொல்லி என்னைப் பாராட்டத் துவங்கினார்கள். இத்தனைக்கும் அந்த சீரியல் ‘புகழ் பெற்ற' சன் டிவியில் வரவில்லை.. ராஜ் டிவியில்தான் வந்தது. அதுக்கே இப்படி..?

இந்த சீரியலில் நடித்ததினால்தான் ‘பாபா' படத்திலும் நான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலை தற்செயலாக பார்த்த ரஜினிகாந்த் தொடர்ந்து இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். அவரால் முடியாத நாட்களில் அவருடைய மகள் செளந்தர்யாவிடம் அதனை டேப் செய்து வைக்கச் சொல்லி பின்பு அதனை போட்டுப் பார்த்ததாக ரஜினி என்னிடம் பின்பு சொன்னார்.

‘பாபா' படத்தின் ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனின்போது எனது பெயர் தெரியாமல், அடையாளத்தை மட்டுமே சொல்லி இவர்தான் நமக்கு வேண்டும் என்று ரஜினியே சொல்லியிருக்கிறார். என்னென்னமோ அடையாளமெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் வெரைட்டி டைரக்டரியை பார்த்து என்னை அடையாளம் காட்டி என்னை அழைத்தார் ரஜினி. அங்கேயும் நான் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்ற பிறகுதான் அப்படத்திற்கு வசனம் நம்ம ராமகிருஷ்ணன்தான் என்பது தெரிந்தது.

.......................விருதுகள் என்பதே இறந்த பின்பு கொடுக்கப்படுவது இல்லாட்டி வயசான பின்னாடி கொடுக்கணும் போல் ஆயிருச்சு. க.நா.சு.வுக்கே அவர் இறப்பதற்கு 2 வருஷத்துக்கு முன்னாடிதான் சாகித்ய அகாடமி விருது கிடைச்சுச்சு. அவர் டெல்லிலதான் இறந்தார்.

அவர் இறந்த பின்னாடி சென்னைல இருந்த அவருடைய பொருட்களையெல்லாம் பார்சல் கட்டி டிரெயின்ல டெல்லிக்கு அனுப்பி வைச்சாங்க. நான் டெல்லில அதை ரிசீவ் பண்ணி என் வீட்டுக்கு கார்ல கொண்டு வந்தேன். வீட்டு வாசல்ல காரை சாமானோட நிறுத்திட்டு மறுநாள் காலைல எடுத்துக்கலாம்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள கார்ல இருந்த பொருட்கள்ல சிலது திருட்டுப் போயிருச்சு.. விலை உயர்ந்த அன்பளிப்பு தட்டுக்கள் அப்படி, இப்படின்னு சில.. அதுல என்னோட புகை பிடிக்கிற பைப்பும் சேர்ந்து காணோம்.

ஆனா பக்கத்துலேயே க.நா.சு. வாங்கின சாகித்ய அகாடமி விருதை மட்டும் கைல எடுத்துப் பார்த்தவங்க இது நமக்கெதுக்குன்னு சொல்லி ஓரமாத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க.. அவுங்களே அதை வேணாம்னுட்டு போயிட்டாங்க.

எழுத்தாளர்களை பாராட்ட வேண்டிய இடத்தில், நேரத்தில் பாராட்டியே ஆக வேண்டும். எனது ஆசை என்னன்னா 2009-ல் நாஞ்சில் நாடனுக்கும், 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், 2011-ல் ஜெயமோகனுக்கும் அந்த விருதைக் கொடுக்கணும்..”

இனி நான்..

ஆசை, பேராசை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அந்த விஷயத்தில் இருக்கும் ஆர்வத்தின் சதவிகிதம் எவ்வளவு என்பதில் மட்டுமே. ஆனால் நோக்கம் மட்டும் ஒன்றுதான். ஒரு எழுத்தாளரை சக எழுத்தாளர் பாராட்டுவதில் சதவிகிதம் கணக்கெல்லாம் பார்க்கக் கூடாது என்றாலும், ஒருவரை மட்டும் அல்ல மூவரையும் சேர்த்துச் சொல்லி தமிழுக்கு தொண்டு செய்கிறார்கள். மூவருக்கும் விருது கிடைத்தே தீர வேண்டும் என்று இன்னொரு எழுத்தாளர் சொல்வது அபூர்வம்தான். இப்படி பாராட்டித் தள்ளிவிட்டார் எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்கள்.

அவர் சொல்லியிருக்கும் மூவருமே தமிழில் வருடாவருடம் சிறந்த படைப்புகளை வழங்கியவண்ணமே இருக்கிறார்கள். விருதுக்கு தகுதியானவர்கள்தான்.

வருடாவருடம் எழுதுகின்ற சிறந்த படைப்புகளை வைத்தே சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இனி அவர்கள் அந்தத் தாமிரப் பதக்கத்தைக் குறி வைத்தே எழுதினாலும் சரி.. தமிழுக்கு நல்ல படைப்புகள் கிடைக்கும் என்பதால் அந்த வழியையும் தவறில்லை என்போம். எப்படியோ நமக்கு சிறந்த படைப்புகள் கிடைத்தால் போதும்.

இனி எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய எட்டு நூல்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை : கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட முப்பது சிறுகதைகளின் தொகுப்பு. இது அவருடைய எட்டாவது சிறுகதை தொகுப்பு. விலை. ரூ.180.

காற்றில் யாரோ நடக்கிறார்கள் : சமூகம், கலாச்சாரம், கலை, இலக்கியம், குறித்து இதழ்களிலும் இணையத்திலும் சமீபத்திய ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. விலை. ரூ.170
கோடுகள் இல்லாத வரைபடம் : யுவான் சுவாங், பாஹியான், வாஸ்கோட காமா, மார்கோ போலோ என்று நீளும் புகழ்பெற்ற பதிமூன்று யாத்ரீகர்களை பற்றிய அறிமுக நூல். விலை. ரூ.50
நம் காலத்து நாவல்கள் : பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் குறித்தும், உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகள் குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. உலக இலக்கியம் குறித்து அறிந்த கொள்ள விரும்புகின்றவர்களுக்கான முக்கிய படைப்பிது. விலை. ரூ.175
சித்திரங்களின் விசித்திரங்கள் : வான்கோ, பிகாசோ, ரெம்பிராண்ட். பிரைடா காலோ, பால் காகின், கோயா,டாலி , வெர்மர், டாவின்சி, பால் செசான் என்ற பத்து முக்கிய ஒவியர்களை பற்றியும் அவர்களை பற்றிய திரைப்படங்களையும் அறிமுகம் செய்யும் நவீன ஒவியம் குறித்த புத்தகம். விலை. 60
அதே இரவு அதே வரிகள் : எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய ‘அட்சரம்' என்ற இலக்கிய இதழில் வெளியான நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகளின் தொகை நூல். இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ, கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. விலை. 150
உலக சினிமா : நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான உலக சினிமா புத்தகத்தை தற்போது முழுமையாக மாற்றியமைத்து புதிய படங்கள், புதிய கட்டுரைகளுடன் திருத்தபட்ட விரிவான பதிப்பாக 800 பக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சினிமாவை விரும்புகின்றவர்களுக்கான ரெபரென்ஸ் புத்தகம் இது. விலை. 550.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் : அவருடைய முதல் கதையிலிருந்து 2004 வரை வெளியான 90 கதைகளின் ஒட்டு மொத்த தொகுப்பு. 750 பக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதன் முதல் பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தற்போது செம்பதிப்பாக உயிர்மை வெளியீட்டுள்ளது. விலை. 400