ஈகோ - சினிமா விமர்சனம்

06-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஈஸ்வர்-கோமதி என்கிற ஹீரோ-ஹீரோயினின் பெயரைச் சுருக்கி அதை வைத்தே படத்தின் பெயரையும் குறிப்பிட்டு வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வகையில் இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்..!


ஈகோ என்னும் தன்மான கெளரவம் யாருக்கிடையில் இருக்கும்..? இருக்க வேண்டும்..? காதலர்கள்.. தம்பதிகள்.. வேலை செய்யும் இடத்தில் சக வேலையாட்களிடம்.. உற்றார், உறவினர்களிடம்.. நண்பர்களிடத்தில்... என்று தங்களுக்குத் தெரிந்த சிலரிடம் மட்டுமே சிலருக்கு வரும் கெளரவப் பிரச்சினைக்கு பெயர்தான் ஈகோ என்று நான் தெரிந்து வைத்திருக்கிறேன்..!

ஒரு திருடனுக்கும், பறி கொடுத்த பெண்ணுக்கும் இடையில் ஈகோ வருமா..? சரி.. கதை அதுவல்ல.. காதலர்களுக்குள் ஏற்படுகின்ற ஈகோ என்று சொன்னால்.. ஸாரி.. அப்படியொரு கதையே படத்தில் இல்லை..!

ஆனால் படத்தின் பிளாட்.. அடித்தளம் ரொம்ப, ரொம்ப சுவாரசியமானது..!  4 திருடர்கள்.. அதில் ஹீரோ, அவரது நண்பனான 2 திருடர்கள் மட்டும் பெரும் தொகையுடன் எஸ்கேப்பாக.. மீதி 2 திருடர்கள் அவர்களைத் தேடுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் டிரெயினில் மறைந்திருக்கும் நேரத்தில் ஹீரோயினிடம் சிக்குகிறார்கள். ஹீரோயினின் மோதிரத்தை வேறொருவன் திருடப் போய்.. அதை ஹீரோ மீட்டு வருவதற்குள் டிரெயின் போய்விடுகிறது..! கூடவே ஹீரோவின் பணப்பையும்தான்..!

மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னுடைய பணப் பையை வாங்கிச் செல்ல ஹீரோயினின் ஊருக்கு தன் நண்பனுடன் வருகிறார் ஹீரோ. ஹீரோயின் தன் காதலனைச் சந்திக்கப் போவதாக தன் வீட்டில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஓடியிருப்பதால் அந்த வீடு கொதிப்பாக இருக்கிறது. இவர்கள் மிகச் சரியாக கையில் மோதிரத்துடன் போய் நிற்க.. இந்த ஹீரோதான் மகளின் காதலன் என்று ஹீரோயினின் வீட்டார் நினைத்து.. முதலில் அடிக்கப் பார்த்து.. பின்பு போனில் அழும் மகளின் பிடிவாதத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார்கள். நேரில் வந்து பார்க்கும் ஹீரோயின் டிரெயின் திருடனை தவறுதலாக தனது காதலனாக தன் குடும்பத்தினர் நினைத்துவிட்டார்களே என்று குழம்புகிறாள்..! முழு நீள நகைச்சுவை தர்பாரே நடத்த வேண்டிய அருமையான இடத்தில்.. சொதப்பலான நடிப்பு.. சொதப்பலான இயக்கம்.. சொதப்பலான திரைக்கதையால் மொத்தமாக கோட்டைவிட்டுவிட்டார்கள்..!

முதல் ரீலில் இருந்து பேசுகிறார்கள்.. பேசுகிறார்கள்.. பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். எனது பதிவினைப் போலவே பக்கம், பக்கமான வசனங்கள்..! ஹீரோவைவிடவும் அதிகமாக இம்சித்திருப்பது ஹீரோவின் நண்பனாக நடித்திருக்கும் பாலாதான்..! அவர் பாவம் என்ன செய்வார்..? இயக்கியிருப்பது இயக்குநர்தானே..!? அவரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்..!

கேரக்டர் ஸ்கெட்ச்சில் இப்படியொரு லூஸுத்தனமான பேமிலியை வேறெந்த படத்திலும் பார்க்கவே முடியாது..! அரிவாள் துணையில்லாமல் அந்த வீட்டு ஆம்பளைங்க நடமாட மாட்டாங்க போலிருக்கு.. வீட்டுப் பொம்பளைங்க்கூட நீங்க ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை.. இவங்களை வெட்டித் தள்ளுங்கன்னு சொல்றாங்க..! என்னதான் காமெடி படம்ன்னாலும் எவ்வளவுதான் இடியைத் தாங்குறது..?

ஹீரோவும், நண்பனும் ஹீரோயினின் வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற திரைக்கதையின்படியே நண்பன் பாலா டயலாக்கை அள்ளி வீசிக் கொண்டேயிருக்க.. அது அத்தனைக்கும் அந்தக் குடும்பத்தினர் எதிர் டயலாக்கை அள்ளி வீசுவதும்.. போதாக்குறைக்கு அந்த வீட்டின் வாண்டுகள்கூட கொலை பண்ணிட்டு கடைசியா இந்த நாய்க்குத்தான் எலும்பை போடுவோம் என்று சொல்வதெல்லாம் காமெடியில்கூட ஒத்துக் கொள்ள முடியாதது..! 

உங்க பொண்ணோட லவ்வர் நான் இல்லை.. மோதிரத்தைக் கொடுத்திட்டு என்னோட பணப் பையை வாங்கிட்டு போக வந்திருக்கேன்னு சொல்லிட்டாலே அங்கேயே கதை முடிஞ்சிருக்கும்..! வாசல்ல இருந்து வீட்டுக்குள்ளாற போறதுவரைக்கும் அந்த காமெடியன் பாலா பேசுற டயலாக்குகள் இருக்கே.. உஷ்.. முடியலை.. இன்னும் ஷார்ப்பா எடிட் செஞ்சிருக்கலாம்.. ஒரே டயலாக்கை 3, 4 தடவை திருப்பித் திருப்பிப் பேசுறாங்க மை லார்ட்..!

ஹீரோயின் திரும்பி வந்த பின்னாடி என்னோட லவ்வர் இவன் இல்லை.. புரிஞ்சுக்குங்கப்பா என்று ஹீரோயின் கெஞ்சுவதை ஏதோ டிஸ்கவரி சேனல் பார்க்குற மாதிரி பீலிங்கோட மொத்த பேமிலியும் கேக்குறதையும், பேசுறதையும் பார்த்தா.. திரைக்கதைய ரூம் போட்டு யோசிக்கும்போது இன்னும் கொஞ்ச நாள் சேர்த்து வாடகையைக் கட்டிருக்கலாம்னு தோணுது..! 

அப்படியிருந்தும் மகளின் மன்னிப்பு குரலை போனில் கேட்டவுடன் அப்பா கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்வது..! ஹீரோவிடம் மன்னிப்பு கேட்பது.. ஹீரோயினை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஹீரோவுடன் கல்யாணம் என்று சொல்வது.. பணத்தை பீரோவில் இருந்து எடுத்து வரச் சொல்வது.. அப்பா என்று பாசத்துடன் அழைத்தவுடன் குடும்பமே பாசத்தைக் கொட்டுவது.. லவ்வரை பார்த்தவுடன் ஹீரோயின் ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக் கொள்வது.. அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சண்டை பெரிதாகி இருவரும் பிரிவது.. அதற்கடுத்து ஹீரோ-ஹீரோயின் காதலை வெறுமனே போட்டோக்களை காட்டியே முடித்துவிடுவது.. என்று சிற்சில இடங்களில் சின்ன சின்ன டிவிஸ்ட்டுகள் நன்றாகத்தான் இருந்தன..!

ஆனால் இதனை ரசிக்க வைப்பதற்கான இயக்கம் இல்லாததால்  படம் ஒட்டு மொத்தமாய் பார்த்தால் ஏதோ மேடை நாடகத்தைவிடவும் சுமாராக இருந்த்து போன்ற பீலிங்குதான் வருகிறது.. போதாக்குறைக்கு இந்தப் படத்தோட பின்னணி இசையை கேட்டீங்கன்னா அப்படியே அசந்திருவீங்க..! அப்படியொரு தெய்வீக ராகம்..! தெருவோரத்துல நடக்குற வள்ளி திருமண நாடகத்துலகூட இதைவிடநல்லா போடுவாய்ங்கப்பா..! என்னவொரு டிராஜடி..! 

இயக்குநர் சக்திவேலுவும், கேபிள் சங்கரும் வசனங்கள் என்று போட்டுக் கொண்டதால் இருவரில் யாரைத் திட்டுவது என்றே தெரியவில்லை..! முக்காலே மூணு வீசமாக இருக்கும் இரட்டை அர்த்த வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்..! சிற்சில இடங்களில் மட்டுமே வசனத்தால் நகைக்க முடிந்தது..! 2 மணி நேர படத்தில் நான் சிரித்தது “யோவ், சும்மா இருய்யா டுபாக்கூர் போலீஸு...” என்று ஹீரோயின்  தனது மாமாவை பார்த்துச் சொல்லும்போதுதான்..! 

சுமாரான முகம் ஹீரோவுக்கு..! அதைவிட சுமாரான முகம் ஹீரோயினுக்கு..! இவர்களுக்கு ஹீரோயினின் நண்பன் பாலா பரவாயில்லையோ என்று தோன்றுகிறது..! ஹீரோயின் இழுத்து இழுத்து வசனத்தை பேசும்போது பார்க்கவே பாவமாக இருக்கிறது..! இன்னும் கொஞ்சம் டிரெயினிங் கொடுத்திருக்கலாம்..! 

டூயட் பாடல் காட்சிகளை படத்தின் நீளம் கருதி கட் செய்திருக்கிறார்கள்.. 2 பாடல்களை மட்டுமே விட்டு வைத்திருக்கிறார்கள். படத்தையே பல முறை டிரீம் செய்ததாக தயாரிப்புத் தரப்பினர் கூறினார்கள்..! அப்படி, இப்படி செய்தும் படத்தில் இதைத்தான் தேற்ற முடிந்தது எனில், முழுமையாக பார்க்க நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்..? தப்பித்தோம்..!

சில நல்ல, இயக்கத் திறனுடன் கூடிய படங்களை பார்த்துத் தொலைத்துவிட்டதால், இது போன்ற அரை சதவிகித இயக்கத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைக்கிறேன்..! வேறு வழியில்லை..! ஸாரி இயக்குநர் சக்திவேல் ஸார்..! அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!

போறவங்க போய்க்குங்க..!

8 comments:

Manimaran said...


//இயக்குநர் சக்திவேலுவும், கேபிள் சங்கரும் வசனங்கள் என்று போட்டுக் கொண்டதால் இருவரில் யாரைத் திட்டுவது //

//போறவங்க போய்க்குங்க..!// .... ரைட்டு... .ரொம்ப நன்றிங்ண்ணா ... :-)

வவ்வால் said...

அண்ணாச்சி,

ஆனாலும் அநியாயத்துக்கு வேகமா இருக்கீங்க, அடுத்தவாரம் புதுயுகம் தொலைக்காட்சில போடப் போறப்படத்துக்கு இந்த வாரமே விமர்சனம் எழுதி யாரும் ட்டிவில கூட பார்க்காம செய்துட்டீங்களே, இது உங்களுக்கே நியாயமா தெரியுதா? என்ன கொடுமை சார் இது அவ்வ்!

////இயக்குநர் சக்திவேலுவும், கேபிள் சங்கரும் வசனங்கள் என்று போட்டுக் கொண்டதால் இருவரில் யாரைத் திட்டுவது //

டிவிடி பார்த்துட்டு சினிமாவில எல்லாந்தெரியும்னு நினைச்சிக்கிட்டால் இப்படித்தான் ஹாஃப்பாயிலாக ஆவும் :-))

Kabilan said...

அண்ணா இந்த படம் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த கொரியன் படம் (to Beautiful to Lie) கதை மாதிரி இருக்கு பார்க்க வேண்டும்.

Ponchandar said...

இந்த படம் கொரிய படமான Too Beautiful to lie என்ற படத்தின் தழுவல் என நினைக்கிறேன். கொரிய படத்தில் நாயகி மோதிரத்துடன் நாயகன் வீட்டுக்குச் செல்கிறாள்...பிறகென்ன ஈகோ மாதிரிதான்....


உண்மைத்தமிழன் said...

[[[Manimaran said...

//இயக்குநர் சக்திவேலுவும், கேபிள் சங்கரும் வசனங்கள் என்று போட்டுக் கொண்டதால் இருவரில் யாரைத் திட்டுவது //

//போறவங்க போய்க்குங்க..!// ....

ரைட்டு... .ரொம்ப நன்றிங்ண்ணா ... :-)]]]

வசனங்கள் நல்லாத்தான் இருக்கு..! ஆனா அளவுக்கதிகமான வசனங்கள்.. ரிப்பீட்டட் நிறைய இருக்கு. அதைத்தான் குறையா குறிப்பிட்டுச் சொன்னேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

ஆனாலும் அநியாயத்துக்கு வேகமா இருக்கீங்க, அடுத்த வாரம் புதுயுகம் தொலைக்காட்சில போடப் போற படத்துக்கு இந்த வாரமே விமர்சனம் எழுதி யாரும் ட்டிவில கூட பார்க்காம செய்துட்டீங்களே, இது உங்களுக்கே நியாயமா தெரியுதா? என்ன கொடுமை சார் இது அவ்வ்!]]]

என்ன இருந்தாலும், நமக்குன்னு ஒரு கடமை இருக்குல்ல..? அதை மறந்திடக் கூடாதுல்ல.. அதுக்காகத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Kabilan said...

அண்ணா இந்த படம் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த கொரியன் படம் (to Beautiful to Lie) கதை மாதிரி இருக்கு பார்க்க வேண்டும்.]]]

போச்சுடா.. இது வேறய்யா..? நானும் அந்த கொரியன் படத்தை இதுவரைக்கும் பாக்கலை. பார்த்திட்டுச் சொல்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

இந்த படம் கொரிய படமான Too Beautiful to lie என்ற படத்தின் தழுவல் என நினைக்கிறேன். கொரிய படத்தில் நாயகி மோதிரத்துடன் நாயகன் வீட்டுக்குச் செல்கிறாள். பிறகென்ன ஈகோ மாதிரிதான்.]]]

ம்ஹும்.. வில்லனுக்கு வில்லன் நிறைய பேரு இருக்கீங்கய்யா ஊருக்குள்ள..?!!!!!!!!!!