தீக்குளிக்கும் பச்சை மரம் - சினிமா விமர்சனம்

21-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில படங்களின் போஸ்டரை பார்த்தே அதன் உள்ளடக்கத்தை ஓரளவுக்கு ஊகித்துவிடலாம். சில படங்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே எடுக்கப்பட்டிருக்கும். பல படங்கள் வாயாலேயே சீன் ஓட்டியவையாக இருக்கும்..!  இதில் நடுவாந்திரமாக இப்படியெல்லாமா எடுப்பாய்ங்க..? என்று யோசிக்கவும், திட்டவும்.. கண்டிக்கவும் வைக்கும்..! அப்படியொரு படம்தான் இது..!


கேரளாவில் நடந்த உண்மைக் கதையாம்.. நம்ப முடியவில்லை..! பள்ளிப் பருவத்தில் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்த்திருத்த மையத்திற்கு அனுப்பப்பட்டு இதனாலேயே தனது குடும்பத்தினரை இழக்கும் ஹீரோ, வெளியில் வந்து தனது சொந்தக் கிராமத்திலேயே பொழப்பை ஓட்டுகிறார். காதலிக்கவும் செய்கிறார். கல்யாணமும் செய்த பின்பு சோத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல், மார்ச்சுவரியில் பிணம் அறுக்கும் வேலைக்குப் போகிறார். அங்கே நடக்கும் சில கசமுசாக்களால் பாதிக்கப்பட்டு அல்லல்படுகிறார்..! தப்பித்தாரா அல்லது அதிலேயே மூழ்கினாரா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

தப்பித் தவறிக்கூட குடும்பத்தினருடன் போய்விடாதீர்கள்..! சினிமா துறைக்குள்ளேயே இருந்து கொண்டு இப்படிச் சொல்வதற்கு மிகுந்த தயக்கமும், சங்கடமுமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை.. குழந்தைகள் கண்டிப்பாக பார்க்கக் கூடாத படம்..!  ஏ சர்டிபிகேட்டுதான் கிடைக்கும். நிச்சயம் கூட்டம் வராது.. படம் பல்டியடிக்கும் என்று தெரிந்தே இப்படி படம் எடுத்திருக்கும் இதன் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் என்னவென்று சொல்வது..?

இடைவேளை வரைக்கும் படம் நன்றாகத்தான் இருக்கிறது..! ஹீரோவின் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள்.. கிராமத்து பள்ளிக்கே உரித்தான நேட்டிவிட்டியும், அதன் ஹெட்மாஸ்டரின் பேச்சும், நடத்தையும் அச்சு அசலாக இருந்தது..! நிழல்கள் ரவியின் வீட்டுப் பிரச்சினை.. அவர் தம்பியின் மெளனமான நடத்தை.. அண்ணனுக்கு அடக்கமான தம்பியாக காட்ட விரும்பி இருட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில் தம்பியின் முக பாவனைகளை துழாவித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.. இவரது  தொண தொண மனைவியாக வரும் ரேகா சுரேஷின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதுதான்..!

கரும்புத் தோட்டம் பற்றிய விவரங்கள்.. அதன் வேலையாள் டி.பி.கஜேந்திரனின் சில காட்சி நடிப்பு.. திருட்டுத் தொழிலுக்கு அழைத்தும் போகாமல் ஹீரோ சொந்த ஊருக்குத் திரும்புதல்.. “திரும்ப எங்களை கூப்பிடுவடா” என்று தோழர்கள் சொல்லும்போதே கதை அங்கேதான் செல்லும் என்பது தெரிகிறது. ஆனால் அந்த சஸ்பென்ஸ் நிறைந்த சந்திப்பு எதிர்பாராததுதான்..! தண்ணியடித்துவிட்டு பேசுவது போன்ற நடிப்பு என்றால் நமது நடிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.. இதில் ஹீரோவும், எம்.எஸ்.பாஸ்கரும் செய்யும் அலப்பறை அதைத்தான் காட்டுகிறது..! 

கொலையை தற்கொலையாக மாற்றும் டாக்டர்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக செய்யும் மருத்துவக் கொலைகள்.. பிணத்துடன் உறவு கொள்ள விரும்பும் வாடிக்கையாளரான அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.. இதற்கு ஒத்துப் போகும் கம்பவுண்டர் என்று இரண்டாம் பகுதி முழுக்கவே ஹெவி வெயிட்டான பீலிங்ஸ்..!

உடல் உறுப்புகள் கடத்தல்.. அல்லது இன்சூரன்ஸுக்காக கொலை.. பணத்துக்காக பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டை மாற்றுவது என்பதெல்லாம் சாதாரண விஷயங்கள்தான். இவற்றுக்கு இத்தனை கொடூரமான காட்சிகள் தேவைதானா என்பதை அந்த இயக்குநர் ஏன் சிந்திக்கவில்லை..? இதன் காரணமாகவே அந்தக் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. பார்க்கவே கொடூரமாக இருக்கிறது..!

பிணத்துடன் உறவு கொள்ள நினைக்கும் இன்ஸ்பெக்டரின் எண்ணத்தை ஒரு பார்வையிலோ அல்லது ஒரு செய்கையிலோ காட்டி முடித்திருக்கலாம். அதனை இத்தனை விஸ்தாரமாக காட்டித் தொலைத்தால், படம் பார்க்க வந்தவனெல்லாம் சைக்கோவாக மாறிவிட மாட்டானா..?

கிளைமாக்ஸ் அதைவிட கொடுமை..! மார்ச்சுவரி அறை ரத்தக் சகதியாகும் அளவுக்கு கொலைகள் நடக்கும் அந்த கிளைமாக்ஸ்வரைக்கும் தியேட்டரில் யார் உட்கார்ந்திருக்கப் போகிறார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ..? படத்தின் முடிவில் என்ன சொல்ல வந்திருக்கிறார்..? என்ன சொல்லியிருக்கிறார்..? என்று எதுவும் புரியும்படி இல்லை..! சீக்கிரமா எந்திரிச்சு ஓடிருவோம் என்பது மட்டும்தான்  புரிந்தது..!


ஹீரோயின் சரயூ.. மலையாளப் பொண்ணு.. வழக்கம்போல கண்ணு ரெண்டும் பளபள.. கிராமத்து வேடம் என்பதால் அதிகம் மேக்கப்பில்லாமல் நேட்டிவிட்டியோடு ஒட்டியிருக்கிறார்.. நடிப்பை.. வேறு படத்தில் நடித்து முடித்த பின்பு பேசலாம்..! ஹீரோ பிரஜின்.. நிச்சயமாக நடித்திருக்கிறார்தான்.. ஆனால் எல்லாம் விழலுக்கு இழைத்த நீர்..! இப்படியெல்லாம் நடித்தால் படம் அதிக மக்களிடம் ரீச்சாகாது..! படத்தில் சம்பந்தப்பட்டவர்களும் பேசப்பட மாட்டார்கள்..! பிரஜினின் நடிப்பைக் குறிப்பிட்டுப் பேச அடுத்து வரவிருக்கும் நேற்று இன்று படத்திற்காக காத்திருப்போம்..! ஹீரோயினின் அக்கா கேரக்டரும், இவளுக்காக காத்திருக்கும் பிரஜினின் நண்பன் கேரக்டரும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள்..! அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள்கூட ரசனையாகத்தான் இருந்தது.. கதையை அப்படியாவது கொண்டு போயிருக்கலாம்..!

ஆனால் திரும்பத் திரும்ப பிணங்களை அறுப்பது.. எப்படி, எந்த ஆயுதத்தை வைத்து அறுப்பது..? அதற்கு முன் எவ்வளவு சரக்கு அடிப்பது..? என்று தமிழ்ச் சினிமா ரசிகனுக்கு கிளாஸ் எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!


ரொம்ப வருடங்கள் கழித்து மது அம்பட்டின் ஒளிப்பதிவை பார்த்த திருப்தி மட்டுமே கிடைத்திருக்கிறது.. உடல் நலக் குறைவால் சில வருடங்கள் வேலை செய்யாமல் இருந்த மது அம்பட், இந்தப் படத்தின் கதைக்காகவே இதனை ஒத்துக் கொண்டதாகச் சொன்னார். சிலரை புரிந்து கொள்ளவே முடியவில்லை..! 

கதை என்னவோ வெள்ளித்திரையில் இதுவரையில் சொல்லப்படாத கதைதான்.. ஆனால் திரைக்கதைதான் நூற்றுக்கு நூறு ரியலிஸமாக காட்டுகிறோம் என்ற போர்வையில் முகம் சுழிக்க வைத்திருக்கிறார்கள்..! இன்னும் இந்தக் கதையை வேறு வடிவத்தில் கொடுத்திருக்கலாம் என்பது எனது சிறிய அபிப்ராயம்..! மொத்தமாகவே ரசிக்க முடியவில்லை. 

போவதும், போகாததும் உங்களது இஷ்டம்..!

6 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

//சில வருடங்கள் வேலை செய்யாமல் இருந்த மது அம்பட், இந்தப் படத்தின் கதைக்காகவே இதனை ஒத்துக் கொண்டதாகச் சொன்னார். சிலரை புரிந்து கொள்ளவே முடியவில்லை..!
//

அதெல்லாம் புரிஞ்சிட்டால் நீங்க ஏன் இப்படி இருக்க போறிங்க :-))

necrophilia (அ) necromania என ஒரு மனோதத்துவ நோயை அடிப்படையாக வைத்து தமிழில் வந்திருக்கும் முதல் படம் எனலாம், குறிப்பிட்ட வகையில் சரியாக எடுத்திருந்தால் அனேகமா ஏதேனும் விருதுகள் கிடைக்கலாம், சர்வதேச விருதுகள் கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை!

கல்ட் கிளாசிக் வகைப்படங்கள் மேல நாடுகளில் சகஜம் , நம்ம ஊரில் தான் அப்படிலாம் வருவதில்லை, அதற்கான முயற்சிகளில் ஒன்றாக இப்படத்தினை மது அம்பாட் கருதி வேலை செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.

ஜெர்மானிய, ஃபிரஞ்சு மொழிகளில் இன்டிபென்டன்ட் மூவி மேக்கர்ஸ் எடுக்கிற படங்களை பார்த்தீங்கன்னா என்ன சொல்வீங்களோ :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//சில வருடங்கள் வேலை செய்யாமல் இருந்த மது அம்பட், இந்தப் படத்தின் கதைக்காகவே இதனை ஒத்துக் கொண்டதாகச் சொன்னார். சிலரை புரிந்து கொள்ளவே முடியவில்லை!//

அதெல்லாம் புரிஞ்சிட்டால் நீங்க ஏன் இப்படி இருக்க போறிங்க :-))
necrophilia (அ) necromania என ஒரு மனோதத்துவ நோயை அடிப்படையாக வைத்து தமிழில் வந்திருக்கும் முதல் படம் எனலாம், குறிப்பிட்ட வகையில் சரியாக எடுத்திருந்தால் அனேகமா ஏதேனும் விருதுகள் கிடைக்கலாம்.. சர்வதேச விருதுகள் கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை! கல்ட் கிளாசிக் வகைப்படங்கள் மேலநாடுகளில் சகஜம். நம்ம ஊரில்தான் அப்படிலாம் வருவதில்லை. அதற்கான முயற்சிகளில் ஒன்றாக இப்படத்தினை மது அம்பாட் கருதி வேலை செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.
ஜெர்மானிய, ஃபிரஞ்சு மொழிகளில் இன்டிபென்டன்ட் மூவி மேக்கர்ஸ் எடுக்கிற படங்களை பார்த்தீங்கன்னா என்ன சொல்வீங்களோ :-))]]]

அட போங்கய்யா.. இந்தக் கர்மத்தையெல்லாம் சினிமாவா எடுத்து விருது வாங்கணுமாக்கும்..? இதுக்கெல்லாம் விருது கொடுத்தானுகன்னா அவங்களும் நட்டு கழண்ட கேஸாத்தான் இருக்கும்..!

குரங்குபெடல் said...

" மொத்தமாகவே ரசிக்க முடியவில்லை.

போவதும், போகாததும் உங்களது இஷ்டம்..! "


இப்டி எல்லாம் எழுதுவதற்கு பதில் . . .

நீ சும்மா இருக்கலாம் அண்ணே . . .

குமாரு போன்ற மொக்கை படங்களை மட்டும்

பாராட்டி விமர்சனம் போட்டு பொழப்பை

ஓட்டு அண்ணே . . .

Nondavan said...

அண்ணாச்சி... இப்படி எல்லாம் படம் வருதான்னு உங்க பிளாக் பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன்...

நீங்களே சொல்லிட்டீங்க, மிக்க நன்றி அண்ணாச்சி...

ஒரு விளம்பரம் இல்லாமல், மக்களை ரீச்சாகாமல், இப்படி சுட்டு தள்ளினா எவன் வருவான்,,,???

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

" மொத்தமாகவே ரசிக்க முடியவில்லை.

போவதும், போகாததும் உங்களது இஷ்டம்..! "


இப்டி எல்லாம் எழுதுவதற்கு பதில் . . .

நீ சும்மா இருக்கலாம் அண்ணே . . .

குமாரு போன்ற மொக்கை படங்களை மட்டும்

பாராட்டி விமர்சனம் போட்டு பொழப்பை

ஓட்டு அண்ணே . . . ]]]

எனக்குப் பிடிக்கலை. அவ்ளோதான்.. நீங்க வேண்ணா பார்த்து உங்களுக்குப் பிடிச்சிருந்தா பாராட்டு எழுதுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி... இப்படி எல்லாம் படம் வருதான்னு உங்க பிளாக் பார்த்துதான் தெரிந்து கொள்கிறேன். நீங்களே சொல்லிட்டீங்க, மிக்க நன்றி அண்ணாச்சி. ஒரு விளம்பரம் இல்லாமல், மக்களை ரீச்சாகாமல், இப்படி சுட்டு தள்ளினா எவன் வருவான்???]]]

எடுத்தா காமெடி எடுங்க.. இல்லைன்னா குடும்பக் கதைகளா எடுங்க.. ரெண்டுங்கெட்டானா எடுத்து ஒரு தோல்வியைக் கொடுத்தீங்கன்னா அது இண்டஸ்ட்ரியை பாதிக்கும்.. இது பத்தி யாரும் யோசிக்க மாட்டேன்றாங்க..!