யமுனா - சினிமா விமர்சனம்

10-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஈ.வி.கணேஷ்பாபு. பல சின்னத்திரை தொடர்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்திருக்கும் நடிகர். தன்னுடைய சின்ன வயதிலேயே குறும்படம் ஒன்றை இயக்கி தேசிய விருதையும் பெற்றவர்.. தனது தணியாத சினிமா தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்வகையில் சினிமாவை இயக்கும் பணியில் ஈடுபட்டு இன்றைக்கு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்..! படம் பரபரப்பாக ஓடுகிறதோ இல்லையோ.. படம் பார்த்தவர்கள் சிறப்பான இயக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது..! 




தான் காதலித்த பெண் சூழ்நிலையால் ஒரு கும்பலிடம் சிக்கித் தவிக்க.. அவளை காப்பாற்ற முயல்கிறார் ஹீரோ. அதில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை..! இந்தப் படத்தின் சஸ்பென்ஸை உடைத்தால் நன்றாக இருக்காது என்றே கருதுகிறேன். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பாருங்கள்..!

யமுனா என்ற ஹீரோயினின் கேரக்டரையே படத்துக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குநர். படம் ஆரம்பிக்கும்போது மெதுவாகவே நகர்கிறது.. சில இடங்களில் திரைக்கதையே சிரிக்க வைக்கிறது.. நாம பார்க்காததா என்றே சொல்லத் தோன்றுகிறது..! சாம்ஸை வைத்துக் கொண்டு இவர்கள் கல்லூரியில் அடிக்கும் லூட்டியை பார்க்கும்போதும், காதலுக்காக ஹீரோ காதலியிடம் மல்லாடும்போதும், இவங்களுக்கு வேற வேலையே இல்லையா என்றும் திட்டத்தான் தோன்றுகிறது.. எல்லாமே அந்த இண்டர்வெல் பிளாக் வரும்வரையில்தான்.. இடைவேளைக்கு பின்பான பகுதியின் திரைக்கதையும், கேரக்டர்களின் அழுத்தமான நடிப்பும்தான் படத்தின் மிகப் பெரிய பலம்.  

பாலுமகேந்திராவின் நடிப்புக் கல்லூரியில் பயின்ற சத்யா என்பவர்தான் ஹீரோ.  பார்த்தவுடனேயே பிடிக்காத ஒரு முகம். ஆனால் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இது அவருக்கு முதல் படம் என்பதால் சொல்லிக் கொடுத்தவரையிலும் இவருடைய நடிப்பை பார்க்கலாம்..!

ரம்யா.. தெலுங்கில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டாம்.. நந்தி விருதும் பெற்றவராம்..! சிறந்த அறிமுகம். வஞ்சகமே இல்லாமல்தான் நடித்திருக்கிறார். கல்லூரி கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் துவங்கி இறுதிக் காட்சிவரையிலும் இவர் இருக்கும் பிரேமில் கண்ணை வெளியே எடுக்க முடியவில்லை..! என்னடா புதுமுகங்களை நடிக்க வைக்குறாங்க என்பவர்கள் இந்தப் படத்தில் இவருடைய நடிப்பையும் கொஞ்சம் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் அம்மணிக்கு தமிழ் சுத்தமாக லேது.. ஆனால் உச்சரிப்பு பலமாக இருக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். டப்பிங் வாய்ஸ் கொடுத்தவருக்கும் எனது பாராட்டுக்கள்..! 

அடிக்கடி சில படங்களில் பார்த்திருந்தாலும் வினோதினிக்கு இந்தப் படத்தில்தான் பெத்த பேரு.. ஆண்ட்டி கேரக்டரில் ஆண்ட்டியாகவே நடித்திருக்கும் இவருக்குக் கொடுத்திருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சும்.. இயக்குநரின் இயக்கமும் இவருக்கு நிச்சயம் பெயரையும், புகழையும் பெற்றுத் தருமென்று நம்புகிறேன்..!


யமுனாவுடன் காரில் போகும்போதும், வரும்போதும் வினோதினியின் பேச்சும், பார்வையும், நடிப்பும் கவர்கிறது.. மெல்லிய வார்த்தைகளில் கோபத்தைக் காட்டி மிரட்டுவது.. அன்பாகப் பேசுவதுபோல கவிழ்ப்பது.. நரேனை வீட்டுக்கு அழைக்க போனில் பேசும் அந்தக் காட்சி.. இப்படி பலவும் அந்தக் கேரக்டருக்கே ஒரு ஊக்கம் கொடுத்திருக்கிறது.. உச்சமான நடிப்பு பாலாசிங்கை கடத்திவரும் காட்சியில் காரின் பேனட்டில் கைகளை விரித்து வைத்துக் கொண்டு கேமிராவுக்கு முகத்தைக் காட்டி புன்முறுவல் பூப்பது.. அம்மணியை தெலுங்கு பக்கம் கொண்டு போய்விட்டா, வில்லி கேரக்டர்ல கலக்கிருவாங்க..! வெல்டன் வினோதினி..!

இப்போதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களின் இசைதான் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று. புதிய இசையமைப்பாளர் இலக்கியன்.. கணேஷ்பாபுவின் ஊர்க்காரராம்.. பால்ய காலத்து நண்பராம்.. நட்புக்காகவும், அவரது திறமைக்காகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள் இயக்குநருக்கு. இப்படியெல்லாம் நண்பர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

வைரமுத்துவின் வரிகள் 6 பாடல்களிலுமே கலக்கியிருக்கிறது..! இதில் ‘டிம்ப டிம்பா’ பாடல் யூடியூபில் சக்கைப் போடு போட்டுள்ளது..! தமிழ்ச் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக சுடுகாட்டில் ஒரு டூயட் பாடலை எடுத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர்.. பாடல் வரிகளை கேட்டால், வைரமுத்துவை திட்டுவதற்கு இன்னும் ஒரு கூட்டம் கிளம்பி வரும் என்று நினைக்கிறேன்..!

"பற்கள் எல்லாம் அழகிய ரம்பம்
பாவியின் உள்ளம் எப்படி நம்பும்?
ஒரு நாள் அவளே உள்ளம் பறிப்பாள்.. 
மறுநாள் அவளே பள்ளம் பறிப்பாள்..
பெண்ணை நம்பாதே மனமே
பெண்ணை நம்பாதே.."

இப்படிச் சொல்லியிருக்கிறார் 'பெண்ணை நம்பாதே' பாடலில்..!

"கூந்தலை அள்ளி அள்ளி
குதிரைவால் போட்டுப் போட்டு
நடந்து நீ வருகையில்
என் மனம் குதிரையாகுதே.."

இப்படி துள்ளிக் குதித்து எழுதியிருக்கிறார் 'ஓஹோ ஒற்றைப் பனித்துளி' பாடலில்..!

சுடுகாட்டுப் பாடலில் இசையின் இரைச்சலை சற்றுக் குறைத்திருந்தால், இன்னமும் நன்கு கவனப்பட்டிருக்கும் அப்பாடல்..!

"மண்வாழ்க்கை முடியுமிடத்தில்
மணவாழ்க்கை தொடங்குது பெண்ணே..
மலர்க்கூட்டம் சிதறுமிடத்தில்
மணமேடை அமைந்தது கண்ணே.."

என்று துவங்கும் பாடலின் சரணத்தில் வைரமுத்துவின் தமிழ் விளையாடியுள்ளது..

"பால் பழங்கள் பருகுவதென்று 
பள்ளியறை சாஸ்திரமுண்டு
பழுத்த பழம் இங்கும் உண்டு
பாலோடு சடங்குகள் உண்டு.."

சுடுகாட்டில் ஒரு பக்கம், பிணம் எரிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அன்றைக்குக் கல்யாணமான தம்பதிகள் தங்களது முதல் இரவை இப்படித்தான் கொண்டாடுகிறார்களாம்..!

'வித்தகக் கவிஞர்' வாலிக்கு பலமான போட்டியாக வைரமுத்து வருவார் போலிருக்கிறது.. இதனாலேயே இப்போதெல்லாம் கவிஞர் ஒரு படத்தில் சில பாடல்கள் மட்டுமே என்றாலும் ஒப்புக் கொள்கிறாராம்.. அதிலும் புதிய இளம் இயக்குநர்கள் என்றால் அதற்கும் பிகு செய்யாமல் ஒப்புக் கொள்கிறார். 

'ஒரு பொண்ணப் பாரு' பாடலில் வேறொரு வைரமுத்துவை பார்க்க வேண்டியிருக்கிறது..!

ஒரு பொண்ணப் பாரு
அவ கண்ணப் பாரு
அவ உதட்டப் பாரு
அவ கழுத்தப் பாரு
அப்புறம்
மனசப் பாரு..!

ஆல்கஹால் ஊற்றிச் செய்த
அல்வாதான் அழகு குட்டி
சிக்கான சின்னப் பெண்ணின்
அக்காதான் ஷில்பா ஷெட்டி..!

இதயம்தான் செல்போனு
அவதானே சிம்கார்டு
சிம்கார்ட போட்டுப் பார்த்தா
அவ மட்டும் ரெக்கார்டு..!

கண்ணுக்குள்ளே சாரல் சிந்தும் ஏற்காடு
அவ போகும் வழியில் ரெண்டு பக்கம் பூக்காடு..!

அட பப்பர பப்பா
நெஞ்சில பம்பரமப்பா.. அட
உலகம் முழுதும் கலகம் பண்ணும்
ஹார்மோன் தப்பா...!

மொத்தத்தில் ஆசை வைத்து
மூக்கின் மேல கோபம்தானே..
துப்பட்டா மூடும் நெஞ்சை
துப்புத் துலக்கப் போறேன் நானே..!

பேஸ்புக்கில் தினமும் வந்து
பேசிப் பேசி மயக்கிடுவா..
பாஸ்புக்கப் பறிச்சிடுவா..
பல்லைக் காட்டி இளிச்சிடுவா..!

ஹை ஹீல்ஸின் ஓசை கேட்டு
ஹைவேயில் டிராபிக் ஜாமு..
இவ போட்ட கிளாசுக்குள்தான்
நடக்குது கிளாஸ் ரூமு..!

இவளோட அப்பன்தாண்டா
என் மாமூ..
மம்தா மம்தா குல்கர்னி
மனசுக்கேத்த மச்சினி..!

நாட்டுக்குள் அணுமின் நிலையம்
கூடாதென்று சில பேர் சொல்ல..
கண்ணுக்குள் அணு மின் நிலையம்
கொண்டாய் பெண்ணே.. எங்கே சொல்ல..!

அவளோட பேசப் பேச 
செல்போன் பில்லு சார்ஜ் ஏறும்..
அவள் மீண்டும் பேசப் பேச
செல்போனுக்கே சார்ஜ் ஏறும்..!

அவள் வீட்டு பூந்தொட்டிக்குள்
என் ரோஜா பூப்பதெப்போ..
என் வீட்டு ரேசன் கார்டில்
அவள் பேரை சேர்ப்பதெப்போ.?!.

பித்தத்தில் பீ.பீ. ஏறுது
அப்பப்போ..
மம்தா மம்தா குல்கர்னி
மனசுக்கேத்த மச்சினி..!

வைரமுத்துவின் செந்தமிழின் உச்சக்கட்டம் 'டிம்ப டிம்பா' பாடலின் வரிகள்தான்..!


சின்னாஞ்சிட்டு மினுக்கி வர்றா
சிலுக்கு மக குலுக்கி வர்றா..
ஆறு முதல் அறுபதையும்
ஆட்டிப் படைக்க வர்றா..!

உரிச்சு வைச்ச கோழியைப் போல்
சிரிச்சுக்கிட்டே சிறுக்கி வர்றா..
ஒத்த எலையில் பந்தி வச்சு
ஊரை அழைக்க வர்றா..!

கட்டான மேனி பாரு..
கட்டி வச்ச ஆப்பிள் பாரு..
எப்போதும் பிளாக்கு லேபிள்
ஊத்தி வைச்ச கண்ணப் பாரு..!

என்னோட ஆட்டம் போட்ட
ஆளு மொத்தம் ஆறு நூறு..
என் பேரில் வீடு வாசல்
எழுதி வைச்ச ஆளு நூறு..!

பஞ்சணைப் பாடத்துக்குப்
பள்ளியறை தானடா
பல்கலைக் கழகங்களும் 
படிக்குமிடம் நானடா..!

மஸ்கட்டு ஆளு வந்து
தங்க பிஸ்கட்டு குடுக்குறான்..
இங்கிலாந்து துரை எனக்கு 
எஸ்எம்எஸ்ஸு அடிக்கிறான்..!

கட்டில் போட்டு எல்லாம் அள்ளித் தாரேன்- நானும்
கத்த வித்தை எல்லாம் சொல்லித் தாரேன்..

தயங்காதேடா - புத்தி
மயங்காதேடா..
தொடு.. தொடு.. தொடு.. தொடு என
தொடர்வேனடா..!

என்னோட வாழ்ந்து பாரு
இதயத் துடிப்பு மாறிப் போகும்..
என்னோட டைரி பாரு
ஊரு மானம் நாறிப் போகும்..

பவர் கட்டு ஏற ஏற
எனது ரேட்டு ஏறிப் போகும்..
அஞ்சு, பத்து குறைக்க வேணாம்..
அந்தச் சூடு ஆறிப் போகும்..!

ஊரே குடிச்ச பின்னும்
ஊறி வரும் தேனுடா..
யாரும் புடிச்சுக்கலாம்
அடக்கமான மீனுடா..!

களவும் கத்து மற
கெழடு கட்டை சொன்னது..
கட்டில் கத்து மற
நாட்டுக் கட்டை சொல்வது..!

பாவம் பண்ணக் கடவுள் மனுசன வச்சான்-செஞ்ச 
பாவம் தீர மனுசன் கடவுள வச்சான்..!

கடவுள் வாழ நீயும்
பாவம் பண்ணு..!
கட கட கட கடைசியில்
எல்லாம் மண்ணு..!

இந்தப் பாடலில் ஆடிய நாட்டியத் தாரகையைவிடவும், பாடலின் வரிகளே அதிகம் கவர்கின்றன.. வெல்டன் கவிப்பேரரசு.. வாழ்க நீர்.. வாழ்க உமது தமிழ்..! 

அனைத்துப் பாடல்களுமே திரும்பவும் கேட்கும்வகையில் இருப்பதால்தான் உன்னிப்பாகக் கேட்கவும் முடிகிறது..! இந்தப் பாடலின் சிறப்பை நினைத்துதான் தயாரிப்பாளரும் பாடல் வரிகளை தனியே அச்சிட்டு வழங்கியிருக்கிறார்கள். வாழ்க தயாரிப்பாளர்..! 

குப்பத்து மக்களை மிக எளிதாகக் கவரும் வினோதினியின் பேச்சும், அவரது அலட்டல் இல்லாத நடிப்பும், யமுனா மீதே கோபம் கொள்ளும்வகையில் அவரது அக்கம்பக்கத்தினரை திசை திருப்பும் அந்தத் திடீர் திரைக்கதையும்.. யமுனாவின் அம்மாவாக நடித்திருக்கும் மீனாளின் பரபர நடிப்பும்.. காவல்துறையின் கிரிமினல் அண்டர்கிரவுண்ட் தொடர்பையும் அடுத்தடுத்த காட்சிகளில் கிளைமாக்ஸை நோக்கி நம்மையே தள்ளிக் கொண்டு போகிறது..! 

பெரிய ஸ்டார்களை நடிக்க வைத்தால் அவர்களுக்காக திரைக்கதை திருத்தப்பட வேண்டுமே என்பதற்காகத்தான் புதுமுக இயக்குநர்கள், புதியவர்களையே நடிக்க வைக்க விரும்புகிறார்கள். ஆனால் அதுவே படத்தின் வியாபாரத்திற்கும், விளம்பரத்திற்கும் மிகப் பெரிய இழப்பையும் ஏற்படுத்துகிறது..! எல்லாவற்றையும்விட படத்திற்குள் இழுக்க ஏதொவொன்று தேவைப்படுகிறது. அந்த ஒன்று இதில் மிஸ்ஸிங் என்றே நினைக்கிறேன்.. பட்... நேரத்தை வீணாக்காமல் சிறந்த இயக்கத்துடன் கூடிய ஒரு படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கிறது..!

இயக்குநர் கணேஷ்பாபுவுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்து தனது திறமையை வெளிக்காட்டும் சூழல் வர வாழ்த்துகிறேன்..!

6 comments:

தமிழ்மகன் said...

யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை ----- http://mytamilpeople.blogspot.in/2013/06/install-windows-7-from-usb.html

தமிழ்மகன் said...

யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் 7/8 பதியும் முறை ----- http://mytamilpeople.blogspot.in/2013/06/install-windows-7-from-usb.html

AAR said...

What happened to Kutty Puli? Is it that bad?

உண்மைத்தமிழன் said...

தமிழ்மகன் அண்ணே..

உங்களுக்கு விளம்பரம் கொடுக்க வேற வழியே கிடைக்கலியா..? நான்தானா கிடைச்சேன்..?

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

What happened to Kutty Puli? Is it that bad?]]]

குட்டிப்புலி சசிகுமார் மீது வெறுப்பை உண்டாக்குகிறது..! தொடர்ந்து ஒரே கேரக்டரில் இவரால் மட்டுமே எப்படி நடிக்க முடிகிறது..! எனக்கு எழுதத் தோணலை.. அதனால விட்டுட்டேன்..!

கோவை நேரம் said...

விமர்சனம் இல்லாமல் இப்போது பாடல் வரிகளையும் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா...?