அரவான் - சினிமா விமர்சனம்

03-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகில் “மயக்கம் என்ன” படத்திற்குப் பின்பு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் இதுதான். படத்தின் பட்ஜெட் ஒரு காரணமாகவும், இயக்குநர் வசந்தபாலனிடம் தங்களுக்காக படம் சொல்லிக் கேட்ட சில நடிகர்களின் காத்திருப்பை.. இன்னொரு காரணமாகவும் சொல்லலாம்..!

18-ம் நூற்றாண்டில் நகர்கிறது இக்கதை. சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலில் மையப்படும் 47 பக்கங்களைக் கொண்ட ஒரு கதையை எடுத்தாண்டிருக்கிறார் வசந்தபாலன். மனித குலத்தில் தவறும், சரியும் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. திருடர்கள் இல்லாத சமூகமே கிடையாது. ஆனால் கள்வனாக வாழ்வதே வாழ்க்கை என்ற தீர்க்கதரிசனத்தோடு இருந்தவர்கள் உலகத்தின் எந்த மூலையிலும் இருந்திருப்பார்கள் போலும்..! 


மூத்த குடி தமிழ்க் குடி என்று பெருமையாகச் சொன்னாலும், அதிலும் கள்ளம் உண்டு.. கள்வர் உண்டு.. கள்ளத்தனம் செய்திருந்தனர் என்பதையும் நாம் மிக நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். "களவாமை" என்ற வார்த்தை சொல்லப்படாத தமிழ் இலக்கியம் உண்டா..? தொன்றுதொட்டு வந்த அந்த களவாடலை, ஒரு நுட்பமான கலையாகவும், அதனை வழிவழியாகத் தாங்கள் பின்பற்றப்பட வேண்டிய தொழிலாக கருதியும் செய்து வந்திருக்கின்றனர். இதன் நீட்சி முடிவுதான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம்..! 

களவு என்பது பெரும் குற்றம் என்பதை அந்தப் பிரிவினர் என்றைக்கு உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய கதைகளை இப்போதும் நினைவு கூர்கிறது தமிழ் இலக்கியம்..! அந்த வரிசையில் இவர்களைப் பற்றிய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை திரை வெளிச்சமாக்கிய இயக்குனர் வசந்தபாலனுக்கு முதற்கண் எனது வாழ்த்துகள்..!

கள்வர்கள் மட்டுமே குடியிருக்கும் வேம்பூரின் பெரும் கள்வன் பசுபதி. கன்னம் வைத்துக் கொள்ளையடித்து கொண்டு வரும் நகைகளை விற்று ஈடாகக் கிடைக்கும் கோட்டை நெல்லை வைத்துதான் ஒட்டு மொத்த ஊருக்கும் ஜீவனம்..! மகாராணியின் வைர அட்டிகை திருட்டுக் கொடுக்கப்பட்டு அதை வேம்பூர்கார களவர்கள்தான் களவாடியிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டோடு தனது ஊர் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டு கோபமாகும் பசுபதி, அந்த அதி அசுரத் திருடனை தான் கண்டறிந்து பிடித்து கொண்டு வந்து நிறுத்துவதாகவும், பதிலுக்கு 100 கோட்டை நெல்லை பரிசாக பெறவும் அரசுத் தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தேடிச் செல்கிறான்.

திரைக்கதையில் மிகவும் கஷ்டப்படாமல் அசுரத் திருடன் ஆதியை மிகச் சர்வசாதாரணமாக பசுபதியுடன் சந்திக்க விடுகிறார் இயக்குனர். ஆதிதான் அந்தத் திருடன் என்பதையறிந்து அவனையும் தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார் பசுபதி. சினிமாவிற்காக பசுபதியின் தங்கையுடன் ஒருதலைக் காதலுக்கு வழி வகுக்கிறார் ஆதி. ஒரு ஜல்லிக்கட்டு மோதலின்போது அக்கால வழக்கப்படியான "பலியாடு" என்கிற பெயரில் பதுங்கியிருந்ததாகச் சொல்லி ஆதி பகைவர்களிடம் பிடிபடுகிறார்..! பசுபதியால் அவரை மீட்க முடிந்ததா என்பதுதான் கதையா.. அல்லது ஆதி தானாகவே தப்பித்தாரா என்பதுதான் கதையா என்பதையெல்லாம் உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ஆனால் இயக்குனரோ, மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அதை மட்டும் அவர் செய்யவில்லை. இறுதியில் ஆதி மீதும், மரணத்தின் மீதும் படம் பார்ப்பவர்களுக்கு எந்தவொரு பரிதாப உணர்ச்சியும் ஏற்படவில்லை என்பதுதான் இந்தப் படம் காட்டும் பரிதாபம்..! மரண தண்டனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அந்த இறுதி டைட்டில்கள் போடப்படாமலேயே இருந்திருந்தால், ரசிகர்களின் கொஞ்சமான குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்..!

அக்காலத்திய தமிழின் வழக்கு முறையைத்தான் இப்படம் சுட்டிக் காட்டுகிறதா என்பதை நிரம்பவே நம்ப முடியவில்லை..!  பசுபதி முதல் களவுத் தொழில் செய்யும் வீட்டில் படுத்திருக்கும் தம்பதியினரிடையே ஏற்படும் சிறு சச்சரவை எடுத்துக் காட்டும்போதே "ஐயையோ இதுலயுமா..?" என்றது மனது. மாமியார், மருமகள் சச்சரவு அப்போதும் இப்படித்தான் என்பதையும், கணவரை மனைவி உதைப்பதும், பதிலுக்கு மனைவியை கணவர் உதைப்பதுமாகக் காட்டியதில் நொடியில் தொலைந்து போனது இப்படம் பற்றிய எனது வரலாற்றுக் கனவு..! 


பல இடங்களில் தற்காலத்திய தமிழ் புகுந்து விளையாடுகிறது. “தட்டுவாணிச் சிறுக்கி, எடுவட்ட பய புள்ளை, மொள்ளமாரி, முடிச்சவிக்கி..” என்றெல்லாம் தயவு தாட்சண்யமே இல்லாமல் கூவத்துடன் ஒப்பிடும் அளவுக்கு தமிழ் புழங்குவதைப் பார்த்தால், இப்படம் எந்த வரலாற்று நிகழ்வைச் சொல்கிறது என்றே சந்தேகம் வருகிறது. தமிழகத்தில் பேசப்படும் அனைத்துவகை தமிழையும் லேசுபாசாக தொட்டிருக்கிறார்கள்..!

திரைக்கதை ஓடும் ஓட்டத்தையும், காட்டும் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் வயதாகவில்லை என்பதை மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆன பின்பும், அதே முகப் பொலிவுடன், வித்தியாசமே காட்டாத மேக்கப்பில் ஆதியை எப்படி வைத்திருக்க முடியும் என்பதும் தெரியவில்லை. இவரை மட்டுமல்ல.. படத்தின் கேரக்டர்கள் பலருமே அது போலவே காணப்படுவது கொஞ்சம் நெருடல்தான்..!


அத்தோடு மிக, மிக குறுகிய நேரத்தில் கதையை கொண்டு செல்வதற்காக திடீர் திரைக்கதைகளை அமைத்திருப்பது கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. உதாரணமாக பசுபதியின் தங்கை ஆதியிடம் “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..” என்று கேட்பது.. தன்ஷிகா, ஆதி தொடர்பான பேச்சுக்கள்... இன்னொரு பக்கம், இவைகளெல்லாம் உண்மையானதாகவே இருக்குமானால், தமிழ்ச் சமூகம் பெண்ணடிமைச் சமூகமாக இருந்ததே இல்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிடலாம்..!

பசுபதியின் நிமிடத்திற்கொரு முறை மாறும் முகபாவங்கள், ஆதியின் சிக்ஸ் பேக் உடம்புடன் பேசும் தெனாவெட்டு.. கிராமத்துப் பெரிசுகள், "கொழுந்தியாள்களை பாதுகாக்கணும்யா.." என்ற சிங்கம்புலியின் காலம் கடந்தும் உணர்த்தும் உண்மைகள்.. அக்காலத்திய சில சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பலவற்றையும் பார்த்து, பார்த்து நெய்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். 

இயக்குனருக்கு ஏற்றாற்போல் நடிப்பில் வளைந்து கொடுத்திருக்கும் அத்தனை பேரையும் பாராட்டத்தான் வேண்டும்.. சின்ன வேடம் என்றாலும் குருநாதருக்காக தட்சணை செய்ய முன் வந்த பரத், அஞ்சலி இருவருக்கும் எனது நன்றிகள்..! இனி வரும்காலத்தில் இயக்குனர்கள் நன்றியுணர்விற்கு குறிப்பிட்டுச் சொல்ல இப்படம் உதவிகரமாக இருக்கும்..!

முற்பாதியில் கதை எதன் போக்கில் போகிறது என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில் ஆதியின் புதிய கிளைக் கதை சுவாரஸ்யத்தைக் கொடுத்ததுதான் என்றாலும், இக்கதைதான் ஏன், எதற்கு என்ற கேள்விகளைக் கிளறிவிட்டது.. 

கரிகாலனுடனான சண்டையின்போது எருமைக் கூட்டத்தைக் கூட்டி வந்து பசுபதியை மீட்டுச் செல்லும் ஆதியின் சண்டை கிராபிக்ஸில் சின்னாபின்னமாகிவிட்டது. கொஞ்சம் செம்மைப்படுத்தி செதுக்கியிருக்கலாம்.. பணமா இல்லை..? எத்தனையோ செலவுகளை செய்துவிட்டு இதில் மட்டும் கஞ்சம் பிடித்தால் எப்படி..? காட்சியின் வேகத்தில் இது கண்டும் காணாமல் விடப்படும் என்று இயக்குநர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவர் ஏமாற்றமடைவார்..

ஆதி, பிடிபட்ட பின்பு இயேசுநாதரை போல் கொண்டு செல்லப்படுவதும், திருமாறனின் மனைவியும், மகனையும் அவ்விடத்தில் காட்டும் யுக்தியும் சுவாரசியமாகத்தான் இருந்தது. என்றாலும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறையே..! 

வியந்து பாராட்ட வேண்டும் என்றால், இயக்குனருக்கு பின்பு ஒளிப்பதிவாளர் சித்தார்த்தைத்தான்..! காணாடுகாத்தான் வீடுகளின் பிரமாண்டத்தையும், காடு, மலை, அருவி என்று அவர் படம் பிடித்திருப்பவைகள் அவர்களின் கடுமையான உழைப்பைக் காட்டுகிறது..! ராஜாவின் மரணக் காட்சியில் அலைகளுடனேயே கேமிராவும் ஆடும் வித்தை அசத்தல்..! கொஞ்சமே வந்தாலும் கேரளத்து பேரழகி ஸ்வாதி மேனனின் விஸ்வரூபத்தை காட்டியதற்காக சித்தார்த்தின் கேமிராவுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

வரலாற்று நிகழ்வுகளுக்கேற்றாற் போன்று கலை இயக்கம் பயன்பட்டிருக்கிறது..! 18-ம் நூற்றாண்டுதானே என்பதால் கொஞ்சம், கொஞ்சம் மிச்சம், மீதி பிடித்து வைத்திருக்கிறார்கள். வீடுகள், பொருட்கள், கழி, குவளைகள் என்பதோடு நிறுத்திக் கொண்டு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு வைத்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. 

ஏற்கெனவே எழுதப்பட்ட கதைதான் என்பதால் வெங்கடேசனின் வசனங்கள் கதையை காட்சிக்கு காட்சிக்கு நகர்த்தவே பயன்பட்டிருக்கிறது..! அனைவரும் நீள, நீளமான வசனங்களை தேவையே இல்லாத இடங்களில்கூட பயன்படுத்தியிருப்பதுதான் மிகுந்த சோர்வைத் தருகிறது. வசனங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை காட்சிப்படுத்துவதில் செலுத்தியிருக்கலாம்..! பரத்தை கொலை செய்தது யார் என்று திடீரென்று ஆதிக்கும், திருமாறனுக்கும் வரும் சந்தேகம் ஏன் முன்பே வரவில்லை என்று நமக்கே சந்தேகத்தை எழுப்புகிறது..! இதன் தொடர்ச்சியாய் துப்பறியும் படமாக இது உருமாறி, கடைசியில் தோல்வி கண்ட புலனாய்வுப் புலியாய் ஆதியைக் காட்டி முடித்திருத்திருப்பில் முடிந்திருக்கிறது..!

புதிய இசையமைப்பாளர். கார்த்திக். "ஊரு ஊரு என்னைப் பெத்த ஊரு", "உன்னைக் கொல்லப் போறேன்", "நிலா நிலா போகுதே" பாடல்களில் வரிகளுக்கு மிக அழுத்தம் கொடுத்து இசையைப் பின்னுக்குத் தள்ளி கேட்க வைத்திருக்கிறார். பாராட்டுக்கள் இசையமைப்பாளருக்கு..! ஜல்லிக் கட்டு காட்சியிலும், ஸ்வாதி மேனன் இடுப்பு ஒட்டியாணத்தை ஆதியின் இடுப்பில் வைத்து சோதனை செய்யும் காட்சியிலும் ரீரிக்கார்டிங்கில் கொஞ்சம் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம்..! 

இயக்குனரின் இயக்கத்தை பற்றி நாம் சந்தேகப்பட வேண்டிய தேவையே இல்லை.. ஏற்கெனவே வெயிலிலும், அங்காடி தெருவிலும் அழுக வைத்து அனுப்பி வைத்தவர், இதில் லேசாக கண்ணைக் கசக்கக்கூட விடவில்லை என்பதுதான் உண்மை..! 


கள்வர்கள் என்ற ஒரு வார்த்தையிலேயே இவனுகளுக்கெல்லாம் இப்படித்தான் சாவு வரும் என்ற போக்கிலேயே வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகம், இந்தப் படத்தையும் இப்படித்தான் பார்க்கப் போகிறதோ என்ற ஐயம் என் மனதில் எழுகிறது..!

பலவித கேள்விகள்.. சந்தேகங்கள் ஆயிரம் இருந்தாலும், தனக்கிருக்கும் பெயரைப் பயன்படுத்தி பக்கா கமர்ஷியல் கம்மர் கட் சாப்பிட்டு தன்னுடைய பேங்க் பேலன்ஸை ஏற்றிக் கொள்ள நினைக்காமல், மொழி, மாநிலம், இலக்கியம், தமிழ் என்று அனைத்திற்கும் ஒரு அடையாளக் குறியீட்டைச் செய்ய முன் வந்திருக்கும் வசந்தபாலனின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே..!

"பாலை" படத்திற்குப் பின் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட வேண்டிய திரைப்படம் இது.  "பாலை"யின் வறட்சியான பட்ஜெட்டிற்கு முன்னால் இப்படம் ஒரு பெரும் யானையாக நிமிர்ந்து நிற்கிறது..! அந்த வகையில் வசந்தபாலன் அதிர்ஷ்டக்காரர்தான்..!

அவசியம் பார்த்தே தீர வேண்டியது அரவான்..!