28-11-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பாலாஜி கே.குமார் என்னும் ஒரு இளைஞர், இன்னுமொரு புதிய நம்பிக்கையை தமிழ்ச் சினிமாவின் மாற்று சினிமா ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்..! தமிழ்ச் சினிமா கலைக்கானதா..? அல்லது சமூகத்திற்கானதா? என்ற விடை தெரியாத கேள்விகளுக்கிடையில் கலையின் எடுத்துக்காட்டாய் சிற்சில படங்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன.. பெருவாரியன திரைப்படங்கள் சமூக அக்கறையோடு வருவதாகச் சொல்லிக் கொண்டாலும், அந்த அடையாளத்தோடுதான் வலம் வருகின்றன..! ஆனாலும் புகழ் பெறுபவை சமூகம் சார்ந்த படைப்புகள்தான்..
கலை என்பதன் வெளிப்பாடாக வரும் சில படங்களும் அதனதன் குறியீடாக அப்படத்தில் இடம் பெறும் கதை அல்லது சம்பவங்களை வைத்து சமூகத்திற்கு கேடானது என்று ஒதுக்கப்படுகின்றன.. அந்த ஒதுக்கப்பட்ட படங்கள்தான் சினிமாவை ஒரு துறையாக ரசிப்பவர்களையும், அதனை நேசிப்பவர்களையும் ஒருசேர ஈர்க்கின்றன..! எந்தவிதத்திலும் கலை ஆர்வலர்களால், சினிமா ரசிகர்களால் புறம்தள்ள முடியாத படங்கள் சிலவையே தற்காலத்தில் வந்து கொண்டிருக்கின்றன.. அதில் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது இந்த விடியும் முன்..!
கதையாக பார்த்தால் நாம் பார்க்க விரும்பாததுதான்.. ஆனால் இதன் சிறப்பான இயக்கமும், செய்நேர்த்தியும் படத்தை இறுதிவரையிலும் பார்க்க வைக்கிறது.. சஸ்பென்ஸ் திரைப்படங்களின் வெற்றியே அதன் ரகசியத் தன்மை இறுதிவரையில் காப்பாற்றப்படுவதுதான்.. இதில் இறுதியில் சொல்லப்படும் கதைதான் படத்தின் சஸ்பென்ஸ்.. ஒரு படத்தின் சஸ்பென்ஸ்தான் கதை.. கதைதான் சஸ்பென்ஸ் என்பதே வித்தியாசமாக இருக்கிறதல்லவா..?
13 வயது சிறுமியை கொலை செய்யத் துடிக்கும் 3 பேர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றத் துடிக்கும் பாலியல் தொழிலாளி பூஜாவின் ஓட்டத்தில் இருந்துதான் கதை துவங்குகிறது..! ஒவ்வொரு ரீலுக்கும் ஒவ்வொரு கதையாக முடிச்சை அவிழ்த்துக் கொண்டே போய் இறுதியில்தான் அதற்கான விடை கிடைக்கிறது..!
சிங்காரம், லங்கன், மணி, சின்னைய்யா, ரேகா, நந்தினி, தேவநாயகி என்று இந்தக் கதாபாத்திரங்களின் பெயர்கள், படம் பார்த்து 4 நாட்களாகியும் இன்னமும் உதட்டில் இருந்து தரையிறங்க மறுக்கிறது..!
வேறு வகை திரைப்படங்களில் முழுக் கதையையோ அல்லது விளக்கமான கதைச் சுருக்கத்தையோ சொல்லிவிட்டால் எந்த ஆபத்துமில்லைதான்.. அது பொழுது போக்குக்காகவும், கதை தெரிந்ததுதான் என்றாலும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்றாவது பார்க்க முனைவார்கள். இதில் அப்படியெழுத முடியாத சூழல்..!
படத்தின் கேரக்டர்களுக்கு அடுத்தபடியாக மனதில் நிற்பது லொகேஷன்கள்தான்..! காட்சிக்குக் காட்சி இப்படியொரு இடங்களை எப்படித்தான் தேடிப் பிடித்தார்கள் என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் இயக்குநர்களும் கலை இயக்குநரும்..!
சமூகத்தின் இருண்ட பக்கங்களுக்குள் ஒளிந்திருக்கும் கதை மாந்தர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் உயிர்நாடி.. சிங்காரத்தின் அறிமுகத்தின்போதே படத்தின் தன்மை புரிந்துவிட்டது.. அந்த சலூன் கடையும். அதன் உட்புறத்தில் “படம்” எடுக்கப்படும் சூழலும் அதன் தன்மையைப் புரிய வைத்துவிட்டது..!
சின்னைய்யாவின் தேடுதல் வேட்டையில் லங்கனின் அறிமுகம் கிடைத்த பின்பு படம் இன்னமும் வெகுவேகமாக மனதிற்குள் ஓடுகிறது..! சென்னையில் இருந்து மும்பைக்குத்தான் போகிறது என்றெல்லாம் நினைக்கும் சூழலில் அது இடம் மாறி போகும் இடம் தெரிந்தவுடன் அங்கேயும் ஒரு இனிய அதிர்ச்சி..!
இதுவரையிலும் கோவில் மாநகரமான திருவரங்கத்தை யாராவது இப்படி காட்டியிருக்கிறார்களா..? அந்த வீடும், வீட்டில் இருக்கும் தேவநாயகியும் அவரது பிள்ளைகளுமான அந்தக் களன் இன்னொரு பக்கம் வியப்பைத் தருகிறது..! லங்கனின் கொலைநோக்குப் பார்வையில் தெருவோரமாக இளநீர் விற்கும் பாட்டியிடம் ‘பொட்டலம்’ இருப்பதுகூட தெரிய வருவது இயக்குநரின் கற்பனைத் திறமை..!
அடியாட்கள்.. சூழல்.. பெண் பிள்ளைகளை வைத்து தொழில்.. என்று அந்தச் சூழலுக்கும் ஒரு அழகான பேச்சிலேயே பயமுறுத்தும்வகையில் பின்னணி லொகேஷனை வளைத்துப் பிடித்து, அடியாட்கள் பாம்புகளுடன் விளையாடும்படியான குறியீட்டுடன் காட்டியிருப்பதெல்லாம் அந்தக் கேரக்டரையும், படத்தின் மீதான ஈர்ப்பையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது..!
பூஜா, 'பரதேசி' படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை இந்தப் படத்திற்காகவே வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்..! வெல்டன் என்கிறேன்..! "கதையும், கேரக்டரும் பிடித்துப் போனதால் இதில் மூழ்கிவிட்டேன்.." என்றார் பூஜா. தன்மையான நடிப்பு.. சின்ன சின்ன டயலாக்குகளை மாடுலேஷனுடன் அவர் வெளிப்படுத்தியிருக்கும்விதமே இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது..!
சிங்காரத்துடன் காரில் போகும்போதே அடுத்த 'டீலு'க்கு அடி போட்டு பேசி.. அதனை ஒத்துக் கொள்ள வைக்கும்படியான நடிப்பை இருவரிடத்திலும் அற்புதமாக கேட்டு வாங்கியிருக்கிறார் இயக்குநர்..! எனக்கு மிகவும் பிடித்த காட்சியாக அமைந்துவிட்டது அது..!
திருவரங்கம் ரயில்வே ஸ்டேஷனில் குட்டிப் பொண்ணு மாளவிகாவுடன் வாக்குவாதம் செய்து முடியாமல் போகலாம் என்று சலித்த நிலையில் முடிவெடுக்கும் அந்த காட்சியிலும், சிங்காரத்திடம் நந்தினியை மட்டும் விட்டுவிடும்படி கேட்டு அடி வாங்கும் காட்சியிலும் அந்த கேரக்டராகவே பிரதிபலிக்கிறார் பூஜா..! இது போன்ற கேரக்டர்களை பல முன்னணி நடிகைகள் நிச்சயம் தவிர்க்கத்தான் செய்வார்கள்.. முனைந்து ஆர்வப்பட்டு நடித்து பெருமைப்படும் பூஜாவிற்கு குறுக்கே நிற்கும், அவரது இனத்தையும் தாண்டி பாராட்டத் தோன்றுகிறது..!
நந்தினியாக நடித்திருக்கும் மாளவிகா மணிக்குட்டன், கேரள பொண்ணு.. அங்கே மேடை நிகழ்ச்சிகளும், குறும்படங்களிலும் நடித்து பெயர் வாங்கியிருக்கிறாராம்.. நல்ல செலக்சன்.. துறுதுறு பேச்சை மிக இயல்பாகப் பேசுகிறார்.. திருவரங்க ரயில்வே ஸ்டேஷனில் அவர் பூஜாவை அலட்சியப்படுத்தி பேசும்பேச்சு.. அங்கே அவர்களை கவர் செய்யும் ஒரு ஆளை போய்யா என்று விரட்டியடிக்கும் அந்த இயல்பும்.. தனது தாய், தந்தையை பற்றி பேசுவதையே தவிர்க்கும்விதமாக பேச்சை மாற்றும் அந்த லாவக முகக் குறிப்பும்.. அசத்தல்..! பொண்ணு நல்லா வரும்..!
சிங்காரமாக நடித்த அமரேந்திரனும், லங்கனாக நடித்திருக்கும் ஜான் விஜய்யும்தான் இவர்களுக்கடுத்து படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள்..! சின்னய்யாவிடம் தொடையில் வாங்கிய காயத்தோடு உயிருக்குப் பயந்து பூஜாவைத் தேடத் துவங்கும் அந்த காட்சியில், இருந்து இறுதிவரையிலும் உயிருக்குப் பயந்த ஒரு கோழையாகவும், சமயத்தில் தான் மட்டும் புத்திசாலியாக தப்பிக்க நினைக்கும் குள்ள நரியாகவும் இரட்டை வேடத்தை காட்டுகிறார் அமரேந்திரன்..!
ஜான் விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்ச்சை அந்த வித்தியாசமான லொகேஷனே காட்டிவிட்டது.. போனில் தனது அடியாளுக்குக் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்சன்படியே ஆள் எப்படி என்பதையும் என்ன வேலை செய்கிறார் என்பதையும் அடையாளப்படுத்துகிறார் இயக்குநர். பூஜா போகுமிடத்தைக் கண்டு பிடிக்கும் அந்த சூட்சுமமும், சிங்காரத்தைவிடவும் தான் அதிபுத்திசாலி என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே வருவதும், தேவநாயகி வீட்டில் இவர் செய்யும் சின்னச் சின்ன ஆக்சன்கள் அந்த நிமிடத்து பதட்டத்தைக் கூட்டிக் கொண்டே சென்றதென்னவோ உண்மை..!
லஷ்மி ராமகிருஷ்ணின் திருவரங்கத்து வாழ்க்கையை மேலும் அலசி ஆராயாமல், அவர் இப்போது என்ன செய்கிறார் என்பதை மட்டும் காட்டிவிட்டு வெகு இயல்பாக பூஜாவுக்கும், அவருக்குமான நட்பை சொல்லிவிட்டு ஜம்ப் ஆகியிருக்கிறார் இயக்குநர். இருந்த சில காட்சிகளிலும் இவருடைய மகள், மகனுக்கும் மாளவிகாவுக்கும் ஏற்படும் பிரெண்ட்ஷிப்பை தொடுவதன் மூலமாக மாளவிகா அங்கே இருக்க விரும்பாதவளாக இருக்கிறாள் என்பதையும் காட்டிவிடுகிறார்..!
தீக்காயத்துடன் உயிர் வாழும் டான்.. எப்போதும் இறுக்கமான முகத்துடன் சின்னய்யா.. யாரென்று சொல்லாமலேயே அவர் செய்யும் அக்கிரமச் செயல்கள்.. அதன் நியாய, தர்மங்களை கிளைமாக்ஸில் பிளாஷ்பேக்கில் சொல்லியிருக்கும் விதம்.. இயக்குநருக்கு ஒரே ஜே போட வைக்கிறது..!
படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கச்சிதம்..! படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் பல காட்சிகள் இரவு நேரத்தில் இருந்தாலும் படத்தின் அந்த சஸ்பென்ஸை காப்பாற்ற வைப்பதில் ஒளிப்பதிவாளருக்கும் பெரும் பங்குண்டு..! சிவகுமார் விஜயன் என்ற அந்த ஒளி ஓவியர் யாரோ.. எவரோ..? குறை சொல்ல முடியாத அளவுக்கு கேமிராவை கையாண்டியிருக்கிறார்..!
பாடல்களை முழுமையாகவே நீக்கியிருக்கலாம்.. அதை நீக்கிவிட்டு செய்திருந்தால் இந்தப் படம் ஆரண்ய காண்டத்திற்கு சமமானது என்றே சொல்லலாம்..! பாழாய்ப் போன தமிழ்ச் சினிமாவின் இன்றைய சூழலுக்கேற்றாற்போல் பாடல்களை வைக்காவிட்டால் பிஸினஸிற்கு பாதிப்பாகுமே என்ற குழப்பத்திலும், ரசிகர்களுக்கு விருப்பமில்லாமல் போகுமே என்கிற பயத்திலும் பாதி, பாதி பாடல்களை ஒலிக்க வைத்திருக்கிறார்கள்..1 3 பாடல்களையும் தானே எழுதி தானே இசையமைத்திருக்கிறார் கிரீஷ் கோபாலகிருஷ்ணன்..!
இப்படத்தின் பின்னணி இசை பற்றி தனிப் பதிவே போடலாம்..! அந்த அளவுக்கு அதன் ஆதிக்கமும், படத்தின் ஓட்டத்திற்கு துணை நின்ற அதன் வேகமும், ஈர்ப்பும் வெல்டன் என்று சொல்ல வைக்கிறது..! சிலிர்க்க வைக்கவில்லை.. ஆனால் எதுவோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை கூட்ட வைத்திருக்கிறது..!
ஒரு திரைப்படத்தின் வெற்றி ஜீரணிக்க முடியாத கதையாகவே இருந்தாலும், இறுதிவரையிலும் அது பற்றிய யோசனையே செய்ய முடியாத அளவுக்கு ரசிகனை அதில் ஆழ்த்தியிருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்..! இந்தப் படைப்பு இதைத்தான் செய்திருக்கிறது..! நிச்சயம் இது குழந்தைகளுக்கான படமில்லை. படத்தின் அடிப்படைக் கதைக் கரு அதனைத் தகர்த்திருக்கிறது.. யு-ஏ சர்பிடிகேட் பெற்றிருந்தாலும் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டுச் செல்லுங்கள்..! படத்தில் இறுதியில் சஸ்பென்ஸ் உடைபடும் சூழலிற்கு எதிரான கேள்விகள், நிறைய இருப்பினும் எதையும் கேட்கத் தோணவில்லை.. இதுவே இந்த இயக்குநருக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான்..!
முழுக் கதையையும் சொல்லத் துடிக்கும் என் போன்றோரை சொல்லவே கூடாது என்று தடைபோட்டு அணை போட்டு தடுத்திருக்கும் இந்த இயக்குநர் பாலாஜி கே.குமாருக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..! இன்னமும் சிறப்பான படைப்புகளை அவர் தமிழுக்குத் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்..!
இந்தப் படம் கொஞ்சமும் மிஸ் செய்யக் கூடாத படம்..! எந்த வகையிலாவது இதனை அவசியம் பார்த்துவிடுங்கள்.. ஆரோ 3-டி வசதியுள்ள தியேட்டரில் பார்த்தீர்களேயானால் இன்னமும் சிறப்பாகவே இருக்கும்..!
இத்திரைப்படம் பற்றி வரவிருக்கும் கருத்துக்கோவைகள்.. மதிப்புரைகள்.. வாழ்த்துரைகள்.. பிரதி, எதிர்வாதங்கள்.. மாற்றுச் சினிமா ரசிகர்களின் புல்லரிப்பு கதைகள்.. ஹாலிவுட்டின் காப்பி கதைகள்.. பாராட்டுரைகள்.. இவையனைத்தும் அடுத்து இது போன்ற படங்கள் நமக்குக் கிடைக்கும்வரையிலும் நம்மை இந்தத் தமிழ்ச் சினிமா சூழலில் இருக்கவே வைக்கும். வாழவே வைக்கும்..!
நன்றிகள் இயக்குநர் பாலாஜி கே.குமாருக்கு..!
படத்தின் டிரெயிலர் :
|
|
Tweet |


.jpg)



.jpg)

