Showing posts with label எம்.ஜி.ஆர்.. Show all posts
Showing posts with label எம்.ஜி.ஆர்.. Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-2013-1

08-01-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது இந்தாண்டின் முதல் இட்லி-வடை பதிவு..!

தாத்தாவின் அறிவிப்பு

தாத்தாவின் நேற்றைய பேட்டி தி.மு.க.வுக்குள் மீண்டும் ஒரு சகோதர யுத்தத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் பெயரில் மன்றம் ஆரம்பித்திருப்பதை மெளனமாக கவனித்து வந்திருக்கும் மதுரையின் பட்டத்து இளவரசர் தனது மகனையும் களத்தில் குதிக்க வைக்க அப்பாவை போலவே வார்த்தைகளால் ஆழம் விட்டுப் பார்க்கிறார்..! 3-வது தலைமுறையும் இப்போது அதிகாரப் போரில் குதித்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.. அப்படியாவது இந்தத் திமுக சிதைந்து போகாதா என்ற நல்ல எண்ணம்தான்..! (அதிமுக, ஆத்தாவுக்கு பின்பு தானாகவே காணாமல் போகும்.. ஆகவே அது பற்றி பெரிய கவலையில்லை..) ஏற்கெனவே இவர்களுக்குள் நடந்த சகோதர சண்டையில் மதுரையில் பேருந்துகள் எரிக்கப்பட்டு 3 அப்பாவிகளும் உயிரிழந்தார்கள். இனி வரவிருக்கும் சண்டையில் எத்தனை தாலிகளை அறுக்கப் போகிறார்களோ தெரியவில்லை..! இந்த லட்சணத்தில் இவர்கள்தான் மனுநீதிச் சோழனின் பரம்பரையாம்..!  

பத்திரிகைகளின் பரபரப்பு..!

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை நிகழ்வுக்கு பிறகு பத்திரிகைகள் அது போன்ற செய்திகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வருவது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் தூங்கி எழுந்தவுடன் அந்தச் செய்திகளைத்தான் படித்தாக வேண்டும் என்ற சூழலுக்கு பத்திரிகைகள் நம்மை தள்ளுவது கொடுமையாக உள்ளது. பாலியல் வன்முறை பக்கங்கள் என்றே தனி பக்கம் வைத்து செய்திகளை வெளியிடலாம் போல..! தினத்துக்கு இது போன்ற செய்திகள் வந்தவண்ணம்தான் இருக்கின்றன..!  அதுக்காக கள்ளக்காதல் செய்திகளோடு இதனையும் பெரிதாக குறிப்பிட்டு வெளியிடுவது  எரிச்சலைத்தான் தருகிறது..! டெல்லியில் மீண்டும் ஒரு நிகழ்வு நடந்திருப்பதாகச் செய்திகள்.. இதனையும் ஊடகங்கள் அணுகுண்டு வெடித்தாற்போன்று பரபரப்பாக்கி பீதியை கிளப்புகின்றன..!  ம்ஹூம்.. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை..?

ராமதாஸின் சாதி வெறி

இரண்டு திராவிடக் கட்சிகளும் “வேண்டாமே இந்த எக்ஸ்ட்ரா கேரேஜ்..” என்று கை கழுவிவிட்ட பின்புதான் திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தைக் கெடுத்தன என்பது மருத்துவர் ராமதாஸுக்கு தெரிந்ததாம்.. தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளையெல்லாம் இந்த இரு கட்சிகளும் கையில் எடுத்திருப்பதால் வேறு எப்படியாவது மக்கள் மனதில் இடம் பிடிக்க முயல்கிறார்..! சாதியை அவர் கையில் எடுப்பதை இப்போதுதான் முதல்முறையாக பார்ப்பது போல கடந்த ஒரு மாதமாகவே மருத்துவரை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில். அவர்தான் முதலில் இருந்தே சொல்லி வருகிறாரே.. “வன்னியர் உதவியில்லாமல் இங்கே யாரும் முதல்வராக முடியாது..” என்று.. நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!

சென்ற தேர்தலின்போது கட்சி சாராத அனைவருக்குமே தேர்தல் முடிவுகளில் கிடைத்த ஒரேயொரு திருப்தி இவரது தோல்விதான்.. இதுவே நம் ஆயுட்காலம் உள்ளவரையில் நீடிக்குமானால் மருத்துவர் நம் எல்லார் மனதிலும் நீங்காத தனி இடத்தைப் பிடித்துவிடுவார்.. அதற்கான முயற்சிகளின் முதல் படியாகத்தான் ஜாதிகளின் கூட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார். செய்யட்டும்..! 

தேவயானியின் கல்யாண கதை

வராதுவந்த மாமணியாய் தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும் பவர் ஸ்டாருக்கு போட்டியாய் களத்தில் குதித்திருக்கும் இயக்குநர் ராஜகுமாரனை நாம் வரவேற்றே ஆக வேண்டும்..! “நீங்களே ஏன் நடிக்க முடிவெடுத்தீர்கள்..” என்று கேட்டால், “தேவயானியின் கால்ஷீட் டைரி இப்போ ஹவுஸ்புல்.. அவங்களுக்கு பிரேக் கிடைக்கும்போதுதான் இந்த ஷூட்டிங்கை வைக்க முடியும்.. இதுக்கேத்தாப்புல எந்த ஹீரோ வந்து நடிப்பாரு..? யாரும் ஒத்துக்க மாட்டாங்களேன்னு, யோசிச்சுதான் நானே நடிச்சிட்டேன்..” என்றார்.. புல்லரித்தது நிருபர்களுக்கு..! 

ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசிய நடிகர் சிங்கமுத்து, நள்ளிரவில் தேவயானி வீட்டு வாசலில் காத்திருந்தது. தேவயானி சுவர் ஏறிக் குதித்து வந்து ராஜகுமாரன் கைப்பிடித்து திருத்தணிக்கு ஓடிப் போய் கல்யாணம் செய்த அந்த நாளை, அப்படியே சினிமா கதை போல் சொன்னது செம சுவராஸ்யமாக இருந்தது..! இதையே ஏதாவது ஒரு படத்தில் காட்சிகளாக பயன்படுத்திக் கொள்ளலாம்..! படத்தின் பாடல் காட்சிகளையும், டிரெயிலரையும் பார்த்துவிட்டு அதற்கு மேல் கேள்வி கேட்கவே மனசில்லாமல் எழுந்து ஓடினார்கள் பிரஸ்காரர்கள்..! 

ஒரேயொரு விஷயத்துக்காக ராஜகுமாரனுக்கு எனது பாராட்டுக்கள்.. படத்தின் பாடல்கள் முழுவதிலும் தமிழ் வார்த்தைகள் முத்துக்களாக சிதறியிருக்கின்றன. அதிலும் தமிழின் அனைத்து வகைகளையும் குறிப்பிட்டு ஒரு பாடலை அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நிச்சயம் இது மட்டுமே பேசப்படும்..!

சினிமா காலண்டர்

ராணி முத்து காலண்டரில் இருக்கும் இன்றைய ராசிபலன் தமிழகத்தில் மிகவும் பேமஸானது..! அதைப் பார்த்துவிட்டே அன்றைய பொழைப்பை பார்ப்பவர்களும் இங்கே அதிகம்.. இப்போது அதே பாணியில் தமிழ்ச் சினிமாவுலகத்துக்காக தனி காலண்டரை வடிவமைத்திருக்கிறார்கள். இதில் ராசி பலனுக்கு பதிலாக சினிமா நட்சத்திரங்களின் பிறந்த நாட்கள், அவர்களுடைய போன் நம்பர்களை போட்டு வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையான பிறந்த நாளை சொல்லிவிட்டு போன் நம்பருக்கு மட்டும் லேண்ட்லைன் நம்பரை அளித்திருக்கிறார்கள் முக்கால்வாசி நட்சத்திரங்கள்..! காலண்டரின் விலை 75 ரூபாய். வேண்டும் என்பவர்கள் 9094786565 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம்..!

கலைஞர் டிவி விவகாரம்

காலை அலுவலகம் வந்த சிறிது நேரத்தில் டிஸ்மிஸ் ஆர்டர் கையில் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் ரமேஷ்பிரபா என்று கலைஞர் டிவியின் உள் விவகாரம் வெளிப்பிரகாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு பின்பு பகிரங்கானது. அதற்கடுத்த 2 நாட்களும் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்து கணக்கு வழக்குகளை செட்டில் செய்தாராம் ரமேஷ்பிரபா..! உண்மையில் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..! பணம் கையாடல் என்பது மற்ற டிவிக்களில் ஓகே.. கலைஞர் டிவியில்..? நம்ப முடியவில்லை..! 

ஏற்கெனவே சமீபத்தில் 2-ஜி ஊழல் வழக்கில் சிக்கிய நிறுவனங்களிடமிருந்து கடனாகக் கலைஞர் டிவிக்கு கிடைத்த தொகையை, திரும்பவும் செட்டில் செய்யப்பட்டபோதும் சில வில்லங்கங்கள்.. மெட்ராஸ் சிமெண்ட் சீனிவாசன். செட்டி நாட்டு குடும்பத்தினர்.. அப்போலோ குழுமம் என்று பலரிடமும் பணம் பெறப்பட்டு கூடுதலாக கொல்கத்தா நிறுவனங்களின் மூலமாக 100 கோடிக்கும் மேலாக கடன் பெறப்பட்டு இந்தக் கடனும் செட்டில் செய்யப்பட்டதாம். அந்தக் கொல்கத்தா கம்பெனிகள் எவை.. அவைகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்..? அவைகள் எதற்காக உங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை கடனாகத் தர வேண்டும் என்று டெல்லி பத்திரிகைகள் எழுப்பிய கேள்வியை வழக்கம்போல தாத்தா சாய்ஸில் தொலைத்துவிட்டார். பதிலளிக்க கடமைப்பட்டுள்ள கைப்புள்ள ஸ்டாலினும்  கிட்டிப்புள் விளையாட போய்விட்டார்..! ஆனாலும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாம்.. விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றே நினைக்கிறேன்..!

பேஸ்புக் நண்பி

ஊரெல்லாம் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வை அரசுகளும், தனியார் அமைப்புகளும், பெண்ணுரிமை கழகத்தினரும் பரப்பிக் கொண்டிருக்க பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் சில பெண்கள் இதைப் பற்றியே கண்டு கொள்ளாமல் தங்களைப் பற்றிய செய்திகளை பரப்பி வருவது வேடிக்கையாக இருக்கிறது..! அதிலும் குறிப்பாக ஒருவர், தான் எந்த ஊருக்கு போனாலும் தங்கப் போகும் ஹோட்டலின் பெயரைச் சொல்லியும், எத்தனை நாட்கள் இருப்பேன் என்பதையும், வருபவர்கள் வரலாம்.. சந்திக்கலாம்.. பேசலாம்.. 'மேலே' எனக்கு விருப்பமிருந்தால்.. என்ற ரீதியில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டு வருகிறார்..!

அவர் போடுகின்ற அவரது அரைகுறை படங்களுக்கு வருகின்ற கமெண்ட்டுகளை படித்தாலே போதும்.. நாட்டில் எவ்வளவு பாலியல் வறட்சி நிலவுகிறது என்பது புரியும்..! பாலியல் வன்முறையின் வெளிப்பாடு எங்கேயிருந்து துவங்குகிறது என்பதை இவருக்கு யாராச்சும் புரிய வைத்தால் நல்லது..! 

விஸ்வரூபம்-முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு

7 பேர் சேர்ந்து சங்கம் வைச்சு, ஆபீஸ் போட்டுட்டு, கொடி, சின்னமெல்லாம் வரைஞ்சுட்டு அடு்த்து முதல் போராட்டத்துக்கு யோசிக்கும்போது இனிமே தைரியமா சினிமாக்காரங்களை எதிர்த்தே கச்சேரியை துவக்கலாம்..! ஒரு படத்தை சென்சார் போர்டுல சர்டிபிகேட்டை வாங்கிட்டு தியேட்டருக்கு கொண்டு போனாலும், ஆங்காங்கே இருக்கிறவங்களுக்கு பதில் சொல்லியே தாவூ தீர்ந்திரும் போலிருக்கு..! இப்போ விஸ்வரூபம் படம் முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கும் என்று நினைத்து முதல்ல படத்தை எங்களுக்கு போட்டுக் காண்பிக்க வேண்டும்ன்னு 2, 3 முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை வைச்சிருக்காங்க.. ஒரு பெரிய முஸ்லீம் அமைப்புகிட்ட கஷ்டப்பட்டு நோ அப்ஜெக்ஷன் சர்பிடிகேட் வாங்கி அதையும் விளம்பரப்படுத்தியிருக்காங்க. 

ஒரு படத்தை ரிலீஸ் செய்றதுக்கு எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கு..? இப்படி ஆளாளுக்கு இந்தப் படம் எனக்குப் பிடிக்கலை.. எங்க கொள்கைகளுக்கு எதிரானது.. தடை செய்யணும்.. ஓட விட மாட்டோம்ன்னு சொன்னா எப்படி..? படம் பற்றிய உங்களது கருத்துக்களை படம் ரிலீஸுக்கு அப்புறமா வெளிப்படை சொல்லுங்க.. பேசுங்க.. எழுதுங்க.. அதை விட்டுட்டு எங்களுக்குக் காட்டிட்டுத்தான் படத்தை வெளியிடணும்னு சொல்றது அராஜகம்..! கூட்டம் கூட்டும் வலிமை இருக்கேன்ற தைரியம்..! ஒரு கலைஞனுக்கு தன்னுடைய கருத்தை அவனது தளத்திலேயே வெளியிட முழு உரிமை உண்டு.. கருத்துக்களை எதிர்ப்பவர்கள் இதே தளத்தில் தாங்களும் முயன்று வெளியிடலாம்.. அதைவிட்டுட்டு அதிகார பலத்துடன் எளிய கலைஞர்களை மிரட்டுவதும், தடுப்பதும் கொடுமையானது..  ஏற்கெனவே தியேட்டர்காரங்க கொடுக்குற குடைச்சல் போதாதுதுன்னு, இப்போ புதுசா இதையும் சமாளிச்சுக்கிட்டிருக்காரு..! பாவம் கமல் அண்ணே..!

லட்சுமி ராமகிருஷ்ணனின் செலக்டிவ் அம்னீஷியா..!

வருடா வருடம் நடக்கும் எடிசன் சினிமா விருதுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் பேச வந்த இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை பற்றி ரொம்பவே கொதிப்பான நிலைமையில் பேசினார்..! பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருது.... இதற்கு உதாரணமா உகாண்டா, சூடான், தென் ஆப்ரிக்கா என்றெல்லாம் சொன்னவர் இலங்கை, ஈழம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லவே இல்லை..! 

நம்மில் பலரும் மனம் புழங்கியதை போலவே ஈழம், தமிழர் என்றாலே பலருக்கும் இரண்டாம்பட்சம்தான் போலிருக்கிறது..! டெல்லிக்காக பொங்கிய டெல்லிக்காரர்களின் உணர்வுகளை நாம் உணர்ந்து கொண்டோம். ஆனால் அது இந்திய தேசத்தின் அவமானம் என்று இப்போது கூப்பாடு போட்டவர்களெல்லாம், ஈழத்தில் நடந்த படுகொலைகளின்போதெல்லாம் கப்சிப்பென்று கள்ள மெளனம் சாதித்து வந்ததையும் நாம் உணர வேண்டும்..! ரொம்பவே சுயநலவாதிகளாகவே இருக்கிறோம் என்ற குற்றவுணர்வுகூட இல்லாதவர்கள்தான் நமது இந்தியச் சொந்தங்கள்..!

சிக்கலில் அண்ணாமலை பல்கலைக்கழகம்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் நண்பரொருவரை சந்திக்க நேர்ந்தது..! 

பல்கலைக்கழகம் பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. இவரே பணம் கொடுத்துதான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம்.. பணம் கொடுக்காமல் யாரும் அங்கே வேலைக்கு சேர முடியாதாம்..! கிட்டத்தட்ட 14000 மாணவர்கள் படித்து வரும் பல்கலையில் அதே 14000 அளவுக்கு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.. “இத்தனை பேருக்கு வேலை இருக்கிறதா..?” என்றால் சிரிக்கிறார்.. ஒரு வேலையை செய்ய 4 பேர் இருக்கிறார்கள்.. அதிலேயும் அவர்களுக்குள்ளேயே டூட்டியிலேயே ஷிப்டிங் போட்டு வேலை செய்வார்களாம்.. மற்றவர்கள் ச்சும்மாதான் இருப்பார்களாம்..! பாதிக்கு பாதி பேராசிரியர்களுக்கு வேலையே இல்லை. பேப்பர் திருத்தும்போதுகூட 10, 10 பேப்பர்களாகப் பிரித்தெடுத்து போய் வேலையை ஷேர் செய்து கொள்கிறார்களாம்..

“மாதந்தோறும் சம்பளமாகவே 80 கோடிக்கு செலவாகிறது என்கிறார்கள்.. இதனால்தான் ஆள்குறைப்பு செய்யணும்னு மேலிடத்துல குதிச்சாங்க.. நாங்க போராட்டத்தை அறிவிச்சவுடனேயே வாபஸ் வாங்கிக்கிட்டாங்க.. இப்போ ஆள் சேர்ப்புப் பணியை மட்டும் கொஞ்சம் நிறுத்தி வைச்சிருக்காங்க..” என்றவர் கூடுதலாக சொன்ன ஒரு தகவல்தான் எனக்கு வியப்பை அளித்தது..! 

“செட்டி நாட்டு பரம்பரையில் நேரடி வாரிசாக பிறந்தவர்தான் பல்கலையின் இணைவேந்தராக இருக்க வேண்டும் என்று பல்கலையைத் தோற்றுவித்தவரின் உயில் கூறுகிறதாம்..! இப்போதைய நிலையில் அந்த உயிலின்படி இணைவேந்தர் பதவி அடுத்ததாக செட்டி நாட்டு குடும்பத்தில் எம்.ஏ.சிதம்பரத்தின் பேரனுக்குத்தான் போய்ச் சேருமாம்.. அதற்காகவே இப்போதைய ஆளுபவர்கள் பல்கலையில் முடிந்த அளவுக்கு ஆட்களைச் சேர்த்து வைத்து, இதன் மூலம் பங்காளிகளுக்கு பிரச்சினையை உருவாக்கி வைத்துவிட்டு, நாமும் நாலு காசு பார்த்துவிட்டு விலகிச் சென்றுவிடலாம் என்று நினைத்ததினால் வந்த விளைவுதான் இத்தனையும்..” என்றார்..!  என்னால் நம்பத்தான் முடியவில்லை..! 

சேவை வரி விதிப்பு

சினிமாக்காரர்கள் போராட்டம் என்றாலே எடக்கு, மடக்காக யோசிப்பவர்களுக்கு இன்றைக்கு ஒரு லட்டான விஷயம்..! சேவை வரி விதிப்பு விவகாரம்..! 1994-ல் கொண்டு வரப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, மீண்டும் 2004-ல் கொண்டு வரப்பட்டு அப்போது திரைப்படத் துறைக்கு விலக்களிக்கப்பட்டு மீண்டும் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அப்போது பிரணாப் முகர்ஜியிடம் திரைப்படத் துறையினர் கேட்டுக் கொண்டதையடுத்து அவரும் அதை ஏற்றுக் கொண்டு விலக்களித்தார். இப்போது மீண்டும் நிதியமைச்சர் போஸ்ட்டை பிடித்திருக்கும் சின்னப் பயல் சிதம்பரம், தான் கொண்டு வந்தே தீருவேன் என்று சபதமெடுத்து உத்தரவிட்டிருக்கிறார். அதிலும் சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த சேவை வரி அமல்படுத்தப்படும் என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. சிதம்பரத்துக்கு சினிமாக்காரர்கள் மேல் என்ன கோபமோ தெரியவில்லை..! ஒருவேளை இவர்களும் தனக்காக பாராட்டு விழா நடத்தணும்னு எதிர்பார்க்கிறோ என்னவோ.. அதை வெளிப்படையாகக் கேட்டுவிட்டாலும் சந்தோஷமா நடத்திக் கொடுப்பாங்க..! யார், யாருக்கோ செஞ்சவங்க இவருக்காக செய்ய மாட்டாங்களா..? 

12.36 சதவிகிதம் என்றால் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறார்ன்னு வைச்சுக்குங்க. ஒரு ஆக்டருக்கு சம்பளமா 1 கோடி கொடுக்குறார்ன்னா இதுல 12 லட்சத்து 36000 ரூபா வரியா போயிரும்.. இது மாதிரியே ஹீரோயின், மெயின் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் கொடுத்துட்டே போனா என்னாகும்..? இந்த வரியையும் தயாரிப்பாளரே ஆக்டர்கள் சார்பா சேர்த்து கட்ட வேண்டி வரும்..! அப்போ அவங்க சம்பளம் ஒரு கோடியோ 12 லட்சத்து 36000 ரூபாயாகும். இது மாதிரி எல்லாருக்கும் கட்டினா அந்தப் படத்தோட பட்ஜெட் என்ன ஆகும்..? இந்தச் செலவை அவர் யார் மேல திணிப்பாரு..? படத்தின் தயாரிப்புச் செலவு இவ்வளவு ஆகும்போது தியேட்டருக்கு அந்தப் படம் வரும்போது தியேட்டரில் கொள்ளை லாபத்தில் கட்டணத்தை வைத்தால்தான் போட்ட காசை அவரால் எடுக்க முடியும்..! இது மேலும், மேலும் பல தவறுகளுக்கு வழிவகுக்கும்னு சினிமாக்காரங்க சொல்றாங்க..! சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரியே கறுப்புப் பணத்துக்கு இந்தச் சட்டம் வழி வகுக்கும்போலத்தான் தெரிகிறது.. இன்றைய கூட்டத்தில் பேசியவர்களில் சிலரே குறிப்பா அண்ணன் ஆர்.கே.செல்வமணி ரொம்ப தைரியமா, வெளிப்படையா “எங்களைத் தப்பு செய்ய வைக்காதீங்க.. வேற வழியில்லாமல் தயாரிப்பாளர்கள் அவ்வாறு செய்தால், அரசுக்கு நியாயமாக வர வேண்டிய வரியும் வராமல் போய்விடும்..” என்றார்..!

10 லட்சம் ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்குறவங்களுக்குத்தான் இந்த சேவை வரின்னாலும், தயாரிப்பாளர், இயக்குநர்கள், நடிகர்களுக்கு மட்டுமே இதனை புகுத்தியிருக்கும் மத்திய அரசு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்துள்ளதாம்..! மேலும் ஒரு ஆண்டு ஒருவர் சேவை வரி செலுத்தியிருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே அளவு சேவை வரியைச் செலுத்த வேண்டும் என்பதும் விதியாம்.. முதல் வருஷம் படம் கிடைச்சு கட்டினாலும், அடுத்த வருஷம் சும்மா இருக்கும்போதும் கட்டணும்னா எப்படிங்க என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். நியாயமான கேள்விதானே..?

கூட்டத்தில் தியேட்டர்கள் சங்கத்தின் துணை செயலாளர் ஸ்ரீதர் பேசும்போது ஒரு விஷயத்தைச் சொன்னார். “2005-ம் வருடம் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை என்ற 4 சிட்டிகளிலும் உள்ள மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களுக்கு அவர்களுடைய வருமான வரியில் முதல் 5 ஆண்டுகளுக்கு 50 சதவிகிதம் விலக்களிப்பதாக ஒரு ஆணை பிறப்பித்தார்களாம். அப்போது சிதம்பரம்தான் நிதியமைச்சர்..! இந்த ஆணைப்படி டெல்லி, கொல்கத்தா, மும்பையில் உள்ள மல்டிபிளெக்ஸ்களுக்கு 50 சதவிகித வரி விலக்கு என்ற செய்திகள் அந்தந்த மாநிலத்தின் வருமான வரித்துறைக்கு சென்றடைந்துவிட்டதாம்.. ஆனால் சென்னைக்கு வரவேயில்லை.. அதனால் அமல்படுத்த உத்தரவும் கிடைக்கவில்லையாம்.. சென்னையில் இருக்கும் மல்டிபிலெக்ஸ் உரிமையாளர்கள், திரையுலகப் புள்ளி ஒருவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரத்தை நேரில் சென்று சந்தித்து நிலைமையை  விளக்கினார்களாம்.. “சென்னைக்கும் இந்த அரசு ஆணையை கொண்டு வந்துட்டீங்கன்னா நல்லாயிருக்கும்”னு சொன்னவுடனேயே சிதம்பரம், “ஓ.. அதுக்கென்ன செஞ்சிட்டா போச்சு..” என்று புன்சிரிப்புடன் சொல்லி அனுப்பி வைத்தாராம்..! அவர்களும் சந்தோஷமா திரும்பி வந்தார்களாம். ஆனால் ஒரே வாரத்தில் அந்த அரசு ஆணை, 4 சிட்டிகளுக்கும் சேர்த்தே அறவே நீக்கப்பட்டுவிட்டதாக புது ஆணை பிறப்பிக்கப்பட்டதாம்..! அப்பேர்ப்பட்ட சிதம்பரத்தை பத்தி தெரியாமலேயே இங்க நிறைய பேர் பேசிக்கிட்டிருக்காங்க..” என்று சொல்லி வருத்தப்பட்டார் ஸ்ரீதர்.. 

அதானே 'சின்னப் பயல்' சிதம்பரம்ன்னா கொக்கா என்ன..?

பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்

நம்ம மதிப்பிற்குரிய ஆத்தா தான்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதை நினைவில் வைத்திருந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதோடு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கமும் செய்யப்பட வேண்டும் என்றும் மிக அற்புதமான ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார்..!

என்னைப் பொறுத்தளவில் இந்த நாட்டில் மிகப் பெரிய வன்முறையே அரசியல்வியாதிகள் செய்யும் ஊழல்களும், அராஜகங்களும்தான் என்பேன்.. அந்த வகையில் ஊழல் செய்யும் அரசியல்வியாதிகளுக்குத்தான் இது போன்ற அதிகப்பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.. அதிலும் மாதந்தோறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி,  5 ஆண்டு முடிவில் 65 கோடி ரூபாய் வருமானம் என்று காந்தி கணக்குக் காட்டிய பொம்பளை அரசியல்வியாதிகளுக்கு, ரசாயன முறையில் என்ன மாதிரியான தண்டனை தரப்பட வேண்டும் என்பதையும் ஆத்தாவே சொல்லிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!

படித்ததில் பிடித்தது

ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. நான் அந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பில் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தபோது தேங்காய் சீனிவாசன் பற்றி பேச்சு வந்தது.

“அவருக்கு நான் ஒரு படம் செய்து தரலாம்னு இருக்கிறேன். இது பற்றி சென்னை சென்றதும் பேசலாம்..” என்று சொன்னார் ரஜினி. படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் சென்னை திரும்பினோம். ரஜினி ஒரு பிளைட்டில் ஏறி முன்பே சென்றுவிட்டார். நான் மறு பிளைட்டில் ஏறுவதற்காக படக் குழுவினருடன் ஐதராபாத் ஏர்போர்ட்டுக்கு சென்றேன். அப்போது தேங்காய் சீனிவாசனும் அவருடைய மனைவியும் சென்னையில் இருந்து வந்திறங்கினர்.

அவரைப் பார்த்ததுமே, “ஒரு சந்தோஷமான செய்தியை சொல்லப் போறேன்..” என்று சொன்னேன்.  உடனே அவர், “நான் ஒரு துக்கச் செய்தியைச் சொல்லப் போறனே..?” என்று சொல்லிவிட்டு, “சரி முதல்ல நீயே சந்தோஷமான செய்தியைச் சொல்லு..” என்றார். ரஜினி சொன்ன விஷயத்தைச் சொன்னதும் மகிழ்ந்தார். உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதனால்தான் துக்கத்திற்கு வந்திருக்கிறோம். மெட்ராஸ் வந்ததும் இது பற்றி பேசலாம் என்று சந்தோஷமாய் சொல்லிவிட்டுச் சென்றார்.

நான் சென்னைக்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து தேங்காய் சீனிவாசனின் சகோதரி எனக்கு போன் செய்து, ஐதராபாத்தில் அண்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதார். நான் அவர் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு நின்றேன். சிவாஜி ஸார் உட்பட பல நடிகர், நடிகைகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். சிவாஜி ஸார் உட்பட பலரும் வாசலிலேயே உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது ராமாவரம் தோட்டத்தில் இருந்து போன் வந்தது. மக்கள் திலகம் அப்போதும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அதே நேரத்தில் முதல்வராகவும் இருந்தார். “சி.எம்.முக்கு உடம்புக்கு ரொம்ப முடியலை. அதனால் ஜானகியம்மா வர்றாங்க. பாடியை எடுத்திராதீங்க..” என்று போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சில நிமிடங்களில் ராமாவரம் தோட்டத்தில் இருந்து மீண்டும் போன். சி.எம். வர்றார் என்று சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் மக்கள் திலகத்தின் கார் வந்தது. அவர் காரில் வந்து இறங்கியதுமே சிவாஜி ஸார் உட்பட அனைவரும் எழுந்து நின்றார்கள். காரைவிட்டு இறங்கியதுமே மக்கள் திலகம் கொஞ்ச நேரம் தூரத்திலேயே நின்று தேங்காய் சீனிவாசன் உடலை பார்த்துக் கொண்டிருந்தார். உடல் நிலை மோசமாக இருந்ததால் அவரால் ரொம்ப நேரம் நிற்கவும் முடியவில்லை.

மெல்ல தேங்காய் சீனிவாசன் அருகில் சென்று மாலை அணிவித்தார். அந்த மாலையைத் தூக்கி போடுவதற்கே ரொம்ப சிரமப்பட்டார். உடல் நிலை அந்த அளவுக்கு மோசமாக இருந்தும் தேங்காயின் மீதிருந்த பாசத்தால் வந்திருக்கிறார் என்று எல்லோரும் முணுமுணுத்தார்கள்.  தேங்காய் சீனிவாசன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. பின்பு மெல்ல திரும்பி நடந்து காரில் ஏறினார். காரில் ஏறும்போது தேங்காய் சீனிவாசன் மகனை சைகையால் அழைத்தார். சரியாகப் பேசக் கூட முடியாத நிலையில் இருந்ததால்தான் சைகையால் அழைத்தார். அவரையும் காரில் ஏற்றிக் கொண்டார்.

தேங்காய் சீனிவாசனின் உடலை எடுப்பதற்கு நேரமாகிவிட்டது. இந்த நேரத்தில் எதற்கு அவரை காரில் ஏற்றிக் கொண்டு போகிறார் என்று எல்லோருக்கும் புரியவில்லை. எல்லோரும் குழப்பத்தில் இருக்கும்போது கார் கொஞ்ச தூரம் சென்றதும் நிற்கும் சப்தம் கேட்டது. காரில் இருந்து தேங்காய் சீனிவாசனின் மகன் இறங்கி வந்தார். அவரின் கையில் ஒரு பேப்பர் கட்டு இருந்தது. நெருங்கும்போதுதான் தெரிந்தது அது பெரும் பணக்கட்டு என்று..!

நன்றி : எ.சங்கர்ராவ்
நூல் : தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.
நக்கீரன் வெளியீடு
விலை : ரூபாய் 150.

பார்த்ததும் பதறியது 


இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-21-09-2011

21-09-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அன்புக்கு நான் அடிமை..!

இதுவரையில் நீட்டமாக வயரை மாட்டி காது கேட்கும் மெஷினை வைத்திருந்த நான் கடந்த 10 நாட்களாக புதிய மாடல் மெஷினை மாட்டிக் கொண்டு திரிகிறேன்.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜவஹர் ஐ.ஏ.எஸ்.ஸின் பொற்கரங்களால் ஒரு சுதந்திர தினத்தன்று, மதுரை ரேஸ்கோர்ஸ் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற விழாவொன்றில்தான் அந்த பழைய மிஷினை நான் வாங்கினேன்..!

கடந்த 20 ஆண்டுகளாக அது என்னுடன் உடன் பிறந்த சகோதரனை போன்று இருந்து வந்திருக்கிறது. ஹியரிங் எய்டு கடையில் சொன்னால் நம்ப மறுத்தார்கள். கருவிழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு ஆச்சரியப்பட்டார்கள். “எப்படி ஸார்..? எப்படி ஸார்..? அதுவும் கவர்ன்மெண்ட்ல கொடுத்தது. மட்ட ரகமாத்தான ஸார் இருக்கும்..” என்றார்கள். இதுதான் எனக்கும் புரியவில்லை.  ஆனாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு நானே அதற்கு கட்டாய ஓய்வளித்து வீட்டில் உட்கார வைத்துள்ளேன்.

பதிவுலகத் தம்பி இராமசாமி தனது தந்தையார் மூலமாக என்னிடம் கேட்காமலேயே எனக்காக இந்த புதிய மிஷினை வாங்கி நமது எளக்கிய விடிவெள்ளி மயில் ராவணன் மூலமாகக் கொடுத்தனுப்பியுள்ளார். இந்த மாதம் நானே வாங்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் “ஏற்கெனவே நாங்க வாங்கி தயாரா வைச்சிருக்கோம் பிரதர்.. மருவாதையா இதைத்தான் நீங்க போடணும்..” என்று சொல்லி இதனை அன்பளிப்பாக கொடுத்துவிட்டிருக்கிறார் இராமசாமி..! (பெயரை சொல்லாமல் இருந்து தொலையக் கூடாதா என்று தம்பிகள் திட்டக் கூடாது. இதையெல்லாம் சொல்லித்தான் ஆகணும்) 

தம்பிகள் இராமசாமி மற்றும் மயிலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..! 

வன்மையான கண்டனம்..!

பொதுவாகவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டாலே நமது காவல்துறையினருக்கு மாமியார் வீட்டுக்கு வந்தது போன்ற சந்தோஷம்.  சட்டத்தின் துணை கொண்டு அவர்களுடைய அராஜகங்களும் ஆரம்பித்துவிடும். இந்த முறையும் சப்தமில்லாமல் செய்துதான் வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வின் அத்தனை பெருந்தலைகளும் உள்ளே போயாக வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கட்டளைபோலும். இதற்காக அவர்கள் மீது புகார் இல்லையென்றாலும்கூட தி.மு.க. ஆட்சியில் புகார் கொடுக்க வந்து ஏற்றுக் கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டவர்களைக்கூட தேடி கண்டுபிடித்து புகாரை வாங்குகிறார்கள்.

பல புகார்கள் உண்மையாக இருந்தாலும், சில புகார்களை கேள்விப்படும்போது சம்பந்தப்பட்டவரை உள்ளே வைப்பதற்காகவே புகார்கள் பெறப்பட்டவை போல தோன்றுகின்றன. இது ஒரு புறம் இருக்கட்டும். கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறைப்படுத்தலாம். ஜாமீன் கிடைத்தால் அவர்கள் வெளியேறலாம். காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வழக்கை நேர்மையான வழியில் நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களை அடித்து, உதைத்து, சித்ரவதைப்படுத்துவது அவர்கள் செய்த செயலைவிட மிகப் பெரிய கொடூரம்.

மதுரையில் கைதான அத்தனை தி.மு.க. வி.ஐ.பி.களுக்கும் இதே மரியாதைதான் கிடைத்திருக்கிறது. கேட்டால், போலீஸையே எதிர்த்து பேசினான் ஸார்.. எங்களையே சல்யூட் அடிக்க வைச்சான் ஸார் என்று ஏதோ அவர்களை தேவதூதுவர்கள் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள் போலீஸார்.. 

சென்னையில் சக்சேனாவையும், அவரது உதவியாளர் ஐயப்பனையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். இந்த குரூர சந்தோஷம் யாரை திருப்திப்படுத்த..? பாவம் ஐயப்பன்.. கால்கள் வீங்கி நடக்கக்கூட முடியாமல் நடந்து வருவதைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. க்க்கூஸ்ல உக்கார கூட முடியலை என்று தனது வழக்கறிஞரிடம் சொல்லி அழுதாராம்.. ஜெயலலிதாவை கைது செய்தபோது போலீஸார் இதே போன்று செய்திருந்தால் இந்த அம்மையார் சும்மா இருந்திருப்பாரா..? இதுதான் ஆட்சியாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்..!





குற்றம் செய்தார்கள்.. கைது செய்தேன் என்கிறார்களே போலீஸார்.. சென்ற ஆட்சியின்போது இதே குற்றச்சாட்டுக்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றவர்களிடம் புகார்களை வாங்கக்கூட மறுத்து அவர்களை அடித்து விரட்டினார்களே.. அந்த போலீஸார் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அது மட்டும் தவறில்லையா..? புகார் கொடுக்க வந்தவர் யாராக இருந்தாலும், எவர் மீதான புகாராக இருந்தாலும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து, விசாரித்து குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையில்லையா..? அந்தக் கடமையை செய்யத் தவறிய போலீஸ்காரர்களுக்கு யார் தண்டனை தருவது..? ஆத்தா ரொம்பத்தான் கூவுதுய்யா..!

பரபரப்பில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம்

பேங்க் பேலன்ஸ் 1 லட்சமோ, 2 லட்சமோ.. இவ்வளவுதான் இருக்கும். ஆனால் உறுப்பினர்கள் எண்ணிக்கை 1250. சின்னத்திரையில் தினமும் நம்மையெல்லாம் அழுக வைக்கும், சிரிக்க வைக்கும் இந்த நடிகர்களின் சங்கத்தில் தற்போது கடும் புகைச்சல்.

தற்போது முதல் முறையாக இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 9-ம் தேதியன்று நடக்கவுள்ள தேர்தலில் நடிகர்கள் 3 அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். 

தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன். இவர் தலைமையில் ஒரு அணி. தற்போதைய செயலாளர் ராஜ்காந்த். இவருடைய தலைமையில் 2-வது அணி, தற்போதைய துணைத் தலைவர் பானுபிரகாஷ். இவருடைய தலைமையில் 3-வது அணி. 

போட்டியிடும் அணிகளின் பட்டியல்..!

ராஜ்காந்த் அணி


தலைவர் - ராஜேந்திரன்
செயலாளர் - ராஜ்காந்த்
பொருளாளர் - தினகர்
துணைத் தலைவர்கள் - விஜயபாபு, மனோபாலா
இணைச் செயலாளர்கள் - சத்யப்பிரியா, கன்யா பாரதி, சதீஷ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்
செயற்குழு உறுப்பினர்கள் - குமரேசன், சுக்ரன், ஸ்ரீகுமார், தேவ், பி.ராஜ்குமார், விஜய் ஆனந்த், ஜெயந்த், நிதீஷ், பரத், வீரா, வசந்த், ரூபஸ்ரீ  டாக்டர் ஷர்மிளா, ஷிவானி.

அபிஷேக் அணி


தலைவர் - பானுபிரகாஷ்
துணைத் தலைவர் - அபிஷேக், பாத்திமா பாபு
செயலாளர் - பூவிலங்கு மோகன்
பொருளாளர் - ஸ்ரீதர்
இணைச் செயலாளர்கள் - ஆர்த்தி கணேஷ், கமலேஷ், டிங்கு, விச்சு
செயற்குழு உறுப்பினர்கள் - பப்லூ, பிருந்தாதாஸ், மீனா குமாரி, வெங்கட், விஜய் ஆதிராஜ், சாய்ராம், மேஜர் கெளதம், பிரேம், சாக்சி சிவா, சுபகணேஷ், ஆதித்யா, சங்கீதா, பிரியதர்ஷிணி, பாபூஸ், சத்யா

சிவன் சீனிவாசன் அணி

தலைவர் - சிவன் சீனிவாசன்
பரத் கல்யாண், பாபு கணேஷ், மாலி, ரிஷி, வின்சென்ட் ராய், தர், சாய்பிரசாத், சங்கர், குண்டு கல்யாணம், கர்ணா, ராஜேந்திரன், சுரேஷ், எம்.டி.மோகன், ரொசாரியா, சி.ஐ.டி. சகுந்தலா, சந்திரா லட்சுமண், பாக்ய, ராணி, தேவி, புஷ்பலதா, சிந்து, சுந்தரி.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரையிலும் பெவிகால் போட்டு ஒட்டியதுபோல் பிரிக்க முடியாத நட்பாக இருந்த நடிகர்கள் சங்கத்தினர் இப்போது 3 அணிகள் அமைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. 3 பேருமே அதனை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் நடந்த அவர்களது சங்கத்தின் பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்களும், வாக்குவாதங்களும் நடந்திருக்கின்றன. அதன் பின்புதான் மனக்கசப்பு ஏற்பட்டு நின்னு பார்த்திருவோம் என்று களத்தில் இறங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இந்தக் குழப்பங்களுக்கு பிள்ளையார்சுழி போட்டது, கடந்த கால ஆட்சியில் கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்த இயக்குநர் விடுதலைதான் என்று அனைவரும் குற்றம்சாட்டுகிறார்கள். பாலாஜி என்ற நடிகரை இயக்குநர் விடுதலை, ஒரு நாள் இரவில் பூஸ்ட் அணிந்திருந்த வேளையில் தாக்கிவிட்டார். இந்த விஷயத்தில் நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் சரிவர செயல்படவில்லை. விடுதலையைக் கண்டிக்கவில்லை என்று குற்றம்சாட்டிதான் பலரும் அவர் மீது கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. 

இப்போது கடைசி நேரத்தில் சிவன் சீனிவாசனுடன் ஒன்றாகவே இருந்த பானுபிரகாஷ் தலைமையில் வேறொரு அணி உருவாகிவிட்டது. 

உண்மையில் இந்த அணிக்குத் தலைவர் நடிகர் அபிஷேக்தான். அவர் தலைமையில் ஒரு நட்சத்திர பட்டாளங்கள் அணி வகுத்த பின்னர் அணியில் இருக்கும் கலைஞர்கள் அனைவரும் பிராமணர்களாக இருக்கிறார்களே என்றெல்லாம் பேச்சு எழும்பியிருக்கிறது. இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிட நினைத்த அபிஷேக், துணைத் தலைவர் பதவிக்கு டிரான்ஸபராகிக் கொள்ள பானு பிரகாஷ் தலைவராகிவிட்டாராம்.

3 அணிகளாகப் போட்டியிட்டாலும், யார் ஜெயித்தாலும் அவர்களுடன் இணைந்து சங்கத்தை வளர்க்கப் பாடுபடுவோம் என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு சந்தோஷமே..!


மெய் மறக்கச் செய்த பாம்பே சாரதா..!

2 மாதங்களுக்கு முன்பாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் விழா நடந்த தினத்தன்று சங்கரா டிவியில் பாம்பே சாரதா என்ற இந்தப் பெண்ணை முதல்முறையாகப் பார்த்தேன். சுமாராக 2 மணி நேர கச்சேரி. இரவு 7 மணியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

சாரதா பாடியவை அத்தனையும் தமிழ்ப் பாடல்கள்தான். கூடவே அத்தனைக்கும் அபிநயத்துடன் நடித்தும் காண்பித்தார். அசத்தல்..! 2 மணி நேரமும் மெய்மறந்து போயிருந்தேன். அந்த வீடியோவை இத்தனை நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. சங்கரா டிவியில்கூட கேட்டுப் பார்த்தேன். “மறு ஒளிபரப்பு வரும்போது பார்த்துக்குங்க ஸார். நாங்க தனியா டிவிடி போட மாட்டோம்..” என்றார்கள். நெல்லை வாழ் நண்பர்கள், பதிவர்களிடமும் சொல்லி கேட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை. 

என்றைக்குக் கிடைத்தாலும் அதனை நிச்சயமாக வலையில் ஏற்றுகிறேன். அதுவரையில் தற்போதைக்கு இணையத்தில் இருக்கும் சாரதாவின் இந்த 2 பாடல்களை மட்டும் கேளுங்கள்..!







ஆஸ்திரேலியாயாயாயாயாயாயா..!

ஆஸ்திரேலிய நாட்டின் பெண் நிதியமைச்சரான Penny Wong  தனது லைப் பார்ட்னருக்கு வரும் டிசம்பரில் பிரசவம் நடக்கும் என்று கூறியிருக்கிறார். சந்தோஷம்தான். 



இதில் சுவாரஸ்யம் இவருடைய லைப் பார்ட்னரும் பெண்தான்.. பெயர் Sophie Allouache. விந்தணு தானம் மூலமாக கர்ப்பமாகியிருக்கும் அவரது மூலம் தனக்கு வாரிசு வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார் பென்னி.


தற்போதைய பிரதமரான கில்லர்டு தலைமையில் இயங்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் பென்னி சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சி ஓரினச் சேர்க்கைக்கு எதிரான கொள்கையுடன்தான் இப்போதும் இருந்து வருகிறது என்பது ஒரு மேலதிகச் செய்தி. ஆனாலும் பென்னிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் கில்லர்டு, விரைவில் தனது கட்சியில் இது தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வாழ்க தம்பதிகள்..!


ஜெயலலிதாவின் கொடுத்த பேதி மாத்திரை..!

தனக்கு மிக நெருக்கமானவர்களைத் தவிர மற்ற சினிமாக்காரர்களை போயஸ் கார்டன் பக்கமே வர விடாமல் தடுத்திருக்கும் ஜெயலலிதா கொஞ்சம், கொஞ்சமாக திரையுலகத்தினருக்கு எனிமா கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை தற்போது இருக்கும் 15 சதவிகித்த்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது என்று மட்டும் புகையும் கண்ணீர்ப் புகை குண்டை வீசியிருக்கிறார். பத்து நாட்களாக கண்களைக் கசக்கிக் கொண்டிருந்த திரையுலகத்தினர் இன்றைக்கு முறைப்படி அனைவரும் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த கேளிக்கை வரியினால் திரையுலகத்தினருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அண்ணாமலை தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“தமிழகம் முழுக்க 10 மாநகராட்சிகள் மற்றும் 22 நகராட்சிகளில் 15 சதவிகிதம் கேளிக்கை வரியாக தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்துக்களில் 10 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 30 சதவிகிதமாகவும், பஞ்சாயத்துக்களில் 20 சதவிகிதமாகவும் உயர்த்தப்படவிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 15 சதவிகிதமான 18 ரூபாய் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது 36 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் ஒரு டிக்கெட்டுக்கு 84 ரூபாய் மட்டுமே திரையரங்க உரிமையாளருக்குக் கிடைக்கும். இதில் 70 சதவிகிதமான 58 ரூபாய் விநியோகஸ்தர்கள் பங்காக போய்விடும். மீதமிருக்கும் 25 ரூபாயில்தான் திரையரங்குக்கான பராமரிப்புச் செலவுகள், ஊழியர்களுக்கான ஊதியம், மின்சார கட்டணம் போன்றவற்றைக் கொடுத்துவிட்டு லாபத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று சென்னை தவிர்த்த மற்ற நகரங்களில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுக்கு 7 ரூபாய் 50 காசுகள் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது 15 ரூபாயாக உயர்த்தப்பட்டால், வெறும் 10 ரூபாய் மட்டுமே திரையரங்க உரிமையாளருக்குக் கிடைக்கும். இதனை வைத்து நாங்கள் என்ன செய்வது..” என்று கேட்கிறார் இவர். (அதே சமயம், தமிழக அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் சில நிபந்தனைகளுடன் கூடிய விதிமுறைகளை செயல்படுத்தி படங்களைத் தயாரித்தால், கேளிக்கை வரி அவர்களுக்கு ரத்தாகும்.) 

இதனால்தான் இன்றைக்கு அவசரமாகக் கூட்டப்பட்டிருக்கும் திரையுலகப் புள்ளிகளின் கூட்டத்தில் பிரபல நடிகர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இது நியாயமானதுதான்.. படம் முடிவடைந்தவுடன் ஹீரோ மட்டும் முழு தொகையுடன் வீட்டுக்கு போய்விட, தயாரிப்பாளர்கள் மட்டுமே நஷ்டத்தை முழுமையாக சந்தித்து அடுத்த படம் எடுப்பதற்கான சக்திகூட இல்லாமல் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள். 

ஊர் கூடி தேர் இழுப்பதைப் போல திரையுலகமே ஒன்று சேர்ந்து அமர்ந்து பேசினால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்..!


கூடன்குளம் மின் திட்டம் தேவையா..?!

கூடன்குளம் அணு மின் திட்டத்தை எதிர்த்து கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். அலைகடலாக திரண்டு வந்திருக்கும் அவர்களை பார்த்தபோது எந்த அளவுக்கு அணுக் கசிவு பற்றிய செய்திகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.


அந்தத் திட்டத்தை கொண்டு வந்தபோதே பல கட்சியினரும், பொதுமக்களும் எதிர்த்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையின் கடுமை காட்டியதாலும், கட்சிகளுக்குள் இருந்து ஒற்றுமையின்மையாலும் அது அப்போது பிசுபிசுத்துப் போயிருந்தது. இப்போது ஜப்பானிலும், பிரான்ஸ், ஜெர்மனியிலும் அடுத்தடுத்து அணு உலைகளில் ஏற்பட்ட கசிவு பற்றிய செய்திகள் அந்த மண்ணை எட்டியவுடன் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிய உணர்வு அவர்களுக்கு வந்திருக்கிறது. இந்த முறை தங்களது கோரிக்கையில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

மின்சாரத் தேவைகளுக்கான திட்டங்கள் தேவைதான் என்றாலும், அவற்றை மாற்று வழிகள் இருந்தால் அவைகள் மூலமாக பெறுவதற்கு முயலலாமே..? பிரச்சினைகள் வரவே வராது என்று யாரும் வாக்குறுதி தர முடியாது.. சுனாமி வந்தபோது யாராவது அதனை நினைத்து பார்த்திருந்தார்களா..? சுனாமி என்ற வார்த்தையையே அப்போதுதான் தமிழகத்து மக்கள் தெரிந்து கொண்டார்கள்.


இத்தனை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களைப் புறக்கணித்துவிட்டு இந்த்த் திட்டத்தை தொடர வேண்டுமா என்று மத்திய, மாநில அரசுகள் யோசிக்க வேண்டும். ஜெயலலிதா வழக்கம்போல முதல் நாள் ஒரு கொள்கையும், மறுநாள் வேறொரு கொள்கையும் பேசி தான் ஜெயலலிதாதான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். 

அனல் மின்சாரம், கடல் நீரில் இருந்து மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று மாற்று வழிகளை ஆராய்ந்து அதற்குச் செலவிட்டாலும் பரவாயில்லை. என்றைக்கோ கூட்டம், கூட்டமாக கொள்ளை கொண்டு போகக் காத்திருக்கும் இந்த எமன் நமக்குத் தேவையில்லை..!



33 வருடங்களில் 333 திரைப்படங்கள்

பரிச்சூரி பிரதர்ஸ். முதலில் இவர்களை புக் செய்துவிட்டு பின்புதான் அலுவலகம் அமைக்கும் முடிவுக்கே வருவார்கள் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள். 


பரிச்சூரி வெங்கடேஸ்வரராவ், பரிச்சூரி கோபாலகிருஷ்ணா என்ற இரண்டு பிரதர்ஸ்கள்தான் தெலுங்கு சினிமாவை கடந்த 33 ஆண்டு காலமாக ஆட்டி வைத்த திரைக்கதையாசிரியர்கள். இவர்களிடத்தில் தங்களுக்காகவே கதை கேட்டு, இவர்களது டேட்ஸ் கேட்டு காத்திருந்த ஹீரோக்களே தெலுங்கில் அதிகம்.

என்.டி.ராமரா, நாகேஸ்வரராவ், சோபன்பாபுவில் ஆரம்பித்து, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், மோகன்பாபு ஆகியோர் வரையிலும் அவரவர்க்கு ஏற்ற கதைகளை எழுதி இதில் பல படங்களை சூப்பர்ஹிட்டாக்கியவர்கள் இந்த பரிச்சூரி பிரதர்ஸ்..! 33 வருடங்களில் 333 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இவர்களைப் பாராட்டி தெலுங்குலகில் சமீபத்தில் விழா எடுத்திருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியிருக்கிறது.  இவர்களுடைய அரசியல் அடிதடி படங்களுக்கு ஆந்திராவில் கிடைத்த பாராட்டுக்களே, இந்தச் சகோதரர்களின் பெயரை காலாகாலத்திற்கும் சொல்லும்..!

நம்மூரில் 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதிய ஒரு எழுத்தாளரும் இருக்கிறார். பெயர் ஆரூர்தாஸ். சென்ற வாரம் நல்ல குப்புச்சாமி செட்டியார் தனது சொந்த செலவில் பாராட்டு விழா நடத்தி அவரை கெளரவித்தார். தமிழ்த் திரையுலகில் இப்போது எத்தனை பேருக்கு ஆரூர்தாஸை தெரியும் என்று தெரியவில்லை..! பின்பு யார் பாராட்டு விழா நடத்துவது..? அவர் தலையெழுத்து அவ்வளவுதான்..!


வயசானாலும் பாட்டியில்லை..!

சில விஷயங்கள் கண்ணில்படும்போது  ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன. இந்த வீடியோவை பாருங்கள்.. நம்மூரு கிழவி வயசுதான். ஆனால் ஜிம்னாஸ்ட்டிக் டான்ஸ் செய்யறாங்க.. இந்த வயதிலும் அவருடைய உடல் இந்த அளவுக்கு ஒத்துழைப்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் உள்ளது..! 



பாலை திரைப்படம்

3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனின் வாழ்க்கை முறை என்ன என்பது பற்றி நாம் அதிகம் சிந்தித்த்தில்லை. புத்தகங்களும் அதிகமில்லை. இன்றைய நடப்புகளை பார்க்கவே நமக்கு நேரமும் இல்லை. அதிகம் படிக்காத, தெரிந்து கொள்ள விரும்பாத இந்தச் செய்தியை நிகழ்வுகளாக்கி அதனை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் தோழர் செந்தமிழன்.

'பாலை' என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பங்கு கொண்டிருக்கும் அத்தனை பேருமே இளைஞர்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் இருவரும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். படத்தின் நாயகி ஷம்மு. படம் லோ பட்ஜெட் படம் என்பதால் கிராமவாசிகளுக்காக அதிகம் பேரை பயன்படுத்தாமல் கச்சிதமாக எண்ணி நடிக்க வைத்திருக்கிறார்கள்.


காலச் சூழலில் ஒரு கிராமம் பாலைவனமாக போகும் சூழல் இருப்பதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல விரும்புகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் மீது தங்களது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் வேறொரு கிராமத்து மக்கள் அவர்கள் மீது போர் தொடுக்க.. யார் ஜெயித்தது என்பதுதான் கதை..!

'கற்றது தமிழ்' படத்தில் இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய தோழர் செந்தமிழன் பல சின்னத்திரை தொடர்களில் எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார். தன்னுடைய சொந்தப் பணம் மற்றும் தோழமை உணர்வோடு ஒருமித்தக் கருத்தோடு இணைந்தவர்களிடமிருந்து கிடைத்த பணத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறாராம். வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!


டெர்மினேட்டர்-5 

உலக சினிமா ரசிகர்களிடையே டெர்மினேட்டர் சீரியஸ் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. இது அடுத்து வரவிருக்கும் 5-வது பாகத்தின் டிரெயிலர். ரிலீஸ் அடுத்த ஆண்டுதான் என்றாலும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்..!






தொடர்கிறது காங்கிரஸின் துரோகம்..!

வெட்கம்கெட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தான் தமிழனுக்கு என்றுமே எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

இலங்கையில் மஹிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மத்திய அரசு, நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது. டக்ளஸ் செய்த குற்றம் என்ன என்பதை இந்தத் தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.


அவர் அயல் நாட்டில் அமைச்சராக இருக்கிறாராம். அந்த நாட்டு ஜனாதிபதியோடு உடன் வந்தாராம். அதனால்தான் கைது செய்ய முடியவில்லையாம். ஆனால் அதே சமயம் இனிமேலும் கைது செய்யும் எண்ணமும் இல்லை என்றே சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

கொலை செய்துவிட்டு அடுத்த நாட்டிற்கு ஓடிவிட்டாலோ, அடுத்த நாட்டில் அமைச்சராகிவிட்டாலோ இந்திய அரசு யாரையும் எதுவும் செய்யாது என்பது டக்ளஸின் விளக்கத்தின் மூலம் தெளிவாகிறது. நம் நாட்டில் சிறைகளில் இருப்பவர்கள் இதையே முன் உதாரணமாக வைத்து இனிமேல் நீதிமன்றங்களில் வாதாட வேண்டும். அனைவருக்கும் வருவதும், வந்த்தும் ரத்தம்தான்.. தக்காளி ஜூஸ் அல்ல என்று அனைத்து கொலை குற்றவாளிகளும் ஒன்று சேர்ந்து வாதாடினால், அப்போது இந்த வெட்கம் கெட்ட காங்கிரஸ்காரர்கள் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்..! 


எங்கேயும் எப்போதும் - மாசமா பாடல்

6 மாதங்களுக்கொரு முறை ஏதாவது ஒரு பாடல் ஏதேனும் ஒரு வித்த்தில் ஹிட்டாகிவிடும். அதற்கடுத்து அந்தப் பாடல் காட்சியில் நடித்தவர்களும், இசையமைத்தவரும், பாடலை எழுதியவரும், நடன இயக்குநரும், படத்தின் இயக்குநரும் போதும்டா சாமிகளா.. விடுங்கடா என்று கதறுகின்றவரையில் அதை வைத்து கும்மியடிப்பது மீடியாக்களின் வழக்கம்.

தற்போது 'எங்கேயும் எப்போதும்' படத்தின் 'மாசமா' பாடல் அதனைத்தான் துவக்கியிருக்கிறது. இதனை அடித்துக் கொள்ள வேறொரு பாடல் வரும்வரையில் இதுதான் டிவிக்களின் தினசரி ஊறுகாய்.. 

எதையாவது புதுமையாக செய்தாவது ரசிகர்களைக் கவர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் இது போன்று வித்தியாசத்தை காட்டினால்தான் அந்த இயக்குநர் பெயர் கொஞ்ச நாளைக்கு இங்கே பேசப்படும். இயக்குநர் சரவணனே இந்தப் பாடலை எழுதியிருக்கிறாராம்.  அதனை படமாக்கிய விதமும் பாராட்டுக்குரியது. ஆர்க்கெஸ்ட்ராகாரர்களும், மேடை நடனக் கலைஞர்களும்தான் பாவம்..! தோளைக் குலுக்க தனியா டிரெயினிங் எடுத்தாகணும்..! 





பச்சைக்குடை திரைப்படம்

அன்னக்கிளி செல்வராஜ். தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத பெயர். பல நெஞ்சைத் தொட்ட உன்னத கதைகளுக்குச் சொந்தக்காரர். "கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், புதுமைப் பெண், முதல் மரியாதை. கடலோரக் கவிதைகள், புது நெல்லு புது நாத்து, அந்தி மந்தாரை, இதயக் கோவில், உதய கீதம், சின்னக்கவுண்டர், டும் டும் டும், அலைபாயுதே" என்று இந்த எழுத்தாளரின் கை வண்ணத்தில் எழுந்தவை இன்றைக்கும் மறக்க முடியாத திரைக்காவியங்கள்.

இவரை மாதிரியிருப்பவர்களுக்கு ஒரு கிறுக்கு குணம் இருக்கும். எதையாவது புதிதாகச் செய்கிறேன் என்று சொல்லி சம்பாதித்த காசை விட்டொழிப்பார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. ரோஜாவின் மேக்கப் இல்லாத நடிப்பில் உப்பு என்றொரு படத்தினை எடுத்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார். ஆனால் டப்பு தேறவில்லை.

இப்போது இந்த ஆண்டு ஐ.நா. சபை பசுமையை பாதுகாப்போம் என்ற கோஷத்தை எழுப்பியுள்ளதால் அதற்கேற்றால்போல் படம் எடுக்கிறேன் என்று சொல்லி பச்சைக்குடை என்ற படத்தினை தயாரித்து, இயக்கியிருக்கிறார். 


“பத்து கிணறுகள், ஒரு குளத்திற்குச் சமம்.
பத்து குளங்கள், ஒரு ஏரிக்குச் சமம்.
பத்து ஏரிகள், ஒரு மகனுக்குச் சமம்
பத்து மகன்கள், ஒரு மரத்துக்குச் சமம்.”

- இதுதான் படத்தின் கான்செப்ட். 

மரங்களை நேசிப்போம். வனங்களைக் காப்போம் என்கிறார் செல்வராஜ். இசைஞானி இளையராஜா பணம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்தாலும் பட்ஜெட் 40 லட்சங்களைத் தொட்டுவிட்டது. பிரபல மலையாள நடிகை நித்யாதாஸ் நடித்திருக்கும் இப்படத்தில் இதற்கு மேலும் மார்க்கெட்டிங் நடிகர்கள் யாருமில்லை. 

“இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படமாட்டாது. டிவிக்களில்தான் ரிலீஸ் செய்யப் போகிறேன்..” என்கிறார் செல்வராஜ் ஸார். அடுத்த மாதம் நியூயார்க்கிற்கும் இந்தப் படம் பறக்கவிருக்கிறதாம். ஐ.நா. சபையில் திரையிடப்படவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்..! எதற்கு இந்த வேலை என்றால், “நாம பொறந்த இந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணுமே..” என்கிறார். பழுத்த கம்யூனிஸ்ட்டான செல்வராஜ், இத்தனை ஹிட்டடித்த படங்களை கொடுத்த பின்னும் இன்னமும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார். "உண்மையான கலைஞர்களுக்கு பாராட்டும், மரியாதையுமே போதும்" என்கிறார். வாழ்த்துகிறேன்.. நீங்களும் வாழ்த்துங்கள்..!





கலையுலக வாழ்க்கையில் 50 ஆண்டுகள்..!

'காதோடுதான் நான் பேசுவேன்' என்ற கொஞ்சலுக்குச் சொந்தக்காரரான எல்.ஆர்.ஈஸ்வரி இந்த மாதம் தன்னுடைய கலையுலக வாழ்க்கையின் 50-ம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் 1000 திரைப்பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் ஈஸ்வரியின் சாதனை மகத்தானது..! அவருடைய கீச்சுக் குரலையும் கொஞ்ச வைக்கும் குரலையும் கொஞ்சமாகத்தான் தமிழ்த் திரையுலகம் பயன்படுத்தியிருக்கிறது என்ற வருத்தம் அவருக்கும் உண்டு.


இருந்தாலும் தமிழக்கு மக்கள் மத்தியில் அவரை என்றென்றும் மறக்க முடியாத அளவுக்கான திரைப்பாடல்கள் அவருக்குக் கிடைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். எந்த குக்கிராம்மாக இருந்தாலும் கல்யாண வீடுகளில் ஒளிபரப்பப்படும், ‘மணமகளே மணமகளே வா.. வா..’ என்ற பாடலும், ‘வாராயோ தோழி வாரோயோ’ என்ற பாடலும் ஈஸ்வரியம்மா பாடியதுதான்.. தமிழகத்தின் அத்தனை புகழ் வாய்ந்த ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் தவிர்க்க முடியாத பாடலாக இருக்கும் ‘பட்டத்து ராணி’ பாடலைப் பாடியவரும் இவரே. இரவு நேரங்களில் அத்தனை எஃப்.எம். ரேடியோக்களும் ஒலிக்கவிடும் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்ற பாடலை பாடியதும் இவர்தான்..! 

இவர் பாடி எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் வரும் ‘அடி என்னடி உலகம்.. இதில் எத்தனை கலகம்’ என்ற பாடல்தான். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. எத்தனை, எத்தனையோ அர்த்தங்களை இந்தப் பாடல் மீண்டும், மீண்டும் கற்பிக்கிறது..! வாழ்க கவிஞர்..!

ஒரு புறம் சினிமா பாடல்கள் என்றாலும் இன்னொரு பக்கம் பக்தி பாடல்களில் ஈஸ்வரியம்மாவை அசைக்க முடியவில்லை. ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ளும், ‘கற்பூர நாயகியே கனகவல்லி’யும், ‘அம்பிகையை கொண்டாடுவோம்’ பாடலும் இன்றைக்கும் ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் பாடல்கள். 

தமிழ் மொழி உள்ளவரையில் ஈஸ்வரியம்மாவின் புகழ் என்றென்றும் தமிழர்களிடையே நிலைத்திருக்கும். வாழ்க..





படித்து வெறுத்தது..!

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் போக வேண்டுமென்று புறப்பட்டார். இதற்கொரு காரணம் உண்டு. போன முறை அங்கே போனபோது மூர்த்தி கணேஷ்பட், இனி நீங்கள் இங்கே வர முடியாது என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னாராம். இதை எம்.ஜி.ஆர். விளையாட்டாக எடுத்துக் கொண்டார். ஆனால் ஜானகி அம்மாள் பதறிப் போய் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற கோயில், கோயிலாக அப்போதே போக ஆரம்பித்துவிட்டார்.

போன முறை எம்.ஜி.ஆர். ஈரோட்டிற்கு ஒரு பத்திரிகை விழாவுக்காக வந்தார். சேஷசாயி பேப்பர் மில்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். திருப்பூர்வரை வந்து மங்களூர் எக்ஸ்பிரஸில் ஏறினார். திருப்பூரில் இருளோடு இருளாக ஒரு பெண்மணியை திருப்பூர் மணிமாறன் எக்ஸ்பிரஸில் ஏற்றிவிட்டார்.

அந்தப் பெண்மணி எம்.ஜி.ஆரின் ஏ.சி. முதல் வகுப்புப் பெட்டிக்குள் நுழைந்த 15 நிமிடத்தில் எம்.ஜி.ஆர். வெளியில் வந்தார். அவரது சட்டை சுக்கு நூறாகக் கிழிந்திருந்தது. கோபத்தில் அவராகக் கிழித்துக் கொண்டாரா அல்லது இந்தப் பெண்மணியே கிழித்துவிட்டாரா என்று தெரியவில்லை.

அப்போது அடுத்த பெட்டியில் பரமசிவம் ஸார், பிச்சாண்டி, டாக்டர் சுப்பிரமணியம் எல்லோரும் இருந்தார்கள். ஆத்திரத்தில் வெளியேறிய அந்தப் பெண்மணியை டாக்டர் சுப்பிரமணியம் மாத்திரம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகில் அழைத்தார். “ஏற்கெனவே அவர் சுகமில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது? ஆத்திரத்தை அடக்குங்கள்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். நல்லவேளை இந்த ஆட்சியில் சுப்பிரமணியத்தின் வீடு சுக்குநூறாகக் கிழிக்கப்படவில்லை.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் மூகாம்பிகை கோவிலுக்குப் போனார் எம்.ஜி.ஆர். ஆனால் பாதி வழியிலேயே திரும்பிவிட்டார். அடுத்த்த் தடவை சென்றபோது இனி வர மாட்டீர்கள் என்று குறி சொல்லப்பட்டது. சென்னை வந்த எம்.ஜி.ஆர். அந்தக் காலக்கட்டத்தில் 3 நாட்கள் மயக்கத்தில் இருந்தார். இந்த மூன்று நாட்களும் ஜானகி அம்மாள் பச்சைத் தண்ணீரைத் தவிற வேறு ஒன்றையும் அருந்தாமல், அவர் அருகிலேயே இருப்பதைப் பார்த்து நான் கண்ணீர்விட்டேன்.

- 'வணக்கம்' புத்தகத்தில் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரிஜான்


பார்த்து ரசித்தது



எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

21-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்​திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு,  முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.

தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ்  பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வை​யிடக் கிளம்பியது.


போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயல​​லிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்​கொள்ள​வே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்​களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்​படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்​​படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்​டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.



வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்​கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடி​மட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கி​யடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடிய​வில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற,  போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.


சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு,  அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!

(தொடரும்)

நன்றி : ஜூனியர்விகடன்-24-04-2011

1987, டிசம்பர் 24-ல் என்ன நடந்தது..?

17-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1987, டிசம்பர் 24-ம் நாள்.. தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரான நாள். அ.தி.மு.கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் என்றில்லாமல் அவருடைய ரசிகர் கண்மணிகளும், பொதுவான தமிழகத்து மக்களும் எம்.ஜி.ஆர். என்ற எளிய மனிதருக்காக கண்ணீர்விட்டு அழுத காட்சி தமிழகத்தை உலுக்கியது..!


அன்றைக்கு என்ன நடந்தது என்று இப்போதும் அறிந்து கொள்ளத் துடிக்கும் இன்றைய வாசகர்களுக்காக ஜூனியர்விகடன் இதழ் எம்.ஜி.ஆர். அமரரான நாள் முதல் இன்றுவரையில் நடந்த சில முக்கிய அரசியல் நிகழ்வுகளை தொடர் கட்டுரையாக எழுதத் துவங்கியிருக்கிறது.

இதில் முதல் பாகம் இது : படித்துப் பாருங்கள்..! தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களையும் நான் இங்கே வெளியிடுகிறேன்..!

கடந்த வியாழக்கிழமை அதிகாலை சுமார் 5 மணி இருக்கும்... சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்து கொள்ளும் 'எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழா’வுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக் கொண்டு இருந்தனர் ஊழியர்கள். அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்...

''வேலைகளை அப்படியே நிறுத்திட்டு எல்லோ​ரும் ராஜாஜி மண்டபத்துக்குக் கிளம்புங்க...'' என்று அதிகாரிகள் உத்தரவிட,  'சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்...’ என்று ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு  நாமும் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது!

போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க 'மார்க்’ செய்துகொண்டு இருந்தனர். வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.

'முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது’ என்று கேள்விப்​பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்​பட்டது. எம்.எல்.ஏ. ஹாஸ்டல் பக்கம் இருந்து சத்தமான குரலெடுத்து, ''யப்பா...  யப்பா..!'' என்று கதறிக்கொண்டு முதலில் ஓடி வந்தார்  அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. பஞ்சவர்ணம். மக்கள் கடலின் முதல் அலைகூட வந்து சேராத நேரம். கொஞ்ச நேரம்தான்!

ஒரு கட்டடம் சரிவதுபோல் 'டமார்’ என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக் கொண்டு  ஓடி வந்தனர்.

சில போலீஸ் அதிகாரிகள், ''இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டு வரவில்லை, கொண்டு​ வரவில்லை...'' என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்து வந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.

மிகக் குறைந்த எண்ணிக்​கையில் நின்ற போலீஸார், கண நேரத்தில் ஓரமாய் விலகிக் கொண்டனர். படிக்​கட்டின் மேலே இருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளால் ஒரு புயல் கிளம்பி வருவதுபோல் இருந்தது. வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன் வாசல் வழியாக மேலே ஏறிக் கதவுகளை முட்டி மோதித் திறந்தனர்.

உள்ளே முதல்வரின் உடல் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி, ''எங்கே... எங்கே எங்க தெய்வம்?'' என்று ஓடித் தேடினர். ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ''ஐயோ, காணோமே... காணோமே...'' என்று அரற்றியபடி அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கிவிட்டனர்.

ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன. தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்துவைக்கப்பட்டு இருந்த ஆணிகளின் மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது.

ராஜாஜி மண்டபத்தின் எதிரே இருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டிய பின், சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது. அப்போதுதான் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சௌந்தரராஜன், டி.ராமசாமி ஆகிய மூவரும் ஏற்பாடுகளைக் கவனிக்க வந்து சேர்ந்தனர்.

முதல்வர் உடல் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது. பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது. உடலை வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ''மேடையில் வேண்டாம்... ஹாலிலேயே இருக்கட்டும்!'' என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.


கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா. கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரை அடுத்து ஓர் அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.

பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்கு முன் பின் வாசல் வழியாகக் கொண்டுவந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவில் இருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து இருந்தனர். வழக்கமான அவர் உடை... தூங்கிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர். வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டு இருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை.  வலது கையில் கட்டப்பட்டு இருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45 - ஐத் தாண்டி இயங்கிக்கொண்டு இருந்தது!

சில நிமிடங்கள்வரை மண்டபத்துக்குள் மலர் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர். முதல்வரின் அருகே இடது பக்கமாக, அவரது வளர்ப்பு மகன் அப்பு. அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன்.  கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும், வாய்விட்டுக் கதறினார்கள் பத்மநாபனும் அப்புவும்.

ஜெயலலிதா வந்ததும்... சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்று​ கொண்டு, யாருடைய முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றி இருந்தன. ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார்.

முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்​படும் சரிவான மேடை, தயாரித்து முடியவில்லை. அப்​போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை.

தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார். தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரி செய்து​கொண்டு இருந்தார்.

ராமாவரம் தோட்டத்தில் இருந்து வந்திருந்த முதல​மைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர். சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடி வந்து அமைச்சர்களிடம், ''கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது...'' என்று முறையிட்டார்.

அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர். ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடிக்க, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்கள். ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார்.


முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது. ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது.

வெள்ளை நிற பேன்ட் சட்டையில் இருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார். அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டு இருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின்மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக் கொண்டார். நெற்றி பிளந்து அவருடைய மார்புப் பகுதி வரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல், கைகளை நீட்டி, ''தலைவா,! போயிட்டியா... நீ போயிட்டியா...'' என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்மிலும் ரத்தக் கறை படிந்தது.

- தொடரும்!

நன்றி : ஜூனியர்விகடன்-20-04-2011