Showing posts with label அம்மா கணக்கு சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அம்மா கணக்கு சினிமா விமர்சனம். Show all posts

அம்மா கணக்கு - சினிமா விமர்சனம்

24-06-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வித்தியாசமான கதைக் களனுடன் வந்திருக்கிறது இந்தப் படம். இந்தாண்டு ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவெங்கும் வெளியாகி வெற்றி பெற்ற ‘Nil Battey Sannata’ என்கிற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இது.
அவார்டு படங்களை குறி வைத்து தயாரித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், இந்தப் படத்தையும் அந்த நோக்கத்திற்காகவே தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி என்கிற பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அம்மாவும் மகளும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தால் எப்படியிருக்கும்..? கற்பனை செய்து பார்க்க முடியுமா..? அந்த முடியாத விஷயத்தைத்தான் இதில் படமாக்கியிருக்கிறார்கள்.

மிக இளம் வயதிலேயே திருமணமாகி குழந்தை பெற்று.. கணவன் இறந்துவிட.. குழந்தைக்காக வீட்டு வேலைக்காரியாகவும், மீன் கடையிலும் வேலை பார்த்து மகளை வளர்த்து வருகிறார் அமலாபால். இவருடைய மகளான யுவஸ்ரீ 10-ம் வகுப்பு படிக்கிறாள்.
மகள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுவாளா என்கிற பயம் அம்மாவை பிடித்தாட்டுகிறது. அவள் வேலை பார்க்கும் வீட்டு உரிமையாளரான டாக்டர் ரேவதியிடம் இது பற்றி ஆலோசனை செய்கிறாள் அம்மா.
யுவஸ்ரீக்கு கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது. படிப்பில் கவனமில்லை. டிவி பார்ப்பதிலேயே குறியாய் இருக்கிறாள். அம்மாவைவிடமும் அதிமாகவே பேசுகிறாள். இதனால் மகளின் எதிர்காலம் குறித்து கவலையுடன் இருக்கிறாள் அம்மா.
இதைக் கேள்விப்படும் ரேவதி, அம்மாவையும் படிக்கச் சொல்கிறாள். “நீ 9-ம் வகுப்போட நின்னுட்ட.. ஏன் நீ திரும்பவும் படிக்க்க் கூடாது..?” என்று ஒரு கேள்வியை எழுப்பி அம்மாவை வலுக்கட்டாயமாக படிக்க ஏற்பாடு செய்கிறாள். அதுவும் மகள் யுவஸ்ரீ படிக்கும் அதே பள்ளியில் அதே வகுப்பில் சேர்த்து விடுகிறாள்.
இப்போது அம்மாவும், மகளும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். “இப்போது யார் நன்றாக படிப்பது என்று போட்டி வந்து உன்னுடன் உன் மகளே போட்டி போட்டு படிப்பாள்…” என்று ரேவதி சொல்ல.. இதை நம்பி அம்மாவான அமலாவும் தீவிரமாக படிக்கத் துவங்குகிறார்.
அம்மா பள்ளிக்கு வருவது யுவஸ்ரீக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அம்மாவை வெறுக்கத் துவங்குகிறாள். மாதாந்திர தேர்வில் மகளைவிட அம்மா, அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட.. யுவஸ்ரீ இன்னும் கூடுதலாக வெறுப்படைகிறாள்.
“அடுத்தத் தேர்வில் உன்னைவிடவும் அதிக மதிப்பெண்ணை நான் வாங்கினால் நீ ஸ்கூலுக்கு வரக் கூடாது…” என்று கண்டிஷன் போடுகிறாள் மகள். அம்மாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறாள். இது நடந்ததா இல்லையா..? மகள் 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றாளா.. இல்லையா.. என்பதுதான் மீதமான படம்.
ஹிந்தியில் இந்தப் படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் அதிகம் அறியப்படாத நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்வரையிலும் வசூல் செய்திருக்கிறது இந்தப் படம். ஹிந்தியில் இந்தப் படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரிதான் இந்தத் தமிழ் பதிப்பையும் இயக்கியிருக்கிறார்.
பெண்களுக்கு கல்வி அவசியம்.. பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் புரிதல் அவசியம்.. பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண்டும். கல்வியை மன்னமாக சொல்லிக் கொடுக்காமல் புரிதலோடு சொல்லித் தர வேண்டும். மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்கிற விஷயங்களையெல்லாம் இந்தப் படம் சொல்லித் தந்திருப்பதால் இந்த வருடத்திய தேசிய விருதுகளில் இந்தப் படத்திற்கு நிச்சயம் இடம் உண்டு.
பொதுவாகவே கணக்குப் பாடம் என்றாலே பலருக்கும் அலர்ஜிதான். அது புரியவில்லை என்பார்கள். வரவே வராது என்பார்கள். நிறைய மாணவர்கள் அதில்தான் குறைவான மதிப்பெண் எடுப்பார்கள். அதே சமயம் 100-க்கு 100 எடுக்கும் வித்தகர்களும் உண்டு. இந்தக் கணக்கு பாடத்தில் இருக்கும் சிரமத்தை இந்தப் படத்தில் விலாவாரியாகவே எடுத்துரைத்துள்ளனர்.
கணக்குப் பாடத்தை மற்றைய பாடங்களை போல மனப்பாடம் செய்தெல்லாம் படித்தறியக் கூடாது. இதை மட்டும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். கணக்கு எளிது. அதைப் புரிந்து கொண்டால் அதைவிட எளிது. கணிதம் சூத்திரங்களாலேயே ஆளப்படுவது. அதன் சூத்திரங்களை நாம் புரிந்து கொண்டாலே கணிதம் நம் வசப்பட்டுவிடும் என்று இந்தப் படத்தில் பல இடங்களில் வசனத்தின் மூலமாக தெளிவாக்கியிருக்கிறார்கள். இதற்காக இயக்குநருக்கு தனிப்பட்ட முறையில் நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் சிறப்பான இயக்கத்தினால் படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அம்மாவும், மகளும் மோதிக் கொள்ளும் காட்சிகளெல்லாம் மிக யதார்த்தமாக பதிவாகியிருக்கிறது.
அமலாபால் இவ்வளவு சின்ன வயதில் அம்மாவாக நடித்திருக்க வேண்டுமா என்று யோசித்தால்.. பின்பு மாணவியாக வரும்போது அவருடைய தோற்றம் கொஞ்சமாவது ஒத்து வர வேண்டுமே என்பதற்காகத்தான் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. இவரைத் தேர்வு செய்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
அமலாபாலுக்கு நிச்சயம் இதுவொரு புதுமையான அனுபவம்தான். தமிழில் இதுவரையில் அவர் நடித்த எந்தப் படத்திலும் இந்த அளவுக்கான வசனங்களை பேசி நடித்திருக்கவே மாட்டார். அத்தனை வசனங்களை இதில் பேசி நடித்திருக்கிறார். மகள் தன்னைப் புரிந்து கொள்ளாமலை குறித்து ரேவதியிடம் இவர் புலம்பும் ஆற்றாமையும், ரேவதியின் டேக் இட் ஈஸி பாணியிலான பதிலும் நிச்சயம் குறிப்பிட வேண்டியது.
மகளாக நடித்திருக்கும் யுவஸ்ரீயும் நடிப்பில் குறை வைக்கவில்லை. சிடுசிடு முகத்தில் “நான் வேலைக்காரியாகத்தான் போறேன்..” என்ற சின்ன வயது கோபம் குறையாத பேச்சும்.. அம்மாவை வெறுப்பேற்ற செய்யும் செயல்களும் அந்த வயதுக்கே உரிய பிள்ளைகளை அடையாளம் காட்டியிருக்கிறது. ரேவதி மிக பாந்தமாக நடித்துள்ளார். இவருக்கும், இவரது கணவருக்குமான உறவும், குழந்தைகள் இல்லாத அந்த வீட்டில் நிலவும் ஒரு அமைதியும் குறியீடுகளாகத் தெரிகிறது.
இவர்களையும் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் சமுத்திரக்கனி.  இவருடைய கேரக்டரை பார்ப்பவர்கள் நிச்சயம், “என்னடா இது..?” என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்படியும் சில வாத்தியார்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாதிரி என்பார்கள். அதில் இவரும் ஒன்று என்றே எடுத்துக் கொள்ளலாம்.
முற்றிலும் மாறுபட்ட சமுத்திரக்கனியை இந்தப் படத்தில் பார்க்கலாம். அந்த உடல் மேனரிச ஸ்டைல்.. பிரேயரின் இடையிடையே மாணவர்களை எச்சரிக்கும் கோபம்.. மாணவர்களை நோகாமல் திட்டுவது.. வார்த்தைகளாலேயே கண்டிப்பது என்று தனக்கென்று தனி நடிப்பை காட்டியிருக்கிறார். ரேவதி, அமலாபால், சமுத்திரக்கனி மூவரும் பேசும் காட்சி கொஞ்சம் ஸ்பெஷல்.
இத்தனை கோபமாக இருக்கும் மகள், சக மாணவன் ஒருவன் தன் அம்மாவின் கஷ்டத்தைப் பற்றிச் சொன்னதும், அம்மா வேலை பார்க்கும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டியதும் உடனடியாக மனம் மாறி அம்மாவின் பிள்ளையாக ஆவதெல்லாம் தொலைக்காட்சி சீரியல் ரகம் இயக்குநரே.. இதுவொன்றுதான் படத்தின் மிகப் பெரிய சறுக்கல்..! இதற்குப் பதிலாக வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.
படத்தின் ஒளிப்பதிவு அப்படியொரு கிளாஸ் ரகம். கேவமிக் ஆரியின் கைவண்ணத்தில் அமலாபாலின் வீட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவினாலேயே கவனிக்க வைத்திருக்கிறது. இயக்குநரே அதிகப்பட்சமாக குளோஸப் காட்சிகளாகவே வடிவமைத்திருப்பதால் இதில் கேமிராவின் பங்களிப்பும் பெரிதாகத்தான் தேவைப்பட்டிருக்கிறது. அவரும் தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்.
அமலா பாலின் வீடு, வீடு இருக்கும் பகுதி.. மீன் கடை.. ரேவதியின் வீடு. தோற்றம் என்று அனைத்திலும் கலை இயக்குநரின் கைவண்ணத்தில் அழகு மிளிர்கிறது. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.. பட்.. பின்னணி இசையில்தான் ராஜா நிற்கிறார். அனாவசியமான திணிப்புகள் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறது அவருடைய பின்னணி இசை. நன்றி ராஜாவுக்கு..!
கதாசிரியர் நிதீஷ் திவாரியின்  இந்த யோசனைக்கு ஒரு சபாஷ்தான். ஆனால் இந்தியாவில் இது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. எந்தப் பள்ளியிலும் 3 அல்லது 4 வயதுக்கு மூத்தவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்ப்பதில்லை. அதற்கு வாய்ப்பும் வந்ததில்லை. கல்லூரிகளில்கூட அஞ்சல் வழிக் கல்வியில் படித்துக் கொள்ளுங்கள் என்பார்கள். முடியாத ஒரு விஷயத்தை முடிந்தால் எப்படியிருக்கும் என்று பார்க்கவே இதனை படமாக்கியிருக்கிறார்கள் போலும்..!
கணிதம் பாடம் எத்தனையோ மாணவ, மாணவியர்களை பயமுறுத்தியிருக்கிறது. ஆனால் அதனை புரிந்து கொள்ளக் கூடிய சூட்சுமம்தான் யாருக்கும் இல்லை. அதைச் சொல்லித் தரவும் இங்கே ஆசிரியர்களுக்கு திறன் இல்லை. அந்த அளவுக்குத்தான் கல்வியின் தரம் நம் நாட்டில் இருக்கிறது.
இந்தப் படத்தின் வசனங்கள் சொல்லும் விஷயங்களை எந்தப் பள்ளியிலும் எந்த ஆசிரியரும் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பவர்களாவது படத்தில் சொல்லியிருக்கும் கணிதம் பாடம் பற்றிய அறியாமையை தெரியாதவர்களுக்குச் சொன்னால், இது மிகச் சிறந்த கல்விச் சேவையாகத்தான் இருக்கும்.!
அம்மா கணக்கு – அம்மாக்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு பாடம்..!