எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்

04-05-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாதி முழுவதும் ஒரு கதை.. இரண்டாம் பாதி முழுவதிலும் அப்படியே வேறுபட்ட ஒரு கதை.. இரண்டுக்கும் இணைப்பாக ஒரு காதல் கதை.. திரைக்கதையை ரசிப்போடு பார்க்க கதையோடு கூடிய மெல்லிய நகைச்சுவை.. கேடி பில்லாவுக்கு அடுத்து மிகப் பெரிய ஹிட்டடித்திருக்கிறது இந்தப் படம்..!

3 படத்தில் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அவசரமாக இந்தப் படத்துக்கு பூஜை போட்டார் தனுஷ்.. ஆனால் படம் எடுத்து முடித்து பாஸிட்டிவ் பார்த்தவுடன் இதுவே இன்னொரு ஹிட்டாகும் சான்ஸ் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு விநியோகஸ்தர்களின் கடனை தனியாக அடைத்துவிட்டு இந்தப் படத்தை எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விற்பனை செய்து தானும் தப்பித்து, நெளிவு, சுழிவு தெரிந்த வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் உருமாறியிருக்கிறார் தனுஷ். அவருக்கு எனது வாழ்த்துகள்..!


பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்..! ஆனால் பெரும்பாலோருக்கு சில பெயர்கள் அவமானத்தைத் தரும் என்று நம்புகிறார்கள். அப்படியொருவர்தான் இந்தப் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன். குஞ்சிதபாதம் என்ற தனது பெயரை குஞ்சு என்று சுருக்கிக் கூப்பிடுவதால் தனக்கு பெரிதும் கேவலமாகவும், அவமானமாகவும் இருப்பதாகக் கருதி, ஹரீஷ் என்று டீஸண்ட்டான பெயராக மாற்றிக் கொள்கிறார். 

இந்தப் பெயர் மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினையினால் காதலும், கல்யாணமும் அந்தரத்தில் தொங்க.. எதையாவது செய்துதான் தனது பெயரைக் காப்பாற்ற முடியும் என்கிற எண்ணத்திற்கு வருகிறார் சிவா. தன்னிடம் இருக்கும் ஓட்டத் திறமையை வைத்து மாரத்தான் ஓட்டத்தில் ஓடி ஜெயித்து புகழ் பெற திட்டமிடுகிறார். இது பலித்ததா இல்லையா என்பதுதான் மீதி படம்..!

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் மெருகூட்டிக் கொண்டே போகிறார் நடிப்பில்..! பிரியா ஆனந்தை பார்க்க வேண்டி பையனை வேண்டுமென்றே பள்ளிக்கு இழுத்துக் கொண்டு போவது.. பிரியாவிடம் தான் அவரை எப்போது முதன்முதலாக பார்த்தேன் என்பதை விளக்கும் காட்சியில் அவர் முகத்தை பார்க்க வேண்டுமே..? பிரின்ஸ்பால் அறையில் பையனுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் அளந்துவிடும் வசனங்கள் காதில் விழவேயில்லை. அந்த அளவுக்கு கை தட்டல்கள்..! 

பிரியாவிடம் எப்படியாவது காதலைச் சொல்லிவிட நினைத்து இவர் செய்யும் ஒன் மேன் ஷோக்கள்.. நந்திதாவின் கதையைக் கேட்டுவிட்டு  அடக்கமான ஸ்டூடண்ட்டாக மாறி அவரிடம் காட்டும் பணிவும், அன்பும்.. ஒரு சாதாரண காமெடி ஆக்டர் என்று நினைத்து போனால் சிறந்த ஹீரோவாகவே உருமாறிப் போயிருக்கிறார் சிவா..! வாழ்த்துகள்..! இன்னும் போக வேண்டிய உயரம் நிறையவே இருக்கிறது..!

பிரியா ஆனந்த் தனது காதலை சொல்லும் காட்சியிலும், அதனை எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த சிச்சுவேஷனிலும் சொல்லித் தொலையேண்டா என்று நம்மையே சொல்ல வைக்கிறார்.. ‘வெளிச்சப் பூவே’ பாடல் காட்சியில் இவ்வளவு அழகா என்று ஏங்கவும் வைக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு.. அற்புதமான படப்பிடிப்பு..! இப்படியொரு மெச்சூர்டு கேரக்டரை இவரால் செய்ய முடியுமா என்றெல்லாம் நம்மை யோசிக்கவே விடாமல் நடித்திருக்கிறார் பிரியா.. 

நந்திதாவின் உருக்கமான நடிப்பில் ‘அட்டக்கத்தி’ மறந்து போயிருந்தது.. இறுதியில் இயக்குநரே அதனை காட்டி நியாபகப்படுத்தியிருக்கிறார்..! சில ஆண்டுகளுக்கு முன்பாக நாம் பேசி, விவாதம் செய்த சாந்தி என்ற தடகள வீராங்கனையின் கதையை அப்படியே எடுத்து கையாண்டிருக்கிறார் இயக்குநர். பெண்ணல்ல.. ஆண் என்ற அந்த பரிசோதனை முடிவு அந்த சாந்தியை எப்படி முடக்கிப் போட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்டவர் நந்திதா என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஒரேயொரு வசனத்திலேயே இதனைக் கடந்து போயிருக்கிறார்கள். ஆனால் நந்திதா தேர்வு இதுக்குத்தானா என்ற சந்தேகமும், கோபமும் இயக்குநர் மேல் எழுகிறது..!

சிவா இருப்பதால் படத்தை முழுவதும் நகைச்சுவையாகவே நகர்த்துவது என்று முடிவெடுத்துதான் படத்தைத் துவக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்துக்காகவே இயக்குநரை இன்னமும் கொஞ்சம் பாராட்டலாம்..! சிவா நண்பன் சதீஷ் பேச்சுகள்.. ப்ரியா எல்.ஐ.சி. பாலிஸி போட அழைப்பது.. அதே பாலிஸியில் சதீஷையும் இழுத்துவிடுவது.. மதன்பாப் மற்றும் பாவாடை சாமியின் காமெடிகள்.. மனோபாலாவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. அவருடைய அந்த பாடி லாங்குவேஜ் அசத்தல். வடிவேலுவுக்கு பிறகு மனோபாலாதான் இந்த விஷயத்தில் மன்னர்..! நந்திதா சொல்லித் தரும் சில டிப்ஸ்களையே நகைச்சுவை வடிவத்தில் செய்திருக்கும் இயக்குநருக்கு மேலும் ஒரு ஷொட்டு..! 

இடைவேளைக்கு பின்பு மாரத்தான் ஓட்டம் கதைக்குள் நுழைந்த பிறகு சினிமா ஹீரோ ஜெயிக்கத்தான் செய்வார் என்பது உறுதியானாலும் எப்படி காட்டப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கடைசியில் எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் போனதுதான் கொஞ்சம் ஏமாற்றம்..! 

அந்த வடக்கத்திய கோச், ஜெயப்பிரகாஷ்.. நந்திதாவின் சொந்தக் கதை.. அவருடைய அப்பாவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. மனிதர் யாரோ..? நன்றாகவே நடித்திருக்கிறார். அந்த அப்பாவி அப்பாவின் கேரக்டர் கச்சிதமாக அவருக்குப் பொருந்தியுள்ளது..! சோகத்துக்குள் சோகமாக இத்தனையையும் நந்திதாவுக்குள் திணித்திருக்க வேண்டுமா..? ஜெமினி ராஜேஸ்வரியை பாட்டி வேடத்தில் பார்த்ததில் ஒரு சின்ன சந்தோஷம்.. 

பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளருக்கு செம வேலை என்றாலும், நயன்தாரா பாடல் காட்சியில் ரெக்கை கட்டி பறந்திருக்கிறார்.. நயன்ஸ் முகத்தில் எப்போதும் இருக்கும் 2000 வாட்ஸ் சிரிப்பு இதிலும் அப்படியே..! எப்போதுதான் மெயின் ஹீரோயினாக மீண்டும் மார்க்கெட்டை பிடிக்கப் போகிறாரோ தெரியலை.. ஆனால் நயன்ஸின் இடம் அப்படியேதான் இருக்கிறது. அந்தக் கள்ளமில்லா சிரிப்பை காண கண் கோடி வேண்டும்.. இந்தப் புள்ளைக்கு ஏன் இம்புட்டு சோதனைன்னு தெரியலை..! ‘பூமி என்னை சுத்துதே’.. ‘வெளிச்சப் பூவே’ பாடல்கள் கேட்கவும் தெளிவாகவே இருக்கின்றன.. பார்க்கவும் பிடிக்கின்றன..!

மாரத்தான் போட்டி பற்றிய அந்த ஓப்பனிங் பில்டப்.. பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட தொகுப்பு காட்சிகளை கச்சிதமாக சென்னையில் நடப்பதுபோல் எடிட்டிங் செய்திருக்கும் விதத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்..! தன்னிடம் இருக்கும் திறமையை வைத்து எதையாவது செய்து சாதித்துக் காட்டுவதுதான் அவரவர்க்கு பெருமை.. பெயரில் என்ன இருக்கிறது சிறுமை என்பதை இறுதிக் காட்சியிலும் ஒரு முறை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.!

எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும் கடைசியில் அட்டக்கத்தி ஹீரோவை கொண்டு வந்து ஒரு காட்சியைச் சொருகி, தேவையில்லாமல் படத்தை மிகப் பெரிய காமெடியாக்கியிருக்க வேண்டாம்.. இது தேவையில்லாதது.. மாரத்தானோடு முடிந்திருந்தால் படத்திற்கு பெருமையாகவே இருந்திருக்கும்..!

எதிர் நீச்சல் - நன்று..!

5 comments:

rajasundararajan said...

உ.த., நானும் எழுதி இருக்கிறேன்: http://www.facebook.com/raja.sundararajan.9/posts/579670348733475

Nondavan said...

அண்ணாச்சி... நல்ல விமர்சனம்.

சிவகார்த்திகேயன் நிச்சயம் பெரிய ஆளா வர வேண்டும்... அவருக்காகவே இந்த படம் நல்லா ஓட வேண்டும் என்று நினைத்தேன். நன்றி அன்ணாச்சி... சிவாவிற்கும் வாழ்த்துகள்...

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

உ.த., நானும் எழுதி இருக்கிறேன்:

http://www.facebook.com/raja.sundararajan.9/posts/579670348733475]]]

அதைப் படிச்சிட்டேன். இதைப் படிச்சிட்டு நாலு திட்டாவது திட்டியிருக்கலாம்ல்ல..!?

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி... நல்ல விமர்சனம்.

சிவகார்த்திகேயன் நிச்சயம் பெரிய ஆளா வர வேண்டும்... அவருக்காகவே இந்த படம் நல்லா ஓட வேண்டும் என்று நினைத்தேன். நன்றி அன்ணாச்சி... சிவாவிற்கும் வாழ்த்துகள்.]]]

வருகைக்கு நன்றி நொந்தவன் ஸார்..!

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்