சினிமா 360-4

03-05-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கிழக்கு பாத்த வீடு

ஹீரோ பெரியகுளம். ஹீரோயின் சின்னமனூர்.. இயக்குநர் தேனிக்காரர். பாட்டுக்காரரும் தேனிக்காரர்.. படத்தின் தயாரிப்பாளரும் தேனிக்காரர். இப்படி தேனி மாவட்டமே ஒன்றிணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அண்ணன் ஸ்டில்ஸ் ரவி எடுத்திருந்த அருமையான புகைப்படங்கள் படத்திற்கு மேலும் மெருகேற்றியுள்ளன. தனது மண்ணின் மைந்தர்களின் படம் என்பதால் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசை வெளியீட்டு விழாவுக்கு ஆர்வத்துடன் வந்திருந்தார்.


படத்துக்கு இசை அமைத்திருந்தவர் மரியா மனோகர்.. வைரமுத்துவின் வரிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலகுருசாமி. அதுவும் “படபடப்பாகுதே..” பாடல் காட்சி நிச்சயம் சேனல்களில் ஹிட்டடிக்கும். 

தனது வார்த்தைகள் படமானவிதம் பார்த்து மிகவும் பெருமைப்பட்டார் வைரமுத்து. 'முதல் மரியாதை' படத்தின்போது சிவாஜிக்கு நரை முடி இருக்கிறதா என்று பலரிடமும் கேட்டு விசாரித்து, இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பின்பே “காதோரம் நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது..” என்று எழுதியதாகச் சொன்னார்.   


படத்தை வாழ்த்திப் பேசிய பாரதிராஜா வாழ்த்தோடு வாழ்த்தாக, “சினிமா யாருக்கும் சொந்தமில்லை. யார் வேண்டுமானாலும் நடிப்பார்கள். இயக்குவார்கள். பணியாற்றுவார்கள்.. யாரும் இதற்கு எந்தவிதத்திலும் தடை போட முடியாது. கூடாது..” என்று பெப்சி மேட்டரையும் சேர்த்தே பேசினார். அதே நேரத்தில் இவர் இப்படி இங்கே பேசுவதே தெரியாமல், பக்கத்து பில்டிங்கான இசையமைப்பாளர் சங்கத்தில் நடந்து கொண்டிருந்த மே தின கொண்டாட்டத்தில் பெப்சி ஊழியர்கள்,  “தமிழ்ச் சினிமாவுக்கு ஒரேயொரு தொழிலாளர் சங்கம்தான். அது நாம மட்டும்தான்..” என்று உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருந்தும் ஒரு சுவையான செய்தி..! 

பிரசன்னா-ஸ்நேகா திருமண அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், இன்னொரு பக்கம் ரொம்ப வருத்தமாகவும் இருந்தது பிரசன்னா-ஸ்நேகா திருமண அறிவிப்பு.. 


பத்திரிகையாளர்களை தங்களது திருமணத்திற்கு அழைக்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ஜம்மென்று தம்பதிகள் போல் வந்திறங்கியவர்களை வளைத்து, வளைத்து புகைப்படமெடுத்த புகைப்படக்காரர்களுக்கு சளைக்காமல் போஸ் கொடுத்தார்கள் காதலர்கள்..!


பத்திரிகையாளர்கள் அனைவரின் அருகேயும் வந்து திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு "அவசியம் கல்யாணத்து வரணும்.." என்று அன்பாக வேண்டுகோள் வைத்தார் பிரசன்னா. கிடைத்த இடைவெளியில் சிநேகாவைச் சுற்றிவளைத்து “திரும்பவும் நடிக்க வருவீர்களா..?” என்ற ஒரே கேள்வியை அனைத்து சேனல்களும் திரும்பத் திரும்பக் கேட்டாலும், அத்தனைக்கும் புன்னகை மாறாமல் பதில் அளித்தார் இளவரசி..!


புன்னகை இளவரசியைக் கடத்திக் கொண்டு போகப் போவதாக பிரசன்னா அறிவித்தவுடனேயே இமெயிலிலும், டிவிட்டரிலும் பிரசன்னாவுக்கு அன்பான மிரட்டல்கள் வரத் தொடங்கிவிட்டனவாம்..  “நம்பர் டூ நம்பர் பேச குறைந்தபட்சத் தொகை என்ற ஆப்ஷன் மட்டும் இல்லைன்னா நான் சம்பாதிச்சதுல முக்கால்வாசி போன் பில்லுக்கே காணாமப் போயிருக்கும்..” என்று வழக்கமான காதலரைப் போன்றே ஒரு பிட்டையும் போட்டார் பிரசன்னா. சிநேகா, கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது “இனிமேதான் சமையல் கத்துக்கணும்..” என்று பேச்சோடு பேச்சாக சொல்ல, இதற்கு பிரசன்னா காட்டிய ரியாக்சனை பார்க்கணுமே..!! பாவம்தான்..!

தம்பதிகள் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

நெகிழ வைக்கும் வழக்கு எண் 18/9

மனதை நெகிழ வைக்கிறது 'வழக்கு எண் 18/9' திரைப்படம். 'காதல்' படம் பார்த்த அதே பீலிங் நேற்றைக்கும் எனக்குக் கிடைத்தது. கிளைமாக்ஸில் கண் கலங்கிவிட்டேன்.. படம் முடிந்ததும் அரங்கத்தில் எழுந்த பத்திரிகையாளர்களின் கைதட்டல் சப்தம் கேட்டு, வெளியில் நின்று கொண்டிருந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் நெக்குருகிப் போனார்..! நல்ல படங்களை எப்பவுமே பத்திரிகையுலகம் பிரமோட் செய்தேதான் தீரும்.. 


இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள்.. கேனான் 5 டி கேமிராவில் பிரபலமான ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் படம் பிடித்துள்ளார்.. மிகக் குறைந்த செலவிலான தயாரிப்பு.. குறைந்த நாட்கள் ஷூட்டிங் என்று தயாரிப்பாளருக்குப் பிடித்ததுபோல் செய்திருக்கிறார் இயக்குநர். 

இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் லிங்குசாமி பேசியதுபோல், இதுதான் அவரது தயாரிப்பில் வெளிவரும் உண்மையான முதல் படம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்..! இந்தத் தைரியத்தில்தான் யூ டிவியிடம் கொடுத்திருந்த விநியோக உரிமையை திரும்பப் பெற்றுக் கொண்டு தானே வெளியிட முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.. 

வெற்றி பெற வேண்டிய படம்.. அவசியம் பாருங்கள் மக்களே..!


நெல்லை சந்திப்பில் நடந்த சந்திப்பு..!

மாலை 6 மணிவரை காத்தாட இருந்த அரங்கம், 7 மணிக்கெல்லாம் நிரம்பி வழிந்தது. இயக்குநர் நவீனுக்கென்று இணையத்தில் இருக்கும் நட்பு வட்டங்களும், கலையுலக நட்புகளும் ஒன்று சேர்ந்து வந்துவிட பத்திரிகையாளர்களுக்கே உட்கார இடமில்லாமல் போய்விட்டது. நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்புவின் வருகைக்காக நிகழ்ச்சி துவங்க காலதாதமாக.. இதனால் கோபித்துக் கொண்ட சில பத்திரிகையாளர்கள் விழா துவக்கத்திலேயே வாக்அவுட் செய்துவிட்டனர்..


அரசியலும், கலையுலகமும் ஒன்று சேர்ந்து கொள்ள மேடையில் இனி சேர் போடக்கூட இடமில்லை என்கிற லெவலுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது..! வாழ்த்திப் பேச வந்த விக்ரமன் நெல்லை வட்டாரத்தைப் பற்றியும், அல்வா வந்த கதையைப் பற்றியும் விளக்கமாகப் பேசியதுதான் விழாவின் ஹைலைட். கூடவே "இப்படி அல்வா கொடுத்து ஏமாத்துறவன்தான் நெல்லைக்காரன்னு எங்களை கேவலமா பேசாதீங்கப்பா..!" என்று வேண்டுகோளும் வைத்தார்..!

படத்தின் டிரெயிலர், படம் பற்றிய எதிர்பார்ப்பை ரொம்பவே அதிகரித்திருக்கிறது! ஆவலுடன் காத்திருக்கிறோம்..! 


கலகலப்புவில் நடந்த கலாட்டா..!

பெயருக்கேற்றார் போலவே கலகலப்பாகவே நடந்து முடிந்தது கலகலப்பு இசை வெளியீட்டு விழா. மைக்கை நீட்டினாலே சரடு விடும் ஹீரோக்கள் மத்தியில் விமலுக்கு ஒரு பொன்னாடை போர்த்தி, கதம்ப மாலையையே சூட்டலாம்..! 


அனைத்து சேனல்களின் மைக்கிலும் விமல் சொன்னது படத்தில் நடித்தவர்கள் பட்டியலை மட்டும்தான்..! “கொஞ்சம் கூட ஏதாவது.. படத்துல உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்..” என்று கேட்டதற்கு, “என் கேரக்டர் எனக்குப் பிடிச்சிருந்தது. நல்லா நடிச்சிருக்கேன். அவ்வளவுதான்..” என்று சொல்லி எஸ்கேப்பானார். 


மேடையில் அவரை பேச அழைத்தபோது "தேங்க்ஸ்" என்று ஒற்றை வரி சொல்லிவிட்டு தப்பிக்கப் போனவரை இழுத்துப் பிடித்து நிறுத்தியும் ஓடிப் போய் மூலையில் பதுங்கிக் கொண்டார்.. ரொம்ப வெட்கப்படுகிறாரோ என்று நினைத்துக் கொண்டிருக்க.. நிகழ்ச்சியின் இறுதியில்தான் தெரிந்தது அண்ணன் கொஞ்சம் 'பூஸ்ட்' அடித்து வந்திருந்தாரென்று..! ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். அதிலும் அவர்தான் ஹீரோ. "ஹீரோவே இப்படியா..?" என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் விசனப்பட்டு தயாரிப்பு டீமிடம் கேட்டபோதுதான் 'பூஸ்ட்'டுக்கான காரணம் தெரிந்தது. இருந்தாலும் இது தப்பில்லையா..? சின்னப் பையன்.. யாராச்சும் சொல்லி திருத்துங்கப்பா..! 


அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் அடக்க மாட்டாத ஆர்வத்தில் ஒரே கேள்வியைக் கேட்டார்கள் பத்திரிகையாளர்கள்.. “ஏன் இவ்வளவு கவர்ச்சி..?”யென்று..! “இந்தப் பாட்டுல கொஞ்சம் கவர்ச்சியா இருக்கணும்னு முன் கூட்டியே சொல்லிட்டாங்க.. எங்களுக்கும் பிடிச்சிருந்தது.." என்றார்கள் இருவரும். 'இவளுக இம்சை தாங்க முடியலை' பாடலின்போது இவர்கள் அணிந்திருந்த காஸ்ட்யூம்கூட இவர்களே செலக்ட் செய்ததுதானாம்..! 


ம்.. இது நல்லாயிருக்கே..!


ஏன் என்றால் காதல் என்பேன்..!

இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், எஸ்.எஸ்.ஸ்டான்லி, ஏ.ஆர்.முருகதாஸ், சசி ஆகியோர் உதவி இயக்குநர்களாக இருந்தபோது அவர்களுடன் இருந்தவர் கருணாகரன். தேவகோட்டைக்காரர். ஆனால் தெலுங்கு சினிமா பக்கம் போய் Darling  (2010), Ullasamga Utsahamga (2008), Happy  (2006), Balu ABCDEFG  (2005), Vasu  (2002), Yuvakudu (2000), Tholi Prema  (1998) என்று இதுவரைக்கும் 7 படங்களை இயக்கியிருக்கிறார். 


தற்போது முதன் முறையாக தாய்மொழிக்குத் திரும்பியிருக்கிறார். “ஏன் என்றால் காதல் என்பேன்” என்பது படத்தின் தலைப்பு. தெலுங்கு ஹீரோ ராம் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். ஆள்தான் தெலுங்கு என்றாலும் பிறந்தது, படித்தது, வளர்ந்ததெல்லாம் சென்னைதானாம்.. இங்கே தமிழில் ஒரு நல்ல பிராஜெக்ட்டில் அறிமுகமாகிவிட வேண்டும் என்று துடித்தவருக்கு கருணாகரன் கை கொடுக்க.. இங்கே வந்திருக்கிறார். துணைக்கு தமன்னா. 


பொண்ணு சாப்பிட சோறே கிடைக்கலையோன்னு கேக்கணும்ன்ற லெவலுக்கு இருக்கு. ஆனாலும் எப்படித்தான் ஸ்கிரீன்ல பார்க்குறாங்களோ தெரியலை..!? “மெட்ராஸ் ஏர்போர்ட்ல கால் வைச்சதுமே ஒரு மெல்லிய காத்து என் மேல வீசுச்சு.. அது அன்பான காத்து. அவ்வளவு பாசமானவங்க தமிழ்நாட்டுக்காரங்க..” என்று ஐஸ் மேல் ஐஸ் வைத்து பேசியது குழந்தை..!

"கருணாகரன் இயக்கிய 'டார்லிங்' படத்தில் இருந்த ஒரு பாடலின் மாண்டேஜ் காட்சியை நான் இயக்கிய ஹிந்தி கஜினி படத்தில் அப்படியே வைச்சிருக்கேன். எனக்கு ரொம்ப புடிச்ச சீன் அது என்பதால் கருணாவிடம் பெர்மிஷன் கேட்டு வைத்தேன்.." என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழ், தெலுங்கு இரண்டிலுமே ஒரு நேரத்தில் தயாரித்திருக்கிறார்கள். . படத்தின் தயாரிப்பாளர் பெரிய கை என்பதால் படத்தை எல்லா வழிகளிலும் பிரமோட் செய்துவிடுவார்கள்..! .பார்க்கலாம்..!


“50 ரூபா மாலைக்குக் கூடவா எங்களுக்குத் தகுதியில்லை..?”

சென்ற மாதம் காலமான கதாசிரியர், இயக்குநருமான கலைமணியின் மரணம் தமிழ்ச் சினிமாவுலகத்தில் எந்தக் கவனத்தையும் ஈர்க்காமலேயே போய்விட்டது..!


தமிழ்ச் சினிமாவின் ஒரு திருப்பு முனை படமான '16 வயதினிலே' படத்தின் கதை, வசனகர்த்தா இவர்தான்..! 'மண்வாசனை'யும் இவருடைய கதை, வசனம்தான். 'இங்கேயும் ஒரு கங்கை', 'சிறைப் பறவை', 'முதல் வசந்தம்', 'தெற்கத்திக் கள்ளன்', 'பொறுத்தது போதும்', 'சிறையில் பூத்த சின்ன மலர்', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'மனைவி சொல்லே மந்திரம்', 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்; என்று பல பிரபல படங்களுடன் சேர்த்து 85 படங்களுக்கு கதை எழுதியவர். 5 படங்களை இயக்கியுள்ளார். 13 படங்களை தயாரித்துள்ளார். விஜய் நடித்த குருவி படத்துக்கும் இவர்தான் வசனகர்த்தா..!


குடல் புற்றுநோயால் கடந்த 2 ஆண்டு காலமாகவே சிகிச்சை பெற்று வந்த கலைமணி இறுதி காலத்திலும் டிவி சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார். மருத்துவ சிகிச்சைகளுக்கு இவருடைய சீடர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.

அஞ்சலி செலுத்த வந்த 'கடலோரக் கவிதைகள்' ரேகா கதறி அழுதுவிட்டார். கலைமணிதான் ரேகாவை, பாரதிராஜாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தாராம். தனக்கு ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து தன்னை வழி நடத்தியதாகச் சொன்னார் ரேகா. அனைவருக்கும் முன்பாகவே வந்த விஜயகாந்த், அவசரம், அவசரமாக தனது மரியாதையைச் செலுத்திவிட்டு அப்படியே வந்த கையோடு பக்கத்து தெருவில் இருந்த ஆச்சி மனோராமாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பறந்தோடினார். சுஹாசினி, மோகன், ராதிகா மூவரும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள் பாரதிராஜா வருவாரென்று..! ஆனால் அவர் வராமல் அவருடைய பையனை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். 


பாரதிராஜா வராதது மாத்திரமல்ல.. கலைமணியின் இறப்புக்கு இயக்குநர்கள் சங்கமும் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கலைமணியின் சீடரும், நடிகரும், இயக்குநருமான மனோபாலா ரொம்பவே வருத்தப்பட்டார். இறப்புச் செய்தியை இயக்குநர் சங்கத்திற்கு சொன்னவுடன், “அவர் இப்போ உறுப்பினரா இல்லை. அவரோட கார்டு லேப்ஸ் ஆயிருச்சே.. அதுனால சங்கம் சார்பா யாரும் வர முடியாது..” என்று கவர்ன்மெண்ட் ஆபீஸ் போல பதில் சொன்னார்களாம் சங்கத்தில் இருந்தவர்கள்..! அடக்க நாளன்று பொறுமையாகவே இருந்த மனோபாலா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடத்திலும் இதனைச் சொல்லி பெரிதும் வருத்தப்பட்டார். “ஏங்க ஒரு 50 ரூபா மாலை போடக் கூடவா லாயக்கில்லாம போயிட்டோம் நாங்க..” என்று கோபமாகவே பேட்டியும் கொடுத்தார். மறுநாள் இயக்குநர்கள் சங்கத்திற்குச் சென்று ஆவேசமாக சாமியாடிவிட்டும் வந்தார்..! 

இதாவது பரவாயில்லை.. பழம்பெரும் நடிகையும், கே.ஏ.தங்கவேலுவின் மனைவியுமான சரோஜாம்மாவின் மரணத்துக்கு அஞ்சலி தெரிவிக்க முக்கிய சினிமாக்காரர்கள் யாரும் அந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லையாம்..! நடிகர் சங்கத்தினரே கண்டு கொள்ளவில்லை என்று அக்குடும்பத்தினர் அப்போதே வருத்தப்பட்டனர். அவர்களும் இதே காரணத்தைத்தான் சொன்னார்களாம்.. மிகச் சொற்பமான உறவினர்களுடன் சுடுகாட்டுக்குப் பயணமானார் சரோஜாம்மா. 

ஆனால் கலைமணியை அந்த அளவுக்கு விடவில்லை அக்கம்பக்கத்தினர். அந்தப் பகுதி ஆட்டோக்காரர்கள், சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் என்று அனைவரும் ஒன்று சேர ஒரு ஊரே திரண்டிருந்தது கலைமணியின் சவ ஊர்வலத்தில்.. ஜாம்ஜாமென்று அவரவர் சொந்தக் காசில், வெடிகளை வெடித்தும் ஆர்ப்பாட்டமாய் கொண்டு போய் சேர்த்தார்கள்..! கலைமணி அந்த அளவுக்கு அக்கம்பக்கத்தினர் மீது பாசமாக இருப்பாராம்..! அதிலும் ஆட்டோக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் மீது அளவு கடந்த பாசமாம்.. தோளில் கை போட்டு தோழமையுடன்தான் பேசுவாராம். கண்கலங்கிப் போய்ச் சொன்னார்கள்..!

“இவங்களுக்கு இருந்த ஒரு சின்ன மனிதாபிமான உணர்வுகூட வெள்ளித்திரைல உணர்ச்சிகரமா நடிச்சுக் காண்பிக்கிற சினிமாக்காரங்ககிட்ட இல்லையே..” என்றார் மனோபாலா..! 


வெறுப்பாகத்தான் இருக்கிறது..!


பெப்சி-சன் டிவி-தயாரிப்பாளர்கள் சங்கம்

பெப்சியை இரண்டாக உடைப்போம் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடைந்து தற்போது தத்தளிப்பில் உள்ளது. தலைவர் எஸ்.ஏ.சி.யையும், பொருளாளர் தாணுவையும், துணைத் தலைவர் தேனப்பனையும் 6 மாதங்களுக்கு சங்கத்தில் இருந்து நீக்குவதாக 265 பேர் கூடியிருந்த பொதுக்குழு முடிவு செய்து சொன்னது இந்த மூவருக்குமே பயங்கர ஷாக்குதான்..! ஆனாலும் வேறு வழியில்லை. 


போர்க்களத்தில் குதிச்சாச்சு.. எதிர்த்து நிற்போம் என்றவர்களுக்கு ஆத்தா வேறு ஒரு ஷாக் கொடுத்துவிட்டார். அட்ஹாக் கமிட்டியையே பெப்சியுடனான பேச்சுவார்த்தைக்கு அங்கீகாரமான அமைப்பாக அரசுத் தரப்பு முடிவு செய்ய பாவம் எஸ்.ஏ.சி. தரப்புக்கு சுத்தமாக சுதியிறங்கிவிட்டது..! 


இதற்குப் பின்னணியில் இருப்பது சன் டிவிதான் என்பது திரையுலகில் அனைவருக்குமே தெரியும் என்றாலும் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்கள்..! எப்படியும் காசு உள்ளவன்கிட்ட நாளைக்கு நாமதான் போய் நிக்கணும். நாம எதுக்கு வம்பை விலைக்கு வாங்கணும் என்ற சொந்த, சுய லாபத்துடன் அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு சங்கத்தை உடைத்திருக்கிறார்கள்..!

உடைத்த அணியினருக்கோ இன்னொரு பிரச்சினை. அட்ஹாக் கமிட்டிக்கு ஆதரவு கொடுக்கும் கே.ராஜனை அங்கே யாருக்குமே பிடிக்கவில்லை. கே.ராஜன் இதுவரையிலும் 2 படங்களைத்தான் தயாரித்திருக்கிறார். அதுவும் பலான, மொக்கை படங்கள்தான். அவருக்கு என்ன தகுதி இருக்கு தயாரிப்பை பத்தி பேசுறதுக்கு என்கிறார்கள் பெரிசுகள்.. ஆனால் வெளியில் சொல்ல முடியவில்லை. காரணம், கே.ராஜனின் தலைமையில் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அணி திரண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் பெரிசுகளையே கட் செய்துவிட்டு சங்கத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம்..! சங்கத்தில் இருக்கும் கோடிக்கணக்கான நிதியும், பில்டிங்கும், பதவி ஆசையும்தான் சின்ன பட்ஜெட்காரர்களுக்கு பெரிசுகள் போடும் சல்யூட்டுக்குக் காரணம்..!

இன்றைக்கு சங்க அலுவலகத்தில் நுழைய முயன்ற எஸ்.ஏ.சி.க்கும், ராவுத்தருக்கும் இடையே அலுவலக வாசலிலேயே அக்கப்போர் நடந்தது..! பாவம் தாணு ஸார்..! தன் கையெழுத்துக்காக செக் புக்கோடு வீடு தேடி வந்தவர்கள், இன்றைக்கு தெருவுக்கே தன்னை துரத்துகிறார்கள் என்பதை நம்ப முடியாத அதிர்ச்சியோடு பார்த்தபடியிருந்தார். எல்லாம் காலத்தின் கோலம்தான்..!

சச்சு, ரோஜா மலரே ஆன கதை..!

பழம்பெரும் நகைச்சுவை நடிகை சச்சுவுக்கு 'நாடக சூடாமணி' என்ற விருதினை வழங்கி கெளரவித்தது தி.நகர் கிருஷ்ணகான சபா. 


இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், “வீரத்திருமகன் படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது கண்ணதாசன் 'அத்திக்காய் காய் காய்' என்ற பாடலை எழுதினார். நான் அவரிடம், 'இந்தப் பாட்டு நல்லாத்தான் ஸார் இருக்கு. ஆனா இந்த சிச்சுவேஷனுக்கு, எங்க ஹீரோயினுக்கு இது பொருத்தமா இருக்காது. எங்க ஹீரோயின் ரோஸ் மாதிரி ஸார்.. அதை வைச்சு எழுதுங்களேன்' என்றேன். கவிஞர் நொடியும் தாமதிக்காமல் 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற முதல் வரியைச் சொன்னார். அன்னிலேர்ந்துதான் இந்தம்மா ரோஜா மலராயிட்டாங்க..” என்றார். 

கண்ணதாசன் கண்ணதாசன்தான்..!


காந்தி கணக்கில் கில்லியான இயக்குநர் விடுதலை..!

இனிமேல் காந்தி கணக்கு எழுதுவது எப்படி என்று கற்றுக் கொள்ள நினைப்பவர்கள், சின்னத்திரை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் விடுதலையிடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மனிதர் அந்த விஷயத்தில் அரசியல்வியாதிகளையே மிஞ்சும்விதத்தில் இருக்கிறார்..!

2010-2011-ம் ஆண்டுக்கான சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் வரவு செலவுக் கணக்கை எந்தவித கணக்கும் காட்டாமல் வெறும் தொகையை மட்டுமே குறிப்பிட்டு அழகாக கணக்கெழுதி காண்பித்திருக்கிறார் விடுதலை.

பாசத் தலைவன் பாராட்டு விழாவுக்கு 4 லட்சம், இந்த விழாவில் நடன நிகழ்ச்சி மற்றும் பரிசுப் பொருள் வாங்கியதாக 60000, கலைமாமணி மற்றும் மாநில அரசு விருது பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடத்த 78000, பையனூர் நிலத்தின் துவக்க விழாவுக்கு 5,75000, இந்த விழாவுக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்ற கட்டணமாக 2,60,000, காலை டிபன், மதியச் சாப்பாடு வழங்கியதற்கு 1,26,000, பூமி பூஜை போட்ட செலவு 1 லட்சம், பையனூர் நிலத்தில் மரங்களை வெட்ட பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டுக்கு கட்டின பணமாக 1,30,000, பையனூர் நிலத்தை செப்பனிட 6,50,000, சொஸைட்டி ஆபீஸுக்காக செட்டப் செய்ய 2,50,000, செம்மொழி மாநாட்டுக்காக முரசொலி மற்றும் தமிழ்முரசு பத்திரிகைக்கு கொடுத்த விளம்பரமாக 60,000 என்று கணக்கைத் தீட்டியிருக்கிறார்.

பையனூர் நிலத்தில் வீடு கேட்பவர்கள் 2000 ரூபாய் நன்கொடையாக சங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார்கள். 1317 பேர் பணம் கொடுத்தார்கள். மொத்தமாக 26,34,000 ரூபாய் வந்தது.  இதோடு சங்கத்து உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்விக் கடன் செலவுக்காக அபிநயா கிரியேஷன்ஸ் மற்றும் விகடன் டெலிவிஸ்டாஸ் கொடுத்த 4 லட்சம், இயக்குநர் சங்கத்தில் ஏற்கெனவே இருந்த நன்கொடை 3,60,000 என்று அனைத்தையும் சேர்த்தால் 33,94,000 ரூபாய் வருகிறது. விடுதலை காட்டியிருக்கும் செலவு கணக்கு 33,86,477. கையிருப்பு வெறும் 7,523. இது எப்படியிருக்கு..? 

விடுதலை இப்படி தன் மனம்போன போக்கில் செய்திருக்கும் செலவுகளுக்கு பொதுக்குழுவையோ, செயற்குழுவையோ கூட்டி அனுமதியே வாங்கவில்லை. ஆனால் 10000 ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டுமெனில் அதற்கு முன்கூட்டியே பொதுக்குழுவில் அனுமதி பெற வேண்டும் என்று சங்கத்தின் விதிமுறைகள் இருக்கிறதாம்..! 

அன்றைய முதல்வரான, தி.மு.க. தலைவரை அப்பா என்றழைக்கும் நெருக்கத்தில் விடுதலை போட்ட ஆட்டத்தில், அவனவன் பொண்டாட்டி தாலியை அடகு வைச்சு கட்டின பணமெல்லாம் இப்போது அம்பேல்..! 

சென்ற மாதம் நடந்த பொதுக்குழுவில் அத்தனை துணை, உதவி, இணை, இயக்குநர்களே பொங்கிவிட்டார்கள். இதற்கான கணக்கு, வழக்கு ரசீதுகள் எல்லாம் ஆடிட்டரிடம் உள்ளன. அவரிடம் இருந்து சர்டிபிகேட் வந்தவுடன் சங்கத்திடம் அதனை ஒப்படைக்கிறேன் என்று விடுதலை சொன்னாராம். விடுதலையே நேரில் வரவழைத்து கேள்விகள் கேட்க வேண்டும். அவருக்கு அழைப்பாணை அனுப்புங்கள் என்றார்கள் கோபத்துடன். அதன்படி விடுதலைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். வருவாரா அல்லது விளக்கத்தை தபாலில் அனுப்புவாரா என்பது தெரியவில்லை. 

விடுதலை சின்னத்திரையில் கதாசிரியர், இயக்குநர்.. பிரச்சினையை இழுக்குறதுக்கு சொல்லியா தரணும்..? அதுலேயும் அரசியல்வாதியாவும் இருந்திட்டா..? எல்லாருக்கும் பட்டை நாமம்தான்..!


படித்ததில் பிடித்தது :

கேள்வி : 

மைக்கேல் மதன காமராசன் படத்தில் “சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” பாட்டு சிருங்கார ரசம் கொண்டது. ஆனால் காட்சியில் அது அவ்வளவு வெளிப்படவில்லை அல்லவா..?

நடிகை ஊர்வசியின் பதில் :


அந்தப் பாட்டு கிளாமராக திட்டமிடப்பட்ட பாட்டுதான். தண்ணீருக்கு அடியில் நெருக்கமாக நடிக்க கமல் திட்டமிட்டிருந்தார். நான் மடிசார் புடவையில் முழுமையாக சேப்டி பின் குத்தித்தான் எதுவும் விலகாதவாறு நடித்தேன். கமலுக்கு ஏமாற்றம்தான். விவாதமும் ஏற்பட்டது. சரி வேண்டாம் என்று விட்டுவிட்டுப் போய்விட்டார். அசைவமாக இருக்க வேண்டிய சமையல் சைவமா மாறிடுச்சே என்று பீல் பண்ணினார். 

கிளைமாக்ஸில் அத்தனை ஹீரோயினும் அந்த மலை வீட்டில இருந்து இறங்கணும். நான் அந்தக் காட்சியில் இல்லை. அதனால் எனக்குப் பதிலா வெள்ளையா ஒரு பையனை டூப்பு போட்டு இறங்கச் சொல்லியிருக்காங்க. அவன் ஆம்பளைப் பையன்தானே.. புடவையையெல்லாம் தூக்கிட்டு அவன் இறங்கிட்டான். டப்பிங்கில் பார்க்கும்போதுதான் தெரிஞ்சது. அடப்பாவி நான் இத்தனை பாதுகாப்பா நடிச்சதை இவன் இப்படி ஆக்கிட்டானேன்னு நினைத்தேன்.. நான் டப்பிங் பேச மாட்டேன். அந்த சீனை கட் பண்ண்ணும்னு பிடிவாதமா இருந்தேன். அவர்களும் கூடுமானவரை அதை கட் பண்ணியே ரிலீஸ் செய்தார்கள்.

நான், கதாநாயகிகளோட நடிச்சாலும் ஊர்வசி கதாபாத்திரம்தான் இந்தப் படத்தை நிறுத்துச்சுன்னு கமல்ஹாசன் வெளிப்படையாகச் சொன்னதுதான் இன்னைக்கும் என்னைப் பற்றிய பாராட்டாக நிற்கிறது. திரிபுரசுந்தரியா நடிக்கும்போது சாதாரணமாகத்தான் நினைத்து நடித்தேன்.

(- காட்சிப்பிழை திரை இதழில் நடிகை ஊர்வசியின் பேட்டியில் இருந்து)

- மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

15 comments:

G.Ganapathi said...

பூஸ்ட்க்கான காரணம் என்னங்க ...

MARI The Great said...

ஒரே பதிவில எம்புட்டு தகவல் ..?

அமர பாரதி said...

இந்த அளவுக்கு நன்றி உணர்வு படைத்த கலைத் துறையினரைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்து அவர்கள் ஏதாவது நல்லது செய்வார்கள் என்றும் நினைத்து தலையில் மண்ணைப் போட்டுக் கொள்கிறார்கள்.

அக்கப்போரு said...

இன்றைக்கு சங்க அலுவலகத்தில் நுழைய முயன்ற எஸ்.ஏ.சி.க்கும், ராவுத்தருக்கும் இடையே அலுவலக வாசலிலேயே அக்கப்போர் நடந்தது..! ///

முற்றிலும் பொய்யான தகவல். எனது வன்மையான கண்டனங்கள்.
சரவானான்னே நானு அங்க போகவே இல்லயேண்ணே

உண்மைத்தமிழன் said...

[[[G.Ganapathi said...

பூஸ்ட்க்கான காரணம் என்னங்க...?]]]

ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க.. எதை உண்மைன்னு நம்பி சொல்றது..?

உண்மைத்தமிழன் said...

[[[வரலாற்று சுவடுகள் said...

ஒரே பதிவில எம்புட்டு தகவல் ..?]]]

கொஞ்சம்தான்னு நினைக்கிறேன்.. நீங்க இன்னா சொல்றீங்க பிரதர்..?

சத்ரியன் said...

18/9 நிச்சயம் பார்க்கனும்.

*****

////பூஸ்ட்க்கான காரணம் என்னங்க...?]]]

ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க.. எதை உண்மைன்னு நம்பி சொல்றது..?//

ஹஹஹஹ,

நம்ம உண்மை அண்ணனாலயே உண்மையைக் கண்டறிய முடியலையே, விமல்!

சூனிய விகடன் said...

அண்ணே....எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ...( பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்விதான் )....
இந்தத் தலைவாசல் விஜய் அப்படின்னு ஒரு நடிகர் இருக்காரில்லியா.....வரும் ஒவ்வொரு படத்திலும் அவர் தலை காட்டிடுறாரே....அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கான்னு சொல்லுங்க அண்ணே.....நம்ம பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் சாருக்கு அப்புறம் எங்களுக்கு நீங்கதாண்ணே...( வெறும் ஐய்ஸ் அல்ல...ரியல் ...).. எந்தப்படத்தை பார்த்தாலும் அப்பா...அண்ணன், சித்தப்பா , பெரியப்பா., மாமனார், வில்லன் ஆலோசகர் ( அமெரிக்க மாப்பிள்ளை தவிர ) எல்லா ரோல்களிலும் மீசையை வழித்துக்கொண்டு வந்துவிடுகிறார்.........சொல்லுங்கண்ணே...

உண்மைத்தமிழன் said...

[[[அக்கப்போரு said...

இன்றைக்கு சங்க அலுவலகத்தில் நுழைய முயன்ற எஸ்.ஏ.சி.க்கும், ராவுத்தருக்கும் இடையே அலுவலக வாசலிலேயே அக்கப்போர் நடந்தது..!//

முற்றிலும் பொய்யான தகவல். எனது வன்மையான கண்டனங்கள்.
சரவானான்னே நானு அங்க போகவே இல்லயேண்ணே..]]]

பெரிய அக்கப்போருய்யா உன்னோட.. உன்னைச் சொல்லலை..! ஆளை விடும்..

உண்மைத்தமிழன் said...

[[[சத்ரியன் said...

////பூஸ்ட்க்கான காரணம் என்னங்க...?]]]

ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க.. எதை உண்மைன்னு நம்பி சொல்றது..?//

ஹஹஹஹ, நம்ம உண்மை அண்ணனாலயே உண்மையைக் கண்டறிய முடியலையே, விமல்!]]]

நான் பக்கத்துல நின்னுதான் பேசினேன்.. பூஸ்ட் வாடையே அடிக்கலை. அதான் யோசிக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

அண்ணே....எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ...( பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்விதான் )....
இந்தத் தலைவாசல் விஜய் அப்படின்னு ஒரு நடிகர் இருக்காரில்லியா. வரும் ஒவ்வொரு படத்திலும் அவர் தலை காட்டிடுறாரே. அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கான்னு சொல்லுங்க அண்ணே.]]]

அந்தந்த கேரக்டருக்கு அவர் பொருத்தமா இருப்பாருன்னு இயக்குநர்கள் நினைக்குறதுதான் முக்கியக் காரணம். அடுத்தது அவரோட சம்பளம் குறைவு. நல்ல மனிதர்.. இதெல்லாம் அடுத்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

இந்த அளவுக்கு நன்றி உணர்வு படைத்த கலைத் துறையினரைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்து அவர்கள் ஏதாவது நல்லது செய்வார்கள் என்றும் நினைத்து தலையில் மண்ணைப் போட்டுக் கொள்கிறார்கள்.]]]

கலைத்துறையினர் அல்லாதவர்கள் அப்படியே நல்லது செய்து ஓய்ந்துவிட்டார்களா என்ன..?

Caricaturist Sugumarje said...

மூச்சுவிட முடியாமல் தகவல் தகவல்...

கலைமணி தனக்கு கண், காது, வாய்ன்னு “என் இனிய தமிழ்மக்களே” சொன்னாரே.. அதெல்லாம் சும்மாவா? கொடுமை!!!

வாழ்த்துகள்!

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

மூச்சுவிட முடியாமல் தகவல் தகவல்...
கலைமணி தனக்கு கண், காது, வாய்ன்னு “என் இனிய தமிழ் மக்களே” சொன்னாரே.. அதெல்லாம் சும்மாவா? கொடுமை!!! வாழ்த்துகள்!]]]

அவ்வளவுதான்.. செத்த பின்பு கலையுலகத்தினருக்கு அந்த உலகத்திலேயே மரியாதை இல்லை.. இதைத்தான் தூங்கும்போதுகூட காலாட்டிக்கிட்டே தூங்கணும்னு சொல்றது..!

நம்பள்கி said...

என்னுடைய ஆஸ்தான நடிகர் வெ. மூர்த்தி இப்போ நடிக்கரதில்லையா? நலமாகத் தானே இருக்கிறார்?