கலைஞருக்கு நன்றி


09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“சினிமாக்காரர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.

சினிமாக்காரர்களால்தான் தமிழ்நாடு இந்த இழிவான நிலைமைக்குப் போய்விட்டது..

சினிமாவினால்தான் தமிழ்நாடு கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது.

அடுத்தும் ஒரு சினிமாக்காரன் வந்துதான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? தமிழன் இளிச்சவாயன் என்று நினைத்தார்களா..?”

இது போன்ற கோஷங்களெல்லாம் இப்போது தமிழ் பேசும் கட்சிகளின் ரெகுலர் கோஷங்களில் டாப் டென் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன.

ஆனாலும் சினிமாவை தமிழகத்தின் தலையாயத் துறையாக மாற்றிய பெருமையுடையவர்கள் சினிமாவை கலையாக, அதனை ஒரு மேம்படுத்தப்படும் துறையாக நினைத்த கலைவல்லுநர்கள்தான்..

ஓவியம், நுண்கலை, புத்தகம், கட்டிடக்கலை, சமையல் கலை போன்று சினிமாவிலும் ஒரு கலை உள்ளது. அந்தக் கலையில் தேர்ந்தவர்களால்தான் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் ரசிகர்களைக் கட்டி போட முடிகிறது. அவர்களால்தான் திரைப்படம் வெற்றி பெறுகிறது. இதில் கை தேர்ந்தவர்கள் கூட்டணி அமைத்தால், அது அசைக்க முடியாத முழு மெஜாரிட்ட பெற்ற அரசியல் கூட்டணியைப் போல்.. சூப்பர்ஹிட் இவர்களால்தான்.

இவர்களது சினிமா ஆசையும், ஆர்வமும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. அவர்களுடைய ஆர்வத்திற்கு தீனி போடுவதுதான் உலக சினிமா. பல்வேறு மொழி திரைப்படங்களை உள்வாங்கிக் கொண்டு இன்னும் தீவிரமாக தமிழிலும் அது போன்ற படைப்புகளை வெளிக்கொணர வைக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் அந்த கலைஞர்களுக்கு உலக சினிமா பற்றிய அறிவு மிக அவசியம்.
நான் இந்தப் பதிவிலும்,
இந்தப் பதிவிலும்
சொன்னது போல கடந்த 5 வருடங்களாக ICAF என்கிற தனியார் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்று வந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இதுவரையிலும் தனி நபர்கள், அமைப்புகளின் ஆதரவோடுதான் நடந்து வந்தது.

இப்போது, இந்த ஆண்டுதான்.. முதல் முறையாக தமிழக அரசின் நிதியுதவியோடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆணையையும், உதவித் தொகையையும் தமிழக முதல்வர் கலைஞர் நேற்று ICAF அமைப்பின் செயலாளரும், விழாக்குழுத் தலைவருமான திரு.ரங்கராஜ், துணைத் தலைவர் திரு.சீனிவாசன் மற்றும் இன்னுமொரு துணைத் தலைவர் திரு.எஸ்.வி.சேகரிடமும் வழங்கியுள்ளார். (படம் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்)

25 லட்சம் ரூபாய் உதவி என்பது சாதாரண விஷயமில்லை. இந்த விஷயத்தில் தனி அக்கறை எடுத்து, மிக சரியான தருணத்தில், சரியான முறையில் முதல்வரிடம் கொண்டு சென்று ஜெயித்துக் காட்டியிருக்கும் ICAF அமைப்பின் துணைத் தலைவரும், நடிகரும், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு.எஸ்.வி.சேகருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் என்று மூன்று இடங்களிலும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவிகளோடு நடத்தப்படும்போது தமிழ்நாட்டிலும் அது போன்ற நிதியுதவி செய்து நடத்த வேண்டியது அரை நூற்றாண்டு காலமாக கலைத்துறையின் மூலமாக மாநிலத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்திருப்பவர்களின் கடமை. செய்ய வேண்டிய கடமையை சரியானத் தருணத்தில் செய்திருக்கிறார் கலைஞர்.

பல்வேறு எதிர்க்கணைகள் வந்தாலும் போயஸ் தோட்டத்து அம்மாவின் எதிர்ப்பு அறிக்கை, இந்த நிதி உதவி செய்திக்கு வராது என்பதாலும் கலைஞருக்கு ஒரு நாள் அறிக்கை விடும் வேலை கிடையாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் பாட்டாளிகளின் தலைவர் என்ன சொல்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது போன்ற சினிமா விழாக்களினால் சினிமா என்கிற கலைத்துறை தனி மெருகேற்றி ஒரு புதிய விஷயத்தைத் தொட்டுக் காண்பிக்கும் என்றால் அதனால் தமிழ்நாட்டிற்குத்தான் பெருமை.

அரசியல் ரீதியாக கலைஞர் பற்றி ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சினிமா துறையின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் மனதில் வைத்து, சினிமா துறையில் முதல்வனாக இருக்கின்ற கடமையினாலும், நிதியுதவி வழங்கியிருக்கும் முதல்வர் கலைஞருக்கு உலக சினிமாவின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் என்கிற முறையில் எனது மனமார்ந்த நன்றியினை கலைஞரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

7 comments:

Anonymous said...

முதல் தடவையா முதல்வரைப் பாராட்டி உமது தளத்தில் ஒரு செய்தி.. நடப்பது கனவா.. அல்லது நனவா..? உனாதானா.. எப்படி இப்படி..?

குழலி / Kuzhali said...

//முதல் தடவையா முதல்வரைப் பாராட்டி உமது தளத்தில் ஒரு செய்தி.. நடப்பது கனவா.. அல்லது நனவா..? உனாதானா.. எப்படி இப்படி..?//
பின்னே அவர் சார்ந்த துறை, அவர் தொடர்பான விசயமாச்சே.... அவர் சார்ந்த ஒரு துறைக்கு நல்லதுன்னாலே எல்லாத்தையும் விட்டுட்டு வாழ்த்துறாரே... அப்போ மற்றவர்கள் அவரவர்கள் சமூக மரியாதை, கல்வி, இன்னும் பல விசயங்களில் அவர்களுக்கு ஏதாவது முன்னேற்றமோ நன்மையோ கிடைத்தால் எத்தனை ஊழல்வாதியாக இருந்தாலும் எத்தனை ரவுடியாக இருந்தாலும் எத்தனை மோசமானவராக இருந்தாலும் பாராட்டத்தானே செய்வார்கள்... இது தான் கலைஞரிலிருந்து, ஜேஜேயிலிருந்து இராமதாசிலிருந்து திருமாவிலிருந்து இன்னும் எத்தனோயோ தலைவர்களுக்கு வாழ்த்தும் தொண்டர்கள் இருக்கிறார்கள்

உண்மைத்தமிழன் said...

///குழலி / Kuzhali said...
//முதல் தடவையா முதல்வரைப் பாராட்டி உமது தளத்தில் ஒரு செய்தி.. நடப்பது கனவா.. அல்லது நனவா..? உனாதானா.. எப்படி இப்படி..?//
பின்னே அவர் சார்ந்த துறை, அவர் தொடர்பான விசயமாச்சே.... அவர் சார்ந்த ஒரு துறைக்கு நல்லதுன்னாலே எல்லாத்தையும் விட்டுட்டு வாழ்த்துறாரே...//

குழலி ஸார்.. ஏன் இப்படி? 3 மாசத்துக்கு ஒரு தடவைதான் என்னைப் பார்க்க வர்றதா பிளானா..?

கலைத்துறையும் சமூகத்தில் ஒரு அங்கம்தான். நிறைய பணம் புழங்குகிறது என்பதற்காக இதனை புறக்கணித்தல்கூடாது. கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுத்துதான் தீர வேண்டும். கடமையைத்தான் செய்தாரென்றாலும் அதை மற்றவர்கள் செய்யவில்லையே என்கிறபோது செய்தவருக்கு நன்றி தெரிவிப்பது அத்துறையைச் சேர்ந்தவன் என்கிற முறையில் எனது கடமை. அதையே செய்துள்ளேன்.

//எத்தனை ஊழல்வாதியாக இருந்தாலும் எத்தனை ரவுடியாக இருந்தாலும் எத்தனை மோசமானவராக இருந்தாலும்//

ஒரு நல்ல விஷயத்துக்காக பாராட்டுவதில் தவறில்லை.

வருகைக்கு நன்றிங்க ஐயா..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
முதல் தடவையா முதல்வரைப் பாராட்டி உமது தளத்தில் ஒரு செய்தி.. நடப்பது கனவா.. அல்லது நனவா..? உனாதானா.. எப்படி இப்படி..?//

அனானியாரே..

பாராட்ட வேண்டிய இடத்தில், பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டித்தான் இருக்கிறேன். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்துத்தான் இருக்கிறேன். அது என்னுடைய நிலைப்பாட்டைப் பொறுத்தது.

Anonymous said...

http://votsong.com/sirappu/main.htm

உண்மைத்தமிழன் said...

//Kesavan said...
http://votsong.com/sirappu/main.htm//

கேசவன் ஸார்..

இன்னுமா உங்களுக்கு இந்த நம்பிக்கை.. வேண்டாம்.. இவர்களால் உங்களுக்கு ஆகப் போவதில்லை எதுவுமில்லை..

இவர்களால் முடிந்தது, துக்க அறிக்கை வெளியிடுவதுதான்..

abeer ahmed said...

See who owns v7n.com or any other website:
http://whois.domaintasks.com/v7n.com