19-02-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு திரைப்படம் சில தத்துவங்களை உள்கொண்டிருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில சார்புகளை முன் வைத்திருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில பரிணாமங்களை பன்முகப்படுத்தியிருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில உதாரணங்களுக்குள் ஒன்றாக அமைந்திருக்கலாம்.
ஒரு திரைப்படம் சில திரைப்படங்களுள் ஒன்றாக இருந்திருக்கலாம்..
ஒரு திரைப்படம் திரைப்படமாகவே எடுக்கப்பட்டிருக்கலாம்..
இந்த ஒன்றுவரும் வரை மற்றவை பிரதானப்படுத்தப்பட்டிருக்கும்.
(இது தாஸ்தாயேவ்ஸ்கி சொன்னதாக உண்மைத்தமிழன் சொல்வது)
(திரைப்படங்கள் பேசப்படுவதற்கு முதலில் தேவை நல்ல கதை. அது அடித்தள மக்களை, விளிம்பு நிலையில் களிப்பாட்டம் தேடி அலையும் வர்க்கத்தினரை மேம்போக்காக அலைபாயாமல் தண்ணீருக்கடியில் இரை தேடி அலையும் மீனின் கண்களைப் பதம் பார்க்கும் ஈட்டியைப் போல் கூர்மையுள்ளதாக இருப்பின் அந்தக் கதை பேசப்படும் என்பது சாத்தியமே..
- லூயி புனுவலின் ‘அர்த்தமற்ற சினிமாக்கள்’, பாகம்-2, அத்தியாயம்-3)
இது இந்தப் படத்திலும் சாத்தியமாயிருக்கிறது. இரண்டு வரிக் கதைதான். நட்பு. மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரையிலும் அவனுக்குத் தெரியாமலேயே அவன் நிழல் போலவே பின் தொடர்வது நட்புதான். ஒவ்வொரு வெயில் காலம் போய் மழைக்காலம் வருவதைப் போல்.. இலையுதிர்க்காலத்தில் இலைகள் உதிர்ந்து புதியன பூக்க தன்னைத் தயார் படுத்திக் கொள்வதைப் போல நட்புகளும் நம்மிடம் மாறி மாறி வேறு வேறு உருவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
கிருபாகரன் என்ற கிருபா, சத்தியநாதன் என்ற சத்யா என்ற இரண்டு நண்பர்களுக்கிடையில் வர்க்க பேதமில்லாமல் இளைஞர்கள், நண்பர்கள் அதுவும் மாணவப் பருவத்திலிருந்தே என்ற அடைமொழியோடு துவங்கும் நட்புக்கு ‘காலம்’ வேட்டு வைக்கத் துவங்கும் பொழுதுதான் படமும் துவங்குகிறது.
டிகிரியை பர்ஸ்ட் கிளாஸில் முடித்தும் வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஏட்டு அப்பாவிடம் ‘உதவாக்கரை’ பட்டத்தை இரவல் பெற்று ஓசி சோறு சாப்பிட்டு, போலீஸ் காலனி வாசலிலேயே நான்கு நண்பர்களோடு ஆட்டோவில் குடித்தனம் நடத்தும் சத்யா..
சத்யாவின் மனம் கவர்ந்த ஒரு தங்கையுடன், அருமையான ஏட்டு அப்பா, அம்மா என்று அம்சமான குடும்பத் தோற்றத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் SI தேர்விற்காக விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கும் கிருபா..
இப்படித் துவங்குகிறது கதை.
சைக்கோ என்கின்ற லெவலின் முதல் படியில் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் மனநிலையில் இருக்கும் தயாவின் தொழில் இளம் பெண்களைக் கடத்தி பணம் பறிப்பது. முடியும்பட்சத்தில் பெண்ணின் கற்பை அழிப்பது. அதை ஒரு சுக இன்பமாக அனுபவிப்பது.. கிட்டத்தட்ட மனம் பிறழ்ந்த நிலையில் இருப்பவனான தயாவின், சகவாசம் காலத்தின் விளைவால் சத்யாவுக்குக் கிட்டுகிறது.
‘காலம்’ தன் ‘வேலை’யைக் காட்ட காலனியின் கோவில் விழாவுக்கு வரும் தயா, அங்கே கிருபாவின் தங்கை குளித்துக் கொண்டிருக்கையில் அவளை பலாத்காரம் செய்ய முயல.. சத்யா தன் ‘புஜ’ கோபத்தை வெளிப்படுத்துகிறான்.
போலீஸின் மகன் திருடன் என்பதை போலீஸ் காலனியிலேயே தனது மகன்தான் நிரூபித்து வருகிறான் என்ற ஏக கோபத்தில் ஏற்கெனவே கொதித்துப் போயிருக்கும் சத்யாவின் அப்பா, அவனை அங்கேயே அத்தனை பேர் முன்னிலையிலும் செருப்பால் அடிக்க அவமானப்பட்டது அவன் மனம்.. அந்த ஒரு நிமிடம் என்ன நினைக்கிறான்.. என்ன செய்யப் போகிறான் என்பது தெரியவில்லை.
பலர் வற்புறுத்தியும் அப்ளிகேஷனை கையில்கூட வாங்காத SI தேர்வுக்கு திடீரென்று தயாராகிறான் சத்யா. கிருபாவுடன் போட்டி போட்டுக் கொண்டு தேர்வெழுதி அவனுடைய மாமாவின் சிபாரிசில் வெற்றியும் பெறுகிறான். அனால் கிருபா தோல்வியடைகிறான்.
அந்தத் தோல்வி கிருபாவின் மனதில் எதிர்மறை விளைவை ஏற்படுத்த.. கதை சூடு பறக்கிறது.. சத்யா SI ஆகி அதே ஊருக்கு வந்து சேர.. கிருபா முன்பு சத்யா இருந்த தோற்றத்திலும், அதே டாஸ்மாக் பாரிலும் ஐக்கியமாகிவிட.. சத்யாவுக்கு சந்தோஷத்தைவிட துக்கத்தையே தருகிறது.
சத்யா சிபாரிசு செய்து போஸ்ட்டிங் வாங்கியதால்தான் தன்னை மாதிரி நன்கு படித்து பாஸ் செய்தவர்களுக்கு போஸ்ட்டிங் கிடைக்கவில்லை என்கிற ‘உண்மை தத்துவம்’ கிருபாவை வாட்டி வதைக்க.. தன் நெஞ்சு முழுக்க சத்யா மீது வன்மம் கொண்டலைகிறான்.
‘காலம்’ அவன் முன்னே தயாவை நிறுத்த.. தயாவின் ‘புள்ளை பிடிக்கும்’ விளையாட்டில் ஒரு பகடைக்காயாக்கப்படுகிறான் கிருபா. தன்னைப் பிடிக்க நினைக்கும் சத்யாவை சமாளிக்க வேண்டுமெனில் தனக்கு கிருபாவின் தயவு வேண்டும் என்ற சமயோசித கணக்கில் தயா செயல்பட்டு கிருபாவைத் தந்திரமாக தன் வலையில் விழ வைக்கிறான்.
தான் இணைந்துள்ள ஸ்பெஷல் போலீஸ் டீம் குறி வைத்திருக்கும் நபர்களில் கிருபாவும் ஒருவன் என்பதை அறிந்து துடித்துப் போகிறான் சத்யா. ஆனாலும் அவனால் எதையும் செய்ய முடியாத நிலைக்கு தயா கொண்டு செல்கிறான்.
முதல் இரண்டு கடத்தல்களை வெற்றிகரமாக நடத்திவிட்ட தயாவுக்கு தங்கள் டீம் மாட்டிக் கொண்டது தெளிவாகத் தெரிய வர.. இம்முறை பெரிய திமிங்கலத்தை இழுத்து தனது வலையின் சக்தியை உணர வைக்க வேண்டும் என்று நினைத்து கடைசியாக போலீஸ் டி.ஜி.பி.யின் மகள்களை கடத்துகிறான்.
துணைக்கு கிருபாவும் வர.. கிருபா ஒருவித சுயகட்டுப்பாட்டுடன் அவனுடன் கலந்திருக்க.. பார்க்கும் இடத்திலேயே இந்தத் தோழர்களை சமாதி கட்டும்படி காவல்துறை இயந்திரங்கள் அணி வகுத்திருக்க.. இறுதியில் தனது தங்கையாலேயே கிருபா காட்டிக் கொடுக்கப்பட்டு தன் உயிர் நண்பனாலேயே சாவையும் சந்திக்கிறான்.
கடமை முக்கியம் அல்ல.. மனிதாபிமானம்தான் மிக முக்கியம் என்பதை உள் வாங்கி வேறு வழியில்லாத நிலையில் தனது உயிருக்குயிரான நண்பனை சுட்டுவிட்டு அவனை மடியில் போட்டுக் கதறும் சத்யாவின் அழுகையோடு படம் நிறைவடைகிறது.
(“கதைகள் என்பவை வெறும் வார்த்தைகள்தான். அவற்றை எண்ணங்களாக்கி, எண்ணங்களை எழுத்துக்களாக்கி.. எழுத்துக்களை வாசிப்பவனின் மனதுக்குள் ஊடுறுவ விடுவதில்தான் எழுத்தாளனும், படைப்பாளியும் ஜெயிக்க முடியும். இது திரைப்படத் துறையில் கதைக்கு அடுத்த இலக்கான திரைக்கதையை வடிவமைப்பதில் உள்ள மேதமைக்கு முதல் படி. இதில் ஜெயித்தவர்கள்தான் சிறந்த இயக்குநர்களைத் தேடிச் செல்ல முடியும்.. எது எப்படி ஆரம்பித்ததோ அப்படித்தான் இறுதி வரையிலும் செல்லும்..”
ரோமன் போலன்ஸ்கியின் ‘யதார்த்தமும் சினிமாவும்’ நூலில்)
முதல் காட்சியிலேயே நட்பின் வலிமையை, அந்த நண்பன் இல்லாமல் இருப்பதிலேயே ஆரம்பிக்கும் திரைக்கதையின் வடிவம் இறுதிவரையிலும் தனது பாதையை இழக்காமல் சீராக சென்றடைந்துள்ளது.
நான் இதுவரையிலும் பார்த்திருக்கும் திரைப்படங்களிலிருந்து மிக, மிக வித்தியாசப்பட்டிருக்கிறது இத்திரைப்படத்தின் திரைக்கதை. ஒரு நிமிடம்கூட கதையின் ஓட்டத்திலிருந்து விலகவில்லை.. ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம்தான்.. இதற்கு முன் பார்த்த காட்சிகளாக இருப்பினும், அதில்கூட இப்படியெல்லாம் மாற்றிவைக்க முடியுமா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறது.
“கிருபா அடிபடுகிறான். தகவல் பறக்கிறது. சத்யா அடித்தவர்களை அடிக்கிறான். “ஏன் ரவுடித்தனம் பண்ற..?” என்று வீட்டாரின் அர்ச்சனை கிடைக்கிறது. டாஸ்மாக் பாரில் குடிக்கும்போது வாய்ச்சண்டை. அப்போதைக்கு நண்பர்களை வீட்டில்விட்டுவிட்டு தான் மட்டும் தனியே போய் கைச்சண்டை போடுகிறான் சத்யா. விஷயம் போலீஸ¤க்கு போகிறது. அழைத்து வரப்படுகிறான் ஸ்டேஷனுக்கு. ஸ்டேஷனில் ஏட்டுவின் மகன் என்பது தெரிய வர கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்புகிறார்கள். நண்பனைத் தேடி கிருபா வர அவனது அப்பாவான ஏட்டு மகனைத் திட்டி அனுப்புகிறார்.”
இந்த ரீதியில் முதல் ஒரு மணி நேரம் படத்தின் கதை பறக்கின்ற வேகத்தில், நம்மையும் உடன் அழைத்துச் சென்றுவிட அனைவரும் கடிகாரத்தைப் பார்ப்பதையே மறந்து போய் விட்டார்கள்.
சத்யா SI ஆன பிறகு அவன் அந்தப் பதவியில் set ஆவதற்கு முன் கிடைக்கின்ற அனுபவங்கள் மிகச் சிறந்த திரைக்கதை பாடங்கள்..
ஒரு வழியாக SI என்ற மிடுக்கு வருவதற்குள் தானே வழிய வரும் ஒரு கடத்தல் வழக்கில் தனது பழைய புஜ பராக்கிரமத்தைக் காட்டிய பின்பு எழும் தொடர் கதையின் ஓட்டம் கடைசியில் படம் முடியும்போதுதான் நிற்கிறது.
எப்போது இவர்கள் இருவரின் ‘மகாபாரதம்’ முடியும் என்பதைவிட எப்படி முடியப் போகிறது யுத்தம் என்கின்ற அளவில் திரைக்கதையை வடிவமைத்திருக்கும் மிஷ்கினுக்கு முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’யைவிடவும் இதில் நிறைய களங்கள் கிடைத்திருக்கின்றன. அதைச் சரியாகவே பயன்படுத்தியும் இருக்கிறார்.
கிடைக்கின்ற தருணங்களில் எல்லாம் அவர் twist செய்யும் காட்சிகளில் ஒன்று வசனத்தாலோ அல்லது காட்சிகளாலோ நிறைத்து விடுகிறார். ஆனால் அதன் மய்யம் திரைக்கதையில்தான் இருக்கிறது.
SI ஆன பின்பு முதல் முறையாக டாஸ்மாக் பாருக்குள் வந்தமரும் சத்யா அங்கே கடைப் பையனை கன்னத்தில் அறைபவனை சட்டையைப் பிடித்துத் திருப்ப அங்கே முன்பிருந்த சத்யா கோலத்தில் இப்போது கிருபா இருப்பதைப் பார்த்து தற்போதைய சத்யா அதிர்வது திரைக்கதையில் ஒரு அச்சாணி..
தொடர்ந்து கிருபாவை சமாதானப்படுத்த முயல்வது. அவன் மறுப்பது. முடியாமல் தயாவுடன் சேர்வது. சேர்ந்த பின்பு அக்குற்றச் செயல்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் தயங்குவது. இறுதிக் காட்சியில் சிறுமிகளிடம் நெருங்கும் தயாவை துப்பாக்கியால் மிரட்டுவது வரையிலும் தன்னுடைய Character Sketch-ஐ வழுவ விடாமல் பிடித்தபடியே செல்கிறான் கிருபா.
நான் இதுவரையில் பார்த்த தமிழ்த் திரைப்படங்களிலேயே இவ்வளவு விறுவிறுப்பான திரைக்கதையை.. பாடல் காட்சிகளைத் தவிர மற்றக் காட்சி நேரங்களில் பக்கத்து சீட்டில் இருப்பவரின் முகத்தைப் பார்க்கக்கூட தோணாத ஒருவித வெறியை உண்டாக்கியது ‘விக்ரம்’ திரைப்படத்தின் இடைவேளைக்கு முந்திய பகுதிக்குப் பிறகு இத்திரைப்படத்தில்தான்..
(திரைக்கதை என்பது வெறும் வடிவமைப்பு செயல்தான். அது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு உடலியல் மாதிரி. அதனுடைய செயல் வடிவங்களை யார் சிறப்பாக வடிவமைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறத்தக்க சிற்பங்களை செதுக்கியவர்களாவார்கள். சிற்பங்கள் ஒரு போதும் தானாகவே சிறப்படைவதில்லை. அதனை பார்வைக்குட்படுத்தி பார்க்க வைப்பவரும் ஒரு சிற்பிதான்.. அவரிடம்தான் வெற்றிக்கான அளவு கோல் உண்டு. இது போலத்தான் திரைக்கதையை காட்சிப்படுத்ததுல். இதில் ஜெயித்தவர்கள்தான் மிகச் சிறந்த ஆசிரியர்கள்.
- ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் ‘சினிமாவும், காட்சியும்’ நூலில்)
தன்னை டாஸ்மாக் கடையில் மிரட்டிய பாண்டியராஜனை இரவில் தனியே அவருடைய ஒர்க்ஷாப்பிற்கு சென்று அடிக்கும்போது செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பாண்டியராஜனிடம் “பேசு.. அப்புறமா..” என்று சொல்லிவிட்டு அடிப்பது. தொடர்ந்து தயா பாண்டியராஜனை திடுக்கென்று கழுத்து எழும்பை உடைப்பது என்று ஏன்.. எதற்கு என்பது தெரியாமல் அடுத்தக் காட்சிக்குத் தவ்வுகிறது திரைக்கதை.. அடுத்தக் காட்சியில்தான் முதல் காட்சிக்கான விடை கிடைக்கிறது.
அதே போல தான் தந்தையிடமிருந்து செருப்படி பட்ட பின்பு, சினிமா தியேட்டரில் ‘தவமாய் தவமிருந்து’ படம் ஓடிக் கொண்டிருக்க.. “அடுத்தவன் மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னாருடா.. அவரெல்லாம் அப்பாவாடா..? இவர்தாண்டா அப்பா..” என்று ராஜ்கிரனை காட்டிச் சொல்கின்ற காட்சியில் கை தட்டலும், விசிலும் பறக்கின்றன.
எப்படியாவது SI-யாகி விட வேண்டுமென்ற ஆர்வத்தில் மாமா வீட்டுக்கு வரும் சத்யா அவருடனேயே சியர்ஸ் சொல்லிக் குடிப்பது.. மகளே சைடீஸ் கொண்டு வந்து வைப்பது என்று படத்தில் ஒருவித குணப் பேதமை நிரவியிருக்கிறது..
தான் SI ஆகிவிட்ட சந்தோஷத்தில் குடித்துவிட்டு வீடு வரும் சத்யா உயிர் நண்பன் கிருபாவின் வீடு நோக்கி நகர.. நகர.. அவன் தங்கை தடுத்தும் கேளாமல் கதவைத் தட்ட.. “கிருபா பெயிலாயிட்டாருண்ணே” என்று சொல்கின்ற தருணம் அமானுஷ்ய படத்தில் ஒரு அரூபத்தை அருகில் பார்த்த எபெக்ட்டை கொடுத்தது எனக்கு..
முதன்முதலில் SI ஆன பிறகு ஸ்டேஷனுக்கு வருபவனுக்கு மனைவியின் தலையை வெட்டியவன் தலையைத் தூக்கிக் காட்ட.. பொத்தென்று கீழே விழுகிறானே சத்யா.. அக்காட்சி சிரிக்கவும் வைத்து, சத்யாவின் நிஜத்தையும் காட்டிக் கொடுத்தது.
பாதி போலீஸ் டிரெஸ்ஸில் வண்டியில் வரும்போது ரோட்டில் ஒருவன் கத்திக்குத்து பட்டு விழுந்து கிடக்க.. அவனைக் காப்பாற்ற சத்யா அல்லலோகப் படுவது காட்சியமைப்பில் ஒரு மிகப் பெரிய கனத்தை ரசிகர்களின் மனதில் ஏற்றிய இடம் என்று சொல்லலாம்.
இக்காட்சியில் உடன் நடித்திருக்கும் ஒரு கிழவியுடன் அந்த ரோடும் சேர்ந்து நடித்திருப்பதைப் போல் தெரிகிறது. அப்படியொரு எபெக்ட் அந்தக் காட்சிக்கு..
“உசிர் இருக்குய்யா..” என்று பரிதவிப்புடன் சொல்லும் கிழவி குற்றுயிராய்க் கிடப்பவனைச் சாய்த்துக் கொண்டு ஹீரோ ஹோண்டாவில் சத்யாவுடன் செல்கின்ற காட்சி.. சென்று கொண்டிருக்கும்போதே “முடிஞ்சிருச்சுப்பா..” என்று கழுத்து சாய்ந்த வினாடியே கண்டுபிடித்துச் சொல்லும், கிழவியின் மிக மிக இயல்பான நடிப்பு..
கடத்தல்காரனில் ஒருவன் தயாவால் தாக்கப்பட்டு மருத்துவனையில் படுத்திருக்க.. அவனைக் கொல்ல வரும் கூட்டத்தை தனது புஜ பராக்கிரமத்தைக் காட்டி சத்யா சண்டையிடும் காட்சி சினிமாத்தனம்தான் என்றாலும், அதை நிராகரிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது அது எடுக்கப்பட்ட விதம்..
கடத்திச் செல்லப்பட்ட பெண் திரும்பி வந்த பின்பு வழக்கமாக அழும் பெண் அழுகாமல் தந்தை அழுக.. பெண்ணோ, “சீக்கிரமா கண்டுபிடிங்க ஸார்.. சீக்கிரமா கண்டுபிடிங்க ஸார்..” என்று சொல்ல பொன்வண்ணன் சிலிர்ப்பது ஒருவித உணர்வு.
லோகுவின் குரலைக் கேட்டு அவனைத் தேடி அலைந்து ஓய்ந்த பிறகு டி.ஜி.பி. அந்த டீமையே கேள்விக்குறியாக்கும்போது சத்யா டி.ஜி.பி.யைப் பார்த்து கேட்கும் கேள்வியும், பதிலும், அந்தக் காட்சியும்..
தனது மகளின் ஆடைகள் அனைத்தும் வீட்டு வாசலில் ஒரு பிளாஸ்டிக் பையில் கிடக்க அதை எடுத்துக் கொண்டு அப்பன் கதறலுடன் போனுக்கு ஓடி ஓலமிடுவதும்.. தொடர்ந்து சத்யா, பொன்வண்ணன், அப்பன் மூவருக்குமான உரையாடல்.. இறுதியில் அப்பன் கேட்கும் கேள்வி “நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்..?” தவறே சொல்ல முடியாத நிகழ்வுகள்..
டாஸ்மாக் பார் பையனை அடித்து அதன் விளைவாய் ஸ்டேஷனுக்கு போய் அடிபட்டு வரும் மகனைப் பார்த்து ஆற்றாமையுடன் கிருபாவின் தாய் பொங்கி எழும் காட்சி. டி.ஜி.பி. பொன்வண்ணன் குழுவினரை வேஸ்ட் என்று வர்ணித்துவிட்டுப் போக இயலாமையைத் தடுக்க வழியில்லாமல் அவர் தவிப்பது..
தயாவின் புத்திசாலித்தனமான செல்போனை பஸ்ஸிலேயே ஆனில் விட்டு வைத்துவிட்டு வரும் ஐடியா..
அந்த நீண்ட இறுதிக் காட்சியில் பசுமைத் தோரணங்களுடன் பூத்துக் குலுங்கும் தோட்டத்தின் நடுவே சிறுமிகளுடன் தயா நடத்தும் நாடகம்..
சிறுமிகள் கைகள் கட்டப்பட்டு முதுகில் புத்தக மூட்டைகள் அப்போதும் சுமக்கப்படும் நிலையிலும் அவர்கள் மொட்டைத் தலையனுக்கு போக்குக் காட்டிவிட்டுத் தப்பிக்கும் காட்சியில் தியேட்டரில் எழுந்த கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது.
‘விடு உத்ரா..’ ‘விடு உத்ரா..’ என்று கிருபா கத்திக் கொண்டே இருக்கும்போது என்ன செய்கிறாள் என்ற ஆர்வத்தைக் கூட்டி இறுதியில் அவள் தன் கையுடன் அவன் கையையும் விலங்கு போட்டு மாட்டிக் கொண்டது கிருபா குண்டடி பட்டு தரையில் சாய்ந்த பிறகு தெரிகிறபோது இன்னுமொரு மனதைப் பிசைந்த விஷயம்.
இறுதிவரையிலும் அந்த மொட்டைத் தலையுடன் வரும் அடியாளை முகம் காட்டாமலேயே சாகடிக்கும் ஒருவித Sketch..
கதை எழுதுவது என்பதும், திரைக்கதை அமைப்பது என்பதுவும், அதற்கேற்றாற்போல் காட்சிகளை வடிவமைப்பது என்பதும் ஒரு கலை என்பதை வருங்கால இயக்குநர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளலாம் என்று தாராளமாக சிபாரிசு செய்யலாம்.
(திரைப்படங்கள் பார்வையாளனின் கண்ணுக்கு அப்பாற்பட்டு, அவனது கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகாத தொனியில் பண்ணப்பட்டிருந்தால் அதற்கு திரைக்கதை மட்டுமே காரணமாக அமைய வாய்ப்பில்லை. கூடவே ஒலியமைப்பும், ஒளிப்பதிவும் அக்காட்சியின் முழு வீரியத்தை அவனிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. இதனை கட்டற்ற சினிமா என்னும் தளையில் ஒழுங்கு என்ற வடிவில்தான் அது சிதைக்கப்படுதல் என்பதாக அர்த்தம் கொள்ளுதல் வேண்டும்.
- ஆந்த்ரே தர்க்கோவ்ஸ்கியின் 'ரியோ சர்ரியலிஸ சினிமா' நூலில் இருந்து)
மாற்றங்களற்ற மனதை உடையவனையும் ஒரு நொடியில் கலங்க வைத்திடும் திறன் ஒலிக்கு உண்டு.
நான் முன்பே சொன்னதைப் போலவே முதல் காட்சியிலேயே ஒலி, ஒளிப்பதிவின் வித்தைகள் இப்படத்தில் நிறைய உண்டு என்பது தங்குத்தடையின்றி புரிந்துவிட்டது.
கிருபாவை அடித்தது யார் என்று ஆட்டோவில் உட்கார்ந்தபடியே கேட்டுவிட்டு ஆட்டோ ஒரு ரவுண்ட் அடித்து வந்து புல்லப்ஸ் எடுத்துக் கொண்டிருப்பவன் மீது மோதுகின்ற போது எழுகின்ற ‘சொத்’ என்ற சப்தம் படத்தின் கடைசி வரையிலும் மீள முடியாத வலியாக நம் மீது விழுந்து கொண்டேயிருக்கிறது.
தொடர்ந்து பாக்கெட்டில் இருந்து ஒன்றைப் பிரித்து வாயில் போட்டு விட்டு ஒருவனை அழைத்து ‘சொத்’..
கத்தியுடன் பாய்ந்து ஓடி வருபவர்களுக்கு ஒரு ‘சொத்’..
இதன் பின் ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் ஒவ்வொரு ஒலி வகைகள்..
பார்வையாளனை படத்தோடு ஒன்ற வைப்பதற்கு அவனுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சராசரி மனிதாபிமான உணர்வைத் தட்டி எழுப்பினாலே போதும்.. அந்த வேலையை இப்படத்தில் அதிகப்பட்சம் செய்திருப்பது ஒலிப்பதிவுத் துறைதான்..
“கிருபா பெயிலாயிட்டாருண்ணா..” என்று தங்கை சொன்னவுடன் ஐயோ என்று அடிவயிற்றில் இருந்து எழ வைக்கும் வயலின் இசை..
படம் முழுக்கவே இது போன்ற கலை நுட்பமான இசைகள் மனதை பிசைய வைக்கின்றன.
அதன் பின் ரோட்டில் வெட்டப்பட்டவனைப் பார்க்கின்ற போது.. ஆள், அரவமற்ற சாலையும், ஒரு பூக்காரக் கிழவியும், சத்யாவுமாக மொத்தமே மூன்று பேர் அந்த நிமிடத்திலிருந்து நம்மிடம் ஆக்கிரமித்துக் கொண்ட அபூர்வக் காட்சி தொடர்கிறது. இந்த ஆக்கிரமிப்புக்கு மிகவும் உறுதுணை பின்னணி இசைதான்..
காவல்துறையைப் புறக்கணித்துவிட்டு தானே சொந்தமாக மகளை மீட்டுவிடலாம் என்றெண்ணி பை நிறைய பணத்துடன் நிற்பவனிடம் பையை வாங்கிக் கொண்டு கிருபா போக..
பைக் கிராஸ் செய்யும் நேரத்தில் நின்று கொண்டிருக்கும் வேனில் இருந்து முந்தைய இரவில் கிருபாவின் வீட்டில் தயாவால், அவனிடம் இரவல் வாங்கப்பட்ட கைலியில் சுருட்டப்பட்ட நிலையில் அப்பெண் உருட்டிவிடப் படும் காட்சியும், அக்காட்சியின்போது தவறு செய்துவிட்டோமே என்றெண்ணி ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும் தன் தலையில் அடித்துக் கொண்டே வண்டியில் செல்லும் கிருபாவின் செய்கையும், அதைத் தொடர்ந்து அந்தத் தந்தை நடுரோட்டில் கதறியபடியே ஓடி வந்து நின்று அழுவதும்.. அப்பெண் “டாடி.. டாடி..” என்ற கதறலுடன் நிற்க முடியாமல் நடந்து வரும்போதும், எழுகின்ற பின்னணி இசை நம்மையும் அங்கேயே கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்துவிட்டது. இசையும், நடிப்பும், ஒளிப்பதிவும் ஒரு சேர போட்டி போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடியது இந்தக் காட்சியில்தான் என்பதை நான் உணர்கிறேன்.
காலை நொண்டியபடியே வரும் கடத்தல்காரன் ஒருவனின் வீட்டில் பொன்வண்ணனும், சத்யாவும் அவர்கள் வருகைக்காக காத்திருக்க.. அப்போது கூட்டாளியின் மகன் “அப்பா போயிருப்பா.. போலீஸ்ப்பா.. அப்பா போலீஸ்ப்பா..” என்ற கதறலின் பின் விளையாட்டாக..
‘அவன் மாட்டினால் நாம் தொலைந்தோம்’ என்ற எண்ணத்தில் தயா அப்போதுவரை கூட்டாளியாக இருந்தவனை, துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோட அப்போது எழுகின்ற ஒலியும், காட்சியமைப்பும், கேமிராவின் இடது, வலது ஊஞ்சல் விளையாட்டுக்களும் அபாரம்..
இறுதிக் காட்சியின் அந்த நீண்ட பயணத்திற்கு பார்வையாளர்களை அலுப்புத் தட்டாமல் பயணிக்க வைத்தது இசையும், என் கண்ணை என்னிடமிருந்து பறித்துச் சென்ற கேமிராவும்தான்..
இதுவரையில் காட்டாத லொகேஷனைத்தான் காட்ட வேண்டும் என்ற முனைப்போடு இருந்திருக்கும் இயக்குநர் அப்படியொரு லொகேஷனைத்தான் தேடி கண்டுபிடித்திருக்கிறார்.
சோளமோ, கரும்புக்காடோ.. எந்தப் பக்கம் யார் ஓடுகிறார்கள்.. யார் ஒளிந்து கொண்டுள்ளார்கள் என்பதே தெரியாமல் கேமிராவால் நம்மையும் உடன் அழைத்துக் கொண்டு ஓடும் திரைப்படத்தின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நாம் திணறுகின்ற திணறல்.. படம் எப்போது முடியும் என்றெல்லாம் இதுவரையிலும் போய் அனுபவப்பட்டு நின்ற என்னைப் போன்ற ரசிகனுக்கு ஒரு புத்தம் புது அனுபவம்.
(அனைத்து அம்சங்களும் இயக்குநருக்குள் இருந்தாலும் அனைத்தையும் சமச்சீராக கொண்டு செல்லும் ஒரு அறிவு அவனுக்குள் இருக்க வேண்டும். ஒட்டு மொத்த திறமையின் வெளிப்பாடே வெற்றியின் அறிகுறி. திரைப்படங்கள் ஜெயிப்பதற்கு முதலில் இயக்குநர் திறமைசாலியாகவே இருக்க வேண்டும். அல்லது திறமைசாலியானவராக இருக்கப்பட்டிருக்க வேண்டும்..
- லூச்சினோ விஸ்கான்டியின் 'இயக்குநரின் திரைப்படம்' நூலில் இருந்து)
உண்மை. மிஷ்கினுக்கு அது நிறையவே இருக்கிறது.. ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் திரையுலகத்திற்குள் கால் பதித்த மிஷ்கின், தனது அடுத்தப் படமான இந்தப் படத்தின் மூலம் தனக்குள்ள திரைப்படம் பற்றிய அறிவை யாராலும் கேள்விக்குறியாக்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
இந்த எல்லையை எட்டுவதற்கு அவர் பட்ட கஷ்டங்களும், நஷ்டங்களும் இன்றைக்கு புகழாரங்களாக அவருக்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..
திறமை வாய்ந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்ததிலிருந்து அவருடைய கலையறிவை அறிந்து கொள்ளலாம். தமிழ்ச் சினிமா என்றில்லை உலக சினிமாவிலேயே இந்த கேரக்டருக்கு இவர்தான் என்கின்ற மரபை உடைத்து புதிதாக ஒன்றைச் சிந்தித்தால் புதிய நேயர்களும், பார்வையாளர்களும் அவர்களுக்குக் கிடைப்பார்கள்.
அந்த வகையில் மிஷ்கினுக்கு சிக்கியிருப்பது நரேனும், பாண்டியராஜனும், பிரசன்னாவும்.
நரேன் குறையே வைக்கவில்லை.. நண்பனுக்காக சட்டென்று கோபப்படுவதாகட்டும், விழிகளை உருட்டியபடியே டிஜிபியிடம் பேசுகின்ற செயலாகட்டும்.. கிருபாவை அடித்து ஓரமாக உட்கார வைத்திருந்த இடத்தில் முட்டுச்சுவரில் முட்டி சாய்ந்து ஒரு மாதிரி நிற்கிறாரே.. அது ஹைகிளாஸ் ஆக்ஷன்..
கிருபாவின் தங்கைக்குமான காதலை மூடி மறைக்க முடியாமல் வெளிப்பட்டுத்தும் காட்சிகளும், அப்பாவிடம் கோபிக்கும் போதும், தான் SI ஆனவுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டு அலம்பல் செய்யும்போதும் ஹீரோ என்ற இமேஜைவிடவும் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரன் என்ற தோற்றத்தை திணிக்கிறார் நரேன்.
எப்பொழுதும் தன்னுடைய உருட்டு விழிகளால் கதாநாயகிகளைவிடவும் புகழ் பெற்றிருக்கும் பாண்டியராஜன் இப்படத்தில் முதன் முறையாக வில்லனாகவும் இடம் பெற்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
தயா, சத்யாவிடம் அடிவாங்கி ஒர்க்ஷாப்பிற்குத் திரும்பிய பிறகு தயாவை அடிக்க முடியாமல் ஒர்க் ஷாப்பில் இதற்காகவே சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஒருவனை அழைத்து அடித்து தயாவுக்கு உணர்த்துகின்ற காட்சியில் பாண்டியராஜனின் உடல் மொழி ஒன்றை மட்டுமே காட்ட வைத்திருக்கிறார் இயக்குநர்.
தான் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் இருக்கும் பாண்டியராஜனை திகிலூட்டும்படியான ஸ்டைல்களைப் பின்பற்றும் தயாவின் காரிய, காரியங்களை இயக்கத்தில் மட்டுமே காட்டியிருக்கிறார்.
பிரசன்னா அண்ட் கோஷ்டி பணத்துடன் கிருபாவின் வீட்டிற்கு வந்தவுடன் வெறும் கால்களைக் காட்டியே காட்சியை நகர்த்துவது..
‘வாளமீன்’ பாடல் போலவே ஒரு பாடலை வைத்து அந்தப் பாட்டின் முடிவிலேயே பாண்டியராஜனை கொலை செய்யும் அந்தக் காட்சி தயாவின் கதாபாத்திரத்தின் மேல் பயத்தை உறைய வைத்தது. அந்த இடத்தில் பிரசன்னாவின் டயலாக் மிக அழகு.
பிரசன்னாவைப் பொறுத்தமட்டில் இந்தக் கேரக்டரில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டது அவருடைய கேரியரில் அவர் செய்த மிக நல்லதொரு காரியம். நீண்ட முடியுடனும், அடிக்கடி கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை பார்த்தபடியே தான் செய்யும் அத்தனை அக்கிரமங்களையும் அதட்டல் இல்லாமல் செய்து முடிக்கும் அந்த சைக்கோத்தனமான வில்லத்தனம் எந்தவொரு நடிகனையும் ஒரு இயக்குநரால் எப்படியும் நடிக்க வைக்க முடியும் என்பதற்கு ஒரு அத்தாட்சி.
இறுதிக் காட்சியில் தயாவிடமிருந்து சத்யாவால் தப்பித்து விலகி ஓடும் உத்ரா பின்பு பட்டென்று திரும்பி வந்து கால் செருப்பைக் கழட்டி தயாவை அடித்துவிட்டு சட்டென ஓடும் காட்சி.. இக்காட்சி டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டு ஒரு நொடியில் கடந்து சென்றாலும், சட்டென்று பார்வையாளர்களுக்குள்ஏற்படும் சந்தோஷ உணர்வில் கை தட்டாதவர்கள் குறைவுதான்..
பிரசன்னாவை கொல்கின்ற இறுதிக் காட்சியின்போதுகூட கடைசி ச்சு விடுவதற்கு முன் கடிகாரத்தைப் பார்த்து கடைசி புன்னகையை உதிர்த்துவிட்டு உயிர் துறப்பதும்,
குண்டடிபட்ட நிலையில் அந்த ஒற்றைக் கை நண்பன் “கிருபாதாண்டா சுட்டான்.. ஏண்டா சுட்டான்.. நான் செத்திருவேனாடா..” என்று கேட்கின்ற இடத்திலும் இதற்காகவா இத்தனை நேரம் நாம் காத்திருந்தோம் என்ற பரிதாப உணர்வுதான் மேலிடுகிறது.
தான் வாங்கிக் கொடுத்த பிறந்த நாள் பரிசான அந்த பிளாட்டின மோதிரம் தன்னை சுட்ட சத்யாவின் நெஞ்சில் இப்போதும் தொங்கிக் கொண்டிருப்பதை அந்தக் கடைசி நிமிடத்திலும் பார்த்துவிட்டு உணர்கிறானே கிருபா.. கவித்துவமான காட்சி..
கிட்டத்தட்ட 25 வருடங்களாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.எம்.பாஸ்கருக்கு இந்த வருட ஆரம்பமே வெற்றியாக கிடைத்திருக்கிறது.. இதுவரை அவரை காமெடிக்காரராகவே பார்த்துவிட்டவர்களுக்கு பரிதவிக்கும் தந்தையான கேரக்டர் நெகிழ்வைத் தந்திருக்கிறது. இது அவருக்கான படம் என்றே சொல்லலாம்.
உத்ராவாக வரும் விஜயலட்சுமி நடிக்க வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். வாய்ப்புகள் குறைவு என்றாலும் இயக்குநரின் குறியீடுகளை உள் வாங்கிச் செய்திருக்கிறார்.
உதாரணமாக கோவில் திருவிழா அன்று தயாவான பிரசன்னா, அவளைத் தூரத்திலிருந்து பார்க்கும் பார்வையிலேயே தான் தீட்டுப் பட்டுவிட்டதைப் போல் நினைத்து “அம்மா குளிச்சிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுப் போவது..
தயா குளியலறையில் அவளது வாயைப் பொத்தி அடக்கி வைத்திருந்துவிட்டு வெளியேறுகிறான். பின்பு நல்ல பிள்ளையாக சத்யாவின் பின்னால் வந்து நிற்கும்போது வீட்டு வாசலுக்கு அதிர்ச்சியோடு வந்து நிற்கும் உத்ரா தனது கையை குவித்து அடையாளம் காட்டும் முகபாவனை உருக்கம்தான்..நடிப்பு என்பதை தேடியெடுக்காமல் இருப்பதை வெளிக்கொணர வைத்திருக்கிறார் இயக்குநர் என்ற வகையில் மிஷ்கினைப் பாராட்டலாம்.
(தோள் பை ஒன்றையே துணையாகக் கொண்டு போகும் வழியை போகின்ற வழியிலேயே கேட்டுக் கொண்டு செல்வது போலத்தான் செல்வது இயக்குநரின் வேலை. அவனது வேகம் அவன் சுமந்திருக்கும் பையைத் தூக்கிக் கொண்டு, போகும் தூரத்தை அடையும்வரையில் அவன் அதனால் அசர முடியாத அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்பதைப் போலத்தான் இயக்குநரும். அவனது வேலையும் அமைந்திருக்க வேண்டும்.
· பெலினியின் ‘சினிமா ஒரு பார்வை’ நூலில் இருந்து)
இத்திரைப்படம் இந்த வருடத்திய மிகச் சிறந்த திரைப்படமாக அடுத்த வருடம் பல விருதுகளை வாங்கிக் குவிக்கப் போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.
ஆனால் இதற்கான முழு பொறுப்பையும், பெருமையையும் மிஷ்கினே பெறுவார் என்பது எனது கருத்து.
ஏனெனில் அவருடைய நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு அந்த அளவிற்கு தரம் வாய்ந்ததாக உள்ளது.
முதலில், ‘7G ரெயின்போ காலனி’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படங்களின் கதாநாயகனும், படத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனுமான ரவிகிருஷ்ணாதான் இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது.
ஆனால் ஒரு வருட காலமாக ரவிகிருஷ்ணாவை உடல் மெலிய வைத்து இன்னும் பிற பயிற்சிகள் கொடுத்துப் பார்த்தும், டெஸ்ட் எடுத்துப் பார்த்தும் மிஷ்கினுக்கு திருப்தியில்லை என்பதால் அவர் ரவிகிருஷ்ணாவை ஏற்கவில்லை. சொல்லிவிட்டே வந்துவிட்டார்.
பாவம் கேரக்டர் இழந்த அந்த கதாநாயகன், சில நாட்கள் தாங்க முடியாத கோபத்தில் நள்ளிரவில் மிஷ்கினின் வீட்டிற்கு வந்து தெருவில் இருந்து கல்லெடுத்து எறிந்து பெரும் பிரச்சினைக்குள்ளாக்கிய போதும், மிஷ்கின் தன் கருத்திலிருந்து பிறவாமல் உடனுக்குடன் இப்படத்தை தொடங்கினாராம்.. (கோடம்பாக்கத்திலிருந்து பட்சிகள் பற்ற வைத்த நியூஸ் இது.)
ஏற்கெனவே நான் சொன்னது போல புதிதாக திரையுலகில் நுழைபவர்களுக்கு மிக நல்லதொரு பாடம் இத்திரைப்படம்தான்.. இதில் எனக்கு சந்தேகமில்லை.
"அப்படியானால் இதில் பிழைகள் என்று ஏதுமில்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். இருக்கின்றன.. அது காட்சிகளுக்குள் பொதிந்து போயிருக்கின்றன. எனக்கும் தெரிந்தது.
ஆனால் அனைத்துமே பூதாகரமான எனது திரைப்படம் பற்றிய பார்வையின் கீழ் மறைய வேண்டிய ஒரு விஷயம் என்று தெரிகிறது.
ஒன்றே ஒன்று..
இத்திரைப்படத்தில்தான் டாஸ்மாக் பார் காட்சிகளும், பாட்டில்களும் நெகட்டிவ் கணக்கில் அதிகம் தென்பட்டன. இந்தப் படத்தைப் பார்க்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு டாஸ்மாக் கடைகள் இனி 'கண்கண்ட கோவில்கள்தான்' என்பதில் எனக்கு ஐயமில்லை.
அதே போல் எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு எனக்குள் எழுந்திருக்கும் ஒரு கேள்வி..
திரைப்படத் தணிக்கை அலுவலகத்தில் இந்தத் திரைப்படத்திற்கு எப்படி U சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்று..?
சிறுவர்களும், பக்குவம் அல்லாத வயதினரும் பார்க்கவே கூடாத காட்சிகளும், வசனங்களும் நிறையவே நிரம்பியிருக்கும் இப்படம் பெரியவர்களைக் கட்டிப் போட்டுவிட்டது.. அதையே சின்னக் குழந்தைகளோடு போய் பார்க்க வேண்டுமெனில்..
இதன் உச்சக்கட்டமாக உத்ரா டிரெஸ் மாற்றும்போது, ஒரு கரப்பான்பூச்சி செல்லும் அளவே கிடைக்கும் இடைவெளியில் சிறு கண்ணாடியை வைத்து உத்ராவின் உடலழகைப் பார்க்கும் தயாவின் துடிப்பும், அந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதமும் காமத்தை பறைசாற்றாமல் தயாவின் வக்கிர குணத்தை எடை போட மட்டுமே உதவுகிறது என்ற எண்ணத்தில் தணிக்கைத் துறை கத்திரிக்கோலைத் தொடாமல் விட்டுவிட்டதோ என்று நினைக்கிறேன்...
தணிக்கைத் துறையின் போக்கு புரிபடவில்லை. இத்திரைப்படத்திற்கு A சர்டிபிகேட்தான் தந்திருக்க வேண்டும்.
இது போன்ற Bugsகள் நிறைய இருந்தாலும்,
வயது வந்தவர்களுக்கான திரைப்படமாக இருந்தாலும், அதுவே அந்தப் பிரிவில் மிகச் சிறந்த திரைப்படமாக இருப்பதால் குறைகளைத் தவிர்த்து விடுங்கள்.. நிறைகளை உரக்கச் சொல்வோம்..
(இருப்பவைகளெல்லாம் மீதமுள்ளவைகளே.. இருப்பவைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவில்லையெனில் மீதம் என்று சொல்வதற்கு நமக்குள் ஏதுமிருக்காது.
- ஸ்டான்லி குப்ரீக்கின் ‘இருப்பவைகளெல்லாம் சினிமாக்கள் அல்ல’ என்ற நூலில் இருந்து)