வானம் - சினிமா விமர்சனம்

02-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஐந்து கதைகளை உள்ளடக்கி அவை அனைத்தையும் இறுதியில் ஒரே காட்சிக் கோர்வைக்குள் கொண்டு வந்து முடிக்கப்பட்டிருக்கும் தெலுங்கு ரீமேக் திரைப்படம்..!


கந்துவட்டியினால் பாதிக்கப்பட்டு உப்பளத்தில் வேலையில் இருக்கும் தனது 12 வயது மகன் பள்ளிக்குப் போயாக வேண்டும் என்கிற வெறியில் கடனுக்காக தனது கிட்னியை விற்பதற்காக ஒரு பெண்ணும், அவளது மாமனாரும் சென்னைக்கு வருகிறார்கள்..!

குடும்பமே ராணுவத்தில் சேவையாற்றினாலும் தனக்கு அது பிடிக்காமல் ராக் இசைப் பாடகனாக உருமாறும் வெறி கொண்டலையும் இளைஞன், தனது குழுவினருடன் சென்னைக்கு வருகிறான்.


ஹைதராபாத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சரோஜா, அந்த இடத்தில் இருந்து தப்பித்து தனது தொழிலை விஸ்தாரமாக நடத்த வேண்டி சென்னைக்கு வருகிறாள்..!

மாதந்தோறும் சோத்துக்குப் பிச்சையெடுக்கும் நிலையில் இருந்தாலும் கோடீஸ்வர பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்யும் ஆசையில் இருக்கும் ஒரு இளைஞன் அவளுக்காக திருட்டுத் தொழிலிலும் இறங்கும் நிலையில் சென்னையில் இருக்கிறான்..!

கோவையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் இந்து தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதால் தனது மனைவியின் கர்ப்பம் கலைந்த நிலையிலும் காணாமல்போன தனது தம்பியைத் தேடி சென்னைக்கு வரும் ஒரு முஸ்லீம் நபர்..!


இந்த ஐந்து நபர்களும் இறுதியில் ஒரு மருத்துவனையில் சந்திக்கிறார்கள். அந்த மருத்துவமனையில் ஏற்கெனவே குடியிருந்துவரும் முஸ்லீம் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் கண்ணில்பட்டவர்களெல்லாம் செத்துப் போக இந்த ஐந்து கதை மாந்தர்களில் யார் உயிருடன் இருக்கிறார்கள்? யார் செத்தார்கள் என்பதுதான் மிச்சச் சொச்சக் கதை..!

தெலுங்கில் வேதம் என்கிற பெயரில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம். ஆர்.பி.செளத்ரி தனது மகன் ஜீவாவுக்காக வாங்கிய கதை இது. ஆனாலும் அது முடியாமல்போய் பலத்த போட்டிக்கிடையில் சிம்பு இதனை அதிர்ஷ்டமாக பெற்று அதில் நடித்திருக்கிறார்.

படம் அரசியல் பேசுகிறது என்பதால் நாமும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய கட்டாயம் உண்டு..!

இரட்டை நகரங்களான ஹைதராபாத்-செகந்திராபாத் நகரங்களில் நடந்த தொடர்ச்சியான குண்டு வெடிப்பினால்  ஆந்திர மக்கள் சிலரை இழந்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் அவர்களுக்கெல்லாம் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது..!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லீம் மீது இந்துத் தீவிரவாதிகள் தாக்குதல்..! பதிலுக்கு இறுதியில் மருத்துவமனையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் போட்டுத் தாக்குகிறார்கள்..!

இறுதியில் இந்தத் தாக்குதலை முடித்துவைத்து தனது உயிரைத் தியாகம் செய்தவனை பாராட்டி நான்கு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெய்ஹிந்த் பாடிய அக்மார்க் இந்திய தேசிய ஒற்றுமைக்கான படம் இது..! நிச்சயம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் விருது இப்படத்திற்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்....!

தீவிரவாதம் இரு பக்கமும் இருக்கிறது என்பதை சொல்ல வந்தவர்கள், தங்களுக்கு வசதியான இடங்களில் மட்டும் அவற்றைச் சொல்லிவிட்டு மிச்சத்தை நம் கைகளில் விட்டுவிட்டார்கள்..!

இறுதியில் தேச பக்தனாக விதைக்கப்படும் ஒரு ஹீரோவின் புகழ் பாடும் அதே வேளையில் குரான் புத்தகத்தையும், அப்பாவிகள் நாங்கள் என்று துப்பாக்கி முனையைப் பார்த்து கதறிய கதறலையும் பார்க்கச் சகிக்காமல் செய்வதறியாமல் தன்னைத் தானே சுட்டுக் கொன்று இறக்கும் முஸ்லீம் தீவிரவாதி கவனத்துடன் மறைக்கப்படுகிறார்..!

முஸ்லீமாக பார்த்தவுடனேயே தீவிரவாதிதான் என்று நினைக்கும் ஒரு இந்து இன்ஸ்பெக்டரை இறுதியில் அந்த முஸ்லீமே காப்பாற்றுவதைப் போல் காட்டி இரண்டையும் கவனமாக பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர். 

தன்னைக் காப்பாற்றிய முஸ்லீமை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டதோடு இந்து இன்ஸ்பெக்டரின் சேப்டர் முடிந்தது. ஆனால் பிரச்சினையைத் துவக்கியதே அவரை போன்ற யூனிபார்ம் போட்ட தீவிரவாதிகளால்தான் என்பதை மட்டும் சொல்லாமல் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று நம்மிடமே தள்ளிவிட்டார்கள்..!

மும்பையில் நடந்ததைத்தான் அவர்கள் நிகழ்வாக எடுத்திருக்கிறார்கள் என்று நம்மை யூகிக்க வைக்கிறார்கள்..! எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கண்டிக்கின்ற அதே வேளையில் உள்ளூரிலேயே இருக்கும் பயங்கரவாதத்தையும், அதனைத் தூண்டிவிடும் சக்திகளையும் கண்டிக்கத்தான் இந்தப் படத்தில் கதை இல்லை..!

குஜராத் கலவரத்தை முன் வைத்து கதை செய்து, அதனைச் செய்தது இந்து தீவிரவாதிகள் என்று சொல்லி அந்த படுகொலைச் சம்பவத்தில் எத்தனை, எத்தனை சிறுபான்மையினர் கொல்லப்பட்டார்கள் என்பதை இயக்குநர் கிருஷ் தனது அடுத்தப் படத்தில் சொல்லுவாரென்று எதிர்பார்க்கிறேன்..!.

மற்றபடி ஒரு சினிமாவாக பார்க்கப் போனால், அதற்குத் தேவையான அத்தனையையும் ஸ்கிரீனில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அதிலும் சிலவற்றில் லாஜிக் மீறல்கள் உண்டு..!

சரண்யா மற்றும் அவரது மாமனாரின் நடிப்பு ஸ்கோர்.. அற்புதம்.. இந்த ஒரு கதையை வைத்தே தனி சினிமாவே எடுத்திருக்கலாம். இப்போதும் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதி மருத்துவமனைகளில் தினத்துக்கு 4 பேராவது தங்களது குடும்ப வறுமையினால் கிட்னியை விற்றுவிட்டுப் போகிறார்கள்..! அளவுக்கு மீறிய பிரச்சினைகள் அந்த அப்பாவிகளை அழுந்தும்போது எப்படியாவது தப்பிக்க நினைத்து இந்தச் சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள்..!

சிம்புவின் இந்த அடக்கமான நடிப்பை இனி வரும் படங்களிலும் காண்பித்தால் இன்னும் நிறைய ரசிகர்கள் அவரைத் தேடி வருவார்கள்..! சரண்யாவின் கொள்ளையடித்த பணத்தை ஹோட்டலில் கொடுக்க வந்து பின்பு பின் வாங்கி செல்வது எதிர்பார்த்ததுதான் என்றாலும்  எடுத்த விதம் அருமை..!


சின்ன தளபதி பரத்கூட ஊரோடு ஒத்துப் போக வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறார். தனி ஹீரோவாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முன் வராத நிலையில், கிடைக்கின்ற வேடத்தில் நடிப்பது நல்லது என்ற நிலைமைக்கு வந்திருக்கிறார். பாராட்டுக்கள்.. எடுத்து முடிக்கப்பட்டு தயாராக இருக்கும் திருத்தணி மற்றும் யுவன் யுவதி, 555 போன்ற படங்களின் கதி இத்திரைப்படத்தில்தான் இருக்கிறது என்பதால் இப்போது பரத் சந்தோஷமாக இருப்பார் என்று நினைக்கிறேன்..!


வேகாவுடனான அவரது காதலின் தூண்டு சக்திக்காக நடக்கும் அந்த நடுரோட்டுச் சண்டை திணிக்கப்பட்டதாக நன்றாகவே தெரிகிறது என்றாலும், இங்கேயும் ஒரு மனிதக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அனுபவமே இறைவன் என்பதை பரத்தின் மூலம் இந்த இடத்தில் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்..!


பிரகாஷ்ராஜின் நடிப்பு ஓவர் ஆக்ட்டிங் என்று சொல்லப்பட்டாலும், அவரது கேரக்டருக்கு அது சரிதான்.. தனது மனைவியின் கர்ப்பம் கலைந்து போன சூழலில் அவரது வெளிப்பாடு அகோரம்..! வேறென்ன செய்வது..? இன்ஸ்பெக்டரிடம் கன்னத்தில் அறை வாங்கிய அதிர்ச்சியில் தம்பியைத் தள்ளிவிட்டு அவமானத்தில் நிற்கும் காட்சியைப் போல இந்தியாவில் எத்தனையோ அப்பாவிகளும் சந்தித்திருக்கிறார்கள்..!

இன்னொரு குறிப்பிடத்தக்க நடிப்பு ராதாரவியுடையது.. லஞ்சத்திற்கு அஞ்சாத இன்ஸ்பெக்டர் வேடம்.. லோக்கல் போலீஸுடன் சகவாசம் வைத்துக் கொள்வது எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறார்கள். அனுஷ்காவின் காட்டமான கேள்விக்கு ராதாரவி கொடுக்கும் அடிதான் இன்றைக்கும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் அப்பாவிகளுக்கு கிடைக்கும் மரியாதை..!


தற்போதைய நகைச்சுவை டிரெண்ட்டில் முன்னணியில் நிற்கும் சந்தானத்தின் அலட்டிக் கொள்ளாத வசனத்தில் தியேட்டர் பல முறை அதிர்கிறது..! ஆனாலும் இப்படியே எத்தனை நாளைக்கு அவர் வாழ்க்கையை ஓட்டி விட முடியும் என்றும் யோசிப்பு வருகிறது..!? சந்தானம் குணச்சித்திர நடிப்புக்கு மாறினால் தப்பித்தார். இல்லையேல் இதுவெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..!

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எவண்டி உன்னைப் பெத்தான் என்ற இலக்கியத் தரமான பாடலை தானே சொந்தக் குரலில் பாடியிருந்தும் பாடல் படமாக்கப்பட்ட விதம் மொக்கையாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. நல்லவேளை.. அதனை உருப்படியாக எடுத்துத் தொலைத்திருந்தால் அனைத்து சேனல்களிலும் வருடம் முழுக்க ஓட்டி உயிரை எடுத்திருப்பார்கள்.. போய்த் தொலையட்டும்..!


தெலுங்கு வெர்ஷனில் வந்த அனுஷ்காவின் பாடல் காட்சியை டப்பிங் மட்டும் செய்துவிட்டு அப்படியே தமிழுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அனுஷ்காவின் கால்ஷீட் கிடைக்கவில்லையோ..? ஆனாலும் “மணி நோ மணி” பாடலில் அம்மணி போடுகின்ற அந்த கெட்ட ஆட்டத்தில் தியேட்டரே அதிர்கிறது..! தெய்வத்தை சந்தித்த திருப்தியை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.. காசி தியேட்டரில் ஸ்கிரீன் அருகேயே போய் ஆடிக் களைத்துப் போனார்கள் ரசிகர் பெருமக்கள்.. நல்லவேளை இதையெல்லாம் பார்க்க பெரியார் உயிருடன் இல்லை. அவர் தப்பித்துக் கொண்டார்..!

அனுஷ்காவின் தோழியாக வரும் அந்தத் திருநங்கையை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திருநங்கைகளை கேவலப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூக்குரல் எழுந்தாலும், இதிலும் அது போன்ற காட்சிகள் இருந்தாலும், இந்தக் கதாபாத்திரத்தின் நடிப்பு அருமை..! அதையும் செய்து, இதனையும் செய்து பேலன்ஸ் காட்டியிருக்கிறார். சினிமாவில் இதெல்லாம் சகஜம்ப்பா..! கேட்டால், இதைத்தான் சொல்லப் போகிறார்கள்..!

அனைவரும் இறுதியில் மருத்துவமனையில் சந்தித்தே தீர வேண்டும் என்பதுதான் கதை என்பதால் மருத்துவமனைக்கு வர வைப்பதற்காக திணிக்கப்பட்ட திரைக்கதையை நாம் மன்னிக்கத்தான் வேண்டும்..!

தற்சமயம் போட்டிக்கு இருப்பது 'கோ' படம் மட்டுமே என்பதால் இத்திரைப்படமும் தமிழ்நாட்டில் நன்கு கல்லா கட்டும் என்பதில் சந்தேகமில்லை.