Showing posts with label ஜாபர்சேட். Show all posts
Showing posts with label ஜாபர்சேட். Show all posts

இந்தியாவின் ஊழல்களின் தந்தை கலைஞர் கருணாநிதி..!

08-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம்..! என்கிற தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி தோழர் சவுக்கு தனது வலைத்தளத்தில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகளை விற்றதில் நடந்தேறியுள்ள முறைகேடுகளை எழுதியபோதே நினைத்தேன், இது கலைஞரின் அடுத்தச் சுற்று ஊழல் கதையாக நாறப் போகிறதென்று..!

சில தினங்களுக்கு முன்பு தெஹல்கா இதழ் இதனை வெளிப்படுத்தியிருந்தது. நேற்று என்.டி.டி.வி.யும் இதில் நடந்திருக்கும் ஊழல்களை வெளிப்படுத்திக் காட்டியது.

இன்று காலை வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில் இந்த ஊழலினால் பயன் பெற்றுள்ளவர்கள் யார், யார் என்பதையும், இது எந்த மாதிரியான ஊழல்.. எந்த விதத்தில் இதில் ஊழல் நடந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

அதன் முழு விபரம் இங்கே :

தமிழகத்தில் நடந்துள்ள மிகப் பெரிய நில ஊழலை ஆர்.டி.ஐ. சேவகர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். கோபாலகிருஷ்ணன் என்ற அந்த சேவகர் அம்பலப்படுத்தியுள்ள இந்த ஊழலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், தி.மு.க.வினர் உள்ளிட்ட பலரும் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழக நகர்ப்புறங்களில் சொந்தமாக வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்த வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இடம், வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் விற்கிறது. இந்த நிலம் அல்லது வீடுகளை வாங்குவோருக்கு சொந்தமாக வீடோ அல்லது நிலமோ இருக்கக் கூடாது.

இந்த வீடுகள், நிலங்களை தமிழக அரசு, தனது சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு அந்தஸ்து பெற்றவர்களுக்கு ஒதுக்குவதும் வழக்கத்தில் உள்ளது. ஆனால் இவர்களும்கூட சொந்தமாக வீடோ, நிலமோ இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் விதியை மீறி சகட்டுமேனிக்கு திமுக அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு நிலங்களையும், வீடுகளையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளது வீட்டு வசதி வாரியம் என்பதை கோபாலகிருஷ்ணன் தனது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்த சிறப்பு அரசு ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை, முதல்வரால் நேரடியாக பரிந்துரைக்கப்பட முடியும். சிறப்பு அரசு ஒதுக்கீட்டைப் பெற கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

- கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்த பெண்கள்.

- சமூக சேவகர்கள்.

- உடல் ஊனமுற்றவர்கள்.

- பாதுகாப்புப் படையினர்.

- முன்னாள் ராணுவத்தினர்

- அறிவியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம், விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குவோர்.

- சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

- அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்.

- பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர்.

- மத்திய அரசு நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுவோர்.

- பத்திரிக்கையாளர்கள்.

- பல்கலைக்கழக பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள்.

இவர்களுக்குத்தான் இந்த அரசு சிறப்பு ஒதுக்கீட்டைப் பெற தகுதி உண்டு. மேலும் இவர்களும்கூட சொந்த நிலம், வீடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

தற்போது இந்த ஒதுக்கீட்டின் கீழ் நிலம், வீடு பெற்றுள்ள பலரின் தகுதி சமூகத்தில் மிகப் பெரியதாக உள்ளது, இந்த ஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தி.மு.க.வில் ஒரு பிரிவின் செயலாளராக இருப்பவரை சமூக சேவகர் என்ற அந்தஸ்தின் கீழ் வீடு ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். அதேபோல சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு வீடு ஒதுக்கியுள்ளனர். பல முக்கிய அரசு உயர் அதிகாரிகள், அவர்களது  உறவினர்களுக்கு தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி வீடு வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சிலர் தங்களைப் பாராட்டி தாங்களே கொடுத்த சான்றிதழை வைத்து நிலம், வீடு பெற்றுள்ளனர். சிலர் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் சான்றிதழ்களைக் காட்டி வீடு வாங்கியுள்ளனர்.

நிலம், வீடு ஒதுக்கப்பட்டவர்களில் சிலர் குறித்த விவரம்...

இந்தப் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி, முன்னாள் நீதிபதி ரவிராஜ்பாண்டியன், (இவர் சமீபத்தில்தான் அரசின் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்) மற்றும் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் போன்றோரும் இடம் பெறுகிறார்கள்.

நீதிபதி பானுமதிக்கு சோழிங்கநல்லூரில் எம்.ஐ.ஜி. ஃபிளாட்கள் 2 ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு முறையே ரூ. 27.55 லட்சம் மற்றும் ரூ. 30.05 லட்சமாகும். இந்த இரண்டு வீடுகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

2008-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி இவை ஒதுக்கப்பட்டுள்ளன. நீதிபதி பானுமதிக்கு ஏற்கனவே சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், வீடு உள்ளது. இதுபோக அவரது கணவர் வழக்கறிஞர் கணேசன் பெயரில் நிலமும் உள்ளது. அதேபோல சைதாப்பேட்டையில் சொந்தமாக நிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி கே.ரவிராஜ பாண்டியனுக்கு, திருவான்மியூர் விரிவாக்கப் பகுதியில், 3117 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி இது ஒதுக்கப்பட்டது. இதன் அப்போதைய மதிப்பு ரூ. 68.54 லட்சமாகும். இப்போது இதன் மதிப்பு ரூ. 3.2 கோடியாகும்.

நிலம் பெற்ற மற்றவர்கள் - வழக்கறிஞர் வி.அம்பிகா (கடப்பேரி-மதுராந்தகம்), உளவுப் பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட் (திருவான்மியூர், காமராஜ் நகரில் ரூ. 1.26 கோடி மதிப்புள்ள நிலம். இப்போது இதன் மதிப்பு ரூ. 6 கோடியாகும். அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற பிரிவின் கீழ் இந்த நிலத்தை ஜாபர்சேட் வாங்கியுள்ளார்.

2008-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி இந்த நிலத்தை ஜாபர்சேட்டின் மகள் ஜெனீபர்சேட் (அப்போது இவர் மாணவி) பெயருக்கு அரசு கொடுத்தது. இந்த நிலத்தை வாங்குவதற்காக முதலில் ரூ. 46.03 லட்சம், ரூ. 1.73 லட்சம் என இரு காசோலைகளை வழங்கியுள்ளார் ஜெனீபர். பின்னர் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 60 லட்சம் கொடுத்தார். முழுத் தொகையையும் கொடுத்த பின்னர் நிலத்தை தனது தாயார் பர்வீன் ஜாபர் பெயருக்கு அவர் மாற்றிக் கொடுத்துள்ளார்.

தனது மகளிடமிருந்து இந்த நிலத்தைப் பெறுவற்காக பர்வீன் ஜாபரும், 3 தவணையாக பணத்தைக் கொடுத்து நிலத்தைப் பெற்றுள்ளார். இந்த இரட்டை கட்டணத்திற்குக் காரணம், மகள் ஜெனீபர் மீது வருமான வரித்துறை விசாரணை பாய்ந்து விடக் கூடாது என்பதற்காக என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த இடத்தில், பர்வீன் ஜாபர் சேட்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வர் கலைஞரின் பி.ஏ.வான ராஜமாணிக்கத்தின் மகனான துர்கா சங்கரும் இணைந்து பல அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 பிளாட்டுகள் ஏற்னவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதில் இடம் பெறும் ஒவ்வொரு வீடும் ரூ. 1 கோடிக்கு  விற்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில் துறை இணைச் செயலாளர் ஜி.பிரகாஷ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.கே.கரியாலி, லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட முன்னாள் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன். (இவர் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற சலுகையின் கீழ் வீடு பெற்றுள்ளார்).

ம.தி.மு.க.விலிருந்து தாவி தி.மு.க.வுக்கு வந்து சேர்ந்தவரான எல்.கணேசன், முகப்பேர் பகுதியில் எச்.ஐ.ஜி. வீட்டை வாங்கியுள்ளார். அதன் அப்போதைய மதிப்பு ரூ. 79.86 லட்சமாகும்.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகளும், மறைந்த அவரது மகன் செழியனின் மனைவியுமான பிருந்தா நெடுஞ்செழியன், முகப்பேரில் எச்.ஐ.ஜி. வீட்டை வாங்கியுள்ளார். சமூக சேவகர் என்ற பெயரில் இவர் வாங்கியுள்ளார். இதற்காக சேலம் தாசில்தார் ஒருவர் சான்றிதழ் அளித்துள்ளார். ஆனால் சென்னையில் வீடு வாங்குவதற்கு சேலம் தாசில்தார் சான்றழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிருந்தா செழியனின் மகளுக்கும் முகப்பேரில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. 20 வயதான இவரும் சமூக சேவகர் என்று காட்டி வாங்கியுள்ளனர். இவருக்கும் சேலம் தாசில்தாரே சான்றளித்துள்ளார். சமூக சேவையாக இவர் கூறியிருப்பது என்.எஸ்.எஸ். முகாம்களில் பங்கேற்றது, ரத்த தானம் செய்தது, கண் தான முகாம்களை நடத்தியது, ஏழை மாணவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தது. தாய்க்கும், மகளுக்கும் அடுத்தடுத்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. எம்.எல்.ஏவும், அரசு தலைமைக் கொறடாவுமான சக்கரபாணியின் மனைவி ராஜலட்சுமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதாவும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள். யசோதாவுக்கு சான்றிதழ் கொடுத்திருப்பவர் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் வனஜாவாம்..!

பூச்சி முருகன். இவர் தி.மு.க. தொழிற்சங்க உறுப்பினர். சமூக சேவகர் என்ற பெயரில் திருவான்மியூரில் இடம் வாங்கியுள்ளார். இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 2.07 கோடியாகும். இவர் சமூக சேவகர் என்ற பெயரில் இடத்தை வாங்கியுள்ளார். ஆனால் இதற்காக எந்த ஒரு சான்றிதழையும் இவர் சமர்ப்பிக்கவில்லையாம்.

பாரதி தென்னரசு என்கிற பெண்மணி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. அமைச்சர் பெரியகருப்பனுக்கு நெருக்கமானவராம். சமூக சேவகர் என்ற பெயரில் இவரும் வீடு வாங்கியுள்ளார். ஆனால் சமூக சேவைக்கும், இவருக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் ஆர்.டி.ஐ. மூலம் தெரிவித்துள்ளார் கோபாலகிருஷ்ணன்.

மு.க.அழகிரியின் வலது கரங்களில் முக்கியமானவரான மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்திக்கு முகப்பேரில் வீடு ஒதுக்கபப்ட்டுள்ளது. இதன் இப்போதைய மதிப்பு ரூ. 4 கோடியாகும். சமூக சேவகராக இவர் காட்டப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு மதுரை மாவட்டத்தில் ஏகப்பட்ட நிலங்கள் இவரது பெயரிலும், மனைவி பெயரிலும் உள்ளன. சொந்த ஊரான வெளிச்சநத்தத்தில் இவருக்கு ஏகப்பட்ட நிலங்களும் உள்ளன.

முதல்வரின் தனி செயலாளர் தேவராஜின் மகள் தீபா, தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரனின் மகன் நவீன்குமார், ஜாபர்சேட்டின் மகன் நவீன் இப்ராகிம், முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், திமுக தலைமைக் கழக ஐ.டி. பிரிவு மேலாளர் இளமுகில், இளமுகிலின் சகோதரி இளந்தென்றல், உச்சநீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் கண்ணபிரான், முதல்வரின் பாதுகாப்புப் பிரிவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் கணேசன், வினோதன், இன்னொரு பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான பாண்டியனின் மனைவி மீனா ஆகியோருக்கும் விதிகளுக்குப் புறம்பாக நிலம், வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆர்.டி.ஐ. தகவல் தெரிவிக்கிறது.

நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைக்க பார்க்கிறார்.

அவர் கொடுத்துள்ள பேட்டியில், “அப்பழுக்கற்ற அதிகாரி என்று தனக்குத்தானே ஒரு அதிகாரி உத்தரவாதம் தரலாம். இது தொடர்பாக அலுவலகத்துக்கு வந்து டாக்குமென்டோடு பேசலாம். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை. சட்டதிட்டத்துக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு நடந்துள்ளது...” என்றார்.

“ஏற்கெனவே சொந்த வீடுகள் வைத்திருக்கும் நீதிபதிக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதே.?” என்ற கேள்விக்கு,  “ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் குறிப்பிட்டு புகார் கொடுங்கள். அரசு பரிசீலித்து உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும்.” என்று சொல்லி முடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய அரசியல் ஊழல்களின் தந்தையாக இனிமேல் பேசப்பட இருக்கும், அண்ணன் ஸாரி அண்ணல் கருணாநிதியோ இதைவிடப் புழுகியிருக்கிறார்.

அவர் இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையைப் பாருங்கள் :

அரசு விருப்புரிமையின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடுகள் - மனைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக - கற்பனையாகவும், வேண்டுமென்றே திசை திருப்ப வேண்டுமென்ற உள்நோக்கத்துடனும்; சில நீதியரசர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் பெயர்களைக் குறிப்பிட்டு - ஒரு சில ஏடுகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது ஏதோ இப்போது தி.மு.கழக ஆட்சியிலே மட்டும் நடைமுறைப்படுத்துவது போன்ற தோற்றத்தை அந்தச் சில நாளேடுகள் உருவாக்கிட பெருமுயற்சிகள் செய்கின்றன.

அரசு விருப்புரிமை ஒதுக்கீடு என்பது கடந்த பல ஆண்டுகளாகவே, நடைபெற்ற எல்லா ஆட்சிக் காலங்களிலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்படும் மனைகள், கட்டப்படும் வீடுகள் அனைத்தும் - அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் - நடைமுறையில் இருந்து வரும் ஒன்றாகும்.

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகள் ஆகியவற்றில் 85 சதவிகித வீடுகளை வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் செய்வோருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மீதியுள்ள 15 சதவிகித வீடுகள் மற்றும் மனைகளை அரசு விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்கிறது. இது எல்லா ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து கடைப்பிடித்து வரப்படும் முறையாகும்.

அரசு தனது விருப்புரிமை ஒதுக்கீடான 15 சதவிகித இடங்களை திருமணம் ஆகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், சமூக சேவகர்கள், சமூகத்தில் சிறப்பு வாய்ந்தோர், தனியாக வசிக்கும் முதியோர், பொது நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் பணி புரிவோர், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிவோர், பத்திரிகையாளர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிவோர், தேசிய மயமாக்கப்பட்ட ஈட்டுறுதி நிறுவனங்களில் பணி புரிவோர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாரியங்களில் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைத் தவிர) பணிபுரிவோர், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிவோர், ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள், அப்பழுக்கற்ற அரசு ஊழியர் ஆகியோர்க்கு, விண்ணப்பங்கள் - கைவசம் உள்ள மனைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அரசினால் விருப்புரிமையைப் பயன்படுத்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போலவும், குலுக்கல் முறையிலே விற்பவர்களிடம் பெறப்படும் தொகையைவிட இது குறைவானது என்பதைப் போலவும், வேண்டியவர்களுக்கெல்லாம் அரசு இடத்தை இனாமாக வாரிக் கொடுத்துவிட்டதைப் போலவும் சில நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்தப் பிரச்சினையை திசை திருப்பக் கூடிய வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - குடியிருப்புகளுக்கு அல்லது மனைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும்பொழுது; வாரியம் நடைமுறையில் கடைபிடிக்கும் விலை, சந்தை விலை, பத்திரப் பதிவு அலுவலக வழிகாட்டி மதிப்பீட்டு விலை ஆகியவற்றுள் எது அதிகமோ, அதையே இறுதி விலையாக நிர்ணயம் செய்கிறது. அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டிற்கும், வாரிய ஒதுக்கீட்டிற்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணய முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த அரசின் சார்பில் விருப்புரிமை அடிப்படையில் மனை பெற்றோர், அந்தத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து, அந்த மனையையே திரும்ப ஒப்படைக்கின்ற நிலைமையும் உள்ளது.

மேலும், ஒதுக்கீடு பெறுவோர், வாரிய விதிமுறைகளின்படி விண்ணப்பப் படிவத்தில் தெரிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தரும் உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டே ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

ஒதுக்கீடு பெறுவோர் - மனையின் முழு விலையையும் செலுத்தி, விற்பனைப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டதற்குப் பிறகு - அந்த மனையை எந்தவிதமாகக் கட்டிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வீட்டு வசதி வாரியம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை.

அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டினால் அரசுக்கோ, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை. எல்லா ஆட்சிக் காலத்திலும் ஒரே மாதிரியான நடைமுறைகளும், விதிமுறைகளும்தான் பின்பற்றப்பட்டு வருகின்றன. விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அல்லது விதிமுறைகளை மீறி அரசு விருப்புரிமை ஒதுக்கீடுகள் நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்தி விஷமத்தனமானது.

‘‘விதிமுறைகளுக்கு உட்பட்டே அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் - குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டால் - அரசு அதனைப் பரிசீலனை செய்து, உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும்” என்று நேற்றே (7.12.2010) செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் விளக்கியுள்ளார்.

வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் இது போல வாடகை வீடுகளேகூட விருப்புரிமை அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த சிலருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாத இந்தத் தகவலை பெரிதாக்கி உள்நோக்கத்தோடு செய்திகளை சில பத்திரிகையாளர்கள் வெளியிட்ட போதிலும், அனைத்துப் பத்திரிகையாளர்களும் வீட்டு வசதி பெற வேண்டுமென்ற எண்ணத்தோடு கழக அரசு எவ்வெப்போதெல்லாம் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கே என்று சலுகை விலையில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் வீட்டு மனைகள் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் செய்திகளை அந்த இதழாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோர் மறைத்துவிட்டு அரசின் மீது களங்கம் சுமத்த முற்படுவதுதான் விந்தையிலும் விந்தையாகும்.”

இப்படிச் சொல்லி முடித்திருக்கிறார் நமது ஊழல்களின் தந்தை கருணாநிதி..

இதுவரையில் இந்தியத் திருநாட்டில் இந்த அளவுக்கு ஊழல் நடைபெற்றதில்லை என்று சொல்லக் கூடியவகையில் ஸ்பெக்ட்ரம் ஊழலிலேயே தன் பெயர் நாறியும் பதவி ஆசையில் வெட்கமில்லாமல் முதல்வர் நாற்காலியில் இன்றுவரையிலும் ஒட்டிக் கொண்டு தானே தமிழர்களின் ஒரே தலைவன் என்று சொல்லிக் கொண்டு திரியும் கருணாநிதிக்கு இப்போது அவர் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களெல்லாம் அவர் விரும்பிச் சாப்பிடும் சவ்வு மிட்டாய் போலாகிவிட்டது..!

15 சதவிகித வீடுகளை அரசே தன் விருப்பப்படி கொடுக்கிறது என்றால் இது நிச்சயம் ஊழலில்தான் போய் முடியும் என்பது இந்த அறிவின் சிகரமான முதலமைச்சருக்குத் தெரியாதா..? நிச்சயமாகத் தெரியும்.. போன ஆட்சியில் இதையே பயன்படுத்தினார்கள். அதனால்தான் நானும் இதையே பயன்படுத்தினேன் என்றால் பின்பு எதற்கு அ.தி.மு.க.வை தினம்தோறும் வைந்து கொண்டு திரிய வேண்டும்..? நான் ஜெயலலிதாவை அடியொற்றித்தான் ஆட்சி நடத்தி வருகிறேன் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட வேண்டியதுதானே..? இப்போது மட்டும் கவுரவம் இடிக்கிறதோ..?

ஒரு மனிதனின் தனிப்பட்டக் குற்றங்கள் அவனை மட்டுமே பாதிக்கிறது என்றால் அது அவன் பாடு.. அவன் விதி பாடு.. அவனைப் படைத்த கடவுள் பாடு.. இதனால் யாருக்கும் பாதிப்பில்லாதபட்சத்தில் வெளியாட்கள் குற்றம், குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை..

ஆனால் அதே மனிதன் பொதுச் சொத்தைத் திருடித் தின்றாலோ, அல்லது பொது வாழ்க்கையில் அவன் செய்யும் செயலால் ஒரு சமுதாயமே பாதிக்கப்பட்டாலோ அவன் நிச்சயம் குற்றவாளிதான்.

இந்த வரிசையில் நமது ஊழலில் தந்தை எப்போதோ இடம் பிடித்துவிட்டார். ஆனாலும் இந்த வரிசையில் எப்போதும் நான்தான் முதலிடத்தில்தான் இருப்பேன் என்று நினைத்து அடம் பிடிக்கிறார் பாருங்கள்.. இங்கேதான் இந்திய அரசியல்வியாதிகள் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் நம்ம ஊழல்களின் தந்தை.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதனை எத்தனை பேருக்கு அள்ளிக் கொடுத்திருப்பார்கள் என்று லிஸ்ட் எடுத்து அது முறைகேடாக கொடுத்திருந்தால் அவர்களது பெயரைக் குறிப்பிட்டு இப்போது அதற்காக ஜெயலலிதா மீது அரசு மூலமாக வழக்குத் தொடர்ந்திருந்தால் இந்த யோக்கியவான் கருணாநிதியைப் பாராட்டலாம்.

ஆனால் இவரும் அதையே தொடர்ந்து செய்து தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தும் அரசியல் பகடையாக பயன்படுத்தியிருப்பது கேவலமான விஷயம்தானே..? பின்பு ஜெயலலிதாவைக் குற்றம் சொல்லும் யோக்கியதை இவருக்கு எங்கே இருக்கிறது..?

இந்த விதிமுறையே கேனத்தனமானது.. முட்டாள்தனமானது என்பது ஏன் இந்த அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், முதல் அமைச்சருக்கும் தெரியவில்லை. பத்தாம் வகுப்பு படித்த எனக்கே முட்டாள்தனமாகத் தெரிகிறபோது இவர்களுக்குத் தெரியவில்லையெனில்.. நமது ஊழல்களின் தந்தை செருப்புக் கடையைப் பார்த்துக் கொள்ளக்கூட லாயக்கில்லாதவர் என்றுதான் நான் உறுதியாகச் சொல்வேன்..

இன்றைய ரியல் எஸ்டேட் பிஸினஸ் வரலாற்றில் முகப்பேரில் ஒரு சதுர அடியின் விலையையும், இந்த குடியிருப்புகளின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மொத்த விலை கோடிக்கணக்கில் வருகிறது. இப்படி கோடிக்கணக்கான ரூபாயை கொடுத்து வீடு வாங்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள், இதுவரையில் சொந்தமாக ஒரு வீடு கூடவா இல்லாமல் இருப்பார்கள்..? யோசிக்க வேண்டாமா..? இந்த விதிமுறை கேவலமாக இல்லை..?

பொது நிறுவன ஊழியர்கள், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வங்கி ஊழியர்கள், வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரிவோர், ராணுவத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிக் காவலர்கள் - இந்த லிஸ்ட்டில் யார் கோடி ரூபாய்களை கையில் வைத்துக் கொண்டு வீடு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதைப் படிக்கும் பதிவர்கள் சற்று யோசித்து  தங்களது நெஞ்சில் கை வைத்து மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள்..!

நிச்சயம் முடியாதல்லவா.. அப்படியனால் இவர்களுக்குக் கொடுப்பதாகச் சொல்வதும் நிறைவேற்ற முடியாதல்லவா..? அப்புறம் ஏன் இந்த விதிமுறை..? எதற்காக இந்த 15 சதவிகித விதிவிலக்கு..?

இதையும் பொதுப் பிரிவிலேயே சேர்த்துவிட்டு ஏலத்தில் விட்டிருந்தால் அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்திருக்குமே..?

இதில் என்ன மாதிரியான ஊழல்கள் நடந்திருக்கின்றன..?

தனக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், கட்சி சார்புள்ளவர்கள், வீடு வாங்குவதற்கான தகுதியே இல்லாதவர்கள் என்று பலருக்கும் வீடுகளை முதல் அமைச்சரின் விருப்பப் பட்டியலில் ஒதுக்கீடு செய்திருப்பதுதான் ஊழல்.. இதுக்கே இந்த ஊழலின் தந்தை தமிழ்நாட்டைவிட்டே ஓட வேண்டும். துரத்தப்பட வேண்டும்..!

வாங்கியிருப்பவர்களின் லிஸ்ட்டுகளை படித்துப் பாருங்கள். இதில் பெரும்பாலான குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, “ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருப்பவர்கள் இந்தப் பிரிவின் கீழ் வீடுகளைப் பெற முடியாது. ஆனால் இவர்கள் வாங்கியிருக்கிறார்கள்..” என்பதைத்தான்.

இதற்கு பல உதாரணங்களை மேலே படித்திருப்பீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்..? இதில் ஊழலே நடக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்.. சரி பணம் விளையாடினால்தான் ஊழலா என்பவர்களுக்காக இந்த இடத்தில் வார்த்தையை மாற்றுகிறேன். அதிகாரத் துஷ்பிரயோகம்.. இதற்கு முழுப் பொறுப்பை நமது ஊழலின் தந்தை கருணாநிதிதான் ஏற்க வேண்டும்.

ஜாபர்சேட் என்னும் அதிகாரிக்கு இதே சென்னையில் சொந்தமாக வீடுகள் இருப்பது நிரூபணமாகியிருக்கிறது.. ஆனால் அவருக்கு வீடும் கொடுத்திருக்கிறார்கள். செய்தி வெளியானது ஜூலை மாதத்தில். ஆனாலும் அவர் இன்னமும் உளவுத்துறை தலைவராகவே அமர்ந்திருக்கிறார். இதுவே விந்தையாக இல்லை...? எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பவர்கள் ஜாபர்சேட் விவகாரத்திலாவது பதில் சொல்லட்டுமே..?

சரி அடுத்தக் கூத்தைப் பாருங்கள். யாரெல்லாம் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள் என்ற அந்த முழு லிஸ்ட்டையும் படித்தால் நமக்கே வியப்பாக இருக்கிறது.. தமிழ்நாட்டில் இத்தனை சமூக சேவகர்களாக என்று..?

தனக்கு வேண்டிய, பிடித்த, தேவையான, பதில் சேவையாக செய்ய வேண்டியவர்களுக்கு ஊழல்களின் தந்தை வாரி வழங்கியிருப்பதுதான் இந்த சமூக சேவகர் என்ற பட்டம். இந்த பட்டத்தை யார் கொடுப்பது என்கிற கேவலமான விதிமுறையும் இதே ஆட்சியில் அப்படியேதான் இருக்கிறது என்பதும் மற்றொரு கேவலமானது.

அ.தி.மு.க.வைவிட நாங்கள்தான் ஆட்சியைச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறோம் என்று தினம்தோறும் காக்கா வலிப்பு வந்தவரைப் போல் பினாத்திக் கொண்டிருக்கும் நமது ஊழல்களின் தந்தை கருணாநிதிக்கு இந்த விதிமுறை கொஞ்சம்கூட அவரது மனசாட்சியையும், அறிவையும் உறுத்தவேயில்லை.. பின்பு ஏன் இவர் தன்னைத்தானே முத்தமிழ் வித்தகர் என்று அழைத்துக் கொள்கிறார்..?

“அவர்களே அவருக்கு சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ளலாம். அது அரசு விதிமுறைதான்..” என்கிறார் அமைச்சர். அப்படியானால் நானே எனது வருமானச் சான்றிதழில் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அரசு ஏற்றுக் கொள்ளுமா..? நானே எனது பிறப்புச் சான்றிதழில் கையொப்பமிட்டால் அது செல்லுபடியாகுமா..? என்னய்யா பேசுறானுக இவனுக..? அறிவு இருக்கா இல்லையா இந்தக் கம்னாட்டிகளுக்கு..? இதே மாதிரி எல்லா அரசு சான்றிதழையும் ஏற்றுக் கொள்ளச் சொல்லலாமே..? மக்களுக்கு ஒரு தொல்லை விடுமே..? செய்வார்களா இந்தக் கபோதிகள்..!?

இதில் எனக்கு ரொம்பவே கடுப்பைக் கிளப்பியிருப்பது ஊழல்களின் தந்தையின் வீல்சேரைத் தள்ளிக் கொண்டு வரும் மூன்று செக்யூரிட்டிகளுக்கும் வீடு கொடுத்திருப்பதுதான். இது நிச்சயமாக ஊழல் மற்றும் முறைகேடுதான்.

வாங்குவது அரசு சம்பளம்.. ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்குரிய 13 ஆயிரம் ரூபாய் சம்பளம்தான் அந்த செக்யூரிட்டிகளுக்கு..! அவர்கள் அந்த வீட்டை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கி அதில் பால் காய்ச்சி, குடியேறி மீண்டும் அதைவிட பெரிய விலைக்கு விற்றிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது, மாதச் சம்பளம் வாங்குவோரிடமெல்லாம் மிகக் கச்சிதமாக தனது வரியை விரட்டி, விரட்டி வசூலிக்கும் வருமானவரித்துறை  உயிரோடு இருக்கிறதா இல்லையா என்கிற சந்தேகமே வருகிறது.

இத்தனை கோடிகளை ஒரே நாளில் புரட்டித் தருகிறார்களே.. இது எங்கேயிருந்தது வந்தது..? எப்படி வந்தது..? யாரால் கொடுக்கப்பட்டது என்றெல்லாம் விசாரிக்க மாட்டார்களா..? அவர்களைத் திருப்திப்படுத்தும்வகையில் ஆவணங்களைத் தயாரிக்கத்தான் திருட்டு ஆட்கள் நிறையவே இருக்கிறார்களே இந்தியாவில். அப்படித்தான் கொடுத்திரு்ககிறார்கள். அப்போது இது யாருடைய குற்றம்..? இது போன்ற ஒரு சம்பவத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்தான் பொறுப்பாக வேண்டும். அது நமது ஊழலின் தந்தை கருணாநிதிதான்..!

தனது வீல்சேரைத் தள்ளி வரும் ஊழியர்களையே கோடீஸ்வரர்களாக மாற்றியிருக்கும் இந்தப் புண்ணியமும், இருக்கின்ற அத்தனை கோடி தமிழர்களின் சாபமும் அவரையே போய்ச் சேரட்டும்..!

இதில் எப்படி ஊழல் நடந்திருக்கும் என்றால், இவர்களுக்கு வீடுகளை வாங்கும்படி அறிவுறுத்திச் சொல்லி, வாங்குவதற்குத் தேவையான பணத்தை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதாகச் சொல்லிக் கொடுத்து, அதற்குண்டான வரியையும் கட்டி வருமான வரித்துறையினரிடம் சான்றிதழ் பெற்றுக் கொடுத்திருப்பார்கள்.

பின்பு இந்த வீல்சேர் செக்யூரிட்டிகள் அந்த வீட்டை விற்றுக் கொடுத்த தொகையை மறுபடியும் அன்பளிப்பாக அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, வாங்கி, விற்றதில் இருக்கும் வித்தியாசத் தொகையை இந்த வீல்சேர் செக்யூரிட்டிகளுக்கு சர்வீஸ் சார்ஜாக கொடுத்திருக்கலாம் என்று எனக்குத் தெரிந்த ஆடிட்டர் ஒருவர் கூறுகிறார்.  இப்படியும் இருக்கலாம் என்றே நானும் நினைக்கிறேன்.

இந்த அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் சாம்ராஜ்யம் வெளியே வந்ததில் இன்னுமொரு முக்கியமான விஷயம்.. ஐ.ஏ.எஸ்.ஸாகட்டும்.. ஐ.பி.எஸ்.ஸாகட்டும்.. இவர்களும் தற்போதைக்கு நமது அரசியல்வியாதிகளைப் போலவே கொள்ளையடிக்கும் கூட்டம் என்பதை கொஞ்சூண்டு நிரூபித்திருக்கிறது..!

ஜாபர்சேட் என்னும் ஐ.பி.எஸ். அதிகாரி தனது வீட்டுக்கான தொகையை நான்கு தவணைகளில் லட்சணக்கணக்கில் கட்டியிருக்கிறார். ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்தால் இவ்வளவு பணத்தை இந்தக் காவல்துறைப் பணியில் இவரால் சம்பாதித்திருக்க முடியுமா என்பதை உங்களது அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.

14.10.2009-ல் 50,64,200 ரூபாய், 06.11.2009-ல் 25,00,000 ரூபாய்,
07.11.2009-ல் 26,00,000 ரூபாய், 27.11.2009-ல் 26,59,700 ரூபாய் என்று இவர் கட்டியிருப்பதைப் பார்த்தால் நமக்கு திக்கென்றாகிறது..

இதேபோல் இன்னொரு வெட்கக்கேடான விஷயம் நக்கீரன் இணை ஆசிரியரான காமராஜும் இதில் சம்பந்தப்பட்டு வீட்டை வாங்கியிருப்பதுதான்.

ஒரு பத்திரிகையின் இணை ஆசிரியர் இப்படி கோடிக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டு வீடு வாங்குகிறார் என்பதே பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய விஷயம். இவரால் எப்படி சாதிக்க முடிந்தது என்பதையும் யோசித்தால் இந்த ஊழலில் பத்திரிகையாளர்களும் அடக்கம் என்பது தெளிவாகிறது.

அதிலும் காமராஜ் தன் பெயரில் வாங்காமல் தனது மனைவி ஒரு சமூக சேவகி என்பது போல் திருட்டுத்தனமாக வாங்கியிருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. அரசு தூக்கிக் கொடுக்கும். ஏனெனில் அது அவர்களது ஆட்சியைப் பற்றி விமர்சித்து எழுதக் கூடாது என்பதற்காக அவர்கள் போடும் பிச்சை அது.. அதை ஒரு நேர்மையுள்ள பத்திரிகையாளன் பொறுக்கித் தின்னக்கூடாது..! நக்கீரன் கோபாலும், காமராஜும் பிற்காலத்தில் நிச்சயமாக  பதில் சொல்ல வேண்டியிருக்கும்..!

அதிலும் பாருங்கள்.. உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், வீடு பெற்ற இன்னொருவரான முதல்வரின் பி.ஏ. ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் என்ற மூவருமே ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பங்குதாரர்களாம்..!

இந்த நிலையில் இந்த மூவருக்குமே வீடுகள் கிடைத்து அவரவருக்குக் கிடைத்த நிலங்களில் வீடுகளையும், வணிக வளாகங்களையும் கட்டுவதைப் பார்க்கும்போது இதில் தொலைநோக்கு ஊழல் நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதே..?

இதில் இன்னுமொரு காமெடி சுமதி ரவிச்சந்திரன் என்னும் மாதர் குல மாணிக்கத்திற்கு அப்பழுக்கற்ற அரசு அதிகாரி என்னும் தலைப்பில் வீட்டை ஒதுக்கிக் கொடுத்ததுதான். அந்த அம்மையாரின் வங்கி லாக்கரில் 4 கோடி ரூபாயை கைப்பற்றிய பின்புதான் நமது வீட்டு வசதி வாரியம் கண் முழித்திருக்கிறது.

சுமதியின் ஆதி, அந்தத்தைத் தோண்டித் துருவி நீங்கள் உங்களது கணவர் பெயரில் இருக்கும் வீடு பற்றிய விவரத்தை எங்களுக்குத் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் உரிமையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பியது வாரியம். இதற்கென்ன பதில் வந்தது என்று தெரியவில்லை.

ஆக.. இந்தத் திமுகவின் ஆட்சியின் நிர்வாகத் திறமையற்ற சூழல் இந்த அதிகாரத் துஷ்பிரயோகமிக்க, ஊழல் மிகுந்த வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..!

இந்த ஆட்சி நீதியாக, நியாயமாக நடந்திருக்கிறது.. நடக்கிறது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்..?

இந்த 15 சதவிகித ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு அந்த இடத்தில்கூட ஏழை, எளிய மக்களுக்காக அடுக்கு மாடி வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கலாம்..! சென்னை மாநகரத்தில்தான் எத்தனையோ குடிசைப் புறங்கள் இருக்கின்றனவே.. அவைகளை கணக்கில் கொண்டு அந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கலாமே..? ஏன் செய்யவில்லை.. செய்ய முன் வரவில்லை..?

இதை வைத்து ஆட்சிக்கும், கட்சிக்கும், வீட்டுக்கும் வேண்டியதை பேலன்ஸ் செய்ய நினைத்திருக்கிறார் நமது ஊழல்களின் தந்தை என்பது நமக்குத்தான் தெளிவாகத் தெரிகிறதே..?

பின்பு எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு இவர் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று குற்றம் சாட்டுகிறார். உண்மையிலேயே நான் முன்பே சொன்னதைப் போல இந்தியாவிலேயே தலைசிறந்த ஊழல் வியாதி, இந்திய ஊழலின் தந்தை என்று கருணாநிதியைத்தான் இனிமேல் அழைக்க வேண்டும்..!

இவருடன் ஒப்பிட்டால் ஜெயலலிதா செய்த ஊழல்கள் கொசு அளவில்தான் இருக்கும்..! என்ன செய்வது..? மீடியாக்களை வளைத்துப் பிடித்திருக்கும் நமது ஊழல்களின் தந்தை கருணாநிதி அதனை வைத்து திட்டமிட்டு, கனக்கச்சிதமாக காய் நகர்த்தி தனது மெகா ஊழல்களை மக்கள் முன் மறைக்கப் பார்க்கிறார்..! இதனை ஜெயலலிதா செய்யவே இல்லை. அதனால் ஜெயலலிதாவின் கொசு சைஸ் ஊழல் இன்றைக்கும் பெரிதாகத் தெரிகிறது.. ஆனால் ஊழல்களின் தந்தையான கருணாநிதியின் ஊழலை மக்களிடமிருந்து மறைக்கப்படுவதற்கு மீடியாக்களே இப்படி துணை நிற்பது தமிழக பத்திரிகை உலகத்துக்கே கேவலமான விஷயம்..!

அப்பழுக்கற்ற முறையில் தொண்டாற்றிய ஊழியர்களுக்கு மட்டுமே வீடுகளை கொடுத்ததாக புழுகியிருக்கும் இந்த ஊழல்களின் தந்தையான கருணாநிதிதான், தன்னை விமர்சித்து எழுதிவிட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக வெறும் 12 மணி நேர இடைவெளியில் தான் தங்கியிருந்த அரசுக் குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து தமிழறிஞர் திரு.தமிழருவிமணியனை நள்ளிரவும் பாராமல் கழுத்தைப் பிடித்து நடுரோட்டிற்கு தள்ளினார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது..!

இது தொடர்பான தோழர் சவுக்கின் கட்டுரை..!

இது தொடர்பான தெஹல்கா பத்திரிகையின் கட்டுரை..!


ஊழல்களின் தாத்தாவும், தாயும் ஒரே கூட்டணியில்..!